Monday, May 28, 2018

விடுமுறையில் படித்தவைகள் 1



இந்த கோடை விடுமுறையில் முழுக்க முழுக்க ஓய்வெடுக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. இரவின் அமைதியில் நமது புலன்கள் யாவும் நழுவிச் சென்று உறக்க நிலையை எய்துவது போல பகலில் முடியவில்லை. நானும் மதியங்களில் ஆழ்ந்த உறக்கம் போட்டு விட்டதாக எண்ணி எழுகையில் 30 நிமிடங்களே கடந்திருக்கும். ஆகையால் புத்தகங்கள் இன்றி ஓய்வு ஏது?


முதலில் மேலாண்மைப் பொன்னுச்சாமி எழுதிய ”முற்றுகை” என்ற நாவலை வாசித்தேன். சொர்ணம் என்கிற வாழ்ந்து கெட்ட மேல்ஜாதிக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கதை. அவள் அழகைக் கண்டு அவளை அடைய எண்ணுகிறார் அவளது அக்கா கணவர் இரண்டாம் தாரமாக. குடும்பம் இருக்கும் சூழலில் அது சரியே என்று சம்மதிக்கிறார் அவளது அம்மா. அடுத்து அவள் பணிபுரியும் தீப்பெட்டி தொழிற்சாலை முதலாளி தன்னை முதலாளி ஆக்கியதால் அழகற்ற பெண்ணைக் கட்டிக்கொள்கிறான் மேலும் குழந்தை இல்லை எனவே அவருக்கும் சொர்ணத்தை அடைய ஆசை. அக்கா கணவரின் சூழ்ச்சியில் இருந்து தப்புவிக்க கேட்டு அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பண்ணைக் காரனின் பேரனும் தற்போது படித்து நல்ல வேலையிலும் தொழிற்சங்கவாதியாகவும் உள்ள பாரதியை நாடுகிறாள். பாரதி அவனுடைய காதலை நாகரிகமான முறையில் தெரிவிக்கிறான். அக்கா கணவரின் முற்றுகை மற்றும் சாதி மாறுபாடு காரணமாக தனக்கு விருப்பமில்லா பாரதியின் காதல் ஆசை இவற்றில் இருந்து தப்ப எண்ணி அவள் ஆலை முதலாளியின் ஆசை நாயகி ஆக முடிவெடுக்கிறாள் என்று கதை முடிகிறது.
நாவல் ஆசிரியர் எம்.பி.ஏ படித்திருப்பார் அதனால் மேலாண்மைப் பொன்னுச்சாமி என்று போட்டுக் கொள்கிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மேலாண்மை என்பது அவரது ஊரைக் குறிக்கும் குறியீடு என்று பிறகுதான் தெரியவந்தது.

அடுத்த நாவல் டாக்டர் மு.வ அவர்கள் எழுதிய “நெஞ்சில் ஒரு முள்” என்கிற நாவல். ஒரு நடுத்தர வர்க்கத்து முதிர்கன்னி வடிவு பி.ஏ படித்தவள். (கதைக்களம் 60-70களில் என்பதை மனதில் இருத்தவும்) அவள் படிப்புக்கேற்ற வேலையோ அல்லது வரனோ அமையவில்லை.
பணக்கார சீமாட்டி ஒருத்து வீட்டுக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக அவளை வேலைக்கு அமர்த்துகிறாள். அவருக்கு இரண்டு பெண்கள். பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாள். யாரையாவது காதலித்து அழைத்து வாருங்கள் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்கிற அளவில் சுதந்திரம் வழங்குகிறாள். அவளே வடிவுக்கும் இரண்டாம் தாரமாக ஒரு முக்கால் கிழவனை பார்த்து வடிவு மற்றும் பெற்றோரை திருமணத்தினால் கிடைக்கும் வசதியான வாழ்க்கையை கூறி சமாதானம் செய்து திருமணம் நடத்தி வைக்கிறாள். அவனோ ஒரு குடிகாரன் சூதாடி மற்றும் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்புபவன்.
ஒரு முறை சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வரும் வடிவு அங்கே பெற்றோர் இல்லாத காரணத்தினால் மறுபடியும் இரயில்வே ஸ்டேஷன் செல்ல முயல்கையில் அவளது முன்னால் காதலனைக் காண்கிறாள். அவன் வீட்டில் மனைவி மக்கள் இல்லாத சந்தர்ப்பாமாக போய்விட இருவரும் உல்லாசமாக இருந்து விடுகிறார்கள். வடிவு குற்ற உணர்ச்சியில் புழுவாக துடிக்கிறாள். அதன் பிறகு கணவனுக்கு இணங்கி சகித்து வாழ்கிறாள். இதற்கிடையில் அவள் கர்ப்பமடைகிறாள். அவள் கணவன் தனது வாரிசு என்று சந்தோஷப்பட்டு பொறுப்பானவனாக மாறுகிறான். இவள் அந்த கருவின் விதை தனது காதலன் போட்டது என்று உணர்ந்து மனதினுள் வருந்தியபடி இருக்கிறாள். மகனும் பிறந்து பொறுப்பாக வளர்ந்து கல்லூரி செல்கிறான். அங்கே அன்பரசி என்ற பெண்ணை காதலிக்கிறான். இரு குடும்ப பெற்றோரும் மிகவும் பெருமிதமாக அவர்களின் படிப்பில் உள்ள பொறுப்பையும் காதலில் உள்ள கண்ணியத்தையும் நோக்குகிறார்கள்.
விஜயா குடும்பம் பொறுப்பற்ற வாழ்க்கை நடத்திய காரணத்தினால் குடும்பம் வசதி வாழ்க்கை எல்லாம் இழந்து நோய்வாய்ப் பட்டு விஜயா இறந்து போகிறாள். வடிவின் கணவனின் நண்பரான ஜமீன்தார் இறந்து போகிறார். வடிவின் கணவன் இறந்து போகிறான்.
திடீரென ஒருநாள் மகனின் காதலனான அன்பரசி தன் முன்னாள் காதலனின் மகள் என உணர்கிறாள். வடிவின் மகன் கண்ணழகனுக்கும் அன்பரசியின் தந்தை தான் ”பயாலஜிக்கல் ஃபாதர்”. எனவே திடீரென மகனின் காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு அந்த வலியை தாங்க முடியாமல் அனாதை இல்லம் ஆரம்பிக்கிறாள் என கதையை முடிக்கிறார்.
கதையின் முக்கிய சாராம்சமாக கதையின் இடையிலேயே ஒரு விஷ(ய)த்தை முன்வைக்கிறார் மு.வ ”நெறிபிறழ் நடத்தைக்குச் சென்று மீண்ட பெண்கள் கணவனுக்கு கட்டுப் பட்டு இல்லறத்தை நடத்துகிறார்கள். மற்றோர் தனது கற்பின் நேர்மை குறித்த செறுக்கோடு கணவனின் சொல்பேச்சைக் கேட்பதில்லை”
கதைமாந்தர் சொல்வது போல மற்றொரு முரணான கருத்தை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ”ஆத்திகர்கள் எப்போதும் பிறர் நலத்தை மனதில் எண்ணி அன்பொழுக கடவுளை வணங்கி வாழ்கிறார்கள், நாத்திகர்களோ எப்போதும் தன்னலத்தையே பெரிதாக எண்ணி கடவுளை வணங்காமல் ஒழுக்கமற்று திரிகிறார்கள்” என்கிறார். இதையே கண்ணதாசனும் அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற குப்பையில் கூறியிருக்கிறார்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...