Wednesday, February 17, 2021

அணு அற்புதம்-அதிசயம்-அபாயம்

 

புத்தகம் – அணு  அற்புதம்-அதிசயம்-அபாயம்

ஆசிரியர் – என்.ராமதுரை

பதிப்பகம்- கிழக்கு பதிப்பகம் (கிண்டில் அன்லிமிட்டடிலும் கிடைக்கிறது)


இந்த நூலின் ஆசிரியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார். இவரது எழுத்து எனக்கு ஒரு இருபது ஆண்டுகாலமாக பரிச்சயம். ஆமாம், கொல்லி மலையில் உள்ள ஹில்டேல் பள்ளியில் 2000-2001 ம் ஆண்டில் ஒரு ஆறு மாதங்கள் மட்டும் ஆசிரியராக இருந்தேன். அப்போது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நூலகப் புத்தகங்கள் அடங்கிய ஒரு பீரோவை குடைந்தேன். அள்ள அள்ள ஏகப்பட்ட அருமையான புத்தகங்கள். அதில் தினமணிக் கதிரில் வந்த அப்பல்லோ -13 மிஷன் பற்றிய தொடர் கட்டுரை கத்தரித்து தைக்கப் பட்ட தொகுப்பு ஒன்று கையில் சிக்கியது. கையில் எடுத்தவுடன் என்னை “கப்“ என்று பிடித்துக் கொண்டது. முடிக்காமல் வைக்க இயலவில்லை. அவ்வளவு விறுவிறுப்பான அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. அறிவியல் கட்டுரை ஆசிரியரின் எழுத்து அப்போதுதான் எனக்கு அறிமுகம்.

அதன் பிறகு அவ்வப்போது தினமணி நடுப்பக்க கட்டுரையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இணையம் பரவலான பிறகு www.ariviyal.in (இப்போதும் இந்த தளம் காணக்கிடைக்கிறது சென்று பாருங்கள்) என்கிற வலைப்பூவைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தார். அறிவியல் சார்ந்த விஷயங்களை அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எழுதுவது அவரது பாணி. அதிலும் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆழம் வரை சென்று அலசி ஆராய்ந்து அனைவருக்கும் விளங்கும் வண்ணம் சுவாரசியமாக எழுதி இருப்பார். அதுபோல வலைப்பூவில் கமெண்ட் பகுதியில் கேள்விகள் கேட்போருக்கு பொறுமையாக தெளிவாக தேவைப்பட்டால் விரிவாக பதில் அளிப்பார்.

இந்த நூலை கிண்டிலில் நான் தரவிரக்கம் செய்து வாசிக்க இனிமேலும் ஏதேனும் காரணம் வேண்டுமா என்ன?

லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்படும் அணுகுண்டு திடீரென நழுவி கீழே விழுந்துவிட்டால் பட்டென்று வெடித்து நகரையே நாசம் செய்து விடுமோ? என்கிற சந்தேகம் நான் மாணவனாக இருந்த போது அடிக்கடி எழும். அதுவும் பொக்ரான் சோதனையின் போது இந்த வினா என்னுள் அடிக்கடி எழுந்தது. ஆசிரியரும் தனது கட்டுரையை இங்கே தான் தொடங்குகிறார்.

அப்படியெல்லாம் வெடித்துவிடாது என்பது தான் நெசம். ஆமாம், கிரிட்டிக்கல் மாஸ் (நிலைமாறு நிறை) என்னும் நிறை வரும் வரை கம்முன்னு இருக்கும் யுரேனியம் அந்த நிறை வந்தவுடன் தன்னாலே கட்டுப்படுத்தப்படாத தொடர்வினையை தொடங்கி வெடித்துச் சிதறிவிடும். ஆமாம், ஐந்து கிலோ நிலைமாறு நிறை என வைத்துக் கொண்டால் அணுகுண்டில் 2 கிலோ தனியே 3 கிலோ தனியே என்று பிரித்து வைத்திருப்பார்கள். சாதாரண வெடிகுண்டு மூலமாக வெடிக்க வைத்து பிரிந்து இருக்கும் இரண்டும் மூன்றும் ஒன்று கூடி ஐந்தாக மாற வழிவகுப்பார்கள். அப்புறம் என்ன அணுகுண்டு வெடித்து எல்லாவற்றையும் துவம்சம் செய்யத் துவங்கிவிடும்.

