Saturday, June 27, 2020

கானகத்தின் குரல் புத்தக விமர்சனம்


புத்தகம் – கானகத்தின் குரல்
ஆசிரியர் – ஜாக் லண்டன்
மொழிபெயர்ப்பு – பெரியசாமி தூரன்

    
     ஜாக் லண்டன் 1903 ல் எழுதிய அவரது பிரபலமான நாவல் தான் கானகத்தின் குரல். சென்ற மாதத்தில் அன்றைய கிண்டில் இலவச புத்தகங்களை தேடியபோது சிக்கியது. சேமித்து வைத்துக் கொண்டேன். இன்று தான் படித்து முடித்தேன். 200 பக்க அளவுள்ள நாவல்.
     நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்த போது சுத்தமல்லி பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த எஸ்.எம் சார் புவியியல் பாடம் நடத்தியபோது அலாஸ்கா பற்றி நடத்தினார். “உறைந்திருக்கும் ஆற்றுப் பகுதிகளில் குளிர் காலங்களில் மரங்களை வெட்டி அடுக்கி வைத்து விடுவார்கள். பின்பு கோடை காலங்களில் பனி உருகும் போது ஆற்று நீரில் மரக்கட்டைகள் மிதந்து வரும். அவற்றை கரையோர தொழிற்சாலைகளில் எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறியது இன்றளவும் அலாஸ்காவின் ஜில்லிப்போடு ஞாபக அடுக்குகளில் உறைந்து கிடக்கிறது.

     ஆம், அலாஸ்கா புவியின் வட முனையான ஆர்டிக் பிரதேசத்தை தழுவிக் கிடக்கும் குளிர் பிரதேச நாடாகும். இது கனடாவுக்கு மேற்கே துண்டாக பிரிந்து கிடக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு பகுதியாகும். 19 ம் நூற்றாண்டில் ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக இந்தப் பகுதி ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு கை மாறியுள்ளது. என்னது ரஷ்யா வா என்று வியக்காதீர்கள் புவி உருண்டையை கற்பனை செய்தீர்கள் என்றால் ரஷ்யாவின் எக்ஸ்ட்ரீம் கிழக்கில் இது வருகிறது.
     சரி, சரி நாவலுக்கு வருகிறேன். கானகத்தின் குரல் என்பது வீட்டு நாயாக வளர்ந்து படிப்படியான தனது கடுமையான அனுபவங்கள் மூலமாக கானகத்தின் ஓநாய் குலத்தோடு ஒன்றி மனநிறைவு அடையும் “பக்“ என்கிற நாயின் கதை தான்.
     கலிஃபோர்னியாவில் ஒரு ஜட்ஜ் வீட்டில் சுகபோகமாக வளர்ந்து வரும் நாய் “பக்“ ஆகும். ஜட்ஜ் ன் பிரியமான நாய். ஒரு நாள் அந்த வீட்டு பையன் ஒருவனால் அது சிவப்பு அங்கி போட்டவன் ஒருவனுக்கு விற்கப் படுகிறது. அவன் ஒரு கொடுமைக்கார பாஸ். அடிக்கடி பக் அவனிடம் உதைபட்டு வளர்கிறது. பிரிதொரு நன்னாளில் சிவப்பு அங்கிக் காரனால் விற்கப்படுகிறது. அவனிடம் இருந்து விடுதலையானது குறித்து அதற்கு மகிழ்ச்சியே. அது அலாஸ்கா பகுதியில் தங்கம் தேடி அலையும் மக்களின் கடிதங்களை பெற்று வந்து சேர்க்கும் பனிச்சருக்கு பயணத்திற்கு பயன்படும் ஸ்லெட்ஜ் எனப்படும் பல நாய்களைப் பூட்டி இழுக்கப் படும் பனிச்சருக்கு வண்டியை இழுக்கும் வேலைக்குப் பழக்கப் படுத்தப் படுகிறது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் உறைபனியில் தபால் உறைகள் நிறைந்த கனமுள்ள வண்டியை இழுத்துக் கொண்டு ஓட வேண்டும்.
     பக் அந்த முகாமுக்கு வந்த அன்று பனிபடர்ந்த அந்த பிரதேசத்தில் எங்கே படுப்பது என்று தெரியாமல் விழித்தபடி உறைபனி குளிரில் சுற்றி சுற்றி வருகிறது. வண்டி இழுக்கும் 16 நாய்களில் ஒன்றைக் கூட காணவில்லை. அப்படி எங்கே தான் அவை தூங்குகின்றன என்று ஆராய்ந்த படி வருகிறது. பிறகுதான் தெரிகிறது அவையெல்லாம் பனியில் குழிபறித்து அந்த குழிக்குள் வெது வெதுப்பாக உறங்குகின்றன என்பது. (இக்லூ ஹவுஸ்). உடனடியாக தானும் ஒரு குழிபறித்து உறங்க கற்றுக் கொள்கிறது. அதன் புதிய முதலாளிகள் அதன் சர்வைவல் திறமை குறித்து வியந்து பேசுகிறார்கள்.
     அடுத்ததாக தனக்கான இடத்தை போராடி அடையும் அதன் துணிவு. ஆம் ஸ்லெட்ஜ் வண்டியை இழுக்கும் நாய்கள் கூட்டம் ஒரு தலைமை நாய் முன்னின்று வண்டி இழுக்க மற்றவை தொடர்ந்து செல்லும். மேலும் அந்த தலைமை நாய் தான் மற்ற நாய்களை நெறிபடுத்தும். அந்த இடத்தை அடைய பக் முடிவு செய்கிறது. அந்த தலைமை நாயை தன்னுடைய எதிரியாக வரித்துக் கொண்டு அதனுடன் அடிக்கடி மோதுவதாகட்டும், பிற நாய்கள் அதன் கட்டளைக்கு கீழ்படியாமல் இருக்கும்படி தூண்டுவதாகட்டும் தலைமைப் பதவியை பிடிக்க அத்தனை தந்திரங்களையும் கையாண்டு இறுதியில் வாழ்வா சாவா யுத்தத்தில் அந்த தலைமை நாயைக் கொன்று விட்டு அந்த இடத்தைப் பிடிக்கிறது.
     நல்லபடியாக தபால் வண்டியை இழுத்தபடி ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்தபடி வாழ்ந்து வரும் வாழ்வு கெடுவாய்ப்பாக முடிவுக்கு வருகிறது. ஆம் பணி முடிந்தவுடன் அந்த வண்டியில் பிணைக்கப் பட்ட நாய்கள் அனைத்தும் வண்டியோடு வேறு ஒரு மூவர் அணிக்கு விற்கப்படுகின்றன. அந்த மூவரும் தங்க வேட்டைக்காக அலாஸ்க்காவில் பயணிக்கும் அனுபவமில்லாதவர்கள். அவர்களின் அனுபவமின்மையும் தவறான வழிகாட்டுதலும் நாய்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகின்றன. சதா அடி உதை, சரியான உணவு இன்மை, வேலை தேவையே இன்றி அதிகபாரம் என்று அல்லல் பட்டு பசியாலும் உடல் காயங்களாலும் ஒவ்வொரு நாயாக இறக்கின்றன. இறுதியாக நான்கு நாய்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. பனி உருக ஆரம்பிக்கும் காலம் வருகிறது. அந்த நேரத்தில் பிடிவாதமாக மேற்கொள்ளும் அந்த மூவர் குழு வண்டியோடு பனியாற்றில் புதையுண்டுவிடுகின்றனர்.
     அந்த மூவரிடம் இருந்து சண்டை போட்டு பக்கை தாண்டைக் என்பவர் காப்பாற்றி விடுகிறார். அந்த பயணத்தில் மேற்கொண்டு செல்லாத காரணத்தினால் பக் உயிர் பிழைக்கிறது. உடல்நலிவோடு இருக்கும் பக் தாண்டைக் கின் கவனிப்பில் மீண்டும் பழைய வலுவை அடைகிறது. தாண்டைக் மீது அளவற்ற அன்பு கொண்டு இருக்கிறது. தனது உயிரைப் பணயம் வைத்து இரண்டு முறை அவனை காப்பாற்றுகிறது. அவன் சொன்னால் போதும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. அப்போது கானகத்தில் இருந்து அழைப்பு வருவதாக அதன் உள் மனதில் குரல் கேட்கிறது. அதனால் இரவுகளில் கானகத்தில் சுற்றித் திரிகிறது. அப்போது ஒரு இளம் ஓநாயுடன் நட்பு கொண்டு அதனுடன் இரண்டு நாட்கள் பயணித்த பின்பு தாண்டைக்கின் ஞாபகம் வரவே திரும்பி வருகிறது. அதற்கு மனதில் இப்போது கானகமா தாண்டைக்கா என்கிற நிலை வருகிறது. மற்றொரு முறை அது அவ்வாறு நீண்ட கானகப் பயணம் மேற்கொண்டு திரும்பும் போது செவ்விந்திய பழங்குடி கூட்டத்தினால் தாண்டைக் குழுவினர் அனைவரும் கொல்லப் படுகின்றனர். அவர்களை தாக்கி சிலரைக் கொன்று விட்டு மீண்டும் கானகத்தில் சென்று ஓநாய்க் கூட்டத்தோடு இணைவதாக முடிக்கிறார் ஜாக் லண்டன்.
     நாவல் முழுவதும் நாயின் பார்வையில் தான் செல்கிறது. நாயுடனான மனிதனின் நட்பை அவ்வளவு நுணுக்கமாக விவரித்துள்ளார் நாவலாசிரியர். நாயை விரும்பி வளர்ப்பவர்கள் இந்த நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமாக உணரலாம்.
    

Saturday, June 20, 2020

First They killed my Father – கம்போடிய பட விமர்சனம்


First They killed my Father – கம்போடிய பட விமர்சனம்

     போல் பாட் என்னும் கம்யுனிச சர்வாதிகாரி கம்போடிய மக்களை படாத பாடு படுத்தி நாட்டின் மக்கள் தொகையில் கால்வாசி பேரை காவு வாங்கியவன். அந்த தருணத்தில் கம்போடிய தலைநகரான Phnom Penh ஒரு ராணுவ உயரதிகாரியின் குடும்பத்தில் பிறந்த Loung Ung (உச்சரிப்புச் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா அதனால் தான் ஆங்கிலத்தில்) என்கிற ஐந்து வயது சிறுமியின் பார்வையில் தான் கதை நகர்கிறது. இது ஒரு டாக்குடிராமா வகையிலான படம் போல தெரிகிறது. ஆனால் மெதுவாகச் சென்றாலும் சுவாரசியமாகவே செல்கிறது.
     இன்னொரு முக்கிய விஷயம் இந்த படத்தின் இயக்குநர் யாரென்று தெரியுமா? பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்செலினா ஜூலி.
     இந்த படத்தின் கதையை புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் கொஞ்சூண்டு கம்போடிய வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.
     ஆல் லாங்குவேஜ்ல அமெரிக்காவுக்கு பிடிக்காத வார்த்தை “கம்யுனிசம்”. அது எங்க எந்த ரூபத்தில் இருந்தாலும் தேடிப்பிடிச்சி வேரறுத்து “நாயம்டா, தர்மம்டா” என்று கதறிவிட்டு சொம்பில் எச்சில் துப்பி துண்டில் வாயை துடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். (என்ன ஒண்ணு கியுபா கிட்டயும் வடகொரியா கிட்டயும் பாச்சா அண்ணாமலை சிவாஜி எதுவும் பலிக்கல)
     1970 ல் கம்போடிய இளவரசர் வெளியூர் போன நேரம் பார்த்து ராணுவ ஜெனரல் ஆட்சிய பிடித்துக் கொண்டார். அவருக்கு கம்யுனிச சீனாவின் தயவில் இருந்த கெமர் ரூஜ் சப்போர்ட். அப்போது வியட்னாம் போர் சமயம். அதனால் இளவரசருக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு வியட்னாம் சப்போர்ட். வடக்கு வியட்னாம் கம்யுனிச நாடு எனவே அது கெமர் ரூஜ் ஐ ஆதரித்தது. கம்போடியாவில் 500000 டன் அளவுக்கு அமெரிக்கா பாம் போட்டுக் கொண்டு இருந்தது.
     1975 ல் அமெரிக்கா வியட்னாம் போரில் இருந்து முற்றிலும் வெளியேறிய உடனே கெமர் ரூஜ் போராளிகள் கம்போடிய தலைநகர் உள்ளே புகுந்து விட்டனர். தலைநகரைக் கைப்பற்றிய அவர்கள் அங்கே உள்ள மக்கள் அனைவரையும் வேலை முகாமுக்கு துரத்தினார்கள். தங்கள் வீடு உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு போகும் படி அறிவுறுத்தப் பட்டார்கள்.
     அதன்பிறகு ஒரு நான்கு ஆண்டுகள் அதாவது வியட்நாம் உள்ளே புகுந்து நாட்டை கெமர் ரூஜ் இடம் இருந்து மீட்கும் வரை கம்போடிய மக்கள் தொகையில் கால்வாசி காலியாகிவிட்டது.
     படத்தின் துவக்கத்தில் ஐந்து வயது சிறுமி உங் தங்கள் மாடிவீட்டின் வராண்டாவில் நின்று ஹெலிக்காப்டர் செல்வதை வேடிக்கை பார்த்தவண்ணம் இருக்கிறாள். அவளது தந்தை அரசாங்க ராணுவ அதிகாரி. வீட்டில் மொத்தம் ஐந்து குழந்தைகள். தொலைக்காட்சியில் அமெரிக்க படைகள் மொத்தமாக கம்போடியாவில் இருந்து வெளியேறியது என்று செய்தி சொல்கிறார்கள். உங்கின் தந்தையின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்கின்றன.
     சற்று நேரத்திற்கெல்லாம் கெமர் ரூஜ் படை துப்பாக்கியுடன் தலைநகருக்குள் நுழைகிறது. “காம்ரேட்ஸ், குண்டு வீச்சு ஆபத்து இருப்பதால் அனைவரும் ஒரு மூன்று நாட்கள் நகரத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று ஒலிப்பெருக்கி மூலமாக கட்டளையிடுகிறது. அனைவரும் அத்தியாவசிய பொருட்களுடன் வெளியேறுகின்றனர். பெரியவர்கள் அனைவருக்கும் தெரியும் ’நாம் மீண்டும் வீட்டுக்கு வரப்போவதில்லை’ என்பது.
     உங்கின் குடும்பம் தங்களுடைய காரில் மெல்ல ஊர்ந்தபடி செல்கின்றனர். வழியில் சாலையோரத்தில் படுத்து உறங்கி தொடர்ந்து பயணிக்கின்றனர். வழியில் ”மோட்டார் வாகனம் அரசுக்குத் தேவை” என பிடுங்கிக் கொள்கின்றனர். சிறிது தூரம் சென்ற பின்னர் வெளிநாட்டு பொருட்கள் எதுவும் உங்கள் கைகளில் இருக்கக் கூடாது என்று அங்கேயே விட்டுச் செல்லுமாறு கூறுகின்றனர். மேலும் நமது நாட்டில் பணம் செல்லாது எனவே பணத்தையும் போட்டு விட்டுச் செல்லுங்கள் என்கிறார்கள்.
     கையில் எதுவும் இன்றி நடந்து சென்று கொண்டு இருக்கும் போது உங்கின் தாய்மாமன் மாட்டு வண்டியில் எதிர்கொண்டு அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிரு நாட்கள் தங்கியிருக்கிறார்கள். ஆனால் மாமாவின் மனைவி உங்கின் தந்தை முன்னால் ராணுவ அதிகாரி என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதால் தங்கள் குடும்பத்தினர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்று கூறி அவர்களை அனுப்பிவிட கூறுகிறாள். வேறு வழியின்றி மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள்.
     இறுதியாக ஒரு கொடுமையான வேலை முகாமுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள். அங்கே அவர்களுக்கான குடிசையை அவர்களே வேய்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஐந்து வயது சிறுமியான உங் உட்பட அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய வேலையை செய்ய வேண்டும் என்று கூறி துப்பாக்கி முனையில் வேலை  வாங்குகிறார்கள். அவ்வளவு வேலைக்கு பிறகு அரை வயிற்றுக்கு கூட உணவு வழங்கப் படுவதில்லை. (ஒரு வேலை முகாமில் ஆரம்பத்தில் 20000 பேர் இருந்து இறுதியில் அது 1000க்குள் சுருங்கியிருக்கிறது என்றால் பாருங்கள் எவ்வளவு கொடுமை என்று)
     கெமர் ரூஜ் காலத்தில் கம்போடியாவின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பும் அடித்து நொறுக்கப் பட்டது. அனைவரும் வேலை செய்ய வேண்டும் வழங்கப் படும் உணவை உண்ண வேண்டும். மருந்து கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதை பயன்படுத்த கூடாது என்று குணப்படுத்தி விடக்கூடிய நோயாளிகளைக் கூட இறந்து போகட்டும் என்று கைவிடுகிறார்கள். சிறுவர்கள் உட்பட அனைவர் கையிலும் துப்பாக்கி.
     உங்கின் மூத்த சகோதரனும் சகோதரியும் வேறு வேலை கேம்பிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே அவளது சகோதரி பட்டினியாலும் நோய்வாய்ப்பட்டும் இறந்து போகிறாள். உங்கின் தந்தை முன்னால் ராணுவ வீரர் என்று தெரிய வரும் போது அழைத்துச் செல்லப் படுகிறார். உங்கின் கனவில் அவளது தந்தை கொள்ளப்பட்டு பல பிணங்களுடன் சேர்த்து புதைப்பது போல வருகிறது. பிறகு அவளது தாய் எஞ்சி உள்ள மூவரையும் திசைக்கு ஒருவராக சென்று  அவர்களின் ஒரிஜினல் அடையாளங்களை மறைத்து அனாதை என்று கூறி வேறு வேலை முகாம்களில் சேர்ந்து கொள்ளுமாறு அனுப்புகிறாள்.
     உங் ராணுவப் பயிற்சிப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப் படுகிறாள். அங்கே எல்லையோரங்களில் கண்ணி வெடி புதைக்கும் பணியில் உதவுகிறாள். ஒரு நாள் அவளது சகோதரியை சென்று பார்த்து வர அனுமதி கிடைக்கிறது. ஆனால் அவள் தனது தாயைக் காண பழைய வேலை முகாமுக்கு செல்கிறாள். அங்கே முகாமே வெறிச்சோடிக் கிடக்கிறது. பக்கத்து குடில் மூதாட்டி அவளது தாய் அழைத்துச் செல்லப் பட்டதாக கூறுகிறாள். மறுபடியும் உங்கின் கனவில் அவளது தாய் இறந்து போகும் காட்சியை காண்கிறாள்.
     திடீரென வியட்னாம் படை கம்போடியாவில் நுழைகிறது. அவர்கள் அனைவரும் பலத்த துப்பாக்கிச் சண்டை குண்டு வெடிப்புகளுக்கு இடையே சிதறி ஓடுகிறார்கள். வழியில் தனது இளைய சகோதரன் சகோதரி மற்றும் சில பையன்களைக் கண்டு அவர்களோடு முகாமில் தங்குகிறாள். அடுத்தநாள் மறுபடியும் கெமர் ரூஜ் படையின் தாக்குதலில் சிதறி ஓடுகிறார்கள். இறுதியாக செஞ்சிலுவைச் சங்க மருத்துவ முகாமில் தனது மூத்த அண்ணனைக் காண்கிறாள். நால்வரும் இணைவதாக படம் முடிகிறது.
     படம் முழுவதுமாக உங் என்கிற ஐந்து வயது சிறுமியின் பார்வையிலேயே விரிகிறது. கம்யுனிச அரசை அமைக்கிறேன் பேர்வழி என்று ரொம்ப கறார் தனம் காட்டும் கெமர் ரூஜ் ன் கேணத்தனமான செயல்பாடுகள் சைனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனத் தயாரிப்பு டிவியை உடைத்த “கோ கொரானா” கோஷ்டியின் செயல்பாடுகளுக்கு சற்றும் சளைத்ததில்லை.
     படத்தில் காட்டியுள்ள கம்போடியாவின் கலாச்சாரம் வாழ்வியல் அனைத்தும் தமிழகத்திற்கு நெருக்கமாக உள்ளன. பெண்குழந்தைகள் உட்பட மார்பு வரை துணியை சுற்றிக் கொண்டு மறைந்து கொண்டு குளிக்கின்றனர். அப்பாவை ”ப்பா” என்றும் அம்மாவை ”ம்மா” என்றும் விளிக்கின்றனர். உணவு கூட அரிசி உணவுதான். மேலும் மாட்டு வண்டி நம்முடையது போலவே உள்ளது. அப்புறம் பனைமட்டை தொப்பி மற்றும் உணவுக் கூடை இவையெல்லாம் ஆச்சரியம்.
     கம்போடியா முழுவதுமே நல்ல பசுமை போர்த்திய வளமான செம்மண் நிலப்பகுதியாக உள்ளது.
     படத்தில் வரும் “உங்“ கின் சுயசரிதையை அவருடன் கதையாக உருவாக்கி ஏஞ்சலினா சுயசரிதையை அவருடன் கதையாக உருவாக்கி ஏஞ்சலினா ஜூலி இயக்கியுள்ளார்.
     படத்தின் ஒளிப்பதிவு அபாரம். உங்காக நடித்த சிறுமி வெகுச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் மௌனத்தை பின்னணி இசையாக மிக நேர்த்தியாக ஏராளமான இடங்களில் பயன்படுத்தி உள்ளார்கள்.

    

Saturday, June 13, 2020

மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா….


மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா….
”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல் எங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே” – மாட்டு வண்டி இழுத்துச்செல்லும் காளைகளின் ஓட்டத்தில் எழும் ரிதத்தை அப்படியே மெட்டாக்கி அருமையாக வார்த்தைகள் கோர்த்த பாடல் அல்லவா?

 “மாட்டு வண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா, கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா…“ இந்த மென் சோகப் பாடலுக்கு மயங்காதவர் யாரும் உண்டா

“சின்னக்கிளி இரண்டும் செய்துவிட்ட பாவமென்ன,
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன” – என்ற கோரஸை மறக்க இயலுமா?

அடுத்து “இன்று நீ நாளை நான்” படத்தில் கங்கை அமரன் எழுதிய இந்தப் பாடலை அதிகமாக கேட்கமுடிவதில்லை. இதுவும் மாட்டுவண்டிப் பயணத்தை அடிப்படையாக கொண்ட பாடல்தான்.
“காங்கேயன் காளைகளே ஓடுங்கடா கெவர்மெண்டு சாலையிலே
காலுவலி தெரியாம நானும் பாட்டு பாடிகிட்டு வாரேன்” என்று அண்ணனுக்கு பொண்ணு பாக்க உற்சாகமாக போகும் சிவக்குமாரை மறக்க இயலுமா.

அப்புறம் “குடகு மலை காட்டில் ஒரு பாட்டு கேட்குதா…“ என்ற கரகாட்டக்காரன் படப் பாடல்.
இன்னும் ஏராளமான பாடல்கள் மாட்டு வண்டி பயணத்தை காட்சிகளாக கொண்டு தமிழ் சினிமாவில் வந்துள்ளன. ஆனால் இப்போதைய நவீன அறிவியல் உச்சம் தொடும் இந்தக் காலத்தில் மாட்டு வண்டிப் பயணம் என்பது அரிதாகி விட்டது. பயணங்கள் எவ்வளவு தொலைவு பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது பாருங்கள். எனக்குத் தெரிந்து மணல் அள்ளவும் சில சிறு விவசாயிகள் விவசாயம் செய்யவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாட்டு வண்டி வைத்துள்ளார்கள்.

ஆனால் இதே நவீன அறிவியல் காலத்தில் தான் துக்ளக் தனமான கொரோனா ஊரடங்கில் மாட்டு வண்டி வசதி கூட இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு நடக்க விட்டே கொன்றோம் என்பதும் கூட எவ்வளவு சோகமான முரண்.

கப்பல் மற்றும் விமானம் நீங்கலாக மற்ற அனைத்து மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட்டையும் பயன்படுத்தி இருந்தாலும் மாட்டுவண்டிப் பயணம் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. என்னதான் கிராமத்தில் வளர்ந்து இருந்தாலும் எனக்கு அந்தப் பயணங்கள் அரிதாகவே வாய்த்து இருக்கிறது. சில பெரு விவசாயிகள் வீடுகளில் மாட்டுவண்டி இருக்கும். எங்கள் வீட்டில் இரண்டு காளைகள் வைத்து வளர்த்து வந்தார் அப்பா. விவசாய வேலைகளான ஏர் ஓட்டுதல் அப்புறம் வரகு புனை அடித்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்துவார். ஆனால் மாட்டு வண்டி கிடையாது.

ஜூன் ஜூலை மாதங்களில் விவசாய நிலங்களுக்கு எரு அடிப்பார்கள். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் சேகாரமாகும் மாட்டுச் சாணத்தை சேகரித்து எரு குழியில் போட்டு வைத்திருப்பார்கள். கடைசியில் அதை விவசாய நிலங்களுக்கு போடுவார்கள். குப்பைக் குழியில் இருந்து கொல்லைக்கு எருவை மாட்டு வண்டியில் தான் கொண்டு போவார்கள். பள்ளி விட்டு வரும் போது மாட்டு வண்டியை வழியில் பார்த்தால் புத்தகப்பையை (ஜவுளிக்கடை மஞ்சள் பைதான்) கை வழியே ஷோல்டர் வரை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டியின் பின்னால் இருக்கும் மரப் பலகையை (அதோட பேர் மறந்து போச்சுங்க) பிடித்து தொங்கிக் கொண்டு வண்டியோட்டிக்கு தெரியாமல் தம் கட்டியபடி பயணிப்போம்.

அப்போது சிறிய போட்டி கூட வைத்துக் கொள்வோம். யார்தான் ரொம்ப தூரத்திற்கு தம் கட்டியபடி தொங்கிக் கொண்டே செல்வது என்பது தான் அந்தப் போட்டி. பள்ளியில் இருந்து வழக்கமான வழியில் வந்தால் இந்த வாய்ப்புகள் கிடைக்காது. அதனால் எங்கள் துவக்கப்பள்ளியில் இருந்து நேராக எங்கள் தெருவுக்கு வரும் குறுக்கு வழியில் வந்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு முறை நான் மற்றும் மூன்று நண்பர்கள் என நான்கு பேர் வந்த போது ஒரு வண்டி தென்பட்டது. வண்டியோட்டியை பார்த்தோம் சாஃப்ட் கேரக்டர் மாதிரி இருந்தது (கொஞ்சம் டெர்ரரான ஆள் என்றால் இறங்கி வந்து நையப் புடைத்து விடுவார்). எனவே பையை ஷோல்டருக்கு ஏற்றிக் கொண்டு ஓடிப்போய் ஆளுக்கு ஒரு பலகையை பற்றினோம். போட்டி துவங்கியது. எனது நண்பன் டவுசர் வாங்கி ஒரு மாதம் கூட பட்டனையோ கொக்கியையோ இருக்க விடமாட்டான். எனவே வயிறை ஒரு எக்கு எக்கி இரண்டு முனைகளையும் இழுத்து முடிந்து சொருகி வைத்திருப்பான். போட்டி முனைப்பில் தம்கட்டியபடி ஒரு நூறடி தூரம்தான் சென்றிருப்போம். அப்போது பார்த்து டவுசரின் இறுக்கம் நெகிழ்ந்து விட்டது. மெல்ல மெல்ல நழுவி கீழே விழுந்தே விட்டது. நிராயுதபாணியாக இருந்த போதிலும் அவன் போட்டியில் இருந்து கிஞ்சிற்றும் பின் வாங்கவில்லை. நாங்கள் மூவரும் பொங்கி வந்து வெடித்தச் சிரிப்பில் தம்மை விட்டு போட்டியில் தோற்று விட்டோம். தன் தீவிர முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகிய அவன் மட்டும் இறுதி வரை நின்று வென்று பின்னர் கம்பீரமாக வந்து விழுந்து கிடந்த டவுசரை எடுத்து உடுத்திக் கொண்டான். ரொம்ப சிரிக்காதிங்க பாஸ், அப்போ நாங்க மூணாங்கிளாஸ் தான் படித்து வந்தோம்.

எங்க கொல்லைக்கு எரு அடிக்கும் போது மாட்டு வண்டியில் செல்ல முழு உரிமையுடன் கூடிய வாய்ப்பு கிட்டியது. எரு அள்ளிக் கொட்டியி பின்பு பின்னால் இருக்கும் காலியான இடத்தில் நின்று கொண்டு பயணிக்கலாம். சென்று வர சற்றேரக்குறைய ஒரு மணிநேரம் ஆகும். ஆமாம், எங்கள் தெருவில் இருந்து ஒரு நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொட்டாங்காட்டிற்கு செல்ல வேண்டும். மண் சாலை அப்புறம் தார் போடாத கல்சாலை அப்புறம் மறுபடியும் மண்சாலை. மண்சாலையில் அதுவும் மணற்பாங்கான இடத்தில் வண்டி மெதுவாக ஊர்ந்த படி செல்லும் போது லிஃப்டில் கீழே இறங்கும் போது ஏற்படும் லேசானது போல ஒரு உணர்வு ஏற்படும். எருவை அப்படியே குடை சாய்த்துவிட்டு கொஞ்சம் மண்வெட்டியால் மண்வெட்டி எருவின் மேல் போடுவார்கள். ஏன் என்றால் வெறும் சாணம் என்றால் பறக்காது ஆனால் குப்பைக் கூளம் கலந்த எரு ஆடிமாதக்காற்றில் பறந்து விடும். அதனால் அதன் மேல் பேப்பர் வெயிட் மாதிரி மண் வெட்டி போடுவார்கள். திரும்பி வரும் போது வண்டியில் தாராளமாக அமர்ந்து கொள்ளலாம். வண்டி லேசாக இருப்பதால் ஜல் ஜல் என்று தாள லயத்துடன் மாடுகள் வேகமெடுக்கும். பயணமும் ரொம்பவும் குதூகலமாக இருக்கும். இந்த க்ளவுட் நைன் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா எனக்கு அது போலத்தான் இருக்கும்.

     மாட்டு வண்டியை விட இந்த கூட்டு வண்டிப் பயணம் செய்ய இன்றளவும் எனக்கு ஏக்கமாகத்தான் உள்ளது. சினிமாக்களிலும் கதைகளிலும் பார்க்க நேர்கையில் என்னுடைய ஆசை பலமடங்கு ஆகிவிடுகிறது. அது அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு நகரும் அரண்மனை போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

     அந்தக் காலத்தில் பெண் அழைப்பிற்கு கூட்டு வண்டியைத்தான் அனுப்புவார்கள். இந்த காலகட்டத்தில் முயற்சித்து விடாதீர்கள், திருமணம் நின்றுபோகும் அபாயம் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது பெரியதிருக்கோணத்தில் (அம்மாயி ஊர்)  இருந்து பெண் அழைத்துக் கொண்டு வான்டராயன்கட்டளை செல்வதான ஒரு திருமணம். ஆகா கூட்டு வண்டிப் பயணம் இவ்வளவு சீக்கிரமாக சாத்தியப்பட்டதே என்ற மகிழ்ச்சியில் திருமண விருந்து சாப்பாடு கூட இறங்கவில்லை.

     ஆனா பிரச்சனை என்னவென்றால் இந்த பெண் அழைப்பை போல போரடிக்கும் விஷயம் எதுவும் இல்லை. பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து பரிசம் போட வருவார்கள். அந்த பரிசப் பெட்டியை என்னவோ ஸ்டேட் பேங்க் லாக்கர் ரேஞ்சுக்கு இவருதான் பிரிக்கணும் என்று முக்கியஸ்தர்களுக்காக காத்திருப்பார்கள். அப்போது பார்த்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் வரும் பாருங்க, இந்த திருமணம் இந்த மட்டில் நின்றுபோகுமோ என்று நம்மை கதிகலங்கச் செய்யும். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாப்பிட உக்காருவார்கள். அப்பாடா எல்லாரும் சாப்பிட்ட உடனே கிளம்ப வேண்டியது தான் என்று போக்கிரி பட பிரகாஷ்ராஜ் மாதிரி கஷ்டப்பட்டு விழித்துக் கொண்டு இருந்தேன். அதற்கு பிறகு தான் அடுத்த பூகம்பம் ஆரம்பமானது.

     என்னவோ கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு பொறந்த ஊருல யாரையுமே பார்க்க முடியாதது போல ஒவ்வொருவரையும் கட்டிக் கொண்டு அவ்வளவு அழுகை அழுவார்கள். (இல்லைன்னா “கல்நெஞ்சக்காரி கொஞ்சமாவது கண்கலங்குறாளா பாரேன்” என்று வடிவேலு போல ஊரார் திட்டுவார்கள்). இந்த லேடீஸ் மட்டும் அவ்வளவு தண்ணிய எங்கதான் தேக்கி வச்சிருப்பாங்களோ கொட்டி நனைச்சுடுவாங்க. சம்மந்தமே இல்லாம வழியில போறவங்க கூட வந்து கட்டிக் கிட்டு ஒரு பாட்டம் அழுது விட்டு தான் போவார்கள். எல்லாம் முடிந்து கிளம்பி வண்டியில் ஏறும் தருணம் பார்த்து வேறு ஒரு தெருவில் இருந்து ஒரு தோழியர் கூட்டம் வரவே மறுபடியும் அங்கே பல ஜீவநதிகள் பிரவாகமாக ஆரம்பித்துவிட்டது. உறக்கம் எனது கட்டுப்பாட்டை மீறி போய்விட்டது. நல்ல நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன்.

     அடுத்த நாள் நான் விழித்த போது வானத்தில் பறந்து கொண்டு இருந்தேன். ஆமாம், வண்டி வாண்டராயன் கட்டளை வந்து சேர்ந்து விட்டது. வண்டியில் உறங்கி கிடந்த சிறார்களை எல்லாம் கட்டிட வேலையின் போது சித்தாள் செங்கல்லை தூக்கிப் போட்டு பிடிப்பது போல தூக்கி போட்டு கை மாற்றி இறக்கி வைத்தார்கள். ஆகவே கூட்டு வண்டியில் பிரயாணம் செய்திருக்கிறேன். ஆனால் அது எனக்கே தெரியாது. எனவே அதை கணக்கில் கொள்ள இயலாது. விமானப் பயணத்தைக் காட்டிலும் எனக்கு இந்த கூட்டு வண்டிப் பயணத்தின் மேல் தான் தீராத ஆவல் உள்ளது.

     கடலை காயவைத்து அடித்த பின்பு அதனை ஜெயங்கொண்டம் கடலை கமிட்டியில் விற்பது வாடிக்கை. அதற்கு கடலை பயிர் மூட்டைகளை ஏற்றியபடி மாட்டு வண்டியில் இரவில் பயணப்படுவார்கள். சுத்தமல்லி, தத்தனூர், மாந்தோப்பு, உடையார்பாளையம் வழியாக ஜெயங்கொண்டம். திருச்சி நெடுஞ்சாலைப் பயணம். அதுவும் மாட்டு வண்டியில் நிலவொளியில். நினைக்கும் போதே சிலிர்க்கிறது அல்லவா. நிலவொளியும் மாட்டு வண்டியும் என்கிற விஷயம் என்னை வெகுவாக ஈர்த்த காரணத்தால் ஒரு வருடம்(எட்டாம் வகுப்பு என நினைவு) அப்பா என்னை கேட்டதுமே ஆர்வத்தோடு செல்வதற்கு ஒப்புக்கொண்டேன். தனியாக அல்ல, ஒரு ஐந்து பேர் அவரவர் கடலை பயிரை விற்க கிளம்பினார்கள். வேலை பளு காரணமாக அப்பா என்னை அவர்களோடு அனுப்பினார்.

     ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டுவதென்பது கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அனுபவப் பூர்வமாக அந்த பயணத்தில் தான் உணர்ந்தேன். ச்சே ச்சே இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது போங்க. பயணத்தின் ஆரம்பத்திலேயே ஒரு தவுசண்ட் வாட்ஸ் பல்பு கொடுத்தார்கள்.

     “தம்பி ஜெயராஜு வண்டி மூட்டை எல்லாம் ஏத்திக்கிட்டு வர லேட்டாகும் நீயும் அந்த அண்ணனும் கடைசி பஸ்ல போயி கமிட்டில இருங்க நாங்க ஏத்திக்கிட்டு எந்நேரம் ஆனாலும் வந்துடுறோம்” என்று என்னை பேருந்தில் ஏற்றி விட்டார்கள். ஒப்புக் கொண்டு திரும்ப மாற்றி பேச இயலாதே.

     அங்கே போனா கமிட்டியில் கடலை பயிர் விற்கும் கட்டிடம் ஒரு கிரிக்கெட் மைதானம் அளவுக்கு மொசைக் தரையோடு அழகாக இருந்தது. இரவு பத்துமணிக்கு கிரிக்கெட் விளையாடும் அளவு இருந்த இடம் பதினோரு மணிக்கு படுத்துறங்கும் அளவு மட்டுமான இடமாக சுருங்கியது, பின்பு நெருக்கியடித்து படுக்குமளவு சுருங்கியது. எங்க மூட்டை வந்த போது அந்த மூட்டை மேல் அமர்ந்து கொண்டே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டு போனது. ஆமாம் அந்த இடம் முழுக்க அவ்வளவு மூட்டைகள்.

     அடுத்த நாள் காலை வந்து தரப் பரிசோதனை செய்து விலை குறித்துக் கொண்டு செல்வார்கள். பிறகு எடை போட்டு விற்று கைக்கு பணம் வர அடுத்த நாள் இரவு மணி ஏழு ஆகிவிட்டது. மாட்டு வண்டிப் பயணத்திற்கு ஆசைப்பட்டு நான் மாட்டிக் கொண்டு விழித்த கதைதான் இது. ஆனாலும் கூட அந்த முழு நாளும் ஹோட்டலில் பரோட்டா தோசை என சாப்பிட்டது மறக்க இயலாது. அப்போதெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது போல எளிதல்ல. அனேகமாக நான் பரோட்டா சாப்பிட்டது அதுதான் முதல்முறை. ஜனகர் தியேட்டர் அருகே இன்றளவும் உள்ள கடையில் தான் சாப்பிட்டேன்.

     தெருவில் சக்கரவல்லிக் கிழங்கு விற்பனைக்கு வருவோம் அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் அந்த கிழங்கு கொடி அதன் மேல் சாக்கு அப்புறம் மூட்டை என பரப்பி வைத்திருப்பார்கள். வண்டி தளத்திற்கு கீழே மாடு சாப்பிட வைக்கோல் இருக்கும். அவர்களின் அந்த வண்டியை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். நினைத்த இடத்தில் மாட்டின் பூட்டவிழ்த்து விட்டு அமர்ந்து சாப்பிடலாம். கொஞ்சம் உறங்கலாம். அப்புறம் அடுத்த ஊருக்கு பயணப்படலாம். தெருவில் வரும் வேறு எந்த வியாபாரத்திலாவது இவ்வளவு சொகுசான ஏற்பாடுகள் உள்ளதாக தெரியவில்லை.

     இப்போதும் கூட எங்காவது மாட்டு வண்டியை காணும் போது எனது வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு அந்த மாட்டு வண்டியின் பின்னால் தொங்கலாமா என்கிற ஆசை ஊற்றெடுக்கும். ஆனால் வண்டி குடைசாய்ந்து இரண்டு மாடுகளும் வண்டியோட்டியும் அந்தரத்தில் பரிதாபமாக தொங்குவதை நினைத்துப் பார்க்க சகியாமல் ஆசையை அடக்கிக் கொள்கிறேன்.

    




Monday, June 8, 2020

கருந்துளை என்னும் பெருந்துளை -4 விஞ்ஞானிகள் ”சுட்ட” வடை



சமீப நாட்களாக அரசியலில் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வாயால் வடை சுடுவது மலிந்து காணப்படுகிறது. ஆனாலும் கூட கொரானா காலத்தில் சுடப்பட்ட அந்த 20 லட்சம் கோடி ரூபாய் வடையை நினைக்கையில் எனக்கு கண்ணெல்லாம் ஸ்வெட்டிங்.
இயற்பியல் விஞ்ஞானிகளில் இரண்டு ரகம் உண்டு. ஒருவர் கருவிகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்து கண்டுணர்ந்து முடிவுகளை வெளியிடுபவர்கள். இரண்டாம் ரகம்தான் (’வாயால் வடை சுடும்’) கருத்தியல் இயற்பியலில் (Theoritical Physicist) ஆய்வு செய்பவர்கள். இந்த அத்தியாயத்தில் விஞ்ஞானிகள் வாயால் சுட்ட வடையை (கருந்துளையின் படம் பார்க்க வடை போல தானே உள்ளது?!!) காமிராவால் சுட்ட கதையை பார்க்கப் போகிறோம்.
சரி எந்த அடிப்படையில் குருட்டுப் பூனை விட்டத்தில தாவிய கதை போல இருந்த கருந்துளையை கண்டு பிடித்து படம் எடுத்தார்கள்?
கருந்துளையின் மையம் கருப்பாக இருக்கும் என்பது என்னவோ உண்மை தான். ஆம் அங்கே விழும் ஒளி கூட கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து வெளிபட்டு வர இயலாது எனவே தான் அந்த இடம் கருப்பாக தெரிகிறது. ஆனால் அதற்கு சற்று முன்னரே இருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த அதிவெப்ப கதிர்வீச்சு அலைகள் ஏராளமாக உள்ளன. ஆக, நம்ம இலக்கு அந்த வெளி ரவுண்ட படம் புடிச்சா உளுந்து வடையின் நடு துவாரம் போல கருந்துளை அழகாக வந்து குந்திக்கும்.
ஆமா அதுக்குப் பின்னாடி இருந்த தொழில்நுட்பம் என்ன?
“ஒரே நேரத்தில் ஒரே பொருளை பல தொலை நோக்கிகளைக் கொண்டு படம் பிடித்து ஒருங்கிணைத்தல்” என்கிற அடிப்படை தான்.
கருந்துளையை படம் பிடிக்கும் முயற்சியில் எந்த ஒரு தொழில் நுட்பமும் கை கொடுக்க வில்லை. ”ஒன் கர்ச்சீஃப் நாட் இனஃப்” என்று வடிவேல் கோவணத்திற்கு அளவு பார்த்த கணக்காக அனைத்து தொலை நோக்கிகளும் தனித்தனியே தவறிய போது அவற்றை ஒருங்கிணைத்து ஒரு உலகலாவிய  வலைப் பின்னலை அமைத்து “ஒரே நேரம் ஒரே பொருள் பல தொலை நோக்கிகள்” என்று விஞ்ஞானிகள் குழு களத்தில் குதித்தது.
EVENT HORIZON TELESCOPE –EHT  என்கிற 200க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் அமைப்பு ரொம்ப பொறுமையாக 20 ஆண்டுகள் உழைத்து “சுட்ட வடை“ தான் நாம் கண்ட அந்த இரண்டு கருந்துளைகளின் படம்.
அது எப்படி பல தொலை நோக்கிகளைக் கொண்ட உலகலாவிய வலைப்பின்னலை அமைத்து கண்டறிந்தார்கள்?



VLBI- VERY LONG BASELINE INTERFEROMETRY என்கிற புவியளவு விட்டமுடைய மெய்நிகர் தொலைநோக்கி வாயிலாகத்தான் நோக்க முடிந்தது.

தென் துருவம் உள்ளிட்ட புவியின் எட்டு இடங்களில் தொலை நோக்கி மையங்கள் நிறுவப் பட்டன. அந்த எட்டு தொலை நோக்கிகளும் நோக்கிய காட்சிகளை அந்த பேஸ்லைன் வாயிலாக தைத்தோம் என்றால் இந்த புவியே தொலை நோக்கியாக செயல் பட்டால் எந்த மாதிரி ஒரு படத்தை பதியுமோ அப்படி ஒரு படத்தை பதிவு செய்ய இயலும்.
ஏப்ரல் 2017 ம் ஆண்டு பதிவு செய்வதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் நிறைவுற்றன. பிறகு புவியின் நிலை வானத்தின் தெளிவு என நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு பத்து நாட்கள் (ஏப்ரல் 5 முதல் 14 வரை) நோக்குவதற்காக இறுதி செய்யப் பட்டன. ஆனாலும் அதில் ஆறு நாட்கள் வானம் தெளிவின்மை காரணமாக படம் பிடிக்க இயல வில்லை. மீதம் இருந்த நான்கு நாட்களில் அனைத்து தொலை நோக்கி மையங்களும் அணுக்கடிகார துள்ளியத்துடன் ஒரே நேரத்தில் ஈரிலாத் தொலைவில் ஒரே இலக்கில்  இருந்து வரும் கதிர் வீச்சினை பதிவு செய்யத் துவங்கின.
பதிவு செய்யப் பட்ட ஒவ்வொரு ஃப்ரேமிலும் அணுக்கடிகார நேரம் மற்றும் அந்தந்த தொலைநோக்கி மையங்களின் இருப்பிட ஜிபிஎஸ் பொசிஷன் ஆகியவை பதியப்பட்டன.
ஒரு நாள் இரவில் ஒரு தொலைநோக்கி எடுத்தப் படங்களின் டிஜிட்டல் அளவு என்ன தெரியுமா? 1 பீட்டாபைட். அதாவது 1000 டெர்ராபைட் அல்லது நமக்கு பழக்கமான அளவில் சொல்வதென்றால் பத்துலட்சம் ஜிபி. இந்த அளவிலான தகவல் தொகுப்பை இணையத்தில் அனுப்புவதைக் காட்டிலும் சர்வதேச கொரியர் சர்வீஸ் மூலமாக அனுப்புவது விரைவானது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டார்கள். ஆமாம் அந்த தகவல் தொகுப்பை ஒருங்கிணைப்பது பெரிய வேலை. அப்புறம் அந்த எட்டு தொலை நோக்கிகள் கொடுத்த தகவல் தொகுப்புகளை நேர அளவு ஜிபிஎஸ் பொசிஷன் என சரியாக கோர்த்து தைத்த பின்பு தான் படங்களை பிராஸஸ் செய்து முழுமையாக்க இயலும்.
சரி அப்படி எந்த எந்த கருந்துளை நம்ம கேமராவில் சிக்கியது?
சாஜிட்டாரியஸ் ஏ – என்கிற அருகாமை(?!) கருந்துளையை படம் எடுத்தார்கள்.  ஏன் அருகாமைன்னு சொல்றாங்கன்னா அது நம்ம பால்வெளி மண்டலத்தின் மையத்தில் உள்ளது. அந்த கருந்துளையோட நிறை நம்ம சூரியனைப் போல 43 லட்சம் மடங்கு அதிக நிறை கொண்டது. என்ன லேசா நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கா? இதையும் கேளுங்க அது பூமியில் இருந்து 26000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒளி விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் பயணிக்கும். அந்த வேகத்தில் மின்னலாப் பறந்தாலும் அந்த கருந்துளையை அடைய 26000 ஆண்டுகள் ஆவும் என்பதைத்தான் 26000 ஒளி ஆண்டுகள் என்று சொல்றாங்க) என்ன மயக்கமே போட்டுட்டீங்களா?
அடுத்த படத்தை பற்றிக் கேட்டால் உங்க மயக்கம் இன்னும் லட்சம் மடங்கு அதிகமாகும். ஆமாம் அடுத்த கருந்துளை M87 என்பதாகும். இது சூரியனைப் போல 650 கோடி மடங்கு அதிக நிறை உடையது. ஐந்தரை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஆங், அதே தான் ஐந்தரை கோடி வருசம் ஆவும்) உள்ளது.

“கருந்துளையை முதன் முதலில் நாங்கள் படமெடுத்து விட்டோம்” என்று 2019 ஆவது வருடம் ஏப்ரல் 10ம் தேதி பெருமிதம் பொங்க EHT Project Director Sheperd S. Doeleman செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முடிவுரை: கருந்துளை என்னும் பெருந்துளை என்னும் இந்த கட்டுரைத் 

தொகுப்பு 3 அத்தியாயங்கள் எழுதி நான்காவது அத்தியாயம் நிறைவுறாமல்

கிட்டத்தட்ட ஓராண்டு காலம்(சென்ற ஆண்டு மே மாதம் ) இழுத்துக் 

கொண்டு இருந்தது. ஒரு வழியாக இன்றோடு நிறைவுற்றது.

வழக்கம் போல ஒரு Disclaimer – இந்தக் கட்டுரையின் தகவல்கள் யாவும் 

கருந்துளையின் படங்கள் வெளியான போது ஒரு ஆர்வத்தின் பேரில்  பல் 

வேறு இணைய தளங்களில் படித்து நான் அறிந்து கொண்டவையாகும். 

அவற்றை சற்று எளிமையாக தொகுத்து இந்த கட்டுரை எழுதப்பட்டது. 

ஆதலால் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின் நண்பர்கள் தாராளமாக 

பின்னூட்டத்தில் சுட்டலாம். சந்தேகம் எதுவும் இருந்தாலும் கேளுங்கள். 

உங்கள் கேள்விகள் எனது தேடலை விசாலமாக்கும் அல்லவா?


கருந்துளை என்னும் பெருந்துளை -4 விஞ்ஞானிகள் ”சுட்ட” வடை



சமீப நாட்களாக அரசியலில் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வாயால் வடை சுடுவது மலிந்து காணப்படுகிறது. ஆனாலும் கூட கொரானா காலத்தில் சுடப்பட்ட அந்த 20 லட்சம் கோடி ரூபாய் வடையை நினைக்கையில் எனக்கு கண்ணெல்லாம் ஸ்வெட்டிங்.
இயற்பியல் விஞ்ஞானிகளில் இரண்டு ரகம் உண்டு. ஒருவர் கருவிகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்து கண்டுணர்ந்து முடிவுகளை வெளியிடுபவர்கள். இரண்டாம் ரகம்தான் (’வாயால் வடை சுடும்’) கருத்தியல் இயற்பியலில் (Theoritical Physicist) ஆய்வு செய்பவர்கள். இந்த அத்தியாயத்தில் விஞ்ஞானிகள் வாயால் சுட்ட வடையை (கருந்துளையின் படம் பார்க்க வடை போல தானே உள்ளது?!!) காமிராவால் சுட்ட கதையை பார்க்கப் போகிறோம்.
சரி எந்த அடிப்படையில் குருட்டுப் பூனை விட்டத்தில தாவிய கதை போல இருந்த கருந்துளையை கண்டு பிடித்து படம் எடுத்தார்கள்?
கருந்துளையின் மையம் கருப்பாக இருக்கும் என்பது என்னவோ உண்மை தான். ஆம் அங்கே விழும் ஒளி கூட கருந்துளையின் ஈர்ப்பில் இருந்து வெளிபட்டு வர இயலாது எனவே தான் அந்த இடம் கருப்பாக தெரிகிறது. ஆனால் அதற்கு சற்று முன்னரே இருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த அதிவெப்ப கதிர்வீச்சு அலைகள் ஏராளமாக உள்ளன. ஆக, நம்ம இலக்கு அந்த வெளி ரவுண்ட படம் புடிச்சா உளுந்து வடையின் நடு துவாரம் போல கருந்துளை அழகாக வந்து குந்திக்கும்.
ஆமா அதுக்குப் பின்னாடி இருந்த தொழில்நுட்பம் என்ன?
“ஒரே நேரத்தில் ஒரே பொருளை பல தொலை நோக்கிகளைக் கொண்டு படம் பிடித்து ஒருங்கிணைத்தல்” என்கிற அடிப்படை தான்.
கருந்துளையை படம் பிடிக்கும் முயற்சியில் எந்த ஒரு தொழில் நுட்பமும் கை கொடுக்க வில்லை. ”ஒன் கர்ச்சீஃப் நாட் இனஃப்” என்று வடிவேல் கோவணத்திற்கு அளவு பார்த்த கணக்காக அனைத்து தொலை நோக்கிகளும் தனித்தனியே தவறிய போது அவற்றை ஒருங்கிணைத்து ஒரு உலகலாவிய  வலைப் பின்னலை அமைத்து “ஒரே நேரம் ஒரே பொருள் பல தொலை நோக்கிகள்” என்று விஞ்ஞானிகள் குழு களத்தில் குதித்தது.
EVENT HORIZON TELESCOPE –EHT  என்கிற 200க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் அமைப்பு ரொம்ப பொறுமையாக 20 ஆண்டுகள் உழைத்து “சுட்ட வடை“ தான் நாம் கண்ட அந்த இரண்டு கருந்துளைகளின் படம்.
அது எப்படி பல தொலை நோக்கிகளைக் கொண்ட உலகலாவிய வலைப்பின்னலை அமைத்து கண்டறிந்தார்கள்?
VLBI- VERY LONG BASELINE INTERFEROMETRY என்கிற புவியளவு விட்டமுடைய மெய்நிகர் தொலைநோக்கி வாயிலாகத்தான் நோக்க முடிந்தது.

தென் துருவம் உள்ளிட்ட புவியின் எட்டு இடங்களில் தொலை நோக்கி மையங்கள் நிறுவப் பட்டன. அந்த எட்டு தொலை நோக்கிகளும் நோக்கிய காட்சிகளை அந்த பேஸ்லைன் வாயிலாக தைத்தோம் என்றால் இந்த புவியே தொலை நோக்கியாக செயல் பட்டால் எந்த மாதிரி ஒரு படத்தை பதியுமோ அப்படி ஒரு படத்தை பதிவு செய்ய இயலும்.
ஏப்ரல் 2017 ம் ஆண்டு பதிவு செய்வதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் நிறைவுற்றன. பிறகு புவியின் நிலை வானத்தின் தெளிவு என நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு பத்து நாட்கள் (ஏப்ரல் 5 முதல் 14 வரை) நோக்குவதற்காக இறுதி செய்யப் பட்டன. ஆனாலும் அதில் ஆறு நாட்கள் வானம் தெளிவின்மை காரணமாக படம் பிடிக்க இயல வில்லை. மீதம் இருந்த நான்கு நாட்களில் அனைத்து தொலை நோக்கி மையங்களும் அணுக்கடிகார துள்ளியத்துடன் ஒரே நேரத்தில் ஈரிலாத் தொலைவில் ஒரே இலக்கில்  இருந்து வரும் கதிர் வீச்சினை பதிவு செய்யத் துவங்கின.
பதிவு செய்யப் பட்ட ஒவ்வொரு ஃப்ரேமிலும் அணுக்கடிகார நேரம் மற்றும் அந்தந்த தொலைநோக்கி மையங்களின் இருப்பிட ஜிபிஎஸ் பொசிஷன் ஆகியவை பதியப்பட்டன.
ஒரு நாள் இரவில் ஒரு தொலைநோக்கி எடுத்தப் படங்களின் டிஜிட்டல் அளவு என்ன தெரியுமா? 1 பீட்டாபைட். அதாவது 1000 டெர்ராபைட் அல்லது நமக்கு பழக்கமான அளவில் சொல்வதென்றால் பத்துலட்சம் ஜிபி. இந்த அளவிலான தகவல் தொகுப்பை இணையத்தில் அனுப்புவதைக் காட்டிலும் சர்வதேச கொரியர் சர்வீஸ் மூலமாக அனுப்புவது விரைவானது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டார்கள். ஆமாம் அந்த தகவல் தொகுப்பை ஒருங்கிணைப்பது பெரிய வேலை. அப்புறம் அந்த எட்டு தொலை நோக்கிகள் கொடுத்த தகவல் தொகுப்புகளை நேர அளவு ஜிபிஎஸ் பொசிஷன் என சரியாக கோர்த்து தைத்த பின்பு தான் படங்களை பிராஸஸ் செய்து முழுமையாக்க இயலும்.
சரி அப்படி எந்த எந்த கருந்துளை நம்ம கேமராவில் சிக்கியது?
சாஜிட்டாரியஸ் ஏ – என்கிற அருகாமை(?!) கருந்துளையை படம் எடுத்தார்கள்.  ஏன் அருகாமைன்னு சொல்றாங்கன்னா அது நம்ம பால்வெளி மண்டலத்தின் மையத்தில் உள்ளது. அந்த கருந்துளையோட நிறை நம்ம சூரியனைப் போல 43 லட்சம் மடங்கு அதிக நிறை கொண்டது. என்ன லேசா நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கா? இதையும் கேளுங்க அது பூமியில் இருந்து 26000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒளி விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் பயணிக்கும். அந்த வேகத்தில் மின்னலாப் பறந்தாலும் அந்த கருந்துளையை அடைய 26000 ஆண்டுகள் ஆவும் என்பதைத்தான் 26000 ஒளி ஆண்டுகள் என்று சொல்றாங்க) என்ன மயக்கமே போட்டுட்டீங்களா?
அடுத்த படத்தை பற்றிக் கேட்டால் உங்க மயக்கம் இன்னும் லட்சம் மடங்கு அதிகமாகும். ஆமாம் அடுத்த கருந்துளை M87 என்பதாகும். இது சூரியனைப் போல 650 கோடி மடங்கு அதிக நிறை உடையது. ஐந்தரை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஆங், அதே தான் ஐந்தரை கோடி வருசம் ஆவும்) உள்ளது.
“கருந்துளையை முதன் முதலில் நாங்கள் படமெடுத்து விட்டோம்” என்று 2019 ஆவது வருடம் ஏப்ரல் 10ம் தேதி பெருமிதம் பொங்க EHT Project Director Sheperd S. Doeleman செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முடிவுரை: கருந்துளை என்னும் பெருந்துளை என்னும் இந்த கட்டுரைத் 

தொகுப்பு 3 அத்தியாயங்கள் எழுதி நான்காவது அத்தியாயம் நிறைவுறாமல்

கிட்டத்தட்ட ஓராண்டு காலம்(சென்ற ஆண்டு மே மாதம் ) இழுத்துக் 

கொண்டு இருந்தது. ஒரு வழியாக இன்றோடு நிறைவுற்றது.

வழக்கம் போல ஒரு Disclaimer – இந்தக் கட்டுரையின் தகவல்கள் யாவும் 

கருந்துளையின் படங்கள் வெளியான போது ஒரு ஆர்வத்தின் பேரில்  பல் 

வேறு இணைய தளங்களில் படித்து நான் அறிந்து கொண்டவையாகும். 

அவற்றை சற்று எளிமையாக தொகுத்து இந்த கட்டுரை எழுதப்பட்டது. 

ஆதலால் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின் நண்பர்கள் தாராளமாக 

பின்னூட்டத்தில் சுட்டலாம். சந்தேகம் எதுவும் இருந்தாலும் கேளுங்கள். 

உங்கள் கேள்விகள் எனது தேடலை விசாலமாக்கும் அல்லவா?


ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...