Tuesday, December 21, 2010

நானோ டெக்னாலஜி

டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது டாக்ரேட் ஆராய்ச்சிக் கட்டுரை-ஐ அளிக்கும் போது ஒரு சர்க்கரை மூலக்கூறின் கூட்டணுவின் பரிமாணத்தை சுமார் ஒரு நானோமீட்டர் என்று அறிவித்தார், முதன் முதலாக நானோமீட்டர் என்னும் அளவு உலகுக்கு அறிமுகமானது. நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியன் பகுதி. ஒரு நானோமீட்டர் என்பது பத்து ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம்." நானோ" உலகின் விதிகள், குவாண்டம் இயற்பியல் விதிகள். இவைகளை விளக்க புதிய முறைகள், கருவிகள் வேண்டும். அவைகளை சரியாக அறியும் போது வெளிப்படும் சாத்தியங்கள் மனிதனை கடவுளுக்கு அருகில் கொண்டுசெல்கின்றன. சுமார் நூறு நானோ மீட்டரில் இருந்து நானோ டெக்னாலஜி ஆரம்பிக்கிறது. படிப்படியாக அளவு குறைந்துகொண்டேபோய் ஒரு தனிப்பட்ட எலெக்ட்ரானை நம் விருப்பத்தை போல நடத்துவதுதான் இந்த இயலின் குறிக்கோள். ஆராய்ச்சி முறைகள் சில, " இது சாத்தியமே" என்கிற நம்பிக்கையை தருகின்றன. நானோ டெக்னாலஜின் ஆதார சாகசம் அணு அளவில் பொருள்களை நம் விருப்பதை போல மாற்றுவது. ஒரு பொருளின் அணுகட்டத்தை மாற்றினால் அந்தப் பொருளின் இயற்கை பண்புகள் மாறிவிடும் என்பதே இதன் அடிப்படை. உதாரணமாக, அடுபுக்கரியின் அணுகட்டமைப்பை சற்று மாற்றினால் அது வைரமாகிறது. இயற்கையில் இயல்பாக நடக்கும் இயற்கை வினைகளை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்பிக்கை தருகிறது இந்த டெக்னாலஜி. டெக்ஸ்லெர், மூலக்கூறு கம்ப்யூட்டர்களை வடிவமைபத்ற்கான யோசனை இயற்கையில் ப்ரோடீன் தயாரிப்பை கவனித்தால் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும் ஒரு மரபணு அதற்குள்ளேயே அதன் இறுதி வடிவத்தின் செய்தியை வைத்திருப்பதை போல ஒரு கம்ப்யூட்டர் தான் இறுதியில் இந்தப் வேலை செய்யும் சாதனமாகப் போகிறோம் என்கிற அறிவை அதற்குள்ளே வைத்துவிட முடியும் என்கிறார். நூறு நானோ மீட்டரைவிட நுட்பமாக பொருள்களை தயாரிக்கும் திறமைதான் நானோ டெக்னாலஜி. இந்தத் திறமையை இரண்டு விதமாக அணுகுகிறார்கள், ஒன்று, "டாப் டவுன் " மற்றொன்று "பாட்டம் அப் ". அதாவது படிப்படியாக அளவை மாற்றிக்கொண்டே போய் "நானோ" அளவை எட்டுவது. இன்றைய தினத்தின் மைக்ரோ டெக்னாலஜி முறைகள் இந்த "டாப் டவுன்" வகையைச் சார்ந்தவை.மூலக்கூறுகள் என்னும் கூட்டணுவை ஒரு ச்விட்சாக மாற்றலாம் என்கிற யோசனை சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. இது சமிபத்தில் தான் நடைமுறையில் சில வேதியியல் பொறியியல் வளர்ச்சிகளினால் சாத்தியமாகி இருக்கிறது. மூலக்கூறுகள் என்னும் கூட்டணுக்கள் சில சேர்ந்து கொண்டு oxidation reduction என்னும் வேதியியல் மாற்றம் பெறும் போது ஒரு ச்விட்சாக இயங்குகிறது என்று UCLA பல்கலைகழகத்திலும், ஹியூலிட் பக்கர்டு நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். நானோ டெக்னாலஜியின் பொருள்கள் வாயு அல்லது திரவ வடிவில் இல்லாமல் அதே சமயம் திடப்பொருள்கள் போல திடமாக இல்லாமல் குறிப்பிட்ட வரிசையில் மாறக்கூடிய திடப்பொருள்கள். நானோ டெக்னாலஜியின் தயாரிப்பு முறையில், அணு அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பொருளை அணு அணுவாக, சீராக உற்பத்தி செய்ய முடியும் என்பது சாத்தியம் எனில் கழிவுப் பொருள்கள் இருக்காது. தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை காற்றில் கலக்காமல் செயல்படுத்தலாம். விரயமான செயல்கள் இல்லாததால் ஆற்றல் அதிகரிக்கும்.
இன்றைய இந்தத் தொழில்நுட்பம் ஓர் அபரிவிதமான வளர்ச்சியை மனித வாழ்வில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, December 9, 2010

தமிழ் நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் SSLC தேர்விற்கு கணிதப் பாடத்தில் தயாராவது எப்படி?

 மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை 1 முதல் 42 வரை உள்ள அனைத்துக் கணக்குகளையும் குறிப்பிட்ட வரையறைக்குள் பொருத்தி விடலாம். ஏதேனும் 3 பழைய வினாத்தாள்களை வினா வாரியாக ஒப்பிட்டால் இதனை நீங்களே உணர முடியும்.
 இரண்டு மதிப்பெண் கணக்குக்ளைப் பொறுத்தவரை 7 கணக்குகள் மிக எளிது என்ற வகையில் வருகின்றன. அவற்றுடன் இன்னும் 3 கணக்குகளை சேர்த்து பயிற்சி செய்தால் கண்டிப்பாக 20 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்
 20 ஐந்து மதிப்பெண் கணக்குகளிலிருந்து ஏதேனும் 9 கணக்குகளை செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் வினாத்தாள் வடிவம் உள்ளது. எனவே 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை உங்களுக்கு சுலபமான 9 கணக்குகளை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தால் 45 மதிப்பெண்கள் நிச்சயம்.
 செய்முறை வடிவியலைப் பொறுத்தவரை வட்ட நாற்கரம் மற்றும் இரட்டைத்தொடுகோடுகள் கணக்குகளை பயிற்சி செய்தால் 10 மதிப்பெண்ணை உறுதி செய்து விடலாம்.
 வரைபடம் பகுதியில் நேர்மாறல் எதிர்மாறல் வரைபடம் வரைவதும் சரி கணக்கீடு செய்வதும் சரி மிகச்சுலபம் அதனை பயிற்சி செய்தாலே எந்த சிரமமும் இல்லாமல் 10 மதிப்பெண் பெற்று விடலாம்.
 1 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வகையில் மட்டுமே வரும் என்பதால் பழைய வினாத்தாட்களைக் கொண்டு தயார் செய்தால் 15 மதிப்பெண் வாங்கிவிடலாம். நண்பர்களிடையே போட்டி வைத்துக் கொண்டு 1 மதிப்பெண் வினாத்தாள் தயார் செய்து தேர்வு வைத்துக் கொள்ளலாம்
இது தொடர்பாக அட்டவணைப் படுத்தப்பட்ட எதிர்பார்க்கப்படும் வினா வகைகள் தேவைப்படின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

படித்ததில் பிடித்தது- கவிதைகள்.


நம்புங்கள்

முச்சந்தியில் விளக்கேற்றுங்கள்
தாலி பாக்கியம் தங்க
மஞ்சள், பச்சையில்
புடவை உடுத்துங்கள்.

அண்ணாமலை தீபம் அணைந்ததாம்
அடுக்கடுக்காக இனி
துன்பங்கள்தான் என்கிறார்கள்

மூத்த பிள்ளைக்கு ஆகாதாமே?
மறக்காமல் வேப்ப மரத்தில்
மஞ்சள் கயிறு கட்டுங்கள்

வீட்டுக்கு வீடு மரம் நடுங்கள்
புவியே பிழைக்காதென்றால்
புரளியாய்க்கூட
நம்புகிறார்களில்லை!



கருத்து
இந்த உலகத்திலேயே சிறந்த இசையாக ஒவ்வொருவருக்கும் தோன்றுவது, அவரவர்களின் பெயர் ஒலிக்கும் ஓசைதான். வஞ்சனை இல்லாமல் எப்போது எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ஒருவரை பெயர் சொல்லி அழையுங்கள்.
     சபையோர் முன் ஒருவரை பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது என்றால், தனிமையில் கண்டியுங்கள்.

காட்சி
காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியாடா..
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
-நன்றி ஆனந்த விகடன்.

Wednesday, December 8, 2010

குழந்தைகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியா?

பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் உண்டு. அதற்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்களும் உண்டு. நான் பேசிப்பார்த்த வரையில் தன் குழந்தை ஓர் டாக்டராக, சாப்ட்வேர் என்ஜினியராக, ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக, ஓர் கலெக்டராக பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சிறுவயதில் நி..றை..ய சாப்பிடும் கொழுகொழு குண்டு குழந்தையாக தன் குழந்தை இருக்க வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் மிக குறைவு. எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் குழந்தை அனைத்திலும் முதல் பரிசே பெற வேண்டும் என எண்ணாத பெற்றோர்களே இல்லை எனலாம்.


ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்ததாக உள்ளன. ஓர் தாய் தன் மகனை பாட்டு, நடனம், யோகா, கராட்டே, கீ போர்டு, கையெழுத்து, டென்னிஸ் என இன்னும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் மகன் மீது தனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவும் கூறிக்கொண்டிருக்கிறார். அப்பையனுக்கு அதிகபட்சம் 9 வயதிருக்கலாம். இந்த வயதில் இவையெல்லாம் சுமையாக இருக்குமே தவிர சுகமாக இருக்க வாய்ப்பில்லை. வெகு விரைவிலெயெ இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு ஏற்பட்டு நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்ல மாட்டேன் என அப்பையன் கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெற்றோர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக சகோதர சகோதரிகளைக் கொண்ட குழந்தைகள் இது போன்ற தொந்தரவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள்.


பெற்றோர்களுக்கு என்ன அனுபவங்களும் விஷய ஞானங்களும் உள்ளனவோ அதைப் பொறுத்தே அவர்கள் தங்கள் குழதைகள் பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அமையும். இவ்வுலகில் தனக்கு தெரியாத விஷயங்களை தன் குழந்தை மீது எந்த பெற்றோரும் திணிக்க வாய்ப்பே இல்லை. நல்ல விஷயங்களுக்கும் இதுவே விதி. டாக்டர், என்ஜினியர், போலிஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற உத்தியோகங்களெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவை அதனாலேயே அதையே அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கான குறிக்கோளாக கொள்கிறார்கள். ஆனால் அதைவிட தெரியாத, அதிக சம்பாத்தியம் கொடுக்கக்கூடிய, மதிப்பும் மரியாதையும் வாய்ந்த எத்தனையோ உத்தியோகங்கள் இந்த உலகில் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியாது என்பதற்காக உங்கள் குழந்தை அவ்வுயர்ந்த உத்தியோகங்களை அடையக்கூடாதா?


ஓர் தந்தை தினமும் தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். வகுப்பறைக்குள் சென்று புத்தகப்பைகளை வைத்துவிட்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகுப்பறையை நோட்டமிடுவார் தந்தை. ஒரு நாள் வகுப்பறை சுவர்களில் நான்கு அட்டைகள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பல மாணவ மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்டு அதற்கு நேராக ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கட்டத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன. சில மாணவ மாணவிகள் அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தனர். தந்தை தன் மகன் பெயரை நான்கு அட்டைகளிலும் தேடினார். எதிலும் அவர் மகன் பெயர் இல்லை. இவ்வட்டைகள் மாணவர்களின் எதோவொரு செயலை குறிப்பதாக இருக்கலாம். சிறப்பாக செய்துள்ளவர்களுக்கு புள்ளிகள் அளித்து பாராட்டுகிறார்கள் போல், நம் மகன் அதில் இடம் பெறவில்லை ஆயினும் மகனிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். அவன் மனம் கஷ்டப்படும் என தனக்குத்தானே பேசிக்கொண்டு தந்தை சென்று விட்டார். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவ்வறிவிப்பு அட்டைகளை பார்ப்பது அவருக்கு வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் திடீரென அவர் மகன் பெயர் ஓர் அட்டையில் கடைசியாக எழுதப்பட்டு இருந்தது. பெயருக்கு நேராக ஓர் புள்ளியும் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்து போன தந்தை தன் மகனிடம் இந்த அட்டைகளில் பெயர்கள் எழுதி வைத்திருக்கிறார்களே! எதற்காக? என தன் மகனை கேட்டார். மகன் ஆசிரியர் சொன்ன வேலைகளை சரியாக செய்யாத மாணவ, மாணவியரின் பெயர்கள் அவ்வட்டைகளில் எழுதப்படும். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை தவறுகள் செய்கிறார்களோ அதற்கேற்றவாறு புள்ளிகளும் வைக்கப்படும். அவைகள் “கரும்புள்ளிகள்” நான் கரும்புள்ளிகள் வாங்காமல் இருந்தேன். சென்ற மாதம் ஓர் தவறு செய்ததால் என் பெயரும் எழுதப்பட்டு கரும்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சோகமாக கூறி முடித்தான். தந்தை எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டார்.


இப்படித்தான் பெற்றோர்களின் பல எதிர்பார்ப்புகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நம் மன எண்ணமே அவர்களை எதிர் மறையாக உருவாக்கலாம். எனவே குழந்தைகள் பொருட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு. சிறுவயது முதலே “நீ இதுவாக வேண்டும்” என ஏதோவொன்றை கூறி அவர்களை வளர்ப்பது தவறு. ஏனெனில் பெரியார்களாகும் போது ஏதோவொரு காரணத்தினால் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் அதை அவர்களால் ஏற்று வாழ இயலாது.


இவ்விஷயத்தில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?


பரந்த உலகத்தில் இருப்பவற்றை எல்லாம் திறந்த உள்ளத்துடன் நம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும். உலகத்தில் இத்தனையும், இன்னும் பலவும் உண்டு. தேவையானவற்றை தேடிப் பெறு அதற்கு தேவைப்பட்ட உதவியை நாங்கள் செய்கிறோம். என உங்கள் குழந்தைக்கு கூற வேண்டும். அதுவே பெற்றோர் கடமையும். அப்போதுதான் பெற்றோரை விட பல மடங்கு உயர்ந்தவராக குழந்தைகள் உருவெடுப்பார்கள். அதற்கு மாறாக நம் அனுபவமும், அறிவும் என்ற வட்டத்திற்குள் குழந்தைகளை அடைக்கக்கூடாது.

Wednesday, December 1, 2010

ஆவிகள் உண்டா இல்லையா? ஒரு அலசல்


வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
நீ விளையாட போகையில சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தையும் முளையிலே கிள்ளி வைப்பாங்க
என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?
நான் ஆவி என்று கூறிவிட்டு பேயை பற்றி கூறிக்கொண்டு இருக்கிறேன்.
ஏனென்றால்,ஆவியும் பேயும் ஒன்றே தான் இல்லை இல்லை வேறு வேறுதான் என்று இந்த கருத்திலே கூட ஒரு கருத்தொற்றுமையை இந்த கதையை கிளப்பி விடுபவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
     நான் இந்த கட்டுரையை எழுத காரணமாக இருந்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா? என்ற நிகழ்ச்சிதான்.
     நிகழ்ச்சியில் ஆவி உண்டு அது தங்கள் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளது என்று ஒரு பிரிவினர் மிகவும் நம்பிக்கையுடன் வாதிட்டனர். அதிலும் அந்த Way of communication இருக்கிறதே அது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்து. அவர்கள் கூறிய பலவற்றில் நான் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1.       A,B,C,D  board.அவர்களிடம் இதற்கு பிரத்தியேக பெயர் உண்டு.
2.       தானே எழுதுதல்.
     முதல் வகையில் கூறப்பட்ட அந்த போர்டில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிரப்ப பட்டிருக்கும். அதோடல்லாமல் Yes/No என்ற வார்த்தைகளும் இருக்கும். ஆவியுடன் பேசுவதற்கு உரிமம் பெற்றிருக்கும் அந்த நபர் சில பல சித்து வேலைகள் செய்து விட்டு டம்ளரில் கை வைத்துக்கொண்டு குடும்பத்தினரை ஆவியிடம் நேர்காணல் செய்ய சொல்வார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றாற்போல் டம்ளர் தானே நகர்ந்து சென்று ஒவ்வொரு எழுத்தையும் காண்பித்து பதில் உருவாக்கும். (இதில் எந்த பௌதிக விதி உள்ளது என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள்) அவசரப்பட்டு(அல்லது பொறுமை இழந்த) குடும்பத்தினர் முழு வார்த்தையும் காண்பிக்கப் படுவதற்குள் வார்த்தையை முழுமையடைய செய்து விடுவார்கள். மேற்படி நேர்காணலில் சொல்லப்படும் அனைத்து ஆரூடங்களும் பொதுப்படையாக கூறப்படுபவைதான். இதை கூற எந்த பிரத்தியேக ஆவியோ அல்லது ஆவியின் செய்தி தொடர்பாளரோ தேவையில்லை. நாமே கூறிவிட முடியும்.

     ஆட்டோ ரைட்டிங் எனப்படும் தானே எழுதுதல் வேலையை செய்பவர் அவ்வளவு கடினமாக தனது வேலையை வைத்துக் கொள்வது இல்லை. கொஞ்சம் நேரம் கண்ணை மூடிக்கொண்டு பேனாவை பேப்பரில் வைப்பார் அது ஆவியினால் நகர்த்தப்பட்டு வாக்கியங்களை உருவாக்கும்.(அவர் அப்படித்தான் கூறுகிறார்). இங்கேயும் நேர்காணல் நடைபெறும் ஆவி அனைத்து வினாக்களுக்கும் ஒரு குத்து மதிப்பான மழுப்பலான பதிலை கூறிவிட்டு மலையேறிவிடும்.
     மேலே சொன்ன இரண்டிலும் பல விஷயங்கள் என் மர மண்டைக்கு புரியவில்லை.
1.       படிப்பறிவு இல்லாத ஆவிகள் கூட ஆங்கிலத்தில் சரளமாக எழுதுகின்றன.(30 நாட்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் புத்தகம் ஆவி உலகத்தில் சல்லிசாக கிடைக்கிறது போலும்.)
2.       ஆங்கிலம் தவிர எந்த மொழியிலும் போர்ட் அமைக்க மீடியமாக செயல்படும் நபர் அனுமதிப்பதில்லை.( ஆவியுலகம் இங்கிலாந்திற்கு அருகில் தான் உள்ளதோ என்னவோ?)
3.       ஆங்கிலம் அறியாத எந்த மீடியத்தையும் நான் சந்தித்த்தில்லை.
4.       ஆட்டோ ரைட்டிங் ல் எழுதுபவர் பேனாவை ஆவியே தள்ளிக் கொண்டு போய் எழுதி விடுகிறது என்று கூறுகிறார். ஆனால் உகாண்டா நாட்டு ஆவியாக இருப்பினும் அது எழுதுவதென்னவோ மீடியமாக செயல்படும் நபர் அறிந்த மொழிகளில் மட்டுமே.
5.       என்னை மாதிரி யாராவது குறுக்கு விசாரணை நடத்தினால் வெல வெலத்து போய் நம்பாதவர்ளுக்கு பதில் இல்லை என்று நேர்காணலை முடித்து விடுகிறார்.                                                       
     எல்லோருக்குமே இறப்புடன் நமது வாழ்க்கை முடிந்து விடுகிறதே என்ற ஆதங்கம் உள்ளது. என்னை மாதிரி நாத்திகர்கள் முடிந்தால் முடிந்து விட்டுபோகிறது என்று எதிர்கொள்ள தயாராகின்றனர். இயலாதவர்கள் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் போன்ற கருத்துக்களின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.
     மூடநம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்க்கை நடத்துவோர் அதனை வளர்த்து விடுகிறார்கள். இதில் பரிதாபத்திற்குறிய செய்தி என்னவென்றால் இம்மாதிரியான மூடநம்பிக்கைக்கு உரமூட்டி வளர்த்து விடுவோர் அனைத்து வெகுஜன ஊடகங்களிலும் தோன்றி மக்களை மூளைச் சலவை செய்து (வெளிப்படையாக கூறினால் பயமுறுத்தி) தங்களின் பால் வலுக்கட்டாயமாக ஈர்த்து தங்களுக்கு தேவையானவற்றை அறுவடை செய்து விடுகின்றனர்.
     மனிதனின் உடலில் உள்ள செல்களுக்கு பிராணவாயு கிடைக்கும் வரை நாம் இயங்கலாம். நின்றுவிட்டால் உடல் என்ற இயந்திரம் இயங்காது அவ்வளவே. மற்றபடி உயிர் உடலில் இருந்து மேலே சென்று காற்றில் கலந்து ஆவியுலகம் சென்று விடுவதில்லை
     எந்த ஒரு விஷயமும் அடிப்படை அறிவியல் ரீதியாக மட்டுமே நடக்கும். அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதையும் சந்தேகியுங்கள். நன்றி.

Wednesday, November 3, 2010

Happy Deepavali

Usually I never like to celebrate Deepavali. Because it is told as the death of 'Naragasuran'. I never like to celebrate one man's death. More over I don't believe these kind of stories.Any how most of my friends celebrate this as a good festival. Its happy to get together with friends and share some sweets and sweeter moments. For that reason only I wish all my friends a Happy Deepavali.

Sunday, October 10, 2010

really a nice and touching story






































இந்த கதையில் வரும் ஆப்பிள் மரம் வேறு யாருமில்லை நமது தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமது முன்னேற்றத்திற்காகவும் நமது சந்தோஷத்திற்காகவும் அனைத்தையும் தருகின்றனர். எனவே இந்த கதை உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நினைத்து பார்க்க உதவினால் நான் மகிழ்வேன்

Friday, September 17, 2010

சிறந்த மேற்கோள்கள்


தனித்தன்மையுடன் திகழுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.

•நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் உள்ளதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

•வாழ்க்கை உங்களுக்கு அளிக்கவிருக்கும் அரிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதே உங்கள் முன் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி.

•முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை நாம் செய்து முடிப்பதன் மூலம் அடையக் கூடிய மகிழ்ச்சி அளவற்றது.

•கனவுகளைக் காண முடிந்தவர்களால் அடைய முடியாதது என்று எதுவுமே கிடையாது.

•எந்த ஒரு பொருளையும் முதலாவதாகவோ அல்லது கடைசி முறையாகவோ பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகத் தோன்றும்.

•எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.

•நம் கனவுகளின் தேடல் வேட்டையில், தேடலில் தொலைந்து போய் அதனை விட சிறப்பான ஒன்றை நாம் பெறுகிறோம்.

•உங்கள் வாழ்க்கைப் பாதைகளில் வரும் தடங்கல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே அவை ஏற்படுத்தப்படுகின்றன.

•ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உண்டு; அவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை; அவை ஒவ்வொன்றும் நன்மை தரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியே அமைகின்றன; பிரச்சினைகள் ஒவ்வொன்றும் மனிதனை பட்டை தீட்டும் வலிமை கொண்டவை

Monday, September 13, 2010

குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?


குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்து.

கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கும் வயது வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. நான்கரை மாதத்திலேயே இவ்வேலையை தொடங்கிவிடும் பெற்றோர்களும் உண்டு. சிலர் எட்டு மாதத்திலும், சில பெற்றோர் ஒரு வருடம் முடிந்தவுடனேயும் குழந்தைகளின் கழிவு நீக்க நடத்தையை நெறிப்படுத்தத் துவங்குகின்றனர். ஆனால் 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும். குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம். இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

பதினெட்டு மாதத்திற்கு முன்பாக விரைவிலேயே கழிவறை பழக்க பயிற்சியை துவங்குவது குழந்தைகளின் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கும். பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். படுக்கையில் சிறுநீர் கழித்தல், கழிவறையைக் கண்டு பயம் கொள்ளுதல், பிடிவாத குணம், மிக மிக சுத்தமாக இருப்பது ஆகியவை 18 மாத காலத்திற்கு முன்பே கழிவறைப் பழக்கத்தை திணிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் சில. பிற்காலத்தில் பிறர் ஏற்றுக்கொள்ளும் நடத்தையை தெரிந்துகொண்டு அதை மட்டுமே வெளிப்படுத்துவர்களாக உருவாகும் இக்குழந்தைகள் எல்லா விஷயத்திலும் தயக்கம் கொண்டவர்களாக இருப்பர்

கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம். குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும். குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர். பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நட்ந்து கொள்வர். மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...