Thursday, December 27, 2018

“இருட்டு வேளை” ஒரு “முரட்டு விமர்சனம்”



தலைப்பை பார்த்து பயந்து போகாதீர்கள். சுசித்ரா பட்டாச்சார்யா அவர்கள் எழுதிய ANDHAR BELA என்கிற வங்காள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இருட்டு வேளை என்கிற நாவல். சு.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மொழிபெயர்ப்பு அம்ருதா பதிப்பக வெளியீடு. நான் வாங்க வில்லை நூலகத்தில் தான் எடுத்து படித்தேன்.
டாடா நானோ ஃபேக்டரிக்காக வளமான விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி டாடாவுக்கு கொடுத்தது மற்றும்.(மக்கள் எதிர்ப்பு கண்டு பின்வாங்கி பின்னர் குஜராத்துக்கு ஓடியது) அதன் பின் விளைவுகள் பற்றி பேசும் நாவல்.
செகரட்ரியேட்டில் வேலை பார்க்கும் பிரபாஸ் அவரது மனைவி ஜெயா அப்புறம் அவரது மகன் அயன் மருமகள் ஆங்கி ஆகியோர் ஒரு எளிமையான ஃப்ளாட்டில் மூன்றாவது மாடியில் குடியிருக்கிறார்கள்.
மகன் அயன் கல்லூரி விரிவுரையாளர் பி.எச்டிக்கு பதிவு செய்து ஆய்வுக்கான முஸ்தீபுகளிலும் ஆளுங்கட்சி சார்ந்த சங்கத்தில் முழு ஈடுபாட்டுடனும் இருக்கிறான்.
ஆங்கி அயனின் காதல் மனைவி. அவளது அப்பாவும் அம்மாவும் வங்கிப் பணியாளர்கள். சற்று பெரிய இடம். ஆங்கி பள்ளி ஆசிரியை பகுதி நேர நாடக நடிகை. சற்று சுதந்திரமாகவும் சுயசார்போடும் இருக்க விரும்புபவள்.
பிரபாஸ்க்கு ஒரு தம்பி தங்கை உண்டு. கிராமத்து பூர்வீக நிலம் உண்டு. அதை குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு கார் கம்பெனிக்காக எடுக்கப் படும் நிலத்தில் இவர்களுடையதும் வருகிறது. தம்பியும் தங்கையும் செக் வாங்க “எப்போ எப்போ” என்று ஏங்குகிறார்கள். பிரபாஸ் கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு நிலத்தை இழக்க இருக்கும் விவசாயிகளின் உணர்வுகளை நேரில் பார்த்து கலங்குகிறார். முக்கியமாக அவரது நிலத்தில் குத்தகை விவசாயம் பார்க்கும் இருவரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். வரும் தொகையில் குத்தகைதாரர்களுக்கு குறிப்பிட்ட அளவு நஷ்ட ஈடு தர சம்மதித்தும் அந்த தற்கொலை நடந்து விடுகிறது.
இது சார்ந்த கதைமாந்தர்களின் மனப்போக்கு கதையோட்டத்தில் மிக ஆழமாக அலசி விவாதிக்கப் படுகிறது.
ஆங்கியின் நாடகக்குழுவில் அரசாங்கத்தை கண்டிக்கும் காட்சியை சேர்க்கிறார்கள். அயனோ தொழிற்சாலை நல்லது. நாடு வளர்ச்சி பாதையில் செல்வதை தடுப்பது பிற்போக்கானது என வாதம் செய்கிறான். அவன் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவன் அல்லவா. காதல் தம்பதியினரிடையே இந்த விஷயம் சூடான விவாதங்களை கிளப்புகிறது.
ஆங்கியின் தாய் அரசுக்கு ஆதரவாகவும் தந்தை எதிராகவும் பேசுகிறார்கள். பிரபாஸின் தம்பியும் தமக்கையும் இன்னும் செக் வாங்காமல் தாமதம் செய்து தங்கள் நலனையும் சேர்த்தே கெடுக்கும் அண்ணனை கண்டிக்கிறார்கள்.
இப்படியாக செல்லும் நாவல் பிரபாஸ் மனசாட்சியின் உறுத்துதல் தாங்க இயலாமல் இறுதியில் தனது பங்கான அந்த 10 லட்ச ரூபாய் செக்கை கிழித்து எரிவதாக முடித்திருப்பார்.
ஜோதிபாசுவுக்கு பிறகு வந்த ”புத்த தேவ் பட்டாச்சார்யா” அவர்களின் ஆட்சிகாலத்தில் டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கல்கத்தாவுக்கு அருகிலேயே உள்ள வளமான சிங்கூர் நில பகுதியை மக்களின் எதிர்ப்பை மீறி தாரைவார்க்கிறார். 30 சதவீத மக்களிடம் அவர்களின் சம்மதம் இல்லாமலே நிலம் எடுக்கப் பட்டிருக்கிறது. பின்னர் வந்த மம்தா பானர்ஜி ஆட்சியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று நிலம் அனைத்தும் உரியோரிடம் ஒப்படைப்பு செய்தது வேறு கதை.
இதற்கு பின்னர் ஒரு இரசாயன ஆலைக்காக நந்திகிராம் பகுதியில் நிலம் ஒதுக்கப் பட்டு மக்கள் எதிர்ப்பு கிளம்பி 11 பேர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள்.
ஆட்சி அதிகாரம் கம்யூனிஸ் கட்சியின் கையில் இருந்தாலும் அரசு எந்திரம் கார்ப்பரேட்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டி தான் என்பது நிருபணம் ஆன தருணத்தை பதிவு செய்யும் நாவல் தான் இது.
கூர்மையான அறிவு தெளிவான வசனங்கள். அருமையான பாத்திரப் படைப்பு. சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது மொழிபெயர்ப்பும் அருமை. வங்காளம் சார்ந்த பண்பாட்டு மற்றும் உணவு பழக்க வழக்கங்களை அங்கங்கே அடியில் விளக்கி கூறி நாவலை வாசிப்போருக்கு எளிமை படுத்தியிருப்பார்.



Saturday, December 22, 2018

Be With You (2018) கொரியன் படம் ஒரு பார்வை


Be with You (2018)


கொஞ்சம் ஃபேண்டசி நிறைய சென்டிமென்ட் மற்றும் காதல் நிரம்பிய ஒரு அருமையான கொரியன் படம்.
நான் பொதுவாக இப்போது மொபைலில் பார்க்கும் படங்களை பிட் பிட்டாகத் தான் பார்ப்பேன். ஒரேடியாக உட்கார நேரம் கிடைப்பதில்லை. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து மொபைல் நோண்டுவது படம் பார்ப்பது போன்றவற்றிற்கெல்லாம் சென்ற ஆண்டோடு முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது.
இந்த படம் பற்றி கேள்விப் பட்ட போது உங்கள் கைக்குட்டையை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்பது போல படித்ததால் ”என்னய்யா தமிழ்ல நாம பார்க்காத சென்டிமென்ட் சீனா” என்று பார்த்து விடுவது என்று தேடி படத்தை எடுத்து விட்டேன். ஆனா சப்டைட்டில் கிடைக்கவே இல்லை. அப்புறம் பல வகையாக தேடும் வார்த்தைகளை வடிவமைத்து கண்டேன் சப்டைட்டிலை.

இந்த கொரியன் மொழியிலும் அம்மாவை “அம்மா“ன்னுதான் சொல்றாங்க அப்பாவையும் “அப்பா“ என்று தான் சொல்றாங்க.
சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்தவுடன் ஒரு பென்குவின் கார்ட்டூன் வருகிறது. எனக்கோ அச்சச்சோ இது கார்ட்டூன் படமா என்ற பயந்து விட்டேன். ஆனால் படத்தின் மையக்கரு அந்த கார்ட்டூன் கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் அந்த கார்ட்டூன் கதை இன்றியமையாதது ஆகிவிடுகிறது.
இறந்து போய் “மேக“ நாட்டில் இருக்கும் தாய் பென்குவின் தனது குட்டியை அங்கிருந்தே பார்த்து கண்ணீர் வடித்தபடி இருக்கிறது. மழைக்கால முதல் மழைத்துளியின் போது “மேக“நாட்டில் இருந்து புவிக்கு ஒரு ரயில் போகிறது. அதில் ஏறிப் போய் குட்டியுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறது தாய். வெயில் காலம் ஆரம்பிக்கும் போது “மேக“நாட்டிற்கான கடைசி இரயில் கிளம்புகிறது அதில் ஏறி நாடு திரும்புகிறது அந்த தாய் பென்குவின்.
படம் இந்த கதையை குட்டிப் பையன் ஜி-ஹோ படித்து மூடி வைக்கம் போது கதை திறக்கிறது. வூ-ஜின் தனது தாயில்லா பையன் ஜி-ஹோ வை மிகவும் கஷ்ட்டப் பட்டு வளர்த்து வருகிறார். பையனும் அப்பாவும் அம்மா நினைவாகவே இருக்கிறார்கள். அந்த பென்குவின் கதையில் வருவது போல மழைக்கால துவக்கத்தில் தனது தாய் “மேக“நாட்டில் இருந்து இரயிலில் வருவாள் என்று நம்புகிறான். அவனை டிசப்பாய்ன்ட் செய்ய வேண்டாமே என்ற தந்தையும் அதை ஆமோதிக்கிறார்.
            மழைக்காலம் துவங்குகிறது. ஆர்வத்தோடு பிள்ளை ஜி-ஹோ இரயில் நிலையம் ஓடுகிறான் தாயை வரவேற்க. இரயில் போகிறது தாய் இறங்க வில்லை. பிள்ளை ஏமாற்றத்தோடு இரயில் பாதையில் ஓடுகிறான். அங்கே இவனது தாய் சூ-ஆ அமர்ந்திருக்கிறாள். ஆனால் நினைவுகள் எதுவும் இல்லை. இவர்கள் யார் என கேட்கிறாள்.

            சூ-ஆ வீட்டிற்கு வந்து தங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களோடு ஒன்றுகிறாள். கணவருடன் மீண்டும் காதல் அரும்புகிறது. ஊராருக்கு தெரியாமல் அவளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்.  கணவன் வூ-ஜின் அவளுடனான அவனது காதல் கதைகளை கூறுகிறான்.
            மழைக்காலம் முடிவை நெருங்க நெருங்க அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பதட்டம் அதிகமாகிறது. அவள் அவர்களுடன் நிரந்தரமாக தங்கினாளா அல்லது “மேக“நாட்டிற்கு திரும்பிச் செல்கிறாளா? என்பதை மீதிப்படத்தில் நம்மை கண்ணீரில் ஆழ்த்தி சொல்கிறார்கள்.
            படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போன  சூ-ஆ வந்துவிடுகிறார். அவர் உண்மையா டபுள் ஆக்டா என்கிற கேள்வி நம்மை குடைய ஆரம்பிக்கிறது. அவர்களிடையேயான கடந்த கால காதல் ஹீரோ சூ-ஆ விடம் சொல்கிறான். ரொமான்ஸ் சீனெல்லாம் மிக அருமை. ஹீரோ மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் கூச்சத்தை வென்று சூ-ஆ விடம் பேசவே நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிடுகிறது.
            சூ-ஆ எப்படி இறந்து போனாள் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. வீட்டில் இருக்கும் பழைய சூ-ஆ வின் டைரி வழியாக மீதிக் கதையை தெரிந்து கொள்கிறாள். அதன் பின்பு மீண்ட ஞாபகங்களை டைரியில் எழுதிச் செல்கிறாள்.
            அருமையான ஒளிப்பதிவு. மழைப் பின்னணியில் பழைய வீட்டின் முன்பு ரோஸ் வண்ண நாயகி மெரூன் கலர் குடையில் செல்லும் சீன் படத்தில் இரண்டு முறை வருகிறது. அந்த சீன்கள் அழகிய ஓவியம் போல் அமைந்து இருக்கும். அவர்களின் வீடு இருக்கும் இடத்தையொட்டி செல்லும் மலையடிவார சாலை அதற்கு கீழே பள்ளத்தாக்கு அங்கே ஓடும் ஆறு இவற்றை ஒரு சீனில் மாலை நேர வெயிலின் மஞ்சள் வெளிச்சத்தில் காண்பித்து இருப்பார்கள். மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சி.
            வூ-ஜின் சும்மா ஏழடி உயரம் இருப்பார் போல. நல்ல ஹேண்ட்சம். தேவதைகள் எப்படி இருப்பார்கள் என்று அறியாதவர்கள் இந்தப் படத்தில் சூ-ஆ வாக வரும் நாயகியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் குட்டிப்பயல் ஜி-ஹோ அருமையாக நடித்திருக்கிறான். சில நேரங்களில் கண்களில் நீர் கட்டிக் கொள்கிறது என்றால் பாருங்களேன்.
            இந்த கதை இதே பெயரில் 2004ல் ஒரு முறை கொரியாவிலேயே எடுத்திருக்கிறார்கள். இதே பெயரில் டிவி சீரியல் கூட வந்திருக்கிறதாம்.
            ஒரு நல்ல சென்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த ஒரு தமிழ்ப் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் ஒரு முறை பாருங்கள்.
           
           

Friday, December 14, 2018

மொபைல் அப்ளிகேஷன்ஸ் அறிவோம் -6 வாட்சாப் -2


மொபைல் அப்ளிகேஷன்ஸ் அறிவோம் -6 வாட்சாப் -2
போன பகுதியில் கணினியில் வாட்சப் பார்ப்பது குறித்தும்  Broadcasting குறித்தும் பார்த்தோம்.



வாட்சப் குரூப் களில் தகவல் மழை பொழிந்த வண்ணம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். பல குட்மார்னிங், குட்நைட் போன்ற பயனற்ற செய்திகளுக்கு நடுவே எப்போதாவது அத்தி பூத்தாற்போல சில நல்ல தகவல்கள் இடம் பெறும் அல்லவா? அதை பிறகு பார்க்கலாம் என்றால் ஒரே நாளில் குப்பைகள் வந்து மூடிவிடும். பிறகு தேடியெடுத்து படிப்பது என்பது ஆகாத காரியம். முதல் முறை படிக்கும் போதே ஷேரிங்குக்கு அழுத்துவது போல அழுத்தினால் மேலே ஷேரிங் ஆப்ஷனின் இடது புறம் ஒரு ஸ்டார் தோன்றும். அதை அழுத்தினோம் என்றால் அந்த தகவல் ஸ்டார்ட் மெசேஜ் (starred message) ஸ்டோரில் சேர்ந்து விடும். சேட் விண்டோவின் ஆப்ஷனை(வலது மேல் மூலை மூன்று புள்ளி ஞாபகம் உள்ளதா?)
அழுத்தினால் நான்காவதாக ஸ்டார்ட் மெசேஜ் ஸ்டோர் இருக்கும் அங்கே போனால் அத்தனை ஸ்டார்ட் மெசேஜையும் பார்க்கலாம். நேரம் நாள் தேதி அனுப்பிய நபர் அல்லது குரூப் என்று சகல அடையாளங்களோடும் பார்க்க இயலும்.

இப்போதெல்லாம் வாட்சப் ல் STATUS போடுவது சகஜம் ஆகிவிட்டது. ஓட்டலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் உணவு பதார்த்தங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் போட்டார். இந்த மாதிரி உள்ளவர்களின் மொபைல் ஃபோன் புக்கில் எத்தனை நம்பர் உள்ளதோ அத்தனை பேருக்கும்  அவர்களின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் தெரியும். இது எவ்வளவு ஆபத்தானது என்று பலருக்கு தெரிவதில்லை.
இதற்கும் ஒரு தீர்வு உண்டு. வாட்சப் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று ஆப்ஷனை அழுத்தினால் STATUS PRIVACY என்ற ஒன்று வரும்.  அதில் my contacts என்பது Default   ஆக இருக்கும் . அதாவது உங்கள் போன் புக்கில் உள்ள அனைவரும் பார்க்கலாம். அடுத்ததாக இருப்பது my contacts except . இது போன்புக்கில் உள்ள சிலரை தவிர்த்து என்று பொருள். இங்கே சில நபர்களின் பெயர்களை சேர்த்தால் உங்கள் நிலைத்தகவல் அவர்களுக்கு தெரியாது. அடுத்தது only shar with சிலருக்கு மட்டும் பிரத்தியேகமாக தெரியும் வண்ணம் நமது நிலைத்தகவலை வைக்க இயலும். இங்கே யாருக்கெல்லாம் இது தெரியவேண்டும் என்ற அமைக்க இயலும்.

அடுத்து ஒரு முக்கிய குறிப்பு Settings உள்ளே சென்று  Data and Storage Usage என்கிற பகுதியின் உள்ளே media Auto download  என்ற அமைப்புக்குள் சென்று எல்லாவற்றையும் disable செய்து வைத்துக் கொள்ளுங்கள் (in wifi mode too) இல்லையென்றால் உங்கள் நம்பருக்கு வரும் அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே டவுன்லோட் ஆகி இடத்தை அடைப்பதோடு அல்லாமல் டேட்டாவும் வீணாகிவிடும்.
வாட்சப் குறித்து ஓரளவு அனைத்து புதிய தகவல்கள் பற்றியும் கூறிவிட்டேன் அதனால் அடுத்த பகுதியில் வேறு ஒரு அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம்.

Thursday, December 13, 2018

வாட்சாப்பும் வதந்திகளும் பிரிக்க முடியாதவை

21ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை பூமி இருளில் மூழ்கப் போகிறது-நாசா பகீர் தகவல்.
தலைப்பை பார்த்ததும் தினமலர் செய்தியின் காபி பேஸ்ட் என்று எண்ணிவிடாதீர்கள்!
 எனது இல்லத்தரசி “கேயாஸ் தியரியையே” கரைத்து குடித்தவர். துபாயிலிருந்து கிளம்ப வேண்டிய நியுயார்க் விமானம் தாமதமானால் கூட அதற்கு நான் ’செல்லை நோண்டியது’ தான் காரணம் என்று நிறுவும் சாமர்த்திய சாலி என்பதால் எனது வழக்கமான பஸ் பயணங்களில் தான் அன்றைய அப்டேட்ஸ் பார்ப்பேன். எனவே டேட்டாவை ஆன் பண்ணி வாட்ஸ்அப் ஓபன் பண்ணினேன். ’கொய்ங்.. கொய்ங்..’ என்று செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருந்தது. பேருந்தில் எனது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் அமர்ந்து வந்தார், எனது செய்கையை பார்த்தது முதலே  'நெட்ல' போட்ருக்கான், வாட்ஸ்அப்பில் வந்தது என்றபடியே வந்தார். வயதான 'பெருசு' என்று எண்ணிவிடாதீர் நானும் tech savvy தான் எனக்காட்டிக் கொள்வதே அவர் நோக்கமாகப்பட்டது.
பேருந்து வி.கைக்காட்டி தாண்டி விரைந்து கொண்டிருந்தது, பக்கத்து சீட்டு காரரும் தான் கடைவிரித்த வாட்ஸ்அப் தகவல் உபயத்தால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே கூட்டியிருந்தார். அடுத்த தகவலாகத்தான் ஒரு பெரிய குண்டைப் போட்டார்.
 '21ந்தேதி முதல் 26 ந்தேதி வரை 6 நாட்களுக்கு உலகம் முழுவதும் இரவாகத்தான் இருக்கும். சூரியன்ல ஏதோ காந்த புயலாம். என்ன பண்ண போறோம்னு தெரியல! இன்றைக்கு வாட்ஸ்அப்ல வந்தது'
'பயப்படாதீங்க அப்படிலாம் ஆகாது' என்றேன்.
'அட ஏம்பா நான் என்ன பொய்யா சொல்றேன், இங்கே பார்!' என்றபடி வாட்ஸ்அப் தகவலை காண்பித்தார்.
'இது எனக்கும் வந்ததுங்க, பிள்ளையார் பால் குடிச்ச கதையோட லேட்டஸ்ட் வெர்ஷன் தாங்க இந்த வாட்ஸ்அப் புரளில்லாம்'என்று சுற்றிலும் நின்ற அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களை கம்பீரமாக பார்த்தவாறு கூறினேன்.
'என்னப்பா புரளிங்குற?! அமெரிக்காவிலேருந்து நாசா விஞ்ஞானிகளே சொல்லியிருக்காங்க! நம்மாளுங்கன்னா கூட நான் நம்பியிருக்க மாட்டேன்' என்றவாறு 'நாசா' என்கிற வார்த்தையை  பெரிதாக்கி என்னை ஏளனமாக பார்த்துக்கொண்டே காண்பித்தார்.
'விளாங்குடி இறங்கு..' நடத்துனரின் குரல் எங்கள் விவாதத்தை கலைத்தது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் கூட்டம் மொத்தமாக இறங்கியது. மீனாட்சிராமசாமி கல்லூரி மாணவர்கள் மீதமிருந்தனர். விளாங்குடியில் எம்பள்ளி மாணவர்கள் ஏறி எனக்கு வணக்கம் கூறியவாறு நெருக்கியடித்து நின்றுகொண்டனர்.
'இல்லங்க நாசா பேரைப் பயன்படுத்தி வர பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான், ஏற்கனவே நடனமாடும் நடராஜரின் ஊன்றியிருக்கும் காலில் தான் பூமியின் மையப்பகுதி உள்ளதுன்னு நாசாகாரங்க சொன்னதாக கெளப்பிவிட்டாய்ங்க, பிறகு ஆலங்குடி கோயில் அபரிமிதமான காந்த சக்தி உள்ளதாகவும் செயற்கை கோள்கள் எல்லாம் இந்த இடத்தை கடக்கும் போது செயலிழந்து போவதாகவும் ரீல் விட்டாய்ங்க'
'என்னசார் சொல்றீங்க அதுவும் புரளிதானா?!' என்றார் ஏமாற்றத்துடன். “ப்பா“ என்றது “சார் என்றாகிவிட்டது. காரணம் எனது மாணவர்களின் “குட்மார்னிங் சார்“.
“நாசா விஞ்ஞானிங்க ஏன் சார் பொய் சொல்லப் போறாறங்க?”

“இந்த தகவல நாசா விஞ்ஞானிகள் தான் சொன்னாங்கன்னு எப்படி உறுதியாக நம்புறீங்க? சிவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு காமெடி வருமே அது மாதிரி வாட்ஸ்அப் ல வரது பொய்யா இருக்காது என்று ஒரு கூட்டமே நம்பிகிட்டு இருக்கு”

”இந்த தகவல் பொய்ன்னு நீங்க எப்படி சொல்றீங்க சார்?“

” தோ ஒரு நிமிஷம் இருங்க” என்றவாறு எனது ப்ரவுசரில் நாசா இணையதளத்தை தட்டினேன். படங்களும் ஆங்கிலமுமாக விரிந்தது. அதை அவரிடம் காண்பித்தேன். “இங்க பாருங்க சார், நீங்க சொன்னது அதிமுக்கியம் வாய்ந்த தகவல் தானே, ஆனால் அவுங்க “வெப்சைட்ல“ காணோமே!“
 “எனக்கு அந்த அளவு ஆங்கிலம் எல்லாம் தெரியாது. ஆனாலும் நீங்க இவ்வளவுதூரம் ஆதாரம் எல்லாம் காண்பிக்கிறீங்க அதனால நீங்க சொல்றத நம்புறேன் சார். இந்த பயலுவ ஏன் இந்த மாதிரி செய்திலாம் போட்டு பீதியை கிளப்புறாங்க?“ என்றவாறு பம்மினார்.

“இன்னும் நீங்க நம்பலன்னா இதையும் கேளுங்க, புவி 6 நாட்களுக்கு இருளாக வேண்டுமானால்,

சூரியன் அணைந்து விட வேண்டும். ஆனால் அது நடக்க சாத்தியமே இல்லை.

அல்லது புவி தன் சுழற்சியை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக பஸ் சடன் பிரேக் போட்டாலே மண்டை மோதிக் கொண்டு பற்களை உடைத்துக் கொள்கிறோம். பஸ்ஸை விட பல நூறு மடங்கு வேகத்தில் சுற்றும் புவி நின்றால் நாமெல்லாம் விண்வெளியில் வீசி எரியப்படுவோம். பௌதிக விதிகளின் படி அதுவும் சாத்தியமில்லை.
சூரிய கிரகணம் என்றால் கூட சில நொடிகள் தான் சூரியன் மறைக்கப்படும். பிறகு “வைரமோதிரம்” போட்டுக் கொண்டு ஜோராக வெளியே வந்து விடும். சூரியனை மறைக்கும் நிலா சூரியனை மறைத்தவாறே ஆறு நாட்களுக்கெல்லாம் நிற்கலாகாது. புவியின் துணைக்கோள் என்பதால் புவியின் காந்த சக்தியை கைப்பற்றி சுற்றி வரும் நிலா பிரேக் போட்டால் புவியின் மீது வந்து விழுந்து விடும் “ஸ்கைலேப்“ விழுந்த மாதிரி. மேலும் கெப்ளர் என்பவர் கூறிய விதிப்படி அதுவும் சாத்தியமில்லை.

புவி இருளடையும் அளவிற்கு மேகம் சூரியனை மறைத்ததே இல்லை. மேலும் மொத்த புவியையும் மேகம் போர்வையாய் போர்த்த வாய்ப்பில்லை”
என்று மூச்சு வாங்கியபடி முடித்தி தண்ணீர் பாட்டிலை எடுத்தேன்.

“சார் என்ன பேச்சு சுவாரசியத்தில நாச்சியார் பேட்டையை விட்டுட்டிங்களே!, பாருங்க மணகெதியே வரப்போகுது, ஏந்திரிங்க”
“ஐயயோ, வழி விடுங்கப்பா, நவுருங்கப்பா...” என்றவாறே அந்த பெரியவர் வாசற்படியை நோக்கி சென்றார்.
அவருக்கு புரிந்த்தோ இல்லையோ சுற்றிலும் நின்ற பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு புரியவைப்பதே நோக்கம்.

Tuesday, December 4, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம்-5 வாட்சாப்-1




“என்னய்யா நினைச்சு கிட்டு இருக்கீரு நீரு, எங்களுக்கு என்ன வாட்சாப் தெரியாதா. காலையில் எந்திரிச்சி வாய் கொப்பளிக்கறது கூட வாட்சாப் பாத்த பின்னாடிதான். எங்க கிட்டயே வாட்சாப் பத்தி சொல்லப் போறீரோ!!” என்று நீங்கள் கோபப்படக்கூடும். இருந்தாலும் வாட்சாப் ல் உள்ள அனைத்து வசதிகளும் நமது பயன்பாட்டில் உள்ளதா? அனேகமாக இல்லை. நாம பாட்டுக்கு மெசேஜ் பாக்குறது பார்வேர்ட் செய்யறது என்றுதான் இருக்கிறோம். புதிதாக மெசேஜ் டைப் பண்ணக் கூட சிலருக்கு தயக்கம். சரி அது என்ன என்ன புது வசதிகள் என்று பார்ப்போம்.

கணினியில் வாட்சாப் பார்க்கலாம் தெரியுமா?

ஆமாம் வாட்சாப் மொபைலில் மட்டுமே பார்த்து பழகியிருப்போம். ஆனால் கணினியிலும் பார்க்கலாம். செய்திகளை டைப் செய்து அனுப்பலாம் பகிரலாம். எல்லாமே செய்யலாம்.
முதலில் கூகுள் க்ரோமிலோ அல்லது வேறு ஏதாவது இணைய உளாவியிலோ (தமிழ்ல(?!) பிரௌசர் ன்னும் சொல்லலாம்) web.whatsapp.com என்ற முகவரிக்கு சென்றால் QR code உடன் ஒரு பக்கம் ஓப்பன் ஆகும். அதில் உங்கள் வாட்சப் இணைப்பை இணைக்க வாட்சப் ஐ திறந்து வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டால் மூன்றாவதாக whatsap web இருக்கும். அதை தொட்டால் QR Scanner (camera) திறக்கும். அதை வைத்து கணினி திரையில் தெரியும் QR code ஐ ஸ்கேன் செய்தால் வாட்சாப் கணினியோடு இணைந்து விடும். அதற்கான தகவல் உங்கள் மொபைலில் தெரியும். நீங்க எப்போ வேண்டுமானாலும் மொபைலில் இருந்தே லாக் அவுட் செய்து வெளியேற இயலும். கணினியில் இணைந்த பின்பு நீங்க மொபைலில் என்னவெல்லாம் செய்தீர்களோ அதையெல்லாம் கணினியில் இருந்தே செய்ய இயலும்.

வாட்சாப் செய்தி ஒளிபரப்பு


நீங்க குரூப்ல எதாவது சொன்னாக்கா (அதுவும் பேமிலி குரூப்பிலோ அல்லது கல்லூரி நண்பர்கள் குரூப்பிலோ) கொஞ்சம் கேப் கெடைச்சாலும் கலாய்ச்சு தள்ளிடுவாங்க. அப்புறம் வாதம் எதிர் வாதம் என வீணாக கால விரயம். அதுவே ஒரே நேரத்தில ஒரு குரூப் ஆஃப் மக்களுக்கு செய்திகளை சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியில் பட சிட்டா பறந்து போக வழி இருக்கா. இருக்கு. அது தான் வாட்சாப் செய்தி ஒளிபரப்பு.(Broad cast)
இதுக்கு முதல்ல வாட்சாப் குரூப் ஆரம்பிக்கிற மாதிரியே ஆள்புடிக்கணும். செய்தியின் தன்மையை பொறுத்து யார்யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டியிருக்குமோ அவர்களை எல்லாம் ஒரு பட்டியில் அடைக்க வேண்டும். அப்புறம் உள்ளே போய் வலது மேல் மூலையில் உள்ள 3 புள்ளிகளை தொட்டால் broad cast list info என்று இருக்கும். அதில் போய் குரூப்புக்கு பெயர் சூட்டு விழா நடத்தி விட வேண்டியது தான். நாள பின்ன எந்த குரூப்புக்கு எந்த சேதிய ஒளி ஒலி பரப்ப வேணும்னு தெரியவேணாமா?
அப்புறம் அந்த பட்டிக்குள்ள போய் எதுனா சொன்னிங்கண்ணா போதும் ஒன்லி அவுட் கோயிங்தான் நோ இன்கமிங்.
அலுவல் ரீதியாக செய்திகளை பகிர்வதற்கு இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இயலும். சேட்டுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.
அதில் சேதி பொது வெளியில் பகிரங்கமாக இருக்கும். ஒவ்வொருவரின் பதிலும் கூட ரகசியத் தன்மை இன்றி பொதுவில் தான் இருக்கும்.
Broadcast ல் செய்தியை சொன்னது நீங்கதான் என்று தெரியும். ஒவ்வொருவரும் கூறும் பதிலும் உங்களுக்கு தனித் தனியே வரும். அந்த லிஸ்ட் இருப்பதோ அல்லது அதன் உறுப்பினர்களோ பெறுநர்களுக்கு தெரியாது.
ஐந்து வரிகள் சேர்ந்தாற்போல் இருந்தாலே நமக்கு கண்ண கட்டும். இத்தனை வரிகளை வாசிப்பது சலிப்படையவே செய்யும். அதனால் வாட்சாப் பற்றி மேலும் சில வசதிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Sunday, December 2, 2018

பேட் ஜீனியஸ் – மோசமான அதிபுத்திசாலி கொரியன் பட விமர்சனம்.


பேட் ஜீனியஸ் – மோசமான அதிபுத்திசாலி கொரியன் பட விமர்சனம்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் பரிட்சை நடக்கும் போதெல்லாம் பிட் அடிக்கும் மாணவர்களை பிடிப்பதற்காக அறைகளை சுற்றி சுற்றி வருவோம் நானும் நண்பரும் அறிவியல் ஆசிரியருமான பன்னீர் செல்வம் சாரும். அப்போது நடந்த ருசிகரமான சம்பவம் ஒன்று.
     அறையில் உள்ளே நுழைந்த போது ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் பேப்பரை புரட்டி அடியில் ஏதோ பார்ப்பதும் பின்னர் சுற்றும் முற்றும் பார்ப்பதுமாக இருந்தான். அவன் பிட்அடித்து எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க சிபிஐ வரவேண்டியதில்லை. போய் கொத்தாக அள்ளினோம். திடீரென ஒரு ஐடியா உதித்தது. இவனையே தூண்டிலாக வைத்து மற்ற யாரேனும் சிக்கினால் பிடிக்கலாமே என்று அவனிடம் ஒரு டீல் பேசினோம். “உங்க கிளாஸ் பசங்க வேற யாரெல்லாம் எந்தெந்த அறைகளில் பிட் அடிக்கிறார்கள் என்று சொன்னால் உன்னை விட்டுவிடுவோம் இல்லன்னா நீ ஏழாவதுல பெயில்தான்” என்றோம். இந்த டீலிங் அவனுக்கு பிடித்து போனதால் மலமலவென மற்றவர்களை காட்டிக் கொடுத்தான். அவன் பக்கத்து வீட்டில் இருந்து வரும் ஒன்பதாம் வகுப்பு அண்ணனை கூட அவன் காட்டிக் கொடுக்க தயங்க வில்லை.
     அடுத்த அறையில் நேரே சென்று ஒரு குறிப்பிட்ட மாணவனை எழுப்பி பேண்டை மேலே தூக்கினோம். முழங்காலுக்கு கீழே ரப்பர் பேண்ட் போட்டு சுற்றிலும் மடிக்கப் பட்ட பிட் காகிதங்களை சொருகி இருந்தான். ஆனாலும் நாங்க எப்படி சரியாக மடக்கினோம் என புரியாமல் விழித்தான்.
     இப்போது பள்ளிகளில் மோசமான அதிபுத்திசாலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்த படத்தில் ”லின்” என்கிற நடுத்தர குடும்ப மாணவி பணக்கார பள்ளியில் பயில உதவித் தொகை மூலமா வாய்ப்பு பெறுகிறாள். அவளது தோழி “பேட்“. அவள் படிப்பில் மக்கு. அவளுக்கு ஒரு முக்கியமான தேர்வில் இவள் தனது அழி ரப்பரில் விடைக்கான ஆப்ஷன்களை “ஏ, பி, சி” என எழுதித் தருகிறாள். அது அவள் நல்ல கிரேட் பெற உதவுகிறது. இது அவளது தோழர்களுக்கு தெரியவருகிறது. இந்த விடை காண்பிக்கும் வேலையை தொழில் முறையில் மேம்படுத்தி சம்பாதிக்கிறாள். வாழ்க்கை ஜோராக போகிறது. “பாங்க்“ என்னும் மற்றொரு புத்திசாலித்தனமும் சமரசம் இல்லா நேர்மையும் கொண்ட மாணவன் வரும் வரை. அவன் இவளது டகால்டி வேலைகளை பிரின்சிபல் இடம் போட்டுக் கொடுத்து விடுகிறான். இவளது ஸ்காலர்ஷிப் பரிபோவதோடல்லாமல் வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போகிறது.
     இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வான  STC உலகளாவிய அளவில் ஒரே நாளில் நடக்க இருக்கிறது. அதில் “பேட்“ தேர்வாகி அவளது பாய்பிரெண்டுடன் வெளிநாட்டுக்கு படிக்க செல்ல வேண்டிய அதிமுக்கிய வாய்ப்பு உள்ளது. அதனால் அவள் “லின்னை“ நாடுகிறாள். அப்போது லின்னுக்கு பொறி தட்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பெரிய தொகை பார்த்து விடலாம் என ஒரு ஐடியா செய்கிறாள். அதற்கு “பாங்கும்“ இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். அவனையும் அடித்து மிரட்டி கெஞ்சி பணிய வைக்கிறார்கள். லின்னும் பாங்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தேர்வு எழுதுகிறார்கள். அப்போது கொரியாவில் நேரம் காலை 7 என்பதால் இந்த டைம் ஜோன் வித்தியாசத்தில் அவர்கள் பாதிப்பாதி விடைகளை மனப்பாடம் செய்து இடைவேளையில் கழிவரையில் ஒளித்து வைத்திருக்கும் மொபைல் வழியாக வாட்சப் குருப்பில் போடுகிறார்கள். அதை நம்பி கொரியாவில் ஒரு முப்பது பேர் மில்லியன் கணக்கில் அவர்களுக்கு பணம் போட்டுவிட்டு காத்திருக்கிறார்கள். நேர்மையின் சிகரமான பாங்க் பாதி விடையில் மற்றொரு மில்லியன் டிமாண்ட் செய்கிறான் வேறு வழியின்றி தரப்படுகிறது.
அடுத்த இடைவேளையில் விடை அனுப்பும் போது அதிக நேரம் கழிவரையில் இருப்பதால் சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்பட்டு மாட்டிக் கொள்கிறான். லின்னும் மாட்டி ஆதாரங்கள் இல்லாததால் தப்பி கொரியா வந்து சேர்கிறாள். மனம் வருந்தி திருந்தி ஆசிரியர் வேலைக்கான படிப்பில் சேர்கிறாள். அப்போது கால் வருகிறது. பாங்க் அழைக்கிறான். போனால் அவர்களது லாண்டரி கடையை பெரிய அளவில் டெவலப் செய்து இருக்கிறான். அடுத்து வரும் மற்றொரு எக்சாமுக்கு இந்த வேலையை செய்ய வற்புறுத்துகிறான். மறுத்ததும் மிரட்டுகிறான். இவள் வேறு வழியின்றி ஓப்புதல் வாக்குமூலம் தர அமர்கிறாள். என்பதோடு முடிகிறது.
ஆரம்பத்தில் நேர்மையாக இருக்கும் லின் சற்றே பணத்தால் சபலப்பாட்டு படிப்படியாக தவறுகளை செய்கிறாள். உச்சத்தில் வருந்தி திருந்துகிறாள். விடாப்பிடியாக நேர்மையாக இருந்த பாங்க் வற்புறுத்தி தவறான பாதையில் இழுத்து விடப்படுகிறான். பின்பு அதை அவன் ஒரு தொழில் வாய்ப்பாக பார்க்கிறான். திருந்த மறுக்கிறான்.
     படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக இருந்தாலும் அடுத்தடுத்த தேர்வுகள் இவர்களின் காப்பி அடிக்கும் யுத்திகள் என பரபரவென்று நகர்கிறது. அதுவும் அந்த சிட்னி தேர்வறை காட்சிகள் பரபரப்பின் உச்சம். அவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்ற நம் மனம் பதட்டம் அடையும் போது நம்மை அறியாமலேயே நாமும் அநீதிக்கு துணைபோகிறோம். திரைக்கதை எனும் வெள்ளம் அதன் போக்குக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
காப்பியடிக்கும் காட்சிகளின் கேமரா கோணங்கள் அருமை. ஒளிப்பதிவு கனக்கச்சிதம் கண்ணுக்கு குளுமை.
காப்பியடிப்பதை வைத்து ஒரு பரபர சினிமா என்பது மிக வித்தியாசமான அனுபவம். பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும். கடைசியாக ஒன்று அந்த லின்னின் தோழியாக வரும் “பேட்“ கதாநாயகியை விட அழகு. பேசும் விழிகள்.

Saturday, December 1, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம் – 4 கூகுள் டிரைவ்



பதட்டம் வேண்டாம் உங்க கிட்ட டிரைவிங் லைசன்ஸ் இல்லேன்னா கூட கூகுள் டிரைவ் பயன்படுத்தலாம்.
இதுக்கு அப்ளிகேஷன் லிங்க் எல்லாம் இணைக்கவில்லை. ஏன்னா ஆண்ட்ராய்ட் போன் வாங்கினாலே இதெல்லாம் டீஃபால்ட்டா வந்துடும். அதனால இது உங்க போனில் ஏற்கனவே இருக்கு என்று அறிக.
ஆமாம் அந்த வெள்ளை, பச்சை, ஊதா முக்கோணம் தான் கூகுள் டிரைவ். ஆமாம் இது எதுக்கு?
பேங்க்ல அக்கௌண்ட் ஆரம்பிச்சாக்க நாமதான் அதுல பணம் போட்டு வைக்கணும். ஆனால் கூகுள்ள இ-மெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சா உடனடியா பத்து சென்ட் எடத்த நம்ம பேர்ல பட்டா போட்டு கொடுத்துடறான்.
என்னாது?
ஆமாம்பா, ஆமாம் டிஜிட்டல் உலகத்துல நமக்குன்னு பத்து ஜிபி எடத்த பட்டா போட்டு எதவேன்னா போட்டு வச்சிக்கோ அதோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. நீ எப்போ கேட்டாலும் எங்கேருந்து கேட்டாலும் தருவேன் என்று நமக்கு இதயத்துல கூட இடங்கொடுக்காதவங்க மத்தியில இணைய உலகத்துல பத்து ஜி-பி இடத்தை கூகுள் தர்ரான்.
சரி அத எப்படி பயன்படுத்துறது?
அந்த மூவர்ண முக்கோணத்த அமுக்கினீங்கன்னா உங்க பத்து சென்ட் எடம் திறக்கும். அதுல ஏற்கனவே எதாவது போட்டு வச்சிருந்திங்கன்னா காமிக்கும்.
இடது கீழ் மூலையில் ஊதாகலர்ல வட்டத்துக்குள் கூட்டல் குறி ஒண்ணு இருக்கும். அத அழுத்துனீங்கன்னா Folder(கோப்புரை), Upload(பதிவேற்றுக), Scan என்று மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். அதற்கு கீழே மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும் கழுத கிடக்கட்டும் விடுங்க. அத பத்தி நீங்களே பின்னாடி தெரிஞ்சுக்குவீங்க.
முதல்ல கோப்புரை –Folder
உங்க பத்து ஜிபி எடத்துல கோப்புகளை போட்டு வைக்க ஒரு பெட்டி வேண்டும் அல்லவா அது தான் இது. நம்மிடம் பல விதமான கோப்புகள் இருக்கலாம். உதாரணமாக Mark sheets, Degree, Driving licence, voter ID, Aadhar ID என அனைத்தையும் ஸ்கேன் செய்து Certificates என்கிற கோப்புரையில் போட்டு வைக்கலாம். இது போல நீங்கள் சேமிக்க நினைக்கும் கோப்புகளை ரக வாரியாக கோப்புரைக்குள் இட்டு வைத்தால் பின்னால் தேடி எடுப்பது எளிது அதனால் தான் முதலில் நம் பயன் படுத்துவதற்கு ஏற்றவாறு பலதரப்பட்ட கோப்புரைகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டோம் என்றால் கோப்புகளை பதிவேற்றும் போது உரிய கோப்புரைக்குள் இட்டு வைக்கலாம்.
பதிவேற்றுக Upload
இந்த Upload பட்டனை அமுக்கினால் உங்கள் போனில் இருக்கும் சமீபத்திய டாக்குமெண்ட் எல்லாம் திரையில் தோன்றும். இடது மேல் மூலையில் உள்ள பட்டை நாமத்தை தொட்டால் இடப்புறத்தில் உள்ள அந்தப்புரம் ஒன்று வெளியே வரும். அதில் உங்க போனில் உள்ள டாக்குமெண்டின் ரகங்கள்(images, videos, documents, mp3) என்று காண்பிக்கும். அதில் எது வேண்டுமோ சென்று தேர்வு செய்து பதிவேற்றலாம். உங்க போனுடைய டிரைவ், அல்லது மெமரி கார்டும் கூட காண்பிக்கும். வேண்டுமானால் அதில் உள்ளே நுழைந்து துழாவி எடுத்து அப்லோட் செய்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு பதிவேற்றும் முன்பாக எந்த கோப்புரையில் பதிவேற்றி வைக்க வேண்டுமோ அந்த கோப்புரையை டிரைவில் சென்று திறந்து வைத்துக் கொண்டு அப்லோட் ஆப்ஷனை அழுத்த வேண்டும். பின்பு மேற்கூறிய வண்ணம் அப்லோட் செய்ய வேண்டும்.
ஸ்கேன்
மேற்சொன்ன அப்லோட் பயன்படுத்திய அதே மாதிரி செய்ய வேண்டும். ஆனால் இங்கு கேமரா ஓப்பன் ஆகும். எதை ஸ்கேன் செய்ய வேண்டுமோ அதை போட்டோ எடுத்தால் போதுமானது.
ஒவ்வொரு கோப்புரைக்கும் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொட்டோம் என்றால் அந்த கோப்புரையில் Add people என்கிற ஆப்ஷன் மூலம் பல இ-மெயில் முகவரிகளை கொடுத்து யாரோடு வேண்டுமானாலும் பகிரலாம். பகிரவேண்டிய தகவல்களை இவ்வாறு ஒரு கோப்புரைக்குள் இட்டு ஆட் பீப்பில் ஆப்ஷன் மூலம் பகிரலாம். Copy link மூலமாக முகவரியை காப்பி செய்து தேவைப்படுவோருக்கு வாட்சப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்ப இயலும்.
மற்றவைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி கற்றுக் கொள்ளலாம்.
நம்முடைய கோப்புகள் அனைத்தும் கூகுள் கம்பெனியின் சர்வரில் பத்திரமாக இருக்கும். அதனால் கவலை வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய இணைப்பைக் கொண்டு உங்கள் மெயில் முகவரி மூலமாக உள்ளே நுழைந்து எடுத்துக் கொண்டு வந்து விடலாம்.

Wednesday, November 28, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம் – 3

Today's topic CamScanner
இந்த அப்ளிகேஷன் வேண்டுவோர் இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்


அப்ளிகேஷன் அறிவோம் – 3
எப்போதுமே டாக்குமெண்ட்ஸை போட்டோ எடுத்தே எல்லோருக்கும் வாட்சப் அல்லது மெயிலில் அனுப்பி பழக்கப்பட்டு இருக்கும் நண்பர்களுக்காகத் தான் இந்த பதிவு.
CAM SCANNER  என்கிற அப்ளிகேஷன் பற்றித் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
CS  என்கிற எழுத்துக்களையே லோகோவாகப் பெற்றிருக்கும் ஒரு எளிய ஆனால் பயனுள்ள அப்ளிகேஷன் தான் இது.
இப்போ ஸ்காலர்ஷிப் அப்லோட், TNPSC ஆன்லைன் விண்ணப்பம் , ஜாதிச் சான்று விண்ணப்பம் என பலதரப்பட்ட வேலைகளுக்கு ஸ்கேனர் இல்லாமல் கடன் வாங்கியோ அல்லது கடைகளில் காசுகொடுத்தோ இந்த வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
இந்த கேம் ஸ்கேன்னர் அப்ளிகேஷன் டாக்குமெண்ட் ஸ்கேனிங்க்கு மிகவும் பயனுள்ளது. உங்களுக்குக ஃபோட்டோஷாப் பயன்படுத்திய பழக்கம் இருந்தால் மேனுவலாக உங்கள் ஸ்கேனிங்கை மேம்படுத்தி “டச் அப்“ செய்யலாம். இல்லையெனில் அதிலேயே இருக்கும் ஆட்டோ மோடை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெகு கச்சிதமாக தேவையற்றதை வெட்டியெறிந்து கோணங்களை சீர் செய்து அட்டகாசமாக தருகிறது.
படத்தை நீங்கள் Jpg file or PDF file ஆக சேமிக்கவோ அல்லது பகிறவோ செய்யலாம்.
ஏன் உங்கள் பழைய முக்கியமான சான்றிதழ்களையெல்லாம் ஸ்கேன் செய்து Google drive ல் அப்லோட் செய்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் எடுத்து கையாளலாம்.
அப்புறம் இன்னொரு ஐடியா உங்க கல்யாண ஆல்பம் அல்லது இன்ன பிற முக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை ஸ்கேன் செய்து ஒரே PDF file ஆக சேமித்து மின் புத்தகம் போல் வைத்துக் கொள்ளலாம் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து மகிழலாம்.
இதில் ஒரு கோப்பின் கீழ் எத்தனை ஸ்கேன் செய்தாலும் அது ஒரே கோப்பாகத் தான் சேமிக்கப்படும். அதில் நாள் நேரம் போன்றவை தனித்தனியே கோட் செய்யப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் ஒற்றை கோப்பு போலவே கையாளலாம்.
நீங்கள் ஏற்கனவே கேமரா வாயிலாக போட்டோ எடுத்த டாக்குமெண்ட் களையும் இங்கே import from gallery  தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ள இயலும்.
உங்களிடம் pdf file ஆக உள்ள கோப்புகளைக் கூட JPG format க்கு மாற்றி தரவிறக்கி மேம்படுத்திய படங்களாக மாற்றிக் கொள்ள இயலும்.
security and backup  என்கிற பட்டனை செட்டிங்ஸ் ல் சென்று அழுத்தி அதிமுக்கிய ரகசிய கோப்புகளுக்கு பாஸ்வேர்ட் செட் செய்து கொள்ளலாம்.
அலுவலகப் பயன்பாட்டிற்கென மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன் இதுவாகும்.
இது சார்ந்த உங்கள் விமர்சனங்களை மறக்காமல் கமெண்ட் பாக்ஸ் ல் பதிவிடுங்கள்.


Monday, November 26, 2018

மொபைல் அப்ளிகேஷன் அறிவோம்-2


மொபைல் போனில் word documents, excel sheets and pdf documents படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு அல்லவா? அதற்கென பரவலாக பயன்படுத்தப் படும் ஒரு அப்ளிகேஷன் பற்றித் தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப்  போகிறோம்.
WPS OFFICE இதுதான் அனேகமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் office file க்கான அப்ளிகேஷன் என நினைக்கிறேன்.
முதலில் word document க்கு வருவோம். நாம் மெயிலில் உள்ள டாக்குமெண்டை அழுத்தியவுடனேயே WPSக்கு வந்துவிடுவோம். டாக்குமெண்டை படித்துவிடுவோம் வேலை முடிந்தது. ஆனால் இதில் என்ன என்ன features இருக்கிறது என தெரிந்து கொள்வோமா?
*Mobile view இந்த option ஐ அழுத்தினால் எழுத்துக்கள் நன்கு பெரிதாக தெளிவாக தெரியும். ஒரு மைனஸ் என்னவென்றால் அலைன்மெண்ட் மாறிப் போய்விடும். நிறைய வச வச என்று எழுதப்பட்டிருக்கும் டாக்குமெண்டை கண்களை உறுத்தாமல் படிக்க mobile view தான் சிறந்தது.
Tools உள்ளே சென்றால் EXPORT PDF என்று இருக்கும். இந்த ஆப்ஷனை அழுத்தினால் உங்கள் வேர்ட் ஃபைலை பிடிஎஃப் டாக்குமெண்டாக மாற்றிக் கொள்ள இயலும்.   
அதன் கீழே ஷேரிங் ஆப்ஷன் இருக்கும். அதை அழுத்தி அந்த ஃபைலை Whatsapp, Email or even blue tooth வழியாக கூட பகிரலாம்.
அடுத்ததாக View option உள்ளே நுழைந்தால் ஒரு விண்டோவில் கோடும் அருகே  go to என்றும் இருக்கும். அதாவது பெரிய (நூற்றுக் கணக்கான பக்கங்கள் உள்ள ஃபைல்) டாக்குமெண்ட் களில் குறிப்பிட்ட பக்கத்திற்கு scroll செய்து செல்ல இயலும்.
Find என்று ஒரு லென்ஸ் தெரியும் இந்த ஆப்ஷனைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வார்த்தை அந்த டாக்குமெண்டில் உள்ளதா என்று தேடிப் பார்க்க இயலும்.
Use volume button to flip இந்த ஆப்ஷனை எனேபில் செய்தால் டாக்குமெண்டில் மேலே கீழே நகர Volume button பயன்படுத்த இயலும்.
Night mode ல் வைத்துக் கொண்டோமானால் எழுத்துக்கள் வெள்ளையாகவும் பின்னணி கருப்பாகவும் தெரியும்.
இன்னுமொரு கூடுதல் தகவல் நாம் டாக்குமெண்டை படமாக கூட ஷேர் செய்யலாம். அதற்கென picture sharing என்கிற ஆப்ஷன் உள்ளது. (வாட்சப்ல் பகிரும் போது அப்படியே படித்துக் கொள்ள இது தான் வசதி. office அப்ளிகேஷன் இல்லாதவர்கள் படிக்க இதுபோல் அனுப்பிக் கொள்ளலாம்.)
EXCEL SHEETS ல் என்னதான் ஆப்ஷன்கள் இருந்தாலும் அதை கணினி அல்லது மடிக்கணினியில் கையாலுவது தான் எளிது என்பது எனது கருத்து. இதில் goto, find and filtering like ascending and descending வழங்கப்பட்டுள்ளது.
இவையல்லாமல் இன்னும் பல வசதிகள் தந்துள்ளார்கள். அவையாவும் பயன் படுத்த நாம் Premium பயனர் ஆக இருக்க வேண்டும். அதற்கு பணம் கட்ட வேண்டும்.
ஒருவேளை இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இல்லை என்றால் இங்கே க்ளிக் செய்யவும்

Wednesday, November 21, 2018

விடைத்தாள் திருத்தும் முகாம் சில நினைவலைகள்


2002ல் வேலைகிடைத்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் அரியலூர் முகாமுக்கு முதன் முதலில் சென்றேன். பேப்பர் திருத்தும் பணி ஒன்றும் அவ்வளவு சிரமமான வேலை அல்ல. அப்போதெல்லாம் வழங்கப் படும் விடைத்தாள் கட்டுகளை திருத்தி அந்த கட்டுக்குறிய மதிப்பெண் பட்டியலை பிழையின்றி தயார் செய்து வழங்க வேண்டும். சிறு பிழை இருந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து போடவேண்டும். அது தான் சிம்ம சொப்பனம். இதற்காகவே வயதான ஆசிரியர்கள் என்னைப் போன்ற இளைஞர்களைவடை பஜ்ஜிஎல்லாம் போட்டு வளர்ப்பார்கள்.
அப்படியும் ஒரு முறை சீஃப் , “தம்பி நம்பர் எல்லாம் ஒரே சைஸ்ல எழுதுப்பாஎன்றார். நானும் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை கண்ணில் விட்டுக் கொண்டு கண்ணும் கருத்துமாக எழுதினேன். மறுபடியும் சீஃப், ”என்னப்பா ரொம்ப பொடியா எழுதியிருக்க கம்ப்யுட்டர்ல டைப் பண்றவங்களுக்கு தெரிய வேணாமா? மேலும் நேராவே இல்லையே இவ்வளவு கோணலா இருக்குஎன்று கடிந்து கொண்டார் நானோ பொங்கி வந்த எரிச்சலை பற்களை கடித்து அடக்கிக் கொண்டேன்.
ஒரு வழியாக அன்று மதிப்பெண் பட்டியலை போட்டு முடித்து விட்டேன். அடுத்தநாள் மறுபடியும் ஒரு பிரச்சனை. “தம்பி எட்டுல இருக்கிற ரெண்டு ரவுண்டும் சம அளவில் இல்லப்பா, கொஞ்சம் பாத்து சரியா போடுஎன்றார் லைசன்ஸ் வாங்க போட்டப்ப கூட எனக்கு எட்டு போடுவது அவ்வளவு சிரமமாக இல்லை. அவர் அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்கு அப்புறம் எட்டு போடும் போதெல்லாம் எனக்கு ஏற்பட்ட கை நடுக்கம் இன்றளவிலும் நின்ற பாடில்லை. இந்த சம்பவம் நடந்த அன்று மதியம் இன்னும் பெரிய சோதனையாக எனக்கு வந்த பேப்பர் கட்டில் தேர்வு எண்கள் 880ல் ஆரம்பித்து 900 ல் முடியும் வகையில் இருந்தது. ஒரு ஐந்து மதிப்பெண் பட்டியல்களை வீணடித்து விட்டு ஆறாவது முறையாக போய் கேட்ட போது சீஃப் என்னை பார்த்த பார்வை இருக்கே ஒரு பச்சை வாழை மரம் இருந்தால் கூட பக்குன்னு பத்தி எரிஞ்சிருக்கும் அப்படி ஒரு நெருப்பு பார்வை. இதுக்கு மேலகஜினி முகமதுமுயற்சி எல்லாம் சரிபட்டு வராது என்று வாடகைக்கு ஆள் அமர்த்தி வேலையை கனகச்சிதமாக முடித்தேன்.
அந்த காலகட்டத்தில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர் எவரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு எண் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததையும் பல மதிப்பெண் பட்டியல்களை தவறாக எழுதி வீணடித்த கதைகளையும் கூறுவார்கள். இப்போ அப்படி இல்லை. ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னாசிஸ்டம் மாறிடிச்சு”.
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் அடுத்த குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்கேண்டீன்”. வடை, பஜ்ஜி, போண்டா, டீ, காபி என வைத்துக் கொண்டு மாலை வரை வியாபாரம் செய்வார்கள். விடைத்தாள் திருத்திய காசை எல்லாம் வடை சாப்பிட்டே ஒழித்துக் கட்டிய வெகு சிலரில் நான் முதல் இடத்தில் இருந்தேன் என்று பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
கேண்டீனில் தனியாக போய் சப்பிட கூச்சப் படுவோர் உண்டல்லவா? அந்த மாதிரி இருக்கும் நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் கம்பெனிக்காக மிகுந்த நம்பிக்கையோடு அனுகுவது என்னைத்தான். இந்த மாதிரி காரியங்களுக்கெல்லாம் நான் கிஞ்சிற்றும் மறுப்பு கூறியது கிடையாது.
நண்பர்களோடு வந்து நல்ல பார்ட்னர்ஷிப் ஃபார்ம் பண்ணி சும்மா அடித்து நொறுக்குவதால் என்னை கேண்டீன் காரர் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் பார்ப்பார். என்னைவிட மற்றொரு வயதான ஆசிரியரை இன்னும் மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டு இருந்தார். காரணம் அவர் சிங்கிள் மேனாக வந்து எங்கள் பார்ட்னர்ஷிப்பையே முறியடிக்கும் வகையில் அடித்து நொறுக்குவார். நான்கு பேப்பருக்கு ஒரு முறை கேண்டீன் வருவார். 20 பேப்பருக்கு ஐந்து முறை வருவார். ஐந்து முறையும் இரண்டு வடை அல்லது பஜ்ஜியை எடுத்து இரண்டே அமுக்கில் உள்ளே தள்ளி தண்ணி விட்டு முடித்து விடுவார். நல்ல சத்தமான ஒரு ஏப்பத்திற்கு அப்புறமாக தேனீர் குடித்து திவ்யமாக முடித்துவிட்டு இடத்தை காலி செய்வார்.
அடுத்து விடைத்தாள் திருத்தும் போது நடக்கும் மற்றொரு சுவாரசியமான விஷயம் மாணவர்கள் மனமுருகி கடைசிப் பக்கத்தில் எழுதும் கோரிக்கை கெஞ்சல்கள் மற்றும் தற்கொலை மிரட்டல்கள்.
ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் பள்ளி நாட்களை வீணடிக்கும் போது வராத பயம் ஒன்றும் தயார் செய்யாமல் தேர்வறைக்குள் வந்து அமர்ந்த உடன் வந்து விடும். மற்ற மாணவர்கள் கஷ்டப் பட்டு உழைத்து எட்டும் தேர்ச்சியை இலகுவாக ஒரு கெஞ்சல் கடிதம் மூலமாக எட்டிவிட எண்ணுவார்கள்.
ஒரு கடிதம் இப்படித்தான் ஆரம்பித்தது, “சார் நான் எல்லா பாடங்களும் நன்றாக படிப்பேன், கணக்குப் பாடம் மட்டும்தான் வராது என்னை எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள்அநேகமாக எல்லா பாடங்களிலும் அந்த பாடம் தான் வராது என்று எழுதியிருப்பான் அந்தப் பயல்.
மற்றொரு முறை ஒரு கடிதம்,“அய்யா எனக்கு அப்பா கிடையாது. அம்மா கூலி வேலை. எங்கள் பள்ளியில் ஆசிரியர் கிடையாது. எனவே என்னை எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்கள். ஃபெயிலானால் தற்கொலை செய்து கொள்வேன். என் உயிரே உங்கள் கையில் தான் உள்ளது” என்கிற ரீதியில் போனது. மதிப்பெண்ணோ 14 தான். எங்களுடன் இருந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களோ மதிப்பெண் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டவே தொடங்கிவிட்டனர். உள்ளபடியே அந்த நிலையில் இருப்பவன் இந்த மாதிரியெல்லாம் மிரட்டல் விடமாட்டான். இயன்றவரை கடினமாக படித்து வந்திருப்பான். இவன் மதிப்பெண்ணுக்காக மோசடியாக கடிதம் புனைந்திருக்கிறான் என்று கூறி “கல்நெஞ்சக்காரன்” பட்டம் வாங்கிக் கொண்டேன்.
விடைத்தாள் திருத்துவது என்பது மிகவும் சுவாரசியமான அனுபவம் தான்.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...