Friday, February 9, 2018

லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….


லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….

டி.என்.பி.எஸ்ஸி தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு கேள்வி வெகு பரிச்சயமாக இருக்கும். அது ’ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னன் யார்?’ என்பது தான் அது. விடை நீரோ மன்னன். இது நான் 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது பொது அறிவு புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.
இந்த ’பிடில்’ என்கிற வார்த்தை எனக்கு அதற்கு பின் பரிச்சயமானது லால்குடி விடுதியில் தான். “யோவ் பிடில் வாசிக்காதய்யா?“ இந்த வார்த்தைகள் கேலி செய்ய பயன்படும். அப்படி எதை கேலி செய்வார்கள் என்று தெரியுமா?
பதின்ம வயது மாணவர்கள் புதிதாக ஜட்டி உடுத்த ஆரம்பித்து இருப்பார்கள். சரியாக உலர்த்தாமல் எடுத்து அணிந்து கொள்வதால் தொடை இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் கடுமையான நமைச்சல் ஏற்படும். பந்து வீச்சாளர்கள் பந்தினை பேண்டில் தேய்ப்பது போல பசங்களும் சொறிந்து கொள்வார்கள். அந்த இடங்களில் சொறிந்து கொள்வதைத்தான் ’பிடில்’ வாசிப்பது என்று லால்குடி விடுதியில் கேலியாக சொல்வார்கள்.
பிடில் வாசிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. விடுதியாக இருந்தால் எதற்கும் கவலைப்படாமல் சொறிந்து கொள்ளலாம். ஆனால் பள்ளியில் மற்ற இடங்களில்? விடுதியில் வெளிப்படையாக சொறிந்து கொள்பவர்கள் பள்ளியில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நாசூக்காக சொறிந்து கொண்டு பரவசம் அடைவார்கள். அப்போது கூட சக விடுதி நண்பர்கள் வந்து “பிடில் வாசிக்காதடா“ என்று கையை தட்டி விடுவார்கள். அந்த சமயங்களில் பாதிக்கப்பட்டோர் கொலைவெறியாகி விடுவதுண்டு.
அது மட்டுமல்லாமல் 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைவருக்குமே கை இடுக்குகளில் சொறி எனப்படும் சிறு கொப்புளங்கள் ஏற்படுவதுண்டு. அது சற்றே அதிகமாகி நன்கு பரவ ஆரம்பித்து விடும். விடுதி வாழ்க்கையில் “சொறி“யால் பாதிக்கப் படாதவர்கள் வெகு சொற்பமாகத்தான் இருப்பார்கள். காரணம் லால்குடி விடுதி நாங்கள் இருந்த போது 160 பேர் தங்க இடமளித்த விடுதி. அதில் 6முதல்8 வகுப்பு வரையில் எல்லோரும் ஒரு பெரிய ஹாலில் தான் படுத்துக் கொள்வார்கள். எனவே இதன் தாக்கம் அந்த மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
மருத்துவரிடம் சென்றால் பென்சிலின் ஊசி போட்டு தடவிக் கொள்ள மருந்தும் தருவார். அந்த மருந்து வித்தியாசமான வாசனையுடன் ரோஸ்மில்க் மாதிரி இருக்கும். விடுதியில் 6 -8 மாணவர்களிடம் தடவிக் கொள்ள தேங்காய் எண்ணை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ’ரோஸ் மில்க்’ வைத்திருப்பார்கள்.
சக மாணவர்களுக்கு வேறு பல உடல் நலக் குறைபாடுகள் வந்து விட்டால் போதும் அவனை கவனிக்கிறேன் என்கிற பேரில் “ஆகா நாம பெரிய வியாதியஸ்தர் ஆகி விட்டோமோ?” என்று அவனை மன ரீதியில் நலிவடையச் செய்து விடுவார்கள்.
அப்படித்தான் ரவிச்சந்திரன் (போன அத்தியாயத்தில் மாலதியிடம் பேசிய வீரதீரச் சிறுவன்) ஒரு முறை காய்ச்சலால் அவதிப் பட்டான். இரவு 11 மணிக்கு ஒரு நான்கு பேர் கொண்ட குழு அவனை மருத்துவ அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சாதாரணக் காய்ச்சல் தான் என்று கூறி விட்டு பாரசிடமால் மாத்திரை வழங்கி விட்டார் டூட்டியில் இருந்த நர்ஸ். ஒரு பன் டீ வாங்கி கொடுத்து அழைத்து வந்து விடுதியில் மாத்திரை சாப்பிட வைத்தோம். அவனோ ”ஊசி வேணும்னா போட்டுக்குவேன் மாத்திரை முழுங்க இயலாது” என்று சொல்கிற கேஸ். அவனை கட்டாயப் படுத்தி விழுங்க சொன்னோம். என்னவோ இமய மலையை பெயர்த்து எடுத்து வாயில் போடுவது போல பயந்து பயந்து போட்டு தண்ணீரை ஊற்றிய வேகத்தில் ”வ்வ்வா” என்று குமட்டி வெளியேற்றி விட்டான். அரசு மருத்துவமனையில் கொடுத்த மூன்று மாத்திரைகளையும் இப்படியே வீணடித்து விட்டான். “வாடா திரும்பவும் போய் ஊசி போட்டுகிட்டு வரலாம்“ என்றதற்கு  “நான் ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேங்க” என்று அப்பாவியாக சொல்வது போல “ஆள விடுங்கடா சாமி எனக்கு காய்ச்சல்லாம் இல்லடா” என்று கூறி விட்டான்.
விடியற்காலை காய்ச்சல் கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் அட்டெண்டரை எழுப்பி கூறினோம். அவர் ரயில்வே ஸ்டேஷன் நேர் எதிர் புறம் (அப்போது) புதிதாக தோன்றிய நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். காய்ச்சல் கடுமையாக இருந்த காரணத்தினால் அட்மிஷன் போட்டுவிட்டார்கள். காலையில் அவனுடைய ஊருக்கு செல்லும் பேருந்தில் பார்த்து அந்த ஊர்க் காரர்களிடம் செய்தி சொல்லி விட்டோம்.
இரவு மாத்திரையை ஒழுங்காக சாப்பிட்டு இருந்தாலே சரியாகி விட்டிருக்கும். டாக்டர் ஊசி போட்டவுடனேயே சரியாகி விட்டிருந்தது. அவனும் பழையபடி உற்சாகமாகி விட்டான். (இப்போ வாடா எத்தனை மாலதி வந்தாலும் பேசுறேன் என்கிற படி) கிட்டத்தட்ட இரண்டு சனி ஞாயிறுகள் ஊருக்கு செல்லாத காரணத்தினால் அம்மாவை பார்த்தவுடன் இவன் மெழுகாக உருகி விட்டான். மகன் ஆஸ்பிட்டல் பெட்டில் இருக்கிறான் என்கிற ஒரு விஷயம் போதாதா அம்மாக்கள் அழுது ஊரைக் கூட்ட. இரண்டு பேரும் கட்டிக் கொண்டு அழுததை பார்த்த அந்த அழகிய நர்ஸ் கூட இரண்டு சொட்டு கண்ணீரை சுண்டி விட்டெறிந்தபடி பணியை தொடர்ந்தார்.
“அம்மா டிஸ்ச்சார்ஜ் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிடலாமா அம்மா” என்று நண்பன் ராஜவேலு கேட்டான்.
“புள்ள துரும்பா எளச்சிட்டான் சாமி, ரெண்டு நாள் வச்சிருந்து குளுக்கோஸ் ஏத்திக் கிட்டு போகலாம் சாமி” என்றார் அன்பொழுக. (மக்களே இந்த காய்ச்சல் அவன் எடையில் ஒரு மில்லி கிராமை கூட பாதிக்க வில்லை என்பது தான் உண்மை. குண்டுக் கல்யாணம் கூட துரும்பாக இளைத்திருப்பதாகத்தான் அவருடைய அம்மா நினைப்பார். ஏனென்றால் அதுதான் அம்மாக்கள் சைக்காலஜி)
காலையில் எல்லோரும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி போய்விட்டோம். அழகிய நர்ஸ் பற்றிய செய்தி அதற்குள் விடுதி முழுக்க மூங்கில் காட்டு தீயாக பரவியது. கேட்ட மாத்திரத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே ரவிச்சந்திரன் மேல் பொங்கி எழுந்த பாசத்தை அடக்க முடியாமல் சிரம பட்டார்கள். அப்புறம் எல்லோரும் கூடிப் பேசி “அவன் ரெண்டு நாளைக்கு பெட்டில் இருப்பான்னு அம்மா சொல்லிட்டாங்க, அதனால நாம நான்கு நான்கு பேரா போகலாம். 11ம் வகுப்பு பசங்க வேண்டாம்பா கூட்டம் அதிகமா இருந்தா ஆஸ்பிட்டல்ல சத்தம் போடுவாங்க”  என்று முடிவு செய்தோம்.
ஆஸ்பிட்டல் போனா அங்கே வாசல் முழுக்க செருப்பாக இறைந்து கிடந்தது “ஆஹா எதோ ஒரு கேஸ் மண்டைய போட்டுருச்சு போல“ என்று நினைத்த படி உள்ளே போனோம். அங்கே ஒரு பாட்டி ஒரு பத்து பேரை நிற்க வைத்து ஒற்றை ஆளாக மறித்தபடி நின்றார். நாங்க போய் ரவிச்சந்திரனை பார்க்கணும் என்ற உடனே அவரின் கோபம் உச்சத்திற்கே போய்விட்டது. ஏன்னா பாதி கிராமமே அவனை பார்க்க திரண்டு வந்திருந்தது. அவர்களில் பாதி பேரேடுதான் அந்த பாட்டி சடுகுடு ஆடிக் கொண்டு இருந்தார்.
ஒரு வழியா அவர்களை எல்லோரையும் துரிதப்படுத்தி அனுப்பி விட்டார். ரவி அம்மாவே எங்களை வெளியே வந்து உள்ளே கூட்டிச் சென்றார். ரவி சேரில் உக்கார்ந்து கொண்டு எங்களை பெட்டில் அமரச் சொன்னான். அவனுக்கு வந்திருந்த ஆரஞ்சு ஆப்பிள் என எங்களுக்கு பரிமாறப்பட நாங்கள் உற்சாகமாக தின்று கொண்டு இருந்தோம்.
“ஏப்பா இங்க யாருப்பா பேஷண்டு? தம்பி பேஷண்டுக்கு தாம்பா பெட்டு எறங்குங்கப்பா” என்று விரட்டினார்.
நாங்க அசையவே இல்லையே. ’ஒரு காய்ச்சலுக்கு பெட்ல சேந்துகிட்டு இன்னக்கி முழுக்க டென்ஷன் பண்ணிட்டாங்களே’ என்று புலம்பிய படி பாட்டி இடம் பெயர்ந்தார்.
அந்த நர்ஸ பாக்காம அந்த இடத்தை விட்டு அசையப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
“டேய் யார்ரா அந்த பாட்டி ரொம்ப வெரட்டுது?”
“டேய் அவுங்க இன்னைக்கு டே டூட்டி நர்ஸ்” என்றான் ரவி.
“என்னது நர்ஸா?“ என்று நான்கு பேரும் கோரஸாக கேட்டபடி பெட்டில் விழுந்து மூர்ச்சையடைந்தோம்
வயதானவர்களும் நர்ஸாக இருப்பார் என்கிற உண்மையை உணர்ந்த நாள் அன்று.
இன்னும் ஒரு அத்தியாயம் இதே வகையில் உண்டு வெய்ட் பண்ணுங்க.

No comments:

Post a Comment

மலையாளக் கரையோரம் -3

மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது) பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிற...