Sunday, October 31, 2021

“இல்லம் தேடிக் கல்வி“ – நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

 


தமிழக அரசு கொண்டு வந்துள்ள இல்லம் தேடிக் கல்வி என்கிற திட்டமானது கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாண்டுகள் பாழ்பட்ட குழந்தைகளின் கல்வியை சீர் செய்ய கொண்டுவந்துள்ள ஒரு தற்காலிக ஏற்பாடு என்றே அரசு சொல்கிறது.

சரி இதனை எப்படி செயல்படுத்த போகிறது?

அந்தந்த ஊரில் தெருவில் உள்ள பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர்களை ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் டிகிரி முடித்த தன்னார்வலர்களை எட்டாம் வகுப்பு வரையில் உள்ள குழந்தைகளுக்கும் மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் டியுசன் எடுக்கச் செய்யப் போகிறார்கள்.

அவர்கள் செயல்படுத்த வேண்டிய பாடத்திட்டம் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுவினால் தொகுத்து வழங்கப் பட உள்ளது. அவர்களுக்கான பயிற்சி ஆசிரியர்களால் வழங்கப் பட உள்ளது. மேலும் அந்த வகுப்புகளை மேற்பார்வை செய்து நெறிபடுத்தப் போவது அந்தந்த ஊர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்.

இது தேவையா?

கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம் இரண்டாண்டுகள் பள்ளிக் குழந்தைகளின் கல்வியை பெரிய அளவில் பாதித்து விட்டது.

ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் பெரிய அளவில் செயல்படுத்தினாலும் அவர்களது உண்மையான நோக்கம் பெற்றோர் கட்டும் கட்டணத்திற்கு நியாயம் செய்வதாக மட்டுமே இருந்தது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆன்லைன் கல்வி திருப்தி இல்லை என்றே கூறினார்கள்.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்த அளவில் பெரிய வகுப்புகளுக்கு வாட்சாப் குழுக்கள் அமைத்து பெரும்பாலான பள்ளிகள் கல்வியை தொடர்ந்தனர். அரசு அதனை மறைமுகமாக பாராட்டினாலும் வெளிப்படையாக செயல்படுத்த எந்த ஆணையையும் வழங்க வில்லை. ஏனெனில் ஐம்பது விழுக்காடு பெற்றோரிடம் ஆண்டிராய்டு மொபைல் கிடையாது. கல்வியில் சமச்சீர் தன்மை கெடும்.

எந்தக் குழந்தைகளுக்கு அரசு கல்வி வழங்க வேண்டியது அவசியமோ அந்த குழந்தைகளின் கற்றல் தான் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளுக்கு கூடுதலாக ஏதேனும் ஒரு வடிவில் கற்பித்தலை நிகழ்த்த வேண்டியது அரசின் தலையாயக் கடமை. எனவே நிச்சயமாக இது அவசியம் தான்.

புதியக் கல்விக் கொள்கையோடு இதனை ஏன் முடிச்சு போடுகிறார்கள்?

    புதியக் கல்விக் கொள்கையில் மாணவர்களின் அடிப்படைக் கல்வி செயல்பாடுகளில் ஏற்படும் இடைவெளியை சரிசெய்ய Peer Tutoring என்கிற வடிவில் குழந்தைகளே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை ஊக்குவிக்கலாம். (சிறு சிறு குழுக்களை அமைத்து மாணவர்கள் தங்களுக்குள் இணைந்து கற்கும் முறையை நான் 2004 லேயே அமுல் படுத்தி விட்டேனாக்கும். உள்ளபடியே அது சிறப்பான உத்தி) மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள படித்த தன்னார்வலர்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கலாம். என்று கூறியுள்ளார்கள்.

அந்தந்த பகுதியில் உள்ள படித்த தன்னார்வலர்கள் என்கிற வார்த்தைகள் இரண்டிலும் பொதுவாக வந்துள்ள காரணத்தினால் இந்த சலசலப்பு ஏற்படுகிறது.

நாம் இந்த தன்னார்வலர்கள் என்கிற வார்தையை புதிய கல்விக் கொள்கை தன்னார்வலர்களோடு ஒப்பிடுவதை விடுத்து அறிவொளி இயக்கத்தை வெற்றிகரமான இயக்கமாக மாற்றிய தொண்டர்ளோடு ஒப்பிட்டு பாருங்களேன்.

தன்னார்வலர்கள் தங்கள் விரும்பும் அரசியலையோ அல்லது மதம் சார்ந்த விஷயங்களையோ பரப்பி பிள்ளைகளின் மனதில் நஞ்சை விதைத்து விடுவார்களோ என்று கி.வீரமணி அவர்கள் கூட அச்சம் தெரிவித்துள்ளாரே?

