Sunday, September 30, 2018

”பரியேறும் பெருமாள் பிஏ பிஎல் மேல ஒரு கோடு”


பின்னாடி வேகத்தோடு வரும் இரயில், தண்டவாளத்தில் துண்டால்  பிணைக்கப் பட்டிருக்கும்  கருப்பி என்கிற நாய், காப்பாற்ற ஓடிவரும் நாயகன் பரியன். இரயில் வந்து நாயை சிதைத்து சின்னாபின்னமாக்கி செல்கிறது. இப்படி முதல் காட்சியிலேயே இறந்து போகும் கருப்பி படம் நெடுக மட்டுமல்ல படம் பார்த்த பின்பும் மனதை விட்டு அகல மறுக்கிறாள். நாய் வளர்ப்போர் அந்த காட்சியில் கதறுவது நிச்சயம்.
தோழி அன்போடு அக்கா திருமணத்திற்கு கூப்பிடுகிறாள். பரியனை மட்டுமே கூப்பிடுகிறாள். ஆசையோடு சட்டை பேண்ட் ஓசி வாங்கி உடுத்திக் கொண்டு கையில் அன்பளிப்போடு போகிறான். அங்கே நைச்சியமாக பேசி ஒரு தனியறைக்குள் ஆனந்தியின் அப்பா அழைத்துச் செல்கிறார். பின்பு ஒரு நான்கைந்து பேர் திடுமென உள்ளே வந்து இவனை புரட்டி எடுக்கிறார்கள். முத்தாய்ப்பாக முகத்தில் மூத்திரம் பெய்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்றெல்லாம் எண்ணாதீர்கள், வாயில் மலம் கரைத்து ஊற்றப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது தான் இந்த தமிழ்நாடு.
“எல்லோராலயும் நெனச்சத நெனச்ச மாதிரி இங்கே பேசமுடியாது சார், நான் ஒரு தடவ பேச முயற்சி பண்ணப்பவே முகமெல்லாம் பேந்து போச்சு” என்று வலியோடு சொல்லும் பரியன்.
“நீங்க நீங்களாவே இருக்கிற வரைக்கும், நான் நாயாவே இருக்கணும்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்கே எதுவுமே மாறாது சார்” என்று இறுதியாக தீர்க்கமாக சொல்கிறான் பரியன்.
அப்பப்பா இந்த ஆங்கிலம் நம்ம பசங்கள இந்த பாடு படுத்துகிறதே. என்று தெளிவாக கூறுகிறார் இயக்குனர். இத்தோடு இந்தியும் திணித்து இருந்தா “ஆணியே புடுங்க வேண்டாம்” னுட்டு ஒரு பயலும் படிக்க போயிருக்க மாட்டான். இங்கே ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி அறிவாக பார்க்கப் படுகிறது என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
பேருந்து புறப்படுகிறது, அறுபது வயதுக்கு மேல் மதிக்கத் தக்க ஒருவர் ஓடி வந்து பேருந்தில் ஏற முனைகிறார். படியில் இருக்கும் இளைஞன் கைத் தூக்கி விட்டு அவரை காப்பாற்றி ஏற்றுகிறான். படியில் ஒற்றைக்கால் பிடிக்க ஒற்றைக் கை என தொங்கியபடி வரும் அந்த இளைஞனின் கையை வெடுக்கென்று இழுத்து விட்டு கீழே விழுந்து சாகும் படி செய்கிறார் அந்த முதியவர். அந்த களேபரத்தில் எல்லோரும் கீழே இறங்கி ஓடிவிட பேருந்துக்குள் ஒருத்தி கதறுகிறாள். இதற்கு மேல் ஒன்றுமில்லை எல்லாம் புரிந்து போனது. அந்த தாத்தா அதே டெக்னிக்கோடு பல சம்பவங்கள் செய்கிறார். அது ஆத்தாளுக்கு கொடுக்கும் பலி என்றே எண்ணி செய்வதாக வேறு கூறுகிறார். அவரை திரையில் காட்டும் போதெல்லாம் அடிவயிறு கலங்குகிறது. அவ்வளவு மிரட்டலான ஆனால் பார்க்க எளிமையான கதாப் பாத்திரம்.
பரியனின் தந்தை அனேகமாக எந்த சினிமாவிலும் கதாநாயகனின் தந்தையாக இப்படி ஒரு பாத்திரம் படைக் கப்பட்டது இல்லை. நடைமுறை வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற பாத்திரம் தான். ஆனால் அவர்தம் பின்னணி குறித்தெல்லாம் நாம் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். அந்த கதாப்பாத்திரம் குறித்த விஷயம் சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். திரையில் பார்த்து அதிருங்கள்.
கதாநாயகி ஆனந்தி “கயல்“ படத்திற்கு பின்பு இந்தப் படத்தில் தான் தேவதையாக தெரிகிறார். வெகுளித்தனமாக பேசும் கருணையுள்ளம் கொண்ட கல்லூரி மாணவியாக அருமையாக நடித்திருக்கிறார். அரசு மருத்துவமனைக்கு வெளியே பரியனோடு பேசும் அந்த ஒருக்காட்சி போதும்.

