Saturday, June 22, 2024

அவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுப்போம்!

"நாங்க Msc அ படிக்கப்போறோம் அப்புறம் எறும மாடு மேய்க்கப் போறோம்" என்கிற வரியோடு ஒரு கானா மாதிரியான பாடல் 90 களில் பிரபலம். நான் கல்லூரி படித்த காலத்தில் ஊருக்கு வரும் போதெல்லாம் விசேஷங்களில் இந்த பாடலை அலற விடுவார்கள். சரியாக இந்த வரியை பாடி என்னை வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு. ஊரில் வேலையின்றி இருந்த பட்டம் படித்த முந்தைய தலைமுறை மற்றும் இந்தமாதிரி தற்குறித்தனமான பாடல்கள் நிறைய பேரை கல்லூரி வாசல்களை மிதிக்க விடாமல் செய்துள்ளன. எப்படியோ உயர்கல்வி குறித்த எதிர்மறை சிந்தனைகள் கிராமங்களில் வேர்விட்டு விஷச் செடியாக வளர்ந்து தொலைத்துவிடுகிறது. தற்போது உயர்கல்வி குறித்த ஏராளமான informations and success stories உண்டு. அவைகளை உரியோரிடம் சேர்த்து எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையையும் நம்பிக்கையையும் விதைக்க வேண்டும். ஒரு சம்பவம். அவர் ஒரு பிரமாதமாக படிக்கும் மாணவி. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு நல்ல மதிப்பெண்ணோடு வெளியே செல்வார் தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார் என்று எண்ணியிருந்தோம், ஆனால் கொரோனா காரணமாக தேர்வு இன்றி பத்தாம் வகுப்பு தாண்டி சென்றுவிட்டார். தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளியில் பயின்றவருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நேரம் இந்த மாணவி ஒரு நிதி உதவி பெறும் பள்ளிக்கு (aided school)சென்று விட்டார். நான் கூட அவர்களுடைய பெற்றோரை கடிந்து கொண்டேன். அரசு பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் படிக்க வைத்தால் அவர் நிச்சயமாக 7.5% ஒதுக்கீட்டில் நல்லதொரு மேற்படிப்பை தேர்வு செய்து விடுவார் என்று கூறினேன். சென்ற ஆண்டு அந்த மாணவியை பற்றி அவரது உறவினரிடம் விசாரித்த போது 550+ மதிப்பெண்ணோடு பன்னிரண்டாம் வகுப்பை தேறி இருந்தார். நிச்சயமாக பொறியியல் பிரிவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் அவர் NEET தேர்வுக்கு தயாராவதற்காக ஓராண்டு கோச்சிங் சேர்வதாக கூறியிருந்தார். எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது ஏனெனில் ரிப்பீட்டர்ஸ் கோர்ஸ் சேரும் அனைவருமே அதற்கடுத்த ஆண்டில் நல்ல மதிப்பெண்ணோடு டாக்டர் சீட் பெறுவார்கள் என்பது நிச்சயமற்ற ஒன்று. ஆனாலும் நீட் தேர்வு எழுதி மருத்துவர் ஆவது தான் தனது லட்சியம் என்று பிடிவாதமாக ஓராண்டு சிறப்பு பயிற்சிக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவரது அம்மாவுடன் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தார். அப்போது விசாரித்தால் இந்த ஆண்டு நீட்டில் மிகச்சிறப்பான ஒரு மதிப்பெண் பெற்றிருந்தார். உறுதியாக அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கென்று ஒரு லட்சியத்தை வரித்துக் கொண்டு விடாப்பிடியாக அதை நோக்கி பயணித்து வெற்றியும் பெற்றுவிட்டார். மற்றுமொரு சம்பவம்!! இன்று ஒரு மாணவனை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனது பெரியப்பாவும் பெரியம்மாவும் வந்திருந்தனர் அவனுடைய அப்பா அம்மா வேறு ஊர் இவன் தனது பெரியம்மா வீட்டில் தங்கி படிக்க இருக்கிறான். ஏற்கனவே இது போல நிறைய மாணவர்கள் உறவினர் வீட்டில் தங்கி படிப்பதற்கு என்று வந்து விட்டு அடுத்த ஆண்டுகளிலேயே வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள். அதோடு மட்டுமின்றி வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி கட்டுப்பாடு இன்றி இருப்பார்கள். படிப்பிலும் பின்தங்கி இருப்பார்கள் எனவே பள்ளியில் சேர்ப்பதற்கு நிச்சயமாக அவனுடைய பெற்றோர் வரவேண்டும் என்று கூறிவிட்டேன். இன்று மதியமே வந்தனர். "பள்ளியில் சேர்ப்பதற்காக நீங்கள் வர வேண்டாமா?! முழுவதுமாக அவர்களை நம்பி ஒப்படைத்து விடுவதா?! பள்ளியில் சேர்ப்பதுடன் மட்டுமே நின்றுவிடாமல் மாதம் ஒரு முறை வந்து ஆசிரியர்களிடம் அவனுடைய நடவடிக்கைகள் மற்றும் படிப்பு நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும்" இன்று கறாராக கூறிவிட்டேன். எனது முன்னிலையில் தனது மகனுக்கு அறிவுரை கூறுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய அம்மா பேசினார். "எப்படியாவது ஒரு பத்தாவது வரைக்குமாவது படிச்சுக்கடா நல்லது" என்றார். நான் உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். "பிள்ளைகளை நல்லா படிக்க சொல்லணும் அப்படிங்கறது நல்ல விஷயம் தான், அதுக்காக பத்தாவது முடிச்சுக்கோ என்று சொல்வதா?! ஏன் ஒரு கலெக்டராகவோ டாக்டராகவோ இன்ஜினியராகவோ வரணும் அப்படின்னு பெரிய பெரிய படிப்பு பற்றி எல்லாம் சொல்ல மாட்டீங்களா?!" என்று கடிந்து கொண்டேன். குறிப்பாக அந்த அம்மாவிடம் இந்த விஷயத்தை கூறுவதற்கு காரணம் அவனுடைய ஊரில் இருந்து எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருமே 8 அல்லது 9 ஆம் வகுப்புகளோடு படிப்பை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். சென்ற ஆண்டில் கூட ஐந்து பேர் ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாள் கூட பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் அவர்கள் ஊரிலேயே சென்று பார்த்த போது ஒரு போன் நம்பர் கூட மிச்சம் வைக்காமல் வெளியூர் சென்று விட்டதாக அருகில் இருப்பவர்கள் கூறியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு முகநூல் பதிவு போட்டு இருந்தேன். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் நன்றாக படிப்பவன் அந்த ஊர் காரன் தான். இடையில் திடீரென்று காணாமல் போய்விட்டான். நான்காண்டுகள் கழித்து மாற்று சான்றிதழ் வாங்க வந்திருந்தான் அப்போது விசாரித்த போது தான் தெரிந்தது, பைனான்ஸ் காரர்கள் இடம் அவனது பெற்றோர் கடன் வாங்கி இருந்ததற்காக கடன்காரர்கள் இவனை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம். அடிக்கடி அவர்களின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் இவனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். குடும்பத்தோடு வேறு ஊர் சென்று விட்டார்கள். இது அங்கே வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் முதலில் கூறிய மாணவியும் சரி இந்த மாணவர்களும் சரி ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இருப்பிடம் வேறு வேறு. அந்த மாணவிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காணும் அளவிற்கு விழிப்புணர்வு இருந்தது மருத்துவர் ஆவதற்கு நிச்சயமாக வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இந்த ஊரைச் சார்ந்த மாணவர்களுக்கு படிப்பின் மீது பெரிய நம்பிக்கை இல்லை படிப்பு என்னென்ன விஷயங்களை எல்லாம் சாதிக்கும் என்கிற விழிப்புணர்வும் கிடையாது. உயர் கல்விக்கு வழிகாட்டி உதவி செய்ய அரசு எவ்வாறெல்லாம் முயல்கிறது என்கிற விஷயமும் தெரியவில்லை. சென்ற ஆண்டு கூட இதே ஊரில் இருந்து பிளஸ் டூ முடித்த மாணவி தனது தம்பிகளுக்கு தாயாக இருந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கல்லூரிக் கனவே இல்லை. தனது தம்பிகளை பள்ளிக்கு கொண்டு வந்து விட வந்த போது அழைத்து கடிந்து கொண்டேன். மேலும் படிப்பதற்கு என்ன வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன, என்பதையும் நான் முதல்வன் திட்டம் பற்றியும் கூறி அனுப்பி ஏதாவது ஒரு வகையில் படிப்பை தொடர வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த "நான் முதல்வன் திட்டம்" என்பது சத்தம் இன்றி பல சாதனைகளுக்கான விதைகளை ஊன்றிக் கொண்டு உள்ளது இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் அந்த விதைகள் எல்லாம் பெரு விருச்சமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே வேளையில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு இல்லாத இது போல பின்தங்கிய மக்கள் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும் கல்வியால் உச்சம் தொட்ட சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அவர்களின் வாயாலயே இந்த பகுதிகளில் எல்லாம் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் . கனவுகளுக்கு கூட கடிவாளம் போட்டு இருக்கும் இந்த பரிதாபத்திற்குரிய மக்களின் கடிவாளங்களை எப்படியாவது தகர்க்க வேண்டும். தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சார்ந்த தகவல்கள் EMIS PORTAL ல் மிகச் சிறப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் அவுட் ஆப் ஸ்கூல் சில்ட்ரன் (OOSC) என்கிற தலைப்பில் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த டேட்டா பேஸை மாவட்ட ஆட்சியர்களும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல்களை எடுத்து ஆய்வு செய்தோமானால் எங்கள் பள்ளியை பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பழங்குடி பிரிவை சார்ந்த மாணவர்கள் மட்டுமே நிரம்ப உள்ளனர். மற்ற பிரிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று இருக்கும். ஆனால் இந்த பிரிவு மாணவர்களில் 10 பேர் வந்தால் அதில் ஒரு நான்கு பேர் கூட பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து வருவதில்லை. எனவே பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்குகளை தெளிவாக பகுத்தாய்ந்தோமானால் எந்தெந்த பகுதிகளில் இருந்து இந்த மாணவர்கள் வருகிறார்கள் என்பதை கண்டறிய இயலும். அரசு அந்தப் பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து கல்வி சார்ந்த விழிப்புணர்வுகளை வழங்க முடியும். மேலும் அந்த குடும்பங்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்ல என்ன காரணம் என்பதை அறிந்து அவர்கள் அதே ஊரில் தொடர்ந்து இருக்க ஏற்பாடு செய்ய இயலும். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக நான் முதல்வன் திட்டம் அனைத்து மாணவர்களையும் மேற்படிப்புக்கு வாஞ்சையோடு கைபிடித்து அழைத்துச் செல்லும் வேளையில் இடை நின்ற மாணவர்களை எப்படியாவது இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முயல வேண்டும். இல்லை என்றால் சில குறிப்பிட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போய்விடும். ஆகவே தகுதியானவருக்கு உதவிகள் வழங்குவது மட்டும் இல்லாமல் விழிப்புணர்வு இன்றி இருக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது ஒரு நல்ல அரசின் கடமை. எனவே தங்கள் கனவுகளுக்கு கூட கடிவாளம் இட்டுக் கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து வரும் அவர்களின் கடிவாளங்களை தகர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு உண்டு.

No comments:

Post a Comment

Hichiki - Hindi movie(2018)

Hichiki - Hindi movie(2018) Available in Netflix வழக்கமாக மாணவர் ஆசிரியர் உறவு பற்றிய படம் என்றாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அடங்காத ஒர...