Saturday, March 15, 2025
தலைநகரம் – 4 "குளிர்நகரம்"
விமானம் தரையிறங்கிய உடனே நமது லக்கேஜ் எந்த கன்வேயரில் வரும் என்று கன்வேயர் நம்பர் கொடுத்துவிடுகிறார்கள்.
கதவை திறந்த மாத்திரத்தில் டெல்லி குளிர் என்னை ஆட்கொண்டது. கையில் வைத்திருந்த பையில் நல்வாய்ப்பாக ஒரு சால்வையை வைத்திருந்தேன். எடுத்து நன்றாக போர்த்திக் கொண்டேன்.
ரன்வேயில் இருந்து விமான நிலையத்தினுள் அழைத்துச் செல்ல பேருந்து வந்தது. சீட் இருந்தாலும் ஒரு கார்னரில் நின்றுகொண்டேன். “குளிருக்கு பயந்தவர்கள் எல்லாம் என்னோடு நின்று கொள்ளுங்கள்“ என அழைக்காவிட்டாலும் நல்ல கூட்டமாக சூழ்ந்து நின்று கொண்டார்கள்.
கன்வேயரை நான் நெருங்கவும் எனது சாம்பல் வண்ண சூட்கேஸ் வரவும் சரியாக இருந்தது. முதல் வேலையாக சூட்கேஸை திறந்து ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டேன்.
இதற்கிடையில் ஸ்ரீனிவாசன் சார் அழைத்தார். “சார் நான் அறைக்கு வந்து விட்டேன். அறை எண் 305 ல் உங்கள் பெயரையும் சேர்த்துள்ளேன்“ என்றார்.
நாங்கள் தங்குவதற்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக டிஜிட்டல் நூலக (DELNET)கெஸ்ட் ஹவுசை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஸ்டார் ஓட்டலை விஞ்சும் வகையில் மிகச் சிறப்பான அறைகள். பெண் ஆசிரியர்களுக்கு குதுப் ரெசிடென்சி என்கிற ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
“ஸ்ரீனிவாசன் சார், ஏர்போர்ட்டில் இருந்து டெல்நெட்டுக்கு கேப் எவ்வளவு கேட்டாங்க சார்“ கேப் காரர்களிடம் ஏமாந்து விடக்கூடாது இல்லையா?
“அங்கே நின்றிருந்த கேப் ஐ பிடித்தேன் சார், 800 ரூபாய் கேட்டார்கள்”
சரி நாமும் கேப்போம், “டெல்நெட் – ஜவர்லால் நேரு யுனிவர்சிட்டி எவ்வளவு பையா” என்று ஆங்கிலம் இந்தி என்று கலந்து கட்டி அடித்தேன்.
கொஞ்சமும் இரக்கம் இன்றி 1200 கேட்டனர். விமான நிலைய வாயிலில் ப்ரீ பெய்ட் டாக்சி சர்வீஸ் இயங்குகிறது. அவர்களிடம் கேட்டால் 400க்கு சீட்டை கிழித்து கொடுத்தனர். உடனே ஒரு டிரைவர் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கருப்பு மஞ்சள் கேபில் அமர வைத்தார். என்னுடைய சாமர்த்தியத்தை எண்ணி நானே வியந்து கையை பின்னால் கொண்டு போய் முதுகை தட்டிக் கொண்டேன்.
ஆனால் டெல்லியில் இரவு 7-9 தாறுமாறான டிராபிக் ஜாம் ஆகிறது. 8 கிமீ தூரத்திற்கு ஒரு மணிநேரம் ஆகிவிட்டது.
நான் எளிதான ஆங்கிலத்திலும் டிரைவர் இந்தியிலும் பேசிக்கொண்டே பயணித்தோம்.
டெல்நெட் க்கு மேப் போட்டு அவருக்கு உதவினேன். உள்ளே லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து கொடுத்தார். அவருக்கு ஒரு 100 ரூ டிப்ஸ் கொடுத்து தேங்க் யு பையா என்று வழி அனுப்பி வைத்தேன்.
ரிசப்ஷனில் அவ்வளவு கனிவோடும் மரியாதையோடும் பேசினார்கள். எனது நண்பர் ஏற்கனவே 305 ல் புக் பண்ணி இருக்கிறார் என்றேன். பிறகு அதே அறையில் எனது விவரங்களையும் பதிவு செய்து கொண்டு ஆதார் நகல் எடுத்து வைத்துக் கொண்டனர். எனது பையையும் சூட்கேஸையும் கொண்டு வந்து அறையில் தந்தார்கள்.
செம்ம குளிராக இருந்தது. ரூம் ஹீட்டரில் உற்பத்தியான வெப்பக் காற்று ஐந்தடி தூரத்திற்குள் குளிர்ந்து போனது. Shoe socks கழட்டி தரையில் கால் வைத்தால் ஃப்ரீசரில் விரலால் அழுத்தும் போது ஒட்டிக் கொள்ளுமே அப்படி ஒட்டியது. கார்ப்பெட் தாண்டி கால் வைக்க முடியவில்லை. உடனே சாக்ஸை எடுத்து போட்டுக் கொண்டேன். நல்வாய்ப்பாக பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர் சிறப்பாக இயங்கியது.
அறையில் பெரிய மர அலமாறிகள் இருந்தன. எங்க லக்கேஜ் க்கு அது தாராளம். மேசையில் ஒரு கெட்டில், கண்ணாடி டம்ளர்கள், அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள் இருந்தன. பாத்ரூமில் சீப்பு பேஸ்ட் சோப்பு ஷாம்பு இருந்தன.
அறையில் ஒரு பெரிய எல்இடி டிவி டிடிஎச் இணைப்புடன் இருந்தது. ஆனாலும் நாங்க என்ன முயற்சித்தாலும் பாலிமர் நியுஸ் தவிர எதுவும் வரவில்லை. பாலிமர் என்றாலே “பார்க்க்க்கவே அப்ப்பாவி போல் இருக்கும் இவர்தான்....” என்கிற குரல் நினைவில் வந்து பீதி ஊட்டியதால் இந்தி பாடல்களே தேவலை என்று விட்டு விட்டோம்.
இரவு வந்து சேர்ந்த விஷயத்தை வாட்சாப் குழுவில் பதிவிட்டோம். அடுத்த நாள் காலை 8.45 க்கு எங்களை பிக் அப் செய்ய பேருந்து வரும் என்றனர். 8 மணிக்கு பெண்கள் விடுதிக்கும் அடுத்து எங்களுக்கும் என்றிருந்தனர்.
இரவு ஒன்பது மணி சுமாருக்கு மெஸ் ஹாலுக்கு சென்றோம். அங்கு பிரட் பட்டர், சப்பாத்தி, குருமா, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் என பச்சையாக வெட்டி வைத்திருந்தார்கள். சோறும் கெட்டித் தயிரும் கூட இருந்தது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று ஒரே இன்ப அவஸ்தையாக இருந்தது. அப்பாடா இதற்கு மேல் இனிப்பு சீரகம் கூட உள்ளே நுழைய இடம் இல்லை என்கிற நிலையில் எழவே மனது வராமல் எழுந்து கொண்டேன்.
ஆனால் எப்போதுமே சோதனைகள் நம்மை ஆட்கொள்வதும் நாம் அதனை வென்று காட்டுவதும் தானே வாடிக்கை. போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா?
“சரி சரி என்ன சோதனைன்னு சொன்னா தானே நாங்களும் எமோசனா கனெக்ட் ஆவோம்“ என்று நீங்கள் பொங்குவது புரிகிறது.
எலுமிச்சம் பழம் சைசுக்கு குலோப் ஜாமூன்களை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் ஜீராவில் நீச்சலடிக்க வைத்து இறுதியாக எடுத்து வந்தனர். நானோ உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்று தூங்கலாம் என்று அறைக்கு செல்ல எழுந்தேன்.
சுனாமியின் போது உள்வாங்கிய அலைபோல் என்கால்கள் உள்வாங்கி மெஸ் ஹாலுக்குள் சென்றுவிட்டன. சரி பரவாயில்லை என்று ஒரு குட்டி கிண்ணத்தில் இரண்டு ஜாமூன்களையும் அது நீந்தி கரையேற போதுமான ஜீராவையும் கொண்டு வந்து ஒரு ஓரமான டேபிளில் அமர்ந்தேன்.
“என்ன பாஸ் சீரகம் போக கூட இடம் இல்லை என்றீர்களே?“ மைண்ட் வாய்ஸ்
“ஆமா பாஸ் என்ன தான் எள் போட்டா எள் எடுக்க முடியாத கூட்டமாக இருந்தாலும் ஒரு விஐபி வந்தா பிளந்து வழி விடுறது இல்லையா? குளோப் ஜாமூன் விஐபி பாஸ்!”
'இத சரியா செய்ய எவ்வளவு சண்டை, கிண்டல் கேளி என்று போராடி கட்டுரை எழுதி கண்கலங்கி இருப்பேன்' என்று ஆனந்த கண்ணீரை ஜீராவில் கலந்து சிறு வில்லளை எடுத்து வாயில் போட்டேன் அது அழகாக நழுவி கூட்டத்தை பிளந்து கொண்டு இரைப்பையில் ஆழத்தில் சேர்ந்தது. வெறும் காய் கறி சாலட் சாப்பிட்டு எழுந்த வடகிழக்கு நண்பர் ஒருவர் சபலப்பட்டு நான்கு ஜாமூன்களை கபளீகரம் செய்தார். நாம பரவாயில்லை என்று நகைத்துக் கொண்டேன்.
விடியற்காலை வழக்கம் போல ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டியது. போய் ஹீட்டர் போட்டு வைத்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் வைத்து பல்விலக்க பயன்படுத்திக் கொண்டேன். ஐந்து முப்பதுக்கெல்லாம் குளித்துவிட்டேன்.
சிறிது நேரத்தில் கைகள் நடுங்கத்துவங்கின. ஆனால் அது குளிரால் அல்ல. தேனீருக்காக. கதவைத் திறந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் எந்த அறையும் திறக்க்க வில்லை. தரைதளத்தில் கூட ஆள் அரவம் இல்லை.
கெட்டில் வைத்திருந்த டிரேயின் ஓரத்தில் நான்கு வண்ணங்களில் பௌச் கள் மிளிர்ந்தன. பார்த்தால் பால் பவுடர் பாக்கெட், டீ பேக், காபி பவுடர் பாக்கெட் மற்றும் சர்க்கரை என இருந்தன. கெட்டிலில் தண்ணீரை கொதிக்க வைத்து பால்பவுடர் போட்டு எடுத்து கிளாசில் ஊற்றி டீ பேக் போட்டு வைத்தேன்.
ஸ்ரீனிவாசன் சாருக்கும் ஒரு “பாயசத்தை“ போட்ருவோம் என்று முயன்றேன் அதிகாலையில் பழக்கம் இல்லை என்று தப்பித்துக் கொண்டார்.
மளமளவென காலைப் பணிகள் முடிந்த காலை சற்று எளிய உணவுதான். இட்லி பூரி அவ்வளவு தான். காபியும் இருந்தது.
8.45 க்கு எதிர்பார்த்தபடியே பேருந்து வரவில்லை. எல்லோரும் டெல்னெட் வளாகத்தில் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புகைப்படம் எடுத்து முடிக்கவும் பேருந்து வந்து சேர்ந்தது.
பேருந்து எய்ம்ஸ் ஐ கடந்த போது அருகே அடுக்கி வைத்திருந்த “செங்கல்” பார்த்ததும் மனதுக்குள் ஒரு குபீர் சிரிப்பு பூத்தது.
லால் பாக் கடந்து ஒரு யு டர்ன் போட்டது. அண்ணாந்து பார்க்கும் உயரமும் நீள அகலமும் உடைய ஒரு கட்டிடத்தை அடைந்தோம். இந்தியன் ஹேபிட்டட் சென்டர் என்கிற ஒரு அருமையான வளாகம். மாநாட்டின் முதல் நாள் இனிதே துவங்கியது.
தொடரும்....
Subscribe to:
Post Comments (Atom)
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பு: இனியன் சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment