Monday, January 20, 2020

என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா


என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா
.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
இது 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். ”கடலும் கிழவனும்” கூட சின்னஞ்சிறு புத்தகம் தானே?! ஆனால் நோபல் பரிசினை பெறவில்லையா?
பாலின சமத்துவம் குறித்த பார்வையை விசாலப் படுத்த வேண்டுமானால் நாம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” ஆகும். அது போல ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவர்கள்-வகுப்பறை-கற்றல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் எனில் இந்த நூலை கட்டாயமாக படிக்க வேண்டும்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் தலைமைப் பண்பு பயிற்சிக்கு சென்றிருந்த போது இறையன்பு அவர்கள் இந்த நூல் குறித்தும் ஆசிரியர் குறித்தும் சிலாகித்து கூறினார். அப்போதே இந்த நூலை எனது பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.
நூலாசிரியர் ச.மாடசாமி அவர்கள் அறிவொளி இயக்க மாநில திட்ட அலுவலராக பணியாற்றிய கல்லூரி ஆசிரியர். அன்னாரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். புத்தகமாக இதுதான் முதலாவது.
புத்தகத்தை கையில் எடுத்த போது எப்படியும் ஒரு 40 நிமிடத்தில் முடித்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் படிக்கும் போது எனது மனதில் தோன்றிய வாதப் பிரதி வாதங்கள் சில இடங்களில் என்னை பொருத்திப் பார்த்தது என்று மிக மெதுவாகத்தான் புரட்ட முடிந்தது. அரியலூர் டு திருச்சி பேருந்து பயண நேரமான 2.00 மணி நேரம் முழுமையையும் எடுத்துக் கொண்டது. அந்த நூல் எனது மனதில் ஏற்படுத்திய தாக்கமோ இரண்டு நாட்களாக நின்று பேசியபடி உள்ளது.
ஆசிரியர்களை “பயந்த சர்வாதிகாரி“ என்று கூறுவார்கள் என்றே தனது முதலாவது கட்டுரையான சிவப்பு பால்பாய்ண்ட் பேனாவை திறக்கிறார். பயந்த சுபாவமுள்ள சாந்த சொரூபியாக இருக்கும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சர்வாதிகாரியாக வலம் வருகிறார்கள். எவ்வளவு நிஜம்.
சிவப்பு பேனாவின் சக்தி குறித்து அருமையாக பேசும் முதல் கட்டுரை. சிவப்பு பேனாவினால் நாம் போடும் Good என்பது எவ்வளவு வலிமையானது என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். 35 மதிப்பெண் எடுக்கும் மெல்லக் கற்கும் மாணவனுக்கும் 90 க்கு மேல் எடுக்கும் மீத்திறன் மாணவர்களுக்கும் சேர்த்தே தான் Good போடுவேன். நிறைய Encouraging குறிப்புகள் எழுதியுள்ளேன். சற்று நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அமர்ந்தேன்.
மாணவர்கள் வகுப்பறையில் அவமதிக்கப் படுவது. தேர்வுகளும் மதிப்பெண்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பாகுபாடு. அதனால் ஏற்படும் அவமதிப்பு நெருக்கடி என்று மாணவர் பக்கம் இருந்து அவர்தம் உளவியலை ஆழமாக அலசி உள்ளார்.
சுதந்திரமற்ற இறுகிய வகுப்பறைகள் மற்றும் stereo type தகவல் விநியோகம் என்று கற்றல் அனுபவங்கள் சுரத்தில்லாமல் ருசியற்று இருப்பது குறித்து கவலை கொள்கிறார்.
“கற்பித்தலில் நாம் உருவாக்கிக் கொள்ளும் கெட்டிபட்ட நம்பிக்கைகள் நெகிழ்ச்சியற்ற, இறுக்கமான ஆசிரியராக நம்மை மாற்றிவிடும்“ –கமலா வி.முகுந்தா வின் மேற்கோள் நூலில் காணக்கிடைத்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
“பொய், அத்துமீறல் மற்றும் அவமதிப்பு” இவையாவுமே எந்த ஒரு ஆசிரியரையும் சீறி எழச்செய்யும் விஷயங்கள். அலுவல் ரீதியாக நாமே நிறைய பொய் சொல்லப் பழகி இருக்கும் போது மாணவர்களின் பொய்களை ரசிக்கப் பழகுங்கள். சிறிதளவு அத்துமீறலுக்கும் அவமதிப்புக்கும் இடம் கொடுத்துப்பாருங்களேன் என்கிறார். இந்த வார்த்தைகள் ஆசிரியர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். கட்டுரையை முழுமையாக வாசித்தால் சரியாக புரிந்து கொள்ளலாம்.
கற்றல் கற்பித்தல் சூழல் சுதந்திரமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு, படிப்பு மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் போன்ற பெரிய விஷயங்களை சின்னஞசிறு மூளைக்குள் ஏற்றி மகிழ்ச்சியோடு நிகழ வேண்டிய கற்றலை தூக்க இயலா பெரும் சுமையென மாற்றி வைத்து விட்டிருக்கிறோம். நமது தலைமுறை அனுபவித்த மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை நமது பிள்ளைகளுக்கு கசப்பானதாக மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆசிரியர்களே விரைப்பாக இருக்கும் “ஷோல்டரை இறக்குங்கள்” இயல்பாக இருங்கள். வகுப்பறை இறுக்கத்தையும் குறையுங்கள். கற்றல் அனுபவங்களை மகிழ்ச்சியானதாக ஆக்குங்கள். என்பது தான் நூலின் செய்தி.

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல


புத்தகம் : அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
ஆசிரியர் : ச.மாடசாமி

பாரதி புத்தகாலயம்
ச.மாடசாமி அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதிய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு தான் அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல என்ற இந்த புத்தகம்.
இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் வெகுசீக்கிரம் கவனம் பெறுவதும் பரப்ப படுவதும் வெறுப்பு சார்ந்த நிகழ்வுகள் தான். இனம், மதம், வட்டாரம், நாடு போன்ற பல்வேறு வரையறைகளுக்குள் வருவோர் எல்லாம் ஒன்றாய் கூடி மற்றவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது, கும்பலாகத் தாக்குவது என்று வெறுப்பு அழிக்க இயலா விருட்சமென வளர்ந்து வருகிறது.
     இதில் பல்வேறு விசித்திரமான கூடல் மற்றும் பிரிதல் எல்லாம் நடந்தேறும். உதாரணமாக இந்துக்களாக ஒன்று கூடி ஒரு விஷயத்தை எதிர்த்து முடித்து உறங்கி கண் விழித்தால் சாதி சார்ந்த டிரெண்டிங் போய்க்கொண்டு இருக்கும். உடனே பழைய இணைப்பை உதறித் தள்ளி விட்டு சாதிகளாக பிரிந்து அடித்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதுவே ”ஏ பாகிஸ்தான் ஹே ஹமாரா எதிரி ஹே“ என எதையாவது திசைதிருப்ப தூண்டிவிடப் படும் போதெல்லாம் திரும்பவும் ஒன்றாக கூடி புதிய எதிரிக்கு எதிராக பொங்கல் வைக்க வேண்டும்.
     இப்படியாக சோஷியல் மீடியாக்கள் புண்ணியத்திலும் நான்காம் தூண் ஆதரவிலும் சமூகத்தில் வெறுப்பு நாள்தோறும் வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
     அணுகுண்டுக்கு எதிராக காகித கொக்கு செய்த ஜப்பான் சிறுமியைப் போல நாம் வெறுப்பை வேரறுக்க அன்பைத் தான் முன்னிருத்த வேண்டும். நிபந்தனையற்ற அன்பு, எல்லைகள் பாரா அன்பு.
     இந்த அன்பெனும் விதையை எங்கே விதைப்பது?
     வேறெங்கே பள்ளிகளில் தான்?
     கள்ளம் கபடம் இல்லா பிஞ்சு மனங்களில் அன்பினை விதைத்து பாருங்கள். அது நிச்சயம் வெறுப்பெனும் விருட்சத்தை வேரறுக்கும்.
          உள்நோக்கம் கொண்ட தந்திரமான அன்பு, சமூக வலைதளங்களில் தம்மை நல்லவனாக நிலைநிறுத்திக் கொள்ள கையாளும் போலி அன்பு இவற்றையெல்லாம் நுணுக்கமாக பேசியிருக்கிறார். “The Cat came Back” என்கிற பழங்கால வாய்வழிப் பாடலின் கதை வழியே கள்ளமில்லா அன்பு ஒன்றே வலிமையானது என கூறுகிறார்.
     அப்பாவியா? முட்டாளா? என்ற அத்தியாயத்தில் தங்கப்பன் கழுதை வாங்கிய கதை வழியாக அப்பாவித்தனமானது முட்டாள் தனமாக போதிக்கப் படுவதன் அவலத்தை கூறுகிறார்.
     “பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்” என்ற தகவலை பரிமாறிவிட்டு மாணவர்கள் மத்தியில் “பாரதியார் எங்கு பிறந்தார்?“ “எட்டயபுரத்தில் பிறந்தவர் யார்?“ என்றெல்லாம் கேட்பது வழக்கமான வகுப்பறை. வழக்கமான ஆசிரியர். மாறாக மாணவன் தகவல்களை திரட்டி வந்து ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் விவாதிப்பதன் மூலமாக ஏராளமாக கற்க இயலும் என்ற கருத்தை “தலைகீழ் வகுப்பறை”(FLIPPED CLASSROOM) என்ற கட்டுரையில் கூறுகிறார்.
     வரலாறு திரிக்கப்பட்டு பரப்ப படுவதால் சமூகத்தில் எத்தகைய பெரும் கேடு ஏற்படுகிறது என்பதை சிவாஜி குறித்த கட்டுரையில் கூறுகிறார்.
     மேலும் புதியக் கல்விக் கொள்கை, எழுத்தாளர் சுஜாதாவின் தந்திர மொழி போன்ற பல விஷயங்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.


Wednesday, January 15, 2020

பொங்கல் விழா @ சுத்தமல்லி 1.0


பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு பக்கம் நடிகர் நடிகையின் அழகான வண்ணப் படங்கள் மற்றொரு பக்கம் தபால் அட்டை போன்ற வடிவமைப்பு. அப்போது நேரில் பார்த்துக் கொள்ளும் நண்பர்களுக்கு கூட தபாலில் அந்த வாழ்த்து அட்டை அனுப்பித் தான் வாழ்த்து சொல்லுவோம். சுத்தமல்லியில் அதிகம் விற்பனையான வாழ்த்து அட்டை ராமராஜன் படம் போட்டதாகத்தான் இருக்கும். பூக்கள் படமோ இயற்கை காட்சி ஓவியமோ அனுப்புவோர்கள் சற்றே வயது முதிர்ச்சி உள்ளவர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு நாம் மொய் செய்த பிறகு அவர் நமக்கு பதில் மொய் செய்யவில்லை என்றால் சில ஊர்களில் பெரிய பிரச்சினையாகிப் போகும் அல்லவா? அது போலத்தான் நாம் வாழ்த்து அட்டை அனுப்பி பதிலுக்கு நண்பன் வாழ்த்து அட்டை அனுப்பவில்லை என்றால் நட்பு மட்டும் உடைவதில்லை அடிதடியில் மண்டையும் கூட உடைந்த வரலாறுகளை எல்லாம் பார்த்து வளர்ந்த “புள்ளிங்கோ“ நாங்க.
புதிய சொந்தக் காரர்களில் சாதுவாக யாரேனும் தெரிந்தால் ,"அண்ணே உங்க அட்ரஸ் குடுங்க பொங்கல் வாழ்த்து அனுப்புறேன் நீங்களும் எனக்கு அனுப்பனும்" என்று பீதியை கிளப்புவோம். எங்கே அட்ரஸ் சரியா தெரியாம பதிலுக்கு அனுப்பாமல் போய்விடுவார்களோ என்று ஐம்பது வரிகளில் அட்ரஸ் எழுதிய காலம் அது.
இப்போ வாட்சாப்ல் மெசேஜ் பிரத்தியேகமாக டைப் பண்ணகூட மலைச்சிக்கிட்டு ஃபார்வேர்ட் பண்ணிகிட்டு இருக்கும. நாம வாழ்த்து மெஸேஜ் அனுப்பி பதிலுக்கு அனுப்பாதவங்க மேல வருகிற கோபம் மட்டுமே இன்றுவரை மாறாத விஷயம்.
சூரியப் பொங்கல் எல்லாம் சில வீடுகளில் தான் கொண்டாடப்படும். அன்றையப் பொழுதில் நாங்கள் அடுத்த நாள் மாடுகளுக்கு மாலை அலங்காரம் செய்வதற்காக ஆவாரம் பூ பறிக்க முந்திரி காட்டுக்குச் செல்வோம்.
பிறகான பகல் பொழுதில் செங்கரும்பை நமது உயரத்தில் பாதி அளவுக்கு வெட்டி பற்களால் தோலினை சீவி அதனுள்ளே உள்ள தண்டினை கடித்து உறிஞ்சினால் ஆகா தேவாமிர்தம். அந்த தருணத்தில் கரும்பை பிடித்திருக்கும் உள்ளங்கையில் ஆரம்பித்து முழங்கை வழியாக தேனமுது வழிந்து ஓடும். இப்போது வரும் கரும்புகளில் அந்த அளவுக்கு சாறு இருப்பதில்லை. உள்ளங்கை கூட ஈரமாவதில்லை.
