Thursday, December 22, 2022

கணித ஆசிரியர்கள் என்ன வில்லன்களா?!!

 மு.ஜெயராஜ்,

கணித ஆசிரியர் (தற்போது தலைமையாசிரியராகவும் உள்ளார்)

அரசு உயர்நிலைப்பள்ளி,

நாகமங்கலம்.


கணித ஆசிரியர்கள் என்ன வில்லன்களா?!!



கணக்கு வாத்தியார் பி டி பீரியடை கடன் வாங்கி விடுகிறார்!!

கணக்கு வாத்தியார் எம் ஐ பீரியடை எடுத்துக் கொள்கிறார்!!

கணக்கு வாத்தியார் பசங்களை விளையாட அனுமதி இல்லை!!


இதெல்லாம் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் கணித ஆசிரியர்களை நோக்கி மீம்கள் வடிவில் எய்யப்படும் புகார் அம்புகள். சமீபத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூட கணித ஆசிரியர்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார் "விளையாட்டு பீரியட் விளையாட்டுக்காக மட்டுமே கணிதம் உட்பட யாரும் கடன் வாங்க கூடாது.


ஆனால் கணித ஆசிரியர்களின் வேதனை யாருக்கும் புரிவதில்லை.

90 களில் இருந்த கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் இப்போது இருக்கும் கணித பாட புத்தக உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் எவ்வளவு தூரம் உள்ளடக்கத்தை  திணித்து உள்ளோம் என்பது புரியும்.


நான் பள்ளி படித்த காலங்களில் பாட அறிமுகம் எடுத்துக்காட்டு இவற்றை படித்துவிட்டு பயிற்சியில் உள்ள கணக்குகளை தானாகவே முயன்று போடும் அளவுக்கு எளிமையாக இருந்தது. ஐந்து கணக்குகள் எடுத்துக்காட்டில் இருக்குமானால் அதே ஐந்து கணக்குகளின் அடியொட்டியே பயிற்சியிலும் இருக்கும் எனவே எடுத்துக்காட்டு கணக்குகள் போட்டோம் என்றால் பயிற்சி கணக்கு எளிதாக போட்டுவிடலாம்.


ஆனால் இப்போது பாட அறிமுகம் , ஒரு ஐந்து விதமான எடுத்துக்காட்டு கணக்குகள் இருக்கும் ஆனால் பயிற்சியில் உள்ள கணக்கு முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.


எனவே எடுத்துக்காட்டில் போட்ட அனுபவத்தை வைத்து பயிற்சி கணக்கை போட இயலாத சூழல். ஆக, எடுத்துக்காட்டு கணக்குகளையும்  பயிற்சியில் உள்ள கணக்குகளையும்  ஆசிரியரே மாணவர்களுக்கு நடத்தியாக வேண்டிய சூழல்.


கணித பாட புத்தக வடிவமைப்பின் அடிப்படை இரண்டு விஷயங்களை கணக்கில் கொண்டு உருவாக்கப்படும்.


தம் அன்றாட வாழ்வில் பயன்படும் விஷயங்களை தீர்க்க உதவும் கணக்குகள் மற்றும் மேல் வகுப்பில் வரக்கூடிய அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விஷயங்களுக்கான அடிப்படை கூறுகளை உள்ளடக்கிய கணக்குகள். இந்த அடிப்படையில் அமைந்தாலே புத்தகத்தின் உள்ளடக்கம் மாணவர்கள் ஆவலோடு முயலும் வகையில் அமையும்.


IIT JEE, NEET போன்ற தேசிய நுழைவு தேர்வுகளின் சிலபசை உள்ளடக்கும் விதமாக பாடங்களை கட்டமைக்க துவங்கிய பிறகு புத்தகங்களின் உள்ளடக்கம் மிக மிக அதிகமாக ஆகிவிட்டது.


இந்த விஷயம் 6 முதல் 12 வரை அனைத்து வகுப்பு பாடங்களில் பாடப் புத்தகங்களையும் பெருக்கச் செய்து விட்டது என்பது நிதர்சனம் அதில் மோசமான அளவு பாதிக்கப்பட்டது கணக்கு என்றே சொல்லலாம்.


ஆனால் பாடங்களை நடத்துவதற்கான வகுப்பு ஒதுக்கீடு என்பது ஒரு வாரத்திற்கு ஏழு பாட வேலைகள் மட்டுமே. இந்த ஏழும் ஒவ்வொரு வாரமும் முழுமையாக கிடைக்குமா என்றால் நிச்சயமாக இல்லை.


 தற்போதைய காலகட்டங்களில் அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிக்கு இடையூறாக ஏராளமான காரணிகள் நுழைய துவங்கிவிட்டன. 


 விழிப்புணர்வு ஊர்வலங்கள், பயிற்சிகள், வினாடி வினா போட்டிகள், கலை பண்பாட்டு போட்டிகள் போன்ற பல விஷயங்கள் மாணவர்களின் பாட வேளைகளில் இருந்து தான் எடுத்து நடத்தப்படுகின்றன. 


 அது அல்லாமல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் அடிக்கடி நடந்த வண்ணமே உள்ளது. இதுவன்றி ஒவ்வொரு ஆசிரியரும் தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளது.


 இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த மீதமுள்ள பாடவேளைகளில் சிலபஸை முடிக்க வேண்டிய கட்டாய சூழல்.


மற்ற பாடங்களை சூழலுக்கு தக்க வேகம் குறைவாக்கியோ அதிகமாக்கியோ நடத்தலாம். "சிலபஸ் முடிக்கணும் நான் ஓடப்போறேன்" என்றால் பசங்க படுத்துடுவாங்க


"அட ஏம்பா அவசரப்படுறீங்க, மெதுவாத்தான் நடத்துங்களேன்" என்றால் இயலாது. June to November உள்ள நாட்களில் காலாண்டு தேர்வு லீவு, பண்டிகைகள் மழை புயல் என எல்லாம் போக மீதமுள்ள நாட்களில் எல்லா பாடங்களையும் நவம்பருக்குள் முடித்தால் தான்கொஞ்சமாவது திருப்புதல் செய்து மெல்லக்கற்போரை குறைந்த பட்ச தேர்ச்சி இலக்கை நோக்கி "முடுக்க" முடியும். 


அதனால் தான் கிடைக்கும் எல்லா கேப்களிலும் கெடா வெட்ட முயல்கிறார்கள் கணித ஆசிரயர்கள்.


சாக்பீசோடு கைகோர்த்த நாள்முதல் பலருக்கு அலர்ஜி ஆஸ்துமாவாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் மாணவர் வளர்ச்சியை சமரசம் செய்து கொள்ள மனமில்லாமல் தான் மற்ற ஆசிரியர்களின் பீரியடை கேட்டு கையேந்துகிறார்கள். அதுவும் கிடைக்க வில்லை என்றால் சனிகிழமைகளில் சிறப்பு வகுப்பு வைக்கிறார்கள்.


நிச்சயமாக விளையாட்டு பாடவேளைகள் விளையாடுவதற்கே அதில் இருவேறு கருத்து இல்லை. அதே நேரம் புத்தகம் பிதுங்க பிதுங்க இருக்கும் உள்ளடக்கத்தை சற்று குறைத்தாலே நேரநிர்வாகம் வசப்படும். ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்கள் மீதான அழுத்தமும் குறையும்.


"அப்போ பசங்க ஐஐடி நீட்லாம் போக கூடாதா?!" நிச்சயமாக போக வேண்டும். அதற்கு முனைப்பு உள்ள குழந்தைகளுக்கு மட்டும் துணைப்பாட நூல் வழங்கி தற்போது பள்ளி தோறும் செயல்படும் அரசின் JEE/NEET / CA பயிற்சிகளில் பிரிவுக்கேற்ப படிக்கட்டுமே!!


அதற்காக சராசரி மற்றும் மெல்லக் கற்போரை பயமுறுத்தி வெளியேறச் செய்ய வேண்டாம் அல்லவா?!


குறைவான உள்ளடக்கம் அது சார்ந்து அனைத்து பரிமாணங்களிலும் ஏராளமான சிந்தனையை தூண்டும் கணக்குகளை மாணவர்கள் தாமாக போடும் வகையில் புத்தகங்களை உருவாக்கி கொடுங்கள் அப்புறம் பாருங்கள் கணிதம் கற்கண்டாகும்.

Saturday, November 5, 2022

மாநிலக் கல்விக் கொள்கை- என்னுடைய ஆலோசனைகள்

 மாநிலக் கல்விக் கொள்கைகள்  வகுக்க அமைக்கப்பட்ட குழு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகளை கேட்டறிந்தது.


ஆசிரயராகவும், தலைமையாசிரியர் என்கிற வகையிலும் எனது அனுபவங்கள் வழி எனக்கு தோன்றியவற்றை  தொகுத்து மின்னஞ்சலில் ச. மாடசாமி அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.


 மாநிலக் கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்திலும் அரியலூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட குழுவில் சென்று நேரில் வழங்கிவிட்டு மைக் என்வசம் வந்தபோது எனது கருத்துகளில் இருந்து சில முக்கியமான விவரங்களை பேசினேன்.


நான் வழங்கிய கருத்துகள் இதோ:


மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்


கற்றல் கற்பித்தல்


பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையாக நடத்திக் கொண்டு செல்வோமானால் 700க்கு அதிகமாக பக்க அளவு கொண்ட பாடங்களை முடிப்பது சாத்தியமில்லை. 


மாறாக கற்றல் விளைவு ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களை பாடநூல் மற்றும் வெளியே இருந்தும் தகவல்களை திரட்டி கற்பித்தலை சுவாரசியமாகவும் உரையாடல் வடிவிலேயும் கொடுக்க வகைசெய்யும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 


 பாடம் சார் தேடலைத் தூண்டுவது மட்டுமே ஆசிரியரின் செயலாக இருக்க வேண்டும். மேலதிக விஷயங்களை பாடநூலின் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வழியாகவும் மாணவர்கள் கற்று தேற வேண்டும்.


கற்பித்தல் என்பது லெக்சர், செயல்திட்டம்,புதுமையான செயல்பாடுகள் (Novel activities) களப்பயணம், பாடப்பகுதியை கலையாக்கம் செய்து கற்பித்தல் என ஜனரஞ்சமாக மாற வழிவகை செய்ய வேண்டும்.


தன்சுத்தம், கழிவறைப் பயன்பாடு, பதின்பருவ உடல் வளர்ச்சி மாற்றங்கள் போன்றவை குறித்த நம்பகமான கருத்துகளை குழந்தைகள் அறிந்து கொள்ளல் வேண்டும். அதனை உரிய பாடத் திட்டங்கள் வாயிலாக உரிய வயது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடங்கள் திட்டமிடப் பட வேண்டும்.


மொழிப் பாடங்களில் நூலக வாசிப்பு, மேடைப் பேச்சு, பொதுத்தலைப்புகள், நடப்பு கால நிகழ்வுகள் குறித்த பேச்சு அல்லது கட்டுரை போன்றவைகளை இணைத்து அவற்றுக்கு மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.


தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே இணைய பயன்பாடு, Word, Excel, Power Point,  காணொலி உருவாக்கம், மின்னணு கருவிகள் கையாளுதல் போன்ற விஷயங்கள் அறிவியல் பாடத்திட்டங்களில் வயதுக்கேற்ற அளவில் அறிமுகம் செய்யப் பட்டு செய்முறை மதிப்பீடுகள் வழங்கப் பட வேண்டும்.


உள்ளூர் வரலாறு, உள்ளூர் விவசாயம், கலைப் பொருட்கள், வரலாற்று புகழ் வாய்ந்த தொன்மையான பகுதிகள், கலைகள், கைவினைப் பொருட்கள் என உள்ளூரை மையப் படுத்திய விஷயங்களை மாவட்ட அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்கும் வண்ணம் பாடத்திட்டங்களில் ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த வேண்டும்.


வகுப்பில் ஒரு குழந்தைகூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளின் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை திட்டமிட வேண்டும். பாடப் பொருளை விட அனைத்து குழந்தைகளின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.


    **************************


இணை மற்றும் துணை செயல்பாடுகள்


1. மாதம் ஒரு களப் பயணவழி கற்றல் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள் மாட்ட அளவில் போக்குவரத்து துறையோடு  இணைந்து  திட்டமிடப்பட வேண்டும்


2. தினந்தோறும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மாணவர்தம் ஆர்வத்திற்கேற்ப உள் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளை விளையாட வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.


3. வாரம் தோறும் பள்ளி அளவில் போட்டிகள்,  மன்றக் கூட்டங்கள், கருத்தாளர்கள் வருகை  இருக்குமாறு வாரத்தில் ஒரு நாளில் மதியம் கடைசி இரு பாடவேளைகளை திட்டமிட வேண்டும்.


4. கல்விச்சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்ல வழிவகை செய்தல் வேண்டும்.


5.  தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தோல்விகளை ஏற்றுக் கொண்டு கற்கப் பழகுதல், தற்கொலைக்கு எதிரான மனநிலை, நல்லொழுக்கம், வன்முறைக்கு எதிரான மனநிலை, சமூக நல்லிணக்கம், சமத்துவ எண்ணம், பாலின சமத்துவம் போன்றவைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வடிவமைத்து மதிப்புக் கல்வி (Value Education) வழங்கப் பட வேண்டும்.


6. பேசு- மாணவர் மனசு- மாணவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு வழிவகை செய்து ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு பாடவேளை திட்டமிடப் பட வேண்டும்.


7. பல்வகை மன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அளவில் திட்டமிடல் செய்து சிறப்பான பொது செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளும் பொதுவான கால அட்டவணைப்படி செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும்.


8. பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பல தரப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஒரு வழிகாட்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும்.


***********************************


மதிப்பீட்டு முறை


நமது மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் மதிப்பெண்களை துரத்துவதாகவே அமைந்துள்ளது.


 அந்த மதிப்பெண்களும் வாசித்து மனப்பாடம் செய்து எழுதும் ஒற்றை திறமை மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்பது வேதனை.


குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை விதைப்பதோடு மட்டுமின்றி சில குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிஞ்சு மனதில் அழுத்தத்தையும் வேதனையையும் இந்த மதிப்பீட்டு முறை ஏற்படுத்துகிறது.


பாகுபாடுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பு மதிப்பெண் மூலம் ஏற்படுத்தப் படும் படிநிலைகளை விரும்புகிறது. 


“உங்கள் பையன் சிறப்பாக இருக்கிறான்“ என்று கூறினால் பெற்றோருக்கு திருப்தி இல்லை. அதுவே ஒரு எண்ணை கூறி ” உங்கள் பையன் இவர்கள் அனைவரையும் விட மேலானவனாக உள்ளான் ” என்று கூறினால் பரம திருப்தி அடைய பழகிவிட்டார்கள். எனவே தான் CCE மதிப்பீட்டு முறை பரவலான வரவேற்பை பெற இயலாமல் போனது.


1. தேர்வு என்பது மனப்பாடம் செய்வது எழுதுவது என்ற ஒற்றைத் தன்மையில் இருந்து மாறவேண்டிய நேரம் இது. உரையாற்றுதல், செயல்திட்டம் சமர்ப்பித்தல், களப்பயண தகவல் சேகரிப்பு, கலையாக்க செயல்பாடு என இன்னும் பல கூறுகளை உள்ளடக்கிய வகையிலான மதிப்பீட்டு முறையை கண்டறிய வேண்டும். அனைத்து விதமான திறன்களையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த புதிய முறை இருக்க வேண்டும்.


2. வருடம் முழுவதும் படித்து வருட இறுதியில் தேர்வு என்பதை விட “கற்றல் விளைவுகள்“ வாரியான செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 50  விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள 50 விழுக்காடு வருட இறுதியில் மேலே சொன்னவாறு புதிய முறையில் தேர்வு வைத்து வழங்கப் பட வேண்டும்.


3. பல்வகை திறன்களை பாடத்தோடு இணைத்து வெளிப்படுத்தும் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படாது மாறாக தேர்வினை ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.


4. கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த பாடத்திறன்களையும் ஒற்றைத் தேர்வுத்தாளில் கொட்டி மதிப்பெண் எதிர்நோக்கி காத்திருக்கும் முறையை குறைத்துக் கொள்ள வேண்டும்.


5.  தேர்வு முறைக்குள் அனைத்து மாணவர்களின் துடிப்பான பங்கேற்பும் இடம் பெறும் வண்ணம் கடினப் பட்டு போய் கிடக்கும் இந்த வழக்கமான தேர்வு முறையை மாற்றி பன்முகத்தன்மை உடையதாக மாற்றி அமைக்க வேண்டும்.


மு.செயராசு

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

நாகமங்கலம்

அரியலூர் மாவட்டம்

9790225620

jayarajsir@gmail.com


Thursday, November 3, 2022

Stop not your struggle till last breath

 "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் " யாருக்கு?! யாருக்கோ!!




ஆமாம் எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இந்த மரத்தின் நுனிக்கொம்பில் உள்ள தழையை உண்ண ஆசைப்பட்டு முன்னங்காலை தூக்கி வைத்து ஊன்றி இழுத்து வளைத்து இந்த மரத்தை குற்றியிலும் கொலையுயிருமாக  போட்டுவிட்டு ஓடிவிட்டன வழக்கமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாகமங்கலம் ஆடுகள்!!

வளாகத்தில் மேய்வதற்கு வாகாக எவ்வளவு தான் புதர்களும் புல்லும் மண்டி கிடந்தாலும் இந்த ஆடுகளுக்கு நுனிக்கொம்பில் உள்ள ருசியான இலைகள் தான் இலக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மரம் வளர்ந்த போது விறுவிறு என வளர்ந்து பூமியோடு 90 டிகிரி கோணத்தில் கணகம்பீரமாக காட்சியளித்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் அதனை வளைத்த காரணத்தால் கூன் விழுந்து  முப்பது டிகிரிக்கு சாய்ந்து விட்டது.

அந்த மரத்தின் இடுக்கண் கலைவதற்காக ஒரு கோலினை ஊன்றி அதை ஒரு 80 டிகிரி அளவிற்கு நிமிர்த்தினோம் ஆனாலும் அந்த ஊன்றுகோலை அடுத்த சில வாரங்களிலேயே தட்டி விட்டன அந்த அடங்காத ஆடுகள்.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஓரளவு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைந்துவிட்டது. ஆடுகளின் தொல்லை வெகுவாக குறைந்து போய்விட்டது. ஆனால் கூன் விழுந்து போன அந்த மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவே இயலவில்லை ஏனென்றால் 30 லிருந்து 80க்கு மீண்டும் நிமிர்த்தி கட்டினால் அந்த மரம் முறிந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
அதனால் அதை எதுவுமே செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள், முடிந்தால் பிழைக்கட்டும் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

இங்கேதான் அந்த மரத்தின் தற்காப்பு உத்தி (struggle for survival) வேலை செய்யத் தொடங்கியது.

ஆமாம், பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் நடத்திய பௌதிகம் மாணவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ அந்த மரத்துக்கு புரிந்து போனது என்று நினைக்கிறேன்.

ஆமாம் கிழக்கு பக்கமாக முப்பது டிகிரி சாய்ந்து இருக்கும் மரத்தை நிமிர்த்துவதற்காக மேற்கு பக்கம் நிமிர்த்தும் வகையில் மரத்தண்டில்   இடையில் இருந்து அங்கங்கே கிளைகள் தோன்றி செங்குத்தாக வளர துவங்கியது சிறிது நாட்களில் மரமும் மெல்ல மெல்ல எழும்பி தற்போது இந்த அளவில் உள்ளது.

தற்காப்பு உத்தி சூழலுக்கு தக்கவாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள மரங்கள் எந்த அளவுக்கு பௌதிகத்தை துணைக்கு அழைத்துக் கொள்கின்றன என்பதை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பப்பா இயற்கையில் தான் எவ்வளவு விந்தைகள்?!

இதற்கு பின்புலத்தில் உள்ள அறிவியல் ஏதேனும் இருந்தால் விஷயம் அறிந்தவர்கள் விளக்கிக் கூறுங்கள்.





Saturday, October 15, 2022

மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்

 மாநிலக் கல்விக் கொள்கை- சில ஆலோசனைகள்


கற்றல் கற்பித்தல்


பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையாக நடத்திக் கொண்டு செல்வோமானால் 700க்கு அதிகமாக பக்க அளவு கொண்ட பாடங்களை முடிப்பது சாத்தியமில்லை. மாறாக கற்றல் விளைவு ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொண்டு செல்ல தேவையான விஷயங்களை பாடநூல் மற்றும் வெளியே இருந்தும் தகவல்களை திரட்டி கற்பித்தலை சுவாரசியமாகவும் உரையாடல் வடிவிலேயும் கொடுக்க வகைசெய்யும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். 

 ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு பாடம் சார் தேடலைத் தூண்டுவது மட்டுமே ஆசிரியரின் செயலாக இருக்க வேண்டும். மேலதிக விஷயங்களை பாடநூலின் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வழியாகவும் மாணவர்கள் கற்று தேற வேண்டும்.

கற்பித்தல் என்பது லெக்சர், செயல்திட்டம்,புதுமையான செயல்பாடுகள் (Novel activities) களப்பயணம், பாடப்பகுதியை கலையாக்கம் செய்து கற்பித்தல் என ஜனரஞ்சமாக மாற வழிவகை செய்ய வேண்டும்.

தன்சுத்தம், கழிவறைப் பயன்பாடு, பதின்பருவ உடல் வளர்ச்சி மாற்றங்கள் போன்றவை குறித்த நம்பகமான கருத்துகளை குழந்தைகள் அறிந்து கொள்ளல் வேண்டும். அதனை உரிய பாடத் திட்டங்கள் வாயிலாக உரிய வயது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பாடங்கள் திட்டமிடப் பட வேண்டும்.

மொழிப் பாடங்களில் நூலக வாசிப்பு, மேடைப் பேச்சு, பொதுத்தலைப்புகள், நடப்பு கால நிகழ்வுகள் குறித்த பேச்சு அல்லது கட்டுரை போன்றவைகளை இணைத்து அவற்றுக்கு மதிப்பீடுகள் வழங்கவும் வகை செய்ய வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. எனவே இணைய பயன்பாடு, Word, Excel, Power Point,  காணொலி உருவாக்கம், மின்னணு கருவிகள் கையாளுதல் போன்ற விஷயங்கள் அறிவியல் பாடத்திட்டங்களில் வயதுக்கேற்ற அளவில் அறிமுகம் செய்யப் பட்டு செய்முறை மதிப்பீடுகள் வழங்கப் பட வேண்டும்.

உள்ளூர் வரலாறு, உள்ளூர் விவசாயம், கலைப் பொருட்கள், வரலாற்று புகழ் வாய்ந்த தொன்மையான பகுதிகள், கலைகள், கைவினைப் பொருட்கள் என உள்ளூரை மையப் படுத்திய விஷயங்களை மாவட்ட அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்கும் வண்ணம் பாடத்திட்டங்களில் ஒரு நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

வகுப்பில் ஒரு குழந்தைகூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளின் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை திட்டமிட வேண்டும். பாடப் பொருளை விட அனைத்து குழந்தைகளின் பங்கேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து இல்லாமல் அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான அனுகுமுறை சார்ந்து பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும்.

பி.எட் கல்லூரிகளில் வழங்கப் படும் பாடத்திட்டத்தில் கல்வி சார் ஆளுமைகள் மற்றும் புதுமையான உத்திகளை கண்டறிந்து பயன்படுத்தும் ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலில் இருந்து மாணவர்கள் கற்றுக் கொண்ட செய்திகளை மதிப்பீடு செய்யலாம்.







இணை மற்றும் துணை செயல்பாடுகள்

1. மாதம் ஒரு களப் பயணவழி கற்றல் முறை கட்டாயமாக்கப் பட வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள் மாட்ட அளவில் போக்குவரத்து துறையோடு  இணைந்து  திட்டமிடப்பட வேண்டும்

2. தினந்தோறும் ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். மாணவர்தம் ஆர்வத்திற்கேற்ப உள் மற்றும் வெளியரங்க விளையாட்டுகளை விளையாட வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.

3. வாரம் தோறும் பள்ளி அளவில் போட்டிகள்,  மன்றக் கூட்டங்கள், கருத்தாளர்கள் வருகை  இருக்குமாறு வாரத்தில் ஒரு நாளில் மதியம் கடைசி இரு பாடவேளைகளை திட்டமிட வேண்டும்.

4. கல்விச்சுற்றுலா அரசு செலவில் அழைத்துச் செல்ல வழிவகை செய்தல் வேண்டும்.

5. தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தோல்விகளை ஏற்றுக் கொண்டு கற்கப் பழகுதல், தற்கொலைக்கு எதிரான மனநிலை, நல்லொழுக்கம், வன்முறைக்கு எதிரான மனநிலை, சமூக நல்லிணக்கம், சமத்துவ எண்ணம், பாலின சமத்துவம் போன்றவைகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை வடிவமைத்து மதிப்புக் கல்வி (Value Education) வழங்கப் பட வேண்டும்.

6. பேசு- மாணவர் மனசு- மாணவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு வழிவகை செய்து ஆலோசனை வழங்கும் வகையில் ஒரு பாடவேளை திட்டமிடப் பட வேண்டும்.

7. பல்வகை மன்ற செயல்பாடுகளுக்கு மாவட்ட அளவில் திட்டமிடல் செய்து சிறப்பான பொது செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளும் பொதுவான கால அட்டவணைப்படி செய்யுமாறு அறிவுறுத்தப் பட வேண்டும்.

8. பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பல தரப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஒரு வழிகாட்டு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும்.


மதிப்பீட்டு முறை

நமது மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் மதிப்பெண்களை துரத்துவதாகவே அமைந்துள்ளது. அந்த மதிப்பெண்களும் வாசித்து மனப்பாடம் செய்து எழுதும் ஒற்றை திறமை மூலம் மட்டுமே பெறப்படுகிறது என்பது வேதனை.

குழந்தைகள் மத்தியில் பாகுபாட்டை விதைப்பதோடு மட்டுமின்றி சில குழந்தைகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி பிஞ்சு மனதில் அழுத்தத்தையும் வேதனையையும் இந்த மதிப்பீட்டு முறை ஏற்படுத்துகிறது.

பாகுபாடுகள் நிறைந்த இந்த சமூக அமைப்பு மதிப்பெண் மூலம் ஏற்படுத்தப் படும் படிநிலைகளை விரும்புகிறது. “உங்கள் பையன் சிறப்பாக இருக்கிறான்“ என்று கூறினால் பெற்றோருக்கு திருப்தி இல்லை. அதுவே ஒரு எண்ணை கூறி ” உங்கள் பையன் இவர்கள் அனைவரையும் விட மேலானவனாக உள்ளான் ” என்று கூறினால் பரம திருப்தி அடைய பழகிவிட்டார்கள். எனவே தான் CCE மதிப்பீட்டு முறை பரவலான வரவேற்பை பெற இயலாமல் போனது.

1. தேர்வு என்பது மனப்பாடம் செய்வது எழுதுவது என்ற ஒற்றைத் தன்மையில் இருந்து மாறவேண்டிய நேரம் இது. உரையாற்றுதல், செயல்திட்டம் சமர்ப்பித்தல், களப்பயண தகவல் சேகரிப்பு, கலையாக்க செயல்பாடு என இன்னும் பல கூறுகளை உள்ளடக்கிய வகையிலான மதிப்பீட்டு முறையை கண்டறிய வேண்டும். அனைத்து விதமான திறன்களையும் அங்கீகரிக்கும் வண்ணம் இந்த புதிய முறை இருக்க வேண்டும்.

2. வருடம் முழுவதும் படித்து வருட இறுதியில் தேர்வு என்பதை விட “கற்றல் விளைவுகள்“ வாரியான செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 50  விழுக்காடு மதிப்பெண்களும் மீதமுள்ள 50 விழுக்காடு வருட இறுதியில் மேலே சொன்னவாறு புதிய முறையில் தேர்வு வைத்து வழங்கப் பட வேண்டும்.

3. பல்வகை திறன்களை பாடத்தோடு இணைத்து வெளிப்படுத்தும் புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்படாது மாறாக தேர்வினை ஆர்வத்துடன் எதிர் நோக்கி காத்திருப்பார்கள்.

4. கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த பாடத்திறன்களையும் ஒற்றைத் தேர்வுத்தாளில் கொட்டி மதிப்பெண் எதிர்நோக்கி காத்திருக்கும் முறையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

5. தேர்வு முறைக்குள் அனைத்து மாணவர்களின் துடிப்பான பங்கேற்பும் இடம் பெறும் வண்ணம் கடினப் பட்டு போய் கிடக்கும் இந்த வழக்கமான தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.


மு.செயராசு

தலைமையாசிரியர்

அரசு உயர்நிலைப் பள்ளி

நாகமங்கலம்

அரியலூர் மாவட்டம்

9790225620

jayarajsir@gmail.com 


Tuesday, May 31, 2022

பாம்பாயணம்

 பாம்பாயணம்



டிவி யில் நீயா படத்தில் இருந்து “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா, ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா…” என்ற பாடலுக்கு ஸ்ரீபிரியா வளைந்து நெளிந்து பாம்பு போல ஆடியபடி சக பாம்பு காதலனை குஷியோடு அழைத்தார். இந்த பாடல் பார்த்து பாம்புகள் பரவசம் அடைவதில்லை. ஆனால் இமைக்கா விழிகளில் நீர் வடிய இந்த பாடல்களை நம்ம பசங்க பார்த்து பரவசம் அடைகின்றனர். 

சரி, விஷயத்திற்கு வருவோம். இச்சாதிரி நாகப் பாம்புகள் நூறு ஆண்டுகள் தங்களது விஷத்தை விரயம் செய்யாமல் காத்துவந்தால் (என்னப்பா இது சிவராஜ் சித்த வைத்தியசாலை வைத்தியர் மாதிரி பேசுறீங்க) அது மாணிக்க கல்லாக மாறும். அந்த கல்லை கக்கி வைத்து விட்டு அந்த வெளிச்சத்தில் அது இரை தேடும் அல்லது இணையோடு கூடும் என்று கலர் கலரா ரீல் விட்ருக்காங்க.

என்னப்பா, இல்லங்குறியா?

அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. பாம்பின் விஷத்தில் வெவ்வேறு வகை புரோட்டீன்களும் என்சைம்களும் இன்னபிற மினரல்களும் உள்ளன. அவை எப்போதும் திரண்டு நாகரத்தினமாக மாறி ஜொலிக்காது என்ற வருத்தமான உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

பாம்போட விஷம் கொல்லுமா கொல்லாதா?

சில கடுமையான விஷப் பாம்புகள் (இந்திய வகை பாம்புகளில் 10 விழுக்காடுதான் மரணத்தை ஏற்படுத்தவல்ல விஷத்தன்மை வாய்ந்தவை மற்றவை எல்லாம் ரொம்ப சாது தான்) இரண்டு வகைகளில் மரணத்தை ஏற்படுத்துகின்றன.

முதல் வகை ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுத்தி கொல்லுதல். ஆமாம், இந்த வகை விஷம் ரத்த நாளங்களில் உள்ளே நுழைந்தவுடன் ரத்தங்களை சிறு சிறு கட்டிகளாக உறையச் செய்துவிடும். இதனால் ரத்த நாளங்களில் துவாரங்கள் விழுந்து ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடும். அப்புறம் என்ன ரத்த ஓட்டம் இல்லன்னா மர்கயா தான்.

இரண்டாம் வகை நரம்பு மண்டலங்களை பாதிப்பது. ஆமாம் இந்த வகை மூளையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கும். மூளையில் இருந்து தசைகளுக்கு கிடைக்கும் சமிக்கைகளை (signals) இடைமறித்து தடுத்து விடும். எனவே தசைகள் விரைத்துக் கொள்ளும். அப்படியே கீழே இறங்குகையில் உதரவிதானம் சுருங்கி விரிவது நின்று விரைத்து விடும். (பத்தாவது பயாலஜி புக்ல படிச்சிருக்கலாம், உதர விதானம் இறங்கி ஏறுவதால் தான் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசித்தல் சாத்தியமாகிறது) ஆக, நுரையீரல் செயலிழக்கும். அப்புறம் என்ன இறுதி நித்திரை தான்.

நாங்கதான் வெள்ளி செவ்வாயில் பாம்புக்கு பாலும் முட்டையும் வைப்போம் இல்ல, நாகராஜா எங்கள ஒண்ணும் செய்யாது!!

ஐயாம் வெரி சாரி கைஸ். நீங்க நினைப்பது போல பாம்பு உறிஞ்சி குடிக்கும் வகையில் வாயின் அமைப்பு கிடையாது. ’இரண்டாக பிளந்து கிடக்கும் நாக்கு என்னதான் செய்யுது’ ன்னு கேட்டா அது நாக்கே இல்லப்பு வெறும் ஆன்டெனா. 

அப்புறம் எதுக்கு பல்லு? இரையை கவ்வி உடலை முன்னிழுத்து குடலுக்குள் அனுப்பி விடும் பிறகு ஜீரண மண்டலம் ஜெலுசில் இன்றி வேலையை கனக்கச்சிதமா முடிச்சிடும். சாப்டது தேனா வேப்பங்காயா என்றெல்லாம் தெரியாது. “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே…“ என்கிற குறுந்தொகைப் பாடல் எல்லாம் பாம்புகளிடம் வேலைக்காகாது.

பாம்பு பாம்பாட்டி மகுடி ஊதும் போது அதுக்கு ஏற்றாற் போல் ஆடும் தானே? இதை நீங்க மறுக்க முடியாது.

ஒன்ஸ் எகெய்ன் சாரி பாஸ், பாம்புகளுக்கு காது என்கிற ஒன்றே கிடையாது. அதற்கு உடலே காது போல செயல்படும். மொழி படத்தில் ஸ்பீக்கர் அதிரும் அதிர்வை விரல்களால் ஜோதிகா உணர்வார் அல்லவா. அது போல தரையில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு தான் செயல்படும். பாம்பாட்டி மகுடியை ஊதும் போது கால்களை அசைக்கும் அதிர்வுக்கு பாம்பு ரியாக்ட் பண்ணி இருக்கலாம்.

இரண்டு தலை பாம்பு?

தலையும் வாலும் ஒண்ணு போல உள்ள பாம்புகள் உள்ளன. மற்றபடி இரண்டு தலைகள் எல்லாம் கிடையாது.

உடனடியா இருபது பேருக்கு ஷேர் பண்ணினா நல்லது நடக்கும் னுட்டு நான் வாட்சாப்பில் ஷேர் செய்த ஐந்து தலை நாகம் கூட வா பொய்?

அந்த படத்தை உங்களையே முட்டாளாக்கும் விதமாக வரைந்த ஓவியரை அல்லது கிராஃபிக் டிசைனரை நான் மனமாற பாராட்டுகிறேன்.  ஒட்டிப் பிறக்கும் இரட்டையர் போன்று கருவில் ஏற்பட்ட கோலாறு காரணமாக ஏதேனும் இரண்டு தலைகள் கூட சாத்தியமாகலாம் ஆனால் ஐந்து தலை சத்தியமா சாத்தியமில்லை.

பாம்பை அடிச்சி பாதியில விட்டோம்னா வந்து பழி வாங்கும் தெரியுமா? அடிச்ச இடத்தை அதோட ஜோடி வந்து பார்க்கும்.

அடேங்கப்பா, ஆதார் கார்ட போட்டோ எடுத்துக் கிட்டு வீடு தேடி வரும் என்று கூட சொல்லுங்களேன். பாம்பு தனது இணையை கவர வெளிப்படுத்தும் ஒரு வகை ஹார்மோன் வாசனை அந்த இடத்தில் வெளிப்பட்டிருந்தால் வேண்டுமானால் வர வாய்ப்பு உண்டு மற்றபடி பழிவாங்க விலாசம் தேடி வராது பயப்படாதீங்க.

சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் ”பிணையல்” போடுமா?

அதுங்க ரெண்டும் எல்லை தகராறு காரணமாக சண்டை வேண்டுமானால் போட்டிருக்கும் பிணையல் (புணர்வதற்கு) போட வாய்ப்பில்லை. கோழி வாத்தை புணரும் என்று நீங்க நம்புவதற்கு தயார் என்றால் இதையும் நம்பிக்கோங்க.

சாரைப் பாம்பு கண்ணைப் பார்த்து கொத்தும், வாலில் விஷம் இருக்கும். வாலால் அடிச்சா போச்சு அவ்ளோ தான்!!

அது முற்றிலும் விஷம் இல்லாத பாம்பு பாஸ். எலிகளைப் பிடித்து பயிர்களைக் காப்பதால் அது விவசாயிகளின் நண்பன் என்பார்கள். 

பச்சைப் பாம்பு கண்களைப் பார்த்து கொத்துமாமே!!

பச்சை பாம்பின் கூர்முனை உள்ளபடியே மிகவும் மென்மையானது. அதனால் அப்படி குத்திக் கிழித்து விடாது.

பாம்பும் கீரியும் சண்டை போடும். கீரியை பாம்பு கடித்தால் சாகாது தானே?!

பாம்பின் விஷத்தை பாம்பின் ரத்தத்தில்  நேரடியாக செலுத்தினால் அந்த பாம்பு இறந்து போகும் என்பது திண்ணம். அப்படி இருக்கும் போது கீரியை பாம்பு கடித்தால் இறக்காதா என்ன?

கவலைப் படாதீங்க இந்த பாம்பு பல்லு பிடுங்குனது தான்!!

ஆமாம், நல்லப் பாம்பின் விஷப் பல்லை வேண்டுமானால் பிடுங்கலாம். ஆனால் கட்டு விரியன், கண்ணாடி விரியன் சுருட்டை போன்ற பாம்புகளின் விஷப் பல்லை பிடுங்கினால் அவை இறந்து போகும். ஆக்சுவலா பாம்புகளின் விஷப் பல்லின் மேலே விஷம் ஒரு பை போன்ற அமைப்பில்  இருக்கும். அந்த பல்லின் முனையில் உள்ள துவாரத்தின் வழியாக அதிக அழுத்த த்தில் இஞ்செக்ஷன் போடுவது போல தோலை துளைத்து ரத்தத்தில் ஏற்றிவிடும்.

இந்தியாவில் 270 வகை பாம்புகள் உண்டு அவற்றில் ஒரு 27 வகை மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவை. அதுவே தமிழகத்தில் உள்ள 206 வகைகளில் நல்ல பாம்பு, சுருட்டை, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் கடல் பாம்புகளில் சில வகை மட்டுமே விஷம் உடையவை.

நல்ல பாம்பின் விஷம் தான் நரம்பு மண்டலத்தை பாதிப்படையும் வகை விஷம். விரியன் வகை பாம்புகளின் விஷம் ரத்த ஓட்ட மண்டலத்தை பாதிக்கும். 

இரண்டு வகை விஷங்களுமே ஜீரண மண்டலத்தை பாதிக்காது. ஒரு டம்ளர் கடுமையான விஷத்தை அப்படியே அருந்தினால் கூட எதுவும் ஆகாது என்கிறார்கள். என்ன ஒன்று உங்க ஜீரண மண்டலத்தில் எந்த ஒரு இடத்திலும் சிறு கீரல் கூட இருக்கக்கூடாது ஜாக்கிரதை.

அதனால் பச்சிலைத் தரேன் விளக்குமாற்றால் மந்திரிக்கிறேன் என்று எவராது குணப்படுத்தினேன் என்று கூறினால் நிச்சயமாக அது உண்மையல்ல. இருட்டில் விட்ட அம்பு எதேச்சையாக இலக்கை தைத்தது போல ஏதேனும் 90 விழுக்காடு விஷம் இல்லா பாம்பு கடித்து பிழைத்திருக்கலாம்.

மற்றபடி விஷப் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்து மட்டுமே ஒரே தீர்வு. பயமும் பதட்டமும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். விஷத்தின் வேலை துரிதமாகிவிடும். எனவே பதட்டம் இன்றி எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனை சென்று விடவேண்டும்.

இது போல இன்னும் ஏராளமான கட்டவிழ்த்துவிடப் பட்ட புரளிகள் பாம்புகளைப் பற்றி உண்டு. எதையும் தேடித் துருவி உண்மையைக் கண்டறிவோம். 

உள்ளபடியே பாம்பு கூச்ச சுபாவம் உள்ள பிராணி. ஆட்கள் வருவதை தரை அதிர்வுகள் மூலமாக உணரும் பட்சத்தில் விரைந்து அவ்விடத்தில் இருந்து வெளியேறவே விரும்பும். சில அசந்தர்ப்ப வேளைகளில் அதனை மிதித்தோம் என்றாலோ அல்லது அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நாம் அசைவோமானால் அவை நம்மை கடிக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் 90 விழுக்காடு பாம்புகள் விஷம் இல்லாதவை. ஆனாலும் பாம்புகள் கடித்துவிட்டு ஆட்டோகிராஃப் எதுவும் போட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லாது எனவே எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனை சென்று ”உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே” என்பதை உறுதி செய்து கொள்வது புத்திசாலித்தனம்.

முக்கியமாக பாம்புகளை கண்ட உடனே அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். விரட்டி விடுங்கள் போதும்.

(தலைப்பு Gomathisankar Gosar அவர்கள் ஒரு கமெண்டில் போட்ட வார்த்தை. பொருத்தமாக இருந்ததால் எடுத்தாண்டு கொண்டேன் நன்றி சார்.)


Friday, May 6, 2022

கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்

 மீள்பதிவு


கொரானாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஹீலர்கள்!!


 // பொறுப்புத் துறப்பு – ஹோமியோபதி சித்தா போன்ற மருத்துவ முறைகளின் பால் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது. ஆனால் எல்லாவிதமான வியாதிகளுக்கும் அங்கே மருந்து உண்டு என்று நம்பி அலோபதியை புறந்தள்ளுவது நல்லதல்ல. 

சில உடல் சார்ந்த அவசரகால உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் என்று வந்தால் நாம் அலோபதியைத் தானே நாட வேண்டும். கழுத்து அறுபட்டு ரத்தம் ஊற்றிக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு கசாயத்த பிழிந்து கொண்டு வருவது பொருத்தமான வைத்திய முறையா?

எனவே சில சிற்சிறு உடல் உபாதைகளுக்கு இங்கேயும் மற்றவற்றுக்கு அங்கேயும் என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.  ஆனால் இந்தக் கட்டுரையில் நான் கூற வருவது ஏடாகூட ஸ்டேட்மெண்ட்களால் தெறிக்க விடும் ஹீலர்கள் பற்றி//

 எனது உறவினர் ஒருவர் பார்வைக் குறைபாட்டிற்காக கண்ணாடி  அணிந்திருந்தார். எங்கோ திருநெல்வேலிப் பக்கம் ஒரு வைத்தியர் ஒரு பல் பொடி கொடுக்கிறார் பார்வைக் குறைபாடு உடனே நீங்கி விடுகிறது என்ற கூறி அழைத்துச் சென்று பல்பொடி வாங்கி பல் தேய்த்த மாத்திரத்தில் அவரது கண்ணாடியை வாங்கி கீழே போட்டு உடைத்து விட்டார் அழைத்துச் சென்றவர். சமீபத்தில் பார்த்த போது புதிய கண்ணாடி அணிந்திருந்தார்.

 2000 த்தின் ஆரம்ப காலத்தில் எனது உறவினர் தனது நீண்டகால முழங்கால் வலிக்காக செய்தித்தாள் விளம்பர பிரபல பரம்பரை வைத்தியரிடம் சென்றார். ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்டு நம்புகிறது போல பேசி பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படுத்தி மருந்துகள் கொடுத்து அப்போதே 2000 தீட்டியிருக்கிறார். புதிய மருத்துவம் தரும் நம்பிக்கை உளவியல் கொஞ்சநாள் சிறு ஆசுவாசத்தை தந்திருக்கிறது. அடுத்த முறையும் சென்றார். அதற்கடுத்த முறை செல்லவில்லை. ஒவ்வொரு மாதமும் 2000 கொடுத்தும் உபாதையில் பெரிய மாற்றம் இல்லை.

உடல் சார்ந்த சில பிரச்சனைகளில் நீண்ட கால மருந்துகள் சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உதாரணமாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், அலர்ஜி மற்றும் வயது முதிர்ந்தோர் சந்திக்கும் பல பிரச்சனைகள் இவை அனைத்துக்குமே அலோபதியில் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வர வேண்டிய தேவை உள்ளது. நீண்டகாலம் மருந்து சாப்பிட்டு உளவியல் ரீதியாக சலிப்படைந்து இருக்கும் எவருக்குமே ஒரு சுலபமான மாற்று இருந்தால் “லபக்“ என்று பிடித்துக் கொள்ள தயாராகவே இருப்பார்கள். இவர்கள் தான் இப்போது பெரிதாக தலையெடுத்திருக்கும் ஹீலர்களின் இலக்கு.

 “எனக்குத் தெரிந்த ஒரு ஹீலர் இருக்கார், சுகர் பேஷண்ட் வந்த உடனே கால்கிலோ சுவீட் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து தான் ட்ரீட்மெண்டே ஆரம்பிப்பார்”

 “சுகர் எல்லாம் ஒரு வியாதியே கிடையாதுங்க!!” என்று அதிரடிப்பார் அந்த ஹீலர்.

 மேலே சொல்லுப்படும் செவி வழிச் செய்தி மார்க்கெட்டிங் அடுத்து ஹீலரே கூறுவது உங்களுக்கான பாசவலை போன்று தெரியும் மோசவலை.

 துவக்கத்தில் குணமாவது போல இருந்தாலும் நாளாக நாளாக ஒரு மாற்றமும் தெரியாது. அதற்குள்ளாக ஐந்து கிலோ தார் உருண்டையை விழுங்கித் தொலைத்திருப்போம். எப்போதுமே ஏமாந்த கதையை வெளியே சொல்ல எவருடைய ஈகோவும் முன்வருவதில்லை. ஆகவே யார் விசாரித்தாலும் பரவாயில்லைப்பா என்று கூறிக் கொண்டு கமுக்கமாக அலோபதிக்கு திரும்பியிருப்பார்கள்.

 கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாற்று மருத்துவர்களின் பால் எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அவர்களில் ஏராளமானோர் கிராஸ் பிளாட்ஃபாரம் ரிசர்ச் மூலம் மாற்று மருத்துவத்தை நம்பிக்கை தரும் பாதைகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. 

ஆனால் இந்த ஹீலர் எனக் கூறிக் கொள்பவர்கள் ஏதாவது டப்பா கோர்சை முடித்து பெயருக்கு பின்னால் எம்.டி என்றெல்லாம் போட்டுக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஆசிரியர் நண்பர் ஒருவர் எம்.டி அக்குப்பஞ்சர் முடித்துள்ளார். யாராவது தலை வலிக்கிறது என்றால் கூட சில ஊசிகளை அங்கங்கே குத்தி வைத்து எதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆர்வத்தோடு விசாரிப்பார். அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் சரியாகிவிட்டது என்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவருவோர் ஏராளம்.

”சுகர் எல்லாம் வியாதியே கிடையாதுங்க. எதை வேண்டுமோ சாப்பிடுங்க. அட கொழுப்பெல்லாம் ஒன்றும் இல்லைங்க. அந்த டாக்டருங்க அப்படித்தான் சொல்லி காச கறப்பாங்க. நீங்க சாப்பிடுங்க”என்று வாஞ்சையாக சொல்லும் சக சீனியர் எம்.டியும் கூட அதே பள்ளியில் இருந்தார். அவர் இப்போது கொரோனா எல்லாம் ஒன்றும் இல்லைங்க என்று அனைவரின் மாஸ்க்கையும் கழட்டச் சொல்லி வருவதாக கேள்வி.

இப்போ பாய்ண்ட்டுக்கு வருவோம், இந்த ஹீலர் பாஸ்கர் தெரியுமா??

மருத்துவத்தில் சொல்லப்படும் அனைத்து விஷயங்களையும் ஏடாகூடமாக மறுத்து பேசுவது இவரது வாடிக்கை.

உலகமே கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க சிலிண்டர் மூலமாக ஆக்சிஜன் ஏற்றி நோயாளிகளை காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அகில  உலக ஆக்சிஜன் பிரச்சனைக்கு அசால்டாக ஒரு தீர்வினை சொல்கிறார் ஹீலர் பாஸ்கர்.

“ரூமு மூடியிருக்கு, ஏசியில் ஆக்சிஜன் வராது மாஸ்க் போட்டு மூக்க மூடியாச்சு, அப்புறம் எப்படிங்க ஆக்சிஜன் கிடைக்கும். கொஞ்சமாவது அறிவக் கொண்டு யோசிங்க. மாஸ்க்க கழட்டி வீசிட்டு டேபிள் ஃபேன் அல்லது குட்டி மேக்கப் ஃபேன மூக்கு பக்கத்துல வச்சிப் பாருங்க ஆக்சிஜன் அளவு கூடலன்னா அப்புறம் ஏன்னு கேளுங்க”

மக்களே ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து ரத்தத்தில் ஏற்றி உடல்முழுவதும் அனுப்ப வேண்டிய நுரையீரலின் வேலை கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே அதிக அழுத்தத்தில் பிராண வாயுவை நுரையீரலுக்குள் செலுத்துகிறார்கள். 

அடுத்து ரத்த தானம் செய்வது ரத்தம் பெறுபவருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம் ஆனால் கொடுப்பவருக்கு அது கெடுதல் என்று ஒரே போடாக போடுகிறார். இந்த ஆள் பேசுவதைக் கேட்டால் குருதிக் கொடையாளர்களிடம் பெறும் ரத்தத்தை அப்படியே வைத்திருந்து தேவையுள்ளோருக்கு ஏற்றுவதாக எண்ணிக் கொண்டுள்ளார் என தெரிகிறது. நானும் கூட இளம்பிராயத்தில் சினிமாக்கள் பார்த்து குழாயின் ஒரு முனையை கொடையாளரிடமும் மறுமுனையை பெறுபவரிடமும் சொறுகி ரத்தம் ஏற்றி விடுவார்கள் என நம்பியிருக்கிறேன்.

அப்புறம் சுகப் பிரசவ உடற்பயிற்சி, வாழை இலைக் குளியல் என்று ஏகப் பட்ட ஐட்டம் வைத்திருக்கிறார் அவரது முகநூல் பக்கத்தில். எதையும் உரத்த குரலில் அடித்துப் பேசி ஒப்புக் கொள்ளச் செய்யும் பல நண்பர்களை நான் பார்த்துள்ளேன். இவர் அந்த ரகம். அந்த பேச்சைக் கொண்டே கல்யாண மண்டபங்களில் பயிலரங்குகள் நடத்தி நன்றாக கல்லாக் கட்டியும் வருகிறார்.

இவரது நன்றாக மாவு போல மென்று சாப்பிடும் முறையான சர்வரோக நிவாரணியை பெரிதாக நம்பிய எனது நண்பர் ஒருவர் அதான் மென்று சாப்பிடுகிறோமே எதற்கு இந்த சுகர் மாத்திரை என்று தூக்கி கிடாசிவிட்டார். அப்புறம் ஏடாகூடமாகிப் போய் இன்சுலின் மாத்திரையில் இருந்து இன்சுலின் ஊசிக்கு புரமோட் ஆகியுள்ளார்.

ஆங்கில மருத்துவம் வணிகமயம் ஆகிவிட்ட காரணத்தினால் பேராசை காரணமாக தேவையற்ற சோதனைகள் மருந்துகள் பரிந்துரை என்று பல தவறுகள் நடக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக அதை ஒரேயடியாக தலைமுழுகிவிட்டு ஹீலர்களிடமும் இரண்டுமாத எம்.டி மருத்துவர்களிடமும் சரணாகதி அடைவது பேராபத்தாய் முடியும்.

ஹீலரின் ஆக்சிஜன் வீடியோ பார்த்து தம்கட்டி இதை டைப் பண்ணும் இந்த வேளையில் கண்ணில் பட்டு தொலைத்த செய்தி 

“காயத்திரி மந்திரம் கொரானாவை குணப்படுத்துகிறதா?” என்கிற ஆராய்ச்சிக்கு மத்திய அரசு பதினைந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு.

”டேய் காயத்திரிக்கும் ஹீலருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கடா கொரோனா மூன்றாவது அலை என்ன முந்நூறாவது அலை கூட வரும்”  இவனுங்களுக்கு மத்தியில உசரோட இருக்கறதே பெரிய சாதனைதான் போல!!

Monday, April 18, 2022

இரண்டு முத்தான படங்களைப் பற்றி....

 


"No one treats you like an ordinary person, just be extraordinary" தனது மாற்றுத் திறனாளி மகனை சமூகத்தினர் நடத்தும் விதத்தை பார்த்து அந்தத் தாய் பொறுமுகிறார்.


"மாற்றுத் திறனாளியாக இருப்பது கூட சுலபம் தான், ஆனால் மாற்றுத் திறன் குழந்தையின் தாயாக இருப்பதுதான் சிரமம்" தன்னிடம் புலம்பும் மகனிடம் அதே தாய்!!


"இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு இவன் நடப்பது ரொம்ப கஸ்டம்தான்" என்றார் மருத்துவர். ஆனால் அந்தத் தாய் அவனை பாராலிம்பிக்கில் ஓடச் செய்து தகர்க்க இயலாத சாதனைகளை செய்வித்திருப்பார்.


Zero to Hero என்கிற ஹாங்காங் படத்தை இந்த விடுமுறையில் பார்த்தேன். அவ்வளவு goosebump moments!! உண்மைக் கதையின் திரை ஆக்கம். உரையாடல்கள் அவ்வளவு பிரமாதம். அம்மா புள்ள நடிப்பை பிச்சி ஒதறிட்டாங்க போங்க.


பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்றாலும்கூட அவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை சொர்ப்பமாகவே கிடைக்கிறது. மற்ற வீரர்களுக்கு போல் இவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் படம் பேசி உள்ளது. இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் ல் உள்ளது.


அடுத்து Lunana:A Yak in the class room என்கிற பூடான் நாட்டுப் படம். எதேச்சையாக ப்ரைமில் இந்த பட போஸ்டரை காண நேர்ந்தது. பசுமையான மலைக் காட்சி என்றதுமே படக்குறிப்பை பார்த்தால் "வாகை சூட வா" வகை ஆசிரியர் பற்றிய படம்.


பாடகராக ஆஸ்திரேலியா சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் வாழும் ஹீரோ வேண்டா வெறுப்பாக ஆசிரியர் பயிற்சியின் இறுதி ஆண்டில் இருக்கிறார். இவரது அலட்சிய மனப்பான்மையால் ரிமோட் ஏரியா மலை கிராமமன லுனானா வில் உள்ள ஓராசிரியர் பள்ளிக்கு போட்டுவிடுகிறார்கள்.


அங்கே போய் சேரவே பேருந்தில் ஒரு நாள் மலையேற்றம் ஐந்து நாள் என போகவேண்டி உள்ளது. லுனானா ஊரில் இருந்து ஆசிரியரை வரவேற்று கூட்டிச் செல்ல இரண்டு பேர் மூன்று குதிரைகளோடு வருகிறார்கள். குதிரை லக்கேஜ்க்காகத்தான்.


தீரன் பட கிழவன் தோ கிலோமீட்டர் என்பது போல புது வாத்யாரை நைசாக பேசி மலையேற்றிக் கூட்டிச் செல்கிறார்கள். அந்த மலைக் காட்சிகளை சிந்தாமல் சிதறாமல் கேமராவில் அள்ளி வந்து நமது கண்களுக்கு விருந்து படைத்துள்ள ஓளிப்பதிவாளருக்கு ஆஸ்கர் வழங்கலாம்.


ஊரே எல்லையில் நின்று வரவேற்று ஆசிரியரை அழைத்துச் செல்கிறது. ஊராரின் மரியாதை மற்றும் நம்பிக்கை, குழந்தைகளின் அன்பில் நெகிழ்ந்து வேண்டா வெறுப்பு வாத்யாரின் மனது நெகிழ்கிறது. பணியில் ஈடுபாட்டோடு குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். பனிக்கால விடுமுறையும் ஆஸ்திரேலியா வேலையும் ஒன்றாக வருகிறது, கனத்த மனதோடு ஊருக்கு பிரியா விடைகொடுத்து கிளம்புகிறார். 


58 பேரே மக்கள்தொகை உள்ள மலைகிராமத்தில் ஒரு பள்ளியை வைத்திருக்கும் பூடானை பாராட்டலாம். பேத்தியின் கல்வியின் பொருட்டு பக்கத்து மலையில் இருந்து லுனானாவுக்கு இடம் பெயர்ந்துள்ள பாட்டி கதாப்பாத்திரம், மக்கள் ஆசிரியரை நடத்தும் விதம் பூடானியர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


இந்த ஷீட்டிங்குக்காக சோலார் பேட்டரியால் மட்டுமே மின்சாரம் பெறும் ஊரான லுனானாவுக்கு மொத்த படக்குழுவுமே மலையேறி உள்ளார்கள். ஆனால் அந்த ரிமோட் மலை கிராமம் அவ்வளவு அழகை தன்னகத்தே வைத்துள்ளது.


படத்தில் சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. அத்தனையையும் மொபைலில் டைப்ப கஷ்டமாக உள்ளது.


தவறாமல் படத்தை பாருங்கள். முக்கியமாக ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். இந்தப் படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

Sunday, April 17, 2022

சமூகநீதியில் முன்னணியில் உள்ள மாநிலத்தில் பாலின சமத்துவம் உள்ளதா?

 


NO SAFE HAVEN FOR WOMEN AT HOME என்றொரு கட்டுரை இன்றை தி இந்து ஞாயிறு ஸ்பெஷலில் வந்திருந்தது. அதில் கண்ட சில புள்ளி விவரங்கள்.


80 விழுக்காட்டினர் மனைவி எதிர்த்து பேசும் போது அடிப்பது நியாயம் தான் என்று எண்ணுகிறார்கள். எதிர்த்து பேசினால் அடிப்பது அல்லது கட்டிலில் குப்புற படுத்துக் கொள்வது என்கிற யுத்தியை பெரும்பான்மையானோர் கடை பிடிக்கிறார்களாம்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப் படும் பெண்கள் 45 விழுக்காடு என்கிற நிலையில் நமது தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து கர்நாடகாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.


குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 80 விழுக்காட்டினர் உதவி கோருவதோ அல்லது அது பற்றி வெளிப்படையாக பேசுவதோ கிடையாதாம்.


 அரசு உயர்நிலைப் பள்ளி சுத்தமல்லியில் 1989 ல் நான் எட்டாம் வகுப்பு படித்தபோது (உடனே கணக்கு போடவேண்டாம் எனது வயது 46 ஹா ஹா…) பத்தாம் வகுப்பில் 35 மாணவர்களும் ஒரே ஒரு மாணவியுமே படித்தார்கள். அந்த ஒரு மாணவி ஆசிரியர் மேசைக்கு அருகே தனியே ஸ்டூலில் அமர்ந்திருப்பார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எங்க அக்கா படித்த போது 30 க்கு 10 என்கிற அளவில் பெண்கள் படித்தார்கள்.


 நான் பத்தாம் வகுப்பு படித்தபோது கூட பெண்கள் எண்ணிக்கை பாதி என்கிற அளவினை எட்டவே இல்லை. வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு வயிற்றில் ”நெருப்பைக்” கட்டிக் கொண்டிருக்க பெற்றோர் தயாராக இல்லை. ஒருத்தன் கையில ”புடிச்சி கொடுக்கும்” வரையில் பெற்றோர் மனம் அமைதி கொள்வதில்லை.


 நான் வேலைக்கு வந்த ஆண்டான 2002 ல் இந்த விகிதம் ரிவர்சில் இருந்தது. “ஆகா, பாலின சமத்துவத்தை தாண்டி எங்கேயோ போய்ட்டோம் போல” என்று வியந்து போனேன். பையன்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு பெண் பிள்ளைகளை “உங்களை எல்லாம் படிக்க அனுப்புவதே பெரிய விஷயம்“ என்கிற ரீதியில் அரசுப் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பி உள்ளனர் என்பதை பின்னர் புரிந்து கொண்டேன்.


 எண்ணிக்கையை விடுங்க, பெண் பிள்ளைகள் என்ன தான் சிறப்பாக படிப்பு, பாட இணை செயல் பாடுகள் என அனைத்திலும் சிறப்பாக கோலேச்சினாலும் பெற்றோர் சொல்வது என்னவோ “சாருக்கு ஒரு ஊத்தாப்போம்“ என்பது போல கல்யாண பல்லவியைப் பாடி படிப்புக்கு மங்களம் பாடிவிடுகிறார்கள்.


 நான் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மிகச்சிறப்பாக படிப்பார். எழுத்தெல்லாம் கணினியில் தட்டச்சு செய்து பிரிண்ட் செய்தது போல இருக்கும். 460 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார். அடுத்த கல்வியாண்டில் டிசி வாங்க வந்திருந்தார். ஒரு ஃபைல் ஒன்றை கழுத்துக்கு கீழே அண்டை கொடுத்துக் கொண்டே நின்றார். எதையோ மறைக்க பிரயத்தனம் செய்கிறார் என்பதை உணர்ந்தே ஒரு கியுரியாசிட்டியில் கழுத்தின் பின் புறத்தை கவனித்தால் புத்தம் புதிய மஞ்சள் கயிறு. எனக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. விசாரித்த போது அந்த பெண்ணை கட்டிக் கொள்ள சொந்தத்தில் ஒரே போட்டா போட்டியாம். வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளை ஒருவர் கிட்டியதும் கட்டி போட்டுவிட்டனர்.

 

 பனிரெண்டாம் வகுப்பு கணிதப் பாடம் எடுத்தபோது ஒரு உயரம் குறைவான மாணவி நித்யா என வைத்துக் கொள்வோம். உயரம் குறைவானவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு காலை பிரார்த்தனையின் போது ஒரு கதையும் கருத்தும் கூறினேன். அந்த மாணவி ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். எப்படியாவது தேர்ச்சி அடைந்து பதிலுக்கு என்னை இம்ப்ரஸ் செய்வது என்கிற உத்வேகத்தோடு படிக்கத் துவங்கினார். கற்று வைத்திருந்த மொத்த வித்தைகளையும் மொத்தமாக இறக்கி வைத்து அவரை 71 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைத்தேன். “ஸ்ஸ்…அப்பாடா, அந்த மாணவியை கல்லூரிக்கு அனுப்பியாச்சு“ என நினைத்து காலரை தூக்கி விட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கடுத்த வருடத்திலேயே அரியலூர் பேருந்து நிலையத்தில் “சார், சார்… “ என அழைத்துக் கொண்டே வேகமாக புடவை உடுத்திய ஒரு பெண் வந்தார். யாரேனும் உட்கோட்டை கால மாணவியாக இருக்கும் என பார்த்தால், சென்ற ஆண்டு படித்த நித்யா. நிறைமாத கர்ப்பிணியாக நின்று கொண்டு இருந்தார். பதட்டத்தோடு ஓடி வந்ததற்காக கடிந்து கொண்டு நலம் விசாரித்தேன். ஆனால் மனதில் ஒரே ஏமாற்றம். நாமொன்று நினைத்தால் பெற்றோர் ஒன்று நினைத்து விடுகிறார்கள்.


 மற்றொரு முறை (காலக்கோடு வேண்டாம்) ஒரு டிஜிட்டல் பேனரில் திருமண விளம்பரம். பெண் மாப்பிள்ளை படத்தோடு பேருந்து செல்லும் சாலையோரம் வைத்திருந்தார்கள். பெண்ணை பார்த்தால் முந்தைய ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி. சட்டப்படி குற்றம் என்பது கூட உரைக்காமல் விளம்பரம் வைத்து கொண்டாடுகிறார்களே என தலையில் அடித்துக் கொண்டேன்.


 அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. மாமா வீட்டில் தங்கிப் பயில்கிறார். நன்றாக படிக்கும் சுட்டியான பிள்ளை. ஒன்பதாம் வகுப்பில் படித்தபோதே “நல்ல“ மாப்பிள்ளை என்று கூறி திருமண ஏற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்கள். ஆசிரியர்கள் கேள்விப் பட்டு அந்த பெண்ணை அழைத்துப் பேசி பாதுகாவலர்களிடமும் பேசி தடுத்து விட்டார்கள் என்று 

கேள்விப் பட்டு மகிழ்ச்சியடைந்தேன்.


 கொரானா பேரிடர் காலம் கல்வியை பல கோணங்களில் வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. வசதி குறைவான பெற்றோரது குழந்தைகள் குழந்தை தொழிலாளராக சென்றிருக்கிறார்கள். வேறு சில குழந்தைகள் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி உள்ளனர்.


 எங்கள் பள்ளி மாணவி ஒருவரது வங்கிக் கணக்கு எண் கிடைக்காமல் பெற்றோரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தோம். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றபோது நேரில் சென்று விசாரித்த போது தான் தெரிந்தது, அந்த சிறுமி திருப்பூருக்கு ப்ரீ பெய்டு குழந்தை தொழிலாளராக அனுப்பப் பட்டுள்ளார். அந்த சிறுமியின் அம்மா ஒற்றை பெற்றோர். ஒரு மாதம் முன்பு ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம் என்கிற ரீதியில் வீட்டுக்கு ஆசிரியர் சென்றிருந்தார். அந்தச் சிறுமி சக்கையாக பிழியப்பட்டு நாராக வந்து சேர்ந்திருந்தார். அந்த சிறுமிக்கும் பெற்றோருக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இன்னும் ஒரு மாதமே பொதுத் தேர்வு இருக்கும் நிலையில் தேர்ச்சி விழுக்காடு பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளியில் சேர்த்துக் கொண்டோம். ரிசல்ட்டாவது ஒண்ணாவது “படிப்பு முக்கியம் பிகிலு” என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.


 என்னதான் நாம் பெரியார் மண் சமூக நீதி முன்னோடி என்று பீற்றிக் கொண்டாலும், பாலின சமத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை இன்னும் சாமானிய மக்களுக்கு உணர்த்தவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை.


 என்னதான் நாம் சமத்துவம் பேசிக்கொண்டாலும் 

பெண்களின் உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் ஒரு ஆணியையும் ப்ளக் பண்ண தயாராக இல்லை. தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாளப் படத்தில் உள்ளது போல ஒட்டு மொத்த குடும்ப பொறுப்புகளையும் பெண்கள் தலையில் சுமத்திவிட்டு ஹாயாக கை வீசிக் கொண்டு நடந்து பழகிய நாம் இப்போது அந்த பொறுப்புகளை ஏற்பது என்றால் கசக்கத்தானே செய்யும். 


 அப்படியே யாராவது எதிர் கேள்வி கேட்டு பொங்கல் வைத்தால் கலாச்சாரம் கடவுள் நம்பிக்கை என்றெல்லாம் பயமுறுத்தி விடுகிறோம்.


 குடும்ப வன்முறை காரணமாக என்னதான் தினசரி வாழ்க்கை பெண்களுக்கு சிரமமாகிப் போனாலும் “கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருசன்” என்று கூறி சகித்துக் கொள்ள வேண்டும் என்றே பெண் வீட்டார் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கணவன் வீட்டில் தினசரி ரத்தம் சிந்தி அவதி பட்டாலும் “வாழாவெட்டி“ என்கிற பெயர் குடும்ப அவமானம்.


 பெண்பிள்ளைகளை படிக்க வைக்கிறோம், வேலைக்கு அனுப்புகிறோம் அவ்வளவு தான் மற்றபடி திருமணமாகி வேலைக்குச் செல்லும் பெண்பிள்ளைகளின் சிரமங்களை உணர்வதோ பகிர்வதோ கிடையாது. நீ எங்க வேணா போ, ஆனா சோறு ஆக்கி வச்சிட்டு போ, குழந்தை பராமரிப்பு முழுக்க முழுக்க உன்னுடைய கடமை மட்டுமே. இதில் ஏதாவது சுருதி பேதம் ஏற்பட்டால் திருமண உறவில் விரிசல் விழுகிறது.


 திருமணத்திற்கு வெளியேயான உறவு என்பதை ஆண்களுடையது என்றால் சகஜமாக எடுத்துக் கொள்ளும் சமூகம் பெண்களுடையது என்றால் பொங்கிவிடுகிறார்கள். 


 தனிமனித ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானது தானே? ஆண்கள் மது அருந்தும் புகை பிடிக்கும் படங்களை ஆண்மையின் அடையாளம் என பீற்றிக் கொண்டு அவர்களே பகிர்ந்து மகிழுகிறார்கள். ஆனால் பெண்கள் செய்வது என்றால் ஓவர் நைட்டில் வைரல் ஆகிவிடுகிறது. “காலம் கெட்டுடுத்து கலி முத்திடுத்து“ என்கிற ஓலமிடுகிறார்கள்.


 நமது குடும்பங்களிலேயே குடும்ப அமைப்பு நடைமுறைகள் போன்றவற்றை நாம் கற்றுக் கொள்கிறோம். அப்பா என்றால் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் அம்மா என்றால் சமையல், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு. இதையே அடுத்த தலைமுறை மகன் மற்றும் மகள் கற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் வேலைக்குச் செல்லும் வீடுகளில் ஆண்கள் சமையல் வேலை வீட்டுப் பராமரிப்பு என்று இருந்தால் அது கேலிக்குறியது ஆகிவிடுகிறது. “நான் ஒரு ஆம்பள இவ்வளவு செய்யறதே பெரிது“ என்கிற மனப்பான்மையோடோ அல்லது பொருமலோடோ தான் பெரும்பாலான ஆண்கள் வேலையை செய்கிறார்கள்.


 சமூக பொறுப்புகளில் பெண்களுக்கான இடங்களை இட ஒதுக்கீடு மூலம் வழங்கினாலும் உண்மையில் அவர்களில் 90 விழுக்காட்டினர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் உள்ளார்கள். 

 

ஆக, பாலின அசமத்துவத்தை குடும்பங்களில் இருந்து வாழையடி வாழை பழக்க வழக்கம் மூலமாக நம்மை அறியாமலேயே கற்றுக் கொள்கிறோம். பாலின சமத்துவம் காண்பது என்பது நமது பள்ளிக் கலை திட்டத்திலேயே கூட இருப்பதாக தெரியவில்லை. 


 ஆனால் பள்ளிகளில் துவக்க நிலை வகுப்புகளில் இருந்தே பாலின சமத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்கிறோம். “இந்தாம்மா, அந்த வௌக்குமாத்த எடுத்து கூட்டிவிடு, டேய் அந்த பெஞ்சை தூக்கி போடுடா” குறைந்த பட்சம் இந்த டயலாக்கையாவது மாற்றிப் பேசி வேலைகள் அனைவருக்கும் பொதுவானது. இங்கே ஆண்களுக்கான வேலை பெண்களுக்கான வேலை என்று எதுவும் இல்லை என்பதை உணர்த்த தலைபடுவோம்.

Friday, April 8, 2022

ரேடியேஷன் என்கிற கதிர்வீச்சு அபாயம்





ரேடியேஷன் என்றால் என்ன?
ஒரு மூலத்தில் இருந்து வெளியேறும் சக்தி, வெளியில் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வல்லது கதிர்வீச்சு என்கிற ரேடியேஷன் என்பார்கள்.
எங்கே இருந்தெல்லாம் இந்த கதிர்வீச்சு வெளிப்படுகிறது?
எங்கே இருந்தெல்லாமா? கதிர் வீச்சு இந்த வெளியெங்கிலும் நீக்கமற நிறைந்து இருக்கு. தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் துருபிடிக்காத இரும்பிலும் கூட இருக்கும். கதிர் வீச்சு இல்லாத இடம் ஏது?
அய்யய்யோ அப்படியா?
ஆமாம், இருப்பதிலேயே மேஜர் சோர்ஸ் ஆஃப் ரேடியேஷன் இந்த சூரியன் தான். அதில் இருந்து தான் அளவில்லா காஸ்மிக் கதிர்வீச்சுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. காஸ்மிக் கதிர்வீச்சில் ஆபத்தானவைகள் புவியின் வளி மண்டலத்தில் வடிகட்டப் படுகின்றன.
ஆனால் இந்த நியுட்ரினோ துகள்கள் இந்த வெளியெங்கும் நீக்கமற நிறைந்தபடி ஒளியின் வேகத்தில் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நொடி உங்கள் உடம்பை கோடிக்கணக்கான நியுட்ரினோ கதிர்கள் ஊடுருவிய வண்ணம் இருக்கும் என்பது தெரியுமா?
அப்படின்னா ஒண்ணும் பிரச்சனை இல்லையா?
கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. அயனியாக்க கதிர்வீச்சு அயனியாக்கா கதிர்வீச்சு. செல்போன் கதிர்வீச்சுகள், நியுட்ரினோ கதிர்வீச்சுகள் போன்றவை அயனியாக்கா கதிர்வீச்சு வகைப்பட்டது. இந்த கதிர்வீச்சு எந்த தடமும் காட்டாமல் கமுக்கமாக நல்லபிள்ளையாக ஊடுருவும் வகை. இதனால் தீங்கு ஒன்றும் இல்லை.
இந்த செல்ஃபோன் ரேடியேஷன்…
செல்ஃபோன் ரேடியேஷன் நேரடியாக இந்தவகையிலான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவ எந்த தரவுகளும் இல்லை என்று நான் தேடிய பல நம்பகமான தளங்களில் கூறியுள்ளார்கள்.
அயனியாக்க கதிர்வீச்சு என்றால் என்ன?
ஒரு அணுவில் நேர்மின்சுமை கொண்ட புரோட்டான்களும் எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்களும் ஒரே எண்ணிக்கையில் இருப்பதால் அவை நடுநிலையோடு இருக்கின்றன.
அந்த அணுவில் ஒரு எலக்ட்ரானை எக்ஸ்ட்ராவாக போட்டால் எதிர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடும். அந்த நடுநிலை அணு இப்போது எதிர்மின் அயனி ஆகிறது.
அந்த அணுவில் இருந்து ஒரு எலக்ட்ரானை கழட்டி விட்டால் நேர்மின்சுமை மெஜாரிட்டி ஆகிவிடுகிறது. அந்த நடுநிலை அணு இப்போது நேர்மின் அயனி ஆகிறது.
அயனியாக்கா கதிர்வீச்சுகள் எந்த தொந்தரவும் செய்யாமல் பொட்டாட்டம் பயணிக்கும் அதே வேளை அயனியாக்க கதிர்வீச்சுகள் சற்று கிருத்துவம் பிடித்தவை. ஆமாம், போகிற போக்கில் நடுநிலை அணுவில் ஒரு எலக்ட்ரானை கழட்டிவிட்டோ, எலக்ட்ரானை சேர்த்து விட்டோ அயனியாக மாற்றிச் சென்று விடுகிறது.
இந்த அயனியாக்க கதிர்வீச்சுகள் என்பவை ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்வீச்சுகள், எக்ஸ் ரே கதிர்வீச்சுகள், நியுட்ரான் கதிர்வீச்சுகள் போன்றவையாகும்.
இவை சக்தி வாய்ந்தவை. இவற்றின் அலைநீளங்கள் குறைய குறைய ஊடுறுவும் திறன் அதிகமாகிறது.
எனவே கதிர்வீச்சின் தன்மைக்கேற்ப இவை தடைகளை ஊடுருவிச் சென்று நடுநிலை அணுக்களை அயனியாக மாற்றிவிடுகின்றன. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பை உடைக்கவல்லவை.
உடற்செல்களில் புகுந்து ஜீன் திடீர் மாற்றங்களை தூண்டி புற்று செல்கள் உருவாக காரணமாகின்றன.
ரேடியேஷன எப்படி அளப்பாங்க?
ரேடியேஷனின் அலகுகள் நான்கு விதமாக கையாளப்படுகின்றன.
1. கதிர்வீச்சு செயல்பாடுகளில் உமிழப்படும் அளவுகள்.
இது பெக்கொரல் (Bq) என்கிற அலகு கொண்டு அளக்கப் படுகிறது. ஒரு மூலத்தில் இருந்து ஒரு வினாடிக்கு உமிழப்படும் ஃபோட்டான் துகல்களின் எண்ணிக்கையை பெக்கொரல் என்பார்கள். இதனை கெய்கர் எண்ணி (Geiger Counter) கொண்டு அளவிடுகிறார்கள்.
2. ரேடியேஷன அளப்பதன் இரண்டாம் வகை.
ரேடியேஷன் காரணமாக ஒரு கிலோகிராம் பொருளில் செலுத்தப் படும் ஆற்றலை கிரே (Gy) என்கிற SI Unit மூலமாக குறிக்கிறார்கள்.
இது நேனோ கிரே (One billionth of a Gray 1/1000,000,000)
மைக்ரோ கிரே (One Millionth of a Gray 1/1000,000)
மில்லி கிரே (Milli Gray 1/1000) என்றெல்லாம் வகைப்படுத்தி தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவார்கள்.
3. ரேடியேஷன் திசுக்களில் ஏற்படுத்தும் அழிவின் ஒப்பீட்டளவு.
நமக்கு எப்போதும் இந்த ரேடியேஷன் நமது உயிரி திசுக்களில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற ஒப்பீட்டு அளவு தான் தற்காப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?
வெவ்வேறு வகை ரேடியேஷன்கள் உடற்திசுவில் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். உடற்திசுவிலேயே வெவ்வேறு உடல் பாகங்கள் வெவ்வேறு அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும். எனவே திசுக்களை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் அளவிலான கதிர்வீச்சு சீவர்ட் (Sievert – Sv) என்கிற அலகினால் குறிப்பிடப்படுகிறது.
இதிலும் மேலே குறிப்பிட்ட நேனோ, மைக்ரோ மற்றும் மில்லி போன்ற அடைமொழியுடனான பயன்பாடுகள் உண்டு.
கதிர்வீச்சு என்றாலே அது அணுஉலையோடு சம்மந்தப் பட்ட மேட்டரா?
அப்படி எல்லாம் ஒரேயடியாக குற்றம் சாட்டிவிட இயலாது. ஒரு இடத்தில் இருக்கும் கனிமப் படிவுகள் கூட கதிர்வீச்சை உமிழ்ந்த வண்ணம் இருக்கும்.
அணு உலை அன்றியே ஒரு சராசரி ஆஸ்திரேலியன் மீது 1500-2000 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு படிகிறது.
இதுவே பிரிட்டனில் 7800 மில்லி சீவர்ட் ஆகும்.
வீட்டில் கிரானைட் தரை போட்டு இருக்கிறீர்களா? கையை கொடுங்க உங்களுக்கு 1000 மில்லி சீவர்ட் இலவசம்.
எக்ஸ் ரே அல்லது சிடி ஸ்கேன் டெஸ்ட் எடுக்குறீங்களா அப்படின்னா தடவைக்கு 2600 மில்லி சீவர்ட் கதிர்வீச்சை வாங்கி உடலில் போட்டுக் கொள்கிறீர்கள்.
கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரப்பி கொடுப்பார்கள் அல்லவா? அந்த மருந்துகளிலும் கனிசமான அளவுக்கு ரேடியேஷன் உண்டு. அந்த மருந்துகளை மிகுந்த பாதுகாப்பான முறையில் தான் கையாளுவார்கள்.
கஞ்சி முதல் கம்பங் கூழ் வரை பீங்கான் எனப்படும் செராமிக் மெட்டீரியலில் தான் குடிக்கிறீர்களா. அப்படின்னா உங்களுக்கும் கதிர்வீச்சு உண்டு.
அட அதெல்லாம் விடுங்கப்பா, வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அதில் இருக்கும் பொட்டாசியம் 40 என்கிற ஐசோட்டோப் மூலமாக கதிர்வீச்சு கிடைக்கிறது.
ஆக, அணு உலை அன்றி பிற வகைகளிலும் இயற்கையாகவே நாம் குறிப்பிட்ட அளவிலான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறோம். ஆனால் அவையெல்லாம் திசுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக அளவிலானவை அல்ல. எனவே அஞ்சற்க.
4. இந்த நான்காவது அலகு எஃபக்டிவ் டோஸ் என்கிற முறையில் அளவிடப்படுகிறது. அதாவது rem – Roentgen Equivalent man.
இதிலும் நானோ, மைக்ரோ, மில்லி என்கிற வகையில் அளவிடப்படுகிறது.
1 மில்லி ரெம் எனப்படுவது ஓரு வருடம் முழுவதுமாக நாம் டிவி பார்ப்பதால் கிடைக்கும் அளவு.
அல்லது ஒரு ஆண்டு செயல்படும் அணு உலை அருகே வசிப்பதால் கிடைப்பது.
அல்லது மூன்று நாட்கள் அட்லாண்டாவில் வாழ்வதால் கிடைப்பது. (அய்ய்யயோ ஏன்? அங்கே படிந்திருக்கும் ரேடியோ ஆக்டிவ் கனிம படிவுகள் தான்)
செல்ஃபோன் ரேடியேஷன் ஆபத்தானதா?
நூறு ஆண்டுகள் பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே கோலேச்சிய டெலிஃபோன்கள் அவர்களின் வீடுகளைத் தாண்டி வெளியே வரவே இல்லை. ஆனால் செல்ஃபோன்கள் இருபது ஆண்டுகளுக்குள் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் கைகளிலும் வந்து விட்டது. நிச்சயமாக இது புரட்சிகரமான தகவல் புரட்சி தான்.
தற்போது உலகத்தில் 8 பில்லியன் செல்ஃபோன் வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே நியுட்ரினோ மற்றும் காஸ்மிக் ரேடியேஷன்களுக்கு அடுத்த லெவலில் புவி முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது செல்போன் சிக்னல்களை தாங்கும் ரேடியோ அலைகள் தான்.
முதலில் செல்ஃபோன் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். செல்போன்களையும் செல்ஃபோன் டவர்களையும் இணைத்து உலகளாவிய ரேடியோ அலைகளால் ஆன ராஜபாட்டை போடப்பட்டு இருக்கிறது. அந்த ராஜப்பாட்டையில் மின் காந்த அலைகளாக மாற்றப் பட்ட நமது பேச்சு மற்றும் டேட்டா அடங்கிய டிஜிட்டல் தகவல்கள் கம்பீரமாக ஒளியின் வேகத்தில் பயணித்து தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கின்றன.
ரேடியோ அலைகளின் அலைக்கற்றையின் அகலத்தை பொறுத்து அது 2ஜி, 3ஜி,4ஜி மற்றும் வரவிருக்கும் 5ஜி என்று வரையறுக்கப் படுகிறது. அலைக் கற்றையின் அகலத்திற்கு ஏற்றவாறு ரேடியோ அலைவரிசை மாறுபடும். தற்போது நாம் பயன் படுத்தும் 4ஜி ரேடியோ அலைவரிசையானது 0.7 லிருந்து 2.7 ஜிகா ஹெர்ட்ஸ் ஆகும். இதுவே 5ஜிக்கு 80 ஜிகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
செல்ஃபோன்களில் பயன்படுத்தப் படும் ரேடியோ அலைவரிசைகள் அயனியாக்கா கதிர்வீச்சு என்கிற வகையின் பால் படும். எனவே இதனால் ஆபத்து எதுவும் இல்லை.
ஆனாலும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு SAR என்கிற அலகினால் அளவிடப்படுகிறது. SAR- Specific Absorption Rate.
அனுமதிக்கப்பட்ட SAR லிமிட் என்பது 1.6 Watt/Kg.
நாம் பயன்படுத்தும் செல்போன்கள் அந்த எல்லைக்குள் வருமாறு தயாரிக்கப் படுகின்றன. என்னுடைய சாம்சங் எம்31 தலையில் 0.52 எனவும் உடலுக்கு 0.69 எனவும் SAR உள்ளது.
இந்த அளவீடுகள் தகவலுக்காக கொடுத்துள்ளேனே அன்றி செல்ஃபோன் ரேடியேஷன்களால் மனிதனுக்கோ பிற உயிர்களுக்கோ எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தகவல்கள் இணையத்தில் இல்லை.

இதன் மூலமாக நான் அணுஉலைகள் பாதுகாப்பானவை என்று கூற வரவில்லை. அணுஉலைக் கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாக அழிப்பது என்பது தெரியாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்ட அணுஉலை எரிபொருள்கள் மற்றும் பல தளவாடங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்துக் கொண்டு உள்ளன. வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பது போல என்று கிராமத்தில் சொல்வார்கள் அல்லவா? உண்மையிலேயே புவியின் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பது அணுஉலைகள் தான். ஏனெனில் செர்னோபில் மற்றும் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட விபத்துகளில் நாம் கற்காத பாடங்கள் ஏராளம் உள்ளன.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...