Monday, April 13, 2026

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix
நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும் எடுக்க வேண்டி இருக்கும். 2004 சமயத்தில் ஆங்கில துணைப்பாடத்தில் Women empowerment என்கிற தலைப்பில் 7 பெண்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். அதில் ஒன்று ஹெலன் கெல்லர் பற்றியது. ஹெலன் கெல்லர் ஒரு செவித்திறன் சவால் மற்றும் பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளி. அவருக்கு ஆனி சல்லிவன் என்கிற ஆசிரியர் வீட்டில் இருந்தபடி பயிற்றுவிப்பார். செவித்திறன் சவால் உடைய குழந்தைகளுக்கான பள்ளி தமிழகத்தில் கூட ஹெலன் கெல்லர் பள்ளி என்று தான் அழைக்கப்படுகிறது ஜெயங்கொண்டம் அருகே குறுக்கு ரோட்டிலும் ஒரு பள்ளி உள்ளது. இந்த படத்தை பார்க்க துவங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் ஹெலன் கெல்லர் கட்டுரையில் இருந்த பல விஷயங்கள் வந்தன. ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை திரைக்கதைக்குள் கொண்டு வந்திருந்தாலும் இது ஹெலன் கெல்லர் பற்றிய படம் அல்ல. கதைக்களம் சிம்லாவில் உள்ள ஒரு பெரும் பணக்கார மாளிகையில் விரிகிறது. மெக்நாலன் குடும்பத்தின் மூத்த பெண் குழந்தை மிஷல் செவித்திறன் மற்றும் பார்வை சவால் உடைய குழந்தையாக இருக்கிறது. மிஷலின் தாயார் கேத்தரின் அவருக்கு பயிற்றுவிக்க சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியரான தேவராஜ் சகாய் (அமிதாப்) ஐ பணியமர்த்துகிறார். முதலில் மிஷலுடன் போராடினாலும் மெல்ல மெல்ல இருவருக்கும் இடையில் நல்ல பிணைப்பு உருவாகிறது. தனது மனம் முழுதும் இருட்டு என்கிற ஒன்றையே வைத்திருக்கும் அந்த குழந்தையின் மனதுக்குள் அறிவு ஒளி பிரகாசிக்க துவங்குகிறது. அமிதாப்பின் நெடிய வற்புறுத்தலுக்கு பிறகு கல்லூரி நிர்வாகம் மிஷலை கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறது. அனைத்து பாடங்களுமே அவளுக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அதை தேர்வில் பிரெய்லி முறையில் தட்டச்சு செய்து வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தேர்வினை சரியான நேரத்துக்குள் முடிக்க முடியாமல் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார். இங்கே ஒரு விஷயத்தை கவனித்தாக வேண்டும். உலகம் முழுவதுமே மதிப்பீட்டு முறைகளில் மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமான அவர்கள் எந்த உணர்வை வெளிப்படுத்துகிறார்களோ அதன் வழியே மதிப்பீடு செய்ய இயலும் நெகிழ்வான ஒரு மதிப்பீட்டு முறையின் அவசியத்தை இந்த காட்சியின் வழி நாம் உணரலாம். இதற்கிடையில் ஆசிரியர் தேவராஜ்க்கு அல்சைமர் என்னும் மறதி நோய் மெல்ல மெல்ல வேகம் எடுக்கிறது. மிஷலின் தங்கை சாராவுக்கு திருமணம் நடைபெறுகிறது. கிருத்துவ முறைப்படியான திருமணத்தில் இணையர் இருவரும் உதட்டில் முத்தமிட்டு கொள்கிறார்கள். இதனை ஆசிரியர் மூலம் அறிந்து கொள்ளும் மிஷல் மிகுந்த வாட்டம் அடைகிறாள். தன்னை உதட்டில் முத்தமிட சொல்லி ஆசிரியரை வற்புறுத்துகிறாள். இந்த காட்சியை காணும் போது கல்லும் கரையும் வண்ணுக்ஷம் இருவரும் நடித்திருப்பார்கள். இந்த காட்சிக்குப் பிறகு தேவராஜ் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வெளியேறி விடுகிறார். பல ஆண்டுகள் போராடி மிஷல் படத்தின் இறுதியில் தனது பட்டத்தை பெற்றுக்கொண்டு வெற்றிக் களிப்புடன் பட்டமளிப்பு விழாவில் சைகை உரையாற்றுகிறார். இறுதி காட்சியில் தான் பட்டம் பெற்றதை பட்டமளிப்பு விழா உடையுடன் தேவராஜ் இடம் கூற மருத்துவமனைக்கு விரைகிறாள் அல்சைமர் முற்றிய நிலையில் இருக்கும் தேவராஜ் இந்த விஷயத்தை மட்டும் கண்டு கொள்வதாக உருக்கமாக படத்தை முடித்து இருப்பார்கள். மொழி படத்தில் ஜோதிகா சைகை மொழி பேசியதை பார்த்திருப்போம். கேட்கும் திறனும் பார்வை திறனும் இல்லாத நிலையில் மிஷல் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை இந்தப் படத்தில் மிஷலாக நடித்த ராணி முகர்ஜி மிகப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் துவக்கத்தில் குடிகாரராகவும் இடையில் பொறுப்பான ஒரு ஆசிரியராகவும் இறுதியில் மறதி நோய் பாதிக்கப்பட்ட ஒரு வயதானவராகவும் சிறப்பாக நடித்திருப்பார் அமிதாப் பச்சன். படத்தின் கதை வறட்சியாக இருப்பதால் சூழலை ஜில்லென்று வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சிம்லாவில் படப்பிடிப்பை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது ஒளிப்பதிவு கொள்ளை அழகு. மிஷலின் தாயாரா கேத்தரீனாக நடித்தவரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த தைரியத்துடனும் மன உறுதியுடனும் விடாமுயற்சியுடன் வளர்த்தால் தான் அந்த குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர முடியும். படத்தில் வரும் மிஷல் தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரை அமர்த்திக் கொள்ளும் அளவுக்கு மிகவும் வசதி படைத்த குடும்பத்து குழந்தை. இதே நிலையில் இருக்கும் ஒரு ஏழை வீட்டு சிறப்பு குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று ஒப்பிட்டு பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினந்தோறும் யாராவது ஒருவர் தூக்கிக் கொண்டுதான் பள்ளிக்கு வர முடியும் என்கிற சூழலில் இருந்த எனது மாணவர் ஒருவர் நன்கு படித்து முடித்து தற்போது மிகப்பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலையில் உள்ளார். தற்போது பணிபுரியும் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி வருகை பதிவேட்டில் மட்டுமே பெயரைக் கொடுத்துவிட்டு வீட்டிலேயே இருந்த ஒரு எழுந்து நடக்க இயலாத பெண் குழந்தையை பத்தாம் வகுப்பு சமயத்தில் ஆசிரியர் மூலமாக நேரில் விசாரித்தோம். அவ்வளவு தெளிவாக பேசுகிறார் வாசிக்கிறார் ஆனாலும் பெண் குழந்தை என்பதால் எளிதாக அவரது படிப்பு கைவிடப்பட்டது. நான் மேலே சொன்ன அந்த மாணவனுக்கு கிடைத்த மன உறுதி கொண்ட தந்தை பாவம் இந்த பெண்ணுக்கு கிடைக்கவில்லை. மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். பொதுப்பள்ளிகளில் இது போன்ற குழந்தைகள் படிக்கும் போது அவர்களது ஆளுமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வருகிறது என்பதை நான் கண்கூடாக பல நிகழ்வுகளில் கண்டுள்ளேன் எனவே பொதுப்பள்ளியில் அவர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு என்று பிரத்தியேகமான நெகிழ்வுத் தன்மை கொண்ட மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தி அந்த குழந்தைகள் கல்வி கற்க அரசாங்கம் பேருதவி புரிய வேண்டும்.

Wednesday, April 8, 2026

ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா?

மு.ஜெயராஜ் தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, நாகமங்கலம், அரியலூர் மாவட்டம்.
ஏஐ ன் வரவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தா? வரலாறு 1951 ல் ஐசக் அசிமோ என்கிற ரஷ்ய அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் "the fun they had" என்கிற பெயரில் ஒரு கதை எழுதி இருப்பார். நான் ஆங்கிலம் போதித்த காலத்தில் இந்தப் பாடத்தை நடத்தி உள்ளேன். டாமும் மார்கீ யும் அண்ணன் தங்கை ஆவர். கதை நடக்கும் காலகட்டம் 2150 என்பதாக குறிப்பிட்டு இருந்தார் என நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளி என்கிற தனியான ஒரு அமைப்பு கிடையாது மாறாக வீட்டில் ஒரு கணினி இருக்கும் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட பாடங்களை நடத்துவதற்கு ஏற்றார் போல் கால அட்டவணை போடப்பட்டு பாடங்கள் படிப்பார்கள். தற்போது இருக்கும் குழந்தைகள் போலவே அந்த குழந்தைகளும் பள்ளியை வெறுக்கிறார்கள். அதுவும் மார்கி புவியியல் பாடத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறாள் கணினியும் அவளுக்கு அடுத்தடுத்து தேர்வுகள் வைத்து கொடுமை படுத்துகிறது. இறுதியில் ஒரு மெக்கானிக் வந்து பள்ளி கணினியை சரி செய்து புவியியல் அமைப்பில் இருந்த ஒரு குறையை நிவர்த்தி செய்து விடுவார் என்பதாக நீளும். இந்த நிலையில் வீட்டில் பரணில் இருந்து தான் ஒரு பேப்பர் புத்தகத்தை கண்டுபிடிக்கிறான் அதில் நமது காலகட்டத்தில் பள்ளியை பற்றி இருக்கிறது அதை எண்ணி ஏங்குகிறார்கள் என்பதாக முடியும். அதாவது 1951லேயே கணினியின் உதவி கொண்டு ஆசிரியர்களை இடப்பெயர்ச்சி செய்து விடலாம் என்கிற கற்பனை ஐசக் அசிமோவுக்கு வந்திருக்கிறது. ஆபத்து நம்மை நோக்கி வருகிறதா? செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அதை நாம் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா? சாட் ஜிபிடி, ஜெமினி, டீப் சீக், பர்ப்ளெக்சிட்டி, க்ரோக், மெட்டா ஏஐ இதோடு மட்டுமின்றி பல பிரபல செயலிகள் தங்கள் பெயரில் ஒரு ஏஐ டூலை அறிமுகப் படுத்திய வண்ணம் உள்ளன. நாம் கூட டிசைன் டிசைனராக முகத்தை மாற்ற பயன்படுத்தி இருப்போம். (ஏஐ எவ்வளவு பெரிய ஆயுதம் ஆனால் அதில் நமக்கு முதுகும் பொறியல் தான் சம்மதம்) கட்டற்ற தரவு தளத்தில் இருந்து பொருத்தமான தகவல்களை கேட்பவரின் நோக்கம் அறிந்து செம்மை படுத்தி பணிவுடன் வழங்குவதோடு மேலதிக ஆலோசனைகளையும் வழங்குகிறது. சரி விஷயத்திற்கு வருவோம். செயற்கை நுண்ணறிவின் வரவு ஆசிரியப் பணிக்கு ஆபத்தா? அது நம்மை வேலையை விட்டு விரட்டி விடுமா? என்றெல்லாம் சிந்தனை வந்து போகிறது. ஆசிரியர்களிடம் “ஏஐ ஒரு சிறந்த ஆசிரியராக இருக்க முடியுமா? எந்த இடங்களில் அது நம்மை விஞ்ச முடியாது?” என்பது போல கேட்டிருந்தேன். இன்னும் நிறைய பேருக்கு செயற்கை நுண்ணறிவின் வலிமை சரிவர தெரியாத நிலை தான் உள்ளது. ஆனாலும் அதனால் ஒன்றும் நம்மை இடப்பெயர்ச்சி செய்ய முடியாது என்ற பதில் அச்சத்தின் காரணமாக அவசர கதியில் வந்து விழுகிறது என்பதை உணர முடிகிறது. மனித ஆசிரியர்கள் மாணவர்களை உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு பாடம் நடத்துவார்கள் என்பதே பெரும்பாலான ஆசிரியர்களின் முதன்மையான பதிலாக இருந்தது. மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் என்பது அடுத்த நிலை பதில். செயற்கை நுண்ணறிவு தனது மாபெரும் தகவல் தளத்தில் கேமிக்கப் பட்டிருக்கும் முகங்களில் இருந்து சோகமான முகம், சோர்வான முகம், பசித்த முகம், ஆர்வமுள்ள முகம், சந்தேகமாக விழிக்கும் முகம், புரிந்த முகம், புரிந்தது போல நடிக்கும் முகம் அனைத்தையும் அறியும். மனித ஆசிரியருக்கு ஒரு நேரத்தில் ஒரு முகம் தான் தெரியும். ஆனால் ஏஐ ஒரே நேரத்தில் வகுப்பில் உள்ள அத்தனை பேரின் முகத்தையும் ஸ்கேன் பண்ணி தனது தரவு தளத்தில் உள்ள தகவல்களோடு ஒப்பு நோக்கி புரிந்து கொள்ளும். ஆசிரியரால் மாணவர்களின் தனிநபர் வேறுபாடு அறிந்து அனைவருக்கும் தனித்தனியே மதிப்பீட்டு வினாக்கள் தயாரிப்பது சிரமம். ஆனால் ஏஐ க்கு அது எளிது. ஆன் ஸ்க்ரீன் தேர்வுகளில் தேர்வின் போதே வினா புரியவில்லை என்றால் வேறு வடிவில் லைவ் ஆக மாற்றி வழங்க இயலும். முக்கியமாக கற்றலில் பின்தங்கி இருப்போர் மற்றும் அறிவுச் சவால் குழந்தைகளுக்கு சிறப்பான துணையாக ஏஐ ஆல் இருக்க இயலும். கல்வி புலத்தில் ஏஐ என்பது ஏதேனும் ஒரு ஹியுமனாய்டு ரோபோ அல்ல கற்பித்தலுக்கான தரவுகளோடும், குழந்தைகளை கையாள தேவையான நுணுக்கங்களோம் பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால் அதனை நெருங்கிப் பார்த்து முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் அதனோடு நட்பாகி விடவேண்டும். பிறகு அதனைப் பயன்படுத்தி நமது வேலைகளை மேலும் செம்மை படுத்திக் கொள்ள வேண்டும். நான் என்ன பயன்படுத்தினேன்? பத்தாம் வகுப்பில் உள்ள 80 மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவச் சீட்டுகள் அடங்கிய ஒரு பிடிஎஃப் ஃபைலைக் கொடுத்து அனைத்து மாணவர்களின் தேர்வு எண், பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி இவற்றை அட்டவணையாக்கி தரச் சொல்லி கேட்ட மாத்திரத்தில் கிடைத்தது. இந்த விஷயங்களை பொறுக்கி எடுத்து தனி கோப்பு தயார் செய்ய எனக்கு நிச்சயமாக நிறைய நேரம் எடுத்திருக்கும். என்ன இவன் தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்திருக்கிறானே என்று விஷயமறிந்தவர்கள் நினைக்க கூடும். தேர்வறை வாரியாக தேர்வு எண்களை அட்டவணைப் படுத்துதல், ஆசிரியர்களின் பணி சார்ந்த விவரங்களை சீனியாரிட்டி படி தொகுத்தல் போன்ற வேலைகளுக்கு இனி எக்ஸெல் ஷீட் போட வேண்டாம். ஏஐ இடம் தரவுகளையும் ஆணையையும் கொடுங்கள் போதும். இவையெல்லாம் நிர்வாக ரீதியாக நான் முயன்று பார்த்த சில சின்னஞ்சிறு விஷயங்கள். எனது இணையரின் உடல்நலம் குறித்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்து விளக்கம் கேட்டேன். பிரச்சனை மற்றும் மருத்துவ முறைகளை புட்டு புட்டு வைத்து விட்டது. ஆனாலும் உரிய மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் அதுதான் சரியாக இருக்கும் என்கிற டிஸ்கிளைமரையும் தர தவறவில்லை. ஆர்வமுள்ள ஆசிரியர் ஒருவர் தனது கற்பித்தலை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள எதையாவது கற்க வேண்டும் என்கிற வேட்கையோடு ஏஐ யை அனுகினால் கற்பித்தலின் பல்வேறு படிநிலைகளை மிகச் சிறப்பாக திட்டமிட்டு தனது வகுப்பறை நிகழ்வுகளை சுவாரசியமானதாக மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்கள் எப்படி உபயோகிக்கிறார்கள்? என்ன பிரச்சனை? தற்போது மாணவ சமுதாயம் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு எந்த வேலைகளுக்கெல்லாம் பயன்படுத்தி வருகிறது. அதனால் ஏற்படும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள் என்ன? பெரும்பான்மை மாணவர்கள் சிந்தனைச் சோம்பேறிகள் ஆகி வருகின்றனர். எந்த ஒரு எளிய சிக்கலாக இருந்தாலும் நேரடியாக ஏஐ இடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். அதை எடுத்து பார்த்து புரிந்து கொண்டு அவரவர் பாணியில் மீண்டும் சொந்தமாக முயன்று செய்து பார்த்தல் என்பதெல்லாம் கிடையாது. எழுத்துக்களை சரியாக உபயோகிப்பது மற்றும் எழுதும் கலைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விடும் போல் தெரிகிறது. நேரடியாக பேச்சை எழுத்தாக்கி உள்ளே அனுப்புகிறார்கள். ஏஐ யும் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்து உதவி செய்கிறது. ஆக பல நுண்திறன்கள் தேய்ந்து மறைந்து போக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கல்லூரி மாணவர்களிலே கூட ஏராளமானோர் இன்ட்ரோவெர்ட் ஆக முடங்கி இருக்கிறார்கள். இந்த ஏஐ மற்றும் அதீத திரைப் பயன்பாடு அவர்களது நிலையை மேலும் மோசமாக்கலாம். சோசியல் ஸ்கில்ஸ் எனும் பிறருடன் இயைந்து செயல்படும் திறன் இல்லாமல் போய்விடும். வேலை செய்யும் பருவத்தை அடையும் போதும் சமூக வாழ்க்கைக்கு தனித்து தயாராகும் போதும் பெரிய மன அழுத்தத்தை சந்திப்பார்கள். எனவே எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் நமக்கு நன்மை செய்யும் வேலைக்காரனாகவே வைத்திருக்க வேண்டும். மோசமான எஜமான் ஆகிவிட்டால் அத்தனையும் பாழ். உலக அளவில் பள்ளிகளில் ஏஐ எப்படி பயன்படுத்தப் படுகிறது?! சரி உலக அளவில் ஏஐ பள்ளிக் கல்வியில் எந்த விதமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்பது பற்றி தேடியபோது பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் இன்னமும் கல்வித்துறையில் ஏஐ பயன்படுத்துவது குறித்த தயக்கத்தோடு தான் இருக்கின்றன என்று அறிய முடிகிறது. சில நாடுகள் நன்றாகவே பயன்படுத்தி வருகின்றன. தென்கொரிய நாடு ஏஐ ஐ அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாடப்புத்தகங்களை அறிமுகப் படுத்தி உள்ளது. இது மாணவர்களின் பர்சனல் ஆசிரியர் போல செயல்பட வல்லது. அவர்களுக்கான பாடங்களை ஒவ்வொருவரின் தனித்த புரிதல் நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றி சொல்லித் தருதல். வெவ்வேறு கடின நிலைகளில் மதிப்பீட்டை ஒரு கணினி விளையாட்டு போல அமைத்து மாணவர்கள் விரும்பும் வகையில் சுவாரசியமாக்கி தருகிறது. பள்ளிக் கல்வி நிலையில் ஏஐ ஐ ஒரு கருவியாக பயன்படுத்துவதோடு அல்லாமல் பாடத்திட்டத்திலும் ஏஐ குறித்த பாடங்களை சேர்த்துள்ளார்கள். ஆசிரியர்கள் சமூக உணர்வுகள் பற்றிய கற்றலையும் செயல் திட்டங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடுதலையும் பற்றி கவனத்தில் எடுத்துக் கொண்டால் போதுமானதாக கொரிய அரசு எண்ணுகிறது. சிங்கப்பூர் அரசாங்கம் மாணவர்களின் கற்றல் தளத்தில் சாக்ரட்டிக் ஏஐ துணைவன் (SACRATIC AI ASSISTANT) ஐ நிறுவியுள்ளது. இது மாணவர்களுக்கு விடைகளை அப்படியே தராமல் எளிய வினாக்களை எழுப்பி அவர்களை விடையை நோக்கி இட்டுச் செல்கிறது. அடுத்ததாக சிறுவினா விடைகளுக்கான பின்னூட்ட துணைவன் என்று ஒரு ஏஐ ஆசிரியர்களுக்கு துணையாக அமைத்துள்ளனர். இது மாணவர்களை சிறு வினாக்களுக்கு விடையளிக்கும் திறனை மதிப்பீடு செய்து கிரேடு வழங்குகிறது. ஒவ்வொரு மாணவரின் மதிப்பீட்டுக்கும் ஆசிரியர்களுக்கான பின்னூட்டம் வழங்குகிறது. சீனாவை பொறுத்தவரை நகர்புறம் மற்றும் கிராமபுறம் இடையே உள்ள கற்றல் நிலையில் உள்ள இடைவெளியை போக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதற்கு ஏஐ துணைபுரியும் என்று நம்புகிறது. ”அணில் ஏஐ” (SQUIRRAL AI) என்கிற பெயரில் ஒரு மாபெரும் தரவுகளுடனான ஒரு அமைப்பை கட்டமைத்துள்ளது. தனிநபர் கற்பித்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனித ஆசிரியர் போலவே நடந்து கொள்கிறது. மாணவர்கள் கடினமாக உணரும் பகுதிகளை கண்டறிந்து அதனை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை படுத்தி கற்பிக்கிறது. சீனர்கள் ஆங்கிலத்தின் அவசியம் உணர்ந்து அதனை வெகு வேகமாக கற்று வருகிறார்கள். ஆங்கிலம் கற்பித்தலில் தானியங்கி மதிப்பீட்டு புலத்தை ஏஐ உதவியோடு கட்டமைத்து கற்றலை துரிதப் படுத்துகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்கே மாநிலவாரியாக தனித்தனி பாடத்திட்டங்கள் உள்ளன. மாநிலங்கள் அவரவர் பொருளாதார நிலை சமூக நீதி மனப்பான்மைக்கு ஏற்றவகையில் பள்ளிக் கட்டமைப்புகள் உள்ளன. அவற்றில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தும் முன்னோடிப் பள்ளிகளும் உள்ளன. ஆந்திராவில் மைக்ரோ சாஃப்ட் ஏஐ சிஸ்டம் மூலமாக இடைநிறுத்தம் ஆகும் மாணவர்களை முன்கூட்டியே கணிக்கிறார்களாம். தமிழகத்தைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களை கடைக்கோடி கிராம அரசுப் பள்ளிக்கும் வழங்குவதில் முன்னணியில் நிற்கிறது. டிஜிட்டல் மயமான பாடத்தரவுகள், டிஜிட்டல் வடிவிலான கற்பித்தல் வளங்கள், EMIS மாதிரியான தரவு தளங்களில் உள்ள தரவுகள் மூலம் மாநிலம் முழுமைக்கும் ஆன புதிய திட்டங்களை தமிழக அரசு பள்ளிக்கல்விக்கு வழங்கி வருகிறது. தற்போது கட்டமைக்கப் படவுள்ள புதிய பாடத்திட்டத்தில் ஏஐ பற்றிய பாடங்கள் வர உள்ளன. மேலும் விரைவில் ஏஐ கற்றல் கருவிகள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. ஃபின்லாந்து செயற்கை நுண்ணறிவு குறித்த தெளிவான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவின் அல்காரிதம் மற்றும் அதன் இயங்குமுறை பற்றி மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று ஃபின்லாந்து எண்ணுகிறது. அந்த நாடு கற்றல் குறைபாடு மற்றும் அறிவுச் சவால் கொண்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துகிறது. மேலும் ஃபின்லாந்து யுனிசெஃப் உடன் கைகோர்த்து பல பின்தங்கிய நாட்டுப் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த கற்பித்தல் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு விஷயத்தில் என்ன செய்கிறது. ஏஐ யை பயன்படுத்துவதை விட ஏஐ யை பற்றி அறிந்து கொள்வதற்கான பாடத்திட்டங்களை அமெரிக்க அரசு பள்ளிகளில் ஏற்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களுக்கு மாற்றாக பயன்படுத்துவதைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆசிரியர்கள் பயன்படுத்தி தங்கள் கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள ஊக்கம் அளிக்கிறது அமெரிக்க அரசு. இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவை சற்று பாதுகாப்பு உணர்வோடு அனுகுகிறது. ஏராளமான தகவல்களாலோ அல்லது குழந்தைகளுக்கு பொறுத்தம் இல்லாத உள்ளடக்கங்களாலோ பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று சேஃப் கேம் ஆடுகிறது. அதே வேளையில் பள்ளிகளில் வழக்கமாக செய்யப் படும் அயர்ச்சி தரும் வருகைப் பதிவு, மதிப்பெண் பதிவேடு பராமரிப்பு மற்றும் பெற்றோருக்கு அனுப்ப மின்னஞ்சல் தயாரிப்பு போன்ற வேலைகளை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முடிக்க தயாராக உள்ளது. ஜப்பானை பொறுத்தவரையில் செயற்கை நுண்ணறிவை பிரபலமாக்க சட்டமே இயற்றி உள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை வகுப்பறை துணைவனாக பார்க்கிறார்கள். AI PROMPT ENGINEERING என்கிற தலைப்பில் 50000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவோடு இயைந்த உள்கட்டமைப்பை பள்ளிகளில் உருவாக்கி வருகிறது. ஃபிரான்ஸ் அரசாங்கத்தை பொறுத்தவரையில் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தை தாங்கிப் பிடிக்க வல்ல தங்களுக்கான பிரத்தியேகமான செயற்கை நுண்ணறிவை வடிவமைக்க விரும்புகிறார்கள். அப்படி அவர்களுக்கான பிரத்தியேக ஏஐ தளமான PIX IA ன் மூலமாக 8-12 வயதுவரை உள்ள 15 லட்சம் குழந்தைகளுக்கு கட்டாய பயிற்சி வழங்கியுள்ளது. மேலும் P2IA செயல்திட்டம் வாயிலாக துவக்கப் பள்ளி குழந்தைகளுக்கு என்று ஆறு விதமான ஏஐ பாட்களை அறிமுகம் செய்துள்ளது. கனடாவை பொறுத்துவரையில் ஏஐ நாம் சிந்திக்கும் விதத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்கிற விவாதத்தை முன்னெடுக்கிறது. நமக்காக சிந்திக்கும் செயற்கை நுண்ணறிவைக் காட்டிலும் நமது சிந்தனையை மேம்படுத்தும் விதமான செயற்கை நுண்ணறிவு பயன்பாடே முக்கியம் என்று அந்த நாடு கருதுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு Chat GPT Edu என்கிற வெர்சனை அறிமுகப் படுத்தி உள்ளது. இது முழுக்க அரபு மொழியில் செயல்படும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைத்து வழங்கி உள்ளது. ஆசிரியர்கள் கவலை ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் முழுவதும் ஏஐ ஆதிக்கம் நிறைந்த வகுப்பறையில் அல்காரிதம்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வழிநடத்துபவர் என்பதாக சுருங்கிவிடுமோ என்கிற அச்சம் இருப்பதை உணர முடிகிறது. அவர்களது கம்பீரமான கற்பித்தல் முழக்கம் வகுப்பறையில் எதிரொலிக்காமல் போய்விடுமே என்கிற கவலை அவர்களுக்கு உள்ளது. செயற்கை நுண்ணறிவை கவனமாகவும் அதே வேளையில் நேர்மறை எண்ணத்துடன் அனுக வேண்டும். செயற்கை நுண்ணறிவை கற்றல் கற்பித்தலில் உள்ள இனிமையை நீர்த்துப் போய்விடச் செய்யாமல் மாறாக கற்பித்தலை இன்னும் சுவாரசியமாகவும் செறிவானதாகவும் மாற்றிட உதவும் கருவியாகவும் மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாளடைவில் கையில் இருக்கும் கருவி ஊன்றுகோல் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுமா? ஆமாம், நிச்சயமாக, எந்த ஆசிரியர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தனது கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்கிறாரோ அவர் தான் செயற்கை நுண்ணறிவை பற்றி கிஞ்சிற்றும் அறியாத புதுமையை வரவேற்க விருப்பம் இல்லாத ஆசிரியர்களை இடப்பெயர்ச்சி செய்துவிடும் ஆபத்து உள்ளது. புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள விழையும் ஆசிரியர்களின் பணிக்கு எப்போதும் ஆபத்து இல்லை. இறுதியாக, “டோண்ட் ஒரி பி ஹேப்பி” நீராவி எஞ்சின், டிரான்சிஸ்டர், கணினி, செல்போன் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் வந்தபோது அவற்றை அப்படியே வரவேற்பதில் சமூகத்தில் ஒரு அச்சமும் தயக்கமும் இருந்தது உண்மைதான். அவை வந்த பிறகு பல வேலைகள் மூட்டையை கட்டிக் கொண்டு சென்றதும் உண்மைதான். ஆனாலும் உலகம் அவற்றையும் வரவேற்று தன்னை நவீனமாக தகவமைத்துக் கொண்டு தானே முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் செயற்கை நுண்ணறிவை கைகுலுக்கி பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்.

Saturday, April 4, 2026

A letter to my youth இந்தோனேசிய படம்

A letter to my youth இந்தோனேசிய படம் Netflix ல் ஆங்கிலத்தில் காணக் கிடைக்கிறது
அனாதை இல்லத்தில் இருக்கும் அடங்காத குழந்தைகள் அவர்களை அன்பால் நல்வழிப் படுத்தும் கேர்டேக்கர் மிஸ்டர் சிமோன் என்கிற வழமையான "பள்ளி -ஆசிரியர்" டெம்ப்ளேட் வகைப் படம் தான். ஒரு பணக்கார மனிதர் தனது மகளை ஓவர் பாதுகாப்பாக வளர்க்கிறேன் என தனது செயல்களால் அனைவரையும் கதிகலங்க செய்கிறார். அவர் எதனால் அப்படி இருக்கிறார் அவருக்கு ஏதேனும் childhood trauma இருக்கிறதா?! முழு படமும் ஃப்ளாஷ் பேக் தான். காஃபேயும் அவனது தங்கையும் அனாதை இல்லத்தில் வளர்கிறார்கள். அவளது தங்கை ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அந்த இல்ல பாதுகாவலர் அவளுக்கு வாகன உதவி செய்யாமல் இல்லத்தில் இருந்து மளிகை சாமான்கள் திருட பயன்படுத்துகிறார். தங்கை இறந்து போனதற்கு அனாதை இல்ல கேர்டேக்கர் தான் காரணம் என்று நினைத்து வருகிற அனைவரையும் நம்ப மறுக்கிறான். எப்போதும் பிரச்சனை செய்யும் முரட்டுப் பையனாக வளர்கிறான். அதேவேளை சக ஆதரவற்ற குழந்தைகளின் பால் மிகுந்த அன்போடு இருக்கிறான். அந்தப்பக்கம் மிஸ்டர் சீமோன் மனைவி சமீபத்தில் இறந்து போகிறார் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் அகால மரணம் அடைகிறான். தனது இறப்புக்கு சவப்பெட்டி மற்றும் மனைவியின் கல்லறைக்கு அருகில் இடம் என்று மிகுந்த செலவு செய்து ஏற்பாடு செய்து அந்த இஎம்ஐ கட்டி முடித்தவுடன் செத்து போகலாம் என்று காத்திருக்கிறார். இந்த நிலையில் தனது நண்பரின் வேண்டுகோளை நிராகரிக்க இயலாமல் அந்த ஆதரவற்றோர் விடுதிக்கு கேர் டேக்கராக வருகிறார். பசங்க கொடுக்கும் எந்த தொல்லையையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்கிறார். அங்கே வருடா வருடம் கலாச்சார விழா ஏற்பாடு செய்து, வரும் பெற்றோரிடம் அவர்கள் விரும்பும் குழந்தையை தத்து கொடுப்பது வழக்கம். குழந்தைகள் அந்த நாளுக்காக ஆர்வமுடன் காத்திருப்பார்கள். பெற்றோரை கவர அவர்கள் செய்யும் பல வகையில் தயாராவார்கள். எதிர்பார்த்தது போல நிறைய குழந்தைகள் தத்து எடுக்கப் படுவார்கள் ஆனால் காஃபே செய்யும் ஒரு குறும்புத்தனம் மொத்த விழாவையே நாசமாக்கி விடும். வந்த பெற்றோர் கோபத்துடன் கிளம்பி விடுவார்கள். இதுநாள் வரை காஃபேவிடம் அன்பு பாராட்டிய குழந்தைகள் அவனை வெறுத்து விடுவார்கள். அவன் தனது செயலை எண்ணி வருந்தி இல்லத்தை விட்டு ஓடிப் போகிறான். இந்தப் புள்ளியில் சீமோன் அவனை தனது ஆதரவற்றோர் இல்ல வளர்ப்பு தனது குடும்பத்தினர் இழப்பு பற்றி கூறி அவனுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். இதற்கு பிறகு இல்லத்தில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் வருகின்றன. சீமோன் தனது இறுதிச் சடங்கு கணக்கின் கடைசி இஎம்ஐ ஐ கட்டி முடித்து சாகத் தயாராகிறார். அதன் பிறகு என்ன என்பதை படத்தில் நெகிழ்ச்சியுடன் காட்டி இருப்பார்கள். ஆதரவற்றோர் இல்லத்து குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் பொறுப்பாகவும் இருப்பதை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கும். எப்படியாவது தான் தத்தெடுக்கப் பட வேண்டும் என்கிற முனைப்போடு பல விஷயங்களை முயன்று கற்று கலாச்சார விழாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கலந்து கொள்வது கல்நெஞ்சத்தைக் கூட கலங்கச் செய்யும். சீமோனின் கதாப்பாத்திரம் சிறப்பு. எந்த விஷயத்திற்கும் உடனடி ரியாக்ஷன் காட்டாமல் பொறுமையாக நிதானமாக ரியாக்ட் செய்கிறார். சின்ன பசங்க அத்தனை பேரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். தமிழில் ரீமேக் செய்யலாம் சீமோன் பாத்திரத்தில் கமல் மாதிரி சீனியர் நடிகர்கள் நடித்தால் நன்றாக ஓடும்.

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும...