Friday, October 11, 2019

வெற்றிமாறனின் சிவசாமி அசுரனா அல்லது பூமணியின் சிவசாமி அசுரனா?



சிவசாமி மகன் சிதம்பரம் (வயது 15) வடக்கூரானை கொலை செய்து விடுகிறான். வடக்கூரான் ஊரார் நிலத்தை எல்லாம் வாங்கிப் போட்டு பெரு மிராசுதாராக வாழ பேராசை கொண்டவன். சிதம்பரத்தின் அண்ணன் சாவுக்கு காரணமானவன். 
சிதம்பரத்தை போலீசில் சிக்காமல் தப்புவிக்க தந்தையும் மகனும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். அவனது மாமா வெளியில் இருந்து உதவுகிறார்கள். காட்டிற்குள்ளான தலைமறைவு வாழ்க்கை நுட்பமாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிதம்பரத்தின் எண்ணவோட்டத்தில் வடக்கூரான் அவர்களது நிலத்தை வாங்க ஆசைப்பட்டது மற்றும் இந்த அக்கபோரில் அவனது அண்ணன் வடக்கூரானால் கொலைசெய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் வந்து போகின்றன. இறுதியாக கேசை ஒப்புக்கொண்டு சரணடைய செல்வதில் முடிகிறது. நாவலின் ஒரு இடத்தில் “சக்கிலியத் தெரு“ என்கிற சொல் வருகிறது. இதையன்றி வேறு எங்கேயும் இது தலித் மக்களின் வாழ்க்கை என்பதற்கான அடையாளம் இல்லை.
நாவல் ஒரு கிளாஸிக் தான் ஆனால் இந்த நாவலில் ஒரு ப்ளாக் பஸ்டர் படத்திற்கான சரக்கு எதுவும் உள்ளதா? உப்பு சப்பில்லாத ஒரு ஃபளாப் பஸ்டர் படம் வேண்டுமானால் எடுக்கலாம். ஆனால் வெற்றிமாறன் என்ன செய்தார்?
கதையின் மையச் சