Wednesday, September 4, 2019

ஆசிரியர் தின சிறப்பு பதிவு – செப்.-5, 2019



முந்தைய ஆண்டுகளில் எனது ஆசிரியர்களில் நான் கண்டு வியந்த நல்லாசிரியர்களைப் பற்றி பதிவுகள் எழுதினேன்.
இந்த ஆண்டு பொதுவான சில கருத்துக்களைக் கூறி வாழ்த்தினை பதிவு செய்ய விழைகிறேன்.
பாடங்களைக் காட்டிலும் மாணவர்களின் மனதினில் நல்லொழுக்கங்களை விதையுங்கள்.

நாம் பின்பற்றாத ஒரு நல்லொழுக்கத்தை நம்மால் நிச்சயமாக முழு மனதோடு போதிக்க இயலாது. (மது அருந்தும் ஆசிரியரால் “மது அருந்துதல் கேடு விளைவிக்கும்“ என முழு மனதோடு போதிக்க இயலுமா?).

வருடந்தோறும் ஒரே டெம்ப்ளேட்டில் பாடத்தை போதிக்க முயல்வது தினந்தோறும் காலையில் உப்புமா சாப்பிடுவது போல. அது நமக்கே போரடித்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்திக் கொள்வோம்.
நாம் கடினம் என நினைக்கும் பாடப்பகுதி நிச்சயமாக மாணவர்களுக்கு வேப்பங்காய் தான். எனவே பாடத்தின் அனைத்துப் பகுதிகளும் மிக எளிது என எண்ணம் வரும் வரை தொடர்ந்து பயிற்சி செய்வோம். பின்பு மாணவர்களின் மனதில் ஏற்ற முயற்சி செய்வோம்.

“மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதீர்கள்” என்பது போல பாடம் நடத்தும் போது தேர்வினை நினைக்காதிருப்போம். அதுவே பாடங்களை உற்சாகத்தோடும் பரவசத்தோடும் நடத்த உதவும்.

முடிந்தவரையில் அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவதை தவிர்ப்போமாக. நாம் வகுப்பறையில் இருக்கும் நேரங்களில் அனைத்து மாணவர்களின் கண்களையும் அரை நிமிடத்திற்கு ஒரு முறையாவது சந்தித்து விடுவது நல்லது.

மாணவர்களின் கண்களின் மொழி அறிவோம். அதில் “ஒண்ணும் புரியல சார்“, ”காலையில் சாப்பிடவே இல்லை சார்”, “வீட்டில் பிரச்சனை சார்”, இந்த மாதிரி பல விஷயங்கள் காணக் கிடைக்கும். அது நமது வகுப்பு ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

பசித்திருக்கும் மாணவனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தருவதிலோ, மாணவர்களை உற்சாகமூட்ட சிறு பரிசுகள் வாங்கித் தருவதிலோ நமது மாதாந்திர பட்ஜெட் ஒன்றும் தள்ளாடிப் போகாது என்பதை நினைவில் வைப்போம்.

நம்முடைய ஒரு நாள் விடுப்பு என்பது நம்மைப் பொறுத்தவரை ஒன்றுதான். அப்படியே மாணவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் எத்தனை நாள் தெரியுமா? அப்படியே நமது வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையால் பெருக்கிக் கொள்வோமானால் பிரம்மாண்டம். இப்போது புரிகிறதல்லவா நமது உயரம்.


எனவே வீணாகிப் போகும் தற்செயல் விடுப்பினால் ஒன்றும் நட்டமாகிப் போகப் போவதில்லை. அவசியம் இன்றி விடுப்பு எடுப்பதை தவிர்ப்போமாக.

மாணவர்களை கண்டிக்கலாம் தேவைப்பட்டால் தண்டிக்கலாம் ஆனால் ஒருபோதும் வெறுக்காதிருக்க பழகுவோம். ஏனென்றால் அவர்கள் இன்னும் பக்குவமடையாத சிறார்கள்.

மாணவர்கள் மனதில் எப்போதும் பாலின சமத்துவத்தை விதைப்போமாக. ( ஆண்கள் மேல் பெண்கள் கீழ் என்கிற எண்ணமே எழாவண்ணம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விழிப்புணர்வு கொடுப்போமாக)

கடைசி மாணவனை கடைதேற்றும் முயற்சியில் மீத்திற மாணவனை அறிவுப் பட்டினி போடாமல் பேலன்ஸ் செய்து நடந்து கொள்ளும் சாகச வித்தையை கைக்கொள்வோமாக.

தன் சுத்தம், சுற்றுச் சூழல் அக்கரை, மரம் வளர்ப்பு என்பன போன்ற விஷயங்களையும் நாம் தான் சொல்லித் தர வேண்டும். “இது என் ஏரியா இல்ல“ என்று ஒதுங்கி இருத்தலாகாது.

“உழைப்பாளியின் வியர்வை காயும் முன் கூலி கொடுக்க வேண்டும்” என்பது போல தேர்வு முடிந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் விடைத்தாட்களை திருத்தி வழங்க முயல்வோம்.

மாணவர்களை அடித்த பின்போ அல்லது திட்டிய பின்போ அரவணைக்க ஈகோ பார்க்க வேண்டாம். சம்மந்தப் பட்ட மாணவன் சமாதானமாகிவிட்டதை உறுதி செய்து கொள்வோம். ஏனென்றால் இப்போதெல்லாம் மாணவர்கள் “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்க குழைபவன் மாணவன்” என்றாகி விட்டிருக்கும் காலம்.

”நல்லாசிரியர் என்று தனியாக எவரும் இல்லை, ஆசிரியர் என்றாலே நல்லவர் தான்” என்ற வார்த்தைகளை சமூகத்தில் நிலைநிறுத்த உறுதியேற்போம்.

அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...