Wednesday, February 17, 2021

அணு அற்புதம்-அதிசயம்-அபாயம்

 

புத்தகம் – அணு  அற்புதம்-அதிசயம்-அபாயம்

ஆசிரியர் – என்.ராமதுரை

பதிப்பகம்- கிழக்கு பதிப்பகம் (கிண்டில் அன்லிமிட்டடிலும் கிடைக்கிறது)


இந்த நூலின் ஆசிரியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார். இவரது எழுத்து எனக்கு ஒரு இருபது ஆண்டுகாலமாக பரிச்சயம். ஆமாம், கொல்லி மலையில் உள்ள ஹில்டேல் பள்ளியில் 2000-2001 ம் ஆண்டில் ஒரு ஆறு மாதங்கள் மட்டும் ஆசிரியராக இருந்தேன். அப்போது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நூலகப் புத்தகங்கள் அடங்கிய ஒரு பீரோவை குடைந்தேன். அள்ள அள்ள ஏகப்பட்ட அருமையான புத்தகங்கள். அதில் தினமணிக் கதிரில் வந்த அப்பல்லோ -13 மிஷன் பற்றிய தொடர் கட்டுரை கத்தரித்து தைக்கப் பட்ட தொகுப்பு ஒன்று கையில் சிக்கியது. கையில் எடுத்தவுடன் என்னை “கப்“ என்று பிடித்துக் கொண்டது. முடிக்காமல் வைக்க இயலவில்லை. அவ்வளவு விறுவிறுப்பான அறிவியல் கட்டுரைத் தொகுப்பு. அறிவியல் கட்டுரை ஆசிரியரின் எழுத்து அப்போதுதான் எனக்கு அறிமுகம்.

அதன் பிறகு அவ்வப்போது தினமணி நடுப்பக்க கட்டுரையில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இணையம் பரவலான பிறகு www.ariviyal.in (இப்போதும் இந்த தளம் காணக்கிடைக்கிறது சென்று பாருங்கள்) என்கிற வலைப்பூவைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தார். அறிவியல் சார்ந்த விஷயங்களை அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எழுதுவது அவரது பாணி. அதிலும் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆழம் வரை சென்று அலசி ஆராய்ந்து அனைவருக்கும் விளங்கும் வண்ணம் சுவாரசியமாக எழுதி இருப்பார். அதுபோல வலைப்பூவில் கமெண்ட் பகுதியில் கேள்விகள் கேட்போருக்கு பொறுமையாக தெளிவாக தேவைப்பட்டால் விரிவாக பதில் அளிப்பார்.

இந்த நூலை கிண்டிலில் நான் தரவிரக்கம் செய்து வாசிக்க இனிமேலும் ஏதேனும் காரணம் வேண்டுமா என்ன?

லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்படும் அணுகுண்டு திடீரென நழுவி கீழே விழுந்துவிட்டால் பட்டென்று வெடித்து நகரையே நாசம் செய்து விடுமோ? என்கிற சந்தேகம் நான் மாணவனாக இருந்த போது அடிக்கடி எழும். அதுவும் பொக்ரான் சோதனையின் போது இந்த வினா என்னுள் அடிக்கடி எழுந்தது. ஆசிரியரும் தனது கட்டுரையை இங்கே தான் தொடங்குகிறார்.

அப்படியெல்லாம் வெடித்துவிடாது என்பது தான் நெசம். ஆமாம், கிரிட்டிக்கல் மாஸ் (நிலைமாறு நிறை) என்னும் நிறை வரும் வரை கம்முன்னு இருக்கும் யுரேனியம் அந்த நிறை வந்தவுடன் தன்னாலே கட்டுப்படுத்தப்படாத தொடர்வினையை தொடங்கி வெடித்துச் சிதறிவிடும். ஆமாம், ஐந்து கிலோ நிலைமாறு நிறை என வைத்துக் கொண்டால் அணுகுண்டில் 2 கிலோ தனியே 3 கிலோ தனியே என்று பிரித்து வைத்திருப்பார்கள். சாதாரண வெடிகுண்டு மூலமாக வெடிக்க வைத்து பிரிந்து இருக்கும் இரண்டும் மூன்றும் ஒன்று கூடி ஐந்தாக மாற வழிவகுப்பார்கள். அப்புறம் என்ன அணுகுண்டு வெடித்து எல்லாவற்றையும் துவம்சம் செய்யத் துவங்கிவிடும்.

அதனால் தான் அணுஉலைகளில் (அணு மின்சாரம் தயாரிக்க பயன்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டு) யுரேனிய எரிபொருள் சிறு சிறு பெல்லட்களாக நீண்ட குழாய்களில் வைத்து அவை வட்ட வடிவ தாங்கிகளில் சொருகி வைக்கப் பட்டிருக்கும். செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம், அணுஉலைகளில் எரிபொருள் நிரப்பும் வேலை தொடங்கியது என்று. அது கிட்டத்தட்ட ஒரு மாதம் நடக்கும் வேலை.

அணுகுண்டில் ஆரம்பித்து சுவாரசியம் காட்டிவிட்டு அடுத்த அத்தியாயத்திலேயே அதன் அடிப்படை மற்றும் காலக்கிரமப்படியான அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் என்று அலச ஆரம்பிக்கிறார். கதிரியக்கத்தை (ரேடியேஷனை) வெளியிடும் தனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்ட போது கதிரியக்கத்தின் ஆபத்து குறித்த தெளிவான அறிவு விஞ்ஞானிகளுக்கு கூட இல்லை. ஆமாம், ரேடியம் இருளில் ஒளிர்வதைப் பார்த்து, அதனை ஒளிர்வதற்கு ஏதுவாக வீட்டின் படுக்கை அறை வரையில் கொண்டு சென்று வைத்திருந்திருக்கிறார்கள்.

ரேடியம் கலந்த நீரில் குளித்தால் மருத்துவ குணம் என்றெல்லாம் பீலா விட்டு கள்ளா கட்டியுள்ளனர் அந்த காலத்தில். படுக்கை அறையில் கட்டிலுக்கு அலங்காரமாக மேலே தொங்க விட்ட கூத்தெல்லாம் அரங்கேறியுள்ளது.

மூன்றாவது அத்தியாயத்தில் அணுவின் அடிப்படைகளை அலசி ஆராய்கிறார். நியுட்ரான் என்பது ஒரு புரோட்டானும் ஒரு எலக்ட்ரானும் கலந்த ஒரு துகள் என்பதும் ஒரு நியுட்ரானை பிதுக்கினால் ஒரு புரோட்டானும் எலக்ட்ரானும் வெளியே வரும் என்கிற உண்மையையே நான் சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.

கதிரியக்கத் தனிம அணுக்கள் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வெளியிடுவதன் மூலமாக அவை வேறு தனிம அணுக்களாக உரு மாறுகின்றன என்கிற உண்மையை கண்டறிந்தவர்கள் ரூதர்ஃபோர்டு மற்றும் ஃபிரெடெரிக் சோடி ஆவர். ஆனால் இந்த உண்மையை அவர்கள் கூறிய போது அவர்களை பெரிய விஞ்ஞானிகளே கூட கழுவி கழுவி ஊற்றியுள்ளனர். கடைசியில் அவர்கள்  கூறியது தான் உண்மை என்றானது.

செயற்கை முறையில் ஆல்ஃபா கதிர்கள் கொண்டோ அல்லது நியுட்ரான் கொண்டோ தாக்குவதன் மூலமாக எந்த ஒரு தனிமத்தின் ஐசோட்டோப்பையும் (ஒத்த புரோட்டான் எலக்ட்ரான் எண்ணிக்கை ஆனால் வேறுபட்ட நியுட்ரான் எண்ணிக்கை கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோட்டோப்புகள் ஆகும்) செயற்கையாக உருவாக்க இயலும் என்று மேரிக்கியுரியின் மகளான ஐரின் கியுரி தனது கணவருடன் இணைந்து ரூதர்ஃபோர்டின் வழிகாட்டலின் கீழ் கண்டறிந்தார். (ரூதர்ஃபோர்டின் சீடகோடிகளில் 11 போர் நோபல் பரிசு பெற்றவர்கள் என்றால் அவர் எவ்வளவு அருமையான வழிகாட்டியாக இருந்திருப்பார் என்று பாருங்கள்)

அடுத்ததாகத்தான் என்ரிகோ ஃபெர்மி, லிசே மைட்னர் மற்றும் ஆட்டோஹான் முதலியவர்கள் நியுட்ரான்களைக் கொண்டு அணுப்பிளவை சாத்தியமாக்கினர். 5 கிலோ யுரேனியத்தை இரண்டாக பிளந்தால் இரண்டு வேறு வேறு தனிமங்களாகின்றன. ஆனால் அவையிரண்டின் கூட்டு எடை 4.8 கிலோ என்று இருக்கும். மீதமுள்ள 200 கிராம் (இந்த அளவுகள் உதாரணம் தான்) ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாடான E=Mc2 வழி ஆற்றலாக மாறி விடுகிறது என்பது தான் அணுப் பிளவில் வெளிப்படும் ஆற்றலின் தத்துவம்.

அப்புறம் அமெரிக்கா மான்ஹாட்டன் புராஜக்ட் என்கிற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் ரகசிய திட்டத்தை துவங்கியது. ஜெர்மனி விஞ்ஞானிகள் எவரும் அணுகுண்டை தயாரிப்பதற்கு முன்பாக அமெரிக்கா தயாரித்து உலகத்தை ரட்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீனை கடிதம் எழுத வைத்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அவர்களிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த மான்ஹாட்டன் திட்டம் துணை அதிபரான ட்ருமெனுக்கு கூட தெரியாதாம். ரூஸ்வெல்ட் திடீரென மண்டையை போட்டதால் அதிபரான ட்ருமென் அதன் பிறகு தான் அறிந்து கொண்டிருக்கிறார். இவ்வளவு ஏன் அந்த திட்டத்தில் பணியாற்றிய மேல்மட்ட விஞ்ஞானிகள் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கூட அவர்களுக்கான பணி பற்றி மட்டுமே தெரியுமாம்.

அணுகுண்டு தயாரிப்பு, ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் அணு உலைகள் என்று பலவற்றையும் புத்தகம் பேசுகிறது. இவர் அணு உலைகள் காலத்தின் கட்டாயம் அவை ஏராளமாக அமைக்கப் படவேண்டும் என்கிற கட்சி. அணு உலை விபத்தை  சாலை விபத்துடன் ஒப்பிட்டு அணு உலைகள் ஆபத்தானவை என்பது வீண் கற்பனை என்று போகிற போக்கில் சொல்கிறார்.

என்ன தான் எனக்கு பிடித்த அறிவியல் எழுத்தாளர் என்றாலும் அவரது அணுஉலை ஆதரவு கருத்தில் நான் முற்றிலும் முரண்படுகிறேன். உலகில் 15 விழுக்காடே பயன்படுத்தப் படும் அணுமின் சக்தியை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

அணுக்கரு இயற்பியல் பாடத்தை கண்டாலே பின்னாங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளியும் பசங்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ளவற்றை கூறினால் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்பது திண்ணம்.

ஒரு சுவாரசியமான அறிவியல் கட்டுரை தொகுப்பு அனைவரும் வாசியுங்கள்.

2 comments:

  1. "அணு அற்புதம்-அதிசயம்-அபாயம்" - அறிமுகம் செய்துவைத்ததற்கு கோடி நன்றிகள் ... உடனே படிக்கவேண்டும் என்ற ஆவல் எழுகிறது!.

    ReplyDelete
  2. நிச்சயமாக வாசியுங்கள் சார்.
    என்.ராமதுரை அவர்கள் ஒரு விசயத்தை எளிமையாக புரியவைக்க எடுத்துக் கொள்ளும் சிரத்தை ரசிக்கத்தக்கது. அவரது எழுத்தில் நிறைய கற்கலாம்

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...