Sunday, May 31, 2020

நகக்கண்ணில் வலி - சிறுகதை


நகக்கண்ணில் வலி- சிறுகதை
ஆசிரியர்- ஜெயராஜ் முத்துவேல்

     ஸ்ஸ்அப்பாடா இதுக்கு மேல என்னால ஓட முடியாது, இந்த மைல் கல்லு மேல செத்த உக்காருவோம்கொரானா விடுமுறையில் வீடு அடங்கி உண்டு உறங்கியதில் ஒரு பத்து கிலோ எடை கூடிவிட்டது. இனிமே டெய்லி ஜாகிங் போய் எடைய கொறச்சிட்டு தான் அடுத்து வேலை என்று மனதுக்குள் பத்தாவது முறையாக சபதம் எடுத்தேன்.
     ஜட்டி, பனியன், மாஸ்க் என அத்தனையும் நனைஞ்சி போச்சி. எதிரே பத்து பேர் கொண்ட குழு வாக்கிங் வந்து கொண்டு இருந்தது. இவர்கள் அடைமழை காலத்தில் கூட குடைபிடித்து அடமாய் நடப்பார்கள். நடக்கையில் உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரையும் சாதி அரசியலில் இருந்து சங்கி அரசியல் வரையிலும் நீள அகல ஆழ உயரம் என அலசு அலசு என்று அலசுவார்கள்.
     என்ன தம்பி உக்காந்துட்டீங்க? எங்கள மாதிரி நடந்தீங்கன்னா களைப்பில்லாம நடக்கலாமில்ல!!”
     நீங்க பேசிக்கிட்டே அசஞ்சி அசஞ்சி நடக்குற நடைக்கு ஒரு மில்லிகிராம் கொழுப்பு கூட கரையாது.’
     என்ன தம்பி சொல்றீங்க?”
     ஒண்ணுமில்லண்ணே, நீங்க நடங்க நான் பின்னால வாரேன்
     அவர்கள் அசைந்து அசைந்து பேசிக்கொண்டே சென்று மறைந்தார்கள். சரி நானும் எழுந்து ஓட்டத்தை தொடர வேண்டியது தான் என்று எழுந்தேன்.
     நீங்க எல்லாரும் சாப்பிட்டத செரிமானம் பண்ண நடந்து கிட்டும் ஓடிகிட்டும் இருக்கீங்க, ஆனா ஒரு கூட்டமே உண்டு செரித்து உயிர் பிழைக்க பிடி உணவு இல்லாம ஆயிரக்கணக்கான மைல் நடந்துகிட்டு இருக்காங்க
     இவ்வளவு பெரிய தேசிய நெடுஞ்சாலையில் கூட வண்டி எதையும் காணோம், சுற்றிலும் ஜனநடமாட்டமே இல்லை, எங்கேருந்து சத்தம் வருது, அதிகாலையிலேயே பேய் வந்துருக்குமோ என எனக்கு லேசாக உதறல் எடுத்தது.
     கொஞ்சம் கீழே குனிஞ்சி பாருங்க உங்க கொழுப்பு கரைஞ்சிடாது, நீங்கள்ளாம் தலையில இருக்கும் கிரீடம் விழுந்துடுமோன்னு எப்பவும் கீழே இருக்கவங்கள குனிஞ்சி பாக்கறதே கிடையாது
     யார்ரா இது மறுபடி மறுபடி குத்தம் சொல்ற மாதிரியே பேசறது என்று மறுபடியும் சுற்றி சுற்றி பார்த்தேன். சரின்னுட்டு கீழேயும் பார்த்தேன் ஒன்றும் கண்ணில் படவே இல்லை.
     யோவ் உனக்கு என்ன கண்ணு நொல்லயா, நல்லா கீழே பிஞ்சி கெடக்குற டயர் பீச பாருய்யா
     என்னடாது என்று பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீழே குனிந்ந்ந்து, யப்பா இதுக்கு மேல குனிய முடில மறுபடியும் அந்த கல்லு மேல உக்காந்துகிட்டு பாப்போம்.
     யோவ் இப்போ தெரிதா?” அட டயர்ல சிக்கி இருக்கிற நகத்துணுக்குல இருந்து தான் சத்தம் வருது. என்னது நகம் பேசுமா?
     காலெல்லாம் காப்பு காச்சிப் போயி வருசக் கணக்குல வெட்டாத கட்டை விரல் நகம் முழுதாகப் பிய்ந்து விழுந்து கிடந்தது. வெட்டாத நகம் திருகி திருகி முறுக்கிக் கொண்டு தடித்துப் போய் கறுப்பாக இருந்தது. சுத்தியல் வச்சி அடித்தால் கூட ஒடியாது போல. அந்த நகம் தான் சின்னஞ்சிறு பூதமாக மாறி பேசியது.
     டேய் யப்பா, நீ எந்த ஊரு பேய்? காஞ்சனாவா சஞ்சனாவா?”
     நான் சஞ்சய், பீகார் காரன்
     உண்மைய சொல்லு நீ பேய் தானே?”
     இல்ல, நான் சஞ்சய்யோட கால் நகம் பேசுறேன்
     நான் துள்ளி அப்படியே பின்னால் போய் விழுந்தேன், ’என்னாது நகம் பேசுமா?’
     நான் பேசுவேன்யா
     “சரி என்ன பேசப்போற?“
     “நீ என்ன வேல பாக்குற?”
     “நான் சாஃப்ட்வேர் இஞ்சினியர், மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன், என் ஒய்ஃப்பும் மாசம் 1 லட்ச்ம் சம்பாதிக்கிறா, ஒரு பையன் செகண்ட் படிக்கிறான். இப்போ ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் சொந்த ஊர் வந்து இருக்கோம்” என்றபடி சாவகாசமாக கதை கேட்க அமர்ந்தேன். கழுத்தில் வேர்வையில் ஒட்டிக் கொண்டு உறுத்திய தங்கச் செயினை எடுத்து டி-சர்ட் மேல் போட்டுக் கொண்டேன்.
     “அடேங்கப்பா, கொழுத்த ஆளுங்கதான் போல இருக்கே!”
     “ஏய், என்ன கொழுப்பா? உதை படுவ”
     “சரி கோச்சிகாத நைனா, உங்களுக்கு பசின்னா என்ன என்று தெரியுமா?”
     “தெரியாது, ஆனா டயட் கண்ட்ரோல் ன்னுட்டு அவ்வப்போது சாப்பாட ஸ்கிப் பண்ணுவோம் அப்ப லேசா பசிக்கும்”
     “ரெண்டு நாள் பழைய நாத்தம் புடிச்ச பழைய சோத்த சாப்பிட்டு இருக்கியா?”
     “ச்சி ச்சீ உவ்வ்வ்வே”
     “நாங்க சாப்பிட்டு இருக்கோம். சென்னையில மார்ச் மாதம் கிளம்பி எங்க ஊர் நோக்கி டெய்லி நடந்துகிட்டே இருந்தோம். அந்த நெடும் பயணம் தொடுவானத்த தொடும் சிறுபிள்ளைகள் முயற்சியாக நீண்டு கொண்டே இருந்தது“
     “என்னது, சென்னையில் இருந்து பீகாருக்கு நடந்தா? இம்பாசிபில், என்ன விளையாடுறீயா?”
     “பாஆஆ…ம்” என்று ஆரன் அடித்தபடி ஒரு சிமெண்ட் ஆலை லாரி கடந்து போனது.
     “விளையாட்டா, அதெல்லாம் லாக்டவுன்ல கொழுத்து சாப்பிட்டு விட்டு பொழுது போகாம நீங்க செய்யறது. வேலை இல்லன்னா எல்லா அயல் மாநிலங்களிலும் நாங்க தேவையில்லாத லக்கேஜ் தான். வேலை செஞ்ச இடத்தில் யாரும் கண்டுக்கல. மேஸ்திரி மொதலாளின்னு யாருக்கு போன் அடிச்சாலும் எடுக்கல. கிட்டத்தட்ட முப்பது குடும்பம் தங்கி பெரிய கட்டுமான வேலை செஞ்சி வந்தோம். காசு மொத்தமா வாங்கிக்கலாம்னுட்டு சோறு மட்டும் போட்டு வேலை வாங்கினாங்க. லாக்டவுன் அறிவிச்ச உடனே அவன் அவன் நத்தை மாதிரி கூட்டுக்குள்ள பதுங்கி கிட்டான். சாப்பாட்டுக்கு வழி இல்லை. கொரானா வந்தா செத்து போயிடுவோம்னு வேற பயமுறுத்துறாங்க. அதான் செத்தாலும் சொந்த ஊருல போய் செத்து போவோம்னு நடக்க ஆரம்பிச்சிட்டோம்” என்ற நீளமாக பேசி மூச்சு வாங்கியது அந்த கருநாக தலை போல இருந்த நகம்.
