Monday, March 16, 2026

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதும் சரி பேருந்து பயணங்களிலும் சரி வாசிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்த நூலை ஒரே ஒரு சிட்டிங்கில் வாசித்து முடிக்க முடிந்தது. அர்ஷியா அவர்கள் எழுதிய ஏழறை பங்காளி வகையறா என்கிற நூலை வாசித்துள்ளேன். இஸ்லாமிய குடும்பங்களில் உள்ள நடைமுறைகளை ஒட்டி அமைந்திருக்கும். மிகவும் சுவாரசியமான நாவல். கரும்பலகை என்கிற இந்த நூல் ஒரு ஆசிரியரைப் பற்றியது. கதையை ஒட்டி பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் உபரி ஆசிரியர் பணிமாறுதல், லஞ்சம் கொடுத்து மாறுதல் பெறுதல் மற்றும் பள்ளி நடைமுறைகள் என்று தொட்டுச் சென்றுள்ளார். நூலாசிரியர் பத்திரிக்கையாளர் என்பதால் துறை சார்ந்து அவர் விசாரித்து தெரிந்து கொண்ட தகவல்களை ஒட்டி நாவல் எழுதியுள்ளார். ராஜலெட்சுமி என்கிறவர் பல ஆண்டு காலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு பிறகு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். அந்த சமயம் அவர் பணியேற்ற பள்ளியில் மாணவர் எண்ணிக்கை படி அவர் உபரி ஆசிரியர் என்று கணக்கிடப் பட்டு ஆசிரியர் பணியிடம் தேவைப் படும் பள்ளிக்கு பணிமாறுதல் ஆகி செல்கிறார். தினசரி சென்றுவர மிகவும் சிரமமாக உள்ள ஒரு குக்கிராமம். இதற்கிடையே சிஆர்சி பயிற்சிக்கு செல்லும் போது ஒரு ஆசிரியர் பணம் கொடுத்து பக்கத்தில் உள்ள பள்ளிக்கு மாறுதல் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தர முன்வருகிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதம் தெரிவித்து பணத்தை கஷ்டப்பட்டு புரட்டுகிறார். ஆர்டர் கைக்கு வரும் சமயம் கூடுதலாக ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்கப் படுவதால் பின்வாங்குகிறார். பிறகு பள்ளியோடும் மாணவர்களோடும் ஒன்றிப் போய் சிறப்பாக பணிபுரிந்து நல்ல தேர்ச்சி பெற உதவுகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டில் மறுபடியும் உபரி ஆசிரியர் மாறுதல் வந்து சேர்வதாக முடிக்கிறார். நாவலில் ஏராளமான தகவல் பிழைகள் மற்றும் தவறான புரிதல்கள் உள்ளன. இந்த உபரிப் பணியிடங்கள் உருவானதும் அதன் காரணமாக டிப்ளாய்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர் என்கிற ஒரு வழக்கம் வந்ததும் எப்போது அதிகமானது தெரியுமா? 150க்கு கீழான எண்ணிக்கை உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் ஆறு ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே வழங்கப் படும். அதற்கு மேல் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக வழங்க அரசாங்க வழிகாட்டு நெறிமுறை உள்ளது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் பெறப்படும் 1-8 விவரப்படி மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்வார்கள். நான் உட்கோட்டை பள்ளியில் பணிபுரிந்த போது மாணவர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. ஒன்பதாம் வகுப்பில் ஒரு பிரிவிற்கு 110 மாணவர்கள் என்று இரண்டு பிரிவு இருக்கும். வகுப்பறை முழுவதும் மாணவர்களால் பிதுங்கி வழியும். அந்த சமயம் ஆண்டாய்வுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் எங்கள் நெருக்கடி கருதி உடனடியாக ஐந்து புதிய ஆசிரியர் பணியிடங்களை வழங்கினார். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் பணிபுரியும், 1-8 கணக்கீட்டின் படி உபரி என்று கணக்கிடப்பட்ட ஆசிரியர்களை பணியிட ஆணையுடன் கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மாற்றித் தருவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு முதன்முதலில் நடைபெற்றபோது, அந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப் பட்டு விட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று பிறகு நியமனத் தேர்வை தனியாக எழுதி தேவைப் பட்டியலின் தர வரிசைக்குள் நுழைந்தால் மட்டுமே தற்போது பணி நியமனம் கிட்டும். அந்த சமயத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்தபோது இங்கே பள்ளிகளில் தேவைப் படும் பாடவாரியான ஆசிரியர் பணியிடங்களுக்கும் அங்கே தேர்ச்சி பெற்ற பணிநாடுனர்களின் பாடங்கள் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருந்ததை புறந்தள்ளிவிட்டனர். அதன் விளைவாக தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள் வந்து விட்டிருந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வழக்கமாகவே அறிவியல் பாடங்களைக் காட்டிலும் கலைப்பிரிவு பாடங்களில் தேர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் நான் அறிந்தவரை அரியலூர் மாவட்டத்தில் அதிகமாக இருந்தனர். எனவே அந்த ஆண்டில் இருந்து ஒரு பக்கம் ஓய்வு பெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் சரண் செய்யப் பட்டன. தேவைக்குத் தக்க உபரியான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாமல் விருப்ப மாறுதல் நடத்த இயலாத ஆண்டுகள் எல்லாம் வந்து போயின. கதை நாயகி ராஜலெட்சுமி உபரி ஆசிரியர் பணிமாறுதலில் செல்லும் பள்ளி புதிதாக தரம் உயர்த்தப் பட்ட பள்ளி. அங்கே அறிவியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு இருந்ததாக சொல்லி இருக்கிறார். புதிய பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடம் அறிவியலாக இருக்காது. அடுத்து உபரி ஆசிரியர் என்று அடையாளப் படுத்தப் படுபவர் அந்த ஸ்டேஷனில் கடைசியாக பணியேற்ற இளையர் தான். அதன் படி ராஜலெட்சுமி தான் மூத்தவர். அடுத்த ஆண்டு மீண்டும் உபரிப் பணியிட மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. அதற்கு காரணம் மூத்த ஆசிரியர் பணியிடம் தான் உபரிப் பணியிடமாக கருதப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டு தீர்ப்பு வந்துள்ளதாக கதையை அமைத்துள்ளார். அதுபோல எதுவும் நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. கதைக்களமாக இருக்கும் பொறண்டையூர் பள்ளிக்கு புதிதாக ஒரு தலைமையாசிரியர் வந்து சேர்கிறார். வந்து ஒரு வாரத்தில் மாறுதலாகி விடுகிறார். தலைமையாசிரியர் கையாடல் செய்கிறார் என்பதை பதிவு செய்ய அந்த கதாப்பாத்திரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர். ஆனால் முழுக்க தகவல் பிழைகளுடன் கட்டமைக்கப் பட்ட பகுதியாக அது வந்துள்ளது. வந்தவுடனே நூலக புத்தகங்களும் பள்ளி ஆய்வகத்துக்கான அறிவியல் உபகரணங்களையும் வாங்கி கமிஷன் அடித்து விட்டதாக கூறுகிறார். இவர் கூறும் அந்த காலகட்டத்தில் அறிவியல் உபகரணங்களையும் பள்ளி நூலகத்துக்கு தேவையான நூல்களையும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வாங்கி அனுப்பி விடுவார்கள். அடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக இரண்டு ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளதாக கூறுகிறார். காலி பணியிடம் இருந்தாலோ அல்லது ஆசிரியர்கள் கூடுகள் தேவை இருந்தாலோ மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்க இயலும். அவர்களுக்கான ஊதியம் அரசாங்கம் வழங்காது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தான் வழங்க முடியும். இந்த நிதி எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக வசூல் செய்யப்படுவது ஐம்பது ரூபாய் மட்டுமே 360 பேர் படிக்கக்கூடிய எங்கள் பள்ளியிலேயே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி 18,000 வரை மட்டுமே வரும். அப்படி இருக்கும்போது அந்த சின்னஞ்சிறு பள்ளியில் 5000 கூட தேறாது. அதை வைத்து அந்த இரண்டு ஆசிரியர்களுக்கு எத்தனை மாசத்திற்கு சம்பளம் கொடுப்பார்கள்?! வந்து மூன்றே நாட்களில் ஒரு கழிவறையும் ஒரு பள்ளி கட்டிடமா கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தளவாடங்களை எல்லாம் இறக்கி விடுகிறார் என்று ஒரே போடாக போட்டுள்ளார். எங்கள் பள்ளியில் 8 வகுப்பறை கட்டிடங்களை நான் கேட்டு பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே அவர் கூறுவது போல இது மூன்று நாட்களில் நடக்கிற காரியம் கிடையாது முதலில் பட்ஜெட்டில் நிதா ஒதுக்கப்பட வேண்டும் அதற்கு பிறகு தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான நிதி உள்ளது என்பதை கணக்கிட்டு தேவை கருதி அத்தியாவசியமாக தேவைப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிடங்கள் ஒதுக்கீடு செய்வார்கள். இது ஒரு நீண்ட நடைமுறை ஓர் ஆண்டில் இந்த நடைமுறைகள் முடிவதற்கு ஆறு மாதம் எடுத்துக் கொள்ளும். தலைமை ஆசிரியர் ஜாதியை தானாகவே முன்வந்து வெளிப்படுத்தி ஜாதி லாபியை உருவாக்க முயல்வது போல அமைத்திருப்பார். அது அரிதாக சில இடங்களில் நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதுபோல ராஜலட்சுமி என்கிற ஒற்றை ஆசிரியர் மட்டுமே அந்த பள்ளியில் தேர்ச்சியை 100% கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தெரியும் 100% தேர்ச்சி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது. கதைநாயகி ராஜலட்சுமின் கணவர் தனசேகர் தனது ரியல் எஸ்டேட் பணியில் ஏமாற்றப்பட்டு மனம் உடைந்து போனது பற்றி மிகவும் நுணுக்கமாக ஒரு முழு அத்தியாயமே விளக்கி கூறியிருப்பார். அதுபோல பொரண்டையூர் மக்கள் சாராயம் காய்ச்சும் கலாச்சாரத்துக்குள் எவ்வாறு சென்றார்கள் என்பதை விளக்குவதற்கும் ஒரு முழு அத்தியாயத்தையே ஒதுக்கி இருப்பார் அவை இரண்டும் கதையில் இருந்து விலகி இருந்தால் சுவாரசியமாக இருந்தன. இந்த நூலுக்கான மதிப்பறையில் இவ்வளவு டீடைல் எழுதியது வாசிப்போர் பள்ளி நடைமுறைகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

Friday, March 13, 2026

மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை!!

ஒரு நாள் பள்ளிக்குச் சென்றவுடன் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. ஒரு அம்மா வந்து ஆறாம் வகுப்பு குழந்தைகளை மிரட்டிச் சென்றுள்ளார். என் பையன் கிட்ட வச்சுக்கிட்டீங்கன்னா ஸ்கூலயே இழுத்து மூடி விடுவேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார். என்னிடம் புகார் வந்தபோது வகுப்பு ஆசிரியரை அழைத்து அந்த அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி கூறினேன். நேரில் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் அம்மா. அதிர்ந்து பேசாதவர் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியருக்கும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கும் ஒரு பெற்றோர் அவர். அவருக்குள் ஏன் இவ்வளவு ஆவேசம்?! அவரது குழந்தை ஒரு அறிவுச் சவால் உடையவர். பள்ளிகளில் பெரும்பான்மையானவர்கள் அந்த குழந்தைகளை மிகுந்த அரவணைப்போடும் நட்புறவோடும் அனுகுவார்கள். மேலும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு இருப்பார்கள். ஒரு முறை காலை கூடுகையின்போது ஒரு மாணவன் ஒரு சிறிய பழமொழியை அழகாக சொல்லியவுடன் வழக்கத்துக்கு மாறாக கரகோஷம் எழுந்தது ஏன் இவனை மட்டும் இந்த பிள்ளைகள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள் என்று பார்த்தால் அவன் அறிவிச்சவால் உடையவன். கலைத் திருவிழாவின் போது ஒரு விநாயகர் பொம்மையை செய்து விட்டான் என்று அவனையும் அந்த பொம்மையையும் தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து பாராட்டு வாங்கி கொடுத்தார்கள். இதுதான் பள்ளி குழந்தைகளின் மனநிலை. சமயத்தில் யாராவது ஒரு சிலர் குறும்பு செய்து விடுகிறார்கள். பள்ளிக்கு சற்று பயத்துடன் பதட்டத்துடன் குழந்தையை அனுப்பும் பெற்றோர் இது மாதிரியான கசப்பான சூழல்களை கொந்தளித்து விடுகிறார்கள். ஏற்கனவே விளையாட்டுகளில் எல்லாம் தனது குழந்தையை சேர்த்துக் கொள்வதில்லை என்கிற கவலை இருந்தாலும் சேர்த்துக் கொண்ட பிறகு ஏதாவது சிறிய புறக்கணிப்போ அல்லது பிரச்சனையோ என்றால் பதறித் துடித்து விடுகிறார்கள். அவர்களது இந்த பின் தொடர்தலும் பதட்டமும் அந்த குழந்தைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. பள்ளிக்கு வந்த அந்த அம்மாவிடம் மற்ற மாணவர்களுடன் அவன் சகஜமாக பழக வேண்டும் என்றால் அவன் பொது இடங்களில் மாணவர்களுடன் பழகும்போதும் பள்ளியில் அவன் மாணவர்களுடன் இருக்கும்போதும் ஏற்படுகின்ற சிறு சிறு சச்சரவுகளை கண்டும் காணாமல் இருந்து விடுங்கள். எதாவது பெரிய விஷயம் என்றால் மட்டும் எங்கள் மூலமாக அதனை தீர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து அவனை பின்தொடர்வது உங்களுக்கு பெரிய மன உளைச்சலை தரும் அவன் இயல்பாக தன்னுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே அவன் வளர்கிற வரைக்கும் நீங்கள் மனோதிடத்தையும் தைரியத்தையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பினேன். இந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு தொடர்ந்து அனுப்பும் போது அவர்களது ஆளுமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதனை பல உதாரணங்கள் மூலமாக என்னால் கூற முடியும். சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வெளியே சென்ற மாணவன் ஒருவன் மிக அழகாக எலக்ட்ரிக்கல் வேலைகளை பழகிக் கொண்டிருக்கிறான். தங்கள் பிள்ளைகளது இந்த வகை குறைபாட்டை பெற்றோர் ஒப்புக் கொள்வது இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் ஆனால் சரியாகும் என்று திடமாக நம்புகிறார்கள். எங்களுக்கு ஒரு பெற்றோர் தொடர் வற்புறுத்தலுக்கு பின் பத்தாம் வகுப்பில்தான் அவனுக்கான மருத்துவ சோதனையை முடித்து சான்றிதழை பெற்றுக்கொண்டார். உள்ளடங்கிய கல்வி என்கிற பெயரில் மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்ப்பதில் அரசு முனைப்பு காட்டுகிறது. பார்வைச்சவால் அங்கச் சவால் உடைய மாணவர்களை சேர்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படப்போவதில்லை. ஆனால் கற்றலில் சவால் உடைய மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க ஊக்கப்படுத்தும் அரசு அவர்களுக்கு என்று ஒரு பிரத்தியேகமான மதிப்பீட்டு முறையை செயல்படுத்த இன்னும் முனைப்பு காட்டாமல் இருப்பது வியப்புக்குரியதாக உள்ளது. தற்போதைய நிலையில் அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் என்கிற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அந்த குழந்தைகளால் எதுவும் சொல்ல இயலாது என்பது அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு எழுதும் ஆசிரியர்களே அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் எழுதி தேர்ச்சி பெறச் செய்து விடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்து உண்மை. ஆனால் இது சரியான நடைமுறையாக இருக்காது. அவர்களுக்கு என்று தனியாக ஒரு தேர்வு முறையை ஆறாம் வகுப்பில் இருந்து உருவாக்கி செயல்படுத்தி வருவது தான் ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும். தற்போதைய நிலையில் பல பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து போகும் என்று பயந்து அந்த மாணவர்களை ஒன்பதாம் வகுப்போடு டிசி வாங்கிக் கொள்ளச் சொல்லி பெற்றோரை வற்புறுத்தும் ஒரு சூழல் உள்ளது. அந்த பெற்றோரின் தர்மச்சங்கடமான மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் எட்டாம் வகுப்பிலே சில பெற்றோர் கூறியது ஞாபகம் இன்னும் உள்ளது "சார் அவன ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் வச்சிக்கோங்க சார் அப்புறம் நான் டிசி வாங்கிக்கிறேன்" என்று கூறினார்கள் நான் அவனை பத்தாம் வகுப்பு வரைக்கும் வைத்து ஸ்கிரைப் மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அனுப்பினேன். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சொல்வதே எனதுவர்களை நியமனம் செய்துவிட்டு பிறகு அந்த குழந்தைகள் சொல்வதைத்தான் நீங்கள் எழுத வேண்டும் என்கிற வகையில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு அதிகம் நெருக்கடி தரப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டில் தேர்ச்சி விழுக்காட்டுக்கு பயந்து பல கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிடும் சூழ்நிலை ஏற்படும். எறவே அவர்களுக்கு பிரத்தியேகமான ஒரு மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டியது அரசின் கடமை.

நூல் – வன்முறையில்லா வகுப்பறை ஆசிரியர் – ஆயிஷா நடராசன்

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்கு காரணம் என்ன, வன்முறை இன்றி வகுப்பறையை கையாளும் முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைகள் ஆகிய விஷயங்களை முன்வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர். என்னைப் பொறுத்தவரை “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா“ வுக்கு பிறகு கற்றல் கற்பித்தல் குறித்த மிக முக்கியமான நூல் என்று இதனைக் கூறுவேன். “ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்கு பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என்று கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது. – கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர். இவ்வாறு துவங்கும் நூலில் உள்ள முதல் புள்ளிவிவரமே நமது பள்ளி அமைப்பின் தோல்வியை பறைசாற்றுகிறது. ஆமாம், 99.1 விழுக்காடு குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்களாம். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பள்ளிக் கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம் என்கிறார். Parents are the teachers in Home; where as Teachers are the parents in School என்று அலங்காரமாக சொல்லிவிடுகிறோம். “ஹலோ பாஸ் கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடாதீங்க, அப்படி எல்லாம் இரண்டு உறவுகளும் ஒன்றல்ல” என்கிறார் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மக்கெரென்கோ. ஆதாரமாக ஒரு வேறுபாட்டு பட்டியலையே தருகிறார். இவர அவ்வளவு லேசுபட்டவராக நினைத்து விடாதீர்கள். “குழந்தைகளுக்கு முதல் உரிமை” என்று முழங்கிய இவரது கல்வி முறையினால் தான் 1927 ல் விளையாட்டு பாடவேளை பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளது. ஒழுக்க நெறி என்கிற பெயரில் தங்கள் கட்டளைகளுக்கு தலையாட்டும் பிரஜைகளை உருவாக்கும் ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் உடும்பு பிடியாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட மறுக்கிறோம். மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களை நாம் தண்டிக்கும் முறைகளைப் பற்றிய பட்டியலை தந்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் பட்டியலில் உள்ள அந்த தண்டனை முறைகளை பார்த்தால் நமக்கே பதறுகிறது. அதே வேளையில் நாங்கல்லாம் பிள்ளைகளை அடிப்பதே கிடையாது என்பவர்கள் கையாளும் நூதன தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை வாசித்தால் “இதற்கு நீங்க அடிப்பதே பரவாயில்லை“ என்கிற அளவில் உள்ளது. “அந்த காலத்துல எல்லாம் குருகுலத்தில்…“ “நம்மை உள்ளயே உட்ருக்க மாட்டாங்க அதானே?” “நீங்க குருவா ஆசிரியரா? என்கிற அத்தியாயத்தில் “அந்த காலத்துல எல்லாம் …“ என்று துவங்கும் பழம் பெருமை ஃபர்னிச்சரை உடைக்கிறார். என்னதான் கட்டுப்பாடுகளை திணிக்கும் கல்விமுறை என்றாலும் பிரிட்டிஷ் கல்விமுறைகள் பாகுபாடுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்தன என்று உதாரணங்களோடு நிறுவியுள்ளார். வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசும் அத்தியாயத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள “தண்டனைகளின் பின் விளைவுகள்“ பற்றி ஆசிரியர்கள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதி எனக்கே பல விஷயங்களில் அறிவுக் கண்களை அகலமாக திறந்தது எனலாம். சென்னையில் DPI வளாகம் தான் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலவலகங்களும் உள்ள இடம் என்பது ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா, DPI என்றால் என்ன? Department of Public Instruction. இது ஆங்கிலேயர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது கல்வித்துறைக்கு வைத்த பெயர். இதுவே இங்கிலாந்தில் BCE- Board of control of Education இவ்வாறு செல்லும் அத்தியாயத்தில் நமது கல்விமுறையில் உள்ள ஆசிரியர்களின் தண்டனை வழங்கும் மனோபாவத்தின் நதி மூலத்தை ஆங்கிலேயர் காலம் முதலாக ஆய்வு செய்துள்ளார். “எனக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்திருந்தேன்“ – சார்லி சாப்ளின் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை நாம் எந்த அளவுக்கு அவர்களை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதைத் தான் சாப்ளின் நையாண்டியாக தெரிவித்துள்ளார். ஒரு தவறை ஏன் செய்யக்கூடாது என விளக்குவதோடு, எது சரியான செயல் என்பதையும் பதமாக எடுத்துக் கூறுவதன் மூலமும் சரியான செயலை உடனுக்குடன் அங்கீகரிப்பதன் மூலமும் தக்கவைத்தலும் தாத்தா பாட்டிகளின் பரிவும் பாசமும் தோழமையும் மிக்க நெறிபடுத்துதலின் உள்ளடக்கமாக இருப்பதை காணமுடியும் என சரியான உதாரணம் கொண்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய குடும்ப அமைப்பில் இது தவிர்க்கப் பட்டு ப்ரீ-ஸ்கூல் கலாச்சாரத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கூறியுள்ளார். மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைக்கான காரணம், அவர்களை புரிந்து கொள்வது எப்படி என்பன பற்றி இரண்டு அத்தியாயங்களில் பள்ளி அளவில் நடந்த சம்பவங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி கூறியுள்ளார். குமரப்பருவ மாணவர்களின் நடத்தை சிக்கல்களை அவர்களின் மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வுகளின்பால் நின்று ஆசிரியர் தக்க உதாரணங்களுடன் விளக்கி உள்ள இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அறிவியல் மற்றும் உளவியல் வழி நின்று பேசும் இந்த அத்தியாயங்களில் உள்ள பொருட்கள் பி.எட் பாட வகுப்புகளில் வைக்கப் பட வேண்டும். மாநிலத்திற்கான புதியக் கல்விக் கொள்கை கருத்துரு உருவாக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்த போது பி.எட் குறித்து பேசவில்லை. பிரிதொரு வேளையில் நண்பர் ஒருவர் கேட்ட போது எழுதிய அனுப்பியவற்றில் பி.எட் வகுப்புகளுக்கான பாடங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் பற்றி கூறி இருந்தேன். முக்கியமாக பி.எட் படிப்பில் Irregular mode என்கிற ஒரு சட்டத்திற்கு புறம்பான தவறான முறை முற்றிலும் இல்லவே இல்லை என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைக்கு செல்லாத ஒருவர் எவ்வாறு நல்ல ஆசிரியராக பயிற்சி எடுக்க இயலும்? இதை வாசிக்கும் எனது மாணவர்கள் MJ sir கொடுக்காத தண்டனையா அவரா இப்போது இப்படி பேசுவது என்று நினைக்க கூடும். என்ன செய்வது தலை வழுக்கை ஆன பின்பு தான் என் கையில் சீப்பு கிடைத்தது. நிச்சயமாக வாசிப்புகள் “அடச்சே நாம இப்படி எல்லாம் தவறாக நடந்து கொண்டு இருந்திருக்கிறோமே” என்று வருந்தச் செய்து எனது செயல்பாடுகளை திருத்தி அமைத்தவண்ணம் உள்ளன. ஆசிரியப் பெருமக்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.

Saturday, February 28, 2026

தாய் கிழவி

தாய்க் கிழவி
ஊரே இவ எப்படா ஒழிந்து போவா என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ரவுடி பேபி கிழவி ராதிகா‌. சொந்த மகன்களும் கிழவி எப்ப ஒழிவா சொத்த பிரிச்சுகிட்டு கடன்களை அடைத்து வாழ்க்கையை கொண்டாடலாம் என்று தவம் கிடக்கிறார்கள். சாக கிடக்கும் தருவாயில் அதே மகன்கள் கிழவியை காப்பாற்ற லட்சக்கணக்கு கடன் படுவதோடு கோயில் குளம் எல்லாம் ஏறி வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள் பாசத்தில் அல்ல நிர்ப்பந்தத்தில். நீண்ட நேரம் புகழ்ந்து கொண்டிருக்கும் பட்டாசு அதிரிபுதிரியாக வெடிக்கும் அல்லவா அது போல படத்தின் முடிச்சுகள் அவிழும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். அறிமுக இயக்குனர் சிவகுமார் பலே கில்லாடி தான். படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனும் தான் ஏனென்றால் படத்தின் கதை நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இருக்கும் பட்சத்தில் செலவை படத்திற்கு செய்யாமல் ப்ரமோஷனுக்கு செய்து லாபம் அடைந்து விடலாம் என்கிற அருமையான பார்முலாவை பிடித்துள்ளார்!! ராதிகா கிழவி கதாபாத்திரத்தை அசால்டாக அடித்து நொறுக்கி இருக்கிறார். இயக்குனர் கமல் அவர்களின் அதி தீவிர விசிறி போல. படத்தில் கமலை பற்றி போற்று போற்று என்று போற்றி இரண்டாவது பட வாய்ப்பை ராஜ்கமல் இடமிருந்து பெற்றுள்ளார். முனீஸ் காந்த் முதிர் கண்ணனாக நடித்துள்ளார். எதற்காக இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் உருக்கமாக சொல்லும் இடம் அனைவரையும் கலங்க செய்து விடுகிறது. கோவில் அருகில் இருக்கும் ஒரு குடிகாரர் வாய்ப்பு கிடைத்ததும் சாமியார் ஆக முயற்சிப்பதும் தனக்குத்தானே "கங்காரு அடிகளார்" என்று பெயர் சூட்டிக் கொள்வதும் சரியான காமெடி அண்ணன்களிடம் படித்தவன் என்கிற கெத்து காண்பிக்க பால சரவணன் மருத்துவர் பேசும் ஆங்கிலத்தை அவரது முக பாவத்தை வைத்து புரிந்து கொண்டதாக மொழியாக்கம் செய்யும் இடம் சரியான கிச்சுகிச்சு. பால சரவணன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். கமலின் தீவிர ரசிகராக ரேடியோ செட் காரராக வரும் சிங்கம் புலி சிரிப்பு புலி. பொருளாதார சுயசார்பு நிலையே பெண்களுக்கு சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பெற்று தரும் என்கிற மையச்சரடை வைத்து அழகான படத்தை நமக்கு தந்துள்ளார் அறிமுகம் இயக்குனர்