யோகி பாபுவுக்கு ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு படம் நெடுக வரும் நண்பன் பாத்திரம். உருவம் சார்ந்த பகடியேதும் இன்றி ஆரோக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடம். அருமையாக நடித்துள்ளார்.

“கருப்பி என் கருப்பி நகத்தடமே என் பாத…” அருமையான பாடல். அப்புறம் கதாநாயகன் தந்தையின் அறிமுகக் காட்சி பாடலான “எங்கும் புகழ் துவங்க …” என்கிற கிராமியப் பாடலை அப்படியே திருவிழாக்காலத்தில் தரையில் உட்கார்ந்து பார்த்த அதே மணத்தில் கொடுத்திருக்கிறார். படத்தின் நேட்டிவிட்டியின் நம்பகத்தன்மையை தூக்கிப் பிடிப்பதில் ஒளிப்பதிவோடு பின்னணி இசையும் இணைந்து நிற்கிறது. தாராளமாக டவுன்லோட் செய்யுங்கள். ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது.

அப்புறம் பரியனாக நடித்த கதிரை பற்றி சொல்லவே இல்லையே?!
அவர்தான் படம் முழுவதும் தெறிக்க விட்டுருக்காரே. அவரோட கெரியர் கிராஃப் சும்மா சர்ர்ருன்னு மேல போகப் போகுது பாருங்க.



Friday, September 28, 2018

இளம் பருவத்துத் தோழி- பால்யகால சகி(மலையாள நாவல்)



நூலகத்தில் புத்தகங்கள் எடுக்கும் போதெல்லாம் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றையோ அல்லது சிறுகதை தொகுப்பு ஒன்றையோ தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை மலையாள இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் எழுதிய பால்யகால சகி நாவலின் தமிழ் வடிவம் “இளம் பருவத்துத் தோழி” என்கிற பெயரில் சுரா அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.
மஜித் ,சுஹரா ஆகியோரின் இளம் பிராயத்தில் கதை தொடங்குகிறது. வசந்தபாலனின் வெயில் படத்து கதை போல ஒரு தோல்வியுற்றவனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை.
மஜித் சற்ற பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். படிப்பில் பின் தங்கி இருந்தாலும் கூட உயர்நிலைப் பள்ளி படிப்பிற்காக வெளியுர் சென்று படிக்கும் அளவு வசதி படைத்த இஸ்லாமிய குடும்பத்து பிள்ளை.
சுஹரா அதே ஊரில் உள்ள ஏழைக் குடும்பத்து பெண்பிள்ளை. தந்தை இறந்து போகிறார். ஆகையால் நன்றாக படித்தும் கூட ஐந்தாம் வகுப்போடு வசதியின்மையினால் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
இருவரும் மோதலில் தொடங்கி இணைபிரியா சிறுபிராய விளையாட்டுத் தோழர்கள் ஆகின்றனர். சுஹராவையும் நாமே படிக்க வைக்கலாமே என்று தந்தையிடம் கோரிக்கை வைக்கும் அளவிற்கு சுஹரா மேல் அக்கரையும் பாசமும் கொண்டவன் மஜித். அந்த பாசமே வளர்ந்தபின்பு காதலாக பரிணாம வளர்ச்சி அடைகிறது.
தந்தையுடன் கோபித்துக் கொண்டு நாடோடியாக ஓடிப்போய் ஊருடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்துவிட்டு மஜித் 10 ஆண்டுகள் கழித்து ஊர் திரும்புகிறான்.
அந்த பத்து ஆண்டுகளில் சுஹரா ஒரு குடிகாரனுக்கு இரண்டாம் தாரமாக திருமணமாகி சென்றிருக்கிறாள். மஜித்தின் தந்தையின் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு ஏழையிலும் ஏழையான குடும்பமாக ஆகிவிடுகிறது.
சுஹராவுக்கு புணர்வாழ்வு அளிப்பது, மணமாகாத இரண்டு தங்கைகளை மணமுடிப்பது போன்ற நோக்கங்களோடு மறுபடி வெளியூருக்கு சம்பாதிக்க போகிறான். அங்கே விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான். பின்பு ஒர ஓட்டலில் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்கிறான். ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. சுஹரா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறாள் என்று முடிகிறது கதை.
வெறும் 65 பக்கங்களுக்குள் காவியமாய் வார்த்தைகளால் நெசவு செய்திருக்கிறார் பஷீர். இளம் பருவத்து குறும்புகள் கற்பனைகள் என அற்புதமான இரண்டு அத்தியாயங்கள். கண்டிப்பாக நாம் நமது இளம் பருவத்துடன் பொருத்திப் பார்க்க இயலும். மஜித்தின் சுன்னத் கல்யாணம் சுஹராவின் காது குத்து என இஸ்லாமிய குடும்ப வழக்கங்கள் மற்றும் அது சார்ந்த மூடப் பழக்கங்களை சாடியிருப்பார்.


2014ம் ஆண்டில் மம்மூட்டி நடிப்பில் இந்த நாவல் படமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Saturday, September 22, 2018

தடைக் கற்களே படிக்கற்களாய்…


தடைக் கற்களே படிக்கற்களாய்…


“சார் நீங்க கம்ப்யூட்டர் கோர்ஸ் எங்க படிச்சீங்க?”
“கம்ப்யுட்டர் கோர்ஸா நானா? எல்லாம் ஒரு குத்து மதிப்பா பயன்படுத்தறது தான் சார்!”
“சார் பொய் சொல்லாதீங்க!”
“உண்மையிலேயே முயன்று தவறி கற்றல்( Trial and Error method) முறை தான் சார்”
கொஞ்சம் யோசிச்சிப் பாத்து எனக்கு நானே கேட்டுக் கொண்டேன், ’ஆமா, நாம கம்ப்யுட்டர் எங்க எப்படி கத்துகிட்டோம்’
ஃப்ளாஷ் பேக்-1
நாங்க முதுகலை கணிதத்திற்கு ஃபீஸ் கட்டும் போது கம்ப்யுட்டர் கட்டணம் என்று ஒரு ஐநூறு தனியாக வாங்கினார்கள். அதற்காகவே மதியம் மூன்று மணிக்கு பிறகு எங்கள் டிப்பார்ட்மண்ட் அருகில் இருந்த கம்ப்யுட்டர் லேபிற்குள் அனுமதிக்கப் பட்டோம்.
புலிகேசி படத்தில் அந்தப்புரத்தில் இருந்து “யாரங்கே“ என்று குரல் கொடுத்தவுடன் படைவீரர்கள் ஓடிவந்து புலிகேசியை போட்டு அழுத்தி விடுவார்கள் அல்லவா? அது போல மணி மூன்று அடித்ததும் எல்லோரும் ஓட்டமாக ஓடி லேபில் உள்ள நாற்காலிகளை உருட்டியபடி போய் விழுந்து அங்கே லேப் இன்சார்ஜ் பத்மநாபனை தள்ளிவிடுவோம்.
“யப்பா பிஜி மேத்ஸ் கொஞ்சம் அமைதியாக இருங்கப்பா“ என்று கெஞ்சுவார்.ஏன் இந்த அக்கபோர்?? லேபில் இருக்கும் கம்ப்யுட்டர்களில் விண்டோஸ் மல்டிமீடியா உள்ள கணினி இரண்டுதான். மற்றவை எல்லாம் கருப்பு திரையில் பச்சை எழுத்துக்களாக தோன்றும் மோனோக்ரோம் வகைக் கணினி தான். அந்த விண்டோஸை பிடிக்கத்தான் அந்த போட்டா போட்டி.
இளங்கலை மூன்றாம் வருடம் படிக்கும் போது, ’நாம ஏன் டைப்பிங் கத்துக்க கூடாது என என் ஞானதிருஷ்டியில் உதித்தது’ அதனால் எங்கள் அம்பேத்கர் அரசு விடுதி இருந்த அண்ணா விளையாட்டரங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஒரு இன்ஸ்டிட்யுட்டில் சேர்ந்து லோயர் பாஸ் பண்ணிட்டேன். அதனால் கணினி விசைப் பலகையில் (key board) A,B,C,D கலைந்து கிடந்தபோது நான் ஆச்சரியப் படவில்லை.
“டேய் ஜெயராஜ் நல்லா வேகமா டைப் பண்றான்டா, அவனுக்கு டைப் தெரியுமாம்டா” என்றொரு சேதி காற்றலைகளில் பறந்து எங்கள் சீனியர் விச்சுவின் காதுகளை அடைந்தது.
ஃபிளாஷ்பேக்-2
பாரதிதாசன் பல்கலைக் கழக கணிதத்துறையில் முதுகலை கணிதம் படித்த காலம். எங்கள் சீனியர் விச்சு என்கிற விஸ்வநாதன் தன்னோட ப்ராஜக்ட் வொர்க் டைப் பண்ண கூப்பிட்டார். 1998ல் புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையின் உள்புறம் பெரியார் கம்ப்யுட்டர்ஸ் என்று ஒன்று இருந்தது. அங்கேதான் நம்ம சீனியர் விச்சு ப்ராஜக்ட் டைப் பண்ண கேட்டிருக்கிறார். பாடம் கணிதம் என்றவுடன் சென்டர் காரர் பின்னங்கால் பிடரியில் பட காம்பவுண்ட் சுவரேரி குதித்து ஓடியிருக்கிறார். (ஆமா பின்ன ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களும் பத்தாம கிரீக் லத்தீன் இன்னும் என்னவெல்லாமோ சிம்பல் என்கிற பெயரில் வந்து தொலையும். ’என்னய்யா இது ப்ராஜக்ட்ல ஏ,பி,சி,டி ய விட இந்த எழுத்து ஜாஸ்தியா இருக்கு’ பாதியிலேயே துரத்தப்பட்ட பரிதாப வரலாறு எல்லாம் கணித முதுகலை மாணவர்களுக்கு உண்டு.)
காம்பவுண்ட் தாண்டுவதற்குள்ளாக அவரை அல்லேக்கா பிடித்து மல்லாக்க தள்ளி ” நீ கம்ப்யுட்டர் மட்டும் கொடு டைப் பண்ண நம்ம கைவசம் ஒரு அடிமை சிக்கியிருக்கான் என்ன சொல்ற?” என்று கேட்க அந்த “டீலிங்” ரொம்ப பிடித்து போய் அவரும் ஒப்புக் கொண்டு விட்டார்.
அப்புறம் என்ன நான்கு பரோட்டா வாங்கி கொடுத்து நாற்பது பக்கங்களை டைப் பண்ண வச்சிட்டார் நம்ம அண்ணன் விச்சு. அப்போ MS Word 95  என்கிற அப்ளிகேஷன் தான். ஓப்பன் பண்ணியதும் அழகான ஒரு பேனா முனை தோன்றும். ஒவ்வொரு முறை சிம்பள் வரும் போதும் ஆப்ஷன்ஸ் க்குள்ள போய் சிம்பல் ஓப்பன் பண்ணி க்ளிக் பண்ணி எடுக்க வேண்டும். இப்போ எவ்வளவோ மாறிப் போச்சு.
ஃப்ளாஷ்பேக்-3
நான் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்தபோது எங்களது ப்ராஜெக்ட்டுக்கும் அதே பிரச்சனை தான். எங்கே சென்றாலும்“யப்பா உங்க ப்ராஜக்ட் ரெடி பண்ற நேரத்தில மற்ற சப்ஜக்ட்ல 4 ரெடி பண்ணிடுவேன். எவ்வளவு காசு கொடுத்தாலும் உங்க ப்ராஜெக்ட் வேணாம்பா, விட்ருங்கப்பா என்னைய” என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கெஞ்சினார்கள்.
அப்போது எங்க டிப்பார்ட்மெண்ட் ஆபீஸில் யுனிவர்சிட்டி ஸ்டாஃப் சொசைட்டி ஆபீஸ் இருந்தது. அதில் எழுத்தராக இருந்த அண்ணன் ஒருவர் “நம்ம வீட்டு பக்கத்தில் ஒரு சென்டர் இருக்கு நான் சொல்லிவிடுரேன்” என்று எங்க பரிதாப நிலை கண்டு இரங்கினார்.
அன்று மாலையே அவரோடு டாண்ணு சென்று அந்த சென்டரில் நின்றோம்.
பாலக்கரை காவேரி தியேட்டருக்கு எதிரில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் வழியே செல்லும் தெருவில் நான்காவது கடை தான் மேற்படி சென்டர்.
“வாங்க வாங்க உக்காருங்க. ப்ராஜக்டா பாஸ்? எத்தன? அஞ்சு பேருக்கா? சரி உக்காருங்க டீ சாப்புடுங்க” (அட அட என்ன ஒரு மரியாத என்ன ஒரு உபசரிப்பு )
“என்ன சப்ஜெக்ட்? மேத்ஸா??” அந்த கடைசி எழுத்தான ”ஸா” வை உச்சரிக்கும் போதே அவர் முகம் கோணிக்கொண்டது.
”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து” என்ற திருக்குறள் எல்லாம் படிக்காதவர் போல. கடைசி வரை அவர் சொன்ன அந்த டீ வரவே இல்லை.
“வழக்கமா மேத்ஸ் ப்ராஜக்ட்லாம் பண்றதில்ல நீ சொல்றதால தாம்பா, நீங்களே நைட் ஒன்பது மணிக்கு மேல வந்து டைப் பண்ணி ரெடிப் பண்ணிக்கோங்க நான் வந்ததும் பிரிண்ட் எடுத்து தரேன் என்ன ஓகே வாப்பா?”
”சரிண்ணே நாங்களே டைப் பண்ணிடுறோம்” என்று சொன்னபடி டைப் பண்ணிட்டு அர்த்த ராத்திரியில் அந்த அண்ணன் வீட்டில் தங்கி ஒரு நான்கு நாட்களில் முடித்து விட்டோம்.
ஒரு ஐந்து ப்ராஜெக்ட் டைப் பண்ணியதில் எம்எஸ் வேர்ட் அத்துபடியானது. ஆக பைசா செலவு இல்லாம கம்ப்யுட்டர் கோர்ஸ் கத்துக்கிட்டேன். அவர்கள் பேசாமல் ப்ராஜக்ட் அடித்து தந்திருந்தால் எனக்கு கணினி கற்கும் எண்ணம் தோன்றியிருக்குமோ என்னவோ!!



Sunday, September 16, 2018

மஜ்னு தந்து சென்ற அருமையான பாடல்கள்!!



ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த முதல் பாடம் மின்னலே, இயக்குநர் கௌதம் க்கும் அந்த படம் தான் முதல். கௌதம் தனக்கென பிரத்தியேகமான ஸ்டைல்(க்ளிஷே என்றும் சொல்லலாம்) வைத்துக்கொண்டது இரண்டாவது சூப்பர் டூப்பர் ஹிட் படமான காக்க காக்க வுக்கு பின்புதான்.
மின்னலே ஓரளவாவது தனது இருப்பை வெளிப்படுத்திக் கொண்டது என்றால் அதற்கு காரணம் கௌதம் அல்ல ஹாரிஸ் ஜெயராஜும் பாம்பே ஜெயஸ்ரீன் வசீகராவும் தான். அந்த படத்தில் அனைத்துப் பாடல்களும் புதுவிதமான ரஹ்மான் தனத்துடன் இளைஞர்களை வசீகரிக்கும் விதத்தில் இருந்தன.
நான் முன்பே ஒரு பதிவில்(இங்கே தான்) உழைத்து சம்பாதித்த முதல் மாத சம்பளத்தில் எனது வெகுநாளைய கனவான டேப்ரிக்கார்டர் வாங்கியது பற்றி கூறினேன் அல்லவா? முதலில் வாங்கிய கேஸட் “ரோஜாக்கூட்டம்” (முதல்பக்கம்) மற்றும் மஜ்னு(இரண்டாம் பக்கம்). மஜ்னு படப் பாடலை டிக் செய்யக் காரணம் ”மின்னல் வெட்டியது“ தான். எனது நினைப்பு வீண் போகவில்லை. காரணம் ஒவ்வொரு பாடலையும் தெவிட்டாத தேனமுதாக கொடுத்திருந்தார்கள் வைரமுத்துவும் ஹாரிஸ் ஜெயராஜும்.
1.   1.  முதல் பாடல் வசீகரிக்கும் தாலாட்டுப் பாடல் (காதலன் காதலியை தூங்க வைக்கும்- வைசிவெர்சா)
“பிஞ்சுத் தென்றலே என் பிஞ்சுத் தென்றலே
என் நெஞ்சில் அடங்கு ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு” பாடல்.
வைரமுத்து அவர்கள் வரிகளால் வசியம் செய்யும் வல்லவர். பாருங்கள்
விழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்
முதல் வரி ஒரு பொது அறிவு வினா அடுத்து ஒரு திருக்குறள்(உறங்குவது போலும் சாக்காடு…)
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன் இந்த வரி முடியும் போது ஒரு சிறு வீணை “பிட்“ சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி.

2.   2.  இந்த மலர் எங்கேயாவது யாராவது பார்த்திருக்கிறீர்களா??
பார்த்திருப்போம் ஆனால் இதன் பெயர் குல்மொகர் என்பது தெரிந்திருக்காது.
”கொல்முகர் மலரே, கொல்முகர் மலரே,
கொல்ல பார்க்காதே,
உன் துப்பட்டாவில் என்னை கட்டி,
தூக்கில் போடாதே”

அழகால் தாக்குண்டு கொல்லப் படுதல் போல இன்ப அவஸ்தை ஒன்று இருக்க முடியுமா. வைரமுத்து அவர்கள் அந்த இன்ப வலியை இன்னும் மெருகேற்றி கூறுவதைப் பாருங்கள்,
”உயிரை திருகி,
உந்தன் கூந்தல் சூடிகொள்ளாதே,
என் உதிரம் கொண்டு,
உதட்டு சாயம் பூசிகொள்ளாதே,
விண்மீன் பறிக்க வழியில்லை என்று,
கண்களை பறிக்காதே,
என் இரவை எரித்து குழைத்து குழைத்து,
கண்மை பூசாதே,
என்னை விடவும் என்னை அறிந்தும்,
"யார் நீ?" என்று கேட்காதே,

முற்றும் அறிந்த பின்பு உரிமையோடு கோபிக்கையில் தான் அந்த “யார்நீ“ என்கிற வார்த்தை வரும்.
அடுத்த சரணத்தில் வரும் இந்த வரிகளை குறிப்பிடாமல் இருக்க இயலாது
”என் ரத்தகுழாயில் புகுந்துகொண்டு,
சத்தம் போடுகிறாய்,
கண்ணாடி நெஞ்சில்,
கல்லை எரிந்து,
கலகம் மூட்டுகிறாய்,”
3.     3. கவிஞர்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் கனவுகளோடு கபடியாடுவது தான். அதுவும் காதல் கனவென்றால் கவிகளுக்கு கேட்கவா வேண்டும்.
“முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்” பாடல் காதலன் காதலி உறையாடலாய் வரும் டூயட் பாடல்.
”ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையொடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கிவிடு”
ஊடல் மற்றும் ஓடல் களுக்கு நேரம் இல்லை இரவு விரைவில் விடிந்து போனால் கனவும் முடிந்து போகும் அல்லவா? எனவே காதலன் அவசரப் படுத்துகிறான்.
ஆனால் காதலி,
”நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு தென்றலை”
எனக்கு ஊடல் எதுவும் இல்லை வியர்வைகள் துளிர்விட “வாய்ப்பு” உள்ளதால் அவள் தென்றலை வரச்சொல் என காதலனுக்கு ஆணையிடுகிறாள்.
பாம்பே ஜெயஸ்ரீயும் ஹரிஷ் ராகவேந்திராவும் இந்த டூயட்டை வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பார்கள்.
4.     4. அடுத்த ஒரு சின்ன பிட் பாடல் “ஹரிகோரே போன்சாயே சம்பா நெல்லாலே” பாடல் இந்தப் பாடலில் வரும் ஒரு அறிவுரை இதயம் முரளிக்காகவே சொல்லப் பட்ட ஒன்று “மௌனங்கள் அழகுதான் ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு”
5.     5. இறுதியாக ஒரு “துல்லிசை“ பாடல். இப்போது கேட்டாலும் கால்கள் தாளம் போடுவதை கட்டுப் படுத்த இயலாது.
”மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம்
பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்”
 இந்தப் பாடல் முழுவதும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் அமையும் “நல்வாய்ப்புகள்(லக்கி)“ பற்றி எழுதியிருப்பார் வைரமுத்து.
”அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு
தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான்”
”நின்று போன லிப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று
அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான் தோடா”
இந்தப் பாடலின் பல்லவியிலேயே “வாஜ்பாய் வரட்டும் பாட்டெழுத ( அவர் கவிஞர் அல்லவா) பில் கிளின்டனை கூப்பிடு இசையமைக்க வந்து சதாம் உசேன் பாடல் பாடட்டும் ” எழுதியிருப்பார்.

ஒரு முறை அனைத்து பாடல்களையும் கேட்டுத்தான் பாருங்களேன். ஏஆர் ரகுமானுக்கு அடுத்த லெவல் இளமை இசைக்கு ஹாரிஸ் எவ்வளவு பொருத்தமாக இருந்தார் என்பது புலப்படும்.






Sunday, September 2, 2018

கோலமாவு கோகிலா


கோலமாவு கோகிலா
படத்திற்கு என்று கூறினாலே ஓடி ஒளிந்து கொள்கிறான் அருண். நானோ ஒரு காலத்தில் திருச்சி, குமாரபாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் என அனைத்து ஊர்களிலும் அனைத்து தியேட்டர்களிலும் படம் பார்த்தவன். அப்புறம் அவனை கெஞ்சி சில உத்தரவாதங்கள் கொடுத்து கூட்டிக்கொண்டு போனேன். இப்போ வரும் சினிமாக்களை விட “மோட்டுபட்லு” சுவாரசியமாக அவனுக்கு படுகிறது போல.



தமிழ் சினிமாவின் பரபரப்பான சுவாரசியமான திரைக்கதை சூத்திரங்களில் ஒன்று “சாதாரண இளைஞன் அசாதாரண சூழல்“ என்பதாகும். இந்த சூத்திரத்தில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை வெற்றிகரமாக பொருத்தியுள்ளார் இயக்குனர்.
தாயின் மருத்துவ செலவுக்கான அவசிய அவசரத் தேவைக்காக போதை மருந்து கடத்தும் கும்பலிடம் சரக்கு கைமாற்றி விடும் வேலைக்கு சேர்கிறார் நயன்தாரா. அந்த கும்பலை பிடிக்க பொறி வைத்து பிடிக்க காத்திருக்கும் இன்ஸ்பெக்டர் “செவ்வாழை“ சரவணன். தாயின் வியாதி குணமானதா? போதை மருந்து கும்பலின் பிடியில் இருந்து சேதாரமின்றி மீண்டாரா நயன்தாரா? என்பது தான் மீதிக்கதை.
”நானும் ரௌடிதான் “ படத்தில் வரும் பாத்திரத்தில் வரும் அதே நடை உடை ஒப்பனை மற்றும் இரங்கத்தக்க முகபாவம் என பேரழகு தேவதையாக வருகிறார் நயன்தாரா. கடத்தல் கும்பலுக்குள் நுழையும் போது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. ஆனால் பிறகு..?? இரண்டாவது சந்தேகத்துக்கு உரிய நபரையும் கொன்றால் தான் இடத்தை காலி செய்வேன் என்று அடம் பிடிப்பதாகட்டும், பாலியல் வன்முறை செய்ய முனையும் வில்லன் மற்றும் அவன் ஆட்களை குடும்பத்துடன் சேர்ந்துகொண்டு காலி செய்வது இறுதியாக சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் “எஸ்கோபர்” ரேஞ்சுக்கு திட்டம் போட்டு பெரிய வில்லனை மாட்டிவிட்டு போலீசுக்கும் தண்ணி காட்டி விட்டு கடைசியாக கோலமாவு பிசினஸ் ல் இறங்குவது என கலக்கி இருக்கிறார்.
அந்த நோய்வாய்ப்பட்ட தாய் வேறு யார் சரண்யா அவர்கள்தான். இடைவேளை வரை இரங்கத்தக்க தோற்றத்துடன்  வருகிறார். இடைவேளைக்கு பிறகு அவரை பார்த்தாலே சிரிப்பு வருமளவு நடிப்பு பின்னியிருக்கிறார்.
நயன்தாராவின் தங்கையை ஒருதலையாக காதலிப்பவராக நடித்திருப்பவர் நகைச்சுவைக்கு வலு சேர்த்திருக்கிறார். “ஜேஜே” படத்தில் வரும் ”நீ இல்லன்னா நான் செத்துருவேன் ஜமுனா” என்று பிதற்றும் இளைஞனை ஒத்த கதாபாத்திரம். அவர் வந்தாலே சிரிப்புதான். “Smuggling for Buvi”  என்று ஒரு வாட்சப் குருப் ஆரம்பித்து ஒரு ஓட்டை டெம்போவுக்குள் அடைந்திருக்கும் நான்கு பேருக்குள் மெசேஜ் அனுப்புவது செம்ம காமெடி.
யோகி பாபுவுக்கு நயன்தாராவை ஒருதலையாக விரும்பும் மளிகை கடை சேகர் கதாபாத்திரம். ஆண்டவன் கட்டளைக்கு பிறகு அவரது நடிப்பில் நிறைய படங்கள் வருகிறது. ஆனால் பெரும்பாலான படங்களில் அவரது தோற்றத்தை பகடி செய்வது நகைச்சுவையாக காட்டப் படுகிறது. இது தவறான செயல்.      தோற்றம் சார்ந்த இறுமாப்பு அல்லது தாழ்வு மனப்பான்மை சமூகத்தில் ஆழமாக பதிய இதுவும் ஒரு காரணமாக அமையலாம். இந்த படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரமும் தோற்றத்தை கேலி செய்து காமெடி உருவாக்கவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. “உம் மூஞ்சி மேல என் பீச்சாங்கைய வெக்க” என்று சென்னை பேச்சு வழக்கில் கூறுவது போல யோகி பாபு வின் மூஞ்சி மேல நயன்தாரா பீச்சாங்கால வைக்கிறார். இந்த காட்சி தேவையற்ற திணிப்பு. அந்த காட்சியை பார்க்கும் போது கோபமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது.
மற்றபடி படம் நல்ல பொழுதுபோக்க படம்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...