Saturday, June 12, 2021

எனக்குரிய இடம் எங்கே

 

புத்தகம் – எனக்குரிய இடம் எங்கே? (வகுப்பறை உறவுகளும் உரையாடல்களும்)


ஆசிரியர் – ச.மாடசாமி

பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்

“பூக்களின் மீது புயல் வீசுவது போல” இந்த உதாரணம் 1999 ல் பி.எட் படித்தபோது நான் படித்த ஒன்று. எதைப் பற்றி தெரியுமா? லெக்சர் மெத்தட் ல் பாடம் நடத்துவது பற்றிய ஒன்றுதான் அது.


ஏட்டில் எத்தனை எத்தனை வழிமுறைகளை படித்திருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த லெக்சர் மெத்தடில் தான் பாடம் நடத்துகிறோம்.  பூக்கள் மீது வீசும் புயல் சூராவளியாக மாறுகிறதே ஒழிய அது ஒருபோதும் கரையை கடப்பதாக தெரியவில்லை. எந்த முன்தயாரிப்பும் திட்டமிடலும் இன்றி பெரிதாக மெனக்கெடாமல் வண்டியை ஓட்டலாம். சிலபஸ் என்கிற பிறவிப் பெருங்கடலை மோட்டார் படகில் கடக்க உதவும் வழிமுறை அல்லவா?


சிலபஸ், தேர்வுகள், பொதுத்தேர்வுகள், மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காடுகள் இந்த விஷயங்கள் யாவும் தரும் அழுத்தம் மகத்தானது. ஆமாம் என்னதான் பல புதுமைகளை ஆசிரியர்கள் மனதில் உருவேற்றிக் கொண்டு சென்றாலும் இந்த விஷயங்கள் யாவும் அவ்வாசிரியரை மாற்றத்தை நோக்கி முதலடி வைப்பதையே தடுத்தாட்கொண்டு விடுகின்றன.


தோழர் ச.மாடசாமி அவர்களின் “எனது சிவப்பு பால்பாய்ண்ட் பேனா” என்கிற அற்புதமான நூல் கற்பித்தல் குறித்த எனது பார்வையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்திய நூலாகும். இந்த நூலை ஒரு பயிற்சி வகுப்பில் இறையன்பு அவர்கள் பரிந்துரை செய்தார்.


தோழர் மாடசாமி அவர்களின் நூல்கள் யாவும் ஜனநாயக வகுப்பறையை வலியுறுத்துபவை. வகுப்பறையில் ஆசிரியரின் சர்வாதிகார போக்கு இருத்தலாகாது. அங்கே மாணவர்களுக்கும் இடம் உண்டு. அவர்களையும் பேச, கேள்வி கேட்க வைக்கவேண்டும் என்கிறார். தோழரின் நூல்களில் நான் வாசித்தவற்றில் இது ஏழாவது நூல். 


அய்யப்பராஜ் என்கிற விரிவுரையாளரை முன்னிருத்தி நாவல் வடிவில் எழுதப்பட்ட சுவாரசியமான ஜனநாயக வகுப்பறை குறித்த நூல் தான் இது. இதில் வரும் அய்யப்பராஜ் தோழராகத்தான் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு எழாமல் இல்லை.


முதல் அத்தியாயத்தில் அய்யப்பராஜ் ஒரு சாதாரண ஆசிரியர். ஆதிமூலம் அடங்காத மாணவன். வெளியே போ என்றதற்கு ஒப்புக்கு கூட காத்திருக்காமல் விருட்டென்று வெளியேறியவன்.


“எத்தனை திறமை இருந்தால் என்ன? ஒரு முன்கோபம் போதும் வகுப்பறையின் முகத்தில் கீறலை உண்டுபண்ண” எவ்வளவு அருமையான உண்மை.


வெங்கடேசன் என்கிற ஆசிரியர் ஓய்வு பெறுகிறார். அவருக்கான பிரிவு உபச்சார விழா நடக்கிறது. சந்திரன் என்கிற பேராசியரியர் பேச எழுகிறார். வழக்கமான வாழ்த்துரையில் இருந்து விலகிய பேச்சு.


“வெற்றி, தோல்வி, மனஸ்தாபம்,நட்பு, எழுச்சி,வீழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு ஜீவனுள்ள சந்திப்பு வகுப்பறை“ என்கிறார்.


கற்பவரும் கற்றுத்தருபவரும் ஒரு சேர வளரும் இடம். ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாதிரியே பத்தாம் வகுப்பில் ஒரு மாணவன் வெளியேறுவது எவ்வளவு மோசமானதோ அதைவிட மோசமானது பணிக்குச் சேர்ந்த அன்று போலவே பணிநிறைவு வரை ஒரே மாதிரி பணியாற்றும் ஆசிரியர்கள்.


ஆனால் ஆசிரியர்கள் எப்போதுமே, “இது என்ன சாதாரண வாய்ப்பா? உருவாக்குவது என்றால் சாதாரண காரியமா? பணிகளில் உயர்ந்த பணி அது. படைப்புக்கு இணையான பணி” என்கிற பெருமித த்தோடும் உற்சாகத்தோடும் ஆண்டுதோறும் தங்களது அறிவையும் வழிமுறைகளையும் மேம்படுத்திக் கொண்டே வளரவேண்டும்.


சந்திரனின் பேச்சைக் கேட்ட அய்யப்பராஜ் தனது வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் செய்து வகுப்பறையில் மாணவர்களுக்கும் இடம் தருகிறார். கேள்வி கேட்க, பேச, பாட, விமர்சிக்க, ஆய்வு செய்ய என்று பல வாய்ப்புகளை வழங்குகிறார். அவரது வகுப்புகள் உற்சாகமான ஒன்றாக மாறுகிறது. மாணவர்கள் அவரது வகுப்புக்கு ஏங்கும் நிலை வருகிறது. ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைகிறது. வகுப்பறை சுவர்களைத் தாண்டி அவரது வெளி விரிவடைகிறது. ஆதிமூலம் அவரது செல்லப்பிள்ளை ஆகிறான்.

 

சுதந்திர வகுப்பறையில் தானே, “திணிப்பதல்ல கல்வி, வசப்படுத்துவது அல்ல கல்வி, பங்கேற்க வைப்பது கல்வி, உருவாக்குவது கல்வி” என்பதெல்லாம் சாத்தியம்.


வகுப்பறையில் உள்ள அத்தனை மாணவர்களின் முகங்களையும் உற்று நோக்கி கண்டறியும் வண்ணம் “ஆயிரம் கண்ணுடையாள்” ஆக ஆசிரியர் இருக்க வேண்டும். 


பொதுத்தேர்வு என்கிற பூதம் காக்கும் தேர்ச்சி விகிதம் என்கிற புதையல் இருக்கும் வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகளிலாவது ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை செய்து பார்க்கலாம் அல்லவா? அனைத்து குழந்தைகளையும் பங்கேற்பாளராக மாற்றுவல்ல யுத்திகளை சிந்திக்க வேண்டும். திட்டமிட வேண்டும். ஒவ்வொரு மாணவனின் முகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்தும் வித்தைகளை கற்று அறிந்து செயல்படுத்தி வகுப்பறையை மகிழ்ச்சிக்குறிய இடமாக மாற்ற முயலவேண்டும்.


இதுமாதிரி எல்லாம் யாரு சார் செய்யுறாங்க? என்று கேட்டால் என்னிடமே நிறைய உதாரணங்கள் உண்டு. விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிவரும் சக.முத்துக்கண்ணன் என்கிற அறிவியல் ஆசிரியர் தண்ணீர் பற்றிய பாடம் நடத்திய விதத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அவ்வளவு சிறப்பாக இருந்தது. முயன்றால் எல்லோருக்கும் சாத்தியம் தான். வகுப்பறையை தனது படைப்புக்கான களமாக கருதியதால் தான் அவரால் “சிலேட்டுக்குச்சி” என்கிற அனுபவ கட்டுரை நூலை எழுத முடிந்தது. 


நூலின் இரண்டாம் பாகத்தில் “மாணவர்களிடம் கற்போம்” என்கிற பகுதி உள்ளது. அதில் திலீப் நாராயணன் என்கிற முன்னால் மாணவன் தோழரின் பத்திரிக்கை கட்டுரைக்கு எழுதிய கடிதம் ஒன்றை நமது பார்வைக்கு வைத்துள்ளார். வகுப்பறையின் வலிமையை உணர அந்த கடிதம் ஒன்று போதும். எனது மாணவன் முருகானந்தம் எனது கண்முன்னால் வந்து போனான்.


கல்வியியல் கல்லூரிகளில் கல்வி உளவியல், எஜுகேஷன் டெக்னாலஜி, கற்பித்தலில் புதுமைகள் என்று அரைத்த மாவையே போட்டு அரைத்து அறுத்தெடுக்காமல் இந்த மாதிரி நூலையும் வையுங்கள். அல்லது பாடத்துக்கு வெளியேயான வாசிப்பு என்கிற அளவில் வாசித்து மதிப்புரை எழுதச் செய்யுங்கள். மாதம் ஒரு முறையாவது கல்வி மீது உண்மையான அக்கரை உள்ளவர்களை அழைத்து எதிர்கால ஆசிரியர்கள் மத்தியில் பேச வையுங்கள். 


குறைந்தபட்சம், “வகுப்புக்கே வராமல் நேராக தேர்வறைக்குச் செல்ல நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?” என்கிற டீலிங் இல்லாமலாவது கல்வியியல் கல்லூரிகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள கற்பித்தல் சார்ந்த பல அருமையான நூல்கள் உள்ளன. அவற்றில் தோழர் ச.மாடசாமி அவர்களின் நூல்களும் ஏராளம் உண்டு. நிறைய வாசிப்போம், கற்றல் கற்பித்தலை சுவாரசியமான ஒன்றாக மாற்றுவோம். தன்னம்பிக்கை மிளிரும் ஆளுமைகளாக குழந்தைகளை உருவாக்குவோம்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...