Tuesday, November 29, 2016

நூலகமும் நானும் பிரியா தோழர்கள்


நான் சிறுவனாக இருந்த போது (அனேகமாக 7ம் வகுப்பு) சுத்தமல்லியில் இருந்து கோடை விடுமுறைக்கு ஜெயங்கொண்டம் எங்கள் நடு சித்தப்பா வீட்டுக்கு போயிருந்தேன்.
ஒரு நாள் எனது அண்ணன் அறிவழகன் என்கிற ராஜா “டேய் ஜெயராஜ் சாயங்காலம் லைப்ரரி போலாம்டா!“
’ஐ நீச்சல் அடிக்கலாமே’ என்று எண்ணிக்கொண்டு “டேய் நானும் வரேன்டா கண்டிப்பா போலாம்”
ராஜா தலை சீவி பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு கிளம்பினார். ’என்னது இவன் குளிக்க போவதற்கு மேக்கப் எல்லாம் போடுறான்’ என்று எண்ணிக்கொண்டு நான் சாமர்த்தியமாக ஒரு சோப்புக் கட்டியை கால்சட்டை பையில் திணித்துக் கொண்டு விட்டேன்.
’என்னது கடைத்தெரு ரோட்டில் எல்லாம் போகிறானே’ என்று எண்ணிக் கொண்டு பின் தொடர்ந்தேன். போனால் அங்கே இருந்தது நூலகம். இதைத்தான் லைப்ரரி என்கிறார்களோ. நான் தான் கடைசி உச்சரிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு ஏரிக்கு போகிறோமே என்று குஷியாக கிளம்பி விட்டேன். ’ஐயய்யோ யாரும் பார்த்துவிடப் போகிறார்கள்’ என்று சோப்புக் கட்டியை ஆழமாக திணித்துக் கொண்டேன்.
உள்ளே நிறையபேர் மாத வார மற்றும் நாளிதழ்களை வாசித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே நிறைய புத்தகங்கள் அடுக்கி இருந்தன. அவற்றை சில பேர் இரவல் வாங்கிச் சென்றனர். எல்லாமே இலவசமாக. அரசாங்கம் இந்த மாதிரி ஒரு இலவச அமைப்பை வைத்திருப்பதே எனக்கு அப்போது தான் தெரியும்.
அடுத்த ஆண்டே சுத்தமல்லியில் ஒரு பகுதிநேர நூலகம் திறக்கப்பட்டது. நான் உறுப்பினர் ஆகி நாவல்கள் எல்லாம் வாசிக்க ஆரம்பித்து விட்டேனாக்கும். ஒரு சாதிய வன்கொடுமையால் நான் அங்கு போவதை விட்டுவிட்டேன் (பிரச்சனைக்குப் பயந்து வீட்டில் யாருக்கும் சொல்லக் கூட இல்லை. தெரிந்தால் எங்க அப்பா உண்டு இல்லை பண்ணியிருப்பார்)
இலால்குடி பள்ளியில் படித்தபோது தான் பள்ளியிலும் நூலகங்கள் உண்டு என்பது தெரியும். எனது தோழன் ’கெய்ஸர்’ அப்பா நெசவு ஆசிரியர் தான் நூலக ’இன்சார்ஜ்’ ஆனால் போனது தான் இல்லை.
நேஷனல் கல்லூரி திருச்சியில் நூலகங்கள் வாயிலாக பாடபுத்தகங்கள் எடுத்து பயன் படுத்துவது எனது வழக்கம். ’ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஆங்கில மாத இதழ் எனக்கு அங்குதான் அறிமுகம்
முதுகலை பட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக கணிதத்துறையில் படித்தேன். எங்கள் துறைத்தலைவர் அப்போது (பிரபல கணித வல்லுநர்) இராமானுஜம் அவர்கள். நூலக சாவியை எங்களிடமே கொடுத்து விடுவார். ஒவ்வொருவரும் பத்து பதினைந்து என்று ’ரெஃபரன்ஸ்’ புத்தகங்களை கொண்டு போவோம். ஒரு நூல் கூட திருட்டு போனது இல்லை. சார் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாய் நூல்களை பத்திரமாய் ஒப்படைத்தோம்.
இடையில் ஒரு ஆறு மாதங்கள் ஹில் டேல் மெட்ரிக் பள்ளி, கொல்லி மலையில் வேலை பார்த்த போது ஒரு பீரோ நிறைய புத்தகங்கள் இருப்பதை பார்த்து வியந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை முழுவதும் எடுத்து கேட்டகிரி வாயிலாக அடுக்கி அழகாய் வைத்தேன். எனக்காக ஒரு பத்து நூல்களை எடுத்துக் கொண்டேன். அங்கே தான் எனது அபிமான அறிவியல் கட்டுரையாளர் என்.இராமதுரை அவர்களின் விண்வெளிப் பயணம் சார்ந்த பேப்பர் கட்டிங் தொகுப்பை படித்தேன்.
உட்கோட்டையில் பணியேற்ற போது பள்ளிக்கு அருகிலேயே நூலகம். தினம் ஒரு புத்தகம் எடுத்து படித்து முடித்து விடுவேன். பேச்சிலராக தனி அறையில் தங்கி இருந்ததால் இளையராஜா ரஹ்மான் மற்றும் எனது புத்தகங்கள் இவைதான் எனது துணை.
செங்குட்டுவன் சார் தலைமையாசிரியராக வந்தபோது பள்ளி நூலகத்தை திறந்து புத்தகங்களை எடுத்து போட்டு மாணவரகளை படிக்க வலியுறுத்துவார். மாணவர்களை புத்தக திருடர்களாக பார்க்க வில்லை. அவர்களும் மதிய உணவு இடைவேளை மற்றும் ஓய்வு பாட வேளைகளில் மலர்களை மொய்க்கும் தேனீக்களாக புத்தகங்களை மொய்க்க ஆரம்பித்தனர்.
கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளி நூலகத்திலும் நூல்கள் மாணவர்களுக்கு வழங்கும் வழக்கம் இருந்தது. இன்சார்ஜ் டீச்சரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக.அங்கே தான் சு.சமுத்திரம் அவர்களின் ’வாடாமல்லி’ என்ற திருநங்கைகள் குறித்த நாவலை வாசித்தேன்.
பள்ளிகளில் நூலகங்கள் இருப்பதை மாணவர்களுக்கு காண்பிப்பது அவசியம். அவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியர்தம் கடமை. மேலும் ஆசிரியர் இல்லா பாடவேளைகளை எளிதாக கையள இது வசதியாக இருக்கும். மாறாக புத்தகங்களை செல்லறிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது வைரப் பெட்டகத்தை வீணடிப்பது போல் அல்லவா.

’நீதான் நிறைய படித்தேன்னு சொல்றியே என்னத்த கிழிச்சே?’ என்று கேட்கலாம். நான் படித்த விஷயங்கள் எல்லாம் எனக்கு என் மாணவர்களுக்கு மற்றும் எனது மகனுக்கு பயன்படுகிறது. அவர்கள் எது கேட்டாலும் என்னிடம் பதில் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது போதும் அல்லவா?

Sunday, November 27, 2016

அழகிய வண்ணங்களும் அபாயச் சின்னங்கள் ஆகிப் போயினவே!!!

அழகிய வண்ணங்களும் அபாயச் சின்னங்கள் ஆகிப் போயினவே!!!

சார் இவன் என்னை புடிச்சி தள்ளி விட்டு என் பேகை கிழிச்சிட்டான் சார்என்றொரு வழக்கு
நீ எந்த ஊரு?“ தலைமையாசிரியர்
“--- சார்
எந்த தெரு?“
“---தெரு சார்
ஒரு முடிவுக்கு வந்தவராய் அந்த வழக்கின் விசாரணையை அந்த பையனின் சாதியைச் சார்ந்த ஆசிரியரை அழைத்து விசாரிக்குமாறு பணித்தார்.
இந்த அவலம் நான் பணியாற்றிய பள்ளியில் நடந்தது. ஆனால் அந்த தலைமையாசிரியர் வருவதற்கு முன்னரே அவரின் பயத்தையெல்லாம் அர்த்தமற்றதாக்கி வைத்திருந்தோம்.
நான் பணியேற்ற புதிதில் வழக்கு விசாரணையானது மேலே உள்ள தோரணையில் ஆரம்பிக்கும். பையன் ஒரு ஊரின் பெயரை சொன்னதுமே சிறு கண்டனத்துடன் தள்ளுபடி செய்யப் படும்.
ஆசிரியர்களின் பயம் மாணவனின் எதிர் காலத்தை சீரழிக்கும் நச்சு விதை என்பதை ஏனோ பாவம் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்வதே இல்லை.
2002 ம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் உட்கோட்டை பள்ளியில் இந்தமாதிரி ஊர் பேரைக்கேட்டு வழக்கை தள்ளுபடி செய்யும் வழக்கம் ஒழிந்தது. இதனால் ஓரிரு முறை மாணவர்களின் வசவுகளை காதுபடக் கேட்க நேரிட்டது. ஆனால் ஊரின் பெயர் நமக்கு பாதுகாப்பு என்ற ரீதியில் மாணவர்கள் எதற்கும் துணியும் மனப்பான்மை துடைத்து எரியப்பட்டது. இப்போதும் அந்த ஊர் மாணவர்கள் வேறெந்த மாணவர்களைக் காட்டிலும் என்பால் பேரன்பு உடையோராகத் திகழ்கின்றனர்.
பெயரின் பின்னால் வடநாட்டினர் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு இருந்த அதே வேளையில் பெயரின் பின்னால் இட்டுக் கொள்ளும் சாதிப் பெயரானது நல் விருந்தின் ஓரத்தில் வைக்கப்பட்ட மலமாக எண்ணி அருவருப்புடன் அதை கைவிடச் செய்தவர் பெரியார். என்னதான் சாதிப் பற்றும் ஈடுபாடும் இருந்தாலும் பெயரின் பின்னே சாதிப் பெயரை இட்டுக் கொள்ள தமிழகத்தில் எவரும் தயாரில்லை.
ஆனால் இப்போது பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு பழக்கம் நாகரிகப் போர்வையில் நுழைந்து கொண்டு வருகிறது. தன் சாதிக் கட்சி அடையாள வண்ணத்தை கைகளில் பட்டையாக அணிந்து வருவது, சாமிக் கயிரு போல பின்னி வருவது மற்றும் கைக்குட்டையாக எடுத்து வருவது என்று விஷ விருட்சமாக வளர்ந்து வருகிறது.
பட்டையை கழட்டச் சொன்னால் நம்மை அந்த சாதிக்கு எதிரானவன் என்ற கருத்து வந்து விடுமோ என்ற பயத்தில் ஆசிரியர்கள் சிலர் வாலாவிருந்து விடுகின்றனர்.  (அடியேன் கூட சக ஆசிரியரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டேன். அவர் பார்க்கும் போதெல்லாம் நான் சாராத ஆனால் அவர் சார்ந்த பட்டையை கழட்டியிருக்கிறேன் தற்செயலாக, விளைவு இவர் இவர்களின் பட்டையை மற்றும் கழற்றும் சாதி வெறி பிடித்தவர் என்று தவறாக புரிந்து கொள்ளப் பட்டேன்)
பட்டைதானே இருந்து விட்டு போகட்டுமே அதிலென்ன தவறு என்று நினைக்கலாம். பட்டை அணிய ஆரம்பித்த பின்னர் மாணவர்கள் வண்ண வாரியாக குழுவாக செயல் படுகின்றனர்.
சென்ற ஆண்டில் தனிப்பட்ட வயதுக்குரிய எதிர் பாலின் ஈர்ப்பு சார்ந்த போட்டியை சாதி விவகாரமாக ஆக்கிவிட்டார்கள். சரியான நேரத்தில் அது விசாரிக்கப் பட்டு பிரச்சனையின் சாதியப பரிமாணம் தவிர்க்கப் பட்டது.
பேருந்துகளில் மோதிக் கொள்ளும் நேர்வுகளின் போது அடையாளத்தை பாதுகாப்பு கவசமாக நினைக்கிறார்கள்.
பள்ளிக் கல்லூரி காலங்களில் சாதி வேறுபாடில்லாமல்மாமா“ “மச்சான்என்று பழகியதெல்லாம் பழங்கதை ஆகி விடும் போல தெரிகிறது. “மாமனையும்“ “மச்சானையும்சொந்த சாதிக்குள்ளேயே தேடிக் கொள்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளில் இட ஒதுக்கீடு போல சாதிய பிரதிநிதித்துவம் வழங்கப் படாத காரணத்தால் சாதிக்கு என்று தனிக் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. அவை தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றன.
மத அரசியலும் சரி சாதி அரசியலும் சரி அவை தங்களின் வளர்ச்சிக்கு உரமாக பாமர மக்களின் மனதில் வெறுப்பை தூண்டி அதன் விளைவாக ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தங்களின் கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
நம்மிடையே வசித்து வரும் கிருஸ்த்துவ மற்றும்  இஸ்லாமிய மக்கள் என்ன வேறு தேசத்தில் இருந்தா வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே அணிந்திருந்த உள்ளாடை சவுகரியமாக இல்லாத காரணத்தினால் வேறு ஒரு உள்ளாடை அணிந்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் பால் வெறுப்பு ஏற்படலாமா? நான் அணிந்து உள்ள அதே உள்ளாடை தான் என் நண்பனும் அணிய வேண்டும் என்று வற்புறுத்துதல் தகுமோ?
மக்கள் அனைவரும் நட்புறவோடு தான் பழக எண்ணுகிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக விளைவுகளை பற்றி எண்ணாமல் தங்களின் நெருப்பை கக்கும் வெறுப்பு வார்த்தைகளால் ஒற்றுமைக்கு தீ வைக்கிறார்கள். அது பற்றி எரியும் போது குளிர் காய்கிறார்கள். மேலும் அது அணைந்து போகாமல் பாதுகாக்கிறார்கள்.
பணக்கார மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த பிரச்சனை இல்லை. பணக்காரர்கள் மத்தியில் சாதியே இல்லை. ஏழை எளியோர் தான் இலகுவாக உணர்ச்சி வசப் படுவார்கள். அதனால் அவர்களை அக்கினிக் குஞ்சுகளாக வளர்த்து தங்கள் சுயலாபத்திற்கு பயன் படுத்திக் கொள்ள சாதிக் கட்சிகளும் மதக் கட்சிகளும் எண்ணுகின்றன.
மாணவர்களை இந்த விளையாட்டில் பலிகடாவாக ஆக விடாமல் பாதுகாக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. சாதிப் பாசத்தை விடாமல் பிடித்துக் கொண்டு உள்ள மாணவர்களிடம் உட் சாதி தீண்டாமை பற்றி கூறுங்கள். சாதிகள் ஒன்றாக இருந்தாலும் ஏழையை ஏற்க பணக்காரன் தயாராக இல்லை. அனைத்து சாதியிலும் காணப்படும் ஒரே ஒற்றுமை ஏழை பணக்காரர் இடையே ஆன நவீன தீண்டாமைதான். அப்படியே ஏற்றாலும் ஏதேனும் ஒரு சுயலாபம் இருக்கும். முடிந்தவுடன்கை கழுவிதீட்டு கழித்து விடுவார்கள்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...