Tuesday, October 13, 2020

“நந்தினி ஐ.ஏ.எஸ்” - சிறுகதை

 



     “நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தார் தமிழாசிரியர் மணிகண்டன்.

     “நம்ம ஸ்கூல்ல புதுசா சேந்த ஆறாம் வகுப்பு நந்நதினி எழுதிய புத்தகம் சார்”

     சென்ற ஆண்டின் பழைய ரூல்டு நோட்டின் எழுதப்படாத பக்கங்களை கிழித்து எடுத்து நான்காக கத்தரித்து அவற்றை பிசிறு இன்றி நூலால் தைத்து குண்டு குண்டான கையெழுத்தில் எழுதப்பட்ட புத்தகம் அது.

     பிறப்பு, தாய் தந்தையர் குறித்த குறிப்பு, சொந்த ஊர் குறித்த குறிப்பு பிறகு தனது லட்சியமான ஐ.ஏ.எஸ். அதற்கான காரணம் என அழகாக வரிசைக்கிரமமாக விஷயங்களை அடுக்கி இருந்தாள் குட்டிப் பெண் நந்தினி.

     தலைமையாசிரியர் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்து சிரித்தார். அவளோ வெட்கத்தில் “சார்“ என்றபடி சிரித்து நெளிந்தாள்.

     “அப்பா என்னம்மா பண்றாரு?“

     “கேரளாவுக்கு வேலைக்குப் போய் இருக்காரு சார்”

     “அம்மா”

     “அம்மா கள வெட்டப் போவாங்க சார்“

     “படிச்சி இருக்காங்களாம்மா”

     “ரெண்டு பேரும் அஞ்சாப்பு முடிய படிச்சி இருக்காங்க சார்“

     “உனக்கு ஐ.ஏ.எஸ் பத்தி யாரும்மா சொன்னாங்க?”

     “டி.வி நியுஸ்ல பாப்பேன் சார், அப்புறம் நம்ம மாவட்ட கலெக்டர் போன வருசம் நம்ம ஊருக்கு வந்து பேசினாங்கல்ல சார். அவங்கள போல நானும் கலெக்டர் ஆகணும்னு தோணுச்சி சார்“

     சென்ற ஆண்டு பணியாற்றிய லேடி கலெக்டர் முத்துமீனாட்சி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வின் பரிந்துரையை புறந்தள்ளி விட்டு உள்ளபடியே தகுதியுள்ள ஆதரவற்ற பெண்களுக்கு சமையல் உதவியாளர் போஸ்டிங் போட்டு இரவோடு இரவாக ஆணைகளை விநியோகம் செய்து பணியில் சேர வைத்து விட்டார். மேற்படி காரணத்தினால் மாற்றலாகிப் போய் விட்டார். ஆனாலும் கூட அவர் பணியாற்றிய ஓராண்டில் பல மாணவியருக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். அதன் ஒரு சாம்பிள் தான் இந்த நந்நதினியின் புத்தகம் என தலைமையாசிரியர் புரிந்து கொண்டார்.

     ”இந்தப் புத்தகத்தை நான் படிச்சிட்டு வச்சிக்கட்டுமா நந்தினி?“

     “வச்சிக்கோங்க சார், நான் இன்னைக்கு நைட் வேற எழுதிக்கிறேன் சார்” என்றாள் பெருமை பொங்க.

அமுதவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்கள் வழக்கத்தை விட சிறப்பாக இருந்தது. வண்ண வண்ணமாய் கொடித் தோரணங்கள் கொடிமரத்தில் இருந்து நான்கு பக்கங்களும் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. கொடி மரத்தின் கீழே வண்ணக் கோலப்பொடிகளால் அழகிய ரங்கோலி இடப்பட்டிருந்தது. பெண்ணாசிரியர்கள் அனைவரும் ஒரே வண்ண சேலைகளில் வந்திருந்தனர். மாணவர்களும் சீருடையில் தேசியக் கொடியைக் குத்தியிருந்தனர்.

     “அடுத்ததாக ஆறாம் வகுப்பு மாணவி நந்தினி பரதநாட்டியம் ஆடுவார்” என்று அறிவியல் ஆசிரியை விஜி அறிவித்தார்.

     “பனிவிழும் பருவநிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ…” என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலுக்கு அழகாக ஆடினாள் நந்தினி. அழகியப் பூச்செண்டு அசைந்து ஆடியது போல இருந்தது. மழலை மாறாத முகத்தில் மெலிதான மேக்கப் மற்றும் பிரத்தியேக நடன உடைகள் என ஆசிரியைகள் கற்றிருந்த மொத்த வித்தைகளையும் இறக்கி இருந்தார்கள்

     வாய்க்குள் கல்கோனா மிட்டாயை அடக்கி வைத்துக் கொண்டு பேசுவது போல மழலையாய்ப் பேசுவாள் நந்தினி. அவளை பேசவைத்துக் கேட்பதற்காகவே சும்மாவே ஆசிரியர்கள் அவளிடம் ஏதாவது விசாரிப்பார்கள். அவளும் பட்டாம் பூச்சி சிறகசைப்பது போல கண்களை படபடவென்று அசைத்த வண்ணம் பேசுவாள். பேச்சினூடாக மூச்சுவாங்கிய படி பட பட வென்று பொறிந்து தள்ளுவாள். அவளுக்கு பேசவும் அலுக்காது ஆசிரியர்களுக்கு கேட்கவும் அலுக்காது.

     நந்தினி எட்டாம் வகுப்பிற்கும் வந்துவிட்டாள். ஆனால் ஆறாம் வகுப்பில் பார்த்தது போன்ற அதே மழலை மாறா குரலும் முகமும். அந்த ஆண்டு பள்ளிக்கு ஆண்டாய்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வருவதாக இருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமையாசிரியர் ஆசிரியர் கூட்டத்தை கூட்டினார்.

     “நாம எவ்வளவு தான் வகுப்பறைக் கற்பித்தலில் நமது திறமையை காண்பித்தாலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சொதப்பி விட்டோமானால் அனைத்தும் பாழ். அதனால் வழிபாட்டுக் கூட்டத்திலேயே சி.இ.ஓ வை அசத்தும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்திவிட வேண்டும்“ என்றார் தலைமையாசிரியர்.

     “சார் இந்த முறை வழிபாட்டுக் கூட்டத்தை முழுவதும் ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நடத்தி விடலாம் சார். அவர்கள் தவறு செய்தால் கூட அது ரசிக்கத் தக்க  வகையில்தான் இருக்கும்.“ என்றார் கணித ஆசிரியர் சரவணன்.

     “சார் திருக்குறள் மட்டும் எட்டாம் வகுப்பு நந்தினியே சொல்லட்டும் சார். அவளும் ஆறாவது மாதிரியே தான் இருப்பா, மேலும் அவளோட மழலைக் குரலில் திருக்குறள் கேட்க நன்றாக இருக்கும்” என்றார் அறிவியல் ஆசிரியை விஜி.

     ஆண்டாய்வு அன்றைக்கு காலை எட்டு முப்பதுக்கெல்லாம் அனைவரும் வந்து விட்டார்கள். ஒரு பக்கம் காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிகர்சல் நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் சுருட்டிய சார்ட் பேப்பரை கையோடு எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் திரிந்தார்கள்.

     “நந்தினி என்னம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருக்கே” கணித ஆசிரியர் சரவணன்.

     “சார், இங்கப் பாருங்க சார் ரிகர்சல் ரிகர்சல்னு சொல்லி அதே திருக்குறளை பத்து தடவை சொல்ல வச்சிட்டாங்க சார்” என்று அழகாக அலுத்துக் கொண்டாள்.

     அமுதவயல் பள்ளியில் மட்டும் வழிபாட்டுக் கூட்டத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் “வாழ்த்துதுமே“ஐந்து முறை ஒலிக்கும். ஆம், பசங்க ஒன்ன புடி என்ன புடி என்று இழுத்து முழக்கி கொத்து பரோட்டா போட்டு விடுவார்கள். ஆனால் ஆண்டாய்வின் போது எல்லோரும் நூல் பிடித்தாற் போல் சரியாக பாடி முடித்துவிட்டனர்.

     ’அப்பாடா, ஒரு கண்டத்த கிராஸ் பண்ணியாச்சு’ என்று தலைமையாசிரியரும் உடற்கல்வி ஆசிரியரும் பெருமூச்சு விட்டனர்.

     நந்நதினி திருக்குறளுக்கு அழைக்கப் பட்டாள். வந்தவள் ஒரே தாவாக மைக்கை இழுத்து தனது உயரத்திற்கு அட்ஜஸ்ட் செய்தாள். பிறகு மைக்கின் தலையில் ரெண்டு தட்டு தட்டி ஒர்க் பண்ணுதா என்று சோதனை செய்தாள். அவளின் இந்த செயலை சிஇஓ புன் சிரிப்போடு ரசித்துக் கொண்டு இருந்தார்.

     “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

     மேற்சென்று இடித்தல் பொருட்டு“

என்று தலையை ஆட்டி ஆட்டி குறளையும் பொருளையும் அழகான மழலைக் குரலில் பேசி முடித்தாள். சி.இ.ஓ அவளின் கன்னத்தை தட்டி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை பரிசளித்தார். தலைமையாசிரியருக்கோ மட்டன் பிரியாணியையே லெக் பீசோடு சாப்பிட்டது போல பரம திருப்தி.

     மாலை பின்னூட்டம் வழங்கும் கூட்டத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தையும், பள்ளியையும், ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றார். அந்த பாராட்டிற்கு நந்நதினியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

     நந்தினி பத்தாம் வகுப்பிற்கும் வந்து விட்டாள். சற்று வளர்ந்திருந்தாள். ஆனால் அதே பட்டாம் பூச்சி படபடப்புடனான கண்கள், கல்கோனா மிட்டாய் அடக்கிய மழலைப் பேச்சு மட்டும் அவளை விட்டு நீங்க வில்லை.

     மதிய உணவு முடித்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வந்த ஆசிரியர்களை அப்படியே நிறுத்தி ஒரு கூட்டத்தை நடத்தினார் தலைமையாசிரியர்.

     “சார் அடுத்த வாரம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிடுங்க. கடையில காசு கொடுத்து வாங்கி ரெடிமேட் எக்சிபிட் எதுவும் இருக்க கூடாது. முழுக்க முழுக்க நாமே செய்ததாக இருக்க வேண்டும். எக்சிபிட் எப்படி இருந்தாலும் அத ப்ரசெண்ட் பண்ற விதத்தில் தான் பரிசு வாங்க முடியும். அதனால நல்லா ப்ரசெண்ட் பண்ணக் கூடிய பசங்கள பாத்து தேர்வு செய்யுங்க“

     “சார் நான் மேத்ஸ் சார்பா ஒரு காட்சி வைக்கிறேன் சார்.“ இது கணித ஆசிரியர் சரவணன்.

     “வெரி குட் எல்லா வருசமும் கணக்குல எக்சிபிட் குறைவாத்தான் வருது சிறப்பா பண்ணுங்க நிச்சயம் பரிசோட வரலாம்”

     “சார் நான் குளோபல் வார்மிங் பற்றி ஒரு ஐடியா இருக்கு அத டெவலப் பண்ணிடறேன் சார்” இது அறிவியல் ஆசிரியை விஜி.

     அடுத்த நாள் அறிவியல் கண்காட்சி. கண்காட்சிக்கு தேர்வு செய்யப் பட்ட மாணவர்களை தலைமையாசிரியர் அழைத்து அவர்களை விளக்கச் சொல்லி ஒரு முறை கேட்டு திருப்தி அடைந்தார். உங்கள் யூகம் சரிதான். அறிவியலுக்கு நந்நதினி தான் செல்கிறாள்.

     விஜி மிஸ், குளோபல் வார்மிங் பற்றிய கண்காட்சியில் வெறும் விழிப்புணர்வு கருத்து மட்டும் தான் இருக்கு. அதனால நந்தினிக்கு எதாவது வித்தியாசமா காஸ்ட்யும் போட்டு விட்டு அந்த கருத்துக்களை சொல்ல வச்சா நல்லா இருக்கும்“

     “நல்ல ஐடியா சார், நிச்சயமா நல்லா இருக்கும் சார்”

     நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்குவதாக இருந்தது. பணி நிமித்தம் வர இயலாமையால் சி.இ.ஓ திறந்து வைத்தார். மாலை பரிசளிப்பிற்கு வருவதாக உறுதியளித்திருந்தார்.

     நந்தினி குறி சொல்லும் பெண் போல வேடமிட்டு வந்திருந்தாள். புருவத்திற்கு மையிட்டு சுற்றிலும் வண்ணப் பொட்டுகள், கோணலான குதிரை வால், அதற்கு மேலே மல்லிகை கனகாம்பரம் பூ, நேர்த்தியாக கட்டிய புடவை, கக்கத்தில் ஒரு கூடை அப்புறம் கையில் குறி சொல்லுபவர்கள் வைத்திருக்கும் சிறு கோல் என்று குறி சொல்லும் பெண்ணாகவே மாறி இருந்தாள்.

பூமிப் பந்தின் அருகே நின்று “நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா” என்று தொடங்கி சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவு மற்றும் தவிர்க்க யோசனைகள் என அனைத்தையும் அழகாக ஜக்கம்மா பாஷையில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.

அவளிடம் குறி கேட்பதற்கென்றே அமுதவயல்ப் பள்ளி அரங்கில் மட்டும் கூட்டம் அலை மோதியது. நந்தினியும் சற்றும் உற்சாகம் குறையாமல் சிரித்த முகத்தோடு அனைவருக்கும் குறி சொல்லி அனுப்பினாள்.

மாலை பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் வந்திருந்தார். பரிசு அறிவிக்கப் பட்டது. நந்தினிக்கு சுற்றுச் சூழல் பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. அப்போது தலைமையாசிரியர் கலெக்டர் அருகே சென்று ஏதோ கூறினார். அதற்கு சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்டார்.

பரிசு வாங்க நந்தினியோடு, விஜி மிஸ் மற்றும் தலைமையாசிரியரும் மேடைக்கு வந்தனர். அப்போது கலெக்டர் மைக்கில் “தற்போது பரிசு பெறுபவர் நந்தினி ஐ.ஏ.எஸ்” என்று புன்னகைத்தபடி கூறி கோப்பையோடு தலைமையாசிரியரால் அழகுற பைண்ட் செய்யப் பட்டிருந்த அவளது புத்தகத்தையும் வழங்கினார். இந்த ஆனந்த பேரதிர்ச்சியால் நந்தினி அழுதுகொண்டே தனது புத்தகத்தை வாஞ்சையோடு தடவினாள்.

அடுத்த ஆண்டு இன்னுமோர் அதிர்ச்சி காத்திருந்தது. பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டிருந்தது. எல்லோரும் டி.சி. வாங்கி அங்கேயே மேல்நிலை வகுப்பும் சேர்ந்து இருந்தனர். நல்ல மதிப்பெண் எடுத்தும் நந்தினி மட்டும் டி.சி வாங்க வரவே இல்லை.

அப்புறம் கூப்பிட்டு அனுப்பிய பிறகு வந்திருந்தாள். பழைய சிரிப்பு, உற்சாகம் எதுவும் இல்லை. கண்களில் படபடக்கும் பட்டாம்பூச்சியும் காணவில்லை. வந்தவள் ஒரு லாங் சைஸ் நோட்டை வழக்கத்திற்கு மாறாக தாடைக்கு கீழே நிறுத்தி இருந்தாள்.

“என்னம்மா ஆளே வித்தியாசமா இருக்கே, டி.சி வாங்க இவ்வளவு லேட்டா வர்ர என்னாச்சு?” என்று தலைமையாசிரியர் பரிவோடு விசாரித்தார்.

“ஒண்ணுமில்ல சார்“ என்று முடித்துக் கொண்டாள் நந்தினி.

“முன்னெல்லாம் சாப்டியாம்மான்னு கேட்டாளே மூச்சு வாங்க முக்கா மணிநேரம் பேசுவ இப்போ இவ்வளவு சுருக்கமா பேசுற. சரி ஆபீஸ்ல போய் கையெழுத்து போட்டுட்டு டி.சி வாங்கிக்க. கூட யாரு வந்துருக்கா?”

“மாமா வந்துருக்காங்க சார்”

“பாக்க சின்னப் பையனா இருக்காரு இவருதான் உங்க மாமாவா?“

“ஆமா சார்“

“சரி வாங்கிக்கிட்டு போ. எங்க படிக்கப் போறம்மா?”

“தெரியல சார்” என்றபோது கண்களில் இருந்து களுக் கென்று கண்ணீர் விழுந்தது. யாரும் பார்ப்பதற்குள் லாவகமாக சுண்டிவிட்டாள்.

அதற்கு மேலும் தோண்டவேண்டாம் என்று விட்டு விட்டாலும் “என்ன பிரச்சினையா இருக்கும்?” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் தலைமையாசிரியர்.

“விஜி மிஸ் என்னாச்சு? ஏன் அழுதுகிட்டே வரீங்க?“

“சார்…“

“நிதானமா சொல்லுங்கம்மா, என்னாச்சு?”

“சார் நந்தினிக்கு அவங்க பேரண்ட்ஸ் மே மாசம் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களாம் சார்”

“என்னது, கல்யாணமா? அதான் கழுத்தை மறைச்சிக் கிட்டே நின்னாளா?“

“கூட வந்தப் பையன் தான் மாப்பிள்ளையாம் சார். ஏதோ சொத்து பிரியக் கூடாதுன்னு சொந்தத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்களாம் சார்”

“என்னம்மா சொல்றீங்க?”

     “ஆமாம் சார், அவ மாமாவ அனுப்பிட்டு இவ்வளவு நேரம் என்னைக் கட்டிக்கிட்டு அழுதுட்டு போறா சார். இத உங்கக் கிட்ட கொடுக்க சொன்னா சார்”

     வெள்ளை பேப்பர் போட்டு பேக் செய்யப் பட்டிருந்த பார்சலை பிரித்த போது “நந்தினி ஐ.ஏ.எஸ்“ புத்தகம் எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரித்தது.

      

     .  

Wednesday, October 7, 2020

கி.ரா வின் ருசியான கதைகள்

 புத்தகம்– ருசியான கதைகள்

ஆசிரியர்– கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகளில் நான் முதலில் வாசித்தது ”கோபல்ல கிராமம்” அந்த நாவலின் நடையானது நமது தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் ஒரு அலாதியான அனுபவத்தை தந்தது. அதற்கடுத்தாற்போல வந்த அரியலூர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அவரது படைப்புகள் அனைத்தையும் வாங்கி விட்டேன்.

கிராமங்களில் வளர்ந்த சிறுவர்களுக்கு பெரியவர்களிடம் கதை கேட்ட அனுபவம் நிச்சயமாக இருக்கும். நிலாக் காயும் பௌர்ணமி நாட்களில் வாசலில் சிறுவர்களாக படுத்துக் கொண்டு கதைகளை கேட்டதுண்டா? அந்த கதைகளில் ஏராளமான பகடிகளும் சோகங்களும் அரிதாக சில ஃபீல் குட் கதைகளும் அடங்கும். கதைகளின் முடிவில் “வாழ்ந்தாங்களாம் வாழ்ந்தாங்களாம் வாழமரத்தில சாஞ்சாங்களாம்” அல்லது “அவங்களுக்கு கல்யாணம் ஆச்சாம் நான் அங்கே சாப்பிட்டேனாம் நீ எல எடுத்தியாம்” என்பது போல முடிக்கும் போது புன்முறுவலுடனோ சிரிப்புடனோ முடிவது அவ்வளவு அற்புதமான அனுபவம். இந்த உணர்வுகளை எனக்கு மீண்டும் ஞாபகப் படுத்தியது கி.ரா அவர்களின் கதைகளே.

”வயது வந்தோர்களுக்கு மட்டும்” என்று ஒரு சிறுகதை தொகுப்பு உண்டு. முழுக்க முழுக்க பாலியல் சார்ந்த கதைகள் செவ்வியல் தன்மையோடும் இடக்கரடக்கலான வார்த்தைகளாலும் வார்க்கப்பட்டிருக்கும். தற்போது கூட அவரது 99 வது பிறந்த நாள் அன்று செய்தியில் பார்த்தேன். இதே போல மற்றொரு தொகுப்பை கையெழுத்து பிரதியாக தயார் செய்துள்ளார் என்று கூறியிருந்தார்கள். அந்த தொகுப்பில் உள்ள கதைகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். (ஹி…ஹி…). அதன் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்களிடம் உதாரணங்களோடு சிலாகித்து பேசிய அன்று அந்தப் புத்தகம் இரவல் சென்றது தான் இன்னும் வீடு திரும்பவில்லை. (அதற்கு முன்பும் பல புத்தகங்கள் பற்றி பேசியிருக்கிறேன் ஒரு புத்தகமும் நகர வில்லை ஆனால் இது மட்டும்….)

வயது வந்தோருக்கு மட்டும் என்ற தொகுப்பில் இருந்து ஒரு கதை இந்த நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

அதிதீவிர ஜோசிய சிகாமணி ஒருவன் தனக்கான சாந்தி முகூர்த்தத்தை மிக நுணுக்கமாக கணிப்பான். அதாவது ஆவணி இரண்டாம் தேதி நடுயாமத்தில் “அது“ வைத்துக் கொண்டால் உண்டாகும் பிள்ளை உலகாளும் சக்கரவர்த்தி ஆவான் என்பது அவனது கணிப்பு. அந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு அரசவையில் இருந்து இவனுக்கு ஜோசியம் கணிக்க அழைப்பு வரும். ஆகா ஜோசியம் அட்வான்ஸா பலிக்குதே என்று ஆற்றைக் கடந்து போவான்.

கெடுவாய்ப்பாக அடுத்த நாள் மழை பொத்துக் கொண்டு ஊற்றும். பரிசல் வர இயலா நிலை. இவனது தவிப்பை வெளியில் சொல்லாமல் மாலை வரைக் காத்திருக்கிறான் நீர் வடிந்தபாடில்லை. “ச்சே இப்படி ஆகிப் போச்சே“ என்று வருந்தும் வேளையில் ஒரு பெரியவர் வந்து கேட்க இவன் உண்மையை கூறுகிறான். கவலைப் படாதே இன்று என்பேத்தி பெரியவளாய் ஆகி இருக்கிறாள் அவளுக்கு மஞ்சள் கயிறைக் கட்டி மனைவியாக்கிக் கொண்டு இன்று உன்னுடைய ஜோசிய பலனை அடைந்து விடு என்கிறார். எல்லாம் முடிந்து அறைக்குள் போனால் அந்தச் சிறுமி கூச்சத்தில் துள்ளி ஓடுகிறாள். “அந்த“ நேரமும் முடிந்து விடுகிறது. இவனால் அவளை கட்டுக்குள் கொண்டு வந்து “வேலை“யை முடிக்க இயலவில்லை.

சரி நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று ஏமாற்றத்தோடு தம்பதி சமேதராக வீடு திரும்பும் அவனை அவனது மனைவி “ஜோசிய பலனை நீங்கள் இல்லாமலே வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டேன்“ என்று உற்சாகமாக கூறி வரவேற்கிறாள். இங்கே பாலியல் கதையை வார்த்தைகளில் பெரிதாக வடிக்காவிட்டாலும் அந்த இடைவெளிகளை நமது கற்பனை நிரப்பி விடுவதே இம்மாதிரிக் கதைகளின் வெற்றி.

தொகுப்பின் முதல் கதை ”தேள்கடி”. இதுவும் கூட ஒரு திருப்பத்தோடு முடியும் நகைச்சுவையான கதைதான். தேள்கடி மந்திரத்தை பிறருக்கு கற்றுத்தர மாட்டார்கள் அல்லவா. இறக்கும் தருவாயில் நம்பிக்கைக்கு உரியவருக்கு மட்டும் கற்றுத் தந்து செல்வார்களாம். அதனை தெரிந்து கொள்ள செய்யும் குயுக்தியும் தெரிந்த பின்பு வரும் வெடிச்சிரிப்புமே அந்தக் கதை.

சாதிமாறி வயதான ஒரு பிரம்மச்சாரி பெரியவரோடு காதலில் விழும்  தனது மகளை வேண்டாம் என்று நாசூக்காக தடுக்கும் தந்தையைப் பற்றிய கதைதான் ஒடுக்கம். இந்தக் கதையில் வரும் ”பனங்கருக்கு”(பனை மட்டையின் தண்டுப் பகுதியில் இருபுறமும் இருக்கும் ரம்பத்தின் பற்கள் போன்ற அமைப்பு) கொண்டு அரிவாள் போல ஆலம் விழுதை அறுத்து பல் துலக்கப் பயன்படுத்துவதை வாசித்த போது “அட“ என்று இருந்தது. அடுத்து பதனி சாப்பிடுவது, பனை ஓலையால் செய்த வாளி என்று பழைய விஷயங்களை நமது கற்பனையில் காட்சிகளாக விரிய விடுவார்.

“பொம்மைகளும் கிளர்ந்து எழும்“ என்கிற கதையில் கன்னிகழியா இளம் விதவைகளின் பாலியல் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கவலைப் பட்டிருப்பார்.

”ஜடை” என்கிற கதையில் தன் மீது ஆசைப்படும் அத்தை மகன் மற்றும் மாமன் மகன் யாரையாவது ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற நிலை. அத்தை மகனோடு திருமணம் நடத்தி வைத்து விடுகிறார்கள். ஆனால் மாமன் மகனோ மிகுந்த ஏமாற்றம் அடைகிறான். அவனது ஏமாற்றத்தை தாங்காமல் அவனுக்கும் தனது அன்பை பகிர்ந்து கொடுக்கிறாள். மாமன் மகனும் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அவளுடனே திருமணத்திற்கு வெளியேயான உறவைத் தொடர்வதாக முடித்திருப்பார்.

மொட்டைமலை என்கிற கதையில் தங்கைக்காக வாழும் பாவப்பட்ட அக்கா ஒருத்தி தங்கையாலேயே அவமானப் படுத்தப் படும் போது பொங்கி எழுந்து மண்ணை அள்ளி விடுவதால் ஏற்பட்ட மலைதான் அந்த மொட்டை மலை என்பார். இந்தக் கதை நமது கண்களை கசியச் செய்யும்.

“ஆடிக்கு அழைக்காத மாமனாரை

தேடிப்பிடித்து செருப்பாலேயே அடி” என்கிற அதிர்ச்சிகரமான சொலவடையோடு ஆரம்பிக்கும் ஒரு நகைச்சுவைக் கதை தான் “ஆத்தாடியோவ்”. ஆடி மாதம் விடாப்பிடியாக மனைவியை பார்க்க வந்த மருமகனை கோவிலில் படுக்க வைத்து விடுவார்கள். மனைவியோ மாலைக்கண் அம்மாவோடு “வெளிக்கி“ இருப்பதாக வந்து கோவில் அருகிலேயே கணவனைக் “கண்டுகொண்டு“ செல்வதாக முடிப்பார்.

எல்லா கதைகளையும் பதிவில் சொல்லிவிட இயலாது. அப்படியே சொன்னாலும் அந்த வாசிப்பு சுவையை இங்கே பகிர்ந்து விடத்தான் இயலுமா என்ன? எனவே நண்பர்களே கி.ரா வின் படைப்புகளை வாசியுங்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தோர் தங்கள் பால்ய கால இன்ப நினைவுகளை மீட்டிப் பார்க்க இயலும். நகரங்களில் பிறந்து வளர்ந்தோர் கிராம வாழ்வின் ரம்மியமான சூழலை எழுத்தின் வழி தரிசிக்க இயலும்.

Wednesday, September 30, 2020

புத்தகம் – குழந்தைகளின் நூறு மொழிகள்


 

புத்தகம் – குழந்தைகளின் நூறு மொழிகள்

ஆசிரியர் – ச.மாடசாமி

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

வகைமை – கல்வி சார்ந்த கட்டுரைகள்

சுதந்திரமான வகுப்பறைகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் தான் தோழர் ச.மாடசாமி அவர்கள். ஆசிரியர் அவர்கள் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர். மேலும் அறிவொளி இயக்கத்திலும் மிக முக்கிய களப்பணி ஆற்றி அந்த திட்டம் மற்ற மாநிலங்கள் மூக்கில் விரல் வைக்கும் வண்ணமாக மகத்தான வெற்றியை பெறக் காரணமாக இருந்தவர். அவரது பெரும்பாலான கல்விசார் கட்டுரைகளில் அறிவொளி இயக்கத்தில் கற்ற அனுபவப்பாடங்கள் அங்கங்கே வெளிப்படும்.

எனக்குள்ளும் கற்பித்தல் குறித்த எண்ணங்களில் மிகப் பெரிய மாற்றங்களை விதைத்தது அவரது பிரபலமான கட்டுரைத் தொகுப்பான “எனது சிவப்பு பால் பாய்ண்ட் பேனா”. சென்ற ஆண்டு நிஷ்த்தா பயிற்சியின் போது ஆசிரியர்கள் மத்தியில் புதிதாக பேச நிறைய விஷயம் கிடைக்க ஆசிரியரது அன்பென்பது தந்திரம் அல்ல, எனது சிவப்பு பால் பாய்ண்ட் பேனா போன்ற நூல்கள்தான் காரணம். (நமது குழுவில் ஏற்கனவே பதிவுகள் எழுதியுள்ளேன்.)

புத்தகத் தலைப்பான குழந்தைகளின் நூறுமொழிகள் என்பது தான் முதல் கட்டுரை.

ஒரு மருத்துவர் தேன் உண்பதால் ஏற்பவடும் விளைவுகளைத் தெரிந்து கொள்வது கற்றல்தான்.

தேன் – யாருக்கு? எவ்வளவு? எப்போது? என்ற நுட்பங்களை எட்டினால் தான் அவர் புரிந்து கொண்ட மருத்துவர் – என்கிற அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளில் தான் துவங்குகிறார். கற்றலுக்கும் புரிந்துகொள்வதற்குமான நுட்பம் விளங்கினால் தானே நல்ல புரிந்து கொண்ட மாணவர்களை உருவாக்க முடியும்.