தன்னார்வலர்கள் அனைவரும் அந்தந்த பகுதி இளையோர் தான். இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளின் “அக்கா, அண்ணா, அத்தை, மாமா” தான் தன்னார்வலராக இயங்கப் போகிறார்கள்.

அவர்கள் போதிக்க வேண்டிய விஷயங்களும் உத்திகளும் அரசு அவர்களுக்கு பயிற்சிகள் வாயிலாக வழங்க உள்ளது. மேலும் அவர்களது வகுப்புகளை கண்டு நெறிபடுத்த ஆசிரியர்கள் குழுவுக்கு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளன.

இதற்கு செலவுப் பண்ணுற பணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கலாம் அல்லவா?

பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் வழக்கமாக பள்ளிக் கல்வித் துறை கண்காணித்து செயல்படுத்தி வருகிறது.

மேலும் பள்ளிக் கல்விக்கு வெளியே கூடுதலாக ஏதாவது வழங்குவதற்கான முயற்சிதானே இது?

ஆசிரியர்களிடம் ஏதேனும் ஐயம் கேட்க முனையும் குழந்தைகள் மற்ற குழந்தைகள் கேளி செய்வார்களோ என்று எண்ணியோ அல்லது கூச்ச சுபாவத்தால் தயங்கியோ கேட்காமலே விட்டுவிடுவார்கள். ஆனால் தங்களது அண்ணன்மார்களிடமும் அக்காமார்களிடமும் எந்த கூச்சமும் இன்றி நட்புறவோடு வாஞ்சையாக கற்றுக் கொள்வார்கள் இல்லையா?

ஆனா இந்த புதிய கல்விக் கொள்கை….

ஆமாம், NISHTHA என்கிற பெயரில் கொரானாவுக்கு முந்தைய ஆண்டில் தமிழகம் முழுவதும் நடத்தப் பட்ட பயிற்சியின் நோக்கம் தெரியுமா? அது முழுக்க முழுக்க புதிய கல்விக் கொள்கையின் ஷரத்துகளுக்கு ஆதரவான மனநிலையை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துவதற்கான மறைமுக ஏற்பாடே.

மாநில கருத்தாளராக நான் பயிற்சியில் கலந்து கொண்டபோது இதனை உணர்ந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு தொலைவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

இதனால் தன்னார்வலர்களுக்கு என்ன பயன்?

தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் அரசு வழங்க உள்ளது. அதோடு மட்டுமின்றி அவர்களுக்கு இது நிச்சயம் ஒரு பயனுள்ள பொழுது போக்கு.

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை புரியவைக்கும் போது ஏற்படும் திருப்தி மகத்தானது.

தற்போது போட்டித் தேர்வு எழுதும் பல இளைஞர்கள் என்னிடம் தொலைபேசியில் ஆறு முதல் பத்து வகுப்புக்கான புத்தகங்கள் கிடைக்குமா என்று வினவுவார்கள். ஏனெனில் போட்டித் தேர்வு வினாக்கள் அந்த பாடத்திட்டத்தையொட்டியே வருகிறது. ஒரு விஷயத்தை படிப்பதை விட படித்து மற்றொருவருக்கு நடத்திவிட்டோமானால் அது மறக்கவே மறக்காது. நிச்சயமாக அது அவர்களின் போட்டித் தேர்வு தயாரிப்புக்கு கை கொடுக்கும்.

மேலும் இந்த ஆண்டிராய்டு யுகம் இளைஞர்களின் ஓய்வு நேரத்தை எவ்வளவு சீரழிக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான். இந்த மாதிரியான திட்டங்களில் தன்னார்வலராக இணையும் போது அந்த நேரம் அவர்களுக்கு அந்தப் பகுதி குழந்தைகளுக்கு பொன்னான நேரமாகிவிடும்.

ஆனால் அனுபவமற்ற இந்த இளைஞர்களிடம் குழந்தைகளை எப்படி ஒப்படைப்பது?

எங்க ஊரில் நான் பத்தாம் வகுப்பு டியுசன் படித்தது டிப்ளமோ படித்த சீமான் என்ற ஆசிரியரிடம் தான். எனது ஆங்கிலப் புலமைக்கு அடித்தளம் இட்டதே அவர்தான். நான் பனிரெண்டாம் வகுப்பிலேயே கதையை தெரிந்து கொண்டு சொந்தமாக Essay எழுத டிப்ளமோ படித்த அந்த ஆசிரியர்தான் காரணம்.

எங்கள் ஊரில் மற்றொரு ஆசிரியரும் கணித டியுசன் எடுத்தார். அவர் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர் தான். அவரிடம் டியுசன் படித்த பசங்களை கணக்கில் புலி என்று ஆக்கி விடுவார்.

கற்றுக் கொடுப்பதற்கு படிப்போ அனுபவமோ தேவையில்லை. ஆர்வமும் மனப்பான்மையும் இருந்தால் போதுமானது.

அறிவொளி இயக்கம் எப்படி  எழுதப் படிக்க தெரிந்தவர்களை எல்லாம் சிறப்பான ஆசிரியராக செயல்படச் செய்து வெற்றி பெற்றதோ அப்படி இந்த இல்லம் தேடிக் கல்வி இயக்கமும் பெரிய அளவில் வெற்றி பெற்றால் பள்ளிகளில் எழுதப் படிக்கத் தெரியாத மெல்லக் கற்போர் எண்ணிக்கை மெல்லக் குறைந்து மறைந்தோடிப் போகும்.

குழந்தைகளுக்கு நிச்சயமாக பயன்தரக் கூடிய திட்டம் என்று உணர்வதால் தான் ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியராக இதனை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

குழந்தைகளின் பாதுகாப்பு….

நிச்சயமாக குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருபது குழந்தைகளை பொதுவான இடத்திலோ அல்லது கிடைக்கும் இடத்திலோ தான் வைத்து சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். குழந்தைகள் அனைவரும் நிச்சயமாக ஏதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு உறவினர்தான் எனவே அவர்களின் பாதுகாப்பில் தன்னார்வலர்கள் கூடுதல் அக்கரையாகவே இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு:

1.   தங்கள் அக்கா அண்ணன்களிடம் கற்றுக் கொள்ள அமரும்போது அச்சமோ கூச்சமோ இருக்காது.

2.   இந்த மாலை நேர வகுப்புகளை காணும் போது இடை நின்ற குழந்தைகளுக்கும் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு பள்ளி திரும்ப ஏதுவாகும்.

3.   சில குழந்தைகள் இந்த கொரோனா காலத்தில் வேலைக்கு சென்று கொண்டுள்ளார்கள். ( என்னதான் சட்ட திட்டங்கள் இருந்தாலும் இது நடந்து கொண்டுதான் உள்ளது) அவர்களையும் இது மீண்டும் உள்ளே கொண்டு வரும்.

4.   இதுவரையில் பாடம் சார்ந்த விஷயங்களில் சந்தேகம் என்றாலோ ஏதேனும் அறிவியல் கண்காட்சி போன்ற வெளி செயல்பாடுகளுக்கோ ஆசிரியர்களது வழிகாட்டல் மட்டுமே என்றிருந்த நிலை மாறி குழந்தைகள் தன்னார்வலர் ஆசிரியர்களை தொந்தரவு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

5.   குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்ய இனி கூடுதல் வழிகாட்டிகள் உள்ளனர்.

 

தன்னார்வலர்களுக்கு:

1.   இது நிச்சயமாக ஒரு பயனுள்ள பொழுது போக்கு.

2.   போட்டித் தேர்வுகளுக்கு ஆறு முதல் எட்டு வகுப்பு பாடங்களை தனியாக படிக்க வேண்டியது இல்லை

3.   குழந்தைகளுக்கு வழிகாட்டியாக செயல்படவும் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு செயலை செய்யவும் நல்லதொரு வாய்ப்பு

4.   பயனற்ற முறையில் காலத்தை வீணாக்காமல் இளைஞர்கள் நெறிபட இது ஒரு வாய்ப்பு.

5.   குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் நாம் முதலில் திருந்த வேண்டும் என்கிற குற்ற உணர்வில் கெட்ட பழக்க வழக்கங்கள் வீதிச் சண்டைகள் போன்றவைகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுவது குறையும்.

துஇல்லம் தேடிக் கல்வியை மனதார வரவேற்போம், செயலாக்கத்தில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவோம். சுட்டிக் காட்டுவதை எல்லாம் சரிசெய்து கொள்ளும் அரசு தான் இது என்பதை கண்கூடாக காண்கிறோம் இல்லையா?

து

2 comments:

  1. தன்னார்வலா்கள் என்றாலே அரசிடம் கணக்கு காட்டி காசு பார்க்கும் NGO-க்கள் என்ற எண்ணம் பொதுவாக வந்துவிடுகிறது. ஆனால் இவா்கள் அந்தந்த பகுதி இளைஞா்கள்... நிச்சயம் ஆா்வமுடன் செயல்படுவார்கள். வரவேற்கதக்க திட்டம்தான். பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்பும் இதனை தொடரலாம். மெல்லக் கற்போர் எண்ணிக்கை குறையும். ஆனால் தன்னாா்வலராக வரும் இளைஞா்கள், இதுவும் அரசு வேலைதான் எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டோம்... என்றாவது ஒருநாள் அரசு நிரந்தரமாக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் வராமல் இருந்தால் சாி்.

    ReplyDelete

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...