Sunday, May 10, 2026

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார் டிஸ்கவரி பதிப்பகம்
சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான மனநிலையில் வாசிப்பு இல்லாமல் இருந்தது. இன்று டிவி களிலும் சோசியல் மீடியாக்களிலும் வலம் வரும் "இராவணன் மவன் டா" க்களுக்கு பயந்து புத்தகத்தில் கண்களை புதைத்துக் கொண்டேன். பெரம்பலூர் புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்திருந்த கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் எழுதிய "நினைவோ ஒரு பறவை" நூலை வாசிக்க எடுத்தேன். எனக்கு எப்போதுமே நா முத்துக்குமார் முகத்துக்கும் வெற்றிமாறன் முகத்துக்கும் ஒரு குழப்பம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்தது. (இப்போது ரொம்ப தெளிவு ) அதுபோல பொய்யாதநல்லூர் பள்ளியில் என்னுடன் பணி புரிந்த வேதியல் ஆசிரியர் சுரேஷ் அவர்களின் முகத்துக்கும் நா முத்துக்குமார் அவர்களின் முகத்துக்கும் பெரிய ஒற்றுமை இல்லை என்றாலும் ஏனோ நான் உட்பட பல ஆசிரியர்கள் அவரை முத்துக்குமார் என்று விளிப்போம். காரணம் இவரும் மனதை தொடும் கவிதைகளையும் கதைகளையும் புனைவார். முகத்தில் எப்போதும் ஒரு ஆழ்ந்த அமைதி குடி கொண்டு இருக்கும். சோப்பு குமிழை கூட உடைத்து விடாத கவனத்துடன் வார்த்தைகளை கையாளும் மென்மை என பல ஒற்றுமைகள். இந்த அடையாள குழப்பத்தை நா முத்துக்குமார் அவர்களும் ரயில் பயணங்களில் சந்தித்துள்ளதாக எழுதியுள்ளார். அதிலும் அவரை ஆடுகளம் படத்தில் உள்ள கிஷோர் என்று பிழையாக ஒருவன் புரிந்து கொண்டது கொடூர நகைச்சுவை. புத்தகம் அம்மாவின் தையல் மிஷினில் தொடங்குகிறது. அன்றைய காலகட்டங்களில் பெண்களுக்கு சீராக தையல் மெஷின் கூட சிலர் கொடுத்து இருப்பார்கள். எங்கள் சின்னமாகவும் தையல் மெஷின் வைத்து தைத்துக் கொண்டிருப்பார். இந்த கட்டுரை அதுபோல பலரை ஞாபகப் படுத்தியது. "கறிச்சுவை" என்கிற இரண்டாவது கட்டுரையில் தனது தாயை இழந்த சோகத்தையும் தன்னை தனது பாட்டி நன்றாக கவனித்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களையும் சிறப்பாக பதிவு செய்திருப்பார். கட்டுரையே இளையராஜா பாடிய "ஆலோலம்பாடி அசைந்தாடும் காற்றே..." பாடலில் இருந்துதான் தொடங்குகிறது. தான் அசைவம் சாப்பிடாத போதும் தனது பேரனை முனியாண்டி விலாஸ் கடையில் மூக்கு முட்ட அசைவம் சாப்பிட அமர வைத்து விட்டு வெளியில் காத்திருந்த அந்த பாட்டியை நினைக்கும் போது கண்கள் பனித்தன. "இரண்டு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முதல் வகை கேள்விக்கான விடையை கற்றுக் கொடுப்பவர்கள்; இரண்டாவது வகை விடையே இல்லாத கேள்வியைக் கேட்க தூண்டுபவர்கள்" இது ரோஜா பூ மிஸ் கட்டுரைக்கான முகப்பு கவிதை. ரோஜாப்பூ மிஸ் குறித்து இவர் எழுதிய கவிதை வெகு பிரபலம். அவரைப் பற்றி வாசித்து நமது கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டு போனால் இறுதியில் தனது தங்கைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விட்டு தான் இன்னும் தனிமரமாகவே இருக்கும் புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் திலகவதி என்ற ஆசிரியரின் பால் கொண்டு சென்று விடுகிறது. கட்டுரைக்கு அருகில் திலகவதி மிஸ் எழுதிய அனுப்பியிருந்த பின்னூட்டமும் படிப்பதற்கு கிடைக்கிறது. இந்தக் கட்டுரையும் இறுதியில் நம் கண்களை பனிக்க செய்கிறது. கல்யாணத் தேன் நிலா என்கிற கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் இந்த வரி நமது பல குடும்பங்களின் எதார்த்தத்தை காட்டுகிறது. "இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டும் அல்ல கல்யாணத்தில் கலந்து கொள்வதைமும்கூட நகைகள் தான் தீர்மானிக்கின்றன" ஊரில் உள்ள உறவுகளுக்கெல்லாம் தேடித் தேடி கல்யாணம் செய்து வைப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த 'கல்யாணம் மாமா' இறுதிவரை கல்யாணம் ஆகாமலே இறந்து போனார் என்கிறது ஒரு கட்டுரை. மூழ்கி மூழ்கி மீண்ட கதையில் முருகன் டாலர் போட்ட செயின் என்கிற ஒரு விஷயத்தை வைத்து தனது தந்தையின் பொருளாதர நிலை தாண்டிய வைராக்கியம் தனது அன்னை வழி ஆயாவின் கறார் தனம் என்று நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை படம்பிடித்துக் காட்டுகிறார். ஒரு தகப்பனின் கதை என்கிற தலைப்பின் கீ ழ் நாகமுத்துக்குமார் அவர்களின் தந்தை நாகராஜன் நா முத்துக்குமாரை பற்றி எழுதியது போல எழுதியிருப்பார் அதில் தனது ஆரம்பகால எழுத்துக்களை அவர் செம்மை படுத்திய விஷயத்தையும் அழகாக கூறியிருப்பார். குழந்தை கடவுளிடம் "துன்பம் என்றால் என்ன?!" என்று கேள்வி கேட்டதாகவும் கொஞ்ச நேரம் யோசித்த கடவுள் கையில் பிரம்புடன் கணக்கு வாத்தியார்களை அனுப்பினார் என்று எழுதியுள்ளார்!! (என்னா ஒரு வில்லத்தனம்!!) இதில் தனக்கு டியூஷன் எடுத்த கணக்கு வாத்தியார் பற்றி கூறியுள்ளார். எண்பதுகளின் இறுதியில் கிராமங்களில் வசதி படைத்தவர்கள் வீட்டுக்கு வந்த "டிவி பெட்டி" பற்றிய கட்டுரைதான் ஒளியும் ஒலியும். எல்லா ஊர்களிலும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள் உண்டு. கலைஞர் அவர்கள் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வந்த பிறகு தான் இந்த அவலம் நீங்கியது. சிறுவயதில் நாம் சாதிக்கு சுதந்திரம் என்னவென்றால் சைக்கிள் கற்றுக் கொள்வது. சைக்கிள் கற்றுக் கொண்ட பிறகு நமது பயணங்களை துரிதப்படுத்த சிறகுகள் சேர்ந்து விடுகின்றன. எங்கள் தந்தையின் சைக்கிளில் நான் சைக்கிள் கற்றுக் கொண்டது, அதன் பிறகு கல்லூரியில் இளங்கலை படித்த காலத்தில் எனது அண்ணனின் சைக்கிளை மூன்று ஆண்டுகளும் திருச்சி முழுக்க ஓட்டிக்கொண்டு சிட்டாக பறந்தது என்று பல நினைவுகளை இந்த புத்தக தலைப்பில் ஆன கட்டுரை 'நினைவோ ஒரு பறவை' அழகாக ஞாபகப்படுத்தியது. 'வெந்து தனிந்த காடு'என்கிற கட்டுரை வாழ்க்கையில் பல சூழல்களில் நாம் அறிந்தோ அறியாமலோ ஆணாதிக்க சிந்தனையை மனதுக்குள் எப்படி வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கூறி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தோடு முடிகிறது. இறுதியாக ஏழு கட்டுரைகள் தனது அமெரிக்க பயண அனுபவங்கள் பற்றி அழகாக எழுதியுள்ளார் அதில் ஒரு கட்டுரையில் "டெர்மினல்" படத்தின் கதையையும் விவரித்து இருப்பார். படம் பார்த்தவர்கள் தான் அந்த சூழலோடு இந்த படத்தின் கதை எவ்வாறு அழகாக புரிந்துள்ளது என்பதை உணர முடியும். நீண்ட இடைவெளிக்கு பிறகு 180 பக்கங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பை காலையில் துவங்கி மதியத்துக்குள் முடித்து தூக்கி வைத்து விட்டேன். நா முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் போல கட்டுரைகளும் மிகவும் அழகாகவும் நடைமுறை எதார்த்தத்தை பளிச்சென்று படம் பிடித்து காட்டுவதாகவும் உள்ளது. கவிஞர் வைரமுத்து போல கறார்த்தனமும் சாமர்த்தியமும் மிகுந்த வியாபார யுத்தி இவருக்கு கை வரவில்லை. இல்லையென்றால் இன்னும் எத்தனையோ புத்தகங்களை எழுதி சிறப்பாக விற்று பொருளாதரத்தில் நல்ல நிலை அடைந்திருப்பார். டிஸ்கவரி பேலஸ் பதிப்பகம் நா முத்துக்குமார் அவர்களின் நூல்கள் விற்று கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அவர்கள் குடும்பத்திற்கு வழங்குவதாக கூறியிருந்தார்கள். ஒரு அழகான வாசிப்பு அனுபவத்தை பெற இந்த கட்டுரையை நிச்சயமாக வாசிக்கலாம்.

Wednesday, May 6, 2026

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமா?!

வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்ததா?!
வாய்ப்பு இல்லை என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன். வாக்கு இயந்திரத்தை பொறுத்தவரை அது ஒரு மிகவும் எளிய இயந்திரம். நாங்கள் பி எட் படிக்கும்போது பொருத்துக டேபிள் தயார் செய்வதற்கு ஒரு சுவிட்ச்சை அமைப்போம் அது போன்றது தான். ஆனால் இதில் தரவுகளை பதிவு செய்து கொள்ள சிப் உள்ளது. எந்த பட்டனை அழுத்தினாலும் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்கு செல்கிறது என்ற ஒரு புகார் எழுந்த போது அதில் உண்மை இல்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்த நீங்கள் அழுத்தும் சின்னத்துக்கு தான் வாக்கு செல்கிறது என்பதை பக்கத்தில் உள்ள விவிபாட் இயந்திரத்தில் அந்த சின்னம் பிரிண்ட் ஆகி ஏழு வினாடிகள் வெளிச்சமாக தோன்றி பிறகு அந்த சீட்டு உள்ளே விழும். வாக்கு இயந்திரம் எங்கே வைத்திருப்பார்கள்?! ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு ஸ்ட்ராங் ரூம் தனியாக கட்டப்பட்டுள்ளது அங்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையை திறப்பதாக இருந்தாலும் திரும்ப மூடுவதாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில் தான் செய்ய வேண்டும். வாக்கு எந்திரம் தேர்தலுக்கு முன் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?! வாக்கு எந்திரத்தை தேர்தலுக்கு முன் அதாவது தகுதியுள்ள வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் பெயர் அவர்களுக்குரிய சின்னம் எத்தனை வேட்பாளர்கள் என்பதை ( ஒரு பேலட் யூனிட்டில் 16 சின்னங்கள் தான் வைக்க முடியும் அதனால் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயந்திரங்களை இணைத்துக் கொள்ளலாம்.) பேலட் யூனிட்டில் தயார் செய்து வைத்து விடுவார்கள். பேலட் யூனிட் ஒன்றுக்கு மேல் இருந்தாலும் கண்ட்ரோல் யூனிட் ஒன்றுதான் அங்கு தான் வாக்குகள் பதிவு செய்யப்படும். அதன் பிறகு வாக்குப்பதிவிற்கு ஒரு மூன்று நாட்கள் முன்பாக ஏராளமான பணியாளர்களை பதியமர்த்தி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஆயிரம் வாக்குகள் வரை போட்டு ரிசல்ட் பார்த்து பரிசோதனை செய்வார்கள். இத்தனையையும் தாங்கும் அளவுக்கு