Wednesday, October 23, 2019

இதயத்தை முள்கரண்டி கொண்டு கீறும் அராபிய மொழிப் படம்CAPERNAUM

நம்முடைய வாழ்க்கையும் அன்றாட உணவும் இருப்பிடமும் எந்த அளவுக்கு நிச்சயிக்கப் பட்டதாக உள்ளது, நாம் எவ்வளவு தூரம் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று உணர நிச்சயமாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மத்திய கிழக்கு நாடுகள் மதத்தாலும் போராலும் எந்த அளவு நிலைகுலைந்து போய் உள்ளது என்பதை உண்மைக்கு மிக அருகில் நின்று பேசும் படம். இளகிய மனம் கொண்டோர் உங்கள் தூக்கத்தை தொலைக்க கூடும் எச்சரிக்கை.

படத்தின் துவக்கத்தில் Zain என்ற 12 வயதுசிறுவன் கை விலங்கிடப் பட்டு அழைத்து வரப்படுகிறான்.யாரையோ கத்தியால் குத்தியிருக்கிறான். நீதிபதி வழக்கை விசாரிக்கிறார். அவனது ஃப்ளாஷ்பேக்காக கதை விரிகிறது.

பிழைப்புக்கு வழியின்றி கால்வயிற்று கஞ்சிக்காக ஏதேதோ செய்யும் குடும்பம். குடும்பத் தலைவன் படுத்திருக்கிறான் பொழுதுக்கும் சிகரெட் பிடிக்கிறான். அவன் ஆஷ்டிரேயில் இருக்கும் சிகரெட் துண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அந்த புறாக் கூண்டு வீட்டில் குழந்தைகள் தவழ்கின்றன. கதை முடியவில்லை இன்னொரு குழந்தையும் வரப் போகிறது.
சஹார் என்கிற சகோதரி வயதுக்கு வந்தவுடன் கட்டாய மணம் செய்து அனுப்பி விடுகிறார்கள். Zain கடுமையாக எதிர்த்து இயலாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

எங்கெங்கோ அலைந்து ஒரு தீம் பார்க்கில் தஞ்சம் அடைகிறான். அங்கே ஒரு பெண் illegal immigrant கைக் குழந்தையோடு இருப்பவள் zain ஐ தனது வீட்டிற்கு (இது ஒரு குருவிக் கூண்டு) அழைத்து செல்கிறாள். அவளது மகனை zain பார்த்துக் கொள்கிறான். அவள் வேறு பெண்ணின் அடையாள அட்டையில் வேலைக்கு செல்கிறாள். அப்படி செல்லும் போது போலீசில் மாட்டி சிறை செல்கிறாள். அவளுக்காக பால் குடி மாறா குழந்தையை வைத்துக் கொண்டு காத்து இருக்கிறான். தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறான்.
 குழந்தை என்னவானது?!
Zain யாரைக் குத்தினான்?!
தண்டனை கிடைத்ததா வெளியே வந்தானா?!
குழந்தையை விட்டுச் சென்ற அம்மாவின் கதி என்ன?! குழந்தை அவள் கையில் கிடைத்ததா?!
இப்படி பல கேள்விகளை முன்னிருத்தி படம் சற்று விறுவிறுப்போடும் நமது நெஞ்சம் பதைபதைப்போடும் செல்கிறது.
Zain ஆக நடித்த குட்டிப் பயல் அருமையாக நடித்துள்ளான். குழந்தையை எந்த சூழலிலும் காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்கிறான். முகத்தில் பொறுப்பு, கோபம், இயலாமை அழுகை மற்றும் குழந்தைத் தனம் அத்தனையும் கொண்டு வருகிறான்.
ஒளிப்பதிவு போரில் சிதிலமான அழுக்கான லெபனானை கண்முன் நிறுத்துகிறது.
நெட்ஃப்ளிக்சில் உள்ளது. இணையத்தில் கிடைக்க கூடும் பாருங்கள்.

Friday, October 11, 2019

வெற்றிமாறனின் சிவசாமி அசுரனா அல்லது பூமணியின் சிவசாமி அசுரனா?



சிவசாமி மகன் சிதம்பரம் (வயது 15) வடக்கூரானை கொலை செய்து விடுகிறான். வடக்கூரான் ஊரார் நிலத்தை எல்லாம் வாங்கிப் போட்டு பெரு மிராசுதாராக வாழ பேராசை கொண்டவன். சிதம்பரத்தின் அண்ணன் சாவுக்கு காரணமானவன். 
சிதம்பரத்தை போலீசில் சிக்காமல் தப்புவிக்க தந்தையும் மகனும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். அவனது மாமா வெளியில் இருந்து உதவுகிறார்கள். காட்டிற்குள்ளான தலைமறைவு வாழ்க்கை நுட்பமாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிதம்பரத்தின் எண்ணவோட்டத்தில் வடக்கூரான் அவர்களது நிலத்தை வாங்க ஆசைப்பட்டது மற்றும் இந்த அக்கபோரில் அவனது அண்ணன் வடக்கூரானால் கொலைசெய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் வந்து போகின்றன. இறுதியாக கேசை ஒப்புக்கொண்டு சரணடைய செல்வதில் முடிகிறது. நாவலின் ஒரு இடத்தில் “சக்கிலியத் தெரு“ என்கிற சொல் வருகிறது. இதையன்றி வேறு எங்கேயும் இது தலித் மக்களின் வாழ்க்கை என்பதற்கான அடையாளம் இல்லை.
நாவல் ஒரு கிளாஸிக் தான் ஆனால் இந்த நாவலில் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்திற்கான சரக்கு எதுவும் உள்ளதா? உப்பு சப்பில்லாத ஒரு ஃபளாப் பஸ்டர் படம் வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் வெற்றிமாறன் என்ன செய்தார்?
கதையின் மையச் சரடை எடுத்துக் கொண்டு அதில் அந்தக் காலகட்ட சாதிய அடக்குமுறை, பஞ்சமி நில அபகரிப்பு என்று பல விஷயங்களை நாவலுக்கு அப்பாற்பட்டு பேசியிருக்கிறார். நாவலில் உள்ள கதாபாத்திரங்களோடு நாவலில் இல்லாத தனுஷின் ஃபளாஷ்பேக் வாழ்க்கை, தனுஷின் போராளி அண்ணன் கேரக்டர், பிரகாஷ்ராஜ் கேரக்டர் மற்றும் சாதிவெறி பிடித்த வில்லன் கேரக்டர் என பலவற்றை புகுத்தி சாதிய அடக்குமுறையின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
1970 களில் எங்கள் ஊரில் கூட தலித் மக்கள் செறுப்பு அணிந்து செல்ல இயலாத சூழல் இருந்தது. இந்த சம்பவம் எங்கள் ஊரில் நடந்த ஒன்றுதான். ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை செறுப்பணிந்து செல்லக் கூடாது என்று இடைமறிக்கிறார்கள். அவனோ திரும்பி வந்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு செல்கிறான்.
“எனது மகனை செறுப்பு போட்டுக் கொண்டு நடக்க கூடாது என்று கூறியது யார்?”
“நாங்கதான்“
“எது வரைக்கும் போடக்கூடாது?”
“நம்ம ஊர் எல்லை தாண்டும் வரைக்கும்”
“என் மகன் செறுப்பை கையில் எடுக்க மாட்டான், நீங்களோ செறுப்பு போடக்கூடாது என்கிறீர்கள் அதனால ஊர் எல்லை வரைக்கும் நீங்களே எம்புள்ள செறுப்ப கையில எடுத்துக் கிட்டு போய் குடுத்துட்டு வாங்க”
இதற்கு அப்புறம் என்ன  அடிதடி போலீஸ் கேஸ் தான். இதில் நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரி அடிதடிக்கு யாரை தூண்டி விடுவார்கள் என்றால் ஊரில் சாதி என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ஒரு அனாமத்தான ஆளைத் தான் தேர்வு செய்வார்கள்.
வியக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் மாரியம்மாளின் தலையில் செறுப்பை வைத்து அடிக்கும் காட்சியிலும் அந்த மாதிரியான ஆளைத் தான் பயன்படுத்தி இருப்பார் வெற்றிமாறன். அப்படியென்றால் திரைக்கதையை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இப்போது சாதிய அடக்குமுறை இல்லாத சூழலில் வெற்றிமாறன் தேவையில்லாமல் இந்த மாதிரி படம் எடுக்கிறார் என்கிறார்கள். நில அபகரிப்பு, வெறும் சோற்றுக்கு உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, வீட்டினைக் கொளுத்துவது அதிகார அல்லது அரசாங்க அமைப்பின் பாரபட்சம் இந்தமாதிரி இன்னும் பல இன்னல்களை கடந்துவராத கிராமத்து தலித் எவரையாவது காட்டுங்கள் பார்ப்போம். இன்னும் பல தமிழக கிராமங்களில் இரட்டைக் குவலை முறை உள்ளது. எனது பள்ளி கல்லூரி பிராயத்தில் எங்கள் ஊரிலும் இரட்டைக் குவலை முறை அமலில் இருந்தது.
ஏன் எங்கள் ஊரில் சலூன் கடை இருந்தும் கூட நான் முடிவெட்டிக் கொள்ள தா.பழூருக்கு பேருந்து ஏறி சென்றிருக்கிறேன். அதனால் படத்தில் கூறப்பட்ட எந்த விஷயமும் உண்மைக்கு மாறானது கிடையாது.
அப்புறம் இந்த வன்முறைக் காட்சிகள்?!
பாரதிக் கண்ணம்மா படத்தில் பார்த்திபன் செத்துப் போகணும்.
காதல் படத்தில் பரத் பைத்தியக்காரனாக அலையணும்.
தலித் உரிமை பேசிய இரணியன்கள் அம்மக்களின் அறியாமையால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்.
இப்படி அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிராக விரலைக் கூட உயர்த்தாமல் கதாப்பாத்திரத்தை சாகடித்து தலித் உரிமை படம் எடுத்து சுய இன்பம் கண்ட தமிழ் சினிமாக் களத்தில் அசுரனாக மாறி அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் வெட்டிச் சாய்க்கும் தலித் பாத்திரத்தில் நாயகனைக் காணும் போது பல பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க இயலாது.

இந்தமாதிரி  படங்களை கையால்வது டெலிக்கேட்டான விஷயம் வசூல் ரீதியாக பெரிய இழப்பு ஏற்படும் என்கிற மாயைகளை உடைத்து “வாருங்கள் எல்லா விஷயங்களை குறித்தும் உரையாடுவோம்“ என்கிற அரைகூவலோடு முன்னத்தி ஏராக களத்தில் இறங்கிய இயக்குனரையும் இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியாது.


ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா?

மு.ஜெயராஜ் தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம். ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா? வரலாறு 1951 ல் ஐசக...