Tuesday, January 30, 2018

லால்குடி டேஸ்:23 தேவதைகள் நகர்வலம் வரும் நேரம்



எங்கள் விடுதியில் எப்போதும் காலை 8.40 என்பது மிக முக்கியமான நேரம். ஆம் அப்போது தான் எங்கள் விடுதி இருக்கும் தெரு வழியாக தேவதைகள் ஊர்வலம் செல்லும்.
அவர்கள் எல்லாம் வெள்ளை ஆடை உடுத்திய பாரதிராஜாவின் தேவதைகள் இல்லை, மாறாக வெளிர் சிவப்பு வண்ண தாவணியும் ஊதா கலர் பாவாடையும் என பள்ளிச் சீருடையில் பவனி வருபவர்கள்.
பதினோறாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேவதை தரிசனம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.
மாணவர்களின் வீரத்திற்கு உறைகல்லாக இந்த நிகழ்வினை வைத்துக் கொள்ளலாம். வீரம் மிகுந்தவர்கள் வீதிக்கு வந்து விடுவார்கள். சற்று மிதவீரவாதிகள் வாயில் வரை வந்து நிற்பார்கள். மிதவாத தம்பிகள் சுற்றுச் சுவரில் தலை நீட்டுவார்கள். பொறுப்பான ’அம்பி’கள் யாவரும் புத்தகத்தோடு மொட்டைமாடியில் உலா போவது போல நின்று வீதியை நோக்குவார்கள். மொத்தத்தில் அனைத்து கண்களும் வீதியை நோக்கியபடி இருக்கும்.
எங்கள் விடுதியில் பகுதிநேர மாணவன் ஒருவன் உண்டு. அவன் பாஸ் என்கிற பாஸ்கரன் (பெயர்கள் மாற்றப் பட்டிருக்கின்றன சம்பவங்கள் உள்ளபடியே,,.) அவனது மாமா வீட்டில் தங்கி இருந்தான். விடுதியிலும் இடம் கிடைத்திருந்தது. ஆகையால் சாப்பாட்டு நேரத்திற்கு மட்டும் விடுதிக்கு வருவான். ரொம்பவும் கூச்ச சுபாவம். ஆமாம், அவன் பெயரே எங்களுக்கெல்லாம் தெரிவதற்குள் பதினோறாம் வகுப்பில் பாதி நாட்கள் ஓடிவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேவதைகள் கூட்டத்தில் ஒரு மான்குட்டி போல மையிட்ட மருண்ட விழிகளோடு துள்ளித் துள்ளி போகும் பெண் குட்டி அவள். பெயர் பார்வதி (மறுபடியும் சொல்றேன், பெயர்கள் மாற்றப் பட்டிருக்கின்றன சம்பவங்கள் உள்ளபடியே,,) எப்போதுமே எங்கள் விடுதியைக் கடக்கும் போது பேருந்தை பிடித்துவிட செல்லும் தாமத பயணி போல ஒரு வேகத்தோடும் பயத்தோடும் கடப்பாள்.
ஒரு நாள் காலை உணவுக்காக பாஸ்கரன் விடுதிக்கு வந்து கொண்டிருந்த போது சாலையில் கிடந்த கல் இடறி விழப்போனான், விழ இருந்த இடத்தில் பார்வதி. இவன் சுதாரித்துக் கொண்டு உள்ளே வந்து விட்டான். அவளோ, இவன் அவளை இடிப்பதற்காக பிரயத்தனம் செய்திருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு பயந்து ஓட ஆரம்பித்து விட்டாள்.
நான் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு மொட்டை மாடியில் இருந்து (ஆமாங்க நான் அங்கே படித்துக் கொண்டு இருந்தேன்) இறங்கி வந்தேன்.
“டேய் ஜெயராஜ் பாஸ்கரன் கிட்ட ’பாஸூ இங்க பாரு’ என்று சொல்லி கூப்பிடேன்” என்றான் நண்பன் செல்வம்.
எனக்கு எதிர் வரிசையில் எனக்க நேராக பாஸ்கரன் அமர்ந்திருந்தான். நானும் என்ன நடந்தது என்று தெரியாமல், “’பாஸூ இங்க பாரு” என்று சற்று சத்தமாக கூவினேன். உடனே தட்டோடு எழுந்த பாஸ்கரன் சாப்பாட்டை கொட்டிவிட்டு அழுது கொண்டே வந்தான்.
’தட்டை தண்ணீரில் கழுவினானா, அல்லது அவன் கண்ணீரில் கழுவினானா?!!’ என்று வியக்கும் வண்ணம் மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் கரை புரண்டோடியது.
ஏற்கனவே போதுமான அளவில் அவனை பார்வதியோடு (சுருக்கி “பாரு பாரு” என்று) இணைத்து கிண்டலடித்து இருக்கிறார்கள். அவனும் கண்ணீரை அடக்கி கொண்டு இருந்திருக்கிறான். நான் கிண்டலடித்த உடனே மதகு உடைந்து விட்டது.
இந்த சம்பவம் நடந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. நாங்களும் சீனியர் மாணவர்களாகி விட்டோம்.
மீசையும் ஆசையும் அரும்பும் இந்த பதின் பருவ மாற்றங்கள் ரொம்பவே வியப்புக்குறியது. பனிரெண்டாம் வகுப்பு வந்ததில் இருந்தே பாஸ்கரன் மிகுந்த தில்லான ஆளாக மாறி இருந்தான். சென்ற ஆண்டு வரையில் அம்பித்தனமாக பேசித் திரிந்த பாஸ்கரன் வாயில் இருந்து அவ்வப்போது வந்து விழும் சொற்கள் யாவும் “ஏ“ ரகம்.
“ஏய் தம்பி இங்க பாரு, உன்னத்தான் பாரு இங்க பாரு” இது வீதியில் நின்று பார்வதி கடந்து போகையில் பாஸ்கரன் பேசிய வார்த்தைகள்.
சென்ற ஆண்டு “பாஸூ இங்கே பாரு” என்றதற்காக அழுத அதே பாஸ்கரன் பேசிய வார்த்தைகள் தான் இவை. இந்த ஹார்மோன்கள் பதின் பருவ பிள்ளைகளை என்ன பாடு படுத்துகிறது பார்த்தீர்களா?!
மற்றுமொரு முறை பார்வதியிடம் ஏதோ பேச முனைவது போல நேராக போய் குனிந்து ஏற்கனவே விட்டெறிந்து இருந்த நாணயத்தை எடுத்து வந்ததும் அதே பாஸ்கரன் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு அவள் வீட்டிலே முறையிட்டிருக்க வேண்டும். அடுத்த நாள் ஜெகநாதன் சித்தப்பா மாணவர்களிடம் பொதுவாக “டேய் இந்த பார்வதிகிட்ட வம்பு வச்சிக்காதிங்கடா, அவ அப்பன் ஏற்கனவே ஒருத்தன வெட்டிபுட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன்” என்றார்.
அன்று காலை தேவதைகளின் ஊர்வலம். கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு மிதிவண்டி வந்து கொண்டு இருந்தது.
“என்னாது, கூட்டத்த பிளந்து கிட்டு வர்ரான்?!”
”சரிதான் சைத்தான் சைக்கிள்ள வருது” இந்த காமெடி நினைவிருக்கிறதா?!
இது தான் அன்று நடந்தது. பார்வதியின் அப்பா சைக்கிளில் பார்வதியை வைத்து ஓட்டிக் கொண்டு வந்தார். சைக்கிள் ஹேண்ட் பாரில் ஒயர் கூடை தொங்கியது அதனுள் ஒரு அரிவாள் அமைதியாக வீற்றிருந்தது. அன்று சைக்கிளில் வீற்றிருந்த பார்வதி மாணவர்களிடம் ஒரு அலட்சிய பார்வையை வீசிச் சென்றாள். “இப்போ வாங்கடா பார்க்கலாம்” இது தான் அந்த பார்வைக் குறிப்பின் மொழி வடிவம்.
வேடிக்கை பார்க்க போன அனைவரும் ஆங்காங்கே இருந்த பதுங்கு குழிகளில் பதுங்கி கொண்டார்கள். அப்போது தான் சாலையை கடக்க முனைந்த பாஸ்கரன் அங்கே கண்ட காட்சியில் சில மைக்ரோ வினாடிகள் மூர்ச்சையுற்று பின் சுதாரித்து எதிர் சந்தில் சிட்டாக மறைந்தான்.
இந்த நிகழ்விற்குப் பின் அரையாண்டு செய்முறை மற்றும் பொதுத் தேர்வு என நாங்கள் பிசியாகி விட்டதால் காலை 8.40 எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. (மாணவர்கள் பயந்து போனார்கள் என்று நீங்கள் எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தன்னிலை விளக்கம்)
கணிதப் பாடத்திற்கு “பாரத் டியுசன் சென்டர்“ சென்ற “ஏ“குருப் மாணவர்களுக்கு அங்கே மாணவிகளோடு சேர்ந்து பயிலும் வாய்ப்புகள் அமைந்தது. விடுதியில் வீதியில் செல்லும் பெண்களை வீர ஆவேசமாக கிண்டலும் கேளியும் செய்யும் எல்லோரும் டியுசனில் “கப் சிப்“ என அடங்கித்தான் இருப்பார்கள்.
பேசுவதெல்லாம் பெண்கள்தான் கூப்பிட்டு கூப்பிட்டு பேசுவார்கள். நாங்களோ குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்வோம். எல்லாம் ”எஸ் ஆர் நோ” டைப் விடைகள் தான்.
இந்த விஷயங்கள் விடுதியில் இருக்கும் “சி“ குருப் மாணவர்களுக்கு தெரிய வந்து விடவே எங்கள் மானம் கப்பலேறியது. இந்த அவமானம் எங்களை வெகுவாக உசுப்பேற்றி விட்டது. எனவே அடுத்தநாள் பெண்களோடு பேசி விடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டோம்.
டியுசனில் பேசாவிட்டாலும் அந்த பெண்களை குறித்து பேசும் போது “அவ இவ, வாடி போடி“ என்று பேசவல்ல வீரத்தின் விளைநிலமான ரவிச்சந்திரன் பேசவேண்டியது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். (ஏனையோரை பேசக் கூறி முன் மொழியப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தோல்வி)
மோகன் சார் கண்ணுங் கருத்துமாக பாய்சான் பரவல் சார்பு பற்றி நடத்திக் கொண்டு இருந்தார். நாங்கள் கவனித்துக் கொண்டு இருந்தோம். சற்று திரும்பி ரவிச்சந்திரனைப் பார்த்தால் இரண்டு மின் விசிறிக் காற்றையும் மீறி அவனுக்கு வேர்த்துக் கொட்டிக் கொண்டு இருந்தது.
“என்னடா பயமா?”
”ச்சே ச்சே..அதெல்லாம் ஒண்ணுமில்ல இங்க காத்து வரல“ என்ற புளுகினான்.
டியுசன் மாலை 7.00 மணிக்கு முடிந்தது. மாலதி சற்று சகஜமாக பேசுபவள் என்பதால் அவளிடமே பேசி விடலாம் என்று முன்பே சொல்லி வைத்திருந்தோம்.
மொத்த பேரும் ரவிச்சந்திரனை பின்னால் இருந்து நெட்டித் தள்ளினோம்.
“என்னடா பேசறது?!” (ஆஹா, இத முன்கூட்டியே விவாதிக்கலையே)
”ஏதாவது பேசுடா”
“..“
“…“
“…“ ரவிச்சந்திரனின் முதல் மூன்று முயற்சிகளிலும் வெறும் காற்று மட்டுமே வந்தது. நாங்கள் சற்று பலமாக அவன் முதுகில் குத்தினோம்.
“ஏங்க, ஹலோ”
“என்னாது ஹலோவா என் பேரு மாலதி” என்றாள் ’சொர்ணாக்கா’ ரியாக்ஷனோடு
“…“ பயத்தில் நா மேலண்ணத்தோடு போய் ஒட்டிக் கொண்டது.
“ஹா ஹா என்னப்பா வேணும்” என்றாள் இப்போது தனது டிரேட் மார்க் புன்னகையோடு.
“இங்கிலீஷ்ல எந்த எந்த எஸ்ஸே படிச்சிருக்கீங்க”
“ம்…இதென்ன கேள்வி எல்லாமும் தான்” என்றாள் மாலதி வியப்போடு. எல்லோரும் மூர்ச்சையானோம்.
ஒன்று மூன்று ஐந்தா அல்லது இரண்டு நான்கு ஆறா என்று வகை பிரித்து ஏதேனும் மூன்று எஸ்ஸேக்களை மட்டுமே படிக்கும் வழக்கமுள்ள எங்களுக்கு அவளது பதில் நாங்கள் பாதாளத்தில் இருப்பது போல ஒரு தாழ்வு மனப்பான்மையை தந்து விட்டது.
அட உரையாடல் குறித்தா சிரிக்கிறீங்க!! நாங்கல்லாம் படிக்கிற பசங்க பாஸூ அப்படித்தான் பேசுவோம்.


Friday, January 26, 2018

வானம் வசப்படும்-1



”வானம் வசப்படும்” –இந்த நாவல் சாகித்ய அகாடமி விருதினை வென்ற நாவல். பிரபஞ்சன் அவர்கள் எழுதியது.
1740-50 களில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரியின் கவர்னர் துய்ப்ளெக்ஸ் இடம் துபாஷ் ஆக வேலை பார்க்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. அவர் அன்றாட நிகழ்வுகள் யாவையும் நாட்குறிப்பில் எழுதி வந்திருக்கிறார். அந்த நாட்குறிப்புகள் அந்த கால கட்டத்தின் வரலாற்று ஆவணம். அந்த குறிப்புகளை ஒட்டி ஒரு வரலாற்று நாவலை அருமையாக கொடுத்திருக்கிறார் பிரபஞ்சன் அவர்கள்.
வரலாற்றுச் சம்பவங்களில் மர்மங்களை நுழைத்து சுவாரசியமாக்கி, காதல் ரசத்தையும் வழிய விட்டு தரும் கல்கி வகை நாவல் இல்லை இது.
காதல் காமம் இரண்டையும் வரலாற்றோடு இணைத்து  திகட்ட திகட்ட புகட்டும் சாண்டில்யன் வகை நாவலும் இல்லை.
இரண்டு மூன்று அத்தியாயங்கள் சென்ற பின்புதான் கதையோடு ஒன்ற முடியும். ஒரு வரலாற்று நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம்.
நாவலின் மொழி நடையானது அந்த கால பேச்சு வழக்கு, அரசு முறை மரபுகள் ஒட்டிய மரியாதையான வார்த்தைகள் என்று புதியதொரு மொழியையும்  வண்ணத்தையும் கொண்டுள்ளது.
அரசு முறை தூதுகள், பேச்சு வார்த்தைகள், ஒப்பத்தங்கள், போர் உபாயங்கள், சூழ்ச்சிகள் என அனைத்து நிலைகளிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறது நாவல்.
நாவலில் இருந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் (அக்கால கட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்) பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
மாடசாமி எனும் பறையன் ஆண்டையிடம் எருமை மேய்க்கிறான். சற்று கண்ணயர்ந்து விடவே வயலில் (ஆண்டையின் வயல்தான்) சில நாற்றினை மேய்ந்து விடுகிறது.
ஆண்டை சினம் கொள்கிறார். கட்டிப் போட்டு அடிக்கிறார். சதை பிய்ந்து ரத்தம் கொட்டுகிறது. மயக்கம் போட்டவனை தெளிய வைத்து அடிக்கிறார். பயபுள்ள பசியோடு இருப்பதால் தான் மயக்கம் போடுகிறான் என்று அவனை பசியாற்றி அடிக்க எண்ணி சாணிப்பால் கரைத்து ஊற்றுகிறார். விக்கிக் கொண்டால் என்ன செய்வது? எனவே மாட்டு மூத்திரத்தை கருணையோடு அருந்தத் தருகிறார். இன்னும் கோபம் அடங்காத காரணத்தினால் கை காலுக்கு கிட்டி போடுகிறார். கை கால்களை சம மட்டத்தில் மரத்தினால் ஆன பலகையில் உள்ள துளைகளுக்குள் செலுத்தி பூட்டி விடுவது. மாட்டுக் கன்று குட்டி போல நான்கு கால் ஜீவனாக இருக்க கடவது.
அவன் மேல் கருணை கொண்ட ஒருவர் அரவமற்ற போது கிட்டியை திற்ந்து உதவுகிறார். மாடசாமி தப்பித்து போகிறான். சினமுற்ற ஆண்டை பறைச்சேரியை கொளுத்தி விடுகிறார். மாடசாமியின் மகன் மனைவி மற்றும் ஒரு 20 பேர் தீயில் கருகி சாகிறார்கள்.
சில பெரிய ஆண்டைகளிடம் நிலம் நீச்சு என்று விரிந்து பரந்த சொத்துகள் இருக்கும். வெறும் இரண்டு வேளை சோறுக்கு மட்டும் வேலை செய்ய பறைக் குடும்பத்தை வைத்து வேலை வாங்குவார்கள். ஆண்டையின் சொத்து பெருக பெருக அடிமை குடும்பமும் பெருகும் ஆண்டைக்கு கூலிக்கு ஆள் தேட அவசியம் இருக்காது. 24 நான்கு மணி நேர சேவையாற்ற அடிமைக் கூட்டம் ஒன்றுதான் வீட்டோடு இருக்கிறதே.
அந்த மாதிரி ஒரு அடிமைக் கூட்டத்தில் ஒருவன் தான் கிழக்கான். அன்றைய காலகட்டத்தில் மாட்டின் மீது எதையோ தடவி விட்டு நின்ற நிலையில் தோளை உரித்து செல்லும் ஒரு திருட்டு நடை பெறுகிறது. எனவே இரவு நேரக் காவலும் காக்க வேண்டியுள்ளது.
கிழக்கானின் முறை வரும் போது ஒரு மாட்டை தோள் உரித்து சென்று விடுகிறார்கள். ஆண்டை சினம் கொண்டு கிழக்கானை மரத்தில் கட்டி வைத்து துவைத்து எடுக்கிறார். வழக்கம் போல சாணி, மூத்திரம் என்று வழமையான தண்டனைகள். ஊர் மக்கள் இது ஒரு வழக்கமான நிகழ்வுதானே என்று அசட்டையாக வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.
கிழக்கானின் சிறுபிள்ளை சின்னக் கிழக்கான் ஒரு கல்லினை எடுத்து ஆண்டையின் மீது எரிகிறான். ஆண்டைக்கு காயம் படுகிறது. விடுவார்களா வேடிக்கை பார்த்த ஆதிக்க சாதியினர். சின்னக் கிழக்கானை கட்டையால் அடித்து கொன்று விடுகிறார்கள். சின்னக் கிழக்கானையும் அவனது அம்மாவையும் சிதை மூட்டி எரிக்கிறார்கள். மகன் மனைவி எரிவதை பார்த்து விட்டு தப்பிக்கும் கிழக்கான் முசே இம்மானுவேலிடம் வந்து தஞ்சம் அடைகிறான். அவர் மேலை நாடுகளுக்கு அடிமை வியாபாரம் செய்பவர். அடுத்து அடிமைகளை “கொள்முதல்“ செய்ய வரும் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பி வைக்கிறார்.


இன்னும் வாசிப்போம்…. 

Tuesday, January 23, 2018

நானே ”நானோ”-6 எங்கே படிக்கலாம்? என்ன படிக்கலாம்?

நானே ”நானோ”-6 எங்கே படிக்கலாம்? என்ன படிக்கலாம்?


     இந்தியாவில் எந்த பிரபல பல்கலைக் கழகமும் நானோ டெக்னாலஜியில் இளங்கலைப் படிப்பை வழங்கவில்லை. அதனால் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உடனே ஆர்வமிகுதியில் குதிக்க வேண்டாம். நீங்கள் இளங்கலை முடித்து விட்டு முதுகலையில் M.Sc யோ அல்லது M.Tech ஓ படிக்கலாம்.
     உத்தரபிரதேசத்தில் உள்ள AMITY INSTITUTE தான் முதலில் நானோ டெக்னாலஜி பாடப்பிரிவை இந்தியாவில் ஆரம்பித்தவர்கள். இங்கே இன்டக்ரேட்டட் M.Tech(இதற்கு physics, chemistry, maths உள்ளிட்ட பாடங்களை பனிரெண்டாம் வகுப்பில் பயின்றிருக்க வேண்டும்) உள்ளிட்ட முதுகலை படிப்புகளும் ஆராய்ச்சி படிப்பம் நானோ டெக்னாலஜியில் வழங்கப்படுகிறது. http://www.amity.edu/aint/
NIT – CALICUT ல் முதுகலை மற்றம் ஆராய்ச்சி படிப்புகள் நானோ டெக்னாலஜியில் வழங்கப்படுகின்றன. இது திருச்சியில் உள்ள REC வகையிலான கல்லூரி ஆகும்.
அடுத்ததாக Amrita Centre for Nanosciences   கொச்சியில் மருத்துவ உயிரியல் சார்ந்த நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப் படுகின்றன. இந்த துறையில் ஏராளமான ஆராய்ச்சிகள் இங்கே நடைபெறுகின்றன. 28 கண்டுபிடிப்புகளுக்கான பேடண்ட் உரிமைகளை வைத்துள்ளனர். https://www.amrita.edu/center/nanosciences
அடுத்து நம்ம ஊரிலும் இந்த துறையில் ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிப்பை வழங்கும் தனியார் பல்கலைக் கழகம் உண்டு தெரியுமா. ஆம், சாஸ்த்ரா என்கிற பழைய சண்முகா காலேஜில் தான் 2005 ல் ceNTAB என்கிற பெயரில் நானோ டெக்னாலஜி சென்டர் அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. http://sas.sastra.edu/centab/
பெங்களூரில் இருக்கம் IISC ல் Centre for Nano Science and Engineering (CeNSE) http://www.cense.iisc.ac.in/ என்கிற பெயரில் இயங்கும் பிரிவில் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப் படுகின்றன. இங்கே இளங்கலை அல்லது முதுகலை பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்குவருடம் தோரும் 8 வார கால இன்டெரன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நோட்டிஃபிகேஷன் விட்டிருக்கிறார்கள். http://www.cense.iisc.ac.in/content/summer-program
டெல்லி, மும்பை மற்றும் கான்பூர் IIT களிலும் நானோ டெக்னாலஜி முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் குருக்ஷேத்திரத்தில் உள்ள NATIONAL INSTITUTE OF TECHNOLOGY(NIT) லும் இந்த படிப்புகள் வழங்கப் படுகின்றன.
அறிவியலின் அனைத்து விதமான பிரிவுகளிலும் புரட்சிகரமான மாற்றங்களை செய்யவல்ல நானோ டெக்னாலஜிக்கு நல்லதொரு எதிர்காலம் உண்டு. இப்போதே செய்தித் தாள்களில் நாளொரு கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் நானோ டெக்னாலஜி சம்மந்தமாக வந்த வண்ணம் உள்ளன. இந்த தொடர் கட்டுரைகள் ஏதேனும் ஒரு மாணவருக்காவது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட அது எனது சிறு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி பெருமிதம் கொள்வேன். இத்துடன் நிறைந்தது வாழ்த்துக்கள். இங்கே நான் கூறியவை யாவும் TIP OF AN ICEBERGதான். அதிலும் நான் புரிந்து கொண்ட தகவல்கள் மட்டுமே. நீங்கள் இணையத்தில் இன்னும் தேடலாம்.
இந்த தொடர் எழுத எனக்கு பயன்பட்ட நூல்கள்
1 நானோ டெக்னாலஜி –சுஜாதா
2 ரிச்சார்டு ஃபெயின்மான் (இந்த துறையின் முன்னோடி) அவர்களது சொற்பொழிவின் manuscript. ‘ THERE IS LOT OF SPACE AT THE BOTTOM
3. எரிக் டெக்ஸ்லர் அவர்கள் எழுதிய Unbounding the Future மற்றும் Engines of Creation  
 இவற்றில் இருந்து பல விஷயங்கள் பகிரப் படாமல் எனது டைரியில் துயில் கொண்டுள்ளன.
4. மற்றம் பல இணைய பக்கங்கள்.



Monday, January 22, 2018

லால்குடி டேஸ்-22 சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்?!

லால்குடி டேஸ்-22  சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்?!
பதினோறாம் வகுப்பின் இறுதிக் கட்டத்தில் இருந்த நேரம். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் இறுதிப் பரிட்சை உள்ளவர்கள் மாத்திரம் விடுதியில் இருந்தனர்.
கலைப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் அறிவியல் பிரிவைச் சார்ந்தவர்களுக்கும் உரசல் முட்டல் மோதல் என அவ்வப்போது வந்து போகும். பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வன்று அனைத்து கணக்கையும் நேர்செய்ய நாள் குறித்து காத்திருந்தார்கள் எங்கள் சீனியர் மாணவர்கள்.
பரிட்சை முடிந்து வந்த அண்ணன்களில் சிலர் ஓடோடி வந்தார்கள். சிலர் கூடிக் கூடி பேசினார்கள். அப்புறம் சாயங்காலம் பார்த்தால் அறிவியல் புலத்தில் ஒரு அண்ணனுக்கு கை கால்களில் சிராய்ப்பு மற்றும் சட்டையில் கிழிசலோடு வந்தார். கலைப் பிரிவைச் சார்ந்த அண்ணன் ஒருவர் வெளியிலிருந்து ஆள் அழைத்து வந்து மேற்படி அண்ணன்களை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். இவர்களும் தப்பிப் பிழைத்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆள் வைத்து அடித்த அண்ணனோ மாலையில் தனியே வந்து கொண்டிருந்த போது காத்திருந்த அடி வாங்கியவர்கள் அப்படியே தூக்கி மரத்தில் சேர்த்தணைத்து அடித்து துவைத்த தோடு அல்லாமல் “சேது” படத்தில் வருகிற மாதிரி தூக்கி தலையை மரத்தில் மோதியதில் மண்டை பிளந்து கொண்டு ரத்தம் கொட்டியது. அன்று பள்ளி வளாகமும் வெளிப்புறமும் சற்று பரபரப்பாக காணப்பட்டது. இப்போது உள்ளது மாதிரி ஊடகங்கள் இருந்திருந்தால் சட்டக் கல்லூரி கலவரத்திற்கெல்லாம் முன்னோடியான கலவரமாக இந்த சம்பவம் மாறிப் போயிருக்கும்.
எனக்கும் மற்றுமொரு நண்பனுக்கும் (ஆம்! பதினோறாம் வகுப்பு எதிரி பனிரெண்டாம் வகுப்பில் நல்ல நண்பன்) பதினோறாம் வகுப்பில் பெரிய சண்டை வந்த அனுபவமும் கூட உண்டு. ஆனால் நான் இதுவரை வன்முறையை பிரயோகம் பண்ணியதில்லை.
எங்கள் விடுதியாம் சிங்கப்பூரார் வீட்டில் ஜன்னல் விளிம்புகளில் ஒரு சிறுவன் படுத்து உறங்கும் அளவுக்கு விஸ்தாரமாக இடமுண்டு. சுவர் அவ்வளவு தடிமன். எனவே பெட்டியை அந்த விளிம்புகளில் வைக்க போட்டா போட்டி ஏற்படும். நான் ஆஸ்டல் செலக்ஷன் நடக்கும் முன்பாகவே விடுதிக்குள் தங்க ஆரம்பித்து விட்டதால் (ஜகநாதன் சித்தப்பா இருந்த சலுகையில் தான்!!) நான் ஒரு அருமையான ஜன்னல் விளிம்பில் பெட்டியை வைத்து விட்டேன். பெட்டிக்கும் ஜன்னல் பக்க சுவருக்கும் இடைப்பட்ட கேப்பில் நான் அமர்ந்து படிப்பது அல்லது புத்தகங்களை அடுக்குவது என பயன்படுத்திக் கொள்வேன்.
இப்படி நான் பட்டா போட்டு வைத்திருந்த இடத்தின் மீது நண்பன் செந்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டான். அதாவது எனது பெட்டியை கீழே எடுத்து வைத்து விட்டு அவனுடையதை வைத்துக் கொண்டான். நான் அமைதியாக அவனுடையதை கீழே வைத்து விட்டு என்னுடையதை மீண்டும் வைத்து விட்டேன்.
வெகு எளிதில் உணர்ச்சி வசப்படும் எனது மற்றொரு நண்பன் செல்வத்திடம் இது குறித்து உணர்ச்சிப் பொங்க விவரித்துக் கொண்டே குளிக்க கூழையாறு சென்று திரும்பினோம். கதையை கேட்க கேட்க வலது உள்ளங்கையை குவித்து இடது உள்ளங்கையில் “ணங் ணங்“ என்ற குத்திக் கொண்டே வந்தான். (அவன் தனது இடது கையை செந்திலாக நினைத்துக் கொண்டு குத்தியபடி வந்தான் என்பது சத்தியமா எனக்கு தெரியாதுங்க)
விடுதிக்குள் நுழைந்து பார்த்தால் எனது பெட்டியை மறுபடியும் கீழே எடுத்து விசிறியடித்து விட்டு அவனது பெட்டியை வைத்ததோடு அன்றியும் ஜன்னல் கம்பிகளின் ஊடாக சிறு கொடி கயிறு ஒன்றை கட்டி ஜட்டியை காயப் போட்டிருந்தான். (அது ஒரு மழைக்காலம் என்று அறிக)
ஏற்கனவே நான் கூறிய கதையால் மூளை சலவை செய்யப்பட்டிருந்த செல்வம் செந்தில் மேல் பாய்ந்து விட்டான். அவனை மூளையில் தள்ளி ஒரு அட்டை பெட்டியை தூக்கி அடிக்க அது அழகாக செந்திலின் தலையை மூடிவிட்டது. மீளவும் செல்வம் அவன் மீது ஒரு கொலைவெறித் தாக்குதலுக்கு திட்டமிட்டான். விபரீதத்தை உணர்ந்து நான் குறுக்கே பாய்ந்து தடுத்தாற் கொண்டேன். அதற்குள் கூட்டம் கூடிவிட விலக்கி விட்டாகிவிட்டது.
எங்கள் ஊரிலிருந்து அப்போது அங்கே படித்த பாசக்கார 9 மற்றும் 10ம் வகுப்பு தம்பிகளுக்கு “செந்திலுக்கும் ஜெயராஜுக்கும் சண்டை” என்கிற ரீதியில் தகவல் சொல்லப்பட குளித்து விட்டு உள்ளே நுழைந்தவுடன் தாக்குதலுக்கு எத்தனித்தார்கள். செந்திலோ விடுதியில் எனக்க இருந்த அரிதிற் பெரும்பான்மையை எண்ணி பீதியில் உறைந்து போனான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு நானும் செந்திலும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.
பனிரெண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தவுடனேயே விடுதியின்  சீனியர் மாணவர்கள் என்கிற கெத்து காண்பிக்க ஆரம்பித்தோம். நான் எப்போதும் போல சிறுவர்களிடம் நல்லதொரு நட்பினை பேணி வந்தேன். பதினோறாம் வகுப்பு மாணவர்கள் விடுதிக்கு புதியவர்கள் மற்றும் இளையவர்கள் என்பதால் சீனியர் என்பதற்கான தோரணையை காட்ட ஆரம்பித்தனர் சக நண்பர்கள்.
ஆனால் பதினோறாம் வகுப்பு மாணவர்களோ அடங்கிப் போகிற ரகமாக இல்லை. எனவே அடிக்கடி முட்டலும் மோதலும் என்று கழிந்தது. ஒரு கட்டத்தில் விறகு கட்டையை எடுத்து அடித்துக் கொள்ளப் போகும் அளவுக்கு கூட போய் கடைசி நேரத்தில் கலவரம் தவிர்க்கப் பட்டது.
இந்த முட்டல் மோதலுக்கு எல்லாம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் வந்து முற்றுப் புள்ளி வைத்து விட்டது. கொடி கட்டுவது, வீடியோ வாடகைக்கு எடுப்பது, படங்கள் தேர்வு என பல தளங்களில் இணைந்து செயல்பட்டு நட்பினை வலுப்படுத்திக் கொண்டோம். அதன் பிறகு இரண்டு வகுப்பு மாணவர்களும் நல்ல ஒற்றுமையோடு அந்த ஆண்டினை இனிதே கழித்தோம்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நண்பன் இராஜவேல் பதினோறாம் வகுப்பு மாணவர்கள் பக்கத்து நியாயத்தை மட்டுமே உரக்கப் பேசியபடி இருந்தான். அவன் ஒரு போதும் பனிரெண்டாம் வகுப்பு கோஷ்டியின் பக்கம் வந்து நிற்க தயாராக இருந்தது இல்லை. நான் கூட சண்டை முற்றிய போது பதினோறாம் வகுப்பு மாணவர்களிடத்தில் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.
ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்த கோபமும் சீற்றமுமாக இருந்த பயனற்ற நாட்களையும் இனிமையான நாட்களாக கழித்து இருக்கலாமே என்று மனது ஏங்குகிறது.



Sunday, January 21, 2018

ஒரு ஆனந்த யாழ் நாராசமாகிப் போனதே!!



ஒரு ஆனந்த யாழ் நாராசமாகிப் போனதே!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், மகள்கள் பிறக்கும் போது ஆனந்த யாழோடுதான் பிறக்கிறார்கள் என்று.
அப்பாக்களின் மூச்சில் வாழும் புல்லாங்குழல் அவர்கள், பேசும் வார்த்தைகள் யாவும் தேன் சுவை சொட்டும் செந்தேன் குழல்கள்.
ஆணாதிக்கம் கொண்டு மனைவியை அதிகாரம் செய்யும் அப்பாக்கள் கூட மகளதிகாரத்தின் முன்னால் மண்டியிடுகிறார்கள்.
ஆனாலும் கூட சில பழைமைவாத அப்பாக்களுக்கு மகளின் அழகைப் பார்க்கும் போதெல்லாம் வயிற்றுக்குள் நெருப்பு கங்கு ஒன்று விட்டு விட்டு சிலிர்க்கிறது. அது மகளின் கற்பென்னும் கற்பிதத்தில் இருப்பதாக கருதும் புனிதம். அதற்கு பங்கம் நேரும் போது ஆனந்த யாழை உடைத்துப் போடுகிறார்கள். புல்லாங்குழலின் இசை நாராசமாகிப் போகிறது.
அருவிச் சாரலில் குளித்த அன்றலர்ந்த புது மலராக இருக்கும் பெண்ணிற்கு அருவி என்று பெயர் சூட்டி அழகு பார்க்கிறார் ஒரு தந்தை.
மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிறார். மகளின் நல்லதொரு எதிர்காலத்திற்காக கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி குடிபெயர்கிறார்.
மகளதிகாரம் அவரது நெடுநாள் பழக்கமான சிகெரெட்டை தூக்கி எறிய வைக்கிறது.

அப்படிப் பட்ட மகளுக்கு எயிட்ஸ் என்னும் போது துடித்துப் போகிறார். மகளின் இருப்பு தொண்டையில் குத்திய மீன் முள்ளாக ஆகிப் போகிறது. . யாரோடோ படுத்து எயிட்ஸ் வாங்கிக் கொண்டதாக எண்ணுகிறார். அவளுக்கு தன்னை நிருபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே என்கிற துக்கம். என்ன சொல்லியும் சமாதானம் கொள்ள மறுக்கிறார். சில நாட்கள் சகித்தாலும் கூட வெகு நாட்கள் சகிக்க முடியாமல் வெளியேற்றகிறார்
ஒரு அரவாணியின் அரவணைப்பில் தனது காலத்தை தள்ளகிறாள். அவளின் நிலை தெரியாமல் ஒரு மூன்று ஆடவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். அவர்களை மன்னிப்புக் கேட்க வைக்க “சொல்வதெல்லாம் சத்தியம்“ நிகழ்ச்சிக்கு போய் பிராது பண்ணகிறாள்.
அவர்களை எதிர் வரிசையில் அமர வைத்து “எனக்கு எயிட்ஸ் இருக்கு“ என்று சொல்லி தெறிக்க விடுகிறார். படப்பிடிப்பு அரங்கமே அதிர்கிறது.
“ஆமாம் சில ரேப்புகள பண்ணிப்புட்டோம் என்ன இப்ப?” என்று கெத்து காட்டி அமர்ந்திருப்போர் இப்போது அழுது புரள்கிறார்கள்.
ஊடகமோ இந்த பரபரப்பையும் காசாக்க விழைகிறது. அருவியின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படவே அவள் தனது தந்தையிடம் இருந்து எடுத்து வந்த துப்பாக்கியை எடுக்கிறாள். அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் பிணைக்கைதி ஆக்குகிறாள்.
ஊரே பரபரப்பாகிறது. அப்புறம் சும்மா விடுவார்களா செய்தி சேனல்கள்?! விவாதம் நடத்துகிறார்கள் லைவ் டெலிக்காஸ்ட் பண்ணுகிறார்கள் “பிக் பிரேக்கிங் நியுஸ் போடுகிறார்கள்.
பிணைக்கைதியாக பிடித்த உடனே “நான் பாதுகாப்பாக இருந்தேன் கவலைப்படாதீர்கள்” என்று கூறி அந்த மூவர் வயிற்றிலும் பாலை வார்க்கிறாள். அரங்கின் உள்ளே கோபம், சண்டை, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி என்று ஒரு கலவையான மனநிலை நிலவுகிறது. நேரம் ஆக ஆக பிணைக்கைதிகள் அனைவரும் அருவி பிரச்சனை இல்லாமல் சரணடையவேண்டுமே என்று தவித்துப் போகிறார்கள். வேண்டும் படியெல்லாம் அனைவரையும் ஆட்டுவித்து பிறகு சரணடைகிறாள்.
நோய் முற்றுகிறது. தனது இறுதி காலம் அமைதியாக கழிய வேண்டும் என்று தனித்து சென்று ஒரு கிராமத்தில் குடிலமைத்து வாழ்கிறாள் அருவி. இறுதியில் “சொல்வதெல்லாம் சத்தியம்“ தொடரின் இணை இயக்குனர் தான் கூறிய சினிமா கதை போல முயற்சித்து அணைவரோடும் (அருவியின் தாய், தந்தை மற்றும் தம்பி உட்பட) சென்று அவளை சந்தித்து மகிழ்ச்சி படுத்துவதாக கதை முடிகிறது.
மகிழ்ச்சியான பதின் பருவத்தின் போது கண்களை அரை மயக்க நிலையில் வைத்து புருவத்தை மேலே தூக்கி ஆட்டும் மேனரிசத்தை அவளின் இறுதி காலத்தில் செய்யும் போது நமது கண்ணீர் அருவியாக சொரிகிறது.
அருவியின் நடிப்பு அருமை. மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த அந்த நீண்ட வசனம் அப்பப்பா ஆசம்.

“இந்த ஆம்பளைங்க ரோட்டுல ஐஸ்வர்யாராய் போனா கூட விட்டுடுறாங்க ஆனா அரவாணிங்க போனா மட்டும் வெறித்து பார்க்கிறார்கள், நாங்க என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்?” என்ற அருவியின் தோழியான அரவாணி கூறும் வார்த்தைகள் நகைச்சுவையாக கூறப்பட்டாலும் அதுவே நிஜம். சமீப காலங்களில் அரவாணிகள் குறித்த உயர்வான சித்தரிப்போடு படங்கள் வருவது ஆரோக்கியமான முன்னேற்றம்.
படத்தில் தொலைக்காட்சி ஊடகங்களை நன்கு பொன் வறுவலாக வறுத்து எடுத்திருக்கிறார் இயக்கனர். அவர்களின் மனிதாபிமானமற்ற வியாபார தந்திரம் குறித்து உரக்க பேசியிருக்கிறார்.
நோய் அவர்களுக்கு எப்படி வந்திருந்தாலும் எயிட்ஸ் நோயாளிகளுக்கு தேவை நமது அன்பும் அரவணைப்பும் என்கிற விழிப்புணர்வை முன்வைக்கிறார்.
அந்த சிறுவயது அருவி யாரது? முகநூலில் அருமையாக பாடி வீடியோக்கள் பதிவேற்றும் ப்ரணிதாவா?!
இறுதிக் காட்சியில் அருவி முகநூல் வழி அனுப்பும் செல்ஃபி வீடியோ மற்றும் வசனங்கள் கல்லையும் கரைத்து விடும். அதன் பிறகுதான் அவளது அப்பா அசைகிறார்.
இந்த படமும் கூட ரொம்ப நாள் ஓட வில்லை. எந்த படத்தையும் நேரம் வாய்க்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வைப்போர்களது ஒரே போக்கிடம் “  “ அவர்கள் தான்.


Friday, January 12, 2018

சுவாச் பாரத் மிஷன் - ஹோம் வெர்ஷன்


இந்த எந்திரன் படத்தில சிட்டி ரோபாட்ட ரஜினி டிஸ்மான்டில் பண்ணுவது மாதிரி “வெடுக் வெடுக்“ என்று கணினி இணைப்புகளை எனது துணைவியார் துண்டித்தார்.
“அகிலா ஏன்? என்னாச்சு?“
“ம்ம்.. சனி ஞாயிறு வருதுல்ல, இப்போ உட்டா ஒங்கள பிடிக்க முடியாது, பொங்கலுக்காக வீட்ட க்ளீன் பண்றோம்”
“அதுக்கு ஏன் சனி ஞாயிறு?”
“நீங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம் மேல ஒயறத்துல இருக்கிற பொருள கீழ எறக்க ஹெல்ப் பண்ணா போதும்”
“இவ்வளவு தானா! ஓகே ஓகே செஞ்சிடலாம், எவ்வளவோ பண்றோம் இதப் பண்ண மாட்டோமா?!” என்று வீர வசனம் பேசிக் கொண்டு வெள்ளந்தியாக விரித்து வைக்கப் பட்ட வலையில் சிக்கிக் கொண்டேன்.
எங்க வீட்டு சின்சேங்கும் (என்ன முழிக்கிறீங்க இதுக்குத் தான் ஹங்காமா டிவி லாம் பாக்கணுங்கறது. உங்க வீட்டு குட்டீஸ்ட்ட கேளுங்க) தூய்மை இந்தியா திட்டத்தில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப் பட்டான்.
“எல்லா வேலையையும் போட்டு கொழப்பிக்க கூடாதுங்க இன்னைக்கு இந்த பீரோ இருக்குற ரூமும் ஹாலும் தான், மீதி நாளைக்குத்தான்”
”சரி சரி“ என்று அறைக்குள் சென்று “ப்ப்பா..குபலீ…“ என்று கூறிக்கொண்டே பீரோ வைத் தூக்க முயன்றேன்.
“அடச்சே, உங்க பாகுபலி சாகஸத்தல்லாம் வீடு காலி பண்றப்ப வச்சிக்கோங்க, லாப்ட் மேல இருக்கிற பொருள எறக்கி வச்சிட்டு ஒட்டட அடிச்சி சுத்தம் பண்ணனும்” என்றார் எங்க வீட்டு ராஜமாதா சிவகாமி.
இனி ஒரு தடவ ”பல்பு” வாங்க கூடாது என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு, போய் சேரை எடுத்துக் கொண்டு வந்து போட்டு மேலே ஏற முயற்சித்தேன்.
“ஏங்க கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? (”அறிவு கெட்ட முண்டம்” என்பதன் இடக்கரடக்கல் என்று அறிக) அதெல்லாம் சேர்ல ஏறி எடுக்க முடியாது உயரம் பத்தாது போய் ஏணி வாங்கிட்டு வாங்க கீழ் வீட்டுல சொல்லியிருக்கேன்” என்று அசால்ட்டாக அடுத்த “பல்பை“ கொடுத்தார்.
“அப்பா என்னப்பா இன்னைக்கு பல்பு மேல பல்பா வாங்கிட்டு இருக்கீங்க?” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான் அருண்.
ஒரு வழியாக ஏணி போட்டு ஏறி அட்டை பெட்டிகளை எடுத்தேன். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என்றெல்லாம் படித்திருக்கிறோமே, அது போல எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது. யாவற்றையும் இறக்கி வைத்தாயிற்று.
“ஏங்க இதெல்லாம் இங்க வச்சி  தொடைக்க முடியாது எல்லாத்தையும் மொட்டை மாடிக்கு கொண்டு போய் வச்சிடுங்க” என்று அடுத்த அஸ்திரத்தை வீசினார்.
சரின்னு ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு சென்றோம். எதெல்லாம் வெயிட் கம்மி எதுல என்ன இருக்கு என்கிற கேட்டலாக் எனது துணைவியாரிடம் இருந்த காரணத்தினால் லேசான பெட்டிகளை இனம் கண்டறிந்து அதை எடுத்துக் கொள்ள, நான் வழக்கம் போல கிடைத்த பெட்டிகளை எடுத்து கொண்டு போய் மேலே வைத்தேன்.
ஒவ்வொரு பெட்டியாக பிரித்து பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப் பட்டன.
“அகிலா போன வாரம் திருச்சி போனப்ப சின்னதும் பெருசுமா ரெண்டு சம்படம் தேவைன்னு சொல்லி வாங்குனில்ல, இங்க பாரு அதே மாதிரி ரெண்டு இங்க இருக்கு. 500 ரூபாய் வேஸ்ட் பண்ணிட்ட”
“சரி விடுங்க எதுக்காவது யூஸ் ஆகும்”
”ஆனா காசு வேஸ்ட் தானே?!”
“நீங்க நெட் ரீச்சார்ஜ், ஆனந்த விகடன், டெய்லி டீ சினாக்ஸ் செலவு பண்றதுலாம் ரொம்ப முக்கியமான செலவோ” என்று ஒரு அஸ்திரத்தை வீசினார். போர் மேகம் சூழ்வதை யூகித்து வாயை மூடிக் கொண்டேன்.
“இது என்னங்க இந்த பெட்டிக்குள்ள சுருள் சுருளா ஏதோ இருக்கு?!”
“தெரியலையே, காய்ஞ்சி போய் சுருள் சுருளா ப்ரவுன் கலர்ல இருக்கே. ஃபாரன்சிக் டிபார்ட் மண்டுக்கு அனுப்பிதான் ஆராயனும்”
ஆனா பாருங்க மனைவியரின் ஐம்புலன்களும் ஐம்பது ஃபாரன்சிக் ஆபீசர்களுக்கு சமம்.
”டேய் அருண், சாப்புட கட் பண்ணி குடுத்த ஆப்பிள தூக்கி மேல எறிஞ்சிருக்க தானே”
அந்த மர்ம பொருள் வெளியே எடுக்கப் பட்ட அந்த நொடியே ஆள் நழுவி கீழே போய்விட்டான். அவன் புத்தி சாதுர்யத்தை நினைத்து பொறாமை கொண்டேன்.
“நீன்னா பாரேன் அவன் பெரிய பேஸ்கட் பால் பிளேயரா வரப் போறான்.  
எவ்வளவு துள்ளியமா தூக்கி அட்டை பெட்டிக்குள்ள எறிஞ்சிருக்கான்”
”ஏணிய இன்னைக்கே கொடுக்கணும், அவங்களும் சுத்தம் பண்ணனும்ல,        
அதனால பெட்ரூம்ல லாப்ட் மேல இருக்கிற பொருளயும் கீழ எடுத்து வச்சிடலாம்“ என்ற திட்டத்தை மாற்றினார்.
அடுத்ததாக ஒரு இறக்குமதி மறுபடியும் மொட்டை மாடிக்கு ஏற்றுமதி நடை    
பெற்றது.
இது வரை நடை பெற்ற மொத்த மிஷன்லயும் “நெற்றியில சுருண்டு விழும் நீள முடி அழகு” என்று பெருமையாக எண்ணிக் கொண்டு முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தேன்.
“தலையை தொடைங்க ஒட்டடை தலையில ஒட்டியிருக்கு”
“ச்சே அது முடியில்லையா?”
“நெனப்புதான் அதான் பாதி முடி மேல ஏறிப் போயிடுச்சே”
“சரி வாட் நெக்ஸ்ட், சாப்பாடு தானே?”
” ஏங்க ஏணிய கொடுக்கறதுக்கு முன்னாடி ஃபேன தொடச்சிடலாம் அவ்வளவு டஸ்ட் இருக்கு”
“வேணாம்னா விடவாப் போற”
சிமெண்ட் ஃபேக்டரியின் மொத்த டஸ்ட்டும் ஃபேனில் தான் பதுங்கி இருந்தது. நான் ஃபேன் துடைக்க ஆரம்பித்த நொடியில் தேனீர் தயார் செய்து விட்டார் எனது துணைவியார்.
“டீக்காக இறங்க வேண்டாம் அங்கேயே இருங்க டீ எடுத்து தரேன்”
ஃபேனை பிடித்து தொங்கிக் கொண்டே தேனீர் அருந்தியதையெல்லாம் எனது சாதனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே என்று பெருமை பொங்க தொங்கிக் கொண்டே தேனீர் அருந்தினேன்.
ஒரு வழியாக மதிய உணவுக்குப் பின்னர் எல்லா லாப்ட்டையும் துடைத்து சுத்தம் செய்தாகி விட்டது.
பொருட்களும் கீழே வந்து வரிசை கட்டி அமர்ந்திருந்தது. சுத்தமாக இருந்த இடங்கள் லாப்ட்டும் கட்டிலும்தான். இந்த காட்சியை லாப்ட் மேலேயிருந்து நான் கண்டு லயித்த போது மணி இரவு பதினொன்று முப்பது.
“ஏங்க நானும் அருணும் கட்டிலில் படுத்துக்கிறோம், நீங்க அங்கே லாப்ட் மேலேயே படுத்துக்கோங்களேன், கொசுவர்த்தி வேணும்னா தரேன்” என்கிற ஒரு விபரீதமான யோசனையை முன் வைத்தார். ஆனாலும் அந்த கொசுவர்த்தியில் தெரிந்த எனது மனைவியின் அன்பை நினைத்து எனது கண்கள் நீரைச் சொரிந்தன. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
“ஏம்பா இன்னையோட முடிஞ்சிடுச்சா, இல்ல இன்னும் இருக்கா?”
”சேச்சே, நாளைக்கு இதெல்லாம் வச்சிட்டோம்னா முடிஞ்சி போச்சி, நாளைக்கு இந்த பீரோவில இருக்கிற துணிய அடுக்கணும் அத நான் பாத்துக்கிறேன்”
அடுத்த நாள் நியூஸ் பேப்பர் கிழித்து ஷெல்ஃப் லாப்ட் என எல்லா இடத்திலும் கடை விரிப்பது என் வேலையாக இருந்தது.
இப்படி கிழித்து கிழித்து இரண்டுமாத தமிழ் மற்றும் ஆங்கில “இந்து“ நாளிதழ்கள் காலியாகி விட்டன.
அடுத்ததாக பீரோவை திறந்தார். எல்லா துணியையும் பிரித்து அடுக்கி என பொழுதே கழிந்து விட்டது. மதிய உணவை பனானா லீஃப் உணவகத்தில் வாங்க சென்ற போது “செத்த இங்க சோபாவில் படுத்துக்கிறேனே” என்று கேட்கலாமா என்றென்னும் அளவுக்கு சோர்ந்து போய்விட்டேன்.
அடை மழைக்குப் பிறகும் கூட இரண்டொரு நாட்கள் லேசான தூரல் தொடர்வது போல வாரம் முழுவதும் சலிப்பில்லாமல் ஏனைய பணிகளையும் செவ்வனே நிறைவேற்றினார் எனது துணைவியார்.
நான் எந்திரனுக்கு உயிரூட்ட எண்ணிய போதெல்லாம் “அதுக்கு என்ன இப்போ அவசரம்” என்று தடுத்து விட்டார்.
“சே என்னோட லால்குடி டேஸ், நானே “நானோ“ ரசிகர்கள் ஒன்றரை கோடி பேருக்கு நான் என்ன பதில் சொல்றது” என்ற சத்தம் வராமல் அலுத்துக் கொண்டேன்.
இப்படியாக ”தூய்மை இந்தியா திட்டம்” எங்கள் வீட்டில் இனிதே(?!) நிறைவேறியது.





Thursday, January 4, 2018

கணக்கோடு ஏன் பிணக்கு?

கணக்கோடு ஏன் பிணக்கு?

அறிவியல் பாடங்களின் இராணி கணிதம்என்று கூறுவார்கள். எனவே கணிதப் பாடத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ளாத ஒரு மாணவனால் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. ஏனெனில் கணிதப் பாடத்திட்டமானது வாழ்வியல் சார்ந்தவை மற்றும் மேல் நிலை அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கான அடிப்படைகள் என்று இரு பிரிவகளைக் கொண்டது.
நல்ல துவக்கம் பாதி வெற்றியை தரும் என்பார்கள். நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நல்ல துவக்கம் முழு வெற்றியையே தரவல்லது. புதியப் பாடத்திட்டத்தில் ஒன்பது முதல் பனிரெண்டு வகுப்பு வரையிலான வரைவு பாடத்திட்டத்தினை பற்றிய ஒரு ஆய்வு மேற்கொண்டதில் தான் நான் அறிந்து கொண்டேன், இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு துவக்கம் என்று.
பழைய பாடத்திட்டத்தில் இருந்த இடர்பாடுகள், புதியப் பாடத்திட்டத்தின் வரவேற்கத்தக்க அம்சங்கள் மற்றும் புத்தக வடிவமைப்பில் எனது சிறு எதிர்பார்ப்பு என்று மூன்று விஷயங்கள் பற்றியது தான் இந்தக் கட்டுரை.
” ’அல்ஜீப்ராபேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?” ஆமாம் இந்தப் பாடம் பெரும்பாலான மெல்லக் கற்போருக்கு ஒரு பெரும்கொடுங்கனவு”(NIGHT MARE) தான். பாரதிதாசன் பல்கலைக்கழக சுதந்திர தின கொடியேற்று விழாவில்பல்கலைக்கழகத்தில் அரசியல் ஒரு துறையாக இல்லையே தவிர அனைத்து துறைகளிலும் அரசியல் உள்ளதுஎன்று ஒரு துணைவேந்தர் வருத்தத்தோடு குறிப்பிட்டார். அது போல அல்ஜீப்ரா என்னும் இயற்கணிதம் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு பாடமாக இல்லையே தவிர அனைத்து பாடங்களிலும் அல்ஜீப்ரா வருகிறது.
ஆம் இப்போதைய பாடத்திட்டத்தில் மாணவர்கள் பத்தாம் வகுப்போடு அல்ஜீப்ராவுக்கு விடை கொடுத்துவிடுவார்கள். பதினோறாம் வகுப்பில் சும்மா ஊறுகாய் மாதிரி ஒரே பயிற்சி உண்டு. மீதிக் கருத்துக்கள் யாவும்புலித் தோல் போர்த்திய பசு”. அல்ஜீப்ரா என்கிற பெயரின் கீழ் இருந்தாலும் அவையெல்லாம் வித்தியாசமான இலகுவான கருத்துக்கள்.
புதிய பாடத்திட்டத்தில்அல்ஜீப்ராவிரிவாக கொடுக்கப் பட்டுள்ளதோடு அல்லாமல் ஏனைய கருத்துக்கள் எல்லாம் அவற்றின் தனித்த பெயரில் தனிப் பாடங்களாக வழங்கப் பட்டுள்ளன.
அடுத்து கோணங்கள், அதன் பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அங்கு உண்டாகும் நூற்றுக் கணக்கான சூத்திரங்கள் என்ற உள்ளடக்கத்தோடு  திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் என்றொரு பாடம் உண்டு. இந்தப் பாடம் படிக்காத ஒருவரால் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட சமன்பாடுகளை புரிந்து கொள்ளவே இயலாது.
பிறவிப் பெருங்கடலைக் கூட நீந்திக் கடக்கலாம், ஏன் நெருப்பாற்றில் கூட நீந்திக் கரையேறி விடலாம், தேர்வுக்கான குறுகிய இடைவெளியில் முக்கோணவியலை நடத்தி மாணவர்களுக்கு புரியவைப்பதற்குள் ஆசிரியர்களுக்கு பெண்டு கழண்டு விடும். ஏனென்றால் அவ்வளவு விஷயங்கள் பதினோறாம் வகுப்பில் ஒரே பாடத்தின் கீழ் திணிக்கப் பட்டிருக்கும்.
புதியப் பாடத்திட்டத்தில் முக்கோணவியல் பாடம் சரிசமமாக பங்கிடப் பட்டு பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. எனவே ஆசிரியர்களின் நெருக்கடி சற்று குறைந்துள்ளது.
இரண்டாண்டுகளுக்கு ஒரு மாணவன் முன் பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம். மிகவும் தாமதமாக பதினோறாம் வகுப்பில் கணிதப் பிரிவில் சேர்ந்தான். அவனது கெட்ட நேரம் அவன் வந்த போது நான் நடத்திக் கொண்டு இருந்த பாடம்முக்கோணவியல்”. இரண்டு நாட்கள் அமர்ந்து பார்த்து விட்டு அருகில் இருந்தவனிடம்ரொம்ப நடத்துறாருடா இவருஎன்று கூறிவிட்டு ஓடினவன் தான் ஒரு மாதம் பள்ளிக்கே திரும்பவில்லை. அப்புறம் அவனது தந்தையை அழைத்து பேசி வரவழைத்தோம். மறுபடியும் அவனது கெட்ட நேரம் புதிய சற்று கடினமான பகுதியான கால்குலஸ் நடத்திக் கொண்டு இருந்தேன். பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினவன் தான் அதன் பிறகு அவனை நான் காணவே இல்லை.
ஆக அறிமுகம் நன்றாக இருந்தால் தான் பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பும்இது நமக்கு இலகுவானது நாம் முயன்றுப் பார்க்கலாம்என்ற எண்ணம் வரும். ஆனால் புதிய பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்து பதினோறாம் வகுப்பு வரும் மாணவர்களிடம் முதல் பாடமாக இயற்கணிதம் என்கிறஅல்ஜீப்ராவை காட்டி பயமுறுத்த வேண்டியது இல்லை. மாறாக சற்று இலகுவான கணங்களும் சார்புகளும் என்கிற பாடத்தையோ அல்லது அணிக்கோவைகள் என்கிற பாடத்தையோ வைத்தால் முதல் பாடத்தை பார்த்தவுடன் அவர்கள் முகம் மலரும்.
ஒரு கோட்பாட்டை அறிமுகப் படுத்திய பின்பு அது சார்ந்த கணக்குகள் நிறைய கொடுக்கப் பட வேண்டும். இப்போதைய புத்தகத்தில் பெரும்பாலான பயிற்சிகளில் வகைக்கு ஒன்று அல்லது இரண்டோதான் உள்ளது. இது போதாது. நிறைய கணக்குகள் வாயிலாக பயிற்சி செய்தால் தான் கருத்தினை நன்கு உள்வாங்க இயலும். மேலும் புத்தகத்தின் பின்னால் வரும் கணக்குகளைத்தான் தேர்வுகளில் கேட்கவேண்டும் என்கிற நிலை இருக்காது. மேலும் மெல்லக் கற்போரையும் புறக்கணிக்காத வகையில் கணக்குகள் அமைய வேண்டும். அதாவது மாணவர்கள் மொபைல் கேம் விளையாடும் போது லெவல் ஒன்று இரண்டு மூன்று என்று செல்வார்கள் அது போல கணக்குகளும் நிலைகளாக பிரிக்கப் பட்டு நிறைய வழங்கப் பட வேண்டும்.
அப்படி வழங்கினால் புத்தகம் பெரிதாகி பூச்சாண்டி காண்பிக்க வாய்ப்பு உள்ளது. மொழிப் பாடங்களில் துணைப்பாட நூல் உள்ளது போல கணக்குப் பாடத்திலும் கோட்பாட்டுப் புத்தகம் பயிற்சிப் புத்தகம் என இரண்டு புத்தகங்கள் போடலாம். இப்போது உள்ள தேர்வு மைய கற்றல் கற்பித்தல் மறைய வேண்டும். தேர்வு தேர்ச்சி சதவீதம் என்கிற இலக்கினை விடுத்து மாணவர்களின் தெளிவான புரிதல் என்பதை இலக்காக கொண்டு செயல்படும் போது தான் பாடத்திட்டம் முழு வெற்றியை பெறும்.




ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...