Monday, August 14, 2023

NEET க்கு அப்புறம் NEXT பராக் பராக்

 



1. தகுதி டா திறமடா மெரிட்டு டா நீட்டுடா... 


நீட் தேர்வு தகுதி திறமை என்று ஒரு கேசத்தையும் வளர்க்கல. மருத்துவ கல்லூரி இடங்களின் எண்ணிக்கை குறைவாய் இருக்கு தகுதியான மாணவர் எண்ணிக்கை அதிகம். அதனால உயர்நிலை கட் ஆப் உள்ளவங்க மட்டுமே மெடிக்கல் சீட் வாங்க முடிந்தது.


 அனைத்து பிரிவு மாணவர்களுமே நூற்று தொண்ணூறு க்கு மேல் கட் ஆப் எடுத்திருந்தால் மட்டுமே இடம் கிடைத்தது.


 ஆக ஏற்கனவே படித்தவன் எல்லாம் திறமை இல்லாதவன் இல்ல.


 நீ படிக்க போற ஸ்கூல்ல அவன் ஏற்கனவே ஹெட் மாஸ்டர் டா டுபுக்கு!!


ஆச்சுவலா ஆசைப்படுற எல்லாரையும் படிக்க வைக்க வழிவகை செய்யணும் ஆனா இதயத்தில் இடம் இருக்கிற அளவுக்கு காலேஜ்ல இடமில்லை அதனால் தான் +2 மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் என்கிற ஒரு அளவுகோல்.


2. பிரதர் கோவப்படாதீங்க நீட் புத்தி கூர்மைய சோதிக்குது இல்லையா?!


ஒரு புடலங்காயவும் சோதிக்கல ஏழைகளை மிக கவனமா ஃபில்டர் பண்ணுது ஏற்கனவே பிளஸ் 2 பரிச்சை எல்லா கூர்மையும் சோதிச்சு தானே அனுப்பியது?!


3. கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற ஏழை பசங்க நீட்டு வந்த பின்னர் தானே டாக்டராக முடியுது?


இதெல்லாம் எவனாவது துக்ளக் படிச்சவன் கிட்ட போய் சொல்லு.


 கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற ஏழை பசங்க டாக்டராக காரணம் 7.5 சத இட ஒதுக்கீடு.


 இதை பழைய பிளஸ் 2 மதிப்பெண் முறையிலேயே அமல்படுத்தி இருக்கணும்.


 நீட்டை ஏழை பங்காளன் என்று ஏமாற்ற செய்த ஜோடனை அது.


 இப்போ அதுக்கும் ஆப்பு வந்தாச்சு 7.5% ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு வந்தவன் பெரும்பாலும் ரிப்பீட்டர்ஸ்.


 அதாவது ஒரு வருடம்/ ரெண்டு வருடம் கோச்சிங் சென்டருக்கு போய் அவங்களால முடிஞ்ச அளவுக்கு மொய் எழுதியவர்கள். அதாவது தனியார் கோச்சிங் போக முடிந்த அரசு பள்ளி மாணவர்கள்!!


மத்தவங்க இனிமே அந்த ரூட்லயும்(7.5%) போக முடியாது ஆக நீட் ஏழைகளுக்கு முற்றிலும் எதிரானது தான்


4. பாருங்க பாஸ் எல்லாத்தையும் குற்றம் சொல்லாதீங்க நீட் வந்த பின்ன தனியார் கல்லூரிகள் சம்பாதிக்க முடியல தெரியுமா?!


அப்படி யார் சொன்னாங்க பாஸ்?!

 400 எடுத்த புள்ளயோட கனவு பொசங்கி அதனால செத்துப் போயிட்டான்.


 ஆனால் 160 எடுத்த அவனோட பணக்கார நண்பன் வருஷம் 25 லட்சம் கட்டி டாக்டருக்கு படிக்கிறான்.


 அவனே சொல்றான் I don't deserve this னு. அந்தப் பையன் நீட் பரிட்சையில் வாங்கிய 160 என்பது 35 விழுக்காடு கூட இல்லையே!!


 அப்புறம் எங்க போச்சு இவங்க மெரிட்டு தகுதி எல்லாம்!!


 உங்க ஏழைப் பங்காளன் வேஷமும் உங்க மெரிட் கோஷமும் இந்த ஒரு பாயிண்ட்லயே பல் இலிக்குதே  பாஸ்!!


5. ஏம்பா நீங்க எல்லாரும் நீட்டே தான் எதிர்ப்பீர்களா இந்த ஐஐடி ஜேஇஇ ய எல்லாம் எதிர்க்க மாட்டீங்களா?


என்னோட  இன்ஜினியரிங் அல்லது பி டெக் கனவு ஐஐடில போனா அண்ணா யுனிவர்சிட்டி இருக்கு ஆனா டாக்டர் கனவுக்கு மொத்தமால்ல ஆப்பு வச்சிட்டீங்க


6. அப்படின்னா இன்ஜினியரிங்க்கும் ஒரு நீட் மாதிரி தேர்வு வச்சா?


வையேன், வச்சு தான் பாரேன்!! அத்தனை தனியார் இன்ஜினியரிங் காலேஜ் ஓனரும் பால்டாயில் குடிச்சிடுவான் நீ கொலை கேஸில் உள்ள போயிடுவ ஜாக்கிரதை!!


ஏற்கனவே +2 மேத்ஸ் குரூப் படிக்கிற மாணவர் எண்ணிக்கையை காட்டிலும் தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகம், அதனால எமிஸ் டேட்டா பேஸ்ல இருக்கிற பசங்க நம்பரை உருவி போன் போட்டு "வாங்கய்யா வந்து சேருங்கையான்னு"  கொலையா கொல்றாய்ங்க.


 பல கல்லூரிகள் சேர்க்கப்பட்ட எஸ்சி எஸ்டி மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி உதவித்தொகையை கொண்டு தான் உயிர் வாழுது.

 ஆனால் நீட்டால எங்க பிள்ளைங்க பலரோட உயிர் போகுது!!


7. என்னய்யா நீ தேவையில்லாம பழி போடுற படிச்சா டாக்டருக்கே தான் படிக்கணுமா வேற படிப்பு படிக்க வேண்டியது தானே?


வாடி பார்த்தசாரதி,  அப்போ காசு இல்லாதவங்க படிக்காதீங்கன்னு சொல்ல வரீங்க அதானே?


பையன் வரான் படிக்கிறான் பிளஸ் டூ மதிப்பெண் எடுக்கிறான் டாக்டர் ஆகிறான் எவ்வளவு சிம்பிளா இருக்கு?!


ஆனா உங்க சிஸ்டம்ல பையன் வரான் 10, 11& 12 என்று 3 வருஷமா பாட புத்தகத்தை கூட படிக்காமல் நீட் ஃபவுண்டேஷன், லிண்டல் & ரூஃப் ன்னு படிக்கிறான் நீட் பாஸ் ஆகுறான் ஆனா கவர்ன்மென்ட் காலேஜ் கிடைக்கல, மறுபடியும் கோச்சிங் போறான் நீட் எழுதுறான் சீட் கிடைக்கல மறுபடியும்  கோச்சிங் போறான் நீட் எழுதுறான் சீட் கிடைக்கல ரிப்பீட்டு முடியல தலைவரே!!


துடிப்பான இந்த இளமை பருவத்தில் அவன தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறீங்களே நீங்க நல்லா இருப்பீங்களா?!


 பிரைவேட் கோச்சிங் தனியார் பள்ளிகளோடு இணைந்த கோச்சிங்னு அவன சுத்த விட்டு சுத்த விட்டு பணம் கறக்குறீங்க!!


பிரைவேட் கோச்சிங் எங்க மிடில் கிளாஸ் சொத்தை அப்படியே வழிச்சு சுரண்டி கொழுக்க இந்த நீட் உதவி செய்யுதே ஒழிய வேற எந்த கூந்தலையும் பிளக் பண்ணல.


ஆஹா இது கொள்ளை லாபம் கொட்டும் கொழுத்த மார்க்கெட்டா இருக்கேன்னு தானே இப்போ NEXT ம் கொண்டு வரீங்க?!


ஏண்டா,  டாக்டர் ஆகணும்னு நினைச்சது ஒரு குத்தமாடா அரணா கயிறு உட்பட எல்லாத்தையும் உருவுறீங்களேடா!!


8. அப்படின்னா திறமையான டாக்டர்கள் உங்களுக்கு வேணாம் அப்படித்தானே?


இதை மட்டும் இப்ப டாக்டரா இருக்கவங்க கேட்டா உன்ன டவுசர அவுத்து ஓட விட்டு ஒதைப்பாங்க.


ஆமா பேசாம நீட்ல எம்பிபிஎஸ் சிலபஸ் வச்சுட்டா அவன் வரும்போதே டாக்டரா உள்ள வருவான்ல!!


பணத்தால வாய்ப்புகளை தட்டி பறிக்காதீங்க!

 பசங்களோட இளமை பருவத்தை பொசுக்காதிங்க!!


 வாய்ப்புகளை பரவலா எல்லோருக்கும் கொடுத்தா அவன் படிச்சு தன்னோட திறமையை வளர்த்துக்குவான்.


 வாய்ப்பே கொடுக்காமல் கதவடைச்சிட்டா அவன் எப்படி திறமையை வளர்த்துகிறது?!! 


சொல்லுங்க நியாயமாரே!! 

Tuesday, August 8, 2023

நான் முதல்வன்" சாதித்ததும் சாதிக்கப்போவதும் என்ன?

 


இப்பொழுது பள்ளிக்கல்வித்துறை அரங்கேற்றி வரும் பல திட்டங்கள் இந்த மாதிரி தான் எல்லோரையும் பொறாமை கொள்ள செய்கிறது அடடா இந்த சமயத்தில் நாம படிச்சு இருந்திருக்கலாமே என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை


" சார் ஒரு அவசர மெயில் வந்துள்ளது"

என்னவாம்

" துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பை தகுதியாக கொண்ட  ஐ டி ஐ  பாடப் பிரிவுகளில் கூடுதல் இடம் எதுவும் தேவையா? அவ்வாறு தேவை எனில் எண்ணிக்கையை குறிப்பிட சொல்லியிருந்தார்கள்"


பசங்கள இன்னும் குண்டு கட்டா தூக்கி கொண்டு போய் தான் காலேஜ்ல சேர்க்கல கிட்டத்தட்ட அந்த அளவுக்கு எல்லா வேலையும் செஞ்சாச்சு.


சென்ற ஆண்டில் நான் முதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது அப்போது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியிலோ அல்லது பாலிடெக்னிக்கில் சேராத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை வரவழைத்து மேற்படிப்பு செல்வதற்கு தேவையான ஊக்கமூட்டி கல்லூரியில் சேர்த்து விட்டார்கள்.


 தற்போது பள்ளி அளவில் சேகரிக்கப்படும் தகவல்கள் என்பது மிகப் பெரிய ஒரு பெருங்கடல் போல ஏராளமான தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது. அதிலிருந்து யார் யார் எந்த விதமான சமூகப் பொருளாதார சூழலில் இருந்து வருகிறார்கள் அவர்கள் தேர்ச்சி பெற்றார்களா? கல்லூரியில் சேர்ந்தார்களா என்பதை எல்லாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து தனியாக பிரித்து எடுத்து விட முடிகிறது.


 சென்ற ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வாக்கில்  மாவட்ட வாரியாக கல்லூரியில் சேராத மாணவர்களை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமர வைத்து கல்லூரி சேராததற்கான காரணத்தையும் அவர்களுக்கான பொருளாதார சிக்கலையும் ஆய்வு செய்து எந்த சூழலிலும் அவர்கள் படிப்பை தொடர ஆதரவை நல்கினார்கள்.