ரெக்கியோ எமிலியா அனுகுமுறை என்ற ஒன்றை அறிமுகப் படுத்துகிறார். இத்தாலியில் உள்ள ரெக்கியோ என்கிற இடத்தில் இரண்டாம் உலகப் போரின் இறுதிகாலகட்டத்தில் இந்தப் பள்ளி 1945 ல் துவங்கப்பட்டுள்ளது.

இந்த முறையில் அனுபவம் மூலமாக மாணவர்கள் கற்றுக் கொள்ள துணைபுரிபவர் தான் ஆசிரியர். இது மாண்டிசோரியை ஒத்த முறை என்கிறார். நெகிழ்வுதன்மை உடைய பாடத்திட்டம், கூட்டாகச் செய்யும் ஆய்வுத் திட்டம் மற்றும் ஆவணப் படுத்துதல் என மாணவர்கள் மிக அழகாகவும் ஆர்வமுடனும் தானே செய்கிறார்கள். ”பூ எப்படி பூக்கிறது?” என்று குழந்தைகள் கேட்டால் அதற்கான பதில் வகுப்பறையிலா தோட்டத்திலா என்பதில் இருக்கிறது இந்த முறையின்  சூட்சுமம்.

பூனை நரிக்கதை தெரியுமா உங்களுக்கு. பல தந்திரங்களைக் கற்று வைத்திருக்கும் நரியும் ஒற்றை தந்திரம் கற்ற பூனையும் நண்பர்கள். ஒரு முறை வேட்டைக்காரர்களிடம் சிக்கியபோது நரி கற்ற அத்தனை தந்திரத்தையும் முயன்று தோற்று உயிரை விடுகிறது. ஆனால் பூனையோ தான் கற்ற மரம் ஏறுதல் என்கிற ஒற்றைத் தந்திரத்தால் பிழைக்கிறது. என்று முடிக்கிறார்கள். மரத்தில் ஏறிய பூனை மலைப் பாம்பிடம் மாட்டிக் கொண்டால் என்னாவது என்று யாரேனும் ஒரு சுட்டிப் பயல் கேட்கும் வரை தப்பித்தோம்.

“வனத்தில திரிஞ்சாலும் இனத்தில் வந்து அடை” என்பது போல என்னதான் பல விஷயங்களை கற்றாலும் தேர்வு என்கிற ஒற்றைத் திறனில் கற்ற வித்தையை மொத்தமாக இறக்கி வைப்பதில் தானே நமது குழந்தைகளின் திறமைகளை மதிப்பிடுகிறோம்.

“உலகெங்கும் பள்ளித் தேர்வுகள் இளக்கம் பெற்று வரும் வேளையில் இந்தியாவிலி தேர்வுமுறை மென்மேலும் இறுகி வருகிறது” என்று ஆசிரியர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது.

ஆளுக்கொரு கிணறு என்கிற ஒரு கட்டுரையில் பச்சையம்மாள் என்கிற ஒரு பேராசியரியர் குறித்து பேசுகிறார். வேலைக்கு சேர்ந்த அன்று “ஏம்மா, ஏதாவது ஒரு வகுப்புக்கு போய் எதையாவது நடத்துங்கம்மா” என்று துறைத்தலைவர் கூற “அப்படி எல்லாம் செய்ய முடியாது சார், எனக்குன்னு வகுப்பு ஒதுக்கினால் போகிறேன்“ என்றிருக்கிறார் தடாலடியாக. இங்கிருந்து Refusal skill குறித்தும் பேசுகிறார். உண்மைதானே எப்போதும் தலையாட்டும் பொம்மைகளாகவே இல்லாமல் அவசியம் உள்ள சூழலில் மறுத்துப் பேசும் தைரியம் வேண்டும் அல்லவா? அது குறித்தும் கூட வகுப்பறைகளில் போதிக்க வேண்டும்.

அழுக்கடைந்த இடத்தை மாணவிகளை விடுத்து பேராசியரியர் பச்சையம்மாளே துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்வது.

விளாயாட்டு விழாவுக்கு சுடிதாரில் வருவது (90 களில்) என்றெல்லாம் புதுமையாக இருக்கும் பேராசிரியர்

“பசங்க எப்போ பாத்தாலும் தொத்திக்கிட்டே திரிகிறார்கள்“ என்று சக பேராசியரியர்கள் சீண்டியதற்கு கொதித்துப் போய் அழுகிறார். பிறகு ”கணினித்துறையில் உள்ள பேராசிரியர்கள் (எம்.இ முடித்த இளம் பொறியாளர்கள்) ஆணும் பெண்ணுமாக என்னமா கூத்தடிக்கிறார்கள்” என்று தனக்குள் இருக்கும் கிணற்றை வெளிப்படுத்துகிறார். இறுதியில் நூலாசிரியர் ’எனக்குள் இருக்கும் கிணறு என்னவென்று தேடவேண்டும்’ என்று கூறி முடிக்கிறார்.

முற்போக்கு பேசித்திரியும் பலபேரிடம் ஏதாவது பிற்போக்குத்தனம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது என்பது தான் இந்தக் கட்டுரையின் சாரம்.

“சார்“ ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்,

அனுப்பினேன்.

“சார்“

உடனே மற்றொருவன்

அதட்டினேன்

நொடிகள் நகர

உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது

என் அதிகாரம்” –பழ.புகழேந்தி “கரும்பலகையில் எழுதாதவை”

இந்த கவிதையை முன்வைத்து வகுப்பறை அதிகாரம் குறித்த சுதந்திரமான ஒரு விவாதத்தை தொடங்கியது குறித்து கூறியுள்ளார்.

பயம் நாற்றத்துக்கு காரணமாகிறது. எதிராகப் பாயும் விமர்சனங்களைப் பதற்றம் இல்லாமல் சந்திக்கும் பக்குவப்பட்ட ஆசிரிய மனம் வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்திரவாதம் என்று அந்தக் கட்டுரையை முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

காந்தியார் வகுப்பறை என்கிற கட்டுரையில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. காந்தி போற்றிய சிந்தனையாளர் டால்ஸ்டாய்.

தரம் ஒழுக்கம் – ராணுவக் கட்டுப்பாடு, நிறுவன விதிகள் பாடச்சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கி தரம் பிரித்தல் பன்முகங்களை அழித்து பள்ளிக்குப் பொருந்தும் ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்று ஸ்டீரியோடைப்பாக இருக்கும் கல்விமுறையில் “குழந்தைகளின் சுதந்திரம் கற்பனைத்திறன்“ என்ற கருத்துக்களை முன்வைத்து உருவாகும் டால்ஸ்டாயின் பள்ளியில் கற்பித்தல் – உரையாடல் ஆகிறது. கல்வியின் அடித்தளம் அனுபவம் ஆகிறது. கற்பதற்கான வழி சுதந்திரம் என்றாகிறது.

1859  ல் தொடங்கிய டால்ஸ்டாயின் பள்ளி இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டு பிறகு ஜார் மன்னரால் தடை செய்யப்பட்டது.

எப்போதும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்கும் காந்தியார் கூட பள்ளிக் கல்லூரிகள் குறித்து “அடிமைக் கோட்டைகள்“ என்று கூறியிருக்கிறார். (1920 இந்தியாவில்)

தென் ஆப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்திய அனுபவம் காந்திக்கு உண்டு. ஆம், அங்கே உள்ள குழந்தைகளுக்கு “தமிழ்“ பாடம் நடத்தி இருக்கிறார். அதற்கு “ஜி.யு.போப்“ அவர்களின் நூலைப் பயன்படுத்தினாராம்.

காந்தியார் அவர்கள் வலியுறுத்திய கல்விமுறை “உடலுழைப்போடு கூடிய கல்வி“ ஆகும்.

அகங்காரத்தமிழ் என்கிற கட்டுரையில் நான் “அட ஆமாம்ல?” என்று வியந்த விஷயம் உள்ளது.

”திணிப்பது தான் கல்வி” “கடினமாக இருப்பது தான் தரம்“ என்று நீட்டைப் பற்றி நீட்டிப் பேசும் காலம் இது. புத்தக வடிவமைப்பில் குழந்தைகளின் கை பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தும் வண்ணமாக புத்தகம் இருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை புத்தகத்தைக் கண்டால் பயலுக பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் எடுப்பது ஏன்.

முதல் வகுப்பில் ஆத்திச் சூடி தேவையா? என்று ஒரு அரங்கில் ஆசிரியர் கேட்டபோது அனைவரும் “வேண்டும் வேண்டும்” என கோரஸ் பாடியுள்ளார்கள். அத்தோடு நில்லாமல் அறத்தை எளிமையாக குழந்தைகளிடம் சேர்க்க இதை விட்டா வேறு கதி என்ன சார்? என்று கேட்டுள்ளார்கள்.

“இயல்வது கரவேல்” என்பதில் “கரவேல்“ என்பதன் அர்த்தம் யாதோ?

”உடையது விளம்பேல்” என்பதில் விளம்பேல் என்பதன் அர்த்தம் என்ன?

இதேபோல் ஙப்போல் வளை என்பதன் பொருள்

”தையல் சொல் கேளேல்”(பொம்பள பேச்ச கேக்காதீங்கப்பா) என்பது சரியான அறம் என்று நினைக்கிறீர்களா?

முதல் மூன்று ஆத்தீ“சூடி“களுக்கு ஆசிரியர்களுக்கே அர்த்தம் சற்று கடினமாகத்தான் இருந்ததாம். அந்த கடைசி சூடி எல்லாம் இப்போ பொருத்தமற்றது என்பதை குழந்தைகளும் அறியும்.

இறுதியாக “தோல்வியின் நிழல்களாக வரும் பயம் , குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற மனக்குழப்பங்களில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதைத் தலையாய கடமையாக பல நாடுகளின் பள்ளிகள் ஏற்றுள்ளன. ஆனால் நாம்…..????”

தேர்வு மைய வகுப்பறைகள் மாணவர் மைய வகுப்பறையாக மாறும் போது தான் கற்றலில் இனிமை கைகூடும் என்பதே தோழர் ச.மாடசாமி அவர்களின் இந்த நூலின் சாராம்சம்.

இங்கே நான் முழுமையாக எல்லாவற்றையும் கூறவில்லை, பள்ளிக் கல்வி சார்ந்தவைகளையும் என்னை ஈர்த்தவைகளையும் மட்டுமே கூறியுள்ளேன். ஆனால் புத்தகத்தில் இன்னும் சுவாரசியமான பயனுள்ள பல விஷயங்கள் உண்டு. வாசியுங்கள் நண்பர்களே.

 

 

Sunday, September 13, 2020

பிக் பேங்க் 2.0

 

பிக் பேங்க் 2.0


ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதியிடம் அவரது காரியதரிசி ஒரு தொலைபேசியை கொடுத்தார்.

“என்னாது, உண்மையா, அப்படியா சொல்றீங்க இந்தா உடனே வரேன்” என்று தொலைபேசியை அணைக்காமல் கூட தூக்கியடித்துவிட்டு உடனே ஓடினார்.

“சார்…. மீட்டிங்….”

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் போங்கய்யா!! யோவ் சம்முவம் வண்டிய உடனே பெண்டகனுக்கு உடுய்யா” என்று மூச்சிரைக்க ஓடியவரின் உடல் முழுக்க வேர்வையில் நனைந்திருந்தது.

*****

அதே வேளையில் சாப்பாட்டில் கை வைக்கப் போன இந்தியப் பிரதமரிடம் அவரது காரியதரிசி “சார் “ரா” வில் இருந்து அவசர அழைப்பு”

“சாப்பிட்டுவிட்டு பேசலாமா?”

“இல்ல சார் ஏதோ ரொம்ப அவசரமாம்”

“சரி கொடு”

“என்னாது, அப்படியா, என்னய்யா சொல்றீங்க அப்படியெல்லாம் செய்ய முடியுமா? சரி உடனே போறேன்”

“எலேய் சம்முவம் சவுத்ப்ளாக்குக்கு வண்டிய விடுடா”

உலகில் உள்ள அனைத்து நாட்டு ராணுவ தலைமையகங்களிலும் தொலைபேசி இடைவிடாது அலறியபடி இருந்தது.

*****

ரஷ்ய அதிபருக்கு பல இடங்களில் இருந்து தொலைபேசி வந்தவண்ணம் இருந்தது.

“சரிப்பா லொகேஷன் எங்க நாட்டுக்கு பக்கமாத்தான் இருக்கு, ஆனா இந்த வேலையை வெற்றிகரமா எங்களால் மட்டுமே முடிச்சிட முடியும்னு தோணல. இன்னும் ஐந்து நிமிடத்தில் இரண்டு ஜெட் விமானங்கள லொகேஷனுக்கு அனுப்பிடுறேன். நாட்டுலயே பெஸ்ட் மெடிக்கல் டீம் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர் டீம் போறாங்க“

“என்னது நானா இல்ல நான் பதுங்கு குழிக்குள்ள போகப் போறேன்”

*****

சியோல் நகரில் தென்கொரிய ராணுவ தலைமையகத்தில் உயர்மட்ட பாதுகாப்பு வல்லுநர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

“இது 100 விழுக்காடு நம்பகமான தகவல். ஆனா விஷயம் அவங்க பார்டர் செக்யுரிட்டிக்கு கூட தெரியல. நாம வெளிப்படையா உள்ள போக முடியாது. எமர்ஜென்சிக்கு வழக்கமா கடத்தல்காரங்க பயன்படுத்துற சுரங்கம் வழியா வேணும்னா போகலாம்“

“சார் எங்க கமாண்டோ ஃபோர்ஸ சுரங்கப் பாதை வழியா உடனடியா கூட்டிப் போகட்டுமா சார்“

“ஆனா யூனிஃபார்ம்ல போகாதீங்க. நேரா நான் சொல்ற இடத்திற்கு போய் பார்டர ஓப்பன் பண்ண சொல்லுங்க. எல்லா நாட்டில் இருந்தும் வல்லுநர் குழு வந்துகிட்டு இருக்காங்க. ரஷ்யா முதல்ல வந்துடுவாங்கன்னு இன்ஃபார்ம் பண்ணுங்க“

“ஒகே சார்“ என்று விரைப்பாக சல்யுட் வைத்து விட்டு தனது குழுவுடன் பரபரப்பாக ஆலோசனை நடத்தி விட்டு இரண்டு ஜீப்களில் வடகொரிய எல்லைக்கு அருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்கு சென்றார்கள்.

*****

“சார் பேஷண்டுக்கு மயக்க மருந்து கொடுத்துட்டேன் சார். கருவிகள் எல்லாம் பொருத்தியாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. ஆபரேஷன ஆரம்பிச்சிடலாம் சார்” என்றார் சென்னையின் பிரபல மருத்துவமனையின் நர்ஸ்.

“ஏம்மா இது என்னோட வெற்றிகரமான ஐநூறாவது ஆபரேஷன். அதனால முடிஞ்சதும் நியூஸ் பேப்பருக்கு செய்தி கொடுத்துடுங்க“ என்றபடி ஆபரேஷனுக்கான பிரத்தியேக உடையில் ஓப்பன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரிக்கு தயாரானார் இந்தியாவின் நம்பர் ஒன் ஹார்ட் சர்ஜன் கபாலி.

நெஞ்சுப்பகுதியின் மேல் தோல் கிழிக்கப்பட்டு இதயத்தின் இருப்பிடம் பிளக்கப்பட்ட சமயம் ஆபரேஷன் தியேட்டர் கதவு மடார் என திறந்து கொண்டது. திபு திபு வென கமாண்டோக்கள் படை கபாலியை கபால் என அள்ளிக் கொண்டு போனது.

மருத்துவமனையே ஸ்தம்பித்து போனது. சற்று நேரத்தில் கபாலியை ஏற்றிக் கொண்டு விஸ்க் விஸ்க் என்று காற்றினை வெட்டிய படி காற்றாடி சுழல மேலே எழும்பி போனது ஹெலிகாப்டர்.

*****

பெண்டகனில் வடகொரியாவில் இருந்து வரும் செய்திக்காக காத்துக் கிடந்தார் அமெரிக்க ஜனாதிபதி. போன் அடித்தவுடன் பாய்ந்து சென்று எடுத்தார்.

“சீக்கிரம் உங்க அதிபர்கிட்ட குடுய்யா”

”நான்சென்ஸ் நான் தான் பேசுறேன் சொல்லு”

”பார்டர் ஓப்பன் பண்ணியாச்சு. ஏர்ஸ்பேஸ் கிளியரன்ஸ் பண்ணியாச்சு சார். ரஷ்யன் டீம் ஆன் தி வே. சவுத் கொரியன் டாக்டர்ஸ் ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க உங்க டீமை உடனே அனுப்பலாம் சார்”

“தயாராத்தான் இருக்காங்க, சரியா இரண்டு மணிநேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க”

*****

சென்னையில் உள்ள ஏர்ஃபோர்ஸ் மைதானத்தில் இருந்து பேசஞ்சர் ஜெட் விமானம் தயாராகிக் கொண்டு இருந்தது “கமான் கமான் க்விக் க்விக் என இந்தியக் குழுவின் தலைவர் ஆனந்தன் துரிதப் படுத்திக் கொண்டு இருந்தார்.

“ஹார்ட் சர்ஜன் கபாலியும் மிலிட்டரி எலக்ட்ரானிக் ஸ்பெஷலிஸ்ட் மிஸ் போதும்பொண்ணுவும் ஏறிட்டாங்களா?“

“யெஸ் சார்“

“எலே சம்முவம் உட்றா போவட்டும்” என்ற ராணுவ பாஷையில் சொன்னார்.

*****

உலகில் உள்ள அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் ஏக காலத்தில் அலறியடித்தபடி பிரேக்கிங் நியுஸ் போட்டன.

தமிழகத்தின் பிரபல செய்திச் சேனலான நியுஸ்19 ல் “மொத்த பூமியையும் பொசுக்கும் அணுகுண்டுகள் வெடிக்கப் போகின்றனவா?”

 ”மனித இனம் தப்பிப் பிழைக்குமா?“

“உலகத் தலைவர்கள் அனைவரும் கலக்கம்“

“மனித இனத்தின் அழிவு ஒரே நேரத்தில் நடக்கப் போகிறதா“

நம்முடன் சற்று நேரத்தில் பூச்சி மசாலா வழங்கும் நேரலை விவாத நிகழ்ச்சியில் இணைகிறார்கள் அணு விஞ்ஞானி அப்பாதுரையும் இதய நோய் மருத்துவர் இளங்கோவனும்.

தமிழக மக்கள் வயிற்றில் புளியை கரைத்தன அனைத்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும்.

*****

வடகொரியாவின் ஒற்றை விமான நிலையத்திற்கு வரிசையாக ஏராளமான நாடுகளில் இருந்து விமானங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் ரூமில் யாருக்கு லேண்டிங் ரூட் கிளியர் செய்வது என்று தலையை பிய்த்துக் கொண்டனர்.

“ஹலோ கபாலி எப்படி இருக்கீங்க. போன வருடம் நியுயார்க்ல ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ்ல பாத்தோம் ஞாபகம் இருக்கா”

“ஓ ஹலோ ஜான் மேத்யுஸ் எப்படி இருக்கீங்க. என்ன பிரச்சனைன்னு உங்க கிட்டயாவது சொன்னாங்களா?”

“ஏதோ வடகொரிய அதிபருக்கு சீரியஸா இருக்காம். இதயத்துடிப்பு வேகம் குறைந்து கொண்டே வருகிறதாம் இன்னும் நான்கு மணிநேரம் கூட தாங்காது என்கிறார்கள்”

“என்ன திடீர்னு அவர் மேல உலக தலைவருக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சி? என்னோட ஐநூறாவது ஆபரேஷன்ல இருக்கும் போது பாதியில தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்”

“வாங்க, ஸ்பாட்டுக்கு போனாதான் தெரியும்”

*****

வெள்ளை மாளிகையில் அணுக்கதிர் வீச்சுத் தாக்காத வகையில் வடிவமைக்கப் பட்ட நிலவறையில் சிறிதும் பெரிதுமான எல்.இ.டி திரைகள் முன்னால் கவலை தோய்ந்த முகத்துடன் அமெரிக்க அதிபர் அமர்ந்திருந்தார்.

“ஹலோ மிஸ்டர் பிரெசிடென்ட், சேஃபா இருக்கீங்களா?”

“ஓ இன்டியன் ப்ரைம் மினிஸ்டரா? நீங்களும் நிலவறையில் தான் இருக்கீங்க போல. சரி உங்க டீம் இறங்கிடுச்சா?”

“நம்ம ரெண்டு பேரு டீமும் ஒரே நேரத்தில் தான் பியாங்யாங் போய் சேர்ந்திருக்காங்க”

“இவ்வளவு நாளா அவன் எப்போ போய் சேருவான்னு நெனச்சிக் கிட்டு இருந்துட்டு ஒரே நாள்ள அவன் சாக க்கூடாதுன்னு உலக மக்கள் அனைவரையும் ப்ரே பண்ண வச்சிட்டானே நாதாரிப் பய”

*****

பூமிப்பந்து சுருங்கி சுருங்கி இதயம் போல துடித்து துடித்து அடங்கியது. அதன் நடுவே 4 மணி நேரத்தில் இருந்து கவுண்ட் டவுன் குறைந்த படி இருந்தது. உலகமே செத்தாலும் கிராஃபிக் மொதக்கொண்டு உலகத்தரத்துல இருக்கணும் இவனுங்களுக்கு.

“யோவ் என்னய்யா டாக்டர் இன்னும் வரல?! உன்னோட ஃபிரண்டுன்னு ரெக்கமண்ட் பண்ணின இவ்வளவு லேட் பண்றாரு!! மற்ற சேனல்ல எல்லாம் டாக்டரையும் அணு விஞ்ஞானியையும் வச்சி நேரலை கலந்துரையாடல் ஆரம்பிச்சுட்டாங்கய்யா” என்று சீறினார் நியுஸ் 19 ன் சீஃப் எடிட்டர்.

“சார், வந்துகிட்டே இருக்காரு சார். அதுவரையில் வடகொரியா பற்றி எதாவது டாக்குமெண்டரி இருந்தா வாய்ஸ் ஓவர் கொடுத்து போடலாம் சார்” இது நியுஸ் ரீடர் சங்கர்.

“சார், சார், எக்ஸ்க்ளூசிவ் படங்களே வந்துடுச்சி, நியுஸ் 19 எக்ஸ்க்ளூசிவ் படங்கள் என்று வாட்டர் மார்க்கோடு போட்டுடலாம் சார்”

“தற்போது நமது பியாங்யாங் சிறப்பு நிருபரிடம் இருந்து வந்த எக்ஸ்க்ளுசிவ் படங்கள்” என்ற பில்டப்போடு செய்தியை வாசித்தார்.

“நமது சிறப்பு நிருபர் எடுத்து அனுப்பிய படங்களில் பியாங்யாங் விமான நிலையத்தில் பல நாடுகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு வந்து இறங்கும் படங்களைப் பார்க்கிறோம். இந்த படத்தில் இருப்பது நமது இந்தியாவின் நம்பர் ஒன் இதய அறுவைசிகிச்சை மருத்துவர் கபாலி மற்றும் ராணுவ மின்னணுத்துறை பொறியாளர் மிஸ் போதும்பொண்ணு” என்று மிடுக்காக ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார் சங்கர்.

“யோவ் நமக்குத் தெரியாம யாருய்யா அந்த சிறப்பு நிருபர்?” என்று கிசுகிசுத்தார் சீஃப் எடிட்டர்.

“வேற யாரு சார் நம்ம பேசஞ்ர் ஜெட்டோட கோபைலட் தமிழரசன் தான் சார். அவர் என்னோட நண்பர். பியங்யாங்ல சும்மா தானே இருக்க போற அவ்வப்போது போட்டோ வீடியோ என எடுத்து அனுப்புன்னு சொல்லி அனுப்பி இருக்கேன்னு சொல்லு”

“வாவ் கைய்ய கொடுய்யா, அப்ப வடகொரியா கவரேஜ்ல நம்ம சேனல்தான் டிஆர்பி ல எகிற போகுது” உலகமே வெடிச்சி செத்தாலும் சேனல்காரனுக்கு டிஆர்பி ரேட் கவலை போகாது போல.

*****

அமெரிக்காவின் ச்சீட்டா ஃபோர்ஸ் தங்களது இரண்டு ஆண்டுகால நீண்ட மிஷனின் மிகப்பெரிய மைல்கல்லை எட்டினார்கள்.

“கேப்டன் நாளைக்கு சுரங்கம் தோண்டுற வேலை முடிஞ்சிடும். ஜிபிஎஸ் காட்டுற சிக்னல் படி பாத்தா நாம இன்னும் 30 அடி தோண்டிக் கொண்டு போனால் இந்த மேப்பில் தெரியும் ஆற்றங்கரையை அடையலாம். அப்புறம் நம்ம கிட்ட இருக்கிற ஏர் போட்ல காத்தடிச்சிக்கிட்டு டார்கெட்ட நெருங்கிடலாம்”

“ஏற்கனவே ப்ளான் பண்ணிய திட்டம் தான். ஆனா குறித்த நேரத்தை விட ஒரு மாதம் முன்னாலேயே மிஷன சக்சஸ் பண்ணிட்டு பிரெசிடெண்ட் கிட்ட சொல்லிடலாம்”

“எஸ் கேப்டன். எனக்கு ஒரு யோசனை”

“என்ன சொல்லு”

“நாம டார்கெட்ட டெஸ்ட்ராய் பண்றத பிரசிடெண்ட்டுக்கு லைவா டெலிகாஸ்ட் பண்ணிடலாமா?”

“நல்ல யோசனை அப்படியே பண்ணிடலாம்“

“ஒரு மாசமா சுரங்கத்துக்குள்ளேயே இருக்கிறோம். வெளியில் போன உடனே டார்கெட்டோட லொகேஷன பாத்துட்டு அதப் பத்தி ப்ளான் பண்ணலாம். சீக்கிரம் தோண்டுங்க“

*****

“என்னய்யா ஜான் மேத்யுஸ் நான் இந்தியாவிலேயே பெரிய இதய நோய் மருத்துவர். ஒரு ப்ரஸ் காரனும் என்னைய கண்டுக்க மாட்டேங்கிறான். மொத்த ப்ரஸ் காரனுங்களும் எங்க ஊர் மிலிட்டரி இஞ்சினியர சூழ்ந்துகிட்டானுங்க”

“மிஸ்டர் கபாலி, அவங்கள பாருங்க கூலிங் கிளாஸ், அடர் வண்ண லிப்ஸ்டிக் போட்ட பெரிய உதடுன்னு செம்ம ஸ்டைலா ஏஞ்செலினா ஜூலி மாதிரி இருக்காங்க“

“அது சரிதான் அப்புறம் எப்படி நம்மகிட்ட வருவாங்க”

அதற்குள் இந்திய குழுவின் தலைவர் ஆனந்தன் அனைவரையும் அழைத்து குறிப்புகள் வழங்கினார்.

“மிஸ் போதும்பொண்ணு, நீங்க உடனே இவர் கூட ஜீப்ல மிஸ்ஸைல் இருக்குற லொகேஷனுக்கு போய்டுங்க. அங்க போய் செக்யுரிட்டிய ப்ரீச் பண்ணி  மொத்த சிஸ்டத்தையும் ஷட் டவுன் பண்ண முடியுமான்னு பாருங்க. டாக்டர் கபாலி, நீங்க உடனடியா பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டலுக்கு போய் ப்ரசிடெண்ட் கண்டிஷன் எப்படி இருக்கு? கவுண்ட் டவுன எக்ஸ்டன்ட் பண்ண என்னவெல்லாம் வாய்ப்பு இருக்குன்னு ஆய்வு பண்ணி நம்ம பி.எம் முக்கு அப்டேட்ஸ் கொடுத்துக் கிட்டே இருங்க. இந்த மிஷன நம்ம டீம் வெற்றிகரமா முடிச்சா நம்ம நாட்டுக்கே நல்ல பேரு”

“நிச்சயமா முடிச்சிடலாம் சார்” என்றனர் கபாலியும் போதும்பொண்ணுவும் கோரஸாக.

*****

“தற்போது பூச்சி மசாலா நேரலை விவாத நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்து இருப்பவர்கள் அணுவிஞ்ஞானி அப்பாதுரையும் இதயநோய் மருத்துவர் இளங்கோவனும். நியுஸ்19 ன் சார்பாக உங்களை வரவேற்கிறோம்”

“வணக்கம்“

“ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த கவனமும் வடகொரியா மேல் திரும்பி இருக்கிறது. நம்முடைய இதய நோய் நிபுணர் கபாலியும் ராணுவ மின்னணு விஞ்ஞானி போதும்பொண்ணுவும் பிரதமரின் உத்தரவுக்கு இணங்க வடகொரியா விரைந்துள்ளார்கள். என்ன தான் சார் பிரச்சனை?“

இவ்வளவு நேரம் தமிழ்நாடே அறிய தவித்துக் கொண்டு இருந்த சஸ்பென்ஸை ஓப்பன் பண்ணினார் அப்பாதுரை.

“வடகொரிய அதிபருக்கு இதயத் துடிப்பு ரேட் குறைந்து வருகிறது. ஆபரேஷன் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை. அதிகபட்சம் நான்கு மணிநேரத்திற்கு மேல் தாங்காது என்கிறார்கள்“

“அதற்கும் உலகநாடுகள் அஞ்சி நடுங்குவதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது சார்“ என்றார் நிருபர் சங்கர்.

“அவரது இதயத் துடிப்பைத் தூண்டும் பேஸ்மேக்கரின் துடிப்போடு அந்த நாட்டில் உலகநாடுகளை நோக்கி நிறுவப்பட்டு நிற்கும் அணுஆயுதங்களின் புறப்பாட்டு பொத்தான் இணைக்கப் பட்டுள்ளது. அவரது துடிப்பு அடங்கும் அடுத்த வினாடி அணுஆயுதங்களுக்கு சமிக்கை போய் அது தன்னாலேயே மேலெழுந்து அதற்கு என்ற வகுக்கப்பட்டுள்ள பாதையில் சென்று அணுகுண்டினை வீசும். அதனை செயலிழக்கச் செய்யவும், அதிபரின் இதயத்துடிப்பை நீடித்திருக்கச் செய்யவும் தான் எல்லோரும் பியாங்யாங்கில் முகாமிட்டு இருக்கிறார்கள்“

இந்த செய்தி வெளியிடப்பட்ட அடுத்த வினாடி ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியில் உறைந்து போனது. பயத்தோடு தொலைக்காட்சித் திரையில் தெரியும் கவுண்ட் டவுன் கிளாக்கை பார்த்தார்கள். சிலர் உடனடியாக பிரார்த்தனையில் அமர்ந்தார்கள்.

*****

பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டலில் முழுக்க முழுக்க பல நாட்டு மருத்துவர்கள் குழு கூடிக் கூடி பேசிக் கொண்டு இருந்தனர். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் குறைந்து வரும் பல்ஸ்ரேட்டை நார்மல் சைனஸ் ரிதமுக்கு கொண்டுவந்து நிலைநிறுத்துவது குறித்து ஆய்வு செய்தபடி இருந்தார்கள்.

இந்திய மருத்துவர் கபாலி அதிபரின் உடலை பரிசோதித்துக் கொண்டு இருந்தார். அவரது முகத்தில் அவநம்பிக்கை ரேகைகள் படர்ந்திருந்தது.

“நர்ஸ், அதிபருக்கு பேஸ்மேக்கர் ஆப்பரேஷன் செய்த மருத்துவர் யார்?“

“சார், டாக்டர் கிம் டுக் தான் ஆபரேஷன் செய்தார்”

“அவரை அழைத்து வாருங்கள்”

“சார் அவர்…“

“என்னம்மா, சொல்லுங்க?“

“அவர் இரண்டு வருடங்களாக கோமாவில் உள்ளார்”

“என்னம்மா சொல்றீங்க? அவர் எழுதிய அதிபரின் மெடிக்கல் ஹிஸ்டரியாவது இருக்கா?“

“அதுதான் சார் பிரச்சனை, ரகசியத் தன்மை பாதுகாப்பு காரணங்களால் அது மருத்துவரின் பிரத்தியேக கணினியில் உள்ளது. கடவுச் சொல் அவருக்குத் தான் தெரியும்”

கபாலி உடனே தமிழரசனை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

*****

இந்தியக் குழுவின் தலைவர் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரதமரின் அழைப்பு, பாதுகாப்புத் துறை அமைச்சரின் அழைப்பு இவற்றுக்கு பதில் சொல்லிவிட்டு மின்னணு பொறியாளர் போதும் பொண்ணுவுக்கு அழைப்பு விடுத்தார்.

“சார் கெடுவாய்ப்பாக உங்களுக்கு சொல்வதற்கு என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. அதிபரின் பேஸ்மேக்கரில் இருந்து பல்ஸ் சிக்னல் ரிலே செய்யப் பட்டு இங்கே ரிசீவ் ஆகுது. மேலும் அது தடைபட்டால் மிசைல் கிளம்புவதற்கான சர்க்யுட் செயல்படும் வகையில் செட் செய்திருக்காங்க. மொத்த வளாகத்தையும் லேசர் பீம் மூலமாக பாதுகாக்கிறாங்க. கட்டுப்பாட்டு மையத்தை மேனுவலா அணுகினாவே மிசைல் சர்க்யுட் ஆன் ஆகிடும் போல தெரியுது. அதனால் இதனை செட் செய்த விஞ்ஞானியுடன் பேசணும்”

“அந்த விஞ்ஞானி இறந்து விட்டாராம். அவரது லேப்டாப்பில் எதாவது விஷயம் கிடைக்குதான்னு அத ஹேக் பண்ண சொல்லி இருக்கேன். நீங்க உடனே ஜெனரல் ஆஸ்பிட்டல் வாங்க இங்கே வேலை இருக்கு”

போதும்பொண்ணு ஜெனரல் ஆஸ்பிட்டல் விரைந்தார். அங்கே அவரது ஆய்வுக்காக மறைந்த அணுவிஞ்ஞானியின் பிரத்தியேகக் கணினி காத்திருந்தது.

*****

”பியாங்யாங்கில் இருந்து தற்போது கிடைத்த தகவல்“ என்று அடுத்த சரவெடியை வீசத் தயாரானார் சங்கர்.

“நமது பியாங்யாங் சிறப்பு நிருபர் அனுப்பிய தகவல். உலகைக் காக்கும் முயற்சியில் மற்றொரு பின்னடைவாக வடகொரிய அதிபருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்திய மருத்துவர் கிம் டுக் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். அதுபோல அணு ஆயுதங்களை பொருத்திய விஞ்ஞானி ஆறுமாதங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்துபோய் இருக்கிறார்“

“தற்போது கிம்டுக்கை கோமாவில் இருந்து மீட்க மருத்துவர்கள் குழு போராடி வருகிறது. மறுபுறம் நமது மருத்துவர் கபாலி அதிபரின் இதயத் துடிப்பு நிற்காமல் இருப்பதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார்“

”வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு புவியை அழிக்குமா? மனித இனம் தப்பிப் பிழைக்குமா? அறிந்து கொள்ள நியுஸ்19 உடன் இணைந்திருங்கள்”

உலக அழிவு குறித்த செய்தியினால் அதிர்ச்சியில் இறந்து போனவர்கள் விவரம் என்று மாவட்ட வாரியான எண்ணிக்கை ஸ்குரோலிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது.

*****

“வணக்கம் சார், நான் ச்சீட்டா ஃபோர்ஸ் கேப்டன் பேசுறேன் சார்”

“எந்த பிராஞ்ச் ஆப்கானிஸ்தானா?“

“நோ சார் நான் வடகொரியா”

“என்ன விஷயம்?”

“சார் மிஷன் சக்சஸ் ஆ முடியப் போகுது டார்கெட் லொகேஷன் பியாங்யாங் ஜெனரல் ஆஸ்பிட்டல். நாங்கள் நேர் எதிர் கட்டிடத்தில் இருக்கிறோம்.“

“என்னய்யா சொல்றீங்க“ என்று பதட்டத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர்.

“நம்ம ஸ்னைப்பர் ட்ரிக்கர்ல கை வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார். பக்கத்தில் ராக்கெட் லாஞ்சரும் தயார். அதான் மிஷனோட வெற்றிய நீங்க லைவா பாத்தா சந்தோஷப் படுவீங்கன்னு வீடியோ கால் கனெக்ட் பண்ணினேன்”

“மிஷனும் வேண்டாம் ஒரு கூந்தலும் வேண்டாம் உடனே கேன்சல் பண்ணிட்டு ரிட்டர்ன் வாங்க”

“சார் இதுக்காக நாங்க ஒரு வருசமா கஷ்டப்பட்டிருக்கோம்”

“இப்போ நீங்க சுட்டா உலகம் முழுக்க அணுகுண்டு வெடிக்கும் பரவால்லையா? அந்த ஆளு செத்தா அணுகுண்டு உலகம் முழுக்க கிளம்பி போய் வெடிக்கிற மாதிரி செட் பண்ணிருக்கான்யா சுட்டுக் கிட்டு புடாதீங்க, இங்க உலகம் முழுக்க அவன் பொழைக்க சர்வமத பிரார்த்தனை போய்கிட்டு இருக்கு உடனே மொபைல்ல நியுஸ் பாருங்க”

“ஓகே சார்” நல்வாய்ப்பாக போன் பண்ணி பேசியதால் உலகம் தப்பியது.

*****

உலகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாட்டம் போல மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. இனிப்பு பரிமாறி மகிழ்ந்தார்கள். காதலர்கள் முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். பக்திமான்கள் சாமிகும்பிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். நியுஸ் சேனல் உரையாடல் அறையில் இருந்த கவலை மறைந்து மகிழ்ச்சித் துள்ளல்களும் நிம்மதியும் ஏற்பட்டது.

சரி என்னதான் நடந்தது?

சரியாக இரண்டு மணிநேரத்தில் அதிபரின் இதயத்துடிப்பு அடங்கியது. பேஸ்மேக்கர் கருவியும் முற்றிலும் செயலிழந்தது. சரியாக அதே நேரத்தில் மருத்துவர் கிம்டுக் கண் விழித்தார்.

“எங்கள் தேசம் பொருளாதாரத் தடைகளால் முற்றிலும் நிர்மூலமானது. நீங்கள் சாதாரணமாக பெறும் மருந்துகளோ, உணவுப் பொருட்களோ, சாக்லேட்களோ அல்லது மின்னணு சாதனங்களோ எங்களுக்கு அரியவகைப் பொருட்கள் தான். வசதியும் அதிகாரமும் படைத்த மக்கள் எப்படியாவது சில பொருட்களை தென் கொரியாவில் இருந்து கடத்தல் நடைபெறும் சுரங்கம் வழியாக பெற்றுக் கொள்வார்கள். அதனால் தான் உலகநாடுகளுடன் தொடர்புகளை புணரமைக்க எங்கள் அதிபர் விரும்பினார். அதற்காக எங்கள் நாட்டுக்கு வெளியே பயணம் கிளம்பினார். ஒரு வேளை தான் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படலாம் என்று எண்ணினார். உலகநாடுகள் மீதான அவநம்பிக்கை காரணமாக ஒரு ஏற்பாட்டை செய்தார். அது தான் இது. கைதானால் மட்டும் இதைச் சொல்லி தப்பிக்க எண்ணினார். மற்றபடி தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று இந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தோம். அவர் நாடு திரும்பிய பிறகு அந்த பேஸ் மேக்கர் கருவியில் உள்ள ரகசிய சிப்பை நீக்க இயலவில்லை. அதனால் அதிபர் என்னை தாடையில் சுட்டுவிட்டார் அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை”

“அதற்கு பிறகு என்ன ஆனது என்பதை நான் சொல்கிறேன்“ என்று ஆரம்பித்தார் போதும்பொண்ணு.