     “எத்தன நாளா நடந்தீங்க?”
     “அது இருக்கும் ஒரு மாசம், அப்படி நடந்தும் ரெண்டு மாநிலம் கூட தாண்டல”
     மார்ச் 30 ம் தேதி ஆவடியில் இருந்து கிளம்பி அப்படியே நேஷனல் ஹைவேயிலேயே நடந்து போக ஆரம்பிச்சோம் கையில ஒத்த பைசா கிடையாது”
     ”ஐயய்யோ அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க?”
     ”வழியில தொண்டு நிறுவனங்கள் கொடுத்த சாப்பாட்டு பொட்டலங்கள வாங்கி அரை வயிறு சாப்பிட்டு நடப்போம். அவங்க கொடுக்குற ஒரு வேளை சாப்பாட்ட நாங்க சாப்பிட்டு அதுலயும் மிச்சம் பிடிச்சி கொழந்தைகளுக்கு மூணுவேளையா கொடுப்போம்”
     “தங்கறது தூங்கறதுலாம் எங்க?”
     “நாங்க என்ன உங்க மாதிரி வெயிலுக்கு எதமா ஏசி ரூம்லயா படுக்க முடியும். நைட்டுக்கு எதாவது ஹைவே ஓரமா இருக்கிற பஸ் ஸ்டாப்புல படுப்போம்”
     ”வெயில் நேரத்தில என்ன பண்ணுவீங்க?”
     “என்ன பண்ணுவோம்? ரோட்டோரத்தில முன்ன மாதிரி நெறய மரம் இருக்கிறதுல்ல. ரோடு ரொம்ப மேடாவும் மரம் பள்ளத்திலயும் இருக்கு. சமதளமா இருக்கிற இடங்கள்ல மரமே இருக்கிறதுல்ல”
     “அடடா ரொம்ப கஷ்டம் தான்!!” என்ற படி சுற்றிலும் நோக்கினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மரத்தையும் காணோம். பழைய மரங்களுக்குப் பதிலாக வைத்தவை ஒன்றும் பெரிதாக வளரவில்லை. அப்படி வளர்ந்தால் கூட அவை சாலையில் இருந்து ஒரு இருபது அடி தள்ளி பள்ளத்தில் தான் இருந்தது.
     ”உங்க இரக்கத்த தூக்கி குப்பையில போடுங்க அதனால பைசா புரயோஜனம் கிடையாது”
     “ஏம்பா இப்படி காண்டாவுற”
     ”இந்த உதவி பண்றேன்னு கௌம்பினவன்லாம் மொத லாக்டவுன்ல நாளஞ்சு நாள் பொட்டலம் கொடுத்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுட்டு அக்கடான்னு படுத்துட்டான், கொடுத்தா ஒரே நாள்ல கொடுக்குறான் அப்புறமா ஒரு பயலும் எட்டி கூட பாக்கல”
     “அப்படியா?”
     “ஆமாங்க, நெல்லூர் தாண்டி ஒரு நாள் முழுக்க தண்ணிய மட்டுமே கொழந்தைங்க குடிச்சாங்க, நாங்க ரெண்டு நாள் சாப்பிடல. ஓங்கோல்ல ஒரு போலீஸ்காரர் கிட்ட சொன்னோம். அவர்தான் அந்த ஊர்ல யார்கிட்டயோ சொல்லி சாப்பாடு ஏற்பாடு பண்ணினார். அப்புறம் கொஞ்சம் ரொட்டி செஞ்சி கொடுத்தனுப்புனாங்க” என்று நன்றியுணர்வு பொங்க கூறியது. அப்போது விரைந்து சென்ற லாரியில் இருந்து பொறுப்பின்றி வீசியெறியப் பட்ட பொட்டலம் சரியாக எனது காலருகே வந்து விழுந்தது. அவிழ்ந்த பொட்டலத்தில் சாப்பிடாத நான்கு பரோட்டாவும் குருமா பொட்டலமும் இருந்தது.
     “அயோக்கியப் பயலுவ எப்படி பொறுப்பில்லாம தூக்கி எறிஞ்சிட்டு போறான் பாரு” என்று கத்தினேன் கோபமாக. எத்தனையோ முறை நானே சாப்பாட்டை வீணாக்கி இருந்தாலும் இப்போது அந்த பொட்டலத்தை பார்த்த போது மனது வலித்தது.
     “ஒரு எடத்தில ஊருக்குள்ள எறங்கி நடந்தோம், அன்னைக்கு வௌக்கு புடிக்க சொல்லி பிரதமர் சொல்லி இருந்தாரு. அந்த ஊருல இருந்த இளவட்டப் பசங்க கொரானா பரவும்னுட்டு தீ பந்தத்த கையில வச்சிக்கிட்டு “கோ கொரானா கோ கொரானா” அப்படின்னு எங்கள வெரட்டுனானுங்க. எங்காளு ஒருத்தர தீப்பந்தத்தாலயே அடிச்சிப்புட்டானுங்க. அதுக்கு அப்புறம் நாங்க ஊருக்குள்ள எறங்கி நடக்கறதே இல்ல” என்று கோபமாக கூறியது.
     “அயோக்கியப் பசங்க, வடக்கனுவ அப்படித்தான் இருப்பானுவ”
     “ஆமாம், நீங்க அன்னைக்கு என்ன பண்ணுனீங்க பாஸ்?“
     “வீட்டுல வௌக்க அணைச்சுட்டு மாடியில நின்னு மெழுகுவர்த்தி ஏத்தினோம்” என தேசபக்தி பொங்க கூறினேன். உண்மையான இந்தியனா இருந்தா ஷேர் பண்ணுன்னா தெரிஞ்சே வதந்திய கூட ஷேர் பண்ணி தேசபக்திய வெளிபடுத்தியவன் அல்லவா?
     “நீங்க அவனுங்கள போய் மடையன்னு சொல்றீங்க” என்று அந்த “நீங்க” என்பதை சற்று அழுத்தமாக அர்த்தமாக உச்சரித்தது அந்த அகம்புடிச்ச நகம்.
     “ஏய்…” என்று அதட்டினேன். அப்போது நான் தனியே அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து வாக்கிங் போன இரண்டு பேர் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். என்னை அரை லூசு என்று எண்ணியிருக்கக்கூடும்.
     “அப்புறம் எங்க கூட்டத்தில் ஒரு சின்ன பையன் இருந்தான் சரியான வாயாடி. குறும்புக்காரன். எதாவது உளறிகிட்டே சிரிச்சிக்கிட்டே வருவான். நாங்களும் பசி காதை அடைத்தாலும் அவன் பேசறத கேட்டு சிரிச்சிக்கிட்டே நடப்போம். மொத நாள் மதியம் கொடுத்த சாப்பாட்டு பொட்டலத்த அடுத்த நாள் மதியம் அவனுக்கு சாப்பிடக் கொடுத்து இருந்தோம். அன்னைக்கு அவனுக்கு சரியான வயிற்றுப் போக்கு. அப்போ நடந்து கிட்டு இருந்தது சரியான காட்டுப் பகுதி. தண்ணி வேற தீந்து போச்சு. எல்லோரும் பசி தாகம் ஏற்படுத்திய மயக்கத்துல தூங்கிப் போயிட்டோம். அடுத்த நாள் காலையில கண்ணு முழிச்சி பாத்தா அவன் அசையவே இல்ல ஒடம்பெல்லாம் சில்லிட்டுப் போச்சி, டவுசர் எல்லாம் வயிற்றுப் போக்கு போயி நனைஞ்சி ஒரே வாடையா இருந்துச்சி புள்ள செத்துப் போயி கெடக்கான் என்பதை நம்ப முடியாம பிரமை புடிச்ச மாதரி உக்காந்தே இருந்தோம்“
     “அடடா!!” நெஞ்சில் தீ அள்ளிப் போட்டது போல உணர்ந்தேன்.
     “அன்னைக்கு அழுவதற்கு கூட யார் கண்ணிலும் தண்ணீர் வரவில்லை. அவன அங்கேயே பொதச்சிட்டு மத்த புள்ளங்க உயிர காப்பாத்த உயிர புடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். மேலே இருந்து அவன பொதச்ச எடத்துக்கு நேரா ஏனோ ஹெலிக்காப்டர்ல இருந்து மலர் தூவுனாங்க”
     ’அடடா அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் ஏதோ பெரிய மருத்துவமனை இருந்திருக்க வேண்டும்’ பிரதமரோட மூன்றாவது டாஸ்க் அல்லவா?!
     “அது சரி நீ எப்படி மறுபடி இங்க?”
     “சொல்றேன் கேளுங்க, அடுத்த நாள் ராஞ்சியில் இருந்து பாட்னாவுக்கு ட்ரெயின் போகுதுன்னு சொன்னாங்க. சரி எப்படியாவது அங்கே போயிடலாம்னு ரயில்வே ட்ராக்லயே நடந்து போனோம். ராஞ்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தோம். விடியற்காலை நேரம் கலைச்சி போயி ட்ராக்லயே படுத்துட்டோம். பக்கத்துல ஒரே புதரா இருந்துச்சி. பாம்பு எதாவது வந்துடுமோன்னுதான் பயத்துல தண்டவாளத்துல படுத்தோம். அதான் ட்ரெயின் எதுவும் வராதேன்னுதான் படுத்தோம். கெட்ட குடியே கெடும்னு சொல்ற மாதிரி அன்னைக்குன்னு பாத்து குட்ஸ் ட்ரெயின் வந்து எங்க மேல ஏறிப்போயிடுச்சி. என் ஒத்தக்காலு துண்டாகி இழுபட்டுப் போயி அருகே இருந்த சாலை ஓரமாக ஓடி விழுந்தது“
     “ஆமாம், நியுஸ்ல பாத்து அழுதுட்டேன்பா”
     “மத்தியான நேரம் வரைக்கும் அப்படியே கால் அழுகிப் போய் கிடந்தது. ஒரு கழுகு வந்தது. காலை கொத்தி சதையை இழுத்து வாய் நிறைய வைத்து சாப்பிட்டு விட்டு நகத்தை கீழே போட்டு விட்டது. சதையில் இருந்து பிய்ந்த நான் நல்லா உறுதியா இருந்ததால லாரி டயர்ல சிக்கிக் கொண்டேன். ரவுண்டானா அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்கிய போது நழுவி தோ இங்கே விழுந்துட்டேன்“
     “ம்ம்…“ என்று கண்களில் நீர் கோர்த்தபடி கேட்டுக் கொண்டு இருந்தேன்
          “உங்க அழுக எதயாவது மாத்துமா? உடலுழைப்பு தொழில் செய்வோருக்கும் படிப்பு சார்ந்த வேலை செய்வோருக்கும் மலைக்கும் மடுவுக்குமான சம்பள வேறுபாடு இருக்குதே அத மாத்துமா உங்க பரிதாபம்?”
     “என்னப்பா சொல்ற?”
     “உள்ளூர்ல எங்களுக்கு பொழப்புக்கு வேலையோ நியாயமான கூலியோ இருந்தா நாங்க ஏன் இங்க நாடோடியா ஓடியாரோம். உங்க பொருளாதார அமைப்பு விவசாயம் பண்றவன்கிட்ட சேமிப்பு இல்லாம கவனமா பாத்துக்குது. உணவு உற்பத்தி பண்றவன் அவன், ஆனா அவன் பொருளுக்கு செலவு கணக்கு பாத்து லாபம் வச்சி அவனால விக்க முடியாது. ஆனா இடையில நிக்கிறவன் நோகாம பைய நெரப்பிக்கிறான்”
     “படிச்சி கெவர்மண்ட் ஜாபுக்கு வரவேண்டியது தானே?”
     “ஏம்பா நாங்க மட்டும் என்ன படிக்கலயா? நானும் சஞ்சய் எம்.ஏ, பி.எட், எம்.ஃபில் என்று கெத்தா பேர் போட்டுக்கிட்டு திரிஞ்சி அதனால பைசா புரயோஜனம் இல்லாம வேலை தேடி நாடோடியா திரிஞ்சி ரயில்ல அடிபட்டு செத்தவன் தாம்பா”
     “நீ வேலைக்குப் போக பரிட்சை எழுதி இருக்கணும்”
     “யார ஏமாத்தப் பாக்குறீங்க, அரசுத் துறைன்னு ஒண்ணு இருக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பாக்குது அரசாங்கம், தனியார் கையில போனா செலவ கொறச்சி லாபத்த கூட்ட எல்லாத்துலயும் ஆட்டோமேஷன் அப்படின்னு சொல்லி தொழிலாளர்கள கொறைக்கிறாங்க. அப்புறம் இந்த ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் வந்துச்சுன்னா நீயும் கூட எங்கயாவது பொழப்பு தேடிப் போயாகணும். அப்புறம் எங்கே புதுசா வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்க தமிழ்நாட்டுல கூட பன்னிரெண்டு லட்சம் பேரு வாத்தியார் வேலைக்கு காத்திருக்கிறான். அவ்வளவு பேருக்கு வேலை இருக்கா?”
     “ஏன் தனியார் பள்ளிகள் இல்லையா?”
     “ஆமாம், அங்க கொடுக்குற சம்பளம், நாங்க பேசி, வாங்காமல் ஏமாந்த கொத்தனார் சம்பளத்தில் பாதி கூட தேறாது. நீங்க எல்லாரும் கவர்மெண்டு வாத்தியார் சம்பளம் வாங்குறான்னு கூவுறீங்களோ ஒழிய ’தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நிகரான சம்பளம் கொடு’ ன்னு அந்த ஆசிரியர்களால தான் கேட்க முடியாது ஆனா பத்திரிக்கையோ பொது ஜனமோ கேக்குறீங்களா?”
     “அத எப்படி கவர்மெண்ட் சொல்வாங்க?”
     “ஏன் கேக்க கூடாது? என்ன ஒண்ணு கேட்டா கல்வித் தந்தைகள் நடத்தும் பண்ணைப் பள்ளிகளில் லாபம் கொற்ஞ்சி போகுமே. கவர்மெண்ட்ல வேலை பாக்குற கடைநிலை ஊழியரின் அடிப்படைச் சம்பளம் இருபதாயிரம் ரூபாயா நிர்ணயம் பண்ணி இருக்கிற அரசாங்கம் ஏன் மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் அந்த இருபதாயிரம் ரூபாய்க்கு நிகரா ஊதியம் நிர்ணயிக்க மாட்டேங்குது? ’படிப்பறிவு இல்லாம பாவப்பட்ட ஏழைங்கள எவ்வளவு சுரண்டினாலும் தகும்’ என்று கண்டும் காணாமல் போகிற அமைப்பு தானே இங்க இருக்கு” என்று சீற்றத்தோடு மூச்சிறைத்தது.
     “அரசு வேலையில் பணிப் பாதுகாப்போடு இருப்பவர்களின் அகவிலைப்படி, விலையேற்றத்திற்குத் தக்கவாறு உயர்த்தி வழங்கப் படுகிறது. மற்ற தனியார் பணியாளருக்கோ அல்லது கூலி வேலை செய்பவர்களுக்கோ அந்த மாதிரி பரிந்துறையை வருடம் ஒரு முறையாவது அரசு கட்டாயப் படுத்துமா? எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கும் போது ’வாய்ப்பு கிடைப்பதே பெரிது’ என்கிற மனப்போக்கை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தி ஆனமட்டும் சுரண்ட முயலும் முதலாளிகள் தானே இருக்கிறார்கள் இங்கே” என்று கேட்டு என்னை வாயடைக்க வைத்தது. எம்.ஏ படித்தவன் அல்லவா அதான் பொளந்து கட்டுறான்.
     “என்ன கம்யுனிசம் பேசுறியா?” என்று சத்தமாக அதட்டினேன். எனக்கு அது பேசிய பேச்சில் வியர்க்க ஆரம்பித்தது.
     “அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன் அரசாங்கம் எல்லா மக்களுக்குமானதா இல்ல. உங்க கிட்ட லட்சக்கணக்கில் பேங்க் பேலன்ஸ் இருக்கு ஆனா ஒரு ஆயிரம் ரூபாய் கூட இல்லாம ரயில்ல அடிபட்டு கால் துண்டாகி ரோட்டில் விழுந்து என்னோட கால கழுகுக்கு இறையாக்கி நகம் பெயர்ந்து லாரியில் சிக்கி இங்க  வந்து கெடக்கேன்னா அதுக்கு காரணம் இங்க நிலவும் பொருளாதார அசமத்துவம் இல்லாம வேறு என்ன?“ என்று கேட்டபடி அந்த நகம் தரையில் விழுந்து மண்ணில் மூடிக்கொண்டது.
     அன்றிலிருந்து எனது வலதுகால் பெருவிரல் நகக்கண்ணில் ஏற்பட்ட வலி என்ன செய்தாலும் சரியாகவில்லை.

Sunday, May 24, 2020

கடைசி கிராமம் போவோமா?!!

புத்தகம்: கடைசி கிராமம்
ஆசிரியர் : வெங்கட் நாகராஜ்
பதிப்பு: கிண்டில்
எப்போதுமே எனக்கு பயணக்கட்டுரைகள் மேல் ஓர் ஈர்ப்பு உண்டு. புதிய இடங்களை பார்ப்பது சுவாரசியமானது தானே? நல்ல எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் வழி அவர்கள் பார்த்தவற்றை நமக்கு அழகாக காட்சி படுத்துவார்கள். அந்த வகையில் வெங்கட் நாகராஜ் அவர்கள் எழுதியுள்ள இந்த பயணக்கட்டுரைப் புத்தகம் மிக அருமையாக உள்ளது.
 நூலாசிரியர் பணிநிமித்தம் டெல்லியில் வசித்து வரும் தமிழர். அவர் தம் நண்பர்களோடு வாய்ப்பு கிடைக்கும்  போதெல்லாம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பி விடுகிறார்.
 இந்தப் பயணத்தில் அவருடன் அவரது திருவனந்தபுர மலையாள நண்பரும் சேர்ந்து கொள்கிறார். ஏன் இது கடைசி கிராமம்? ஹிமாச்சல் பிரதேச திபெத் எல்லையில் இருக்கும் கடைசி கிராமமான சித்குல் என்ற இயற்கையின் எழிலை அள்ளிப் பருக வாய்ப்பளிக்கும் 11000 அடி உயரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று வந்தது குறித்த பயணக்கட்டுரை என்பதால் தான் இந்த தலைப்பிட்டு இருக்கிறார்.
 டெல்லியில் இருந்து 20 மணிநேர பேருந்து பயண தொலைவில் இருக்கும் கிராமம் தான் இந்த சித்குல். அப்படி ஒன்றும் ஒரே பேருந்தில் சர்ர்.. என்று கிளம்பி சென்று விட முடியாது. குக்கிராமம் என்றாலே ப்ரேக் அப் இன்றி சென்று சேர்ந்து விட இயலுமா? இவரும் ஒரு 3 பேருந்துகளின் துணைகொண்டு தான் சென்று சேர்ந்திருக்கிறார்.
 முதலில் டெல்லியில் இருந்து ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் புஷர் என்கிற இடத்தை அடைகிறார்கள். அங்கிருந்து 100 கி.மீ தொலைவை மலைப்பாதையில் 5 மணி நேர ஆபத்தான பயணத்திற்கு பிறகு கல்பா என்கிற கிராமத்தை அடைகிறார்கள். ஒரு பக்கம் மலை மறுபக்கம் ஆஆஆஆழத்தில் கஸ்பா என்கிற நதிப் பள்ளத்தாக்கு. கரணம் தப்பினால் மரணம் என்கிற த்ரில்லான பேருந்து பயணமாம். கேட்கும் போதே ஒரு முறை அந்தப் பாதையில் பயணித்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.
 இமயமலைப் பகுதி கிராமம் என்பதால் சுற்றுலா வருவோர் தங்குவதற்கு விடுதிகள் இருக்கின்றன. கல்பா புத்தமத வழிபாட்டுத்தளங்கள், ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் ஹிமாலயாஸ் என்று திகட்டாத இன்பத்தை தருவதற்கு தயாராக இருக்கும் இடம். இது பிரபலமான சுற்றுலா தளம் இல்லை என்பதால் அமைதியாக இயற்கையை ரசித்தபடி சுற்றுலா செல்ல விரும்புவோர் தேர்வு செய்யும் இடம். சீசன் இல்லாத காலங்களில் ஆயிரம் ரூபாய் வாடகையில் அருமையான தூய்மையான அறைகள் கிடைக்கின்றன. இதுவே ஆன்லைனில் புக் செய்தால் 1400 ரூபாயாம் பாத்துக்கோங்க. அப்புறம் அவர் போன காலகட்டத்தில் பிஎஸ்என்எல் தவிர எந்த நெட்ஒர்க்கும் வேலை செய்யவில்லையாம். இப்போது அநேகமாக ஜியோ டவர் போட்டுருப்பான்.
 ஹிமாச்சலைப் பொருத்தவரை டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வாழ்க்கை சற்று கடினமானது. அன்றாட அலுவல்களையே மேற்கொள்ள இயலாத வகையில் பத்தடிக்கும் மேலாக பனிப் பொழிவு இருக்குமாம்.
 பயணக்கட்டுரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி அவர்கள் அங்கே உணவு விடுதியில் அந்த இடத்திற்கு உரிய உணவை உண்டது குறித்து சிலாகித்து எழுதுவது தான். இவர் கூட அந்த கல்பாவில் சாப்பிட்டதை விவரித்த போது எனக்கு பசி எடுக்கவே நள்ளிரவில் ஒரு தோசை போட்டு சாப்பிட்டு விட்டு தொடர்ந்து படித்தேன். சில பேர் எழுதுகையில் நம்ம ஊர் உணவு கிடைக்காமல் தவிச்சி போய்ட்டேன் என எழுதுவார்கள். அதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. பாம்பு திங்கிற ஊருக்குச் சென்றால் நடுக்கண்டம் நம்மளது என்கிற டைப் நான். எங்கே சென்றாலும் அந்த இடத்திற்கான பிரத்தியே உணவை ருசித்துப் பார்த்து விடுவதே நல்ல டூரிஸ்ட்டுக்கு அழகு. அந்த வகையில் நூலாசிரியர் அழகுதான்.
 அப்புறம் அங்கே சென்று நான் ஆறுமணிக்கெல்லாம் தேனீர் அல்லது காபி கோப்பையோடு தான் எழுவேன் என்று சொல்லாதீர்கள் அங்கே காலையில் எட்டு மணிக்குத்தான் கடையே திறப்பார்களாம்.
 கல்பா கிராமத்தில் கின்னர் கைலாஷ் என்கிற ஒரு மலையே சிவலிங்க வடிவமாக உள்ள வழிபாட்டு தளம் உள்ளதாம். அது ஒரு லோ பட்ஜட் கைலாஷ் யாத்திரையாம். இரண்டு நாள் டிரெக்கிங் செய்தால் அந்த கின்னர் கைலாஷ் தளம் செல்ல முடியுமாம்.
 மலைக்கிராமங்களை இணைத்து செல்லும் பேருந்துகளைப் பற்றி அழகாக சொல்லி இருக்கிறார். நம்ம ஊர்ல மினி பஸ்காரன் நம்ம ஊட்டாண்ட நிறுத்தலன்னா அடுத்த நாள் பஸ்ஸ நிறுத்தி அடிதடியில் இறங்குவார்கள் அல்லவா? அங்கே இயல்பாகவே எங்கே நின்று கை காண்பித்தாலும் நிறுத்தி ஏற்றிக் கொள்வார்களாம். ஏனெனில் பேருந்துகள் மிகவும் சொற்பமாகத்தான் வரும். மேலும் டிரைவர் கண்டக்டர் அதே வழித்தடத்தில் நீண்டகாலம் ஓட்டுபவர்கள் என்பதால் அந்த ஊர் மக்களுடன் சினேகமாக இருப்பார்கள். நான் இந்த மாதிரி ஒரு சினேகத்தை கொல்லி மலைப் பயணங்களில் கண்டிருக்கிறேன்.
 சித்குல் கிராமத்தில் இந்திய எல்லையின் கடைசி தாபாவான “ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா” வில் சாப்பிட்டு இருக்கிறார்கள். “ராஜ்மா சாவல்” என்ற ஹிமாச்சலின் பிரத்தியேக உணவைத்தான் அங்கே தருகிறார்கள். வேலை ஆட்கள் இன்றி குடும்ப உறுப்பினர்களே நடத்தும் உணவகம்.
 நூலில் சித்குல் கிராமத்தில் இருந்த புத்த கோயில், கோட்டை மற்றும் அருகாமை கிராமம் என நடந்தே சுற்றி சுற்றி வந்து ரசித்து திரும்பி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தி பிரபலம் இல்லாத ஒரு ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் மலைகிராம சுற்றுலாவை கற்பனை செய்யும் போதே குதூகலமாக உள்ளது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
 நூலாசிரியர் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நல்லதொரு மேற்கோள் கொண்டு ஆரம்பித்து இருப்பது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது.
 இவரது மற்றொரு பயணக்கட்டுரையும் கிண்டிலில் வாசித்து விட்டேன். அது குறித்து மற்றொரு இடுகையில் சொல்கிறேன்.

Thursday, May 14, 2020

வலி- சிறுகதை



ஆசிரியர்- பாப்லோ அறிவுக்குயில்
முதலில் கதையாசிரியர் பாப்லோ அறிவுக்குயில் பற்றி பார்க்கலாம்.
90 களில் நான் எங்கள் ஊர் கிளை நூலகத்தில் உறுப்பினராகி ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் தமிழ்வாணன் நாவல்களை விரும்பி வாசித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் மாமா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது நண்பர் அறிவழகனுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அறிவழகன் அவர்கள் கதையெல்லாம் எழுதுவார் என்று அவரது புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். நான் புரட்டிப் பார்த்து விட்டு “என்ன மாமா இது எல்லாம் கிராமத்துல பேசுற மாதிரியே இருக்கு?“ என்று அலட்சியமாக பதிலுரைத்தேன். புத்தகத்தில் “பாப்லோ அறிவுக்குயில்” என்ற பெயரைப் பார்த்துவிட்டு மாமாவை பார்த்தேன், அது அவரது புனைப்பெயர். அந்தப் பெயரில் தான் கதைகள் எழுதுகிறார் என்றார்.
     அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றைப் பார்த்தேன். பிறகு எங்கள் பள்ளி நூலகத்திலும் ஒரு சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். இந்த “வலி“ என்ற சிறுகதை எங்கள் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்த ”கிளுக்கி” என்கிற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசி சிறுகதை.
     கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் என்று ஒவ்வொரு ஊர் மக்களின் பேச்சு வழக்கிற்கும் ஒரு நடை உண்டல்லவா? ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அரியலூர் சுற்று வட்டார கிராம மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி இவரது எழுத்துக்களில் அவ்வளவு இயல்பாக வருவது பெரும் வியப்பு. உழைக்கும் அடித்தட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி அடக்கி ஆளும் ஆதிக்க வர்க்கம் குறித்து எழுதும் போது வியர்வையின் வீச்சத்தையும் ரத்தத்தின் நெடியையும் இவரது எழுத்துக்களில் உணரலாம்
     “அந்தியின் மஞ்சள் புன்னகையை திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தது இருள்” என்று தொடங்குகிறார். டவுனில் இருந்து தனது “குக்கிராமத்திற்கு“ வருகிறான் கதைநாயகன். அவனது கிராமத்தில் இருந்து முக்கிய சாலை மூன்று கிலோமீட்டர் தொலைவு. முக்கிய சாலை சந்திப்பும் கூட முக்கியமான ஊர் இல்லை என்பதால் பெரும்பாலான பேருந்துகள் நிற்பதில்லை. இருள் கவிந்த நேரத்தில் முக்கிய சாலையில் இறங்கி ஒரு பெரிய சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்கிறான். சூட்கேசில் என்ன இருக்கிறது? அந்த மாத சம்பளப் பணம் முழுவதையும் புத்தக கண்காட்சியில் செலவு செய்து வாங்கிய புத்தகங்கள்தான் உள்ளன.
                அவனது நினைவில் தனது கிராமத்திற்கு பேருந்து வேண்டி முக்கிய சாலையை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் நடத்திய பெரும் மறியல் போராட்டமும், அதற்காக தானும் நண்பர்களும் கிராம மக்களும் வாங்கிய லத்தி அடிகளும் அதற்கு பிறகு ஒரு இரண்டு முறை மட்டும் ஊருக்குள் பேருந்து வந்து செல்லும் வாய்ப்பு கிட்டியதும் ஓடிக்கொண்டு இருந்தது.
     நவீன மாற்றங்கள் பழமைவாதிகளை ஏதாவது ஒரு வகையில் உளுக்கி எடுத்து விடுகின்றன. சாதிய மேலாதிக்கமும் அடக்குமுறையும் மேலோங்கி இருக்கும் அவனது கிராமத்தில் பேருந்தினால் ஒரு புதிய சிக்கல். தாழ்த்தப் பட்டவர்கள் பேருந்தில் தங்கள் அருகிலோ தங்கள் கண் எதிரிலோ அமர்ந்து செல்வதை ஆதிக்க சாதியினரால் ஜீரணிக்க இயலவில்லை. “கெவருமண்டு பஸ்ஸ விட்டாலும் விட்டானுவ பறப்பயலுவ சக்கிலிப் பயலுவளுக்கெல்லாம் திமிரு ஏறிப்போச்சு வந்து ஒரசிக்கிட்டு குந்துரானுவ” என்று சீறுகிறார்கள். இங்கே ஃப்ளாஷ்பேக் கட்டாகிறது.
     ஊருல என்ன விசேஷம் என்று நண்பர்களிடம் விசாரிக்கிறான். பேருந்தில் உக்காரப்போன மதியை மேல் சாதியினர் அடிக்க இவனும் திருப்பி அடிக்க ஊரில் பஞ்சாயத்து வைத்து மதிக்கு மட்டும் அபராதம் போட்டிருக்கிறார்கள். இதற்கு இடையில் தாழ்த்தப் பட்ட மக்கள் இடையில் உட்சாதி பிரிவினையால் அந்தப் பிரச்சனையை மற்றவர்கள் கேட்கவில்லை என்று அறிந்து கோபப்படுகிறான்.
     இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலக்காரணம் என்ன என்று ஊர் பெருசுகள் யோசித்து காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள். ஆமாம், இந்தப் பேருந்து ஊருக்குள் வந்து செல்வது தான் காரணம். அதனால் எதாவது பிரச்சனை பண்ணி டிரைவர் கண்டக்டரை அடித்து உதைத்து ஊருக்குள் பேருந்து வராமல் பண்ணி விடுகிறார்கள். சாதிய அடுக்கு நிலை எப்போதும் சிறு நெகிழ்வுத் தன்மையும் இன்றி மிகக் கெட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
     தாழ்த்தப் பட்ட சாதியில் இருந்து வரும் நபர் வங்கி ஊழியராக இருந்தாலும் கூட தனது பெயரைச் சொல்லி அழைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாத ஆதிக்க மன நோயாளி  களை நான் அறிவேன்.
     ஒரு தலித் உயரதிகாரி தனக்கு கீழ்நிலையில் உள்ள ஆதிக்க சாதி ஊழியரிடம் பணி ஆய்வு நிமித்தம் செல்லும் போது தாமாகவே தரையில் அமர்ந்து கொண்டு ஃபைல் பார்ப்பதும் அந்த கீழ்நிலை ஊழியரோ நாற்காலியில் அமர்ந்த படி குனிந்து குனிந்து பதில் அளிக்கும் காட்சியையும் நான் அறிவேன். (அவ்வளவு தூரம் அஞ்சத்தக்க அளவிலான சாதிய மேலாதிக்க மனநிலை கொண்ட ஊர்கள் உள்ளன)
     இப்போது அவர்களின் நிலமை மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது. என்னதான் நவீனத்தை எதிர்த்தாலும் கல்வி எல்லா மாற்றங்களையும் சாத்தியமாக்கி உள்ளது.
    

Tuesday, May 12, 2020

பொதுத்தேர்வு எனும் பெரும்பூதம் – 4 “மீனுங்களா ஓடிவாங்க மரம் ஏறலாம்!!”



“என்னை தேர்ச்சிப் பெறச் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், நான் உயிரோடு இருப்பதும் சாவதும் உங்கள் கையில்” – என்ற மிரட்டலான ப்ளாக் மெயிலை நான் கண்டது பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது.
இன்னும் பல உருக்கமான கடிதங்களையும் கண்டதுண்டு. அந்த தேர்ச்சி என்கிற எல்லைக் கோட்டை எட்டிப் பிடிக்கத்தான் எத்தனை பிரயத்தனங்கள்.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் நிச்சயம் உண்டு, பள்ளியில் உள்ள பெருமைக்குரியோர் பட்டியலில் அவர்களது பெயரை நிரந்தரமாக எழுதி வைத்துப் பெருமை படுத்துவார்கள்.
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போதே அவர்கள் என்ன படிப்பு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் எவ்வாறெல்லாம் முழுகவனத்தையும் படிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்று படிப்பு படிப்பு படிப்பு என்று ஒட்டு மொத்தமாக கல்வி என்றாலே ஐந்து பாடங்களின் மதிப்பெண்களுக்குள்ளே மட்டுமே உள்ளது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுவிட்டது.
முழுக்க முழுக்க தேர்வு மற்றும் மதிப்பெண் மையக் கற்றல் கற்பித்தலாகிப் போன வகுப்புகள் சுவையற்றதாகிப் போய்விட்டது. மனப்பாடம் என்கிற ஒற்றைத் திறமையை வளர்த்தது அன்றி வேறு என்ன செய்து விட்டது இந்த மதிப்பெண்களை துரத்தும் கல்வி முறை.
நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனிடம் “கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க?“ என்று ஒரு முறை (ஆய்வு நோக்கில் இந்த ஒரே கேள்வியை பலமுறை கேட்டுள்ளேன்) கேட்டேன். பயல் பேந்த பேந்த முழிச்சான். அப்படியே சற்று அவனது மொழியில் கேள்வியை மாற்றிப் போட்டேன் “ஏசி மின்னியற்றி வேலை செய்யும் விதத்தை விளக்குக” அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளமென விடை வந்தது. உள்ளார்ந்த புரிதல் இல்லாமல் வெற்று வார்த்தைகளை மனப்பாடம் செய்வதில் என்ன பயன்.
நான் உட்கோட்டைப் பள்ளியில் பணிபுரிந்த போது, அறிவியல் கண்காட்சி நடத்தும் போது மெல்லக் கற்கும் பல மாணவர்கள் வித்தியாசமான பல ஐடியாக்களை செய்து காட்டுவார்கள். ஒரு பையன் ஒரு செட் குட்டி சீரியல் பல்புகளை வைத்துக் கொண்டு அவ்வளவு வித்தைகள் காட்டிவிட்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவனெல்லாம் “உனக்கு ஒண்ணும் தெரியாது உக்காருடா” ரகம் தான்.
இவர்களின் செயல்முறை அறிவுகளுக்கு வகுப்பறையில் இடம் இல்லை. பத்தாம் வகுப்பில் செய்முறைத் தேர்வு வைத்து 25 மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள். அறிவியலின் முழுத் தேர்ச்சிக்கு அன்றி அதனால் வேறு பயன்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேல்நிலை வகுப்புகளிலே கூட உபகரணங்கள் வெறும் காட்சிப் பொருட்கள் தானே?! (பல கல்லூரிகளிலே கூட இதுதான் நிலமை என்று சிலர் எண்ணுகிறீர்கள் தானே?! மைண்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்)
இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் ஆண்டு மலர் தயார் செய்வதாகவும் அதற்கு அனைத்து மாணவர்களும் எதாவது ஒரு வகையில் ஒரு படைப்பை அளிக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவி மட்டுமே நான்கு கதைகள் எழுதி தந்துவிட்டாள். மற்றொரு மாணவி ஒரு 20 தாள்களில் படங்கள் வரைந்து வண்ணம் தீட்டி வந்து மேஜையை நிரப்பி விட்டார். ஒரு பாராட்டு முடிந்தால் ஒரு ஐந்து ரூபாய் பென்சில் கொடுத்துப் பாருங்கள் அவர்கள் அந்த திறமை அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி அகமகிழ்ந்து போவார்கள். விளையாட்டு, இலக்கியம் மற்றும் கலை சார்ந்த விஷயங்களுக்கு பள்ளிகளில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்று எண்ணிப் பாருங்கள்
மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு எங்கள் பள்ளியில் இருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வானான். பறையிசைப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் கலந்து கொண்டான். வகுப்பறையைப் பொறுத்தவரை அவன் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவன். ஆனால் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சான்றிதழை காலைவழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டி வழங்கியபோது அவனது முகத்தை பார்க்க வேண்டுமே அவ்வளவு பிரகாசம். இசைக் கல்லூரியில் சேர்ந்து இந்த திறமையை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் நீ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்று எடுத்துக்கூறி அவனது கவனத்தை படிப்பின் பக்கமும் கொஞ்சம் திருப்ப முடிந்தது.
இந்த சம்பவங்களால் உந்தப் பட்டு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான எந்தப் போட்டியாக இருந்தாலும் மாணவர்களை தயார்செய்து அனுப்புவதை எங்கள் பள்ளியில் வழக்கமாக கொண்டுள்ளோம். மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை அடையாளம் காணுவது தானே பள்ளிகளின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
எந்த திறமையும் வேண்டாம் படிப்புத் திறமை மட்டும் போதும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் வேண்டுமானால் அறியாமையால் நினைக்கலாம், பள்ளிகள் அந்தமாதிரி பொறுப்பில்லாமல் எண்ணுதலாகாது. இந்த மாதிரியான ஆட்டுமந்தை சிந்தனைகளின் விளைவுகள் என்ன தெரியுமா?
“இஞ்சினியரிங் தான் பெஸ்ட், கை நிறைய சம்பளம், எல்லோரும் ஓடுங்க ஓடுங்க” என்று கூறியதன் விளைவு, பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பிரிவு மாணவர்கள் எண்ணிக்கையை விட தமிழ் நாட்டில் உள்ள இஞ்சினியரிங் இடங்கள் அதிகமாக உள்ளன. அதாவது எல்லா மாணவர்களும் இஞ்சினியரிங் சேர முடிவெடுத்தாலும் இடங்கள் மீந்து போகும்.
இப்போ என்னாச்சு? ஆள் கிடைக்காமல் “அதெல்லாம் முடியாது நான் காலேஜ் ஆரம்பிச்சுட்டேன் நீ வந்து படிச்சே ஆகணும்” என்று கையை பிடித்து இழுக்கிறார்கள்.
அப்புறம் 2002 க்குப் பிறகு ஆசிரியர்கள் ஏராளமாக பணிநியமனம் செய்யப் பட்டனர். உடனே,”ஏம்பா, நல்ல சம்பளம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என ஏராளமான லீவு எளிதான(?!!) வேலை எல்லோரும் வந்து பி.எட் சேருங்கப்பா” என்று ஈர்க்கப்பட்டனர். விளைவு, மாவட்டத்திற்கு 10 பி.எட் கல்லூரிகள் ஆரம்பிக்கப் பட்டன. நானெல்லாம் டி.ஆர்.பி தேர்வு எழுதியபோது ஒரு லட்சம் பேர் கூட தேர்வு எழுதவில்லை. ஆனால் இப்போது பனிரெண்டு லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
அப்புறம் இந்த உயர் நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டராகத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். உங்க பிள்ளைகளை டாக்டராகி காட்டுகிறோம் என்று கோழிப்பண்ணைப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகின.(இஞ்சினியரிங் மோகத்தின் போதே ஆரம்பித்து விட்டது) தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிறைய தொடங்கப் பட்டன. நீட்டுக்கு முந்தைய ஆண்டு நான் கேள்விப் பட்டவரையில் நன்கொடை ஐம்பது லட்சம், அப்புறம் வருடாந்திரம் 10 லட்சம் கட்டணம். என்று ஒரு பையன் டாக்டராக ஒரு கோடி சொச்சம் ஆகிவிடுகிறது.
அப்படின்னா நீட் வந்த பிறகு நிலமை மாறிப் போச்சா? அப்படியெல்லாம் இல்லை, நாங்க மட்டும் என்ன தக்காளித் தொக்கா, எங்களுக்கு ஒரு பத்து லட்சத்தை வெட்டிட்டு காலேஜ் க்கு கட்டுங்க என்று கோச்சிங் சென்டர் காரர்கள் குறுக்கே நிற்கிறார்கள்.
இந்த நீட் எக்ஸாமுக்காக சிலபசை மாத்துறேன்னு இவங்க பர்னிச்சர உடைச்சதுல அரசுப் பள்ளிகளில் கணிதப் பிரிவே காலியாகிக் கிடக்கிறது. புது சிலபஸ் ஆரம்பித்த ஆண்டு அட்மிஷனில் அமர்ந்திருந்த போது ஒரு பையன் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவு கேட்டான். சரி என்று அட்மிஷன் போட்டு புத்தகம் பெற்றுக் கொள்ள அனுப்பி வைத்தோம். அங்கே உயிர்-தாவரவியல் புத்தகத்தை ஒரு மினி தலையணை சைசில் கொடுக்கவே பயல் ஆடிப் போய்விட்டான். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்ப எத்தனிக்கையில் ”எப்பா நில்லுப்பா இன்னும் இருக்கு” என்று உயிர்-விலங்கியல் என்கிற அடுத்த தலையணையை எடுத்ததில் பையன் மூர்ச்சையாகிவிட்டான். மூர்ச்சை தெளிந்தவுடன் அவன் கேட்ட கேள்வி, “வாட் இஸ் த புரசிஜர் ஆஃப் சேஞ்ச் த குருப் சார்?”
கல்வி என்பது நம்மை போன்ற பின்தங்கிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி என்ற எண்ணம் ஏற்படுவதில் தவறு இல்லை. ஆனால் ஒட்டு மொத்த நாட்டிலும் பொறியியல், மருத்துவம் இவற்றைச் சுற்றியே பணிவாய்ப்புகள் இருப்பதாக ஒரு தவறான மாயையை உருவாக்கி வைத்து இருப்பது தான் தவறு.
மற்ற படிப்புகள் மற்றும் திறமைகள் எதற்கும் மதிப்பில்லை. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகள் விருப்பங்கள் எதற்கும் இங்கே இடம் இல்லை.
“எல்லோருமே பெரிய திறமைசாலிகள் தான், ஆனாலும் ஒரு மீனிடம் மரம் ஏற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை வைத்தோமானால் அந்த மீன் தன் வாழ்நாள் எல்லாம் தன்னை ஒரு முட்டாள் என்றே எண்ணிக் கொள்ளும்” என்று அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் கூறி உள்ளார்.
ஆனால் இங்கே நாம் பல “மெஸ்ஸி“க்களின் கால்களை ஒடித்து வகுப்பறைக்குள் உட்காரவைத்திருக்கிறோம். பல ரவிவர்மாக்களின் வண்ணத் தூரிகைகளை பிடுங்கி எறிந்துவிட்டு பேனாக்களை திணித்து இருக்கிறோம்.
அவர்கள் எதுவாக வேண்டுமானால் ஆகட்டும் அதற்கு குறைந்தபட்சத் தகுதி என்று ஒரு வகுப்பு வேண்டாமா? அதில் அவர்களின் திறமைக்கு ஒரு மதிப்பீடு வேண்டாமா? என்று கேட்கலாம்.
மாணவர்களின் பாடத்திறமையை மதிப்பீடு நிச்சயமாக செய்ய வேண்டும் தான். ஆனால் தற்போது இருக்கும் மதிப்பீட்டு முறை மாணவர்களின் உண்மையான நிலையை காண்பிக்கிறதா?
90 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் உண்மையிலேயே பெரிய வேறுபாடுகள் இருப்பதாக எண்ணுகிறீர்களா?
30 க்கும் 35 க்கும் பெரிய வேறுபாடு உண்டா? 35 எடுத்தவன் அடுத்த வகுப்பு சேர்க்கைக்கும், 30 எடுத்தவனோ திருப்பூருக்கோ, சென்னைக்கோ வேலைக்குச் செல்வது நியாயமா?
எல்லோருக்கும் கிரேடு முறையில் மதிப்பீடுகளை வழங்குவதில் என்ன தடை இருக்க முடியும்.
"ஏம்பா டீச்சர்ஸ் திறமையை மதிப்பீடு செய்யவும்கூட எங்ககிட்ட இருக்கிற டூல் பொதுத்தேர்வு ஒண்ணுதாம்பா தயவு செஞ்சி அந்த ஃப்ரனிச்சர மட்டும் ஒடைச்சிடாதே!!'

"அப்போ சின்ன கிளாஸ் டீச்சர்ஸ்!!"

"அதுக்குதாம்பா 5 வதுக்கும் 8 வதுக்கும் பப்ளிக் பரீச்ச வருது!!"

"என்ன ஒரு புத்திசாலித்தனம்?!! அப்ப நல்லாசிரியர் விருது வாங்குன எல்லாரும் நல்லாசிரியர் என்று நம்பிகிட்டு இருக்குற குரூப்பா நீங்க?!"

ஆசிரியர்களின் திறமையை மதிப்பீடு செய்யவும் இந்த தேர்வுதான் அளவுகோல் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்.

நூறுவிழுக்காடு தேர்ச்சிக்கும் Teaching Attitude க்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பது தான் நிதர்சனம்
நமது மனது எல்லாவற்றையும் அளந்து ஒரு “அளவை“(Quatity) நிர்ணயித்து பழகிவிட்டது. எனவே எண்சார்ந்த மதிப்பீடுகள் நம்மிடையை பிரபலமாகி விட்டது. மதிப்பெண் மற்றும் தரம் இதையெல்லாம் நீக்கிவிட்டால் தனியார் பள்ளிகள் எவ்வாறு தங்கள் பள்ளிகளின் தரத்தை “அளவிட்டு“  விளம்பரம் செய்து சந்தைப் படுத்த இயலும்?
அப்புறம் “உங்கள் பிள்ளை சிறப்பாக படிக்கிறான்“ என்று கூறினால் நமக்கு திருப்தி இல்லை. யாரைவிடவெல்லாம் நம்ம புள்ள திறமையா இருக்கிறான். யாரெல்லாம் புள்ளய விட மேல இருக்காங்க, யாரெல்லாம் கீழே இருக்காங்க என்கிற ஒரு அடுக்கு நிலை ஏற்படுத்திக் கொண்டு மகிழ்வது என்பது பழக்கமாகிப் போனது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம அடுக்கைப் பழகிக்கொண்டு இருகிக் கிடக்கும் நமது ஆழ்மன உளவியலின் வெளிப்பாடாக இருக்குமோ?
கொரானா பாதித்து இருக்கும் இந்த நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையில் இருக்கும் கிரேடு முறை மதிப்பீட்டை பத்தாம் வகுப்புக்கும் பள்ளித் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும். பொதுத் தேர்வு என்கிற ஒன்றெல்லாம் வேண்டாம். மதிப்பீட்டை பள்ளி ஆசிரியர்களே செய்யட்டுமே.
இனிவரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் என்ற மூன்று மாதங்களையும் பாடம் நடத்துவதற்கு நீட்டித்துக் கொடுத்தால் பாடப்புத்தகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நின்று நிதானமாக நடத்திட இயலும். வகுப்பறைகளுக்கு வண்ணம் சேர்க்கலாமே.
“ஏம்பா,  நீங்கல்லாம் பத்தாம் வகுப்பு வந்துட்டீங்க இன்னிலேருந்து  உங்களுக்கு பி.இ.டி பீரியட் கிடையாது, நீதி போதனை பீரியட் கிடையாது, டிராயிங் பீரியட் கிடையாது, ஒன்னுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு மேல அடிக்க கூடாது, மதியம் பத்து நிமிடம் சாப்பிட்டு விட்டு டெஸ்ட் எழுதப் போயிடணும் சரியா?” என்கிற நெருக்கடிகள் இல்லாத நெகிழ்வுத் தன்மை நிறைந்த வகுப்பறைகளை உருவாக்க வேண்டுமானால் நமது மதிப்பீட்டு முறைகள் மாறியாக வேண்டும்.
குரங்குகளைப் பறக்கவும் மீன்களை நீந்தவும் கற்றுத்தரும் வகுப்பறைகள் இனியும் வேண்டாமே!!
இத்துடன் இந்தக் குறுந்தொடர் நிறைவுற்றது நன்றி.

பின்குறிப்பு: இந்த கட்டுரைகள் அனைத்தும் எனது அனுபவங்களையும் எண்ணவோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. பெரிய பெரிய நூல்களை எல்லாம் ரெபரென்ஸ் செய்து எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை அன்று. இதில் கருத்தியல் ரீதியான முரண்களோ தவறுகளோ இருந்தால் நண்பர்கள் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...