அதன் பேட்டரி அந்த இயந்திரத்தின் தாங்கு தன்மை இருக்கிறது என்று திருப்தி அடைந்த பிறகு தான் அவை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கப்படும். இதனை இந்த முறை தேர்தலின் போது அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை செலுத்தினால்?! உள்ளே வரும் வாக்காளர் தனது அடையாளத்தை சரிபார்த்து குறிப்பேட்டில் பதிவுகள் மேற்கொண்ட பிறகு அவருக்கென அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை எடுத்துக்கொண்டு அடுத்த அலுவலரிடம் செல்லும்போது அந்த அனுமதி சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு பேலட் பட்டனை அழுத்துவார். அப்போதுதான் வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் இருக்கும். வாக்காளர் போய் சின்னத்தை அழுத்திய பிறகு அந்த சுற்று முடிவுக்கு வந்துவிடும். அடுத்த ஓட்டு போட வேண்டும் என்றால் இதே நடைமுறையில் அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பேலட் என்கிற பட்டனை அலுவலர் அழுத்துவார் அவர் போய் சின்னத்தை அழுத்துவார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை( இதனை டோட்டல் என்கிற பட்டனை அமுக்குவதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்) பதிவேடுகளில் உள்ள வரிசை எண், அடையாளம் பார்க்கும் அலுவலர் வைத்திருக்கும் டேலி ஷீட்டில் உள்ள எண்ணிக்கை மூன்றும் ஒரே அளவில் இருப்பதை அவ்வப்போது வாக்குப்பதிவு தலைமை அலுவலர் சரிபார்த்த வண்ணம் இருப்பார். அலுவலர்களாக இருந்தாலும் அவர்கள் விருப்பத்திற்கு எல்லாம் அழுத்தி விட முடியாது. மேலும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கட்சி ஏஜெண்டுகளைக் கொண்டு எல்லா சின்னங்களுக்கும் சமமான வாக்குகளை செலுத்த கூறி (எல்லா பட்டன்களும் வேலை செய்கிறது என்பதை உணர்த்த) அவற்றை ஒரு படிவத்தில் குறித்து வைத்துக் கொண்டு வாக்குப்பதிவை குளோஸ் செய்து ரிசல்ட் பார்த்து படிவத்தில் குறிக்கப்படுகிறது. அவை சரியாக இருக்கிறது என்பதை ஏஜெண்டுகளுக்கு காண்பித்து அவர்களை திருப்தி அடைய செய்வது தான் இதன் நோக்கம். குளோஸ் பட்டனை அழுத்திய பிறகு வாக்குகள் எதையும் பதிவு செய்ய இயலாது என்பதையும் அவர்களுக்கு செய்து காண்பிப்போம். மாதிரி வாக்கு பதிவு முடிந்த பிறகு இயந்திரத்தில் உள்ள தரவுகள் கிளியர் பட்டனை அழுத்துவதன் மூலம் முற்றிலும் அழிக்கப்படும் தற்போது புத்தம் புதிதாக எந்த பதிவுகளும் இல்லாத இயந்திரம் தயார் வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏதாவது செய்துவிட்டால்!! இயந்திரத்தை மாதிரி வாக்கு பதிவுக்கு பிறகு மூடி சீல் வைக்கும் போது அந்த சீல் இன் வரிசை எண் குறித்து வைத்துக் கொள்வார்கள் ஏஜெண்டுகள். மேலும் அதில் ஏஜெண்டுகளும் கையொப்பம் விடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வாக்குச்சாவடிக்குரிய ஏஜென்ட்கள் அங்கே இருந்தாலும் அல்லது சீரியல் எண்களை தொகுத்து உரிய கட்சியினர் கைவசம் வைத்திருந்தாலும் ரிசல்ட் பார்க்கும்போது அவர்களுடைய கண்ட்ரோல் யூனிட் அத்துமீறி திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே பேலட் யூனிட் விவி பேட் ஆகிய அனைத்துக்கும் செல்லும் கேபிள்கள் கழற்றப்பட்டு அவை தனித்தனியே