அப்புறம் வாழைப் பழம், பெரும்பாலான வீடுகளில் வாழைத் தார் ஒன்றை செங்காயாக வாங்கி போகி அன்றே போர்வை போர்த்தி தொங்க விட்டு விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று போர்வை விலக்கும் போது அழகாக முத்து முத்தாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். படைப்பது என்னவோ ஒரு சீப்போ இரண்டு சீப்போ என்றாலும் எல்லா வீடுகளிலும் ஒரு முழுத் தார் வாங்குவார்கள்.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு 'ருசி'கரமான அனுபவம். எங்க அப்பா வாழைத்தார் வாங்கி தொங்க விட்டு கோணி சாக்குப் போர்வை கொண்டு போர்த்தி விட்டு இரவானால் சாம்பிராணி புகை போட்டு பழுக்க வைத்துக் கொண்டு இருந்தார். நான் சூரியப் பொங்கல் அன்று ஒரு முக்காலி போட்டு ஏறி அடியில் சாக்கு ஓட்டை வழியாக கையை மேலே கொண்டு போய் அழுத்தி அழுத்தி பார்த்து பழத்திருந்த சீப்பை கண்டு பிடித்து விட்டேன். அப்படியே ஒரு மூன்று பழங்களை பிய்த்து டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு சென்று மறைவிடத்தில் நின்று தின்று விட்டு தோலினை நல்லடக்கம் செய்து விட்டேன். ஆசை அடங்காத காரணத்தால் இந்த வேலை எனது கட்டுப் பாட்டில் இன்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. மாட்டுப் பொங்கல் அன்று காலை அப்பா சாக்கினை பிரித்த போது (அங்கே நானும் நின்று கொண்டிருந்தேன்) அடியில் இரண்டு பலகீனமான சீப்புகள் மட்டும் தொங்கிக் கொண்டு இருந்தன.
”என்னடா இது மொத்தமும் காணோம்?”
“அப்பா நான் பிய்க்கல” – இது நான் (பூனைக்குட்டியை கவனக்குறைவாக வெளியே விட்ட தருணம்) ஒரு அடியோ மிரட்டலோ கூட இல்லை. மௌனமாக சென்று இரண்டு சீப் வாங்கி வந்து விட்டார். ஒரு வேளை பொங்கல் முடிந்து அடிப்பாரோ என்கிற பயத்திலேயே அந்த வருடப் பொங்கல் கழிந்தது.
சற்றேரக்குறைய எண்பது பழங்களை நான் மட்டுமே சாப்பிட்டுருக்க இயலாது. நான் கையை விட்ட அதே சாக்கு ஓட்டையில் அக்காக்கள் கையை விட்டுருக்க வேண்டும் என்பதே எனக்கு இப்போது தான் விளங்குகிறது. இந்த கட்டுரையை படித்த பிறகாவது அந்த 'குற்றத்தை' தாமாக முன்வந்து ஒப்புக் கொள்வார்களா பார்ப்போம்.
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை ஏரியில் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு அதன் கொம்புகளில் எண்ணை தடவுவார்கள். அப்புறம் கலர் மாவில் தேங்காய் சிரட்டையை முக்கி அதன் மேல் வட்ட வட்டமாக வண்ணமாக இடுவார்கள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
இருள் கவிழ்ந்த உடன் திறந்த வெளியில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து படைப்பார்கள். பொங்கலோ பொங்கல் கோஷத்தில் நிறைய சுலோகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் கோரசாக கத்துவது எங்களுக்கு அவ்வளவு ஜாலியான அனுபவம்.
அடுத்தநாள் காணும் பொங்கல். நாங்கள் அதனைக் கரிநாள் என்றுதான் சொல்லுவோம். அன்று தான் அதிக பட்ச கொண்டாட்டம்.
ஜல்லிக்கட்டு- பசு, மாடு,கன்று,எருமை ஏன் ஆட்டுக் குட்டிகளைக் கூட அவிழ்த்து ஓட விடுவார்கள்.
அப்புறம் விளையாட்டு போட்டிகள். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் யுவதிகளைக் கவர ஆடவர்கள் விழுந்து புண்பட்டெல்லாம் விளையாடுவார்கள்.
நான் "ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே..." என்ற பாடல் பாடி பரிசு பெற்ற வரலாறு  கூட உண்டு. அப்புறம் ரொட்டி கடித்தலில் பரிசு வாங்கி உள்ளேன். ஓட்ட பந்தயத்தில் வெகுபேரை துரத்தியிருக்கிறேன். கரிநாள் முழுக்க குட்டி பசங்களுக்கு குஷியான நாள்தான். மாலையில் பரிசு கைக்கு வந்து சேர்வதற்குள் பாதிபேர் தூங்கி இருப்பாங்க. அன்னைக்கு மைக்க கையில் வச்சி இருக்குறவன் தான் கத்துகிட்ட மொத்த வித்தையவும் எறக்க பண்ற அளப்பறையில் ஒரு வாரத்துக்கு காது கொய்ய்...ங்கும்.
மலிவு விலை எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் யாவும் பொங்கல் விளையாட்டு போட்டியில் பரிசு கொடுக்க கண்டுபிடிக்கப்பட்டவையே.
இவ்வளவு இருந்தும் பாட்டு போட்டியில் ஜெயிச்ச எனக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா?!!
ஒரு நைலான் கயிறு. இதனால்  லால்குடி ஆஸ்டல்ல எவ்வளவு பெரிய அவமானமா போச்சு என்பதை எனது "லால்குடி டேஸ்" ல் தனிப் பதிவாவே போட்டு குமுறி குமுறி அழுதுருக்கேன்.

சிகரெட் பிடிக்குறவன் காசு இல்லாத நாளில் அரைகுறையாக பிடித்து போட்டவற்றை தேடி எடுத்து புகைப்பது போல தூக்கி வீசப்பட்ட நுனிக் கரும்பை எல்லாம் தேடி எடுத்து கடிக்கும் நிலையும் பொங்கல் முடிந்த மறுவாரம் ஏற்படும்.
என்னதான் புத்தாடை பட்டாசு என ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் பொங்களில் இருக்கும் ஒரு மகிழ்ச்சி மனநிறைவு தீபாவளியில் இல்லை. என்ன இது நம்ம தமிழர் திருநாள்.

Balan malayalam movie

பாலன் - மலையாளம் ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன் ஒரு மாலைப் பொழுதில் தியேட்டர்ஸ் நியர் மீ என்று கூகுளில் தேடினேன். பார்த்தால் பொடனிக்கு பி...