இந்த வருடம் என்ன செய்கிறார்கள் பரிச்சை சமயத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்கிற ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனை வெடித்தது.


 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்த படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்பதை பள்ளியின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய இருந்தது.


 மேலும் தேர்ச்சி பெறாத அல்லது தேர்வு எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு பள்ளி மேலாண்மை குழு மூலமாக பள்ளிக்கு வரவழைத்து அவர்களை துணை தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டது.


 அவ்வாறு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்களா? தோல்வியுற்றார்களா என்பதை கண்காணித்து தேர்ச்சி பெற்றிருந்தால் அதற்கேற்ப மேற்படிப்பு அல்லது தோல்வியேற்று இருந்தால் அந்த தகுதிக்கு உரிய ஐடிஐ சார்ந்த தொழில்திறன் படிப்புகள் சேர ஊக்குவிக்கப்பட்டனர்.


 ஆக எந்த ஒரு மாணவனும் தேர்ச்சி அடைந்தானோ இல்லையோ வீட்டில் சும்மா அமர்ந்திருக்க அரசு அனுமதிக்கவில்லை.

. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் படித்தோ அல்லது தொழிலோ கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது "Idle mind devils workshop" என்பார்கள் அல்லவா தற்போது டெவில்ஸ் ஒர்க் ஷாப்பை இழுத்து மூடி சீல் வைத்தாயிற்று.


தொலைநோக்கு அடிப்படையில் இந்த திட்டத்தை பார்த்தோமானால் எதிர்காலத்தில் இந்த காலகட்டத்தில் படித்த மாணவர் எவரும் சும்மா ஊர் சுற்றி வருவதோ அல்லது பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருவதோ என்று இல்லாமல் தங்களால் இயன்ற அளவுக்கு குடும்பத்துக்கு பொருளாதார அனுகூலம் செய்யும் அளவுக்கு அவர்களை சொந்த காலில் நிற்க வைத்துள்ளோம்.


அது மட்டுமா சென்ற ஆண்டு நீட் ஜெஇஇ உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க ஆசிரியர்கள் ஊக்கமூட்டியதோடு அல்லாமல் அவர்களுக்கு அரசு சார்பில் நிதியளித்து  பள்ளி மூலமாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தார்கள்.


நான் முதல்வன் திட்டம் என்கிற திட்டத்தின் மூலம்தான் மேற்காணும் அனைத்து செயல்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


 இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல ஒரு அருமையான திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதாவது UPSC தேர்வு எழுதும் ஆர்வமுள்ள மீத்திறம் வாய்ந்த கிராமப்புற ஏழை  மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை.


 அதுபோன்ற மாணவர்கள் மாதம் 7500 உதவித் தொகையோடு பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பினை வழங்குகிறது இந்த திட்டம். உள்ளபடியே எனக்கு நான் படித்த போதெல்லாம் இந்த மாதிரி திட்டம் இல்லையே என்று பொறாமை கொள்ள வைத்தது இந்த திட்டம்.


ஆக அரசு தனது கட்டமைப்பை முழுவதுமாக பயன்படுத்தி வாய்ப்புகளை பரவலாக்கி அனைவருக்கும் வழங்குவதோடு அல்லாமல் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் முன் நின்று உதவி செய்து வருகிறது.


மேற்படிப்பு மற்றும் வேலை வழிகாட்டி ஆசிரியர் என்று அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தோறும் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற அளவுக்கு கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது


குறிப்பு:  நான் முதல்வன் என்கிற பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற அளவுக்கு ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை முழுவதும் அழுத்தத்தை கொடுத்தது இந்த திட்டம்.


என்றாலும் கூட அதனால் விளைகின்ற நன்மையை கருத்தில் கொண்டு  பார்த்தால் பெரிய அளவுக்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது.

Jayaraj Muthuvel

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...