“அணு விஞ்ஞானி ச்சங் ஹோ வின் கணினியில் இருந்த முக்கிய ஃபைல் ஒன்றில் அவர் அத்தனை விஷயத்தையும் தெளிவாக சொல்லி உள்ளார். அதிபர் கேட்டபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க சம்மதித்தாலும்கூட ஒட்டு மொத்தமாக அத்தனை அணுகுண்டுகளை ஆக்டிவாக வைப்பதில் விஞ்ஞானிக்கு விருப்பம் இல்லை. எனவே அணுகுண்டுகளை எடுத்துச் செல்லும் அனைத்து ராக்கெட்களிலும் எரிபொருள் நிரப்பாமல் விட்டுவிட்டார். மேலும் அணுகுண்டுகளும் டம்மியானவைதான். ஒன்றிலும் யுரேனியம் எரிபொருள் நிரப்ப வில்லை. அணு உலைக் கழிவுகள் இந்த வளாகத்தில் இருப்பதால் ஏற்பட்ட வழக்கமான கதிர்வீச்சே இங்கே அணுகுண்டுகள் ஆக்டிவாக உள்ளது என்பதை நம்ப வைக்க போதுமானதாக இருந்திருக்கிறது. இது அதிபருக்கும், டாக்டருக்கும் விஞ்ஞானிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத் திட்டம் என்பதால் விஞ்ஞானி சாமர்த்தியமாக இதை சாதித்து விட்டார். எப்படியோ உலகம் தப்பிப் பிழைத்தது“

“ஆனா இந்த விஷயம் எப்படி வெளியானது?”

“யாரோ ஒரு தென்கொரிய உளவாளியின் மூலமாக மருத்துவமனையில் இருந்து தான் கசிந்துள்ளது”

“அதிபருக்கு எப்போது இறுதிச் சடங்கு?”

“இறுதிச் சடங்கிற்கு அவசியம் இல்லை. இதயத்துடிப்பு நின்ற பிறகு அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து துடிப்பை கொண்டு வந்து விட்டோம். கபாலியின் கைங்கரியத்தில் அவரது ஆயுள் நீட்டிக்கப் பட்டுவிட்டது“

எப்போதும் இப்படி தப்பிவிட முடியாது. மொத்த உலகத்தையும் அழிக்கும் ஒற்றைப் பொத்தானை அணு ஆயுத வடிவில் யார் வேண்டுமானாலும் உருவாக்கும் ஒரு வாய்ப்பு திறந்தே கிடக்கிறது. யாரும் யாரையும் அடக்கி ஆளாமல், ஒன்று பட்டு ஒற்றுமையோடு அன்பைப் பறிமாறும் ஒரு நிலை நோக்கிய உலக சமுதாய முன்னேற்றம் ஒன்றே நமது அனைவருக்கும் நல்லது. ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவோம்.

 

 

 

 

 

 

 

Friday, September 11, 2020

ஜனமைத்திரி– முழுநீள நகைச்சுவைப் படம் (கேப் விடாம சிரிக்கவைக்கிறாய்ங்கப்பா)

 

படம் – ஜனமைத்திரி


மொழி – மலையாளம்

வகைமை – முழுநீள நகைச்சுவைப் படம் (கேப் விடாம சிரிக்கவைக்கிறாய்ங்கப்பா)

வழக்கமாக இரவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விடியற்காலையை நெருங்கும் போது சற்று உறக்கம் தள்ள ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் விபத்துகளுக்கு வித்திடும் நேரம் அது தான். எனவே ஒரு ஜனமைத்திரி நாளில் மக்களிடம் இமேஜை உயர்த்திக் கொள்ள விடியற்காலையில் போலீஸ் காரர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேனீர் வழங்கி விபத்தை தடுக்கும் வகையில் ஒரு நல்லெண்ண நடவடிக்கையை எடுத்ததால் ஏற்பட்ட சுவாரசியமான விளைவுகள் தான் படம்.

காமெடிப் படங்களில் ”பிள்ளையார் பிடிக்க குரங்காய் போவது” தான் ஃபார்முலாவாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான்.

சம்யுக்தன் சிசிடிவி கேமரா மார்க்கெட்டிங் செய்பவர். ஆனால் முக்கி முக்கி முயற்சித்தும் ஒன்று கூட விற்கவில்லை. அம்புட்டு திறமையானவர். அவர் ஒரு நாள் இரவுப் பயணமாக கொச்சியில் இருந்து புறப்பட்டு வருகிறார். சரியாக விடியற்காலையில் பாரமேடு போலீஸ் நிலைய காவலர்கள் சப் இன்ஸ்பெக்டர் சிபு (இவரது தோரணையைப் பார்த்தாலே சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது) தலைமையில் நடத்தும் “ஒரு சாயாக்கு ஒரு ஜீவன்” திட்டத்தில் முதல் போணியாக சிக்குகிறார்.

போலீஸ்காரர் லாரன்ஸ் “அதோ முதல் இரை வருகிறது“ என்கிறார் அதற்கு சிபு,“இரை அல்ல அது ஒரு ஜீவன் வருகிறது” என்று திருத்தும் போதில் இருந்து ஆரம்பிக்கும் சிரிப்பு சரவெடி படம் முடியும் வரையில் தவுசண்ட் வாலாவாக தொடர்கிறது.

சம்யுக்தன் இரவு சாலையோர உணவகத்தில் வறுத்த சிக்கனோடு கூடிய இரவு உணவை ஒரு பிடிபிடித்து விட்டு வருகிறார். அவர் வேண்டாம் என்று கதறக் கதற விடாமல் அவரை அன்பால் இறுக்கி அணைத்து கட்டஞ்சாயாவும் பார்லே –ஜி பிஸ்கட்டும் கொடுத்து விடுகிறார்கள். சம்யுக்தனுக்கு வயிற்றுக்குள் உடனடியாக யுத்தப் பேரிகை முழங்க ஆரம்பிக்கிறது. அவர் தனது பரிதாபகரமான நிலையை கூறி உங்களால் தான் என்கிறார்.

ஜனமைத்திரி தினம் அல்லவா? எனவே அவரை அன்போடு கழிப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டியது போலீஸ்காரர்களின் கடமையாகிறது. உடனடியாக அஷ்ரஃப் என்கிற கான்ஸ்டபிள் துணையோடு அருகில் தென்படும் வீடுகளில் கழிப்பறை பயன்படுத்திக் கொள்ள செல்கிறார்கள். சம்யுக்தனுக்கு எப்போது வேண்டுமானாலும் மடை திறந்து கொள்ளும் அளவுக்கு அவசரம்.

முதல் வீட்டில் அஷ்ரஃப் அனுமதிக் கேட்கிறார். வீட்டில் ஆண்கள் எவரும் இல்லை ஆதலால் முடியாது என கைவிரிக்கிறார்கள். சம்யுக்தன் அவஸ்தையில் நெளிகிறார். முடியாது என்ற பின்பும் அவர்களுடன் அரைமணிநேரம் கதையளக்கிறார் அஷரஃப்.

அடுத்த வீடு பூட்டியிருக்கிறது. அஷ்ரஃப் அசால்டாக காம்பவுண்ட் ஏறி குதித்து விடுகிறார். சம்யுக்தன் அப்படி ஏறினால் பொழப்பு நாறிடும் என்று தயங்கவே அவருக்கு கைகொடுத்து உதவுகிறார் அஷ்ரஃப். அந்த வீட்டில் ஒரு வழியாக அனுமதி கிடைக்கிறது. பிறகுதான் பெருமூச்சு விடுகிறார் சம்யுக்தன்.

திரும்பும் வழியில் ஒரு முகமூடித் திருடன் தென்படுகிறான். அவனை துரத்துகிறார்கள். அவன் ஒரு பேப்பர் காரனுடைய பைக்கை திருடிக் கொண்டு தப்பிக்கிறான். இதற்கிடையில் இவர்கள் கழிப்பறைச் சென்ற வீட்டில் மூன்று அண்ணன் தம்பி மார்கள் சேர்ந்து ஒரு காரை திருடிச் செல்கிறார்கள். அந்த வீட்டின் முகப்பில் இருந்த பூச்செடியையும் ஒடித்துச் சென்று விடுகிறார்கள்.

திருடிய பைக்கோடு முகமூடி அணிந்து வரும் திருடனை அன்போடு அழைத்து கட்டஞ்சாயா கொடுத்து வீடியோ எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது எஸ்.ஐ சிபு குழு. அடுத்து வரும் கார் திருட்டுக் கும்பலையும் அன்போடு கட்டஞ்சாயா கொடுத்து உபசரித்து அனுப்புகிறது. அவர்கள் பிரதி உபகாரமாக ஒடித்து வந்த பூச்செடியை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அதை பெருமிதமாக வீடியோ எடுத்து டிஎஸ்பிக்கு அனுப்புகிறார்கள். அவரோ “ஒரு சாயாக்கு ஒரு ஜீவன்” திட்டம் வெற்றி அடைந்ததாக என்னி புளகாங்கிதமடைந்து காவல்துறை முகநூல் பக்கத்தில் பகிர்கிறார்.

விடிந்தவுடன் கார்திருட்டுபோனது தெரிகிறது. நிருபர்குழு அந்த செய்தியை கவர் செய்கிறார்கள். அப்போது அதே காரில் சென்ற திருடர்கள் சிபு குழுவினருடன் தேனீர் அருந்தி அந்த வீட்டு பூச்செடியை அன்பளிப்பாக வழங்கிய வீடியோவை காணுகிறார்கள். அவ்வளவு தான் காவல்துறை பிடித்த பிள்ளையார் குரங்காகிப் போனதை எண்ணி பதறுகிறார்கள்.

சம்யுக்தன் அஷ்ரஃப் துரத்திச் சென்ற திருடனை பிடித்தார்களா?

கார்திருடர்கள் அகப்பட்டார்களா?

போலீஸ் இழந்த பெருமையை மீட்டார்களா?

அடுத்த நாள் காலை சம்யுக்தனுக்கு மற்றொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அது என்ன?

என்பதை படத்தைப் பார்த்து சிரிக்க சிரிக்க தெரிந்து கொள்ளலாம்.

படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

இரவு பனிரெண்டு மணிக்கு சத்தம் போட்டு சிரித்ததில் என் பையன் அருண் விழித்துக் கொண்டு என்னுடன் படம் பார்க்கத் துவங்கிவிட்டான். அவனும் விழுந்து விழுந்து சிரித்தான். என்னடா வென்றால், “அப்பா நீ சிரிக்கறதப் பாத்து தான்பா நான் சிரிக்கிறேன்” என்கிறான்.

 

 

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...