Wednesday, October 23, 2019

இதயத்தை முள்கரண்டி கொண்டு கீறும் அராபிய மொழிப் படம்CAPERNAUM

நம்முடைய வாழ்க்கையும் அன்றாட உணவும் இருப்பிடமும் எந்த அளவுக்கு நிச்சயிக்கப் பட்டதாக உள்ளது, நாம் எவ்வளவு தூரம் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று உணர நிச்சயமாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மத்திய கிழக்கு நாடுகள் மதத்தாலும் போராலும் எந்த அளவு நிலைகுலைந்து போய் உள்ளது என்பதை உண்மைக்கு மிக அருகில் நின்று பேசும் படம். இளகிய மனம் கொண்டோர் உங்கள் தூக்கத்தை தொலைக்க கூடும் எச்சரிக்கை.

படத்தின் துவக்கத்தில் Zain என்ற 12 வயதுசிறுவன் கை விலங்கிடப் பட்டு அழைத்து வரப்படுகிறான்.யாரையோ கத்தியால் குத்தியிருக்கிறான். நீதிபதி வழக்கை விசாரிக்கிறார். அவனது ஃப்ளாஷ்பேக்காக கதை விரிகிறது.

பிழைப்புக்கு வழியின்றி கால்வயிற்று கஞ்சிக்காக ஏதேதோ செய்யும் குடும்பம். குடும்பத் தலைவன் படுத்திருக்கிறான் பொழுதுக்கும் சிகரெட் பிடிக்கிறான். அவன் ஆஷ்டிரேயில் இருக்கும் சிகரெட் துண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அந்த புறாக் கூண்டு வீட்டில் குழந்தைகள் தவழ்கின்றன. கதை முடியவில்லை இன்னொரு குழந்தையும் வரப் போகிறது.
சஹார் என்கிற சகோதரி வயதுக்கு வந்தவுடன் கட்டாய மணம் செய்து அனுப்பி விடுகிறார்கள். Zain கடுமையாக எதிர்த்து இயலாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

எங்கெங்கோ அலைந்து ஒரு தீம் பார்க்கில் தஞ்சம் அடைகிறான். அங்கே ஒரு பெண் illegal immigrant கைக் குழந்தையோடு இருப்பவள் zain ஐ தனது வீட்டிற்கு (இது ஒரு குருவிக் கூண்டு) அழைத்து செல்கிறாள். அவளது மகனை zain பார்த்துக் கொள்கிறான். அவள் வேறு பெண்ணின் அடையாள அட்டையில் வேலைக்கு செல்கிறாள். அப்படி செல்லும் போது போலீசில் மாட்டி சிறை செல்கிறாள். அவளுக்காக பால் குடி மாறா குழந்தையை வைத்துக் கொண்டு காத்து இருக்கிறான். தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறான்.
 குழந்தை என்னவானது?!
Zain யாரைக் குத்தினான்?!
தண்டனை கிடைத்ததா வெளியே வந்தானா?!
குழந்தையை விட்டுச் சென்ற அம்மாவின் கதி என்ன?! குழந்தை அவள் கையில் கிடைத்ததா?!
இப்படி பல கேள்விகளை முன்னிருத்தி படம் சற்று விறுவிறுப்போடும் நமது நெஞ்சம் பதைபதைப்போடும் செல்கிறது.
Zain ஆக நடித்த குட்டிப் பயல் அருமையாக நடித்துள்ளான். குழந்தையை எந்த சூழலிலும் காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்கிறான். முகத்தில் பொறுப்பு, கோபம், இயலாமை அழுகை மற்றும் குழந்தைத் தனம் அத்தனையும் கொண்டு வருகிறான்.
ஒளிப்பதிவு போரில் சிதிலமான அழுக்கான லெபனானை கண்முன் நிறுத்துகிறது.
நெட்ஃப்ளிக்சில் உள்ளது. இணையத்தில் கிடைக்க கூடும் பாருங்கள்.

Friday, October 11, 2019

வெற்றிமாறனின் சிவசாமி அசுரனா அல்லது பூமணியின் சிவசாமி அசுரனா?



சிவசாமி மகன் சிதம்பரம் (வயது 15) வடக்கூரானை கொலை செய்து விடுகிறான். வடக்கூரான் ஊரார் நிலத்தை எல்லாம் வாங்கிப் போட்டு பெரு மிராசுதாராக வாழ பேராசை கொண்டவன். சிதம்பரத்தின் அண்ணன் சாவுக்கு காரணமானவன். 
சிதம்பரத்தை போலீசில் சிக்காமல் தப்புவிக்க தந்தையும் மகனும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். அவனது மாமா வெளியில் இருந்து உதவுகிறார்கள். காட்டிற்குள்ளான தலைமறைவு வாழ்க்கை நுட்பமாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிதம்பரத்தின் எண்ணவோட்டத்தில் வடக்கூரான் அவர்களது நிலத்தை வாங்க ஆசைப்பட்டது மற்றும் இந்த அக்கபோரில் அவனது அண்ணன் வடக்கூரானால் கொலைசெய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் வந்து போகின்றன. இறுதியாக கேசை ஒப்புக்கொண்டு சரணடைய செல்வதில் முடிகிறது. நாவலின் ஒரு இடத்தில் “சக்கிலியத் தெரு“ என்கிற சொல் வருகிறது. இதையன்றி வேறு எங்கேயும் இது தலித் மக்களின் வாழ்க்கை என்பதற்கான அடையாளம் இல்லை.
நாவல் ஒரு கிளாஸிக் தான் ஆனால் இந்த நாவலில் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்திற்கான சரக்கு எதுவும் உள்ளதா? உப்பு சப்பில்லாத ஒரு ஃபளாப் பஸ்டர் படம் வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் வெற்றிமாறன் என்ன செய்தார்?
கதையின் மையச் சரடை எடுத்துக் கொண்டு அதில் அந்தக் காலகட்ட சாதிய அடக்குமுறை, பஞ்சமி நில அபகரிப்பு என்று பல விஷயங்களை நாவலுக்கு அப்பாற்பட்டு பேசியிருக்கிறார். நாவலில் உள்ள கதாபாத்திரங்களோடு நாவலில் இல்லாத தனுஷின் ஃபளாஷ்பேக் வாழ்க்கை, தனுஷின் போராளி அண்ணன் கேரக்டர், பிரகாஷ்ராஜ் கேரக்டர் மற்றும் சாதிவெறி பிடித்த வில்லன் கேரக்டர் என பலவற்றை புகுத்தி சாதிய அடக்குமுறையின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
1970 களில் எங்கள் ஊரில் கூட தலித் மக்கள் செறுப்பு அணிந்து செல்ல இயலாத சூழல் இருந்தது. இந்த சம்பவம் எங்கள் ஊரில் நடந்த ஒன்றுதான். ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை செறுப்பணிந்து செல்லக் கூடாது என்று இடைமறிக்கிறார்கள். அவனோ திரும்பி வந்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு செல்கிறான்.
“எனது மகனை செறுப்பு போட்டுக் கொண்டு நடக்க கூடாது என்று கூறியது யார்?”
“நாங்கதான்“
“எது வரைக்கும் போடக்கூடாது?”
“நம்ம ஊர் எல்லை தாண்டும் வரைக்கும்”
“என் மகன் செறுப்பை கையில் எடுக்க மாட்டான், நீங்களோ செறுப்பு போடக்கூடாது என்கிறீர்கள் அதனால ஊர் எல்லை வரைக்கும் நீங்களே எம்புள்ள செறுப்ப கையில எடுத்துக் கிட்டு போய் குடுத்துட்டு வாங்க”
இதற்கு அப்புறம் என்ன  அடிதடி போலீஸ் கேஸ் தான். இதில் நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரி அடிதடிக்கு யாரை தூண்டி விடுவார்கள் என்றால் ஊரில் சாதி என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ஒரு அனாமத்தான ஆளைத் தான் தேர்வு செய்வார்கள்.
வியக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் மாரியம்மாளின் தலையில் செறுப்பை வைத்து அடிக்கும் காட்சியிலும் அந்த மாதிரியான ஆளைத் தான் பயன்படுத்தி இருப்பார் வெற்றிமாறன். அப்படியென்றால் திரைக்கதையை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இப்போது சாதிய அடக்குமுறை இல்லாத சூழலில் வெற்றிமாறன் தேவையில்லாமல் இந்த மாதிரி படம் எடுக்கிறார் என்கிறார்கள். நில அபகரிப்பு, வெறும் சோற்றுக்கு உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, வீட்டினைக் கொளுத்துவது அதிகார அல்லது அரசாங்க அமைப்பின் பாரபட்சம் இந்தமாதிரி இன்னும் பல இன்னல்களை கடந்துவராத கிராமத்து தலித் எவரையாவது காட்டுங்கள் பார்ப்போம். இன்னும் பல தமிழக கிராமங்களில் இரட்டைக் குவலை முறை உள்ளது. எனது பள்ளி கல்லூரி பிராயத்தில் எங்கள் ஊரிலும் இரட்டைக் குவலை முறை அமலில் இருந்தது.
ஏன் எங்கள் ஊரில் சலூன் கடை இருந்தும் கூட நான் முடிவெட்டிக் கொள்ள தா.பழூருக்கு பேருந்து ஏறி சென்றிருக்கிறேன். அதனால் படத்தில் கூறப்பட்ட எந்த விஷயமும் உண்மைக்கு மாறானது கிடையாது.
அப்புறம் இந்த வன்முறைக் காட்சிகள்?!
பாரதிக் கண்ணம்மா படத்தில் பார்த்திபன் செத்துப் போகணும்.
காதல் படத்தில் பரத் பைத்தியக்காரனாக அலையணும்.
தலித் உரிமை பேசிய இரணியன்கள் அம்மக்களின் அறியாமையால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்.
இப்படி அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிராக விரலைக் கூட உயர்த்தாமல் கதாப்பாத்திரத்தை சாகடித்து தலித் உரிமை படம் எடுத்து சுய இன்பம் கண்ட தமிழ் சினிமாக் களத்தில் அசுரனாக மாறி அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் வெட்டிச் சாய்க்கும் தலித் பாத்திரத்தில் நாயகனைக் காணும் போது பல பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க இயலாது.

இந்தமாதிரி  படங்களை கையால்வது டெலிக்கேட்டான விஷயம் வசூல் ரீதியாக பெரிய இழப்பு ஏற்படும் என்கிற மாயைகளை உடைத்து “வாருங்கள் எல்லா விஷயங்களை குறித்தும் உரையாடுவோம்“ என்கிற அரைகூவலோடு முன்னத்தி ஏராக களத்தில் இறங்கிய இயக்குனரையும் இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியாது.


Wednesday, September 4, 2019

ஆசிரியர் தின சிறப்பு பதிவு – செப்.-5, 2019



முந்தைய ஆண்டுகளில் எனது ஆசிரியர்களில் நான் கண்டு வியந்த நல்லாசிரியர்களைப் பற்றி பதிவுகள் எழுதினேன்.
இந்த ஆண்டு பொதுவான சில கருத்துக்களைக் கூறி வாழ்த்தினை பதிவு செய்ய விழைகிறேன்.
பாடங்களைக் காட்டிலும் மாணவர்களின் மனதினில் நல்லொழுக்கங்களை விதையுங்கள்.

நாம் பின்பற்றாத ஒரு நல்லொழுக்கத்தை நம்மால் நிச்சயமாக முழு மனதோடு போதிக்க இயலாது. (மது அருந்தும் ஆசிரியரால் “மது அருந்துதல் கேடு விளைவிக்கும்“ என முழு மனதோடு போதிக்க இயலுமா?).

வருடந்தோறும் ஒரே டெம்ப்ளேட்டில் பாடத்தை போதிக்க முயல்வது தினந்தோறும் காலையில் உப்புமா சாப்பிடுவது போல. அது நமக்கே போரடித்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்திக் கொள்வோம்.
நாம் கடினம் என நினைக்கும் பாடப்பகுதி நிச்சயமாக மாணவர்களுக்கு வேப்பங்காய் தான். எனவே பாடத்தின் அனைத்துப் பகுதிகளும் மிக எளிது என எண்ணம் வரும் வரை தொடர்ந்து பயிற்சி செய்வோம். பின்பு மாணவர்களின் மனதில் ஏற்ற முயற்சி செய்வோம்.

“மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதீர்கள்” என்பது போல பாடம் நடத்தும் போது தேர்வினை நினைக்காதிருப்போம். அதுவே பாடங்களை உற்சாகத்தோடும் பரவசத்தோடும் நடத்த உதவும்.

முடிந்தவரையில் அமர்ந்து கொண்டு பாடம் நடத்துவதை தவிர்ப்போமாக. நாம் வகுப்பறையில் இருக்கும் நேரங்களில் அனைத்து மாணவர்களின் கண்களையும் அரை நிமிடத்திற்கு ஒரு முறையாவது சந்தித்து விடுவது நல்லது.

மாணவர்களின் கண்களின் மொழி அறிவோம். அதில் “ஒண்ணும் புரியல சார்“, ”காலையில் சாப்பிடவே இல்லை சார்”, “வீட்டில் பிரச்சனை சார்”, இந்த மாதிரி பல விஷயங்கள் காணக் கிடைக்கும். அது நமது வகுப்பு ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

பசித்திருக்கும் மாணவனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தருவதிலோ, மாணவர்களை உற்சாகமூட்ட சிறு பரிசுகள் வாங்கித் தருவதிலோ நமது மாதாந்திர பட்ஜெட் ஒன்றும் தள்ளாடிப் போகாது என்பதை நினைவில் வைப்போம்.

நம்முடைய ஒரு நாள் விடுப்பு என்பது நம்மைப் பொறுத்தவரை ஒன்றுதான். அப்படியே மாணவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் எத்தனை நாள் தெரியுமா? அப்படியே நமது வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையால் பெருக்கிக் கொள்வோமானால் பிரம்மாண்டம். இப்போது புரிகிறதல்லவா நமது உயரம்.


எனவே வீணாகிப் போகும் தற்செயல் விடுப்பினால் ஒன்றும் நட்டமாகிப் போகப் போவதில்லை. அவசியம் இன்றி விடுப்பு எடுப்பதை தவிர்ப்போமாக.

மாணவர்களை கண்டிக்கலாம் தேவைப்பட்டால் தண்டிக்கலாம் ஆனால் ஒருபோதும் வெறுக்காதிருக்க பழகுவோம். ஏனென்றால் அவர்கள் இன்னும் பக்குவமடையாத சிறார்கள்.

மாணவர்கள் மனதில் எப்போதும் பாலின சமத்துவத்தை விதைப்போமாக. ( ஆண்கள் மேல் பெண்கள் கீழ் என்கிற எண்ணமே எழாவண்ணம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விழிப்புணர்வு கொடுப்போமாக)

கடைசி மாணவனை கடைதேற்றும் முயற்சியில் மீத்திற மாணவனை அறிவுப் பட்டினி போடாமல் பேலன்ஸ் செய்து நடந்து கொள்ளும் சாகச வித்தையை கைக்கொள்வோமாக.

தன் சுத்தம், சுற்றுச் சூழல் அக்கரை, மரம் வளர்ப்பு என்பன போன்ற விஷயங்களையும் நாம் தான் சொல்லித் தர வேண்டும். “இது என் ஏரியா இல்ல“ என்று ஒதுங்கி இருத்தலாகாது.

“உழைப்பாளியின் வியர்வை காயும் முன் கூலி கொடுக்க வேண்டும்” என்பது போல தேர்வு முடிந்த பின்பு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் விடைத்தாட்களை திருத்தி வழங்க முயல்வோம்.

மாணவர்களை அடித்த பின்போ அல்லது திட்டிய பின்போ அரவணைக்க ஈகோ பார்க்க வேண்டாம். சம்மந்தப் பட்ட மாணவன் சமாதானமாகிவிட்டதை உறுதி செய்து கொள்வோம். ஏனென்றால் இப்போதெல்லாம் மாணவர்கள் “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்க குழைபவன் மாணவன்” என்றாகி விட்டிருக்கும் காலம்.

”நல்லாசிரியர் என்று தனியாக எவரும் இல்லை, ஆசிரியர் என்றாலே நல்லவர் தான்” என்ற வார்த்தைகளை சமூகத்தில் நிலைநிறுத்த உறுதியேற்போம்.

அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


Saturday, August 24, 2019

புதியக் கல்விக் கொள்கை என்னும் பிற்போக்கு சாசனம்




”சாரி கொஞ்சம் பெரிய கட்டுரைதான்”

