Thursday, February 27, 2020

தெருவிளக்கும் மரத்தடியும்


தெருவிளக்கும் மரத்தடியும்

ச.மாடசாமி அவர்கள் புதிய தலைமுறை கல்வி இதழில் எழுதிய தொடரின் நூல் வடிவமே இந்த புத்தகம்.
தொடர்ச்சியாக நான்கு வாரங்கள் வியாழக்கிழமைகளில் நிஷ்த்தா பயிற்சியில் கருத்தாளராக ஆசிரியர்கள் மத்தியில் பேசவேண்டியிருந்தது. அந்த தருணத்தில் வாசித்த இந்த புத்தகம் பயிற்சி வகுப்பை பயனுள்ள வகையில் சுவைபட நடத்திச் செல்ல எனக்கு பேருதவி புரிந்தது.
இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளுமே ஆசிரியர்களுக்கு பெரிய விழிப்புணர்வை தரவல்லவை. வகுப்பறை ஒழுங்கு ஆசிரியர் செயல்பாடு என நமக்கு நாமே வகுத்து வைத்திருக்கும் பல கற்பிதங்களை அடித்து நொறுக்குகிறார்.
பி.எட் பட்ட படிப்பில் மைக்ரோ டீச்சிங், மேக்ரோ டீச்சிங், சைக்காலஜி மற்றும் எஜுகேஷன் டெக்னாலஜி ன்னு நிறய படிக்கிறோம். ப்ராக்டிகல் கூட உண்டு. ஆனால் நூலாசிரியர் போன்று கல்வி புலத்தில் இயங்கி வரும் ஆளுமைகளை கொண்டு சில கூட்டங்களோ பயிலரங்கங்களோ நடத்தினால் நிச்சயமாக ஆசிரிய மாணவர்களின் Teaching Attitude ல் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர இயலும்.
”வாயையும் மனத்தையும் திறக்கும் வாசல்” என்கிற கட்டுரையில் ஐம்பத்தி ஓராவது ராட்சதப் பூச்சி என்கிற கதையை கூறி மாணவர்களிடம் விவாதித்த விதம் பற்றி அழகாக கூறியுள்ளார்.
“இன்னும் ஒரு படி இறங்குங்க“ என்ற கட்டுரையில் “ஏண்டா எரும மாதிரி நிக்கிற“- உவமை “ஏ எரும இங்க வாடா“- உருவகம் என்று தடாலடியாக இறங்கி அடித்திருப்பார். ஆங்கில இலக்கணம் போதித்த காலத்தில் நான் இந்த மாதிரி பல முறை இறங்கியதுண்டு. மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் நோக்கோடு எவ்வளவு படிகள் வேண்டுமானாலும் இறங்கலாம் என கூறியிருப்பார்.
தரம் என்ற முழக்கத்தை பின்தொடர்ந்து, விலக்குவதும் பிரிப்பதுமான நடவடிக்கைகள் கட்டாயம் இருக்கின்றன. குழுவாக பிரிப்பதற்கும் குழுவிற்குள் வரவிடாமல் விலக்குவதற்கும் ஆளுக்கொரு அளவுகோல் கையில் இருக்கிறது. என்று தொடங்கும்  கட்டுரையில் Inclusive Education குறித்து டோடோ சேன் என்கிற ஜப்பானிய கதை மூலமாக ஆழமாக விளக்குகிறார். நிச்சயமாக இவையெல்லாம் இளம் ஆசிரியர்களை சென்று அடைய வேண்டிய தகவல்கள்.
இன்றைய வகுப்பறைகள் பெரும்பாலானவற்றில் என்ன நடக்கிறது. நன்றாக படிக்கும் மாணவர்களை “ஆகா ஓகோ“ என்று புகழ்வது. படிப்பு என்கிற ஒற்றை அளவு கோலை வைத்தே எல்லா விஷயங்களையும் அனுகுவது அங்கீகரிப்பது என்று போய்க் கொண்டு இருக்கிறது. எல்லா மாணவர்களையும் அவர்களின் ஏதேனும் ஒரு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பேற்படுத்தி பாராட்டிப் பாருங்கள். ஆசிரியர்களின் பாராட்டு என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்க மருந்து.
மொத்தத்தில் வகுப்பறைகள் மாணவர்களுக்கான வெளி அங்கே அவர்களை ஆன மட்டும் கொண்டாடிக் களியுங்கள் என்பது தான் ச.மாடசாமி அவர்களின் இந்த புத்தகத்தில் கிடைத்த கருத்துப் புதையல்.

Tuesday, February 4, 2020

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

#Reading_Marathon_2020_50
#4/50


புத்தகம்:ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்.(Brief Answers to Big Questions)
ஆசிரியர்: ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

        உலகில் என்னை மிகவும் வியப்படைய வைக்கும் மனிதர்களில் முக்கியமான ஒருவர் ஹாக்கிங்ஸ். ஏனென்றால் 21 வயதில் தசை அழற்சி (Scelerosis)
நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு இன்னும் ஐந்து
ஆண்டுகாலம் தான் பையன் உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்களால் நாள்
குறிக்கப் பட்டவர். ஆனால் அவர் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி 76
ஆண்டுகள் உயிருடன் இருந்ததோடு அல்லாமல் பிரபஞ்ச அறிவியலில் வியத்தகு பல
சாதனைகளை படைத்தவர். 2018 மார்ச் 14 ம் நாள் தான் இறந்தார்.
        அதிகம் விற்பனையான இவரது நூலான “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (A Brief History of Time) நேரத்தின் துவக்கம் மற்றும் இறுதி குறித்து அறிவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து ஒரு எளிய மனிதனுக்கும் கோட்பாட்டு இயற்பியல் முக்கியமாக பிரபஞ்ச அறிவியல் மீது ஆர்வம் வரக் காரணமாக இருந்தது. “கடினமான கோட்பாடுகள் என்று அறிவியலில் எதுவும் இல்லை. ஆனால் எளிமையாக அவற்றை எடுத்தியம்பும் ஆட்கள் தான் பற்றாக்குறையாக உள்ளது”
என்று சொல்வார்கள். ஹாக்கிங்ஸ் அவர்கள் எதையும் எளிமையான உதாரணங்களுடன் புரியும் வண்ணம் கூறுவதில் வல்லவர்.
        தற்போது விஷயத்திற்கு வருவோம். ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்.
இந்த புத்தகத்தில் நாம் எப்போதுமே அறிவியல் அறிஞர்களிடம் கேட்டு தெளிவு
பெற எண்ணும் ஆழமான கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்களை அழகாக
வழங்கியுள்ளார் ஹாக்கிங்ஸ் அவர்கள்.
        “கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா?” என்ற கேள்விதான் முதலாவது. அதற்கான
பதிலாக என்ன கூறியுள்ளார்?
 உங்களுக்கு கடவுள் ஒருவர் இன்றியமையாதது எனக் கருதினால் அறிவியல்
விதிகளை வேண்டுமானால் கடவுள் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னைப்
பொருத்தவரை கடவுள் இல்லை என்று கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் நடு
மண்டையில் சுத்தியலால் அடித்தமாதிரி பதில் சொல்லிவிட்டார். அறிவியல்
ரீதியான ஆதாரங்களோடும் அழகான வாதங்களோடும்.
        பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது?
        அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா?
        வருங்காலத்தை நம்மால் கணிக்க இயலுமா?
        கருந்துளைக்குள் என்ன இருக்கிறது?
        காலப் பயணம் சாத்தியமா?
        வருங்காலத்தில் நாம் இந்தப் புவியில் உயிர் பிழைத்திருப்போமா?
        விண்வெளியை நாம் காலனிப் படுத்த வேண்டுமா?
        செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?
        வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் நேர்மையான அறிவார்ந்த விளக்கங்களை வழங்கியுள்ளார்.
        மேலும் எந்த இடத்திலும் அறிவியல் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது என்கிற
குறையை அவர் கூறவில்லை. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை
நுண்ணறிவு குறித்த எதிர்மறை எண்ணங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவரோ அதன்
நேர்மறை விளைவுகளை பற்றியே அதிகம் சிலாகிக்கிறார். அதற்கு காரணம்
முற்றிலும் உடலியக்க செயல்பாடுகள் முடங்கிய அவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பேசவும் பல அறிவியல் கட்டுரைகள் எழுதவும் சாத்தியமாக்கிய துறை குறித்த நன்றியுணர்வு தான்.

-

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...