Saturday, January 25, 2020

வானியுடனான எனது நட்பு


இரவு பத்து மணிக்கு மேல் எனக்கு யாராவது தொ(ல்)லை பேசினார்கள் என்றால் நிச்சயமாக அது எனது காஷ்மீர் நண்பர் ”வானி”யாகத் தான் இருக்கும்.(சந்தேகமாகப் பார்க்காதீங்க “பாய்“(Boy) நண்பர் தாங்க)
சிசிஆர்டி 2011 ல் கிடைத்த நல்லதொரு நண்பன். என்னை பெரிய புத்திசாலி நம்பி “போட்டித் தேர்வுக்கான கணிதம்” என்கிற தலைப்பில் என்னுடன் இணைந்து புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டம் எல்லாம் தீட்டினார். ஒரு முறை நாகாலாந்து ஆசிரியையுடன் இணைத்து கிண்டல் செய்த காரணத்தினால் ஒரு வாரம் பேசவில்லை. ஆனாலும் “I will take the books from your bag, you can’t stop me” என்று உரிமையோடு எனது பையில் இருந்து புத்தகங்களை எல்லாம் படிக்க எடுத்துக் கொள்வார்.
காஷ்மீர் நண்பர்கள் அனைவருமே ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். அதி தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஒரு முறை கடவுளின் இருப்பு குறித்த ஒரு விவாதம் எனக்கும் அவருக்கும் காரசாரமாக நடந்தது. எங்கே “வெட்டுக் குத்து” ஆகிவிடுமோ என்று அனைத்து மாநில ஆசிரியர்களும் இரவு 1.00 மணி வரையில் இரண்டு பக்கமாக பிரிந்து பதட்டத்தோடு வேடிக்கை பார்த்தனர். இறுதியில் கை கொடுத்து விட்டு சிரித்துக் கொண்டே “உன்னை எல்லாம் திருத்தவே முடியாது” என்று கூறியபடி உறங்கச் சென்றார். அனைத்து நண்பர்களுமே “ப்ரதர்“ என்ற வார்த்தையால் தான் மற்ற மாநிலத்தவரை அழைப்பார்கள்.
“நீங்க ஏன் எப்ப பாத்தாலும் காஷ்மீரில் பிரச்சனை பண்றீங்க?“
“நீங்க பாகிஸ்தான தான் சப்போர்ட் பண்ணுவிங்களா?”
“தீவிரவாதிங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தப்பில்லையா?”
     “இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் போது நீங்க எந்த நாட்ட சப்போர்ட் பண்ணுவீங்க?”
     என்ற கேள்விகளை முதல் நாளே கேட்ட தமிழக நண்பர் ஒருவருக்கு அவர்கள் பதில் சொன்ன நேர்த்தியும் பக்குவமும் பார்த்து எனக்கு வியப்பு தான் ஏற்பட்டது. அந்த பதில்கள் குறித்து தனிபதிவே போடலாம்.
     அந்த கேள்விகள் அவர்கள் அடிக்கடி எதிர்கொண்டவைதான் என்பதால் அவர்கள் அந்த கேள்விகள் குறித்து அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. நான் தான் பார்த்த முதல் நாளே பிரம்மாஸ்திரமா என்ற பதறிப் போனேன்.
     பயிற்சி முடிந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும் மாதம் ஒருமுறையாவது வானியிடம் இருந்து அழைப்பு “அலோ ஸார்..” என்ற படி வந்து விடும். காஷ்மீர் 370 வது பிரிவு நீக்கம் யூனியன் பிரதேச அந்தஸ்து என்று பிரச்சனை தீவிரமடைந்த போது தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப் பட்டிருந்த காரணத்தினால் ஒரு இரண்டு மாதங்கள் பேசவில்லை. அந்த பிரச்சனை போய்க்கொண்டு இருந்த போது இந்த பிரச்சனைகள் காரணமாக எங்கள் நட்பு இருவருக்குமே பிரச்சனைக்கு உரியதாக மாறிவிடுமோ என்று சற்றே பதட்டம் அடைந்தேன்.
     தொலைபேசி இணைப்பு கொடுக்கப் பட்ட அன்று இரவே “அலோ ஸார்…” என்று சற்றும் உற்சாகம் குறையாத குரல் மீண்டும் கேட்டது.
     நேற்று இரவு ஒன்பது மணிக்கு வானியிடம் இருந்து அழைப்பு. “தொர்ர இங்கிலீஸ்லாம் பேசுது“ என்ற நொடித்துக் கொண்டு சென்றார் இல்லத்தரசி.
     “எங்களுக்கு புரோமோஷன் பேணல் நெட்ல விட்ருக்காங்க. அதுல என்னோட சீனியாரிட்டி நம்பர் பாத்து சொல்லுப்பா“
     அங்கே இணைய இணைப்பு இன்னும் வழங்கப் படவில்லை.
     வானியின் சூழல் அறிந்து உடனடியாக அவர் சொன்ன கல்வித்துறை இணையதளத்தில் குறிப்பிட்ட பாடத்திற்கான பேணலை பதிவிரக்கிவிட்டேன். பார்த்தால் அந்த லிஸ்ட்டில் 10 வானிகள் இருந்தனர்.
     “ஏப்பா, சாரிப்பா உன்னோட முழுப் பேர் சொல்லுப்பா”
     பிறகு பெயரைத்தேடினேன் 56 வது ரேங்கில் இருந்தது.
     “உன் ரேங்க் 56 ப்பா”
     “மொத்தம் எத்தன பேர் பேணல்ல இருக்காங்க”
     “அதப் பாக்கலையே இந்தா கட் பண்ணு பாத்துட்டு வரேன்”
பேணலில் உள்ள மொத்த எண்ணிக்கையை பாத்துட்டு திரும்ப போன் போட்டேன்.
     “எனக்கு ரிமார்க் காலத்தில் என்ன போட்ருக்கு?”
”யோவ், நான் உன் பேரு ரேங்க் பிறந்த தேதி அத தான்யா பாத்தேன்”
“ப்ளீஸ் அதையும் கொஞ்சம் பாருப்பா”
திரும்ப வந்து பார்த்தேன்.
“வெரிஃபைடுன்னு போட்டுருக்கு“
”எனக்கு முன்னாடி ரேங்க் காரனுக்கு (55க்கு) என்ன போட்ருக்கு?”
“இந்தாப்பா எல்லாத்தையும் முன்னாடியே சொல்ல மாட்டியா?”
பிறகு அதையும் பார்த்துட்டு பொதுவா நாம பேணல் பாக்கும் போது என்னவெல்லாம் பாப்போமோ எல்லாத்தையும் பாத்து வச்சிக்கிட்டேன்.
“அவருக்கு எலவேட்டட் போட்ருக்கு, ஆனா அவருக்கு மேல இருக்க ஆளுங்க ஒரு 5 பேருக்கு வெரிஃபைடு தான் போட்ருக்கு, மேலும் அந்த ஆள் சீனியரா இருக்கான், முதுகலை 2018 ல தான் முடிச்சிருக்கான், போதுமா” என்று கூறி மூச்சு வாங்கினேன்.
     எனக்க தலைமையாசிரியர் பேணல் வந்த அன்னைக்கு நான் எல்லாம் சுமார் இரண்டு மணி நேரம் அதை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன். யார் முன்னே யார் பின்னே எனக்கு முன்னாடி எத்தனை பேர் ரிட்டையர்டு ஆகி இருக்காங்க இப்படி டிசைன் டிசைனா சந்தேகம் வரும்.
     ஒரு சாதாரண வேலை காஷ்மீர் எல்லைக்குள் எப்படிப்பட்ட கஷ்டமான வேலை ஆகிவிட்டிருக்கிறது. அடுத்த மாநிலத்தில் நண்பர் இருப்பதால் இவர் ஓரளவு தெளிவாக பேணலை புரிந்து கொண்டார். அப்படி ஒரு தொடர்பு இல்லாதவர்கள் நிலை என்ன?
     2011 ல் அவர்கள் யாவரும் ஒருமித்த குரலில் “எங்கள் நாடு அருமையான இயற்கை வளங்கள் கொண்ட நாடு. மக்கள் பல வகை கைவினைப் பொருட்கள் செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். பிரச்சனை இல்லை என்றால் சுற்றுலாத்துறை மூலம் ஏராளமான வருவாய் வாய்ப்புகள் எல்லாம் உண்டு” என்று வேதனையோடு கூறுவார்கள்.
     அவர்களை நேரில் பார்த்து பழகிய பின்பு காஷ்மீர் குறித்த எனது புரிதலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.
     அவர்களின் துயரங்கள் என்றைக்குத் தான் தீருமோ?


Monday, January 20, 2020

என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா


என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா
.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
இது 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். ”கடலும் கிழவனும்” கூட சின்னஞ்சிறு புத்தகம் தானே?! ஆனால் நோபல் பரிசினை பெறவில்லையா?
பாலின சமத்துவம் குறித்த பார்வையை விசாலப் படுத்த வேண்டுமானால் நாம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” ஆகும். அது போல ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவர்கள்-வகுப்பறை-கற்றல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் எனில் இந்த நூலை கட்டாயமாக படிக்க வேண்டும்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் தலைமைப் பண்பு பயிற்சிக்கு சென்றிருந்த போது இறையன்பு அவர்கள் இந்த நூல் குறித்தும் ஆசிரியர் குறித்தும் சிலாகித்து கூறினார். அப்போதே இந்த நூலை எனது பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.
நூலாசிரியர் ச.மாடசாமி அவர்கள் அறிவொளி இயக்க மாநில திட்ட அலுவலராக பணியாற்றிய கல்லூரி ஆசிரியர். அன்னாரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். புத்தகமாக இதுதான் முதலாவது.
புத்தகத்தை கையில் எடுத்த போது எப்படியும் ஒரு 40 நிமிடத்தில் முடித்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் படிக்கும் போது எனது மனதில் தோன்றிய வாதப் பிரதி வாதங்கள் சில இடங்களில் என்னை பொருத்திப் பார்த்தது என்று மிக மெதுவாகத்தான் புரட்ட முடிந்தது. அரியலூர் டு திருச்சி பேருந்து பயண நேரமான 2.00 மணி நேரம் முழுமையையும் எடுத்துக் கொண்டது. அந்த நூல் எனது மனதில் ஏற்படுத்திய தாக்கமோ இரண்டு நாட்களாக நின்று பேசியபடி உள்ளது.
ஆசிரியர்களை “பயந்த சர்வாதிகாரி“ என்று கூறுவார்கள் என்றே தனது முதலாவது கட்டுரையான சிவப்பு பால்பாய்ண்ட் பேனாவை திறக்கிறார். பயந்த சுபாவமுள்ள சாந்த சொரூபியாக இருக்கும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சர்வாதிகாரியாக வலம் வருகிறார்கள். எவ்வளவு நிஜம்.
சிவப்பு பேனாவின் சக்தி குறித்து அருமையாக பேசும் முதல் கட்டுரை. சிவப்பு பேனாவினால் நாம் போடும் Good என்பது எவ்வளவு வலிமையானது என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். 35 மதிப்பெண் எடுக்கும் மெல்லக் கற்கும் மாணவனுக்கும் 90 க்கு மேல் எடுக்கும் மீத்திறன் மாணவர்களுக்கும் சேர்த்தே தான் Good போடுவேன். நிறைய Encouraging குறிப்புகள் எழுதியுள்ளேன். சற்று நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அமர்ந்தேன்.
மாணவர்கள் வகுப்பறையில் அவமதிக்கப் படுவது. தேர்வுகளும் மதிப்பெண்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பாகுபாடு. அதனால் ஏற்படும் அவமதிப்பு நெருக்கடி என்று மாணவர் பக்கம் இருந்து அவர்தம் உளவியலை ஆழமாக அலசி உள்ளார்.
சுதந்திரமற்ற இறுகிய வகுப்பறைகள் மற்றும் stereo type தகவல் விநியோகம் என்று கற்றல் அனுபவங்கள் சுரத்தில்லாமல் ருசியற்று இருப்பது குறித்து கவலை கொள்கிறார்.
“கற்பித்தலில் நாம் உருவாக்கிக் கொள்ளும் கெட்டிபட்ட நம்பிக்கைகள் நெகிழ்ச்சியற்ற, இறுக்கமான ஆசிரியராக நம்மை மாற்றிவிடும்“ –கமலா வி.முகுந்தா வின் மேற்கோள் நூலில் காணக்கிடைத்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
“பொய், அத்துமீறல் மற்றும் அவமதிப்பு” இவையாவுமே எந்த ஒரு ஆசிரியரையும் சீறி எழச்செய்யும் விஷயங்கள். அலுவல் ரீதியாக நாமே நிறைய பொய் சொல்லப் பழகி இருக்கும் போது மாணவர்களின் பொய்களை ரசிக்கப் பழகுங்கள். சிறிதளவு அத்துமீறலுக்கும் அவமதிப்புக்கும் இடம் கொடுத்துப்பாருங்களேன் என்கிறார். இந்த வார்த்தைகள் ஆசிரியர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். கட்டுரையை முழுமையாக வாசித்தால் சரியாக புரிந்து கொள்ளலாம்.
கற்றல் கற்பித்தல் சூழல் சுதந்திரமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு, படிப்பு மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் போன்ற பெரிய விஷயங்களை சின்னஞசிறு மூளைக்குள் ஏற்றி மகிழ்ச்சியோடு நிகழ வேண்டிய கற்றலை தூக்க இயலா பெரும் சுமையென மாற்றி வைத்து விட்டிருக்கிறோம். நமது தலைமுறை அனுபவித்த மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை நமது பிள்ளைகளுக்கு கசப்பானதாக மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆசிரியர்களே விரைப்பாக இருக்கும் “ஷோல்டரை இறக்குங்கள்” இயல்பாக இருங்கள். வகுப்பறை இறுக்கத்தையும் குறையுங்கள். கற்றல் அனுபவங்களை மகிழ்ச்சியானதாக ஆக்குங்கள். என்பது தான் நூலின் செய்தி.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...