Saturday, December 27, 2025

சிறை - பட விமர்சனம்

சிறை - தமிழ்ப்படம்
சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக் கொண்டிருந்தோமா!! என்றெல்லாம் சினிமாவின் போக்கு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவித்துவமாக அங்கலாய்த்து கொண்டிருந்தார்!! ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் படங்கள் சினிமாவின் போக்கை ஓரளவு நல்வழியில் நெறிப்படுத்தி செல்கின்றன. ஜெய்பீம் படத்தில் தமிழ் அவர்களைப் பார்த்து எவ்வளவு பெரிய கொடூரன் என்றெல்லாம் சபித்திருப்போம். ஆனால் அவர் தோற்றத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் மனிதர் பேரன்பும் பெருங்கருணையும் உள்ளவராக அல்லவா இருக்கிறார்!! ஏற்கனவே டாணாகாரன் படத்தில் பயிற்சி காவலர்களின் நிலை பற்றி பேசியவர் இந்த படத்தில் கைதிகளை கோர்ட்டுக்கு பத்திரமாக அழைத்துச் சென்று வரும் ஏ ஆர் போலீஸ் மற்றும் அவர்கள் அழைத்துச் செல்லும் கைதியின் பின்புலம் என்றெல்லாம் அழகான ஒரு கதையை படைத்துள்ளார். திரைக்கதையிலும் வசனத்திலும் கூட உதவி செய்துள்ளார். ஆனால் இயக்குனர் சுரேஷ் ராஜ்குமாரி. விக்ரம் பிரபு கெரியரில் மிகச் சிறந்த ஒரு படம் என்று கூறலாம். அவருக்கு இணையராக நடித்தவர் அவ்வளவு பிரபலம் இல்லாத ஒரு நடிகை போலத்தான் இருக்கிறார். மற்றும் ஒரு இளம் நடிகராக அக்சய குமார் ஒன்று ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார் ஒரு அறிமுக நடிகரிடமிருந்து இவ்வளவு ஒரு தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். அந்த இளம் நடிகருக்கு இணையாக நடித்திருந்த இளம் அழகாக நடித்திருந்தார். படத்தில் யாருக்கும் பெரிய மேக்கப் இல்லை புத்தம் புது ஆடைகள் எல்லாம் இல்லை. படத்தின் முதல் காட்சியே பட்டாசாக இருந்தது. அது போல இன்டெர்வெல் ப்ளாக்கும் லப்டப்பை எகிறச்செய்யும். வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு விசாரணை கைதி அழைத்துச் செல்லப்படுகிறார் இந்த பயணத்தில் ஊடாக அவரது ஃப்ளாஷ் பேக் கதையும் சொல்லப்படுகிறது. துவக்கத்தில் கைதி தப்பிவிட போலீஸ் காரர்கள் மாட்டிக் கொள்வார்களோ என்று நினைக்கும் நாம் பிறகு கைதி சிறையில் இருந்து வெளியே வந்துவிடமாட்டானா என்று நினைக்க வைத்துவிடுகிறார்கள். "நம்மிடம் சிறிதளவு அதிகாரம் இருந்தால் கூட நம்மிடம் வந்து நிற்கும் எளிய மனிதர்களின் துயர் துடைக்க அந்த அதிகாரத்தை பயன்படுத்த தயங்க கூடாது" என்று கூறுவதோடு படம் முடிகிறது. நான் எப்போதும் எனது மனதில் ஆழமாக பதிய வைத்து இருப்பது இதைத்தான். ஆசிரியர் பணி என்பது வேலை அல்ல அது ஒரு பொறுப்பு. நம்மிடம் கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு பாடத்தையும் வாழ்வியல் அறங்களையும் போதிக்க வேண்டியது நமது கடமை. ஆகவே படத்தின் இறுதிக் காட்சி இதயத்தில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டது. படத்தை அருணும் நானும் திருச்சி மாரிஸ் ராக் தியேட்டரில் பார்த்தோம். தியேட்டரின் நட்ட நடுவில் அமர்ந்து பார்த்தோம். டால்பி ஸ்டீரியோ எஃபெக்ட் அவ்வளவு அற்புதமாக இருந்தது. படத்தின் ஒளிப்பதிவு நாம் திரைக்குள் இருந்தவாறே நடப்பதை பார்க்கிறோமோ?! என்கிற மயக்க நிலையை தருவது போன்று மெஸ்மெரைசிங் ஆக உள்ளது. படத்தின் பின்னணி இசை பதட்டத்தை நம்முள் கடத்துகிறது. அவ்வளவு பெரிய அரங்கம் முழுதும் நிறைந்திருந்தது. வருட இறுதியில் வந்துள்ள சிறந்த படைப்பு அனைவரும் பாருங்கள். கதாநாயகியின் அக்கா ரோலில் வருபவர் இந்தப் படத்தில் வரும் இதே சூழலில் இதே கதாபாத்திரத்தில் ஏற்கனவே வேறு ஒரு பிரபலமடையாத ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை கூட நான் பார்த்திருந்ததால் எனக்கு தோன்றியது.

Thursday, December 25, 2025

இடைநிறுத்தமும் இடைமுடுக்கமும்

இடை நிறுத்தம்
"சார் இவன் கடைசியா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் பள்ளிக்கூடம் வந்திருக்கான் அதுக்கப்புறம் வரவே இல்ல இப்ப அவன் பெயர் ஐந்தாம் வகுப்பு வந்தாச்சு டிசி வாங்கவும் இல்லை" என்று பள்ளிக்கு சென்ற உடனே எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிறுவனை அறிமுகம் செய்தார்கள் பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்கள் பட்டியல் (OOSC - OUT OF SCHOOL CHILDREN)என்ற ஒன்று எமிஸ் தளத்தில் உள்ளது அது மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து நிலை கல்வித்துறை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு கொண்டே இருக்கும். எனவே நெருக்குதல் காரணமாக அவனை அரையாண்டு பரிச்சை தொடங்கிய அன்று அட்மிஷனுக்கு அழைத்து வந்தார்கள் உடை கலைந்து முடி எல்லாம் வளர்ந்து பள்ளிக்கூடத்திற்கு எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றான். அவனிடம் காமெடியாக பேசி ஆசுவாசப்படுத்தி அட்மிஷன் போட்டு உடனடியாக பாட புத்தகங்கள், மூன்று செட் சீருடைகள் விலையில்லா புத்தகப் பை விலையில்லா ஷூ ஜாமென்ட்ரி பாக்ஸ் என கைநிறைய பொருட்களை கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பினோம். பரீட்சை முடியும் வரை தொடர்ச்சியாக தொய்வில்லாமல் வந்ததோடு தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க அவன் தேர்வு தாளில் வினாத்தாளிலிருந்து எழுத்துக்களை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தான். சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அவ்வப்போது கண்ணில் படும் போதெல்லாம் அவனை விசாரித்துக் கொண்டே இருக்கிறேன் அவன் தொடர்ச்சியாக வருவானா இல்லை மீண்டும் நின்று விடுவானா என்பது ஜனவரி மாதம் தெரியும். சரியாக இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு முன்னால் அதாவது நவம்பர் துவக்கத்தில் ஒரு பாட்டி தனது பேரனை அழைத்துக் கொண்டு வந்தார். "சார் இவன் என்னோட பேரன் இவங்க அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் கிரக வாட்டம் சரியில்ல அப்படின்னு ஜோசியக்காரர் சொல்லிட்டார்" "ஓ ஜோசியக்காரரே சொல்லிட்டாரா அப்போ சரியா தான் இருக்கும்" "ஆமா சார், அதனால அவனை என் கூடவே வச்சுக்கிட்டேன்" "அவங்க அப்பா அம்மா எங்க பதுங்கி இருக்காங்க?!" "அவங்க அப்பா அம்மா மெட்ராஸ்ல இருக்காங்க இவன் மெட்ராஸ்ல ஏழாவது வரைக்கும் படிச்சிருக்கான் சார் இந்த வருஷம் ஸ்கூலுக்கு போகல இங்கே சேர்த்துக்க முடியுமா சார்?!"என்று கேட்டார் இப்படித்தான் ஜோசியக்காரனுங்க பல குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிட்டு பணத்த வசூல் பண்ணிக்கிட்டு போயிட்டே இருக்கானுங்க!! அவனை அழைத்து தமிழ் ஆங்கிலம் இரண்டையும் வாசிக்க செய்து பார்த்தால் இரண்டையும் எந்த தொய்வு இன்றி கடகடவென்று வாசிக்கிறான் வாய்ப்பாடும் தெள்ளத்தெளிவாக சொல்கிறான். 'அடப்பாவிகளா ஒரு நல்லா படிக்கிற பிள்ளையை இப்படி வீணடிச்சு வச்சிருக்கானுவ' என்று நொந்து கொண்டு அட்மிஷன் போட்டேன். "இந்த வாரம் சென்னைக்கு போயி டிசி எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விடனும் சரியா?!" "சரிங்க சார்!!" என்றார் பாட்டி. "சார்.." "என்னடா?!" "எங்க அக்காவும் அங்க ஒன்பதாம் வகுப்பு படிச்சிது சார்" என்று தயங்கியபடி கூறினான். "ஏம்மா ஆம்பள பிள்ளைங்கறதுக்காக இவன மட்டும் நைசா கொண்டு வந்து அட்மிஷன் போட்டுட்டீங்க பாப்பா வீட்ல இருக்குறத என்கிட்ட சொல்ல கூட இல்லையே, அதையும் அழைச்சிட்டு வாங்கம்மா அட்மிஷன் போட்டறலாம்" என்று கடிந்து கொண்டேன். தம்பி அளவிற்கு இல்லை என்றாலும் அந்த பெண்ணும் சுமாராக படித்தார். சில நாட்கள் கழித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, "சார் அந்த பையன் சூப்பரா படிக்கிறான் சார் ரொம்ப ஆர்வமா இருக்கா அந்த பாப்பா கொஞ்சம் சுமாரா படிக்கிறா ஆனா கொண்டு வந்துடலாம் சார்" இதுதான் எங்கள் ஆசிரியர்கள்!! நவம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் டிசம்பர் மாதத்தில் அட்மிஷன் போடுகிறேன் என்றெல்லாம் என் மீது கோபித்துக் கொள்வதில்லை. எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை அரவணைத்து அவர்களால் இயன்ற அளவுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கொண்டு வந்து விடுகிறார்கள். மேலும் எந்த தருணத்தில் யாரைப் பற்றி கேட்டாலும் அவனுடைய ஜாதகத்தை எடுத்து வைக்கும் அளவுக்கு மனதிலேயே தகவல்களை பொதித்து வைத்துள்ளார்கள். இடை முடுக்கம்!! இடைநிறுத்தம் மாணவர்கள் செய்யும் நமக்கு நாமே திட்டம் என்றால் இடைமுடுக்கம் என்பது பொதுத் தேர்வுகள் நடக்க இருக்கும் வகுப்புகளில் படிக்கும் மெல்ல கற்போருக்கு ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் செய்யும் "செய்வினை" ஆகும். பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி என்கிற ஒரு மோசமான புகழ் மயக்கம் தான் இதற்கு