Saturday, May 14, 2016

இந்த முறை சு.சமுத்திரம் அவர்களின் நூல்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி யில் (AIR&DD)வேலை பார்த்தவாறே எழுத்துலகில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை  நிலை மற்றும் அவர்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுரண்டல்களை தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் ஆவணப்படுத்தியவர். தனது 'வேரில் பழுத்த பலா' நாவலுக்காக 1990ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி நூலகத்தை திறந்து புத்தகங்களை எடுத்த போது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நூலைக் கண்டேன். முன்னுரையில் அது 'திருநங்கைகள்' வாழ்க்கைப் பற்றிய நாவல் என்று இருந்ததால் சுவாரசியம் உந்தித் தள்ளவே எடுத்து ஒரே மூச்சில் படித்தேன். தன்னுள்ளே பெண்மையை உணரும்போது   தொடங்கி அவளது இறுதி வரையில் கதை இந்தியா முழுதும் பயணித்து அரவாணிகளின் வாழ்க்கைப்பாடு ,சவால்கள்,ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் மற்றும் அவர்களுக்குள்ளான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் என விரியும்.முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கட்டுரையை விடவும் பன்மடங்கு மேலான ஆராய்ச்சி. திருநங்கைகள் பற்றி அவர்கூறியது இன்னும் என் நெஞ்சில் பசுமரத்து ஆணியாக உள்ளது. அது..' திருநங்கை என்பவள் ஆணின் உடலுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்' என்பதுதான். மேலும் கதைப்போக்கில் சிறுவனாக இருக்கும் போது 'அவன்' 'இவன்' என்றவர் திருநங்கை ஆனபின் 'அவள்''இவள்' என்பார். கதையின் இடையில் சொந்த ஊருக்கு ஆண்வேடம் தரித்து வரும்போது மறுபடியும் 'அவன்' 'இவன்' என்றே விளித்திருப்பார்.
இவரது 'கே செக்ஸ்' பற்றிய ஒரு குறுநாவலும் படித்திருக்கிறேன்.
இப்போது அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் எடுத்த புத்தகமான 'கோட்டுக்கு வெளியே' நாவல் பற்றி. விருதுநகர் பகுதியில் வாழ்ந்த நாடார் மக்களைப்பற்றிய களம். கதை அறுபதுகளின் காலகட்டத்தில் நடப்பதாக தெரிகிறது. நேர்மை , துணிவு மற்றும் சுயமரியாதை மிகுந்த கிராமத்து ஏழை நாடார் (பனையேரி) பெண் உதயம்மா. ஒவ்வொரு இனத்தினுள்ளும் ஏழை பணக்காரர் இடையேயான intra caste  untouchability பற்றி கதை உரக்கப் பேசுகிறது. மாரிமுத்து எனும் பணக்கார நாடார் தனது அவலட்சணமான முதிர்கன்னி மகள் சரோஜாவை கரையேற்ற உதயம்மாவைக்காட்டி மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றுகிறார். இதனை அறிந்த உதயம்மா சரோஜாவுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகளை எண்ணி மாப்பிள்ளையை பார்த்து உண்மையை கூறி சமாதானம் செய்து சரோஜாவையே மணம் புரிய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். ஆனால் திருமணம் நின்றுவிடவே அதற்கு காரணமான உதயம்மாவை ஒழித்துக்கட்ட எண்ணுகிறார் மாரிமுத்து நாடார். அதை எவ்வாறு துணிவோடு உதயம்மா எதிர்கொள்கிறாள் என்பதே கதை.
கடைசி சில அத்தியாயங்களை கடந்த போது கட்டுப்பாடின்றி என் கண்களில் நீர் தாரை பெருக்கெடுத்தது. கடைசியாக கதை புரட்சிகர இனிய திருப்பமெடுத்து  தலித் மக்களின் உணர்வுகளைப் பேசி முடிகிறது. இந்த புத்தகம் நூலகத்திற்கு வந்து பல ஆண்டுகள் ஆயினும் நான்தான் முதலில் எடுத்தது. 

No comments:

Post a Comment

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...