Thursday, August 25, 2016

அரசுப் பள்ளிகள் மோசம் ஆசிரியர்கள் மோசம் என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதா சமஸ்?!

நேற்றைய இந்து நாளிதழில் கல்வியாளர் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களுடனான நேர்க் காணலில் திரு.சமஸ் அவர்கள் கேட்டிருந்த இரண்டு கேள்விகளில் தென்பட்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக இதனை எழுதுகிறேன்.
தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் பெரிதாக சாதிக்கின்றன என்ற தொனியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. சாதனை என்பதற்கான அளவுகோல் எது?  மதிப்பெண்களா அல்லது மாநில அளவிலான முதல் பத்து இடங்களா?
இப்போது இருக்கும் வினாத்தாள் கட்டமைப்புகள் மாணவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை கூறிவிடுகின்றன. அது என்னவென்றால் எந்தெந்த கடினப்பகுதிகளை விலக்கி எந்தெந்த பகுதிகளைப் படித்தால் 100 விழுக்காடு பெறலாம் என்பது தான். அந்த முறையை அழகாக சுவீகரித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்து பத்து பனிரெண்டு வகுப்புகளில் 100 விழுக்காடு தேர்ச்சி என்பதோ அல்லது அதிக மதிப்பெண் என்பதோ பெரிய விஷயம் இல்லை.
 மதிப்பெண் என்ற மாய எண்களுக்கு பெற்றோர்கள் மயங்கிக் கிடக்கின்றனர். எனவேதான் இன்னமும் ஏ,பி,சி என்ற கிரேடு முறையினை நம்மால் பத்தாம் வகுப்பில் அறிமுகப்படுத்த இயலவில்லை. மேலும் உங்கள் பையன் சிறந்தவன் என்று தரப்படுத்தல் மட்டுமே பெற்றோரை திருப்திப் படுத்த போதவில்லை யாரை விடவெல்லாம் சிறந்தவன் என்ற ஒப்பீட்டு அளவுகோலுக்கு உதவியாக உள்ளதால் தான் மதிப்பெண் முறை இன்னமும் கோலேச்சிக் கொண்டு உள்ளது.
அடுத்ததாக சுமாரான உள்கட்டமைப்பு இருந்தாலும் தனியார் பள்ளிகள் சாதிக்கின்றன என்கிறார். சுமாரான உள்கட்டமைப்பை வைத்துக் கொண்டு எப்படி அங்கீகாரம் பெற்றார்கள். நல்ல உள்கட்டமைப்பு இருந்தால் தானே பள்ளி நடத்த அங்கீகாரம் உண்டு. அடுத்து சொற்ப சம்பளம் பெறும் ஆசிரியர்கள் என்றும் கூறியுள்ளார். தனியார் தங்களது இலாபம் சொற்பமாக இருக்க கூடாது என்பதற்காகத் தானே சுமாரான கட்டமைப்பையும் சொற்ப சம்பளத்தையும் அளிக்கிறார்கள்.
அருமையான உள்கட்டமைப்பும் ஆசிரியர்களுக்கான சம்பளம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை விட அதிகமாக வழங்கும் தனியார் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்கெல்லாம் பத்தாம் வகுப்பில் சாமர்த்தியமான வடிகட்டலும் பதினோறாம் வகுப்புச் சேர்க்கைக்கு 470க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 95 விழுக்காடு பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அப்படியானால் அவ்வாறு 95 விழுக்காடு பெற்று பள்ளிக்குள் சென்ற அனைத்து மாணவர்களும் அதே விழுக்காடு 12 ம் வகுப்பில் பெறுகிறார்களா, அதாவது 1140 மதிப்பெண் பெறுகிறார்களா என்றால் இல்லை. சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்துக்கு மேல் என்றால் 1100க்கு மேல் பெறுபவர்களோ சில 100 பேர்தான் என்பதை அப்பள்ளிகள் தங்கள் சாதனை என்று பரைசாற்றிக் கொள்ளும் முழுப்பக்க நாளிதழ் விளம்பரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து மாணவர்களின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் ஒப்பீட்டு அட்டவணையை எந்த தனியார் பள்ளியாவது விளம்பரப் படுத்துகிறதா என்றால் இல்லை.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் சொற்ப சம்பளத்திற்கு காரணம் அமைப்பில் உள்ள கண்காணிப்பு குறைபாடல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அசல் சான்றிதழ்களை அடமானம் வைத்துத் தான் வேலை பெறுகின்றனர். சில பள்ளிகளில் சம்பளத்திற்காக சில மாதங்கள் காத்திருக்கும் நிலை கூட உள்ளது. சம்பளத்தை நேரடியாக ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாதா மாதம் வரவு வைக்கும் வெளிபடையான முறையை அமல் படுத்தினால் தான் அவர்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். நாங்கள் பொதுத் தேர்வை மனதில் வைத்து எந்த மாணவர்களையும் வெளியேற்ற முற்படுவதில்லை. வருகை (attendance) குறைந்த மாணவர்களைக் கூட தேர்வில் விலக்கி வைக்க அனுமதியில்லை. எங்கள் அரசுப் பள்ளி பிள்ளைகள் பெரும்பாலானோர் சனி ஞாயிறுகளில் வேலைக்குச் செல்வோராக உள்ளனர். இறைவழிபாட்டில் ஓரிரு நிமிடங்கள் அதிகமாக நிற்க நேரிட்டாலே மயக்கம் போட்டு விழும் மாணவர்களும் உள்ளார்கள் ஏனென்றால் அவர்களின் காலை உணவு பழையதோ நீராகாரமோ அல்லது வெறும் தண்ணியோதான். எங்கள் ஆசிரியர்கள் அனைவருமே தற்போதெல்லாம் TET மற்றும் TRB என்ற கடினமான தேர்வு முறைகளைத் தாண்டி ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு பெற்று வந்தவர்கள். தங்கள் முழு திறமையையும் பயன் படுத்தி பாடம் எடுக்கிறார்கள். சென்ற ஆண்டில் 490க்கு மேல் பெற்ற மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் நிரம்ப உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 comments:

  1. அருமை... சுதந்திர தின விழாவில் உள்ளூர் பிரமுகர் ஒருவர் ஆசிரியர்கள் திறமையாக இல்லாததால் தேர்ச்சி குறைந்துவிட்டது என்று பேசினார்... 186 மதிப்பெண்கள் வாங்கியவனுக்கு கணிதப்பிரிவுதான் வேண்டும் என்று சிபாரிசுக்கு வந்தவர்தானே நீங்கள் என்று நான் பேசும்போது பதிலடி கொடுத்தேன்

    ReplyDelete
  2. அருமை... சுதந்திர தின விழாவில் உள்ளூர் பிரமுகர் ஒருவர் ஆசிரியர்கள் திறமையாக இல்லாததால் தேர்ச்சி குறைந்துவிட்டது என்று பேசினார்... 186 மதிப்பெண்கள் வாங்கியவனுக்கு கணிதப்பிரிவுதான் வேண்டும் என்று சிபாரிசுக்கு வந்தவர்தானே நீங்கள் என்று நான் பேசும்போது பதிலடி கொடுத்தேன்

    ReplyDelete
  3. Jayaraj sir . you rocks... Carry on..

    ReplyDelete

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...