எல்லாம் அடிப்படை!! எல்லா பாடங்களிலும் 100% தேர்ச்சி கிடைக்கணும்!! அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் உடைக்கணும்!! என்பது பல பள்ளிகளின் தாரக மந்திரம். அதுபோன்ற ஒரு இடைமுடுக்கம் செய்யப்பட்ட மாணவி காலாண்டு பரீட்சை துவங்க ஒரு பத்து நாட்கள் இருக்கும் போது வந்தார். அந்த மாணவி எங்களிடம் ஏற்கனவே எட்டாம் வகுப்பில் படித்தவர். அந்த ஆண்டே ஒரு தனியார் பள்ளிக்கு சென்று விட்டு அதற்கு அடுத்த ஆண்டு ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு சென்று சேர்ந்தார். இதுபோல ஆண்டுக்கு ஒரு முறை பள்ளிகளை மாற்றுவது மாணவர்களின் படிப்பில் எந்த விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக அந்த மாணவர் ஒவ்வொரு புது பள்ளிக்கு செல்லும் போது தன்னை அங்கே நிலை நிறுத்திக் கொள்வது சக மாணவர்களில் இருந்து நண்பர்களை கண்டடைவது ஆசிரியர்களின் மனதை கவர்வது என்று பல விஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கும். அவ்வாறு செட்டில் ஆகும் தருணத்தில் மறுபடியும் பள்ளியை மாற்றுவது என்பது அவர்களை கடுமையான ஆளுமை சிக்கலுக்கு உள்ளாக்கும். அவரது படிப்பும் பெரும் பின்னடைவை சந்திக்கும். மறுபடியும் அந்த மாணவி பிரச்சனைக்கு வருவோம் அந்த மாணவி முதல் இடைப்பருவத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளார். அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர் அதிகாலை சிறப்பு வகுப்புகளுக்கு வர கோரியிருந்தனர் ஆனால் அந்த மாணவி தினமும் பேருந்தில் சென்று வருபவர் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று அவரது தந்தை கூறி இருக்கிறார். இந்த சூழலில் எங்கள் பள்ளிக்கு சேர்க்கை கோரி அந்த மாணவியின் தந்தை வந்திருந்தார். "ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கி விட்டது. இது நிர்வாக ரீதியான சிக்கல் அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளிகள் வாரியாக வெவ்வேறு வேகங்களில் படங்கள் நடத்தி இருப்பார்கள். அதனால் அவர் இங்கே வந்து பொருந்துவது சிரமமாக இருக்கும்" "இப்போ என்ன சார் பண்றது அங்கேயும் அழைச்சிட்டு போக சொல்லி சொல்றாங்களே?!" "பள்ளியில் கொஞ்சம் பேசி பாருங்க அப்படி இல்லன்னா முதன்மை கல்வி அலுவலர் இடத்தில் சென்று முறையிட்டு பாருங்கள் என்றேன்" "ஏழை மாணவர்களுக்கும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் நம்மை விட்டால் வேறு எங்கே சார் போவார்கள் நாம தான் சார் அவர்களை அரவணைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்!!" இது முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறிய வார்த்தைகள். அந்த பள்ளி நிர்வாகத்தை பேசி உடன்பட செய்வதை விட என்னிடம் பேசி விடுவது இலகுவாக இருக்கும் என்று சார் நினைத்து இருப்பார் போலும். அன்று மாலையே மாணவியை பள்ளியில் சேர்த்துக்கொண்டு சில அறிவுரைகள் வழங்கி ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி வகுப்பில் அமர வைத்தோம். காலை நேர மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள்& பள்ளியில் நடைபெறும் அலகுத் தேர்வுகள் என எல்லாவற்றிலும் அந்த மாணவிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அவரும் உள்ளூரில் இருந்து பள்ளி வந்து சென்றதால் எல்லாவற்றையும் சிரமம் இன்றி கேட்டுக் கொண்டார். காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று விட்டார். அழைத்து பேசியபோது மிகவும் நம்பிக்கையோடு நல்ல மதிப்பெண்கள் பெறுவதாக என்னிடம் உறுதியளித்துள்ளார்‌. தேர்ச்சி விழுக்காட்டினை வைத்து ஆசிரியர்களை எடை போடுவது என்பது ஆசிரியர்களை பதட்டத்துக்கு உள்ளாக்குவதோடு பாடங்களை அதற்குரிய வழிமுறைகளைக் கொண்டு அனுபவித்து நடத்தும் முறையை கைவிட்டு தேர்வு & மதிப்பெண்கள் நோக்கிய வழிமுறைகளை கை கொள்கிறார்கள். இது என்ன ஆகிறது என்றால் மெல்ல மெல்ல மற்ற வகுப்புகளையும் இது வழிமுறை ஆட்கொள்கிறது. அதனால் மாணவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். ஆமாம் அவர்களுக்கு மதிப்பெண்கள் எடுக்கும் வழிமுறைகள் தெரியும் ஆனால் பாடங்களில் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது. புரிந்து கொண்டு மதிப்பெண்கள் எடுப்பவர் என்பது பாதி பேர்தான். அதனால்தான் மெல்லக் கற்கும் மாணவர்களை பார்க்கும் போதெல்லாம் மிகுந்த கோபம் கொள்வதோடு பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்கள் கற்ற உளவியல் வழிமுறைகள் எல்லாம் கோபத்தில் கரைந்து போகிறது. Curiosity kills the cat என்பது போல பொது தேர்வுகளுக்கு என்றுள்ள மதிப்பீட்டு வழி முறைகள் மாணவர்கள் பாடங்களை ஒழுங்காக புரிந்து கொண்டு படிக்காமல் இருப்பதற்கு காரணமாக அமைவது வேதனை. இடைமுடுக்கங்களும் இடைநிறுத்தங்களும் ஒன்பதாம் வகுப்பில் ஏற்படுவதற்கு பொதுத் தேர்வு தேர்ச்சி விழுக்காடு பயம் மட்டுமே காரணம். எனவே இனிவரும் காலங்களில் கல்வி அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது முக்கியமாக மதிப்பீட்டு முறையிலும் இருக்க வேண்டும்.

