Saturday, November 27, 2021

ரெட் இங்க்

 

புத்தகம் – ரெட் இங்க்

ஆசிரியர் – சக.முத்துக்கண்ணன்



ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் அவர்களை ஆரம்பத்தில் எனக்கு நேரில் பரிச்சயம் இல்லை. தண்ணீர் பற்றிய பாடத்தை மாணவர்களுக்கு அவர் விளக்கி கூறிய விதம் பற்றிய முகநூல் பதிவால் ஈர்க்கப் பட்டு அவருடன் முகநூல் நட்பானேன்.


 அருகமை பள்ளியில் அறிவியல் ஆசிரியர். ஆசிரியரின் முதல் நூலான சிலேட்டுக் குச்சியை வாசித்து சிலிர்த்துப் போனேன். இவரது கட்டுரைகளோ, கதைகளோ இல்லை முகநூல் பதிவுகளோ எதுவாக இருந்தாலும் நாம் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். “அட பசங்க கிட்ட இந்த விஷயத்தை கவனிக்காம விட்டோமே” என்ற குற்ற உணர்ச்சியை இவரது பதிவுகள் நமக்கு தந்துவிடும்.


இரண்டாவது நூலாக சிறுகதை தொகுப்பாக “ரெட் இங்க்“ வரும் என்கிற செய்தியை கேட்டவுடன் எனக்கு பத்து காப்பி சொல்லி வைத்துவிட்டேன். பள்ளிக்கு அலுவல் ரீதியாக வரும் முக்கியஸ்தர்களுக்க கொடுக்க இதைவிட பொருத்தமான பரிசு உண்டா? 


புத்தகத்தை திறந்தவுடன் தோழர் ச.மாடசாமி அவர்களின் அணிந்துரை. “கரைத்தக் கஞ்சி போல லகுவான நடை” என்று அவர் ஆசிரியரின் நடையைப் பற்றி கூறியிருப்பது வெகுப் பொருத்தம்.

புத்தகத்தில் மொத்தம் முத்தான பத்து சிறுகதைகள் உள்ளன. கடைசிச் சிறுகதை தவிற மற்றவை எல்லாமே பள்ளி, மாணவர்கள், ஆசிரியப் பணி இவற்றையே மையம் கொண்டு இருக்கிறது. அதனால் தான் “ரெட் இங்க்“


“அவனே சொல்லட்டும்“ கதையில் வரும் முருகேசு என்கிற பத்து வயது வாயாடிப் பயலை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஆசிரியருக்கும் அவனுக்குமான அந்த உறவு அவ்வளவு ரசிக்கத் தக்கதாக இருக்கும்.


“ஆசிரியர்கள் தினம்“ கதையை வாசித்து கலங்காத யாரும் இருக்க இயலாது. டி.ஆர்.பி மதிப்பெண்ணுக்கும் ஆசிரியரின் திறமைக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை என்பதை பலமுறை கண்டுள்ளேன். புத்தகம் வாசிக்காத, புதுமையான யுத்திகளை முயற்சிக்காத, சென்ற ஆண்டின் பாடக்குறிப்பேட்டை காப்பி அடித்து எழுதும் பல ஆசிரியர்களை பார்த்து நொந்து போயிருக்கிறேன்.


 உள்ளபடியே பி.எட் படிக்காத ஆசிரியர்கள் பலரை பள்ளிக்கு வெளியே சந்தித்துள்ளேன். 89 க்கும் 90க்குமான இடைவெளியில் ஆசிரியப் பணி வாய்ப்பை இழந்தவர்களும் நல் ஆசிரியர்களே. 


நமது தேர்வு முறைகள் அனைத்தும் Aptitude ஐ சிறப்பாக சோதிக்கிறதே ஒழிய Attitude ஐ சோதிப்பதே கிடையாது. ஆசிரியர் கனவோடு வாழ்ந்து 89க்கும் 90க்கும்  இடையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெயிண்டர் ஆன குமரவேலின் கதையை வாசித்து கலங்கிப்போனேன். 


“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? தனியார் பள்ளிக்கு வேலைக்கு போனால் என்ன?” அவர் பெயிண்ட்டர் வேலை பார்த்து அவரது குடும்பம் முக்கால் வயிறு கழுவிக் கொள்ளலாம். ஆனால் தனியார் பள்ளி சம்பளத்தில் அரைவயிறே கழுவ இயலாது.


“கீச் கீச்“ கதையில் வரும் கலர் கலரான போந்தா குஞ்சுகளை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். சிறு வயதில் வாங்கி வளர்க்க ஆசையாக இருக்கும். ஆனால் பத்து பைசா கூட பாக்கெட் மணி என்னிடம் இருந்தது கிடையாது. கதையில வரும் பயபுள்ளைக செய்வது போல பாடபுஸ்தகத்தை எடைக்கு போடும் தைரியம் இல்லை. ஆனால் கோடை விடுமுறையில் சென்ற ஆண்டின் புத்தகங்களை போட்டு தேங்கா புண்ணாக்கு வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.


கதை தொடங்கி ரசனையோடு கொண்டு சென்று இறுதியில் அந்த வில் தராசில் முடித்தவிதம் ரசிக்கத் தக்கதாக இருந்தது.


“டிராப் அவுட்“ அரசுப் பள்ளிகளில் அடிக்கடி கேட்கும் வார்த்தை. மாணவர்கள் டிராப் அவுட் ஆக பல காரணங்கள் உண்டு. 15 வயது பையனின் வருமானத்தில் ருசி கண்ட அம்மாவே பையன் பள்ளிக்கு போய் அம்மஞ்சல்லி பிரயோசனமில்லை வேலைக்குப் போகட்டும் என்று ஆசிரியர்களிடமே கடிந்து பேசும் விஷயத்தையே கடந்து வந்துள்ளேன்.


 ஆனால் டிராப் அவுட் கதையில் வரும் கார்த்தி கடந்து வந்த விஷயம் “ஒரு பாலா படம்” 


கதைக்கு “அன்று கார்த்திக் ஏன் பள்ளிக்கு வந்தான்?“ என்று தலைப்பு வைத்திருக்கலாம்.


“புடிச்சி அவன ஜெயில்ல போடுங்க சார்” என்று ஒரு படத்தில் சந்தானம் சொல்வதற்கு சற்றும் உணர்ச்சி குறையாமல் “புடிச்சி அவன பெயில் போடுங்க சார்” என்கிற வன்முறையை ஆரம்ப கால ஆசிரியப் பணியில் நானே கூறியுள்ளேன்.


 ஆனால் அனுபவங்கள் கூடக் கூட “பெயில்“ போடுவது அப்படி ஒன்றும் விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை மாறாக குழந்தைகளை பள்ளியில் இருந்து விலக்கி வைக்கவே உதவுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.


 தற்போது கூட ஒன்பதாம் வகுப்பில் “பெயில்“ போட்டு பத்தாம் வகுப்பில் 100 விழுக்காடு மெடல் வாங்கி குத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.


நீலப் பந்து கதையில் வரும் சிறுவன் நான்காம் வகுப்பில் பெயிலாகிறான். அது அவனது தந்தைக்கு தெரியும் வரையிலான இடைவெளியை சந்தோஷமாக கழிக்க விரும்பும் குழந்தைத் தனத்தை ஆசிரியர் அவ்வளவு அழகாக எழுதியுள்ளார்.


 நீலப்பந்து நீரில் மூழ்கும் போது நாமும் சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.


பதின்பருவ எதிர்பாலின ஈர்ப்பு குறித்த கதைக்கு “பரு“ என்பது எவ்வளவு அழகான தலைப்பு.


 மெர்லின் ஆசிரியரின் எழுத்துக்களால் வடிவம் பெற்று என் கண்களுக்குள் நிற்கிறாள். பதின்பருவ குறும்புகள், அதற்கு ஆசிரியப் பெருமக்களின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஆசிரியரின் பேனா அழகாக படம் பிடித்துள்ளது.


“ஜெயந்தி டீச்சர்“ கதையை வாசித்த போது எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த சிறுமி “நான் ஆசிரியராகத்தான் ஆவேன்“ என்று கூறியது நினைவில் வந்து போனது. ஏனெனில் அவளுக்கும் ஜெயந்தி வயது தான். அவளும் கூட ஜெயந்தி போலவே ஆசிரியராவது பற்றி கனவுகள் கண்டிருக்கலாம்.


 பள்ளியில் வயதுக்கு வந்த பிள்ளைகளை பொறுப்பாக ஆற்றுப் படுத்தி வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்பது அத்தியாவசியமான விஷயம். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் கச்சிதமாக செய்து விடுவார்கள்.


ஜெயந்தி டீச்சர் கதையின் தொடர்ச்சியாகவே “மே ஐ கம் இன் சார்“ கதையை பார்க்கிறேன். இந்த கதையிலும் நன்றாக படிக்கும் ஜெயந்தி வீட்டில் தன் மீது விழுந்த அன்றாட பணிச்சுமைகளை முடித்து விழி பிதுங்கி ஓட்டமும் நடையுமாக லேட்டாக பள்ளி வந்து மூச்சு வாங்க கூறும் “மே ஐ கம் இன் சார்“ என்பதை கேட்கும் போது நமக்கும் மூச்சு வாங்குகிறது.


“சில்லிப்பு“  கதையை இதற்கு மேல் இடக்கரடக்கலோடு யாரும் எழுதிவிட இயலாது. சிலர் எங்கு சென்றாலும் வம்பு வளர்ப்பது இயல்பு. அத்தகையோர் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு வந்து சத்தம் போடுவதும் நடக்கும். அந்த சமயங்களில் அந்த மாணவர்கள் படும் தர்ம சங்கடத்தை சிறப்பாக எழுதியுள்ளார். 


சிறப்பாக படிக்கும் பொறுப்பான மாணவிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கலை தீர்த்து அவளை மீட்டு எடுக்கிறார்கள் ஆசிரியர்கள். இறுதிவரை அந்த சிக்கலை ஆசிரியர் வெளிப்படையாக சொல்லிவிடக் கூடாதே என்று பதறினேன். அவரும் அவ்வாறே அந்த கதையை அழகாக நிறைவு செய்திருந்தார்.


“வெள்ளைப் பூக்கள்“ என்கிற பத்தாவது கதை பள்ளி, மாணவர் என்கிற கதைக்களம் சாராத அருமையான கதை. பேருந்து நிறுத்தும் நிழற்குடைகளில் எப்போதாவது கிழிசல் உடைகளுடன் மனநிலை பிறழ்ச்சி கொண்டோரை கண்டிருப்போம். அந்த சுற்றுப் புறத்தில் அவருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள். அந்த நபருக்குள்ளே ஒரு கதை இருக்கும். அதைத்தாண்டி அவருக்கு ஒரு உண்மை பெயர் இருக்கும்.


 தாச்சி – சீமான் இவர்களின் பாத்திர வார்ப்பு கல்கோனா மிட்டாயின் சுவை போல மிடறு மிடறாக இன்னமும் இறங்கிக் கொண்டு உள்ளது.


நமது பணிச் சூழலில் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை உள்ளது. ஆனால் அதனை எல்லோராலும் கவனித்துவிட இயலாது. கவனித்தாலும் அதனை சுவைபட எழுத்தில் வடித்துவிட இயலாது. ஆனால் சக.முத்துக்கண்ணன் சார் கவனித்து சுவைபட எழுதி நமது நினைவலைகளில் அவரது கதாப் பாத்திரங்களை நிரந்தரமாக நீந்தச் செய்துள்ளார்.


நூறு பக்கங்களே கொண்ட நூல். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமின்றி அனைவருமே வாசிக்கலாம். ஆசிரியரல்லாதோர் தங்கள் பள்ளி வாழ்வை சுவையாக மீட்டிப் பார்க்க உதவலாம்.

Tuesday, November 23, 2021

கவிப்பேரரசு வைரமுத்துவின் மனதில் இருந்த பாரங்கள் (ச்சும்மா ஜாலியா ஒரு ஆராய்ச்சி)

 



 சில படங்களில் ஒரு பாடலை மட்டும் கேட்டுவிட்டு போய்விட இயலாது. ஆமாம், பாருங்களேன் இந்த "கையில் மிதக்கும் கனவா நீ..." பாடலை கேட்டுவிட்டு அப்படியே விட்ற முடியாது. "சந்திரனை தொட்டது யார்..."  பாடலை கேட்டே ஆகவேண்டும். இரண்டையும் கேட்ட பின்பு "சோனியா சோனியா..." பாடலின் இரண்டு வகை காதல் ஆராய்ச்சி செய்யாமல் போகவே முடியாது. மூன்றையும் கேட்ட பின்பு ஜேசுதாஸ் பாடிய "நெஞ்சே நெஞ்சே ..." கேட்டு உருகாமல் இருக்க நாம் என்ன இரும்பா?!!


 இந்த அருமையான பாடல்கள் இடம்பெற்ற படம் "ரட்சகன்"

படம் பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட ரொம்ப சுமாரான படம் என்பது எனது எண்ணம்.


ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் பிரமாதமாக  இருக்கும்.(அதாவது வேற லெவல்)


அடிக்கடி இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதுண்டு.


இந்தப் படத்தின் பாடல்களை எழுதியபோது வைரமுத்து அவர்களின் மனதில் ஏதும் பாரம் இருந்திருக்குமோ என அடிக்கடி சிந்தனைவயப் படுகிறேன்.


 நீங்களே பாருங்களேன்:


நாயகனுக்கும் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆனதோ இல்லையோ பிசிக்ஸ் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கும்போல!! காமுறும் வேளையில் கூட  நாயகன் இயற்பியல் விதிப்படியே சிந்திக்கிறான்.  "தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே

என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்?"  "சிறு கோட்டுப் பெரும்பழம்" என்பது போல, " தாமரை மலர் போல மென்மையான நீ எப்படிம்மா எருமை கனம் இருக்கும் என்னை தாங்குகிறாய்" என்கிறான்.


அதற்கு நாயகி, "அதெல்லாம் ரொம்ப சுளுவான மேட்டருப்பா!" என்பது போல்

"மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை

காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை!" என்று நாயகனின் சந்தேகத்தை போக்குகிறாள்.


இந்தப் பாட்டோடு ஆராய்ச்சியை முடித்தாரா என்றால் இல்லை!!


அடுத்தப் பாடலில் ஒரு பாரம் தாங்குவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிவிட்டார்.


கையில் மிதக்கும் கனவா நீ பாடல். நாகார்ஜூன் சுஷ்மிதாவை தூக்கிக்கொண்டே மாடி ஏறும் பாடல்தான். 


"நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி..." போன பாடலில் நாயகி சொன்ன மேட்டரை தீசிஸ் ல சேர்த்துக் கொண்டுள்ளார் பாத்தீங்களா?!


"காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது.." ரொம்பவும் ரொமான்டிக் நெடி தூக்கலாக இருப்பதால் தாய்மையை சேர்த்துக் கொண்டுவிட்டார் போல.


ஆராய்ச்சின்னா ஒரு கால்கலேஷன் வேண்டுமில்லையா?! கவிஞர் கால்குலேஷனும் போட்டு "நாயகனின் உச்சபட்ச சுமை தாங்கு திறனை" நான்கு இலக்க துல்லியத்தோடு கண்டறிகிறார். அதாவது 


"உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..

உயரம் தூரம் தெரியாது...

உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..

என்னால் தாங்க முடியாது.."


கதாநாயகியின் எடையைவிடக் கூடுதலாக ஒரு கிராம்கூட சுமக்க இயலாது என்று கறாராக  கூறிவிடுகிறார்.


ரிசர்ச்ன்னு இருந்தா ஒரு முடிவு இருக்க வேண்டாமா?! இந்த ஆராய்ச்சியின் முடிவை எங்கே ஒளித்து வைத்துள்ளார் என்று காதைத் தீட்டிக் கொண்டு மறுபடியும் பாடல்களைக் கேட்டுப்பார்த்தேன். "யுரேகா...." கண்டேன் முடிவை, எங்கே தெரியுமா "சோனியா சோனியா..." இரண்டுவகை காதல் பற்றிய ஆராய்ச்சியின் ஊடாக கவிஞர் தனது ஆய்வு முடிவை முத்தாய்ப்பாக மூன்றே வார்த்தைகளில் பளிச்சென்று சொல்லிவிட்டார். 


"பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை" என்று ட்விஸ்ட்டாக கூறிவிடுகிறார். 

 

சில தியரிகள் நடைமுறையில் சிக்கலாகி விடுகின்றன. கவிஞருக்கு என்ன சிக்கலோ போங்க "தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாள் வாங்கவோ" என்று சோகமா எழுதி வேகமா வெளியேறுகிறார்.


ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...