Thursday, July 26, 2018


அந்தமான் நாயக்கர்- கி.இராஜநாராயணன்
கோபல்ல கிராமம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் என்ற வெகு பிரபலமான கரிசல் காட்டு எழுத்துக்கு சொந்தக் காரரான கி.இரா அவர்கள் எழுதிய மற்றுமொரு நாவல்தான் அந்தமான் நாயக்கர்.
கோபல்ல புரத்து மக்கள் நாவலின் இரண்டாம் பாகத்தில் சுதந்திரப் போராட்ட பிண்ணனியில் அந்த கிராம மக்களின் எண்ண ஓட்டத்தை பதிவு செய்திருப்பார். அதுபோல மற்றுமொரு தேசபக்தி சார்ந்த படைப்புதான் இதுவும். இதிலும் “கோட்டிக்காரப்பயல், கும்பா, மாட்டுக்கு கூளம் போடணும்,“டங்கா“ முறிச்சி தப்ப முயன்றான், போனாப் போறான் பிசிக்கி” போன்ற கரிசல் காட்டு சொலவடைகளும் அவருக்கே உரித்தான செவி வழி கேட்ட கதைகளும் கதையோட்டத்தில் செம்புலப் பெயல் நீர் போல கலந்து இருக்கிறது.
அழகிரி என்கிற சிறுவன் மரத்தின் நுனிக் கொம்பில் ஏரி இந்திய தேசியக் கொடியை கட்டிவிடுகிறான். அவன் குடும்பம் அண்டிப் பிழைக்கும் பெரிய குடும்பத் தலைவர் “பட்டா மணியம் நாயக்கர்“ ஆங்கிலேயரிடம் அவனை காட்டிக் கொடுத்து தண்டனை பெற்று தருகிறார். ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறைக்கு சென்ற அழகிரி தப்ப முயன்றதால் தண்டனை இரட்டிப்பாகிவிடுகிறது. சுதந்திரம் பெற்று பதினைந்து ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறார் முதியவர் அழகிரி “அந்தமான் நாயக்கராக“. அவர் சிறையில் கழித்த ஐம்பது ஆண்டுகளில் அவரது காதலி குடும்பம் வீடு மற்றும் அவரை சிறைக்கு அனுப்பிய “பட்டா மணியம் நாயக்கர்“ குடும்பம் உள்ளிட்ட யாருமே ஊரில் இல்லை.
சிறை சென்று திரும்பிய அந்தமான் நாயக்கர் தனது நிலத்தில் விவசாயம் செய்கிறார். விவசாயப் பயிருக்கு நல்ல விலை கிடைக்க வில்லை. அரசாங்க அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் சுரண்டல் இவற்றுக்கு எதிராக போராட்டம் வெடிக்கிறது. போராட்டத்தில்  நடந்த தடியடியில் அடிபட்டு இறக்கிறார் அந்தமான் நாயக்கர் என்பதோடு கதை முடிகிறது.
முன்னுரையில் இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை என்கிறார். ஆனால் சினிமாவுக்கான கவர்ச்சியான அம்சம் எதுவும் இல்லை. ஒருவேளை படமாக எடுக்கப் பட்டிருந்தால் தோல்வியடைந்திருக்க வாய்ப்பு உண்டு.
கதைக்குள் பின்னப்பட்ட “விரலக்கா“ கதை துரோகம் தோய்ந்த துயரம். நல்லதொரு வாசிப்பு அனுபவம்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...