Saturday, July 8, 2017

தேன் தமிழ்

2011 ம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதும் CCRT (CENTRE FOR CULTURAL RESEARCH AND TRAINING)ல் orientation course ல் கலந்து கொண்டேன். தமிழகத்தில் இருந்து 8 ஆசிரியர்கள் ( 2 பெண் ஆசிரியர்கள்) கலந்து கொண்டோம். அரியலூர் மாவட்டத்தில் இருந்து நானும் எனதருமை நண்பரும் கணித ஆசிரியருமான செல்வராஜ் ம் கலந்து கொண்டோம். 28 நாட்களும் நல்ல அனுபவம். காஷ்மீர், நாகாலாந்து, ஜார்கண்ட், உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகா வில் இருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பல்வேறு மாநில ஆசிரியர்களுடன் அவரவர் மாநில கல்வி முறை மற்றும் ஆசிரியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை பற்றி எல்லாம் கலந்துரையாடினோம். அந்த நினைவுகள் யாவும் பசுமையாக உள்ளன. அவற்றில் இருந்து பகிரத்தக்க சுவாரசியமானவற்றை மட்டும் எழுதலாம் என்று உள்ளேன்.
சமஸ்கிருதம் பெரிதா தமிழ் பெரிதா?
CCRT ல் பல வகுப்புகளில் சமஸ்கிருதத்தையும் இந்து மத கலாச்சாரங்களையும் தூக்கிப் பிடிக்கும் நபர்களே சிறப்பு அழைப்பாளர்களாக வந்து தங்கள் கருத்துக்களை வழங்கினர். அப்போது ஸ்ரீராமக்கிருஷ்ணன் என்கிறவர் பொறுப்பு இயக்குநராக இருந்தார்.
ஒரு பல்கலைக் கழக ஆங்கில பேராசிரியர் ஒருவர் வந்து மொழிகள் சார்ந்த வகுப்பை போதித்தார். எங்கே தொடங்கினாலும் சமஸ்கிருதப் பெருமையில் வந்து முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
திடீரென தமிழ் பற்றியும் கூறினார். அடடே என்ன சொல்லப் போகிறார் என நிமிர்ந்து அமர்ந்தோம்.
“Tamil also borrowed lot of words from Sanskrit” (தமிழ் மொழியும் கூட நிறைய வார்த்தைகளை சமஸ்கிருதத்தில் இருந்து பெற்றிருக்கிறது) என்றார்.
நான் உடனே “Objection sir”( யார்கிட்ட எத்தனை தடவ “விதி“ ஒலிச் சித்திரத்தை அந்த காலத்தில் டேப் ரெக்கார்டரில் கேட்டிருக்கிறேன்)
அவர் பதறிப் போய் “yes yes what sir” என்றார்
“நீங்கள் ஒரு நூறு வருடங்களில் எழுதப்பட்ட நூல்களைக் கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்த தொண்ணூறு விழுக்காடு எழுத்தாளர்கள் பிராமணீயர்கள். அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ அல்ல தெரியாமலோ தமிழோடு கலந்து எழுதி விட்டார்கள். அந்த இலக்கியங்களை மட்டுமே எடைபோட்டு இந்த முடிவுக்கு வருவது சரியாகாது. எங்கள் இலக்கியங்களுக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, எழுதப்பட்ட இலக்கண விதிகளை கொண்ட எங்கள் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வார்த்தைகளை பெற்று பிழைத்து வருவதாக தாங்கள் கூறுவது பொறுத்தமன்று. இடையூருக்கு வருந்துகிறேன்” என்று கூறிய உடன் தமிழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து மாநில ஆசிரியர்களும் கரகோஷம் எழுப்பினர்.
அந்த பேராசிரியரும் உடனே “ ஆமாம் தமிழும் சமஸ்கிருதம் போலவே ஒரு செம்மொழி“ என்று கூறி அடுத்த தலைப்புக்கு தாவினார்.
#நிகழ்வுகளின் பகிர்வு தொடரும்.

நமக்கு சாப்பாடு தாங்க முக்கியம்


“பேரழிவு ஆயுதங்கள் (WEAPONS OF MASS DESTRUCTION) எதுவும் ஈராக்கில் இல்லை அது ஆந்திராவில் தான் உள்ளது. அது ஆந்திராவின் காரமான உணவுதான்” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது பிரிவு உபச்சார விழா விருந்தின் போது நகைச்சுவையாக கூறியது போல பேப்பரில் செய்தி படித்திருக்கிறேன்.
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து சிசிஆர்டி பயிற்சி ஹைதராபாத்தில் போட்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். அன்றிலிருந்தே எனது கனவுகளில் ஒட்டு மொத்த ஆந்திராவின் நிலப் பரப்பிலும் மிளகாய் வற்றல் காயப் போட்டிருப்பது போல கனவு வர ஆரம்பித்தது.
அப்போது சிசிஆர்டி மையம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்தது. அது முழுக்க விஐபி ஏரியா. எந்த நேரமும் மயான அமைதியாக இருக்கும். நாங்கள் காலை மாலை வேளைகளில் நடந்து செல்லும் போது அந்த அமைதிக்கு குந்தகம் விளைவிப்போம்.
காலின் பவல் சொன்னது உண்மைதான் என சிசிஆர்டி மெஸ்ஸில் பல முறை உணர்ந்திருக்கிறேன். எல்லா உணவுகளும் செந்நிறம் தான். மாலை வேளைகளில் தேநீர் அருந்தினால் அதுவும் காரமாகத்தான் இருந்தது. டீத் தூளோடு ரெண்டு மிளகாயை கிள்ளி போட்டிருப்பார்கள் போல. என்ன அதிர்ந்து விட்டீர்களா? உணவு காரத்தோடு எனது உள்மன உளவியல் காரமும் சேர்ந்து கொண்டு என்னை பயமுறுத்திக் கொண்டு இருந்தது.
காஷ்மீர் நண்பர்கள் காரம் போதவில்லை(?!!!) என தர்கா ஏரியாவில் இருந்து சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். அவர்களை நாங்கள் பிரம்மிப்போடு பார்ப்போம். பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எனது கனவில் மிளகாய் வற்றல் காய ஆரம்பித்தது. காஷ்மீர் பனியில் மிளகாய் எப்படி காயும் என லாஜிக்காக கேட்டு அந்த கனவை விரட்டியடித்து விட்டேன்.
நாகாலாந்து நண்பர்களோ ”மோப்பக் குழையும் அனிச்சம்” என்பது போல மென்மையான நாவுடையவர்கள். அவர்கள் அனைவருமே தங்கள் மாநில பதப்படுத்தப் பட்ட உணவுகளை எடுத்து வந்து சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிடுவார்கள். தனியே ஒரு மூலையில் அமர்ந்து குழுவாக சாப்பிடுவார்கள்.
ஒரு முறை தர்கா ஏரியாவில் தேனீர் கடைக்கு சென்றிருந்தோம். அங்கே இரண்டு சமோசாவும் தேனீரும் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தோம். தட்டில் இரண்டு சமோசாக்கள் வந்தது. பார்த்த உடன் பக்கென்றாகி விட்டது. இரண்டையும் ஒன்றாக திணித்தால் கூட எனது வாயில் மற்றுமொரு சமோசாவிற்கு இடமிருக்கும். கடைக்காரனை திட்டிக் கொண்டே ஒன்றை எடுத்து சுண்டலை வாயில் விட்டெறிவது போல எறிந்தேன். பார்த்தால் மறுபடியும் ஒரு “பக்”. கல்லிடுக்கில் அமர்ந்திருக்கும் பல்லி போல இரண்டு பச்சை மிளகாய்களை சமோசாவிற்கு அடியில் வைத்திருக்கிறார்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் உள்ளே போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று திகைத்துப் போனேன்.
இவ்வாறாக “மணம் சுவை திடம்“ எதுவும் இல்லாமல் கழிந்து கொண்டிருந்த ஹைதராபாத் நாட்களின் ஒரு காலை நேரத்தில் பல் தேய்த்துக் கொண்டிருந்த போது அருமையான ஒரு மணம். எங்கோ உளுந்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த மணம் வந்த திசையை ஆய்வு செய்தேன். அது எங்கள் மெஸ்ஸை நோக்கி சென்றது. “என்னடா இது அதிசயம்“ என்று அவசர அவசரமாக வாய்க் கொப்பளித்து இரண்டு மக் தண்ணீரில் குளித்து(?!) விட்டு நண்பர்களையும் உசுப்பி விட்டு ஓடினேன்.
அங்கே காஷ்மீர் நண்பர்கள் எனக்கு முன்னே அமர்ந்திருந்தார்கள். வடை மோகத்தில் நம்மள மிஞ்ச யாருமில்லை என்கிற இறுமாப்பு அன்றோடு அழிந்து போனது. எல்லோரும் தட்டில் வடையை வைத்து சாம்பார் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்னதான் வடை மோகம் என்றாலும் அது “சைட் டிஷ்“ தானே? இவர்கள் அதையே “மெயின் டிஷ்“ ஆக சாப்பிடுகிறார்களே என வியந்து கொண்டே பரிமாறும் இடத்திற்கு போனேன். அங்கே கேட்பார் இன்றி ஒரு பாத்திரத்தில் அழகாக வடைகள் நிறைய இருந்தன. நான் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டு ஒரு நான்கு வடைகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அப்புறம் தாவித் தாவி கண்களால் துழாவினேன் இதற்கு பொருத்தமான இட்லியோ அல்லது பொங்கலோ இல்லை. என்னடா இது சீக்கிரமே வந்து விட்டோமோ என்று சந்தேகமாக காஷ்மீர் நண்பர் ஆஸாத்தை (இவர் இன்று வரை மாதம் ஒரு முறை போனில் பேசிக் கொண்டிருக்கும் நல்ல நண்பர்) கேட்டேன், ”ஏய் சாப்பாடே அவ்வளவு தான்ப்பா” என்றார்.
எனக்கு வந்ததே கோபம், வடை இருந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து வந்து டேபிளில் வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். அட இதுவும் நல்ல காரம்தான். இருந்தாலும் வடையாச்சே அதனால் ஒரு 12 வடைகளோடு அன்றைய காலை சிற்றுண்டியை(?!) முடித்துக் கொண்டேன்.
சாப்பாட்டிற்கு ஆ“காரம்“ என ஆந்திராக் காரர்கள் தான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஆத்தாடி என்னா காரம்!!!

ஆண்டன் செக்காவ் ரஷ்யச் சிறுகதை எழுத்தாளர்



நூலகத்திற்கு செல்லும் போதெல்லாம் ஒரு மொழிப் பெயர்ப்புக் கதைத் தொகுப்பையும் எடுத்து வருவது வழக்கம். மேலை நாடுகளின் பண்பாடு கலாச்சாரத்தை ஒரு இலக்கியவாதியின் பார்வையில் பார்ப்பதென்பது அந்த நாட்டு வழக்கங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் போல தெளிவாக அறியலாம். அதில் ஒரு சுவாரசியம் எனக்கு. உங்களுக்கும் அந்த ஆவல் உண்டென்றால் நூலகத்தில் புலமை பித்தன் அவர்கள் மொழி பெயர்ப்பில் உலகச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் துவங்குங்கள்.

மறுபடி ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைகளுக்கு வருவோம். இவரது ‘CHAMELEON’ என்கிற சிறுகதையை ஆங்கில வடிவில் நான் எனது பள்ளி நாட்களில் கதைப் பகுதி (non – detail) இல் படித்ததாக ஞாபகம். மறுபடி மிர் பப்ளிகேஷன் நூல்களை திருச்சி மக்கள் மன்றத்தில் கொட்டிக் குவித்து 5 ரூபாய் 10 ரூபாய் என்று விற்பனை செய்தார்கள். அதில் அள்ளிக் கொண்டு வந்த ஒரு புத்தகத்தில் தமிழிலும் வாசித்திருக்கிறேன்.

“அட என்னப்பா கதைக்கு வாப்பா!!” என்கிறீர்களா. இதோ வந்துட்டேன். கதை ரொம்ப சின்னது தான். தெருவில் ஒரு போலீஸ் ஆபீஸரும் ஒரு போலீசும் ரோந்து செல்கிறார்கள். அங்கே கூட்டமாக உள்ளது. என்னவென்று பார்த்தபோது ஒரு நாய் ஒருவனின் கையை கடித்து இரத்தம் கொட்டிக் கொண்டு உள்ளது. அந்த குட்டி நாயையும் பிடித்து வைத்துள்ளார்கள். போலீஸ் ஆபீஸர் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த நாயை கொல்ல வேண்டும் என்கிறார். கூட்டத்தில் ஒருவர் “போலீஸ் உயர் அதிகாரி ஒருவரது நாய்” என்கிறார். உடனே அந்த நாயின் கட்சிக்கு தாவி விடுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த சின்னஞ் சிறு நாய் உன் கை உயரத்திற்கு தாவி உன்னை கடித்தது என்பதை நம்ப முடியாது. அந்த நாயிடம் நீ ஏதோ குறும்புத்தனம் பண்ணியிருக்கிறாய் உன்னை விட்டேனா பார் என்று சீறுகிறார். உடனே அவர் உடன் வந்த போலீஸ் காரர் இது நமது அதிகாரியின் நாய் கிடையாது என்கிறார். உடனே அவர் கடிபட்டவன் மீது இரக்கம் கொண்டு நாய் மீது சீறுகிறார். இந்த மாதிரி ஒரு மூன்று முறை கட்சி தாவும் சங்கடமான சூழல் ஏற்படுகிறது. மூன்று முறையும் சளைக்காமல் கட்சி மாறுகிறார். இறுதியில் அந்த நாய் அவர்களது அதிகாரியின் தம்பி உடையது என்று தெரிய வருகிறது. அந்த நாயை மீட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

நகைச்சுவையோடு நல்லதொரு கருத்தான கதை. சட்டம் அங்கேயும் கூட ஏழை பணக்காரர் பார்த்து தான் தன் கடமையை செய்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்ன வென்றால் ஒவ்வொரு முறை கட்சித் தாவும் போதும் அந்த அதிகாரி சூடாக இருப்பதாக கோட்டை கழற்றி அந்த போலீஸிடம் தருவதும் பின்னர் குளிர் வாட்டுவதாக கோட்டை அணிவதும் என இருப்பார்.
பள்ளி விழாக்களில் இந்த கதையை நாடகமாக போடலாம். வசனம் ஏதும் ஸ்பெஷலாக நீங்கள் எழுதி விடாதீர்கள் அவரது வசனத்தை அப்படியே பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நாடகக்காரி என்று புலமைப் பித்தன் அவர்கள் தலைப்பிட்ட ஆண்டன் செக்காவ் அவர்களின் “THE CHORUS GIRL” என்கிற கதை. இதுவும் சின்னஞ் சிறியது தான். வேண்டுமானால் கூகுளில் படிக்கத்தான் அதன் ஆங்கிலப் பெயரையும் கொடுத்துள்ளேன். எளிமையான ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒரு பெண் ஒருத்தியின் வீட்டில் ஆடவன் ஒருவன் இருக்கிறான். வழக்கமாக அங்கே வந்து போகிறவன். கதவு தட்டப் படுகிறது. இவன் மறைந்து கொள்கிறான். வந்தவள் அந்த ஆடவனின் மனைவி. இவனை கேட்கிறாள். இல்லை என்றதும் “உனக்கு பரிசளிக்க 900 ரூபிள் பணத்தை அலுவலகத்தில் கையாடல் செய்து விட்டான். உடனே அதனை தந்து அவன் சிறைக்கு செல்லாமல் காப்பாற்று என்று மிரட்டிக் கெஞ்சுகிறாள். காலில் விழக்கூட முனைகிறாள். அதனால் பதறி இவள் தன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருள் அத்தனையையும் இரக்கப்பட்டு தந்து விடுகிறாள். அவள் சென்றவுடன் அந்த ஆடவனிடம் வந்து “நீ எப்போது எனக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தாய்? ஒன்று கூட எனக்கு தந்தது இல்லையே!” என்கிறாள். அதற்கு அவனோ இவள் சொன்னதை காதில் கூட போட்டுக் கொள்ளாமல் அவள் எவ்வளவு கவுரவமானவள் இந்த ஈனப்பிறவியின் காலில் விழ நான் காரணமாகி விட்டேனே என்று அவளை அருவருப் போடு தள்ளி விட்டு சென்று விடுகிறான். தன் அனைத்து உடைமைகளையும் இழந்ததை எண்ணி இவள் அழுகிறாள்.

இந்த கதையின் ஆரம்பத்தில் நாம் அந்த ஆடவனின் மனைவிக்காக இரங்குவோம். கதை முடிவில் அந்த பெண்ணுக்காக இரக்கப்படுவோம்.  இவ்விரண்டு கதைகளையும் படித்த பின் ஆண்டன் செக்காவ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டுள்ளேன்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...