Monday, August 29, 2016

கோபல்லபுரம் நாவல்

இந்த முறை நுாலகத்தில் எடுத்த புத்தகங்களில் ஒன்று கி.இராஜநாராயணன் அவர்களின் கோபல்ல கிராமம். மிகவும் அருமையான நாவல். கதை என்னவோ மிகச் சிறியது தான் ஆனால் அதில் பொதிந்துள்ள பிண்ணனித் தகவல்கள் ஒரு களஞ்சியம்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகள் நான் அனுபவித்த அல்லது அறிந்தவை.

கிராமத்து மனிதர் அத்தனை பேருக்கும் பட்டப் பெயர் சூட்டியதோடு அல்லாமல் அவற்றின் காரணத்தை சுவைபட கூறவே சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளார்.

“முதல் மரியாதை““ படத்தில் திருடனின் கால் கட்டை விரலை கடித்தபடி இறந்துவிடும் பெண். “பாகுபலி“ படத்தில் வெள்ளம் புரண்டோடும் ஆற்றில் பெண் குழந்தையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டிருப்பது போன்றவை இந்த நாவலில் இடம் பெற்றுள்ள காட்சிகள்.

மாற்றாந்தாய் பசுவுடன் தாயை இழந்த பசுங்கன்றை பழக்க விடும் வித்தை மிக அருமையாக விவரிக்கப் பட்டுள்ளது. அடுத்தது ஆட்டுக்கு வலி இல்லாமல் காயடிக்கும் முறையை கூறியுள்ளார்.

முற்றிலும் நகரத்திலேயே வளர்ந்த பிள்ளைகளுக்கு இந்த கதை வியப்பை தரலாம். நிறைய மூடநம்பிக்கை களை  கதை மாந்தர்கள் பின்பற்றி வந்தாலும் “அக்கையா“ என்ற பாத்திரத்தின் மூலமாக அவற்றையெல்லாம் “பகடி“ செய்யவும் தவறவில்லை.

ஆர்வமுள்ள நண்பர்கள் கண்டிப்பாக படியுங்கள். உங்களுக்கு நல்லதொரு வாசிப்பு அனுபவம் கிட்டும்.

Saturday, August 27, 2016

Thursday, August 25, 2016

அரசுப் பள்ளிகள் மோசம் ஆசிரியர்கள் மோசம் என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதா சமஸ்?!

நேற்றைய இந்து நாளிதழில் கல்வியாளர் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களுடனான நேர்க் காணலில் திரு.சமஸ் அவர்கள் கேட்டிருந்த இரண்டு கேள்விகளில் தென்பட்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக இதனை எழுதுகிறேன்.
தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் பெரிதாக சாதிக்கின்றன என்ற தொனியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. சாதனை என்பதற்கான அளவுகோல் எது?  மதிப்பெண்களா அல்லது மாநில அளவிலான முதல் பத்து இடங்களா?
இப்போது இருக்கும் வினாத்தாள் கட்டமைப்புகள் மாணவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை கூறிவிடுகின்றன. அது என்னவென்றால் எந்தெந்த கடினப்பகுதிகளை விலக்கி எந்தெந்த பகுதிகளைப் படித்தால் 100 விழுக்காடு பெறலாம் என்பது தான். அந்த முறையை அழகாக சுவீகரித்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்து பத்து பனிரெண்டு வகுப்புகளில் 100 விழுக்காடு தேர்ச்சி என்பதோ அல்லது அதிக மதிப்பெண் என்பதோ பெரிய விஷயம் இல்லை.
 மதிப்பெண் என்ற மாய எண்களுக்கு பெற்றோர்கள் மயங்கிக் கிடக்கின்றனர். எனவேதான் இன்னமும் ஏ,பி,சி என்ற கிரேடு முறையினை நம்மால் பத்தாம் வகுப்பில் அறிமுகப்படுத்த இயலவில்லை. மேலும் உங்கள் பையன் சிறந்தவன் என்று தரப்படுத்தல் மட்டுமே பெற்றோரை திருப்திப் படுத்த போதவில்லை யாரை விடவெல்லாம் சிறந்தவன் என்ற ஒப்பீட்டு அளவுகோலுக்கு உதவியாக உள்ளதால் தான் மதிப்பெண் முறை இன்னமும் கோலேச்சிக் கொண்டு உள்ளது.
அடுத்ததாக சுமாரான உள்கட்டமைப்பு இருந்தாலும் தனியார் பள்ளிகள் சாதிக்கின்றன என்கிறார். சுமாரான உள்கட்டமைப்பை வைத்துக் கொண்டு எப்படி அங்கீகாரம் பெற்றார்கள். நல்ல உள்கட்டமைப்பு இருந்தால் தானே பள்ளி நடத்த அங்கீகாரம் உண்டு. அடுத்து சொற்ப சம்பளம் பெறும் ஆசிரியர்கள் என்றும் கூறியுள்ளார். தனியார் தங்களது இலாபம் சொற்பமாக இருக்க கூடாது என்பதற்காகத் தானே சுமாரான கட்டமைப்பையும் சொற்ப சம்பளத்தையும் அளிக்கிறார்கள்.
அருமையான உள்கட்டமைப்பும் ஆசிரியர்களுக்கான சம்பளம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை விட அதிகமாக வழங்கும் தனியார் பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அங்கெல்லாம் பத்தாம் வகுப்பில் சாமர்த்தியமான வடிகட்டலும் பதினோறாம் வகுப்புச் சேர்க்கைக்கு 470க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 95 விழுக்காடு பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அப்படியானால் அவ்வாறு 95 விழுக்காடு பெற்று பள்ளிக்குள் சென்ற அனைத்து மாணவர்களும் அதே விழுக்காடு 12 ம் வகுப்பில் பெறுகிறார்களா, அதாவது 1140 மதிப்பெண் பெறுகிறார்களா என்றால் இல்லை. சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்துக்கு மேல் என்றால் 1100க்கு மேல் பெறுபவர்களோ சில 100 பேர்தான் என்பதை அப்பள்ளிகள் தங்கள் சாதனை என்று பரைசாற்றிக் கொள்ளும் முழுப்பக்க நாளிதழ் விளம்பரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து மாணவர்களின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் ஒப்பீட்டு அட்டவணையை எந்த தனியார் பள்ளியாவது விளம்பரப் படுத்துகிறதா என்றால் இல்லை.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் சொற்ப சம்பளத்திற்கு காரணம் அமைப்பில் உள்ள கண்காணிப்பு குறைபாடல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அசல் சான்றிதழ்களை அடமானம் வைத்துத் தான் வேலை பெறுகின்றனர். சில பள்ளிகளில் சம்பளத்திற்காக சில மாதங்கள் காத்திருக்கும் நிலை கூட உள்ளது. சம்பளத்தை நேரடியாக ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாதா மாதம் வரவு வைக்கும் வெளிபடையான முறையை அமல் படுத்தினால் தான் அவர்களின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். நாங்கள் பொதுத் தேர்வை மனதில் வைத்து எந்த மாணவர்களையும் வெளியேற்ற முற்படுவதில்லை. வருகை (attendance) குறைந்த மாணவர்களைக் கூட தேர்வில் விலக்கி வைக்க அனுமதியில்லை. எங்கள் அரசுப் பள்ளி பிள்ளைகள் பெரும்பாலானோர் சனி ஞாயிறுகளில் வேலைக்குச் செல்வோராக உள்ளனர். இறைவழிபாட்டில் ஓரிரு நிமிடங்கள் அதிகமாக நிற்க நேரிட்டாலே மயக்கம் போட்டு விழும் மாணவர்களும் உள்ளார்கள் ஏனென்றால் அவர்களின் காலை உணவு பழையதோ நீராகாரமோ அல்லது வெறும் தண்ணியோதான். எங்கள் ஆசிரியர்கள் அனைவருமே தற்போதெல்லாம் TET மற்றும் TRB என்ற கடினமான தேர்வு முறைகளைத் தாண்டி ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு பெற்று வந்தவர்கள். தங்கள் முழு திறமையையும் பயன் படுத்தி பாடம் எடுக்கிறார்கள். சென்ற ஆண்டில் 490க்கு மேல் பெற்ற மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் நிரம்ப உள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, August 10, 2016

எச்சில் புராணம்!

ஆன்னா ஊன்னா 'த்தூ...! ' ன்னு துப்பி அசிங்க படுத்துறோம். ஒரு தூய்மையான இடம் இருந்தாலும் சரி அல்லது மோசமான மனிதர்களையானாலும் சரி! என்ன செய்ய நமக்கெல்லாம் பாரதியாரே உடந்தை!! அதான் 'மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்றல்லவா எழுதி வைத்துள்ளார்.
உணவு செரிமானத்தின் முதல் படிநிலையே அந்த எச்சிலில் இருந்தல்லவா துவங்குகிறது! எச்சில் இல்லாமல் நா வறண்டிருக்கும் போது பேச இயலுமா என்ன ?! நா குழறாதா? அதனால்தானோ என்னவோ 'மைக் டெஸ்டிங் 1 2 3..' மாதிரி கேப்டன் நிருபர்களின் மைக்கில்  எச்சில் டெஸ்டிங் செய்திருக்கிறார் பாவம் அதை கூட சர்ச்சையாக்கி விட்டார்கள். சுவாசக்குழாயில் சிக்கியிருக்கும் சளியை என்னதான் காறி வாய்க்குள் இழுத்துப் போட்டாலும் எச்சிலின் துணைகொண்டு தானே எங்கானும் மாடிப்படி ஓரமோ சுவற்றின் மூலையிலோ நல்லடக்கம் செய்ய வேண்டியுள்ளது.  இந்த எச்சில் புராணம் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
நான் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த காலம். எங்கள் ஊருக்கான ஒற்றை பேருந்தை பிடித்து தான் சுத்தமல்லியில் இருந்து ஜெயங்கொண்டம் செல்ல வேண்டும். சம்பவம் நடந்த அன்று கூட சுத்தமல்லியில் இருந்து ஜெயங்கொண்டம் பயணமானேன்.
பக்கத்தில் ஒரு தாத்தா அமர்ந்து வந்தார். வெற்றிலை பாக்கு பொட்டலத்தை பிரித்து கடைவிரித்தார். ஒரு முக்கால் வெற்றிலையை எடுத்து முன்னும் பின்னும் வேட்டியில் துடைத்துக் கொண்டு சுண்ணாம்பைத் தடவி சீவலை உள்ளே வைத்து சுருட்டி சப்பாத்தி ரோல் மாதிரி அழகாய் கடித்து மென்றார். அடுத்ததாக புகையிலை, நூடுல்ஸை பிரித்து எடுப்பது கூட சுலபம் ஆனால் புகையிலையை பிரித்தெடுப்பது என்னவோ பிரம்ம பிரயத்தனம் தான் . புகையிலையை பிரிக்க முயன்று பின் தொங்கிய படி வந்தவற்றை கத்தறித்து அப்படியே சுருட்டி பந்துபோல் ஆக்கி வாயில் போட்டு அடக்கிக் கொண்டார்.
சிலருக்கு எச்சில் மிக மெதுவாகத்தான் ஊரும். சிலருக்கோ பொங்கி பிரவாகமாய் ஊற்றும். புளியங்காய் மற்றும் ஊறுகாய்  எல்லாம் பார்த்த மாத்திரத்தில் எச்சில் ஊறி கரையை உடைக்கும். பக்கத்து சீட் தாத்தா இரண்டாம் ரகம். முன் வரிசையில் தடுப்பணை (அதாங்க முன் வரிசை பற்கள்) வேறு இல்லாததால் கரையை உடைக்கும் காட்டாற்றிற்கு துணியால் அணை கட்டியது போல உதட்டை குவித்து தடுத்த வண்ணம் வருவதும் அடுத்த நிறுத்தத்தில் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் திறப்பதுவுமாய் இருந்தார்.
நடத்துனர் வந்த போது டிக்கெட் எடுக்க திணறித்தான் போனார். தலையை ஒரு 45டிகிரி கோணத்திற்கு அன்னாந்த படியே லாவகமாக பேசி வாங்கிவிட்டார் அதுவரை சீட்டுக்கடியில் பதுங்கியிருந்த நானும் சீட்டில் மறுபடியும் அமர்ந்து கொண்டேன்.
நிறுத்தங்களுக்கிடையே தூரம் அதிகமாகும் சமயங்களில் வாயின் வலது ஓரத்தில் கோடு விழ ஆரம்பித்தது. அவரும் தோளில் கிடந்த துண்டினால் ஒற்றி எடுத்த வண்ணம் வந்தார்.(அடச்சே!! இதத்தான் துண்டு வித்தியாசமான டிசைன்ல இருக்கேன்னு வியந்திருந்தானா?!!) வியப்பில் வாயடைத்துப்போய் பார்த்திருக்கேன் ஆனால் எச்சிலின் உள்ளிருப்பு போராட்டத்தால் வாயடைத்து போவதை இப்போதுதான் பார்க்கிறேன்.
'தடால்' என்று ஒரு சடன் பிரேக்!! "சனியன் முடிச்சவனே நீ சாவரத்துக்கு என் வண்டிதான் கெடச்சிதா!, கண்ண எங்க பொறடியிலயா வச்சிருக்க?!!" என்ற ஓட்டுனரின் கூச்சல். எல்லோரும் மோதிக்கொண்டு  மண்டையை தேய்த்துக் கொண்டோம்.  சட்டென்று விபரீதத்தை உணர்ந்து சட்டையை முன்னும் பின்னும் பார்த்தேன். தாத்தா விஷயம் விளங்கியவராய் மறுபடியும் தலைசாய்த்து "ம்ம் அதழ்ழாம் விழாடுப்பா.." என்றார் "அய்யோ இப்பதான் தாத்தா ரெண்டு சொட்டு விழுந்துடுச்சு" என்றேன் கடுப்பை அடக்கிக் கொண்டு.
இந்த ஓட்டுனர் ராக்கெட் ராஜசேகர் இருக்காரே மகா கோபக்காரர். சாலை போட்டதென்னவோ பேருந்துக்கு மட்டுமே என்ற எண்ணம். மற்ற வண்டி ஒதுங்க இடம் தரமாட்டார். "ஏய் கீழ எறங்கிப் போடா!" என்று லாரி ஓட்டுனர்களை விரட்டுவார். அதுவே மாட்டு வண்டி என்றால் சொல்லவே வேண்டாம், இறங்கி ஒரு எட்டு போய் அடித்தே விடுவார்.
சட்டையை மேல் கோட் போல தான் உபயோகிப்பார். வளைக்கும் போதெல்லாம் ஸ்டீயரிங் வீல் மேல் கிட்டத்தட்ட படுத்தே விடுவார். வளைந்த உடன் சரேலென எழுந்து ஸ்டீயரிங் வீலை உள்ளங்கையால் தேய்த்தபடி ஸ்டைலாக லூசில் விடுவார். கியர் போடும்போதெல்லாம் கியர் ராடை பிடுங்கி வீசிவிடுவாரோ என்று பலமுறை பயந்திருக்கிறேன். அதன் மீது வைக்கப்பட்டிருந்த வெல்டு எனது பயத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் இருக்கும். ராஜசேகர்தான்அவர் பெயர் முன்னால் இருக்கும் ராக்கெட் அவர் ஸ்டைல பார்த்து மக்களாகவே கொடுத்தது .
 இதற்கிடையில் பேருந்து அணைக்குடம் தாண்டியிருந்தது. தாத்தாவும் வாயை காலிசெய்து ஏப்ரல் மாத மேட்டூர் டேமாய் மாற்றியிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் ஏதோ திருவிழாக் கூட்டம் போல, தாத்தா தலையை நீட்டிப் பார்த்து ஏமாற்றத்தோடு உள்ளே இழுத்துக் கொண்டார்.
"கழுவந்தோண்டி இறங்கறது இருக்கா?!" நடத்துனரின் குரல் கேட்டு தாத்தா நம்பிக்கையோடு தயாரானார். அணைக்கட்டு அனேகமாக உச்ச உயரத்தை எட்டியிருக்க கூடும். "என்ன யாரும் எறங்கலையா ரைட் ர்ரை....ட்!" தாத்தாவின் அவஸ்தை அதிகமானது. இருந்தாலும் உள்ளே இறக்காமலும் வெளியே சிந்தாமலும் சாமர்த்தியமாக எச்சிலை அடக்கியபடி வந்தார். இருந்தாலும் எந்நேரமும் கரை உடையலாம் என்பதால் நான் முன்னெச்சரிக்கையாக தப்பிப்பதற்கு திட்டம் A மற்றும் B யோடு தயாராகவே இருந்தேன்.
அடுத்ததாக பாத்திமா ஸ்கூல் நிறுத்தம், பஸ் வந்ததுமே மாலை நேரமாகையால் சர்க்கரைத் துண்டை சுற்றி வளைத்த எறும்புகள் போல குழந்தைகள் கூட்டம் மொய்க்கவே, இங்கேயும் அணைக்கட்டை திறக்க வாய்ப்பில்லை. இனி பேருந்து நிலையம் தான்.
ஹாரன் அடிப்பதோடல்லாமல் ஒதுங்காமல் போவோரை திட்டியபடி மிஸ்டர் ராக்கெட் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். வீட்டில் என்ன பிரச்சனையோ?!!
அப்பாடா ஒருவழியாக வண்டி பேருந்து நிலையத்தில் நுழைந்தது. டிரைவர் தடால் என குதித்தார். இவருக்கும் ஏதேனும் அணை உடையும் பிரச்சனை போல.
தாத்தா மெல்ல தலையை நீட்டி ஜன்னல் வழியே மொத்த எச்சிலையும் துப்பினார் புகையிலையோடு சேர்த்து.
"மடை திறந்து பாயும் நதியலை நான்..." பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடையில் பாடல் ஒலித்தது. இதற்கிடையே,
"டே....ய்! யார்ரா அவன்" ஓட்டுனரின் குரல்.
"ஐயோ என்னாச்சு?!" தாத்தா குனிந்து பார்த்தார்.
'மைதிலி என்னைக் காதலி' படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் டி.ராஜேந்தர் போல் சட்டை முழுவதும் ரத்த சிகப்பாய் கோபம் தலைக்கேற ஓட்டுனர் நின்று கொண்டிருந்தார்.
நடந்தது இதுதான் , ஓட்டுனர் கடமை உணர்வோடு டயரில் காற்றழுத்தம் சோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அதற்கு நேர் மேலிருந்து தாத்தா அணையை திறந்து விட்டிருக்கிறார்.
வேக வேகமாக உள்ளே வந்தார் ஓட்டுனர், தாத்தாவோ குற்ற உணர்வோடு நின்றிருந்தார். ஓட்டுனர் வாயைத் திறந்து "பீப்.................." என்று திட்டித்தீர்த்து விட்டார்.
"ஐயா மன்னிச்சிக்கோங்க ஐயா" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தார்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...