சூத்திரனான சம்பூகன் வேதம் பயின்ற “தவறை“ செய்த காரணத்தினால் ஏற்பட்ட தீட்டை கழிக்க அவனது தலையை கொய்தான் கடவுள் இராமன் என்று சொல்லி வைத்திருக்கும் புராண புரட்டை தூக்கி வைத்துக் கொண்டாடும் கும்பல் உருவாக்கும் கல்விக் கொள்கை எப்படி இருக்கும். அதனால் தான் சொல்கிறேன் மக்களே “மண்ட பத்தரம்“
ஷத்திரியன் அல்லாத ஏகலைவன் வில்வித்தை பயில்வதற்கு தனது பிறப்பினால் “தகுதி“யற்றவன் ஆகிறான். ஆனாலும் கூட பயிற்சியாளர் துரோணாச்சாரியாரின் ஆதரவு இன்றி தானாகவே வில்வித்தை பயின்று விடுகிறான். நமது ஆதரவும் பயிற்சியும் இல்லாமலே பயின்று விட்டானே என்று பெருமிதப் பட்டு பாராட்டுவது தானே நல்லதொரு குருவுக்கு அழகு. ஆனால் இந்த துரோணாச்சாரியார் அவனது வில்வித்தையை முற்றிலும் முடக்கும் விதமாக அவனது கட்டை விரலை குருதட்சணையாக கேட்டு பெறுகிறார். (விளையாட்டுத் துறையில் சிறந்த பயிற்சியாளர்களுக்கு இந்த ஆள் பெயரில் விருது வழங்குவது எவ்வளவு பெரிய வெட்க கேடு) இந்த மாதிரி புராண புரட்டை தலையில் வைத்துக் கொண்டாடும் ஆட்கள் இப்போது புதிய கல்விக் கொள்கை சமைத்து இருக்கிறார்கள் மக்களே உங்கள் கட்டை விரல்கள் பத்திரம்.
”ஏன் அய்யா இப்படி எடுத்த எடுப்பிலேயே வேண்டாத மாமியா கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் னு போட்டு தாக்குறீரு?“ என்று நீங்கள் மருகுவது கேட்கிறது.
முதலில் இந்தக் கல்விக் கொள்கையை வகுத்தளித்த குழுவின் தலைவர் யார் தெரியுமா?
அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் முன்னால் மாநிலங்களவை உறுப்பினர் பத்ம விருதுகள் மூன்றினை பாக்கெட்டில் கெத்தாக வைத்திருப்பவர். ஆனால் அவரின் புரொஃபைலை பாருங்கள் கல்வித்துறையில்(Department of Education) அவரது பங்களிப்பு என்ன?
சரி அது போகட்டும் அவர்கள் அப்படி என்னதான் புதுமையான கருத்துக்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்.
it has been estimated that the development of a strong ECCE programme is among the very best investments that India could make, with an expected return of `10 or more for every `1 invested
முதலாவது பரிந்துரையில் அவர்கள் சொல்லி வைத்திருக்கும் அபத்தம் தான் மேலே உள்ளது. ஒரு ரூபாய் போட்டு பத்து ரூபாய் எடுக்கப் போகிறார்களாம்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் 85 விழுக்காடு 6ம் அகவைக்குள் ஏற்பட்டு விடுவதால் அந்த வயதில் அவர்களை “கபால்“னு பிடித்து அமர வைத்து எல்லாத்தையும் கத்து குடுத்து விட வேண்டும் என்கிறார்கள். அதன் பொருட்டு அங்கன் வாடிகளை மேம்படுத்தி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் ஆரம்பக் கல்வியை தொடங்கி விட வேண்டும் என்கிறார்கள். ஆனால் உலகிலேயே கல்வித்தரத்தில் முதலில் உள்ள ஃபின்லாந்தில் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி 6 ம் வயதுக்கு மேல் தான் துவங்குகிறது. அடுத்ததாக இங்கே தான் அவர்களின் விஷமூளை வேலை செய்கிறது. சிறுவயதில் குழந்தைகளுக்கு மொழிகளை கற்பது எளிது ஆகையால் மூன்று மொழிகளை கற்றுக் கொடுத்து விடலாம் என்கிற ஆலோசனையை முன் வைக்கிறார்கள். (முதலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தாய் மொழி என்றார்கள் அப்புறம் நமது எதிர்ப்பை கண்டு இந்திக்கு பதிலாக அட்டவணையில் உள்ள 22 ல் உள்ள ஏதேனும் ஒன்று என்று சொல்லி விட்டார்கள்)
கற்றலில் (கற்பித்தலிலும் தான்) உள்ள இன்பத்தை சாகடித்த பெருமை தேர்வுகளுக்கு உண்டு என்று திடமாக நம்புபவன் நான். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் கழிவறை செல்வதை தவிர்த்து அனைத்துக்கும் தேர்வு உண்டு. ப்ரீகேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரையில் ஆதாரக் கல்வி முடிந்து ஒரு தேர்வு. பின்பு மூன்று முதல் ஐந்து வரை தொடக்க கல்வி அதற்கு ஒரு தேர்வு. அப்புறம் ஆறு முதல் எட்டு வரை நடுநிலைக் கல்வி அப்புறம் ஒரு தேர்வு. அடுத்த நிலையில் பாய்ந்து வருவது தான் பிரம்மாஸ்திரம். ஆம் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை நான்காண்டுகள் உயர்கல்வி. எட்டு செமஸ்டர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஒன்பதாம் வகுப்பிலேயே அறிவியலா கலையா தொழிலா என்று தனக்கான பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ( அந்த வயசுல கொழந்தைகளுக்கு ஜட்டிய கூட ஒழுங்கா போடத் தெரியாதே, அவர்களை தங்கள் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கச் சொல்வது கொஞ்சமாவது அடுக்குமா?)
இத்தனை தேர்வுக்கும் அப்புறம் எவனாவது படிப்பு கிடிப்புன்னு வருவானா? அப்படி எவனாவது வந்தான்னா, “வாடா, வா வந்து நீட் எக்சாம் பாஸ் பண்ணு அப்ப தான் காலேஜில சீட்டு ஏன்னா எங்களுக்கு தகுதியும் திறமையும் தான் முக்கியம்” என்கிறார்கள். அப்ப முக்கி முக்கி எட்டு செமஸ்டர் பாஸ் பண்ணது?! அப்படின்னு யாரும் கேக்கபடாது. அது தகுதி நீட் தெறம சரியா?
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் கல்விக் குழுவின் முதலாம் மற்றும் இரண்டாம் பரிந்துரை.
இதெல்லாம் படிச்சி முடிச்சி மூன்றாவது பரிந்துரையை படித்த போதுதான் ”கண்ணுல அப்படியே ஜலம் வச்சுண்டேன் கேட்டேளா”
ஆமாம், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் தேசிய அளவிலான பொதுத்தேர்வினை எழுதி தான் அடுத்த வகுப்புக்கு போகணும். ஏன்னா, மாணவர்களுக்கு இப்படில்லாம் தேர்வு வச்சாதான் திறமை வளரும். தேர்வு மையக் கற்றலின் அவலங்களை நமக்கு பல முறை  கோழிப்பண்ணை மாதிரிகள் தோலுரித்துக் காட்டியுள்ளன. ஆம், வேதியியலில் சென்டம் எடுத்த மாணவன் பிப்பெட்டுக்கும் பியுரெட்டுக்கும் வித்தியாசம் அறியாமல் இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தார் தலையில் அடித்துக் கொண்டதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன் “ஏசி மின்னியற்றி வேலை செய்யும் விதம் பற்றி விளக்குக” என்றால் மூச்சு விடாமல் எஸ்பிபி மாதிரி தம் கட்டும் மாணவர்கள் கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க எனும் போது தலையை சொறிகிறார்களே. மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக சொல்வேன் தேர்வு மையக் கற்றல் கற்றலிலும் கற்பித்தலிலும் உள்ள இன்பத்தை சாகடித்து விட்டன. இவர்களோ பால்குடி மாறாத குழந்தைகளுக்கு கூட தேர்வு என்று கொஸ்டின் பேப்பர தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அடுத்து நான்காவதாக வருவது தான் முதலுக்கே மோசம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிப்பது. பள்ளிக் கல்வியில் உதவும் மனம் கொண்ட தனியாரை அனுமதிப்பது (Philanthropic Public Parternship)
