Friday, April 4, 2025
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா?
தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
தொகுப்பு: இனியன்
சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் அறிவுரை கூறி முடித்து சுவீட் காரம் எல்லாம் கொடுத்து முடித்தபிறகு மாணவர்கள் யாரையேனும் பேச வைக்கலாமே என்று எனது அவாவை தெரிவித்தேன்.
வகுப்பறையில் வாயடிக்கும் மாணவர்கள் எல்லாம் தெறித்து ஓடினார்கள். அப்போது தானாகவே பேச முன்வந்தார் “சுந்தரி“(இந்த பேரை சும்மா வச்சிக்குவோம்)
வணக்கம் எல்லாம் கூறி முறையாகவெல்லாம் பேசத் துவங்கவில்லை. அவர் சொல்லவேண்டும் என்று நினைத்த ஒன்றை சொல்வது மட்டுமே அவரது நோக்கம்.
“ஒரு நாள் இங்கிலீஷ் மிஸ்கிட்ட டவுட் கேட்டேன். அவங்க என் பக்கத்தில் அமர்ந்து எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்கம்மா பக்கத்தில் உக்காந்து இருப்பது போல சந்தோசமா இருந்தது“ என்று கூறிவிட்டு கண்ணீரை சுண்டிவிட்டு உட்கார்ந்து கொண்டார்.
“டேய் ஜன்னலை சாத்துடா எவ்வளவு தூசி வருது பாரு” என்று மிரட்டலாக கூறி நாசூக்காக நானும் துடைத்துக் கொண்டேன்.
ஒரு வினாடியில் அத்தனை பேரையும் கலங்க வைத்து விட்டார்.
விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தையும் பாராமுகமாக இருப்பவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
ஒரு சின்ன அக்கரை ஒரு அரவணைப்பு அந்தப் பெண்ணை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை எண்ணி வியந்து போனோம்.
ஒருமுறை உங்கள் படிப்புக்கு இடையூறாக இருக்கும் விஷயம் என்ன என்று எழுதித் தாருங்கள் என்று கேட்டபோது ஒரு மாணவி “இப்போ எனக்கு அப்பா இருந்தா எப்படி இருக்கும்“ என்று அடிக்கடி நினைப்பு வருகிறது என்று எழுதிக் கொடுத்து இருந்ததை வாசித்த போது மனது அவ்வளவு கனத்து போனது.
தம்பி இனியன் தொகுத்து வெளியிட்டு இருக்கும் “இனியாவது புரிந்து கொள்வோமா? தனிப் பெற்றோர் – குழந்தைகள் என்கிற நூலை வாசித்த போது தான் எனது பள்ளி அனுபவங்கள் நெஞ்சில் அலையடித்தன.
இந்த கட்டுரைத் தொகுப்பு அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். முக்கியமாக ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாசித்தால் “தனிப்பெற்றோர்“ பற்றிய பெரிய புரிதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கல்வி தளத்தில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு உள்ளது என்பதை தெளிவாக உணர்த்தும் நூல் இது.
திரைக்கலைஞர் ரோகிணி அவர்களின் நேர்த்தியான முன்னுரை மற்றும் முனைவர் ராம் மகாலிங்கம் அவர்களின் தனிப்பெற்றோர் குறித்த விரிவான பார்வை நமது சூழலுக்கும் அமெரிக்க சூழலுக்கும் இடையேயான பெரிய அளவிலான வேறுபாடுகளை உணர்த்தி கட்டுரைக்குள் செல்லும் ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது.
ஃபர்ஸ்ட் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது போல முதல் கட்டுரையே வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் எழுதியது. கட்டுரையை சினிமா படங்களில் உள்ள தனிப்பெற்றோர் சூழலில் இருந்து துவங்கினாலும் “வாழ்க்கை ஒன்றும் சினிமா அல்லவே மூன்று மணி நேரங்களில் முடிந்துவிட“ என்று நடைமுறைகளை தனது பணி அனுபவங்கள் வாயிலாக கூறுகிறார்.
நமது சமூகத்தில் பிடிக்காத குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி கண்ணியமாக வாழ்க்கையை அமைத்து கொள்ள மணவிலக்கு பெறுவது எவ்வளவு சிக்கலாக உள்ளது என்பதையும், தனிப்பெற்றோராக குழந்தை வளர்ப்பது வெவ்வேறு பொருளாதார சூழலில் இருப்போருக்கு இருக்கும் வெவ்வேறு சிக்கல்களையும் சிறப்பாக அலசி உள்ளார்.
அவ்வை சண்முகி படத்தையும் அதன் ஆங்கில மூலமான மிஸஸ் டவுட்ஃபயர் படத்தையும் இருவேறு கலாச்சார சூழலோடு ஒப்பிட்டு இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
மனநல மருத்துவர் சிவபாலன் அவர்களது கட்டுரை இரண்டாவதாக வந்துள்ளது. பெற்றோர் என்ற வார்த்தைக்கு “பயாலஜிக்கல் கார்டியன்“ என்கிற சொல்லாடலை கண்டு வியந்து போனேன். தனிப்பெற்றோர் மற்றும் அவர்தம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களை உளவியல் ரீதியாக அலசி உள்ளார்.
தனிப்பெற்றோர் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தாங்களே கற்பிதம் செய்து கொண்டு தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டி இருந்தார்.
அருள்மொழி அவர்களின் கட்டுரையை முதல் பாலில் சிக்ஸர் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. ஆனால் ஆசிரியர் சுடரொளி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை வாசித்த போது லப்பர் பந்து அகிலா அடித்த சிக்ஸரை போல இருந்தது.
ஏனெனில் அவரும் ஆசிரியர் என்பதால் நேரடி கள அனுபவங்களைக் கொண்டு கட்டுரையை வடித்திருந்தார்.
துவக்கநிலை வகுப்பில் இருக்கும் தனிப்பெற்றோர் குழந்தைகளிடம் ”குடும்பம்“ என்கிற விஷயத்தை நடத்துவதில் கூட எத்தனை பெரிய சிக்கல் ஏற்படும் என்பதை அவர் விவரித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஆசிரியர் சுடரொளி அவர்களின் கட்டுரை அனைத்து ஆசிரியர்களாலும் வாசிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பிரச்சனையை தீர்க்க ஒரு ஆசிரியர் எந்த அளவுக்கு இறங்கி செயல்படமுடியும் என்பதை இவர் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
நமது சமூகத்தில் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிற்போக்குத் தனமான விஷயங்கள் எவ்வளவு பெரிய சமூக சிக்கல்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை ஆசிரியர் தமிழ் ஆசான் அவர்களின் கட்டுரையில் காணமுடிகிறது.
எங்கள் பள்ளியிலும் கூட ஒரு தனிப்பெற்றோர் குழந்தை 9 ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தபோது திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். அந்தப் பெண் ஒன்பதாம் வகுப்பு படித்தாலும் தகுந்த சீருடையுடன் ஐந்தாம் வகுப்பில் அமர வைத்தாலும் ஒரு வித்தியாசமும் தெரியாது. அவ்வளவு சிறு குழந்தை அவர்.
அவரது அம்மா மற்றும் உறவினரை அழைத்து “பேசி“ மனதை மாற்றினோம்.
பதின்பருவ குழந்தைகளின் தனிப்பெற்றோர் தாயாக இருக்கும் பட்சத்தில் அவர் மறுமணம் செய்து கொள்வதால் ஏற்படும் உளவியல் சிக்கல்களை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார்.
அது போன்ற மனச்சிக்கல்களை அந்த மாணவரிடம் தொடர்ந்து உரையாடுவதன் வாயிலாகத்தான் புரிய வைக்க முடியும் என்பதை உதாரணத்தோடு விளக்கி கூறி உள்ளார் ஆசிரியர் தமிழ் ஆசான்.
முனைவர் விசயலெட்சுமி அவர்களின் கட்டுரை தனிப்பெற்றோருக்கும் (தாயார்) அவர்தம் குழந்தைகளுக்கும் சமூகத்தில் ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து பேசுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்தம் உளச் சிக்கல்களை வந்து சொல்லும் அளக்கு ஒரு ஸ்பேஸ் ஏற்படுத்தி தரவேண்டும். முக்கியமாக தனிப்பெற்றோர் குழந்தைகள் தனக்கு நேர்ந்தவற்றை கூறுவதற்கு நம்பகமான தளம் ஆசிரியர்கள் என நம்பும் அளவுக்கு ஒரு கட்டமைப்பு பள்ளிகளில் அவசியம்.
நான் எவ்வளவு கண்டிப்பான ஆசிரியராக இருந்தாலும் மாணவர்கள் என்னிடம் பாடம் சாரா விஷயங்களை இயல்பாக பேச வாய்ப்பு வழங்குவேன்.
அது போல ஒரு முறை சாதாரணமாக பேசிய போது ஆலமரமாக வேர்விட்டிருந்த பெரிய பிரச்சனையை கண்டறிந்து வேரோடு களைந்தோம்.
தனியார் பள்ளிகள் மனநல ஆலோசகராக இருக்கும் கார்த்திக் அவர்களது கட்டுரை தனிப்பெற்றோர் கணவனை இழந்தவர் எனும்போது தாத்தா பாட்டி அல்லது சுற்றத்தார் தூண்டுதலின் பேரில் தாயின் ஒழுக்க நிலையை கண்காணிக்கும் பொறுப்பை அந்த குழந்தைகள் எடுத்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார்.
இது சார்ந்து நான் பள்ளிகளில் கண்ட வகையில் ஏராளமான மனக்குமுறல்கள் உண்டு. மகனின் கண்காணிப்பு தாளாமல் மாமியார் வீட்டில் இருந்து தாய்வீட்டுக்கு புலம் பெயர்ந்த தனிப்பெற்றோர் எல்லாம் உண்டு.
ந.சரவணன் அகதிகள் வாழ்வியலோடு தொடர்புடைய செயற்பாட்டாளர். அவர் தனது கட்டுரையில் அகதிகளில் 90 விழுக்காடு தனிப்பெற்றோர் தான் என்று கூறியுள்ளது அதிர்ச்சியாக இருந்தது. இது சார்ந்து அவர் மேலதிக தகவல்களோடு விவரித்தபோது ஒவ்வொரு விஷயமும் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அகதிகள் வாழ்வியல் குறித்து புரிந்து கொள்ள இந்த கட்டுரை எனக்கு வாய்ப்பாக அமைந்தது.
அகதிகள் குறித்த எந்த விதமான சட்டநடைமுறைகளையும் உருவாக்காமல் ஒரு சிறு ஏற்பாட்டோடு அவர்களை பராமரிப்பது எவ்வளவு தூரம் மனிதநேயத்திற்கு எதிரானது என்பதை சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரை எழுதியுள்ள பழங்குடியின நலவாழ்வுச் செயல்பாட்டாளரான தனராஜ் அவர்கள் பழங்குடியினர் வாழ்வியல் குறித்து மிகச்சிறப்பாக கூறியுள்ளார். பளியர் சமூகத்தின் வாயிலாக தனிப்பெற்றோர் என்பதெல்லாம் இங்கே ஒரு விஷயமே கிடையாது. எது கிடைத்தாலும் எல்லோரும் பகிர்ந்து உண்போம் என்பதே அவர்களின் வாழ்வியல் முறையாக உள்ளது.
“அவள் என் தங்கச்சிதான் சார், அவளுக்கும் துணை வேணும்ல, என்ன பண்ண முடியும். என் கணவரோட தொடர்புல இருந்தா என்ன தப்பு அவ என்ன செய்வா?” இந்த வரிகளை படித்தபோது வியந்தே போனேன்.
நாம் செய்தித் தாள்களில் வாசிக்கும் பாதி குற்றச் செயல்பாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் வேட்கையோடு தொடர்புடையவை தானே?!
இயல்பான பாலியல் வேட்கையை நாம் கற்பு கலாச்சாரம் என்றெல்லாம் புனிதப் படுத்தி வைத்திருப்பதால் எவ்வளவு சிக்கல்கள் தெரியுமா?
22 வயதில் ஒரு கைக் குழந்தையோடு கணவனை இழந்த ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் ஆண்துணை இன்றி மாமனார் மாமியாருக்கு சேவகம் செய்து அவர்களை சார்ந்து இருந்து குழந்தையை வளர்ப்பது எவ்வளவு மனித தன்மையற்ற செயல் என்பதை ஆடை வடிவமைப்பாளர் தாரணி அவர்களின் கட்டுரை கூறுகிறது.
கட்டுரையை தொகுத்தளித்திருக்கும் தம்பி இனியனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் எடுத்துக் கொண்ட பிரச்சனையின் அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராயும் ஆளுமைகளை வைத்து இந்த கட்டுரைகளை பெற்று பதிப்பித்துள்ளது மிகப்பெரிய செயல்.
கல்வி தளத்தில் குழந்தைகளோடு அதிகம் புழங்கும் ஆசிரிய சமூதாயம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் தனிப்பெற்றோர் குழந்தைகளின் தனிப்பட்ட பல உளச்சிக்கல்கள் குறித்து இந்த நூல் பேசி உள்ளது.
இந்த கட்டுரைகளில் உள்ள பிரச்சனைகளையும் தீர்வுகளையும் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொண்டு நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்து விட இயலாது மாறாக அந்த பிரச்சனைகள் பற்றிய அறிவையும் புரிதலையும் இந்த நூல் நிச்சயமாக வழங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பு: இனியன் சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
முழுமையான, விரிவான விமர்சனம் எழுதியுள்ளீர்கள். அருமை!
ReplyDelete