Tuesday, November 23, 2021

கவிப்பேரரசு வைரமுத்துவின் மனதில் இருந்த பாரங்கள் (ச்சும்மா ஜாலியா ஒரு ஆராய்ச்சி)

 



 சில படங்களில் ஒரு பாடலை மட்டும் கேட்டுவிட்டு போய்விட இயலாது. ஆமாம், பாருங்களேன் இந்த "கையில் மிதக்கும் கனவா நீ..." பாடலை கேட்டுவிட்டு அப்படியே விட்ற முடியாது. "சந்திரனை தொட்டது யார்..."  பாடலை கேட்டே ஆகவேண்டும். இரண்டையும் கேட்ட பின்பு "சோனியா சோனியா..." பாடலின் இரண்டு வகை காதல் ஆராய்ச்சி செய்யாமல் போகவே முடியாது. மூன்றையும் கேட்ட பின்பு ஜேசுதாஸ் பாடிய "நெஞ்சே நெஞ்சே ..." கேட்டு உருகாமல் இருக்க நாம் என்ன இரும்பா?!!


 இந்த அருமையான பாடல்கள் இடம்பெற்ற படம் "ரட்சகன்"

படம் பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட ரொம்ப சுமாரான படம் என்பது எனது எண்ணம்.


ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் பிரமாதமாக  இருக்கும்.(அதாவது வேற லெவல்)


அடிக்கடி இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்பதுண்டு.


இந்தப் படத்தின் பாடல்களை எழுதியபோது வைரமுத்து அவர்களின் மனதில் ஏதும் பாரம் இருந்திருக்குமோ என அடிக்கடி சிந்தனைவயப் படுகிறேன்.


 நீங்களே பாருங்களேன்:


நாயகனுக்கும் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆனதோ இல்லையோ பிசிக்ஸ் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கும்போல!! காமுறும் வேளையில் கூட  நாயகன் இயற்பியல் விதிப்படியே சிந்திக்கிறான்.  "தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே

என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்?"  "சிறு கோட்டுப் பெரும்பழம்" என்பது போல, " தாமரை மலர் போல மென்மையான நீ எப்படிம்மா எருமை கனம் இருக்கும் என்னை தாங்குகிறாய்" என்கிறான்.


அதற்கு நாயகி, "அதெல்லாம் ரொம்ப சுளுவான மேட்டருப்பா!" என்பது போல்

"மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை

காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை!" என்று நாயகனின் சந்தேகத்தை போக்குகிறாள்.


இந்தப் பாட்டோடு ஆராய்ச்சியை முடித்தாரா என்றால் இல்லை!!


அடுத்தப் பாடலில் ஒரு பாரம் தாங்குவது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதிவிட்டார்.


கையில் மிதக்கும் கனவா நீ பாடல். நாகார்ஜூன் சுஷ்மிதாவை தூக்கிக்கொண்டே மாடி ஏறும் பாடல்தான். 


"நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி..." போன பாடலில் நாயகி சொன்ன மேட்டரை தீசிஸ் ல சேர்த்துக் கொண்டுள்ளார் பாத்தீங்களா?!


"காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது.." ரொம்பவும் ரொமான்டிக் நெடி தூக்கலாக இருப்பதால் தாய்மையை சேர்த்துக் கொண்டுவிட்டார் போல.


ஆராய்ச்சின்னா ஒரு கால்கலேஷன் வேண்டுமில்லையா?! கவிஞர் கால்குலேஷனும் போட்டு "நாயகனின் உச்சபட்ச சுமை தாங்கு திறனை" நான்கு இலக்க துல்லியத்தோடு கண்டறிகிறார். அதாவது 


"உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..

உயரம் தூரம் தெரியாது...

உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..

என்னால் தாங்க முடியாது.."


கதாநாயகியின் எடையைவிடக் கூடுதலாக ஒரு கிராம்கூட சுமக்க இயலாது என்று கறாராக  கூறிவிடுகிறார்.


ரிசர்ச்ன்னு இருந்தா ஒரு முடிவு இருக்க வேண்டாமா?! இந்த ஆராய்ச்சியின் முடிவை எங்கே ஒளித்து வைத்துள்ளார் என்று காதைத் தீட்டிக் கொண்டு மறுபடியும் பாடல்களைக் கேட்டுப்பார்த்தேன். "யுரேகா...." கண்டேன் முடிவை, எங்கே தெரியுமா "சோனியா சோனியா..." இரண்டுவகை காதல் பற்றிய ஆராய்ச்சியின் ஊடாக கவிஞர் தனது ஆய்வு முடிவை முத்தாய்ப்பாக மூன்றே வார்த்தைகளில் பளிச்சென்று சொல்லிவிட்டார். 


"பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை" என்று ட்விஸ்ட்டாக கூறிவிடுகிறார். 

 

சில தியரிகள் நடைமுறையில் சிக்கலாகி விடுகின்றன. கவிஞருக்கு என்ன சிக்கலோ போங்க "தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாள் வாங்கவோ" என்று சோகமா எழுதி வேகமா வெளியேறுகிறார்.


No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...