Thursday, April 8, 2021

சிந்திய வெண்பனி வேளையும் சிந்தாமணியின் அதிகாலையும்!!

 



     பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை செய்தித்தாளில் பார்த்த அதே பரபரப்பும் குறுகுறுப்பும் நமக்கான தேர்தல் பணி எந்த ஊரில் என்று தெரிந்து கொள்வதிலும் இருக்கும். அதிலும் ரிசர்வ் டூட்டி என்றால் கும்மாளம் தான். சிலருக்கு மெயின் ரோட்டில் இருக்கும் ஊர்களில் இருக்கும், சிலருக்கு டவுன் பள்ளிகளில் இருக்கும் வேறு பலருக்கு குக்கிராமங்களில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் இருக்கும் இரண்டு அறைகள் கொண்ட ஓட்டுக் கட்டிடத்தில் கிடைக்கும். எங்கே கிடைத்தாலும் சென்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய ஏற்பாடுகளை விதிமுறைகளை கறாராக கடைபிடித்து செய்ய வேண்டும்.

     சிந்தாமணி என்கிற முக்கிய சாலையோர கிராமத்தில் எனக்கான பணி வழங்கப் பட்டிருந்தது. நான் பலநூறு முறை பயணம் செய்த சாலை அது என்பதால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மதியம் 2.00 மணியளவில் எனக்கு பணி வழங்கப் பட்ட பள்ளிக்கு சென்றால் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம், புத்தம் புதிய கட்டிடத்தில் மாணவர்கள் கூட அமராத நிலையில் நாங்கள் தான் முதன்முதலாக சென்று அமர்ந்தோம். வழ வழ டைல்ஸ், ஜிலு ஜிலு ஃபேன் என்று அருமையாக இருந்தது.

     சரி கழிவறை வசதி எப்படி இருக்கிறது என்று சாம்பிள் பார்த்து விடுவோம் என்று சிறுநீர் கழிக்க சென்றேன். நேராக சற்று புதிய வண்ணம் பூசிய அறைக்குள் நுழைந்தேன். கழிவறைக் கதவை ஒரு பத்து செமீ திறந்தால் கதவு எங்கேயோ சிக்கியது. எனக்குள் இருந்த இஞ்சினியர் மூளையை பிராண்டி யோசித்தேன். அப்போது தான் கதவின் மேல் நுனி மேற்கூரையான இரும்பு ஷீட்டை உரசியபடி சிக்கித் தவித்தது. வேலை முடிந்த காரணத்தினால் இஞ்சினியரை உள்ளே அனுப்பி விட்டு பாகுபலியை வெளியே கொணர்ந்து ஆனமட்டும் முக்கி மேற்கூரையை உயர்த்தி கதவை சற்று விரித்து திறந்தேன். அங்கே நான் கண்ட கழிவறையின் கோலத்தை விளக்கமாக சொன்னால் ஒரு வாரத்திற்கு உங்களுக்கு சோறு தொண்டைக்குழிக்குள் இறங்காது. ”அடப்பாவிகளா இதற்காகத்தான் மேற்கூரையை கீழே தட்டி கதவையே கைது செய்து வைத்திருந்தீர்களா?” என்று அவர்களின் ராசதந்திரத்தை வியந்தபடி வலது புறம் திறந்து இருந்த இரண்டு அறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். நான்கில் இரண்டு திறந்தும் மற்ற இரண்டு பூட்டியும் கிடந்ததன. பூட்டிக் கிடந்ததற்கு காரணத்தை நான் கூறவும் வேண்டுமோ?

     “திறந்திடு சீசே“ என்று மந்திரம் சொல்லாமல் திறந்தவுடன் அந்த அறையின் ”நறு”மணம் என்னை திக்குமுக்காடச் செய்தது. சரி என்று பிராணயாமம் செய்தவண்ணம் ஒரு வாளி தண்ணீரை சுற்றிலும் ஊற்றி நாற்றத்தை குறைக்க எண்ணினேன். “சூரியனை நீர் ஊற்றி அணைக்க இயலுமா” என்ற படி நான் ஊற்றிய தண்ணீர் அப்படியே குழியை நிறைத்து நின்றது. ஏற்கனவே பிடித்த பிராணயாமம் மூச்சு முட்டியது. அப்புறம் ஒரு வழியாக முழுதாக மூன்று நிமிடங்களில் மொத்த நீரும் இறங்கியது. அத்தோடு என்னுடைய “மைக்ரோ இர்ரிகேஷனை“யும் (எச்.ராஜாவிடம் மீனிங் கேட்டுக் கொள்க) சங்கமித்துவிட்டு பின்னங்கால் பிடறியில் பட வெளியே ஓடிவந்தேன்.

     நல்வாய்ப்பாக பெண் ஆசிரியர்களை பக்கத்து வீட்டினர் அழைத்து நல்ல படுக்கை வசதி செய்து கொடுத்ததோடு அவர்கள் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை உபயோகித்துக் கொள்ள அனுமதித்தனர். அப்போ எங்க கதி? இரவு பத்து மணிக்கு ஒரு பிராணயாமம் அப்புறம் அதிகாலை ஒரு பிராணயாமம். மைக்ரோ இர்ரிகேஷனுக்காகவெல்லாம் கழிவறையை திறக்க மனம் துணியவில்லை. திறந்தவெளி புல்வெளிக்கழகம் தான். அதிகாலை நான்கு மணிக்கு குளியல் என்பதால் டேங்க் அருகில் ஒரு பக்கெட் வைத்து குளித்துக் கொண்டேன்.

     கழிவறை விஷயம் மட்டும் தான் மோசம். மற்றபடி பூத் லெவல் ஆபீசராக இருந்த வில்லேஜ் அசிஸ்டெண்ட் மற்றும் பிரசிடெண்ட் இவர்களின் ஏற்பாட்டில் சரியான நேரங்களில் சுவையான உணவுகள் வழங்கப் பட்டன. மொத்த வாக்காளர்களே ஐநூறு சொச்சம் தான் என்பதால் வாக்குப் பதிவு எந்த குழப்பமும் இன்றி சென்றது. எனவே வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிட்ட படி பணியாற்றினோம். சில ஊர்களில் கன்ட்ரோல் யூனிட்டை சீல் செய்த அடுத்த நிமிடம் 17 சி படிவத்தை நிரப்பி பெற்றுக் கொண்டு அனைவரும் சிட்டாக பறந்து விடுவார்கள். கடைகளும் கூட பெரும்பாலும் இருக்காது. பட்டினியோடு விடியற்காலை வரும் சோனல் ஆபீசருக்காக காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை எல்லாம் ஏற்பட்டதுண்டு. ஆனால் சிந்தாமணியில் இரவு உணவாக இரண்டு சப்பாத்திகள் மற்றும் நான்கு இட்டிலிகள் என்று சிறப்பாக பார்சல் கொண்டு வந்தார்கள். உபசரிப்புக்கு நன்றி கூறி விடை கொடுத்தோம்.

     நான் மேலே சொன்னது போலவே சோனல் ஆபீசர்கள் எங்க பூத்துக்கு வந்த நேரம் நள்ளிரவைத் தாண்டி 3.00 மணி. ஒரு வழியாக பொட்டியை ஒப்படைத்து பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டோம்.

     தேர்தல் பணிக்கு செல்லும் போதெல்லாம் நான் அரசியல் சார்ந்து மறந்தும் பேசுவதில்லை. அந்த வழியாக செல்லும் யாரேனும் நமது அரசியல் நிலைப்பாடு பற்றி அறிந்து கொண்டால் நமது பணிமீதான நம்பகத்தன்மையை சந்தேகிப்பார்கள் என்பது ஒரு காரணம். இந்த முறை தெருவில் நின்று பேசும் போது சீமான் குறித்து நகைச்சுவையாக பேசிவிட்டு பிறகு நாக்கை கடித்துக் கொண்டேன். தம்பிகள் யாரேனும் “காத்திரு பகையே“ என்று வீட்டிற்கு சென்று ஆயுதத்தோடு வந்துவிட்டால் எங்க கதி அதோ கதிதான். ஆனா பாருங்க எங்க மையத்தில் முக்கிய இரண்டு எதிரெதிர் கட்சிகளுக்கு மட்டுமே ஏஜெண்ட் இருந்தனர்.

     மற்றொரு சம்பவம், சோனலுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்த போது ஒரு ஒன்பது மணிவாக்கில் எங்க மைய ஏஜென்ட் வந்து “சாப்பிட்டு விட்டீர்களா?“ என்று பரிவோடு கேட்டார். “சாப்பிட்டேன் சார்” என்று கூறினேன். ”தண்ணி வேணுமா சார்?“ என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார். ”அதான் ரெண்டு கேன் வாங்கி குடுத்துருக்காங்க சார் இன்னும் பத்து லிட்டருக்கு மேல இருக்கும்” என்றேன். சிரித்தபடி சென்று விட்டார். அவர் சென்ற பிறகு ஒரு ஐம்பது அடி ஆழத்திற்கு சென்று யோசனை செய்த போது தான் அவரது கேள்வியில் பொதிந்திருந்த உண்மை வௌங்கியது.

 ”அடச்சே, அதுக்குத்தான் நான் சரிபட்டு வரமாட்டேனே!!”

 

 

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...