அதனால் தான் அணுஉலைகளில் (அணு மின்சாரம் தயாரிக்க பயன்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டு) யுரேனிய எரிபொருள் சிறு சிறு பெல்லட்களாக நீண்ட குழாய்களில் வைத்து அவை வட்ட வடிவ தாங்கிகளில் சொருகி வைக்கப் பட்டிருக்கும். செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம், அணுஉலைகளில் எரிபொருள் நிரப்பும் வேலை தொடங்கியது என்று. அது கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும் வேலை.

அணுகுண்டில் ஆரம்பித்து சுவாரசியம் காட்டிவிட்டு அடுத்த அத்தியாயத்திலேயே அதன் அடிப்படை மற்றும் காலக்கிரமப்படியான அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் என்று அலச ஆரம்பிக்கிறார். கதிரியக்கத்தை (ரேடியேஷனை) வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்ட போது கதிரியக்கத்தின் ஆபத்து குறித்த தெளிவான அறிவு விஞ்ஞானிகளுக்கு கூட இல்லை. ஆமாம், ரேடியம் இருளில் ஒளிர்வதைப் பார்த்து, அதனை ஒளிர்வதற்கு ஏதுவாக வீட்டின் படுக்கை அறை வரையில் கொண்டு சென்று வைத்திருந்திருக்கிறார்கள்.

ரேடியம் கலந்த நீரில் குளித்தால் மருத்துவ குணம் என்றெல்லாம் பீலா விட்டு கள்ளா கட்டியுள்ளனர் அந்த காலத்தில். படுக்கை அறையில் கட்டிலுக்கு அலங்காரமாக மேலே தொங்க விட்ட கூத்தெல்லாம் அரங்கேறியுள்ளது.

மூன்றாவது அத்தியாயத்தில் அணுவின் அடிப்படைகளை அலசி ஆராய்கிறார். நியுட்ரான் என்பது ஒரு புரோட்டானும் ஒரு எலக்ட்ரானும் கலந்த ஒரு துகள் என்பதும் ஒரு நியுட்ரானை பிதுக்கினால் ஒரு புரோட்டானும் எலக்ட்ரானும் வெளியே வரும் என்கிற உண்மையையே நான் சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

கதிரியக்கத் தனிம அணுக்கள் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வெளியிடுவதன் மூலமாக அவை வேறு தனிம அணுக்களாக உரு மாறுகின்றன என்கிற உண்மையை கண்டறிந்தவர்கள் ரூதர்ஃபோர்டு மற்றும் ஃபிரெடெரிக் சோடி ஆவர். ஆனால் இந்த உண்மையை அவர்கள் கூறிய போது அவர்களை பெரிய விஞ்ஞானிகளே கூட கழுவி கழுவி ஊற்றியுள்ளனர். கடைசியில் அவர்கள்  கூறியது தான் உண்மை என்றானது.

செயற்கை முறையில் ஆல்ஃபா கதிர்கள் கொண்டோ அல்லது நியுட்ரான் கொண்டோ தாக்குவதன் மூலமாக எந்த ஒரு தனிமத்தின் ஐசோட்டோப்பையும் (ஒத்த புரோட்டான் எலக்ட்ரான் எண்ணிக்கை ஆனால் வேறுபட்ட நியுட்ரான் எண்ணிக்கை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோட்டோப்புகள் ஆகும்) செயற்கையாக உருவாக்க இயலும் என்று மேரிக்கியுரியின் மகளான ஐரின் கியுரி தனது கணவருடன் இணைந்து ரூதர்ஃபோர்டின் வழிகாட்டலின் கீழ் கண்டறிந்தார். (ரூதர்ஃபோர்டின் சீடகோடிகளில் 11 போர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்றால் அவர் எவ்வளவு அருமையான வழிகாட்டியாக இருந்திருப்பார் என்று பாருங்கள்)

அடுத்ததாகத்தான் என்ரிகோ ஃபெர்மி, லிசே மைட்னர் மற்றும் ஆட்டோஹான் முதலியவர்கள் நியுட்ரான்களைக் கொண்டு அணுப்பிளவை சாத்தியமாக்கினர். 5 கிலோ யுரேனியத்தை இரண்டாக பிளந்தால் இரண்டு வேறு வேறு தனிமங்களாகின்றன. ஆனால் அவையிரண்டின் கூட்டு எடை 4.8 கிலோ என்று இருக்கும். மீதமுள்ள 200 கிராம் (இந்த அளவுகள் உதாரணம் தான்) ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடான E=Mc2 வழி ஆற்றலாக மாறி விடுகிறது என்பது தான் அணுப் பிளவில் வெளிப்படும் ஆற்றலின் தத்துவம்.

அப்புறம் அமெரிக்கா மான்ஹாட்டன் புராஜக்ட் என்கிற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் ரகசிய திட்டத்தை துவங்கியது. ஜெர்மனி விஞ்ஞானிகள் எவரும் அணுகுண்டை தயாரிப்பதற்கு முன்பாக அமெரிக்கா தயாரித்து உலகத்தை ரட்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனை கடிதம் எழுத வைத்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அவர்களிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த மான்ஹாட்டன் திட்டம் துணை அதிபரான ட்ருமெனுக்கு கூட தெரியாதாம். ரூஸ்வெல்ட் திடீரென மண்டையை போட்டதால் அதிபரான ட்ருமென் அதன் பிறகு தான் அறிந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் அந்த திட்டத்தில் பணியாற்றிய மேல்மட்ட விஞ்ஞானிகள் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கூட அவர்களுக்கான பணி பற்றி மட்டுமே தெரியுமாம்.

அணுகுண்டு தயாரிப்பு, ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் அணு உலைகள் என்று பலவற்றையும் புத்தகம் பேசுகிறது. இவர் அணு உலைகள் காலத்தின் கட்டாயம் அவை ஏராளமாக அமைக்கப் படவேண்டும் என்கிற கட்சி. அணு உலை விபத்தை  சாலை விபத்துடன் ஒப்பிட்டு அணு உலைகள் ஆபத்தானவை என்பது வீண் கற்பனை என்று போகிற போக்கில் சொல்கிறார்.

என்ன தான் எனக்கு பிடித்த அறிவியல் எழுத்தாளர் என்றாலும் அவரது அணுஉலை ஆதரவு கருத்தில் நான் முற்றிலும் முரண்படுகிறேன். உலகில் 15 விழுக்காடே பயன்படுத்தப் படும் அணுமின் சக்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

அணுக்கரு இயற்பியல் பாடத்தை கண்டாலே பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளியும் பசங்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ளவற்றை கூறினால் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்பது திண்ணம்.

ஒரு சுவாரசியமான அறிவியல் கட்டுரை தொகுப்பு அனைவரும் வாசியுங்கள்.

Sunday, February 14, 2021

புத்தகம் – நவீன அறிவியலின் எழுச்சி

 



ஆசிரியர் – த.வி.வெங்கடேஸ்வரன்

பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்

     என்.ராமதுரை அவர்களுக்கு அடுத்ததாக எனது அறிவியல் தாகத்திற்கு பிஸ்லரி வாட்டர் ஊற்றி தாகசாந்தி செய்தது த.வி.வெங்கடேசன் அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் தான் என்றால் அது மிகையில்லை.

     சென்ற ஆண்டு பாரதிபுத்தகாலயத்தில் இருந்து ஒரு நான்காயிரத்து ஐநூறு ரூபாய்க்கான புத்தகத்தை மூவாயிரம் ரூபாய்க்கு தருவித்துத் தந்தார் நண்பர் முத்துக்கண்ணன். அவர் கொடுத்த பட்டியிலில் என்னிடம் இருந்தவை நீங்களான ஏனைய தவிவெ அவர்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.

     இருபதாம் நூற்றாண்டு அறிவியல் உலகில் பல மாற்றங்களை கண்டு வியந்த நூற்றாண்டு. ஏனென்றால் இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நியுட்டன் கட்டி வைத்து விட்டுச் சென்ற பாரம்பரிய இயற்பியல் என்னும் எஃகு கோட்டையை செங்கல் செங்கல்லாக பிரித்து மேய்ந்து விட்டனர் சென்ற நூற்றாண்டு விஞ்ஞானிகள்.

     “Nature and Nature’s Laws lay hid in night

     God said, let Newton be! And all was light”

     இதுதான் நியுட்டன் கல்லறையில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகம்.

     இயக்கவியல் மற்றும் ஈர்ப்பியல் சார்ந்த பல அறிவியல் பிரிவுகள் நியுட்டன் போட்டுத்தந்த ராஜபாட்டையில் கம்பீரமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது வரை அணு என்பது மேலும் பகுக்க இயலாத சிறிய துகள்தான்.

     1895 ராண்ட்ஜென்ட் எக்ஸ்கதிரை கண்டறிந்த பின்னர் ஏற்பட்ட பற்பல அடுத்தடுத்த ஆய்வுகள் நியுட்டனின் பாரம்பரிய இயற்பியலின் போதாமையை உணரத் தொடங்கின. சிறுவயதில் எனது கையில் சிக்கிய எங்க வீட்டு பிளிப்ஸ் ரேடியோ போல குரூக்ஸ் என்பவர் கண்டறிந்த குடுவை (வெற்றிடக்குழாய் மின்னோட்ட ஆய்வுக்கு பயன்படுத்தப் பட்டது) நம்ம விஞ்ஞானிகள் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டது. அப்படித்தான் நம்ம ராண்ட்ஜென்ட் கையில் சிக்கியது. அவர் மின்னோட்டத்தை நிகழ்த்தியபோது கேத்தோடு கதிர்கள் (இது வேற ஒன்றும் இல்லைப்பா, எலக்ட்ரான் தான். ஆனா அப்போதுதான் எலக்ட்ரான் என்றால் என்னவென்றே தெரியாதே!!) புறப்பட்டு ஆனோடு நோக்கிச் சென்றது. வழக்கமாக எல்லோருக்கும் அந்த ரிசல்ட் தான். ஆனால் ராண்ட்ஜென்ட் கவனித்தது குழாயை தாண்டி ஒன்பது அடி தள்ளி உள்ள சுவற்றில் ஒளிர்தலை ஏற்படுத்தியது. துணி, கறுப்பு காகிதம் அட்டை என எதை வைத்தாலும் ஒளிர்தல் நிற்கவில்லை ”அடப்பாவி மக்கா யாருலே நீ செத்தப்பயலே என்ன வச்சி மறச்சாலும் நிக்கமாட்டேக்கிற பேதில போவான்” என்று திட்டிக் கொண்டே கையைக் கொண்டு போனபோது எலும்புக் கூடாக தெரிந்தது. வாடா என் செல்லக் குட்டி, நீ யார்னே தெரியல இருந்தாலும் உனக்கு எக்ஸ் என்று பெயர் வைக்கிறேன் என்றாராம்.

     “நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்“ என்று கவிஞர் எழுதியது போல எலக்ட்ரான்கள் மோதி வினைபுரிவதால் உருவாவது தான் எக்ஸ் கதிர்கள் என்று பிற்கால விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தாலும் அது கண்டுபிடிக்கப் பட்ட காலகட்டத்தில் எலக்ட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப் படவே இல்லை என்பது தான் சோகம். அதுவும் அணுவின் உள்ளே உள்ள துகள் என்று சொன்னால் கட்டையால் அடித்து மண்டையை பிளந்திருப்பார்கள்.

     ஆக, நியுட்டனின் எஃகு கோட்டையில் முதல் செங்கல்லை பிரித்தது நம்ம ராண்ட்ஜெனின் கண்டுபிடிப்பு தான் என்று நான் கூறவில்லை நூலாசிரியர் கூறுகிறார்.

     அணுவைப் பற்றி அறிவியல் சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத காலகட்டத்திலேயே கதிரியக்கம் கண்டறியப் பட்டு ஆல்ஃபா, பீட்டா மற்றும் காமாக் கதிர்கள் என்கிற மும்மூர்த்திகளின் கீர்த்தியை உலகம் அறிந்து விட்டது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஹென்றி பெக்கொரல் என்று 1992 ல் நான் பத்தாம் வகுப்பு படித்தபோதே அறிந்து கொண்டேன். (இல்லையா பின்ன அது முக்கியமான ஐந்து மார்க் கேள்வியாச்சே!) “இது என்ன சப்போட்டே இல்லாம நிக்குது?!“ என்று வடிவேல் வியந்து நோக்கியது போல லைட் சோர்ஸ் இன்றி தானாகவே மிளிரும் கல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்த கதிர்களை யுரேனியக் கதிர்கள் என்று அழைத்தனர்.

     அதன்பின்பு ரேடியம் குறித்த ஆராய்ச்சியில் குடும்பமே கலந்து கொண்டு ஆய்வு செய்து பல இருட்டில் கிடந்த பல அறிவியல்  உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சியது கியூரி குடும்பம். ஆமாம், பியாரி கியூரியும் மேரிக் கியூரியும் கதிரியக்கத் தனிமங்கள் தொடர்பான பல ஆய்வுகளை செய்து ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் நோபல் பரிசு பெற்றதோடு இல்லாமல் மேரிக் கியூரி இயற்பியல் துறை மற்றும வேதியல் துறை இரண்டிலுமே நோபல் பரிசுளை பெற்றுள்ளார். ஒன்று அழிந்து மற்றொன்று உருவாகும். ஆனால் அள்ள அள்ள குறையாமல் வரும் கதிர்வீச்சுகள் எதில் இருந்து வருகின்றன என்கிற மர்ம முடிச்சு மட்டும் அவிழ்க்கப் படாமல் இருந்தது.

     அப்புறம் குரூக்ஸ் குடுவை வழியாக ஆய்வுகள் பல செய்த ஜெ.ஜெ.தாம்சன் ஆய்வுகள் பல செய்து எதிர்மின் சுமை உள்ள எலக்ட்ரான்கள் லட்டின் உள்ளே ஆங்காங்கு முந்திரிகள் பொதிந்துள்ளது போல அணுவின் உள்ளே உள்ளன என்று முடிவு செய்தார். அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள் என்பது வரை சரிதான் ஆனால் அது முந்திரி பருப்பு போல அல்ல என்ற படி “மே ஐ கம் இன்?” என்றார்கள் அடுத்தடுத்து வந்த விஞ்ஞானிகள்.

     அடுத்து வந்த மாக்ஸ் பிளாங்க் என்பவர் ஒரு அஸ்திவாரம் தோண்டி “குவாண்டம்“ என்கிற கல்லை நட்டு வைத்தார். ஒளி அலைகள் எனர்ஜி பொட்டலங்களாகத்தான் பரவுகின்றன என்கிற கருதுகோளை முன்வைத்தார். ”என்னய்யாது ஏதோ விபூதி பொட்டலம் மாதிரி சொல்ற?”என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1928 ல் அவரை நோபல் பரிசால் அங்கீகரித்தது அறிவியல் உலகம்.

     அணுவின் மையத்தில் உட்கரு உள்ளது என்பதை கண்டறிந்து உலகிற்கு சொல்ல ரூதர்ஃபோர்டு ஆல்ஃபா கதிர்களோடு வந்தார். அவரின் ஆய்வில் தான் கால்பந்து மைதானம் அளவில் இருக்கும் அணுவில் கால்பந்து தான் அணுக்கரு என்றால் அதன் எல்லையில் கிடக்கும் ஒரு நெல்லிக்காய் தான் எலக்ட்ரான் என்கிற அளவில் அணுவைப் பற்றி ஒரு பிம்பம் உருவானது. ஆமாம் அணுவில் 99.99 சதவீதம் வெற்றிடம் தான் இருக்கு.

     மேற்கூறிய எல்லா கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு புதிய அணுக்கொள்கையை வகுத்து அளித்தவர்தான் நீல்ஸ்ஃபோர். இவர் ஜெ.ஜெ.தாம்சனின் சீடகோடி.

     அடுத்து என்ரிகோ ஃபெர்மி, ஓட்டாஹான் மற்றும் லைஸ் மிட்டனர் ஆகியோர் நியுட்ரான் கொண்டு அணுக்கருவைத் தாக்கும் போது அணுவில் உருவாகும் மாற்றம் குறித்து ஆய்வுகள் செய்தனர். ஒத்த மின்சுமை உள்ள துகள்கள் ஒன்றையொன்று விலக்கும், ஆனால் அணுவின் உட்கருவில் எப்படி இந்த நேர்மின்சுமை உடைய புரோட்டான்கள் சமர்த்துப் பிள்ளைகளாக ஒற்றுமையாக நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்து உள்ளன?  அங்கே தான் புரோட்டான்களின் விலக்கு விசையும் அணுக்கருவின் பிணைப்பு விசையும் சமரசம் செய்து கொள்கின்றன. இந்த சமநிலையை உடைக்கும் போது அணுவை பிளக்கலாம் என்று கண்டறிகின்றனர்.

     அந்த பிளவில் இருவேறு தனிமங்கள் உண்டாகின்றன, மேலும் நிறை குறைவு ஆற்றலாக மாறுகிறது என்பதை E=Mc2 என்கிற ஐன்ஸ்டீன் சமன்பாடு காட்டிக் கொடுக்கிறது. மேலும் இது அமெரிக்காவின் ராணுவ வலிமையை கூட்டியும் கொடுத்தது என்பதெல்லாம் உலகறிந்த உண்மை.

     ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை ஒளிமின்விளைவு (சூரிய ஒளிக்கதிர்கள் ஒரு தகட்டில் விழும் போது அதில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியாகின்றன – என்று கண்டறிந்து சோலார் பேனல் உருவாக காரணமானார்) பற்றிய ஆய்வு அணுக்கரு இயற்பியலைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. அப்புறம் “நிறை” மற்றும் “ஆற்றல்“ இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் நிறை ஆற்றலாக மாறும் என்று கூறி உலகிற்கு ஒரு சமன்பாட்டை வழங்கினார். அப்புறம் குவாண்டம் இயற்பியல் மற்றும் அவரது மாஸ்டர் பீஸ் ஆய்வான “சார்பியல் தத்துவம்“ ஆகியவற்றை உலகிற்கு வழங்கியிருந்தாலும் அவருக்கு நோபல் பரிசை பெற்றுக் கொடுத்தது ஒளிமின்விளைவு ஆய்வு தான். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி என்றால் அவர் ஐன்ஸ்டீன்தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா?

     “சார் ஏதோ புத்தகம் பற்றி எழுத வந்துட்டு இப்படி…..?”

     “நான்  மேலே கூறிய எல்லா விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டது இந்த புத்தகத்தை படித்து தான்பா!!“

      பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மீது தீராக் காதலை ஏற்படுத்த வல்ல ஒரு புத்தகம் இது. அனைவரும வாங்கிப் படியுங்கள். வெறும் 112 பக்கங்கள் தான்.

 

 

 

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...