 இன்னோரு முறை சொல்லுங்க, உதவும் மனம் கொண்ட தனியாரை அனுமதிப்பது (Philanthropic Public Parternship) 
இன்னோரு முறை சொல்லுங்க, யோவ் அதாம்பா இந்த கல்வித் தந்தை இருக்காங்களே அவுங்கதான்
இதுவரையிலான எந்த பரிந்துரையிலும் நிதி சார்ந்த சாத்தியங்கள் பற்றி எடுத்து இயம்ப வில்லை. இப்போ தான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. தனியார் பள்ளிகள் ஏற்கனவே இருப்பது போதாது இன்னும் வரணும். இருக்கும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடணும்.
அப்புறம் இந்த ஆங்கிலத்தின் மீது அப்படி என்ன கோவம்னே தெரியல. அத அடிச்சி தொவச்சி காயபோடறதுக்குன்னே மூணு பக்கத்த ஒதுக்கி இருக்காங்க. (ஆமாம் பக்கம் 81,82,83)
உலகத்தில் வெறும் 15 விழுக்காட்டினர் தான் ஆங்கிலம் பேசுறாங்கலாம். இந்தியாவில் இருக்கும் எகனாமிக் எலைட் குரூப் தங்களை தனித்து காண்பித்துக் கொள்வதற்கு ஆங்கிலத்தை பேசுகிறார்கள். ( ஏம்பா வயிற்றுப் பாட்டுக்கு தான்பா ஆங்கிலம் கத்துக்கறது. எப்படியாவது வெளிநாடு போயாவது பொழச்சிக்கலாம்னுதான். வேணும்னா உங்க முன்னோர்கள கேளுங்க, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் கை ஓங்கிய நேரத்தில் மைலாப்பூர் வாசிகள் எல்லாம் ஜெர்மன் கத்துக்க தயாரானாங்களாம்.) இந்தியாவில் 54 விழுக்காட்டினர் இந்தி தான் பேசுகிறார்களாம். (அதுக்கென்ன, எங்க மொழியோட பாரம்பரியம் தொன்மை வாய்ந்தது நாங்க எங்க மொழிய தான் தலையில் வைத்து கொண்டாடுவோம். அவனுங்க தாய்மொழிய ஓட விட்டுட்டு இந்திய பிடித்துக் கொண்டது போல நாங்களும் ஆகமுடியாது)
உலக அளவிலான அறிவியல் ஆய்வு சார்ந்த சஞ்சிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் வருவதால் வேண்டுமானால் உயர்கல்வியில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும் படிக்கட்டும் என்கிறார்கள்.
இந்தியாவின் புராதான கல்வி முறைகளான குருகுலம், மதரஸா, பாடசாலை முறைஆகியவற்றை அங்கீகரிக்க போகிறார்களாம். குருகுலம் வர்ணாசிரம அடிப்படையில் கல்வி வழங்கப்பட்ட இடம் அல்லவா?
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தன்மையுடைய பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து விரட்டும் வேலை அல்லவா? பலதரப்பட்ட கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் உள்ளடக்கிய துணைக்கண்டத்தை இந்தியக் கலாச்சாரம் என்கிற ஒரே பஞ்சாரத்தினுள் வலிந்து திணிக்கும் முயற்சி அல்லவா இது?
பள்ளிக் கல்வி முடிந்து எங்கு சேர வேண்டுமானாலும் ஒரு நுழைவுத்தேர்வு அவசியம் NATIONAL TESTING AGENCY  என்கிற ஒரு தன்னிச்சையான அமைப்புதான் அதை நடத்தும். (நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்ல சென்டர் நாகாலாந்துல போட்டாலும் போயிடணும் பாத்துக்கோங்க) அப்புறம் அந்த எட்டு செமஸ்டர்ல வாங்கின மார்க்க என்ன பண்றது? கசக்கி குப்பையில போட வேண்டியது தான். அப்போ ஒரு பயலும் பள்ளிகளில் இவர்கள் அரும்பாடு பட்டு வடிவமைத்த பாடத்திட்டத்த படிக்க மாட்டான். வசதி உள்ள அம்புட்டு பயலும் நாலு வருசமும் முக்கி முக்கி நுழைவுத்தேர்வு கோச்சிங் பாடத்த தான் படிப்பான்.
கொஞ்சம் ஆராய்ச்சி நிறைய கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் , நிறைய ஆராய்ச்சி கொஞ்சம் கற்பித்தல் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டங்களை மட்டும் தரும் தன்னாட்சி அதிகாரம் படைத்த கல்லூரிகள் இவைதான் அவர்கள் பரிந்துரைக்கும் உயர்கல்வி கட்டமைப்பு.
மொத்தத்தில் கல்வி சார்ந்த அனைத்து அதிகாரங்களும் மையத்தில் குவிந்து கிடக்க, மாநிலங்கள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
இறுதியாக ஆசிரியர்கள் விஷயத்தில் இவர்களின் கருத்தாக இருப்பது. (It is because of this noble role that the teacher in ancient India was the most respected member of society. Only the very best and most learned became teachers)“அந்த காலத்தில் சிறந்தவர்களும் நன்கும் கற்றவர்களும் குருக்களாக இருந்தனர். குருக்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் சுதந்திரமாக கற்பித்தலை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு வேண்டியது பெற்றோர்களால் வழங்கப்பட்டது” ( இந்த தி வெறி பெஸ்ட் ன்னா இன்னாங்கோ??)
(Today, however, the status of the teacher has undoubtedly and unfortunately dropped. )துரதிஷ்ட வசமாக இப்போது ஆசிரியர்களுக்கு அப்படியான மரியாதை சமூகத்தில் இல்லை. ஏனென்றால் அவர்களின் தரம் மிகவும் குறைந்து விட்டது தான் காரணம். ( அந்தக் காலம் இந்தக் காலம் இடையிலான மெல்லிய கோடு எது தெரியுமா ஒரு ”நூல்” தான். அவா ஆசிரியராக இருந்த வரையிலும் ஷேமமா இருந்த கல்வி எல்லா வர்ணத்தாரும் ஆசிரியராக ஆனவுடன் “அபிஷ்டு” ஆயிடுத்து)
திறமையான ஆசிரியர்களை தோற்றுவிப்பதற்கென்றே உதவித் தொகைகள் உருவாக்கப் பட இருக்கின்றன. பள்ளி அளவில் நல்ல திறமையும் நல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணும் கொண்ட பின் தங்கிய சமூக மற்றும் பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நான்காண்டு ஆசிரியர் படிப்பு வழங்கப்பட்டு பணி வழங்கப் படும். என்கிறார்கள். கவனித்தீர்களா “சமூக பொருளாதார” என்கிற வார்த்தையை. அதாவது இடஒதுக்கீடு முறை சுத்தமாக ஒதுக்கி வைக்கப் படும்.இருக்கும் இந்த திறமையற்ற ஆசிரியர்கள வச்சிக்கிட்டு என்னா பண்றது?
அவர்களுக்கும் அவர்களின் தகுதி திறமையை கண்டறிய அவ்வப்போது தேர்வு உண்டு. 
ஏதோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா பதவி உயர்வு என்பதெல்லாம் குளோஸ். இனிமே அதுக்கும் மதிப்பீடு உண்டு. அது வேலையில் உங்கள் வெற்றிப் புள்ளிகளை பொறுத்து குழு வழங்கும் மதிப்பீடு
இறுதியாக நான் சொல்வது இது தான்.

இந்த கொள்கையின் உள்ளார்ந்த நோக்கமாக நான் அவதானித்தது இவை தான்
1.   இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு. ( பட்டியலில் ஏதாவது ஒரு மொழி என்றாலும் இந்தியா முழுவதும் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் 22 மொழி ஆசிரியர்கள் என்பது சாத்தியமல்ல எனவே இந்தி தான் வரும்)
2.   செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்டுவது.
3.   கல்வியில் பெருமளவு தனியார் மயம்.
4.   ஆசிரியர் நியமனத்தின் அடிப்படையையே மாற்றி இடஒதுக்கீட்டை சிதைப்பது.
5.   கல்வியில் மாநில அதிகாரத்தை முற்றிலுமாக நிர்மூலமாக்குவது.
6.   National Shiksha Aayog கல்விக்கும் “ஒரே“ தலைமை.
7.   நுழைவுத் தேர்வு மையங்கள் புற்றீசல் போல முளைக்க வழிவகை செய்வது. காசு இருந்தா காலேஜ் போ இல்லன்னா வெளில போ



சமீபத்தில் பார்த்த படங்கள்



1.HOTSTAR ல் வந்த வெப் சீரிஸ் HOSTAGES.
முதலைமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் மருத்துவர் மீரா ஆனந்தின் வீட்டுக்குள் புகுந்து பிணை கைதிகளாக குடும்பத்தினரை பிடித்து வைத்துக் கொண்டு முதல்வரை சிகிச்சையின் போதே சத்தமின்றி முடிக்கச் சொல்லி வற்புறுத்தும் கும்பல். முதலமைச்சர் பிழைத்தாரா, மருத்துவர் குடும்பம் சிக்கலில் இருந்து வெளியேறியதா என்பதை பத்து எபிசோடுகளில் பரபரப்பு குறையாமல் பக்குவமாக சொல்லி இருக்கிறார்கள்.


2.ராதாமோகனின் ”காற்றின் மொழி”. அவரது வழக்கமான பாணியிலான படம். ஜோதிகா நன்றாக நடித்திருப்பார். இன்னும் எத்தனை படத்தில் தான் எம்.எஸ்.பாஸ்கரை மனநிலை பிறழ்ந்தவராக காண்பித்து பின்னர் ஒரு நெகிழ்ச்சியான ஃபிளாஷ்பேக் வைக்க உத்தேசம்??
சித்ஸ்ரீராம் பாடியுள்ள “போ உறவே” அருமையான பாடல். பாடல் வரிகளை கவனித்துக் கேளுங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளது.

3.ANDHADHUN என்கிற ஒரு இந்தி படம். இதுவும் HOTSTAR ல் தான். ஒரு பியானோ இசைக் கலைஞன் பார்வையற்ற உலகிற்கு சென்று தனது இசை மீது கவனக்குவிப்பு செய்து சாதித்து வெளிநாடு செல்ல எண்ணுகிறான். ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது. (கபாலி பட  ஹீரோயின் தாங்க அது) அவளை பார்க்க எண்ணி கரு விழி மறைக்கும் லென்சை எடுத்து விட்டு “பார்வை“ தெரியாத மாதிரி நடமாடுகிறான். அந்த மாதிரி ஒரு தருணத்தில் ஒரு கொலை செய்யப்பட்டு சூட்கேசில் பாடியை மறைத்து எடுத்து செல்வதை பார்த்து விடுகிறான். போலீசில் சொல்ல சென்றால் அங்கே போலீசாக கொலைகாரன். இவனுக்கு கண் தெரியுமோ என்று சந்தேகம் கொள்கிறான். அந்த சம்பவத்தால் அலைக்கழிக்கப் படுகிறான். உயிர் பிழைத்தானா? இசையில் சாதித்து வெளிநாடு சென்றானா? என்பதை சுவாரசியம் குறையாமல் க்ளைமாக்ஸின் இறுதி வினாடியில் ஒரு த்ரில் வைத்து சொல்லி இருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்த ஹீரோ தான் இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர்.

4.“கேம் ஓவர்“ தமிழ் படம் தான். வெள்ளாவியில் வெளுத்த “டாப்சி“ தான் ஹீரோயின். பாலியல் அத்து மீறலுக்கு உள்ளாகி அதனால் இருட்டைக் கண்டால் அலறும் மனநோய்க்கு ஆட்படுகிறார். அவரும் அவருடைய சர்வன்ட் மெய்டும் ஒரு தனி வில்லா வில் வசிக்கிறார்கள். அவருக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை நல்ல திகிலோடு சொல்லி இருக்கிறார்கள். பாலியல் அத்து மீறலால்  பாதிக்கப் பட்ட பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கல்களை அனுபவிக்கிறார் என்பதை நன்றாக காட்சி படுத்தி இருக்கிறார்கள். டாட்டூ குத்தும் ஃபேஷன், மெமோரியல் டாட்டூ இறுதியில் லைட்டா அமானுஷ்யம் என்று பயணிக்கிறது கதை. பின்னணி இசை நிச்சயம் பாராட்டப் பட வேண்டும்.

5.”THE DEAL’” KOREAN MOVIE ஒரு சைக்கோ சீரியல் கில்லர். ஒரு போலீஸ் ஆபிசரின் கர்ப்பிணி தங்கையை கொன்று விடுகிறான். ஆபீசர் உடனடியாக புலனாய்வு செய்து கண்டு பிடித்து விடுகிறார். தண்டனையும் பெற்று தருகிறார். அவரது தங்கையின் பிணத்தை எங்கே புதைத்தேன் என்பதை சொல்ல மறுக்கிறான். சிறையில் இருக்கும் ஒரு கைதியின் எதிரியை வெளியே இருக்கும் அந்த இறந்து போன பெண்ணின் கணவன் கொலை செய்கிறான். அந்த கைதி உள்ளே இருக்கும் அந்த சைக்கோ கொலைகாரனை கொலை செய்ய முயல்கிறான். ஆனால் தப்பித்து விடுகிறான். சைக்கோ கொலைகாரன் கொல்லப் பட்டானா? தங்கை புதைத்த இடம் தெரிந்ததா? மச்சான் நிலை என்ன? என்பதை தமிழுக்கு சற்றும் குறையாத மசாலா நெடியுடன் கொடுக்கும் ஒரு பழிவாங்கும் போலீஸ் ஸ்டோரி.

6. எப்போதுமே வங்கி கொள்ளை சார்ந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒரு விடுகதைக்கு உண்டான சுவாரசியத் தன்மை நிறைந்து இருக்கும். ஹாட்லி சேஸ் ன் கதையை தழுவி எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் “நாணயம்“ மற்றும் மற்றொரு நல்ல படமான ”ராஜதந்திரம்” இவை இரண்டுமே மிக சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஓடவில்லை. நாணயமாவது சற்று உருண்டு ஓடியது. (நான் போகிறேன் மேலே மேலே என்கிற அருமையான மெலடிப் பாடல் அதில் உண்டு)
“THE ITALIAN JOB” இத்தாலியின் வெனிஸ் நகரில் ஒரு வங்கியின் தங்க பாலங்கள் இருக்கும் லாக்கரை திருடுகிறது ஒரு கும்பல். ஒரு வயதானவர்தான் அதை திறக்கிறார். அந்த கும்பலில் ஒருவன் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி குளிர்ந்த ஆற்றில் தள்ளி சுட்டுவிட்டு அனைத்து தங்க பாலத்தையும் ஆட்டைய போடுகிறான். துப்பாக்கி சூட்டில் அந்த வயதானவரைத் தவிர அனைவரும் தப்பிக்கிறார்கள். நான்காண்டுகளுக்கு பிறகு கதை அமெரிக்காவில் விரிகிறது. அந்த வயதானவரின் மகள் சட்டப் பூர்வமாக வங்கி லாக்கர்களை திறந்து தரும் ஒரு நேர்மையான ஆளாக இருக்கிறாள். துரோகத்தை வென்று தங்கத்தை மீண்டும் கைப்பற்ற அந்த கும்பலோடு இணைகிறாள் மகள். இப்போது அந்த ஒருவனிடம் இருக்கும் தங்க பாலங்களை எப்படி இவர்கள் திட்டமிட்டு லவட்டுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள். இந்தப் படம் ஜியோ மூவிஸ் ல கிடைக்கிறது.


Monday, July 15, 2019

புளியம்பழத்தின் கதை


ச்சீ ச்சீ இந்தக் கதை ரொம்பப் புளிக்கும்!!
புளிய மரத்தில் புளி உளுக்க ஏறியவர் தவறி விழுந்து மரணம்செய்தியை பார்த்ததும்பகீர்என்றது.
உடனே அம்மாவுக்கு போன் செய்துபுளி உளுக்க ஆள் கூப்பிடாதே வேணும்னா கீழ உழுவறத மட்டும் பொறுக்கிக்கஎன்று சொல்லிவிட்டேன்.
எங்க வீட்டு புளியமரத்துக்கு வயது 75 தாண்டி இருக்கும். தரையோடு செங்குத்தாய் வேர் பிடித்துநாட்டாமை விஜயகுமார்மாதிரி சும்மா கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும்.
அந்த வழியாக செல்வோருக்கு இளைப்பாற நிழலை வள்ளலாக வாரி இறைக்கும்ஏசிவசதியுடன். அவர்கள் வீட்டு கூரையில் கூட கதிரவன் ஒலி ஊடுருவும் ஆனால் எங்கள் மரம் கதிரவனின் ஒலியை தரை தொட அனுமதித்தது இல்லை.
மூன்று பேர் சேர்ந்தால் கூட கட்டியணைப்பது சிரமம். அவ்வளவு பருத்த மரம். நானும் சில புளிய மரங்களை பார்த்திருக்கிறேன்மண்டியிட்ட யானைகணக்காக கீழே வளைந்து தரையை தொட்டுக் கொண்டிருக்கும். பால் மறவா பாலகர்கள் கூட கிளை பிடித்து ஏறி ஊஞ்சல் ஆட அனுமதிக்கும்.
 இந்த விஷயத்தில் எங்கள் மரம் கண்டிப்பான பேர்வழி. பெரியவர்கள் கூட ஏணியின் உதவி இல்லாமல் அதன் கிளை பற்ற இயலா வண்ணம் ஓங்கி உயர்ந்தது. அருகில் உள்ள மாமரத்தில் நாங்கள் நுனிக் கொம்பு வரை ஏறி உள்ளதிலேயே கடைசி மாங்காய் வரை பறித்து தின்றிருக்கிறோம் ஆனால் இந்த புளியமரத்திடம் எங்களால் கடைசி வரை ஜெயிக்க இயலவில்லை.
புளியமரம் காய்க்கத் தொடங்கியவுடன் நாங்கள் மரத்தை அன்னாந்து ஏக்கமாய் பார்த்த வண்ணம் சுற்றி சுற்றி வருவோம். வடை சுட்டுக் கொண்டிருக்கும் அம்மா பிள்ளைகளுக்காக சுடும் போதே ஓரிரு வடையை ஏமாந்து போகக் கூடாதென்று எடுத்துக் கொடுப்பார். அதுபோல புளியமரம் எங்கள் மீது இரக்கம் கொண்டு ஒன்றிரண்டு செங்காயை வீசும். தரையில் வீழ்ந்தவுடன் பாய்ந்து சென்று எடுத்துக் கொள்வோம்.
செங்காய்புளியானது காயாக இருக்கும் போது ஓட்டுடன் ஒட்டி உறவாடும். செங்காயாகும் போது அந்த உறவு விரிசல் விடும்.
உங்கள் காதலியின் முகத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காண வேண்டுமானால் அவளிடம் ஒரு புளியங்காயை கொடுத்து கடிக்கச் சொல்லுங்கள். அந்த புளிப்புத் தாங்காமல் அதே நேரம் அதில் கிரங்கி கண்மூடிஸ்ஸ்அப்பாமுகத்தை அஷ்ட கோணலாக்குவாள். புளியங்காயை பற்றி நினைக்கும் போதே நாவில் புளிப்பு உணரப்பட்டு நீர் சுரந்து விடும். புளியங்காய் பற்றிஉள்ளத்தால் உள்ளளும் தீதே“ , “ச்ச்..ட்அடச்சே கீ போர்டில் ரெண்டு சொட்டு எச்சில் விழுந்து விட்டதே.
செங்காய்பருவம் மனிதர்களின் குமரப்பருவம்(adolescent) மாதிரி. இந்தப் பருவத்தில் பையன்களும் பெண்களும் பாதுகாப்பாய் கரம் பற்றி இருந்த பெற்றோரிடம் இருந்து தங்கள் கரங்களை மெல்ல விடுவித்துக் கொள்வர். அது போல இது காரும் தங்களை பாதுகாத்த ஓட்டிலிருந்து மெல்ல புளி தங்களை விடுவித்துக் கொள்ளும். ஆனால் சுவையோ இனிப்பும் அல்லாது புளிப்பும் அல்லாத ஒரு கலவையான சுவை. கடிக்கும் போது மாவுமாதிரி வழுக்கிக் கொண்டு கொட்டை தனித்து பிரியும். எவ்வளவு கடும் புளிப்பு கொண்ட புளியை உடைய மரமாயினும் செங்காய் மட்டும் வெல்லக் கட்டி தான்.
புளி நன்கு பழுத்து விட்டால் ஓட்டினை முற்றிலும் விவகாரத்து செய்து உள்ளே ஒடுங்கிக் கொள்ளும். எங்கள் மரத்து புளியானது ஓடு என்னும் பெட்டியில் பத்திரமாக நரம்பினால் முடிந்து வைத்தபஞ்சாமிர்தம்என்று சொன்னால் அது மிகை அல்ல. அப்படி ஒரு இனிப்பு சுவை கொண்ட புளி . “யப்பா என்னா இனிப்புஎன்று சிறுவர்களின் கல்லடி படும் எங்கள் புளிகாய்த்த மரம்பழமொழி எவ்வளவு உண்மைகாய்த்த மரம் கல்லடி படும்
ஓடு உடைக்க வசதியாக இருக்க வேண்டும் என வாசலில் காய வைத்தால் பாதையோடு போவோர் வருவோர் எல்லாம் ஒன்றை எடுத்து விண்டு வாயில் போட்டு நாக்கு மற்றும் கன்னக் கதுப்புகள் மூன்றையும் உள்நோக்கி இழுத்து மொத்த இனிப்பையும் ஒரே உறிஞ்சில் சுவைத்து விட பேராசை கொள்வார்கள்.
புளிசாதம் செய்யும் சமையல் விற்பன்னர்கள் எல்லோரும் புளிரசம் வைத்தபின் சிறு துண்டு வெல்லக்கட்டியை போடுவார்கள் சுவை கூட்டுவதற்காக. ஆனால் எங்க மரத்துப் புளியை கரைத்து ஊற்றினால் போதும் புளி ரசத்திற்கு ஒரு தனி சுவை வந்துவிடும். பிரச்சினை என்னவென்றால் இந்த சுவை ரகசியம்எங்கள் ஊர் அறிந்தஒன்று. சற்று தாமதித்தாலும் காற்றில் இற்று விழும் புளியம் பழங்கள் எங்களுக்கு சொந்தமில்லை. இதன் பொருட்டு எங்கள் அம்மா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவார்.
புளியம் பழத்தில் இருந்து ஓடு நீக்குவது சற்று கடினமான விஷயம். காம்பினை சுற்றிலும் லேசாக தட்டி அப்படியே கூடாக பிரித்துவிடலாம் என்று எண்ணாதீர்கள். முதல் மரியாதை படத்தில் சிவாஜி மீன் சாப்பிடுவது மாதிரியெல்லாம் இதில் பண்ண இயலாது. நான் பல முறை முயன்று இருக்கிறேன். அரை ஓடு கூடாக வந்தாலே பெரும் வெற்றிதான். தரையில் ஒரே தட்டு தட்டிசினிமாவில் வில்லன் அடி வாங்கி விழும் போது நொறுங்கும் இற்றுப் போன மரச் சாமான்கள்போல நொறுக்க வேண்டும் பின்பு புளியோடு ஒட்டியிருக்கும் சில ஓட்டுத் துகல்களை தட்டிவிட்டு தனியே போட்டு விட வேண்டும்.
அதன் பின்னர் கொட்டை எடுத்தல்ரொம்ப கஷ்டம்கையில் எண்ணை தடவிக் கொண்டு ஒரு கோணி ஊசி அல்லது ஊக்கு கொண்டு கீறி பிதுக்கி எடுக்க வேண்டும், ’வயிற்றில் ஒரு கீறு கீறி பிள்ளையை வெளியே எடுக்கும் மருத்துவரின் லாவகத்துடன்’ . புளி கொட்டை எடுக்கும் போது வீடெங்கும் புளியங்கொட்டை கறுப்பு முத்துக்களாய் சிதறி கிடக்கும்.
பிறகு மரத்துக்கும் புளிக்கும் தொப்புள் கொடி பந்தமாய் இணைக்கும்  நரம்பினை நீக்குதல். காம்பினை பிடித்துக் கொண்டு புளியினை இழுத்தால் பிரிந்து விடும். அந்தக் காம்பினைத் தூக்கி எறிந்து விடுவதில்லை. அந்த நரம்பு மண்டலம் எங்கள் வீட்டுக் குழம்புக்கு ஒரு மண்டலம் புளி வழங்கும்.
அடுத்து புளியங்கொட்டை அதை என்ன செய்வது? அது அடுத்த பதிவில். இதுவே சற்று நீண்டு விட்டது. இப்போதெல்லாம் பதிவு பதினைந்து வார்த்தைகள் தாண்டி விட்டாலே இளைய தலைமுறையினர் தாண்டி போய் விடுகிறார்கள்.

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...