Friday, December 12, 2025

எனது போராட்டம் -Mein Kampf

ரத்த கலப்பு தாண்டவம் ஆடி வரும் ஒரு சகாப்தத்தில் தங்கள் இனம் அதனால் அசுத்தம் அடையாது பாதுகாக்கும் கடமையில் தவறாது செல்லும் ஒரு அரசாங்கம் இந்த உலகையே ஆட்சி செய்யும் நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. இனவெறியில் உச்சம் தொட்ட ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு விஷயத்தை சிந்திக்க முடியும். அந்த நபரின் இதர பல தத்துவ முத்துக்கள்: மக்கள் தொகையை செயற்கையாக கட்டுப்படுத்த நினைப்பது இயற்கைக்கு விரோதமானது. எனவே கருத்தடை என்பது தவறு மாறாக இயற்கை சீற்றம் வறட்சி போன்ற நிகழ்வுகளால் அவ்வப்போது இயற்கையே தனது மக்கள் தொகையை சமன் செய்து கொள்ளும். ஒரு தேசத்தில் வலிமை என்பது தாக்குதல் திறனில் தான் உள்ளதேயன்றி தற்காப்பில் இல்லை. ஒரு கொள்கை பரவுவதை தடுக்க கலப்பற்ற பலாத்காரம் பயன்படும் என்றால் அதை இடைவிடாமல் பயன்படுத்த வேண்டும். ஒரு நாடு தன் வாழ்விற்காக போராடும்போது கருணை என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே அதை அனுமதித்தால் போராட்டம் பலகீனமாகிவிடும். உறுதியுடனும் விடாமுயற்சியுடன் ஒருமைப்பாட்டு முறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் அதற்கு முதலில் அரசாங்க ஆட்சி மொழி ஒரே ஒரு பொது மொழியாக இருக்க வேண்டும். மத விஷயங்களில் தலையிட அரசியல் கட்சிகளுக்கு உரிமை இல்லை மத விஷயங்கள் தேசங்களுக்கு விரோதமாக இருந்தால் அதை ஆட்சேபிக்கலாமே தவிர மத விஷயங்களில் தலையிடுவது மக்களுக்கு பிடிக்காது. ஒரு நாடு பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் உணவு தேவைக்காகவும் விவசாய நிலப் பரப்பை விஸ்தீரப்படுத்தவும் அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஒரு சொற்பொழிவில் மக்கள் பகுத்தறிவுக்கு திருப்தி உண்டாவதை காட்டிலும் அவர்கள் உணர்ச்சி வெள்ளம் பொங்க வேண்டும். அதாவது நோ லாஜிக் ஒன்லி மேஜிக். வலிமை உள்ளவர்கள் என்றென்றும் பலவீனமானவர்களின் எஜமான்களாக இருந்து வருவார்கள் இது யாராலும் மாற்ற தேவைப்படாத இயற்கை நியதி. எப்போதுமே பிரச்சாரமானது எதிரிகளின் அநீதியை மாத்திரமே இடைவிடாமல் வலியுறுத்தி கூறுவதாக இருக்க வேண்டும். எதிரிகளின் நல்ல அம்சம் ஏதேனும் இருந்தாலும் அதை கூறக்கூடாது. தங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும் உண்மைகளை மட்டுமே கூறி வர வேண்டும். உயர் வம்சத்தினர் தாழ்ந்த வம்சத்தினருடன் புணர்வதன் மூலம் காலப்போக்கில் உயர்ந்த வம்சம் சிறப்பியல்புகள் குன்றி நசிந்து விடும். பரம்பரை நோயாளிகளையும் புத்தி சுவாதீனம் அற்றவர்களையும் மலடாக்கிவிட வேண்டும். பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கலாம் வேலைக்கு செல்ல அனுமதிக்கலாம் ஆனால் கூட அவர்களின் இறுதி லட்சியம் குழந்தை பெற்றுக் கொள்வது தான். மனித குலத்தின் உயர்ந்த வம்சத்தினரான ஜெர்மானியருக்கு தான் உலகிற்கே எஜமானவர்களாக இருக்கும் உரிமை உண்டு. ஒரு வழியாக இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்தவர் யார் என்ற யூகத்திற்கு கடைசி வாக்கியமாவது உங்களை தள்ளி இருக்கும். ஆமாம் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் மெயின் காம்ஃப் என்ற தனது ஆட்டோ பயோகிராபியில் எழுதியுள்ள விஷயங்களில் சாராம்சம் தான் நான் மேலே கூறியுள்ளது. ஜெர்மனி ஆஸ்திரியா இரண்டுக்கும் நடுவில் இருக்கும் எல்லை கிராமமான இன் பிரானோவில் பிறந்துள்ளார். இரண்டு தேசமும் ஜெர்மனியர்களின் தேசம் என்பதால் இரண்டும் ஒன்று சேர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துள்ளது. (முதல் உலகப்போருக்கு பின் அதாவது 1918இல் ஜெர்மன் குடியரசுடன் தாம் இணைவதாக ஆஸ்திரியா பிரகடனம் செய்தது ஆனால் பிரிட்டன் முதலான நேச நாடுகள் அதை தடை செய்துவிட்டன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப் போர் துவங்கும் தருவாயில் ஜெர்மன் துருப்புகள் ஆஸ்திரியாவில் பிரவேசித்தன. இவ்வாறாக ஹிட்லர் ஆஸ்த்ரியாவை ஜெர்மனியுடன் இணைத்து தன்னுடைய நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொண்டார்) தனது இளமை பருவம் ஹிட்லர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தான் வளர்ந்துள்ளார். ஏராளமான புத்தகங்கள் வாசித்துள்ளார். புத்தகங்களை அவர் வாங்கி வாசித்துள்ளார். 17 வயதில் காரல் மார்க்ஸ் ன் கொள்கை அவருக்கு அறிமுகம் ஆகி உள்ளது. கம்யூனிச அமைப்பிலும் ஈடுபாடு காட்டியுள்ளார் . ஆனாலும் அவர் நூலில் குறிப்பிடாத ஏதோ ஒரு காரணத்தினால் அங்கிருந்து விலகி உள்ளார். (விதியின் முரட்டு கரங்களால் திடீரென ஓங்கி ஒரு அடி வாங்கிய பின்னர் விதியினீ கரங்களால் எனது கண்கள் திறக்கப்பட்டன என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்) அதன் பிறகு பொதுமக்களை வஞ்சிப்பதற்கான இறையற்ற தன்மை என்று கம்யூனிசத்தை குறிப்பிடுகிறார். மார்க்ஸ் கொள்கை மனித குலத்தின் அழிவுக்கான ஒரு தத்துவம் என்று கடுமையாக சாடுகிறார். மார்க்ஸ் கொள்கையின் இறுதி நோக்கம் யூதர் அல்லாத தேசிய அரசுகளை அழிப்பது தான் என்றெல்லாம் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு இணையாக கம்யூனிசம் என்றாலே கதறி துடிக்கும் ஆளாக ஹிட்லர் இருந்துள்ளார். தனது பதின் பருவங்களில் அவருக்கு பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. யூதர்கள் நடத்திய பத்திரிகைகளை விரும்பி வாசித்துள்ளார் "அவர்கள் வேற்று மதத்தவர் என்பதால் துவேஷம் கொள்ளக்கூடாது சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூட எண்ணி உள்ளார். நமது தினத்தந்தி போல யூதர்கள் நடத்திய பத்திரிக்கையும் அரசாங்கத்தை காக்காய் பிடிப்பது அவருக்கு சற்று நெறுடலாக இருந்தது. அதோடல்லாமல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெர்மனியின் பலத்தை குறைத்து மதிப்பிடுவது போலவும் வீரர்களின் உற்சாகத்தை குன்றச் செய்வது போலவும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்துள்ளதால் முற்றிலும் யூதர்களையும் அவர்கள் நடத்தி வந்த பத்திரிக்கைகளையும் வெறுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி யூதர்களை சதிகாரர்கள் சகுனிகள் என்கிற அளவுக்கு கடும் ஒவ்வாமையோடு பார்த்து வந்துள்ளார். முதலாம் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் மன்னருக்கு விண்ணப்பம் செய்து பவேரிய ராணுவத்தில் சேர அனுமதி கோரியுள்ளார். வடிவேல் போல வான்டனாக வண்டியில் ஏறி யுள்ளார். முதலாம் உலகப் போரில் கடைநிலைப் போராளியாக இருந்த ஒருவர் இரண்டாம் உலகப்போரை முன் நின்று வழி நடத்தியுள்ளார் என்பதும் ஒரு துயர சாதனை வரலாறு. முதலாம் உலகப் போர் முடிந்து வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி மாபெரும் அவமானத்தையும் பொருளாதார நஷ்டத்தையும் சந்தித்த பிறகு தான் ஹிட்லர் அரசியலில் நுழைவது என்று முடிவு செய்வது படிப்படியாக காய்களை வெகு நேர்த்தியாக நகர்த்துகிறார். சொற்பொழிவு ஒன்றை மட்டுமே ஆயுதமாக கொண்டு ஜெர்மனியையே கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இதுகுறித்து மேலே கூறியுள்ளேன். மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொண்ட கலந்துரையாடல் துவங்கி 50,60,100 ,150 என்று வளர்ந்து 60 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் பேசியது வரை வளர்ந்துள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூட்டத்துக்கு இடையூறு செய்யும் எதிரிகளை பந்தாடவும் பவுன்சர்களை நியமித்ததில் நமது இளைய தளபதிக்கு முன்னோடி ஹிட்லர். ஒரு கூட்டத்தின் போது நூற்றுக்கு குறைவான எண்ணிக்கையிலான பவுன்சர்களை கொண்டு ஆயிரக்கணக்கான எதிரிகளை பந்தாடியதை பதிவு செய்துள்ளார். சற்றும் சுவையில்லாத எழுத்து நடை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது என்று வாசிக்கவே அயர்ச்சியான ஒரு நூலாக தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லரின் இந்த நூலில் நாம் எடுத்துச் செல்ல (take away) என்று எந்த ஒரு நல்ல விஷயமும் இல்லை. எவர் ஒருவர் மோசமான தலைவர் என்பதை அடையாளம் காண உதவும் பண்பு நலன்களை வேண்டுமானால் இங்கிருந்து கற்றுக்கொள்ள இயலும். (நீங்க யாரையாவது அடையாளம் கண்டுகினீங்களா). நூல்: எனது போராட்டம் (Mein Kamph )- ஹிட்லர்

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்...