பெட்டிகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். ஆக கண்ட்ரோல் யூனிட்டுக்கு இன்புட் வழங்கும் பாதைகள் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அடைக்கப்பட்டு விடும். அதன் பிறகு கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று ரிசல்ட் பட்டனை அழுத்துவதன் மூலம் பார்க்கலாம். நிபுணர்களைக் கொண்டு தூரத்தில் இருந்து ஏதாவது செய்ய முடியுமா?! அந்த இயந்திரம் எந்த நெட்வொர்க்கிலும் இணைக்க இயலாத வகையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளது எனவே வைஃபை ப்ளூடூத் இன்ஃப்ரா ரெட் என எந்தவிதமான சிக்னல் இணைப்புகள் மூலமாகவோ நாம் அதனை இணைக்க இயலாது. அவ்வாறு இணைப்பதற்கு முதலில் அது ஆன் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் யாரேனும் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும் என்றால் வாக்கு எண்ணிக்கை மையத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் வாக்கு எண்ணிக்கை மையம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் தான் அந்த மையம் இருக்கும். அதோடு மட்டுமல்ல அது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் ஏஜெண்டுகளும் அங்கே காவலுக்கு சுழற்சி முறையில் இருப்பார்கள். இறுதியாக ஒன்று வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுபவர்கள் யாரும் தேவதூதர்களோ அல்லது வானத்தில் இருந்து குதித்த கணினி நிபுணர்களோ இல்லை. அது மிகவும் எளிய இயந்திரம் சிறிய பயிற்சி அளித்தால் யார் வேண்டுமானாலும் அதை சிறப்பாக தயார் செய்ய முடியும். ஆகையினால் அந்த இயந்திரங்கள் வருவாய்த் துறையில் உள்ள பணியாளர்கள் அலுவலர்கள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தான் தயார் செய்யப்படுகின்றன. இவர்கள் எல்லோரும் நம்மிடையே இருக்கக்கூடிய குடிமகன்கள் தான். அவர்களுக்கும் உள்ளுக்குள் அரசியல் கட்சி சார்புநிலை இருக்கும் எனவே அந்த இயந்திரம் தவறாக தயார் செய்யப்படுகிறது என்றால் விஷயம் வெளியில் கசியாமல் இருக்குமா?! அப்துல் கலாம் உதவியாளர் ஒருவர் விவி பேட் சீட்டுகளையும் ரிசல்டையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். நிச்சயமாக அவை சமய எண்ணிக்கையில் தான் இருக்கும் ஏனென்றால் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து பிறகு தனது சின்னத்துக்குரிய சீட்டு ப்ரிண்டாகி விழுவதை பார்த்துவிட்டுத் தான் வெளியேறுகிறார். ஒரு சில வயதானவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை, மற்றபடி எல்லோரும் அதை பார்த்து திருத்தி அடைந்து தான் வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் மாதிரி வாக்கு பதிவின் போது எத்தனை வாக்குகள் ஒவ்வொரு சின்னங்களுக்கும் இடப்பட்டன என்பதை ரிசல்ட் பட்டனை அழுத்தி சரிபார்த்துவிட்டு விவி பேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் எடுத்து எண்ணி வெரிஃபை பண்ணி விட்டு தான் அதை ஒரு கவரில் போட்டு சீல் வைப்போம். அதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார்

நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார் டிஸ்கவரி பதிப்பகம் சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான...