Sunday, July 11, 2021

நீட் தேர்வு முட்டுகளை பிரித்து மேய்வோமா?!!

 நீட் தேர்வுக்கு முட்டு கொடுக்கும் வாட்சாப் பகிர்வுகள் நம்பத் தகுந்தவைகளா?


டி.பெரியசாமி பிராக்கெட்ல ஐஐடி சென்னை னு முன்னாடியும் பின்னாடியும் தலைப்பிட்டு ”நீட் தேர்வு மட்டும் இல்லன்னா தகுதி தரம் என்ன ஆவது?” என்கிற ரீதியில் ஒரு லென்த்தி வாட்சாப் செய்தி ஒன்று உலாவருகிறது. 


அந்த பெரியசாமி ஐஐடி ல பட்டப் படிப்பு படிக்கல. படிப்பெல்லாம் முடித்து பி.எச்டி தான் செய்துள்ளார். அதாவது ஐஐடிக்கான நுழைவுத்தேர்வில் தேர்வாகாத காரணத்தால் ஐஐடி யில் கால் பதிக்க இயலவில்லை. பி.எச்டி ஐ பொறுத்தவரை திறமையானவர்களை எங்கிருந்தாலும் ஆய்வு மாணவராக சேர்த்துக் கொள்வது பெரும்பாலான புரபசர்களின் வழக்கம்.


 அந்த பெரியசாமிதான் இதை எழுதியவரா இல்லை பெரியசாமியின் போர்வையில் பார்த்தசாரதி எழுதினாரா என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. மொத்தத்தில் ”ஐஐடி ல படிச்சவன் அறிவாளி அதனால் அவன் சொல்வது சரியாக இருக்கும்” என்கிற கலரை இந்த வாட்சாப் செய்திக்கு வழங்க முயன்றுள்ளனர் என்பது தெளிவு. 


சரி அவர் கூறியுள்ள விஷயத்திற்கு வருவோம். முதல் பாய்ண்ட்டாக கல்வித்துறைக்கு ஒதுக்கப் படும் நிதியின் அளவு அவரது கண்களை உறுத்துகிறது. இவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்டு யாரையும் டாக்டர் ஆக்கல என்று அரசுப் பள்ளிகளைப் பார்த்து பொங்க முயல்கிறார்.


 இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இவ்வளது சமூகநீதி சார்ந்த நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படும் கல்வித்துறை எங்காவது உண்டா. அனைத்து தரப்பு பிள்ளைகளும் எந்த செலவும் இன்றி பள்ளிப் படிப்பை முடிக்க வழிவகை செய்துள்ளோமே. அத்தோடல்லாமல் மிதிவண்டி லேப்டாப் என மாணவர்கள் தங்கள் வசதி படிப்புக்கு தடையாக என்றும் அமையாது என்கிற ஊக்கத்தை கொடுத்துள்ளோம். 


ஐஐடி கண்ணாடியை கழட்டிவிட்டு ஏழைகளை கொஞ்சம் பாருங்கள்.


பத்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து 213 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி சென்றுள்ளார்கள் என்று சொல்லி உங்களுக்கு கொடுத்த சம்பளம் தண்டம் என்று சொல்ல வருகிறார். 


ஐஐடி மேதாவிகளுக்கு சில நுணுக்கமான விஷயங்கள் தெரியாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எண்ணுவார்கள். 


பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில் மாவட்டத்திற்கு 30 பட்டியலின மாணவர்களையும் 30 பிற்பட்ட வகுப்பு மாணவர்களையும் அரசு செலவில் அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் திட்டம் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. 


எனது இரண்டு மாணவர்கள் இந்த திட்டத்தில் படித்து இன்று மருத்துவர்களாக உள்ளனர். அவர்களது எண்ணிக்கை தனியார் பள்ளி கணக்கில் தான் வரும். இது நான் அறிந்த எனது மாணவன். அறியாதோர் நிறைய உண்டு. 


அப்புறம் சில பெற்றோர் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டால் கடன் வாங்கியாவது மேல்நிலைக் கல்வியை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். அவர்களிலும் மருத்துவர்கள் உருவாவது உண்டு. அரசு பள்ளி தனியார் பள்ளி ஒப்பீடு என்கிற இந்த செயலால் மாவட்டத்திற்கு 60 மீத்திற மாணவர்களை அரசே எங்களிடம் இருந்து எடுத்து தனியாரில் போட்டுவிடுகிறது. பிறகு பெற்றோரும் கூட. அதையும் மீறி இந்த 213 பேர் என்பது எங்களுக்கு சாதனை எண்ணிக்கையே.


அப்புறம் இந்த NCERT,CBSE  என்கிற சிலபஸ் வெங்காயங்கள். பாடத்திட்ட வடிவமைப்பு என்பது மாணவர்கள் எளிமையாக சிரமம் இன்றி விரும்பி படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேல்நிலைப் பாடங்கள் கல்லூரி பாடங்களை புரிந்து கொள்ள தேவையான அடிப்படைக் கருத்துகளை மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. 


இன்று உள்ள மேல்நிலை சிலபஸ் (2017-2018 ல் மாற்றியது) நீட்டுக்காக மாற்றப் பட்டுள்ளது. சென்ற ஆண்டு நீட் தேர்வின் போது தமிழக சிலபஸ் நீட் தேர்வை கவர் செய்து விட்டது கால்வாய் வெட்டி விட்டது என்று பீத்திக் கொண்டனர். ஆனால் இந்த சிலபஸ் ஏராளமான ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி அறிவியல் புலத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டது என்பது தான் உண்மை. பதினோறாம் வகுப்போடு வெளியே சென்று ஐடிஐ க்கும் பாலி டெக்னிக் கல்லூரிகளுக்கும் துரத்தியடித்துள்ளது. வேண்டுமானால் ஆர்டிஐ போட்டு கேட்டுப் பாருங்கள்.


 3000 பேர் வயிற்று வலிக்காக ஐந்து லட்சம் பேருக்கும் மருந்து கொடுக்க முயல்வது முட்டாள்தனம்.


அப்புறம் பதினோறாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை என்று ஒரு பாய்ண்ட்டை போட்டு சேம்சைட் கோலுக்கு வழிவகுத்துள்ளார். பழைய முறையால் பதினோறாம் வகுப்பு கெட்டது என்றால் இந்த நுழைவுத் தேர்வு முறையால் பதினொன்று பனிரெண்டு இரண்டுமே கெட்டது. பள்ளிகளில் டோக்கன் போட்டுவிட்டு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் பட்டரையை போடும் வழக்கம் தொடங்கியாச்சு. 


ஏற்கனவே இது ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் செய்து கொண்டிருப்பது தான். ஆக, ஒன்பதாம் வகுப்பு முதலே தனது பிள்ளைகளை டாக்டராக்க விரும்பும் பெற்றோர் ஆகாஷ் பைஜூஸ் சைத்தன்யா என்று ஓட வேண்டும். மேல்நிலை பாடப்புத்தகங்கள் பரணில் தூங்கும். 


அனிதாவின் மரணத்திற்கு தனி பத்தியே ஒதுக்கியுள்ளார். சென்ற ஆண்டு வரை 1150 க்கு மேல் வாங்கி டாக்டர் முடிந்தது ஆனால் நான் வரும் போது அது முடியாது போனது. உச்ச நீதி மன்ற கதவுகளைத் தட்டியும் எந்த தீர்வும் இல்லை. 


ஒரு பதின்பருவ குழந்தையை அலைக்கழித்தது இந்த நீட் என்கிற புதிய முறைதானே. சரி இது அனிதாவோடு முற்று பெற்றதா. சென்ற ஆண்டு கூட ரிப்பீட்டர்ஸ் ஆக பயிற்சி எடுத்த மாணவி பதட்டத்தில் தன்னை மாய்த்துக் கொண்டது தெரியவில்லையா. 


ப்ளஸ் டூ படிச்சோமா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தோமா என்று இருந்தவர்களை நீட் என்கிற தடையை ஏற்படுத்தியதோடு இல்லாமல் ரிப்பீட்டர்ஸ் என்று தங்களை விட அதிக ஆண்டுகள் பயிற்சி எடுத்தவர்களோடு புதியவர்களையும் போட்டி போடச் செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. 


அடுத்ததாக இடஒதுக்கீடு புள்ளி விவரத்தை கொடுத்து பாத்தீங்களா செல்லத்துக்கு (இடஒதுக்கீட்டுக்கு) ஒன்னுமே ஆகல என்கிறார். ஏம்பா ஏற்கனவே பிஜி நீட்டில் பத்து சத அரிய வகை ஏழைகளுக்கு லட்டும் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு அல்வாவும் கொடுத்துவிட்டார்களே. அது யுஜிக்கும் வராது என்று உத்திரவாதம் தருவீரா மிஸ்டர் பெரியசாமி எம்பிசி. இந்த இடத்தில் அவரே தனது சாதியையும் சொல்லி இருக்கிறார். (நீங்க அரிய வகை ஏழை இல்லை என்பதை பெயரை பார்த்த உடனே கண்டு கொண்டோமே)


தமிழகத்தின் GER Ratio அதிகமாக இருப்பதை கிண்டலடித்துள்ளார். ஜஸ்ட் பாஸ் பண்ணி காலேஜ் போய் அங்கே அரியர் வைக்கிறார்கள். இதில் வடமாநில ஒப்பீடு வேறு. பள்ளிக் கல்வி டூ கல்லூரிக் கல்வி செல்லும் போது போதனா மொழி, Spoon Feeding to Self Eating என்று ஆயிரம் பஞ்சாயத்து இருக்கு. அரியர் வைத்தாலும் படித்து முடித்து வேலைக்கு சென்று கொண்டு தானே உள்ளனர். 


இறுதியாக ஒன்று, ஏற்கனவே பையன் வர்ரான், ப்ளஸ் ஒன் டூ படிக்கிறான். மார்க் வாங்குறான் அவன்பாட்டுக்கு டாக்டர் ஆயிடுறான். இப்போ பாருங்க, பையன் வர்ரான், பளஸ் ஒன் டூ படிக்கிறான், நீட் கோச்சிங் ஒன்று இரண்டு மூன்று ஆண்டுகள் என்று லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் போறான், அப்புறம் அரை கிழவனாவதற்குள்ளாக ஒரு வழியாக டாக்டர் ஆகிடுறான். 


பாருங்க அந்த முறைக்கும் இந்த முறைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்த. அங்க ஸ்கூல் ஃபீஸ் மட்டும் கட்டுறான். இங்க பாருங்க, எத்தன லட்சம் செலவு பண்றான். இந்திய பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி புழங்குது. (இந்த மாதிரி நடுத்தர மக்கள் பாக்கெட்ல பணத்தை ஆட்டய போட்டு பொருளாதாரத்தை உயர்த்துவதாக சீன் போடுவது பாஜக வுக்கு புதுசா என்ன?)


பழைய முறையால் ஏதாவது பெரிய கேடு விளைந்தால் புதிய சேர்க்கை முறைக்கு மாறலாம். நீட் எழுதாத மருத்துவர்கள் தானே கொரானா காலத்தில் மக்களின் இன்னுயிரைக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐஐடி பெரியசாமி சொன்னாலும் சரி  எய்ம்ஸ் ஏகாம்பரம் சொன்னாலும் சரி, கோச்சிங் சென்டர்களின் கல்லா நிறைந்ததை விட வேறு எந்த கேசமும் நீட்டால் ஏற்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூறி முடிக்கிறேன்


(இந்த எசப்பதிவுக்கான மூலப்பதிவுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்)


https://m.facebook.com/story.php?story_fbid=10218176695682718&id=1648805816


மு.ஜெயராஜ்

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி,

நாகமங்கலம்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...