Monday, February 12, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? How to apply for NEET exam?


நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
How to apply for NEET exam?


எதற்காக நீட்?
இந்த மானங்கெட்ட பயலுவ எவ்வளவு சொல்லியும் கேக்காம படிக்காத பாடத்தில் கேள்வி கேட்டுத்தான் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களை நிரப்புவோம்னு ஒத்த கால்ல நிக்கிறானுவ.
ஆகையால் நம்ம மாநில பாடத்திட்ட குழந்தைகளும் இந்த எழவெடுத்த பரிச்சைய எழுதித்தான் டாக்டர் கனவ நனவாக்கனும்.
“நீ யார்ரா கோமாளி எங்க மாநில மருத்துவ கல்லூரியில சீட்ட நிரப்ப வர்ர?” அப்படின்னு கேக்குற அளவுக்கு வலிமையான அரசு இல்லாத காரணத்தினால் வந்த கேடு.
தகுதி?!
படிப்புன்னா குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயாலஜி குருப் இல்லன்னா ப்யுர் சயின்ஸ் குருப்.
வயது?
07-05-1993க்கும் 1-01-2002க்கும் இடையில் பிறந்தவர்கள் எஸ்ஸி எஸ்டியாக இருந்தால் 7-05-1988 க்கும் 01-01-2002 இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மதிப்பெண் தகுதி எதாவது?!
ஆம் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் என்றால் 45 விழுக்காடு
எஸ்ஸி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் எனில் 40 விழுக்காடு குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்குறிய இணையதள முகவரிக்கான இணைப்பை கீழே தந்துள்ளேன்.
ஆமாம் இதுக்கு என்னா செலவு ஆகும்?
எஸ்ஸி எஸ்டி பிரிவினர் என்றால் 750 ரூபாய் இதர பிரிவினருக்கு 1400 ரூபாய்
எப்போ விண்ணப்பிக்கனும் எப்போ பரிச்சைன்னு கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?
08-02-2018 முதல் 09-03-2018 அன்று நள்ளிரவு 11.50 வரையில் விண்ணப்பங்களை ஆன்லைனில் நிரப்பி மேலேற்றம் செய்ய வேண்டும்.
பணம் செலுத்த 10-03-2018 நள்ளிரவு 11.50 வரையில் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும். உரிய இணையதளத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்வு 06.05.2018 அன்று நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்னர் என்னவெல்லாம் வைத்திருக்க இருக்க வேண்டும்?!
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு ஆதார் கார்டிலும் பெயர் பிறந்த தேதி மற்றும் இன்ன பிற விவரங்களும் பிழையின்றி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆதார் சென்டர்களில் சென்று அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஸ்கேன் செய்து 100 kb அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் (கம்ப்யுட்டர் சென்டரில் செய்பவர்களுக்கு அவர்களே ஸ்கேன் செய்து அட்ஜஸ்ட் செய்து விடுவார்கள்). கையெழுத்தினை போட்டு அதையும் ஸ்கேன் செய்து 25 kbக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயமாக போன் நம்பர் இருக்க வேண்டும். ஒரே வீட்டில் இருவர் அப்ளை செய்தால் இருவருக்கும் தனித்தனி போன் நம்பர்களை வழங்க வேண்டும். (இப்போ ஸ்காலர்ஷிப் வெப்சைட்டிலும் இப்படித்தான் கேட்கிறார்கள். ஒரு வீட்டில் 3பேர் உதவித்தொகை வாங்கினால் 3 பேருக்கும் தனித்தனி போன் நம்பர் வேண்டும் என்கிறார்கள்)
அப்புறம் இ-மெயில் ஐடி ஒன்று கொடுக்க வேண்டும்.
பணம் எப்படிங்க கட்டறது?!
பணமும் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும். ஏடிஎம் கார்டு, நெட்பேங்கிங் அல்லது இ-வாலட் (ஏர்டெல்மணி, வோடபோனோட எம் பைசா அல்லது பேடி எம் போன்றவை) இவை மூலம் செலுத்த வேண்டும். கம்ப்யுட்டர் சென்டரில் அப்ளை செய்தால் அவர்களே செலுத்தி விட்டு உங்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.
தேர்வு மையங்கள் எங்கெல்லாம் உள்ளது?
12 தேர்வு மையங்கள்.
1.சென்னை 2. காஞ்சிபுரம்    3.கோயம்புத்தூர் 4.கம்பம்   5.மதுரை  
6.நாமக்கல் 7.ரங்காரெட்டி (இந்த ஊர் எங்கேயாவது கேள்வி பட்டிருக்கிறீர்களா?)     8.திருவள்ளுர்    9,சேலம்   10. திருச்சி
11.திருநெல்வேலி 12.வேலூர்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு மையம் வச்சா கொறஞ்சா போயுடும்?!
அம்புட்டுதாங்க விஷயம்.
இதுக்கு மேல பரிச்சை அன்னிக்கு நம்ம டவுசர அவுப்பாய்ங்களா? சட்டைய கிழிப்பாய்ங்களா? கோமணம் கட்டிக்கிட்டு வரச்சொல்லுவாய்ங்களான்னு எங்கிட்ட கேக்காதீங்க. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது சொல்லிபுட்டேன் ஆமாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இணைப்பு https://cbseneet.nic.in/cbseneet/Registration/Newreg.aspx
விண்ணப்பித்தல் தொடர்புடைய விவரங்கள் அடங்கிய இணைப்பு
தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல்

  

Friday, February 9, 2018

லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….


லால்குடி டேஸ்-24 ஆஸ் அயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்….

டி.என்.பி.எஸ்ஸி தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு கேள்வி வெகு பரிச்சயமாக இருக்கும். அது ’ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னன் யார்?’ என்பது தான் அது. விடை நீரோ மன்னன். இது நான் 9ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது பொது அறிவு புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.
இந்த ’பிடில்’ என்கிற வார்த்தை எனக்கு அதற்கு பின் பரிச்சயமானது லால்குடி விடுதியில் தான். “யோவ் பிடில் வாசிக்காதய்யா?“ இந்த வார்த்தைகள் கேலி செய்ய பயன்படும். அப்படி எதை கேலி செய்வார்கள் என்று தெரியுமா?
பதின்ம வயது மாணவர்கள் புதிதாக ஜட்டி உடுத்த ஆரம்பித்து இருப்பார்கள். சரியாக உலர்த்தாமல் எடுத்து அணிந்து கொள்வதால் தொடை இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அந்த இடங்களில் கடுமையான நமைச்சல் ஏற்படும். பந்து வீச்சாளர்கள் பந்தினை பேண்டில் தேய்ப்பது போல பசங்களும் சொறிந்து கொள்வார்கள். அந்த இடங்களில் சொறிந்து கொள்வதைத்தான் ’பிடில்’ வாசிப்பது என்று லால்குடி விடுதியில் கேலியாக சொல்வார்கள்.
பிடில் வாசிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. விடுதியாக இருந்தால் எதற்கும் கவலைப்படாமல் சொறிந்து கொள்ளலாம். ஆனால் பள்ளியில் மற்ற இடங்களில்? விடுதியில் வெளிப்படையாக சொறிந்து கொள்பவர்கள் பள்ளியில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நாசூக்காக சொறிந்து கொண்டு பரவசம் அடைவார்கள். அப்போது கூட சக விடுதி நண்பர்கள் வந்து “பிடில் வாசிக்காதடா“ என்று கையை தட்டி விடுவார்கள். அந்த சமயங்களில் பாதிக்கப்பட்டோர் கொலைவெறியாகி விடுவதுண்டு.
அது மட்டுமல்லாமல் 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைவருக்குமே கை இடுக்குகளில் சொறி எனப்படும் சிறு கொப்புளங்கள் ஏற்படுவதுண்டு. அது சற்றே அதிகமாகி நன்கு பரவ ஆரம்பித்து விடும். விடுதி வாழ்க்கையில் “சொறி“யால் பாதிக்கப் படாதவர்கள் வெகு சொற்பமாகத்தான் இருப்பார்கள். காரணம் லால்குடி விடுதி நாங்கள் இருந்த போது 160 பேர் தங்க இடமளித்த விடுதி. அதில் 6முதல்8 வகுப்பு வரையில் எல்லோரும் ஒரு பெரிய ஹாலில் தான் படுத்துக் கொள்வார்கள். எனவே இதன் தாக்கம் அந்த மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
மருத்துவரிடம் சென்றால் பென்சிலின் ஊசி போட்டு தடவிக் கொள்ள மருந்தும் தருவார். அந்த மருந்து வித்தியாசமான வாசனையுடன் ரோஸ்மில்க் மாதிரி இருக்கும். விடுதியில் 6 -8 மாணவர்களிடம் தடவிக் கொள்ள தேங்காய் எண்ணை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ’ரோஸ் மில்க்’ வைத்திருப்பார்கள்.
சக மாணவர்களுக்கு வேறு பல உடல் நலக் குறைபாடுகள் வந்து விட்டால் போதும் அவனை கவனிக்கிறேன் என்கிற பேரில் “ஆகா நாம பெரிய வியாதியஸ்தர் ஆகி விட்டோமோ?” என்று அவனை மன ரீதியில் நலிவடையச் செய்து விடுவார்கள்.
அப்படித்தான் ரவிச்சந்திரன் (போன அத்தியாயத்தில் மாலதியிடம் பேசிய வீரதீரச் சிறுவன்) ஒரு முறை காய்ச்சலால் அவதிப் பட்டான். இரவு 11 மணிக்கு ஒரு நான்கு பேர் கொண்ட குழு அவனை மருத்துவ அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சாதாரணக் காய்ச்சல் தான் என்று கூறி விட்டு பாரசிடமால் மாத்திரை வழங்கி விட்டார் டூட்டியில் இருந்த நர்ஸ். ஒரு பன் டீ வாங்கி கொடுத்து அழைத்து வந்து விடுதியில் மாத்திரை சாப்பிட வைத்தோம். அவனோ ”ஊசி வேணும்னா போட்டுக்குவேன் மாத்திரை முழுங்க இயலாது” என்று சொல்கிற கேஸ். அவனை கட்டாயப் படுத்தி விழுங்க சொன்னோம். என்னவோ இமய மலையை பெயர்த்து எடுத்து வாயில் போடுவது போல பயந்து பயந்து போட்டு தண்ணீரை ஊற்றிய வேகத்தில் ”வ்வ்வா” என்று குமட்டி வெளியேற்றி விட்டான். அரசு மருத்துவமனையில் கொடுத்த மூன்று மாத்திரைகளையும் இப்படியே வீணடித்து விட்டான். “வாடா திரும்பவும் போய் ஊசி போட்டுகிட்டு வரலாம்“ என்றதற்கு  “நான் ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேங்க” என்று அப்பாவியாக சொல்வது போல “ஆள விடுங்கடா சாமி எனக்கு காய்ச்சல்லாம் இல்லடா” என்று கூறி விட்டான்.
விடியற்காலை காய்ச்சல் கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் அட்டெண்டரை எழுப்பி கூறினோம். அவர் ரயில்வே ஸ்டேஷன் நேர் எதிர் புறம் (அப்போது) புதிதாக தோன்றிய நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். காய்ச்சல் கடுமையாக இருந்த காரணத்தினால் அட்மிஷன் போட்டுவிட்டார்கள். காலையில் அவனுடைய ஊருக்கு செல்லும் பேருந்தில் பார்த்து அந்த ஊர்க் காரர்களிடம் செய்தி சொல்லி விட்டோம்.
இரவு மாத்திரையை ஒழுங்காக சாப்பிட்டு இருந்தாலே சரியாகி விட்டிருக்கும். டாக்டர் ஊசி போட்டவுடனேயே சரியாகி விட்டிருந்தது. அவனும் பழையபடி உற்சாகமாகி விட்டான். (இப்போ வாடா எத்தனை மாலதி வந்தாலும் பேசுறேன் என்கிற படி) கிட்டத்தட்ட இரண்டு சனி ஞாயிறுகள் ஊருக்கு செல்லாத காரணத்தினால் அம்மாவை பார்த்தவுடன் இவன் மெழுகாக உருகி விட்டான். மகன் ஆஸ்பிட்டல் பெட்டில் இருக்கிறான் என்கிற ஒரு விஷயம் போதாதா அம்மாக்கள் அழுது ஊரைக் கூட்ட. இரண்டு பேரும் கட்டிக் கொண்டு அழுததை பார்த்த அந்த அழகிய நர்ஸ் கூட இரண்டு சொட்டு கண்ணீரை சுண்டி விட்டெறிந்தபடி பணியை தொடர்ந்தார்.
“அம்மா டிஸ்ச்சார்ஜ் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிடலாமா அம்மா” என்று நண்பன் ராஜவேலு கேட்டான்.
“புள்ள துரும்பா எளச்சிட்டான் சாமி, ரெண்டு நாள் வச்சிருந்து குளுக்கோஸ் ஏத்திக் கிட்டு போகலாம் சாமி” என்றார் அன்பொழுக. (மக்களே இந்த காய்ச்சல் அவன் எடையில் ஒரு மில்லி கிராமை கூட பாதிக்க வில்லை என்பது தான் உண்மை. குண்டுக் கல்யாணம் கூட துரும்பாக இளைத்திருப்பதாகத்தான் அவருடைய அம்மா நினைப்பார். ஏனென்றால் அதுதான் அம்மாக்கள் சைக்காலஜி)
காலையில் எல்லோரும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி போய்விட்டோம். அழகிய நர்ஸ் பற்றிய செய்தி அதற்குள் விடுதி முழுக்க மூங்கில் காட்டு தீயாக பரவியது. கேட்ட மாத்திரத்தில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்குமே ரவிச்சந்திரன் மேல் பொங்கி எழுந்த பாசத்தை அடக்க முடியாமல் சிரம பட்டார்கள். அப்புறம் எல்லோரும் கூடிப் பேசி “அவன் ரெண்டு நாளைக்கு பெட்டில் இருப்பான்னு அம்மா சொல்லிட்டாங்க, அதனால நாம நான்கு நான்கு பேரா போகலாம். 11ம் வகுப்பு பசங்க வேண்டாம்பா கூட்டம் அதிகமா இருந்தா ஆஸ்பிட்டல்ல சத்தம் போடுவாங்க”  என்று முடிவு செய்தோம்.
ஆஸ்பிட்டல் போனா அங்கே வாசல் முழுக்க செருப்பாக இறைந்து கிடந்தது “ஆஹா எதோ ஒரு கேஸ் மண்டைய போட்டுருச்சு போல“ என்று நினைத்த படி உள்ளே போனோம். அங்கே ஒரு பாட்டி ஒரு பத்து பேரை நிற்க வைத்து ஒற்றை ஆளாக மறித்தபடி நின்றார். நாங்க போய் ரவிச்சந்திரனை பார்க்கணும் என்ற உடனே அவரின் கோபம் உச்சத்திற்கே போய்விட்டது. ஏன்னா பாதி கிராமமே அவனை பார்க்க திரண்டு வந்திருந்தது. அவர்களில் பாதி பேரேடுதான் அந்த பாட்டி சடுகுடு ஆடிக் கொண்டு இருந்தார்.
ஒரு வழியா அவர்களை எல்லோரையும் துரிதப்படுத்தி அனுப்பி விட்டார். ரவி அம்மாவே எங்களை வெளியே வந்து உள்ளே கூட்டிச் சென்றார். ரவி சேரில் உக்கார்ந்து கொண்டு எங்களை பெட்டில் அமரச் சொன்னான். அவனுக்கு வந்திருந்த ஆரஞ்சு ஆப்பிள் என எங்களுக்கு பரிமாறப்பட நாங்கள் உற்சாகமாக தின்று கொண்டு இருந்தோம்.
“ஏப்பா இங்க யாருப்பா பேஷண்டு? தம்பி பேஷண்டுக்கு தாம்பா பெட்டு எறங்குங்கப்பா” என்று விரட்டினார்.
நாங்க அசையவே இல்லையே. ’ஒரு காய்ச்சலுக்கு பெட்ல சேந்துகிட்டு இன்னக்கி முழுக்க டென்ஷன் பண்ணிட்டாங்களே’ என்று புலம்பிய படி பாட்டி இடம் பெயர்ந்தார்.
அந்த நர்ஸ பாக்காம அந்த இடத்தை விட்டு அசையப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
“டேய் யார்ரா அந்த பாட்டி ரொம்ப வெரட்டுது?”
“டேய் அவுங்க இன்னைக்கு டே டூட்டி நர்ஸ்” என்றான் ரவி.
“என்னது நர்ஸா?“ என்று நான்கு பேரும் கோரஸாக கேட்டபடி பெட்டில் விழுந்து மூர்ச்சையடைந்தோம்
வயதானவர்களும் நர்ஸாக இருப்பார் என்கிற உண்மையை உணர்ந்த நாள் அன்று.
இன்னும் ஒரு அத்தியாயம் இதே வகையில் உண்டு வெய்ட் பண்ணுங்க.

Sunday, February 4, 2018

வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்


வானம் வசப்படும் -2 புலவருக்கும் புரவலராகவும் தேவரடியார்க்கு நிழல் தரு விருட்சமாகவும்

தமிழ் எம்.ஏ என்கிற படத்தில் தமிழ் படித்த காரணத்தினால் வாழ வழியின்றி வாழ்க்கையை வீணடித்தவன் கதை பற்றி பார்த்திருப்போம். இலக்கியத்தை வாழ்வாதாரமாக கொண்டிருப்போர் அதைக் கொண்டு பொருளாதார நிறைவோடு வாழ இயலாது என்பது அந்நாளில் இருந்து இந்நாள் வரையில் நிதர்சனம்.
புகழ் வெளிச்சம் தம் மீது படுமாறு நின்று கொண்டு இருப்போர் மட்டுமே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என வணிக ரீதியாகவும் இலாபகரமான “தொழிலாக“ இலக்கியத்தை கொண்டிருக்கிறார்கள். அதனால் வணிக சமரசங்களுக்கு உட்பட்டே இலக்கியம் படைக்கின்றனர்.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் புலமை மிகுந்தோரெல்லாம் தனவந்தர்களை புகழ்ந்து பாடல் புனைந்து அவர்களது உள்ளத்தை குளிர வைத்து பரிசில் பெற்றுச் சென்று வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
வானம் வசப்படும் கதையில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை கூட தமிழ் இலக்கிய ஆர்வலராக கதை மூலம் அறியப் படுகிறார். தமிழ் புலவர்களுக்கு பரிசுகளும் பண்டங்களும் கொடுத்து அவர்கள் பசி போக்கி தமிழ் தொண்டுக்கு புலவர்களை தயார் படுத்தியிருக்கிறார்.
இராம கவிராயர் என்கிற ஒரு புலவரின் வீட்டில் அடுப்பங்கரையில் அல்ல அடுப்பினுள்ளேயே பூனை படுத்து நீல் துயில் கொள்ளும் அளவுக்கு அடுப்புக்கு ஓய்வளித்து பட்டினியை உணவாக கொண்டு தம் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். குழந்தை பசியால் வாடி வதங்கிப் போய் கிடப்பது பொறுக்காமல் ஆனந்தரங்கம் பிள்ளையின் கொடைதன்மை பற்றி கேள்வியுற்று புதுச்சேரி விரைகிறார்.
வீட்டிலே போய் பார்க்கிறார், அங்கே அவர் இல்லை, களத்து மேட்டில் அவர் இருப்பதாக தகவல் கூறிவிட்டு அவர்தம் நிலை கண்டு இரங்கி உணவு தயார் செய்து அளிக்க முனைகிறார் அவரது மனைவி. ஆனால் அதை அவர் மறுதளித்து களத்து மேட்டுக்கே விரைந்து சென்று பாடல் பாடுகிறார். பாடலின் உள் பொருளாக தனது நிலை பற்றியும் விளக்கி பாடுகிறார்.
ஆனந்தரங்கரோ ”சரி பொறும்” என கூறி காக்க வைத்து விட்டு வேறு அலுவல்களை பார்க்கிறார். ராமகவிராயருக்கோ குழந்தையின் நிலை கண் முன்னே வந்து வந்து போகிறது. எனவே பொறுக்க மாட்டாமல் அவர் முன்னே வந்து ஞாபகப் படுத்தியவண்ணம் இருக்கிறார். அதற்கு “பறக்காதீரும் புலவரே” என்கிறார். அதற்கும் பதிலாக ஒரு பாடலை பாடுகிறார்.
“பொக்கு பறக்கும்; புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்,
நக்குப் பொறுக்கிகளும் பறப்பார்
நானேன் பறப்பேன் நராதிபனே?
திக்கு விஜயம் செலுத்தி, உயர்
செங்கோல் நடத்தும் அரங்கா! நின்
பக்கம் இருக்க ஒரு நாளும்
பறவேன், பறவேன், பறவேன்”
என்ற பாடலை கேட்டு அவரது அவசரம் அறிந்து உரிய பொருளும் பொன்னும் துணிமணிகளும் கொடுத்து அனுப்புகிறார். தீர்ந்து போனதும் என்னை வந்து பாருங்கள் என்று வேறு கூறுகிறார்.
தாசி எனும் தேவரடியார்கள்
1740- 50 களில் கோவில் தோறும் தேவரடியார்கள் என்கிற பெயரில் தெய்வத்திற்கு நேர்ந்து விட்ட தாசிகள் இருந்திருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளில் அவர்களது ஆட்டம் இன்றியமையாத வழக்கமாக இருந்துள்ளது. நல்ல அழகும் “திறமையும்“ உடைய தாசிகள் “எட்டுத் திக்கும் விட்டெறிய“ (பேரும் புகழோடும் என்பதற்கான பிரபஞ்சனின் பதம்) வாழ்ந்திருக்கிறார்கள்.
நஞ்சை புஞ்சை நகை நட்டு என ஏராளமான சொத்து சுகத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
தாசி குலத்தில் பெண் பிறந்தால் மிகப் பெரிய கொண்டாட்டமாக இருந்துள்ளது. தாயானவள் ஓய்வு பெறும் வயதை எட்டும் போது மகளை தொழிலில் இழுத்து விடுவாள். அதுவும் தாசி மகள் இளைய தாசியை கன்னி கழிக்க பெரும் பணக்கார ஆண்களிடம் மிகப் பெரிய போட்டி இருந்துள்ளது. தாசி வீட்டில் பிறக்கும் ஆண்பிள்ளை வேண்டா பிள்ளை தான். ஆட்களை கூட்டி வருவது போன்ற சில வேலைகளுக்கு அவர்களை பழக்குவார்கள்.
தாசி முதுமையடையும் போது மேக நோய் கண்டிருந்தால் அவளிடம் சென்று வந்த அனைத்து பணக்கார வீட்டுக் காரர்களும் வைத்தியரை தேடி ஓடுவார்கள். தாசியானவர்கள் தனது பெண் பிள்ளைகள் வயது வந்தவுடன் ஆண்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது குறித்தும், அவர்களிடமிருந்து பரிசுகளை பெற என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நுணுக்கமாக பயிற்றுவித்துள்ளனர்.( இது குறித்து பிரபஞ்சன் அவர்கள் தனது நீல நதி என்கிற நாவலிலும் அழகாக விவரித்துள்ளார்.)
கதையில் பானுகிரகி என்கிற தாசி பெரும் பணக்காரியாக வாழ்ந்திருக்கிறாள். அதே போல பொன்னி என்கிற வேதபுரீஸ்வரர் கோவில் ஆட்டக்காரியும் கூட வசதியான வாழ்வுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.
அருமையாக பாடல் பாட வல்லவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பி செய்த குறும்புகள் குறித்து பாடல் மூலமாக ஆனந்த ரங்கருக்கு உணர்த்துகிறாள் பானுகிரகி. அதை புரிந்து கொண்டு தனது தம்பியை கண்டிக்கிறார் ஆனந்த ரங்கர்.
இது போல சொர்ணம் என்கிற தாசிக்கு பிறந்த மகன் ஆறுமுகம் எதுவும் தெரியாத தத்தியாக வாழ்கிறான். அவனை அழைத்து திருட்டு பழக்குகிறார்கள். அவன் காவலர்களிடம் மாட்டி சிறை சென்று பின்பு அடிமையாக மொரிஷியஸ் தீவுக்கு விற்கப் படுகிறான்.
பெரிய தனவந்தர்கள் கேட்டால் இல்லை என்று கூறும் சுதந்திரம் வேசிப் பெண்டிருக்கு இருந்திருக்க வில்லை. அவர்கள் என்னதான் பணத்தில் திளைத்தாலும் அவர்களின் இறுதிகால வாழ்க்கை இரங்கத்தக்கதாகத்தான் இருந்து உள்ளது.

Saturday, February 3, 2018

”எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி


எங்கள் தந்தை முத்துவேல்”- நினைவு அஞ்சலி

அப்பா, அப்பா, நான் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட் மார்க்பா! 100 மார்க்பா!!” என்று உற்சாக பட்டாசாய் நான் வந்து கூறும் போது,
அப்படியா சரி  என்று மட்டும் சிக்கனமாக பேசுவார். ஆனால் முகம் மட்டும்ஏன் 110 மார்க் வாங்கினா என்னவாம்?’ என்பது போன்ற பாவனையில் இருக்கும்.
மாலை வேளைகளில் பசங்களுடன் விளையாடிக் கொண்டு இருப்பேன். ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அப்பாவின் சைக்கிளில் இருந்து பிரத்தியேகமாக ஒலிக்கும் பெல் சத்தத்தில் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் வீட்டுக்கு சிட்டாக பறந்து விடுவேன்.
சேத்துக்குறோம் ஆனா உங்கப்பா வந்துட்டா உட்டு அடிச்சிட்டு ஓடக்கூடாதுஇது தான் நண்பர்கள் என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள எனக்கு போடும் கண்டிஷன்.  
ஆனாலும் பெல் சத்தத்தை கேட்காமல் நானே அசட்டையாக இருந்தாலும் கூட அவர்கள் தான் என்னை உசுப்பிவிடுவார்கள். ஒரு வேளை எனக்கு முன்னரே அப்பா வீட்டினுள் புகுந்து விட்டால் இருக்கவே இருக்கு பின்பக்க வாசல்.
அப்பா கேட்கும் முதல் கேள்வியேஜெயராஜ் எங்கே?” என்பது தான்.
நானோ உடனே கையில் சிக்கிய புத்தகத்துடன் கதவைத் திறந்து கொண்டு வெளிப்படுவேன்.
ஏதோ ஒண்ணாம் வகுப்பில் ஒரு நாள்தாங்க லீவு போட்டேன், அதுக்கு போய் அப்பா பக்கத்து வீட்டு கணேசன் அண்ணனுடன் எனக்கு மாடு வாங்கி கொடுத்து மேய்க்க விடுவது பற்றியும் பண்ணை அமைப்பு குறித்து சீரியஸாக உரையாட ஆரம்பித்து விட்டார்(என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு வரையில் லீவே எடுத்தது இல்லை. பத்தாம் வகுப்பில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு வாரகாலம் அப்பா கூறியதற்கு இணங்க விடுப்பு எடுத்தேன்.
வடிவேல் ஊத்தாப்பம் ஆர்டர் செய்யும் ஜோக் பார்த்திருப்பீர்கள். மழைச்சாரல் மாதிரி 16 கரண்டி நெய்யெல்லாம் ஊற்றச் சொல்லி ஒரு நீளமான ஆர்டரைத் தருவார். சர்வரோ சிம்பிளாக “அய்யாவுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். அது போலதான் கல்வி ஆண்டு துவக்க நாட்களில் நான் இது வேண்டும் அது வேண்டும் என்று பெரிய பட்டியலையே தருவேன். அவரோ சிம்பிளாக எது அவசியமோ அதை மட்டும் வாங்கி வருவார்.
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அந்த காலத்தில் மாலை செய்தித் தாளில் தான் வெளிவரும். ரிசல்ட் பார்த்து விட்டு வெற்றியோடு திரும்பும் மாணவர்கள் பேருந்தில் இருந்து குட்டிக் கரணம் போட்டுத் தான் இறங்குவார்கள். அந்த ஆட்டம் அன்று முழுவதும் ஊருக்கே இனிப்பு வழங்கி முடிக்கும் வரை நீடிக்கும். நானோ வீட்டில் தவிப்போடு காத்திருப்பேன். அனேகமாக தூக்கம் சொக்கும் நேரம் செய்தித் தாளோடு வருவார். ஓரு ஆரஞ்சு மிட்டாய் கூட எனது தேர்ச்சியின் பொருட்டு நான் வழங்கியது கிடையாது. எனது தேர்ச்சியின் பால் அவருக்கு கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை ஆதலால் பரபரப்படைய மாட்டார். எந்த சூழலிலும் உணர்வெழுச்சியால் அடித்துச் செல்லப் பட்டவரில்லை. ஆரோக்கியமான உணர்வுசார் நுண்ணறிவு (EMOTIONAL INTELLIGENCE) கொண்டவர்.
ஆனா பாருங்க முடிவெட்டிக் கொள்ள பணம் கொடுத்து தா.பழூருக்கு அனுப்பி வைப்பார். 5ம் வகுப்பு வரையிலும் அவரே வெட்டி விடுவார். கடையில் எங்களுக்கு முடி வெட்டி விடமாட்டார்கள் என்பதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தா.பழூருக்கு முடி வெட்டிக் கொள்வதற்காகவே செல்வேன். எந்த வகையிலும் எனக்கு தாழ்வு மனப்பான்மையோ எனது சுயமரியாதைக்கு பங்கமோ வர விட்டதில்லை அவர்.
பள்ளி பருவத்தில் தீனி வாங்குவதற்கு நயா பைசா கூட தரமாட்டார். “எதுவா இருந்தாலும் நான் வாங்கி வரேன் வீட்டில் சாப்பிடு” என்று சொல்லிவிடுவார் கறாராக. இலால்குடி விடுதியில் படித்த போது கூட போக 10 வர 10 செலவுக்கு 10 என் 30 ரூபாய் மட்டும் தருவார். ராணி காமிக்ஸ் புத்தக வாடகை 25 பைசா மட்டும்(அந்த கால லெண்டிங் லைப்ரரி) தவறாமல் தருவார்.
ஆனா பாருங்க கல்லூரி காலத்தில் நான் 200 கேட்டால் கூட 300 அனுப்பி வைப்பார். அது என் மேல் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மரியாதை என்று உணர்ந்து கொண்டேன்.
இவ்வளவு தூரம் ப்ராக்டிகல் சைக்காலஜியை கையாண்ட எனது தந்தை படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே. பார்த்தது அரசாங்க தலையாரி (கிராம காவலர் இப்போது கிராம உதவியாளர்) உத்தியோகம். அறிந்தது பத்திரம் எழுதுவது, நில அளவை என ஏராளமானவை. எழுத்து பிழை ஒன்று கூட காணவியலா எழுத்து நடை உடையவர்.
எங்கள் குடும்ப பெரியாராம் எங்கள் நடு சித்தப்பாவின் வழி காட்டுதலுக்கு இணங்க எனது அண்ணன் திருமணத்தை ஊரே வியக்கும் வண்ணம் ஒரு சுயமரியாதை திருமணமாக நடத்திக் காட்டினார். வீட்டின் பின்புறம் சினிமா திரையரங்கம் போல முக்கோண வடிவ நீளமான பந்தல் போட்டார். அனைத்து சாதியினரும் விருந்து உண்ட சமபந்தி போஜன திருமணவிழா அது.
எங்கள் ஊரில் அனைவரும் பார்த்து பிரமிக்கும் வண்ணமாக அப்பா எங்கள் நால்வரையும் நன்கு வளர்த்து படிக்க வைத்து அழகு பார்த்தவர். அனேகமாக எங்கள் ஊரின் முதல் பட்டதாரி பெண் எனது அக்கா ஜெயபாரதி தான்.
குழந்தைகளுக்கு படிப்பை விட பெரிய சொத்து வேறு எதுவும் இருக்க இயலாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இப்போது நாங்கள் அதை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறோம். அவர் எங்களுக்கு மீன் சாப்பிட வழங்குவதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுத் தருவதே சாலச் சிறந்தது என்றுணர்ந்தார்.
எந்த சூழ்நிலையிலும் எனது தந்தை கண்கலங்கியதை நான் கண்டதில்லை. ஒரு மூன்று முறை தான் நான் பார்த்திருக்கிறேன்.
முதலாவது, எங்கள் ஊரில் மூங்கில் பிளாச்சில் தட்டி செய்து கோவிலில் பாதுகாப்பு அரண் வைத்திருந்தார்கள். சிறுவர்கள் நாங்கள் அதை பிடித்து தொங்கியபடி நடந்து சாகசம் செய்வோம். அப்போது ஒரு கயிறு திரி திரியாக அறுந்து வருவதை க்ளோசப் பில் யாரும் காட்டாத காரணத்தினால் அஜாக்கிரதையாக நான் தொங்கியபோது தட்டியும் என்னோடு சேர்ந்து தொங்கி பின் என்னோடே கீழே விழுந்தது. முட்டிக்கு கீழே இருந்த சதைப் பகுதி கொத்து பரோட்டா ஆகிவிட்டது. ரத்தம் வெள்ளமாய் பீரிட்டு வழிந்தோடியது. ஓவென்று அலறி துடித்தேன். எனது அப்பா சைக்கிளில் வேகமாக வந்து இறங்கி ஓடி வந்தார். அய்யய்யோ அப்பாவுக்கு தெரியாமல் விளையாட வந்து இப்படி ஆகிவிட்டதே என்கிற பயத்தில் நான் வாயை பொத்திக் கொண்டேன். ரத்தத்தை பார்த்த மாத்திரத்தில் அவர் கண்ணில் வழிந்த நீரை அப்போது தான் முதலில் கண்டேன்.
இரண்டாவதாக நடந்த சம்பவம் நான் மூன்றாவது படித்த போது நடந்தது. புளியமரத்தில் புளியாங்கா அடிப்பது மாணவர்களின் வாடிக்கை. மரத்தை நோக்கி மாணவர்கள் விர்ரென்று கருங்கல்லை எறிவார்கள். அப்படி எறியப்பட்ட கல்லொன்று கீழே விழவில்லை. சரியாக நான் மரத்தை கடக்கையில் செந்துறையை சுற்றி திருச்சிக்கு செல்லும் சுந்தரம் பஸ் போல பொத்தென்று எனது மண்டையில் விழுந்தது. தா.பழூருக்கு தையல் போட சென்றோம். எனக்கு மரத்துப் போகிற ஊசி போட்டு விட்டுத்தான் தையல் போட்டார்கள். எனக்கு ஊசி இறங்குவது சரக் சரக் என்று தான் உணரமுடிந்தது. ஆனால் எனது தந்தையின் கண்ணில் கண்ணீர் கட கட வென்று வழிந்தோடியது.
மூன்றாவது முறை, எனது விடுதிகால பொறுப்பற்ற தனத்தினால் படிப்பில் சற்று அசட்டையாக இருந்துவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட துன்பம். அவ்வளவுதான்.
எனது தந்தை தனது எழுபதாவது வயதில் இயற்கை எய்தினார். 2004 வது வருடம். நான் உட்கோட்டை பள்ளியில் பணியேற்று இரண்டாண்டுகள் கடந்த போது.
எனது வாழ்விலும் சரி எங்கள் குடும்பத்திலும் சரி அனேக விழாக்கள் அவரது மறைவுக்கு பின்பு நடந்தேறிய வண்ணம் உள்ளது. அது தான் இயல்பும் கூட. வாழ்க்கை சக்கரம் எதன் பொருட்டும் நிற்பதில்லை. அது இந்த பூமியை போல தொடர்ந்து சுழன்ற வண்ணம் உள்ளது என்பது தான் நிதர்சனம். ஆனாலும் கூட அவரின் இல்லாமை மனதில் ஒரு வெறுமையை தருகிறது. எனது இந்த எண்ணம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தான், இருந்தாலும்  உணர்வுகள் பகுத்தறிவு அறிவதில்லையே.
சீறிப் பாயும் புதுப் புனல் போல நினைவுச்சரங்களில் இருந்து சம்பவங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் கூட இத்துடன் முடிக்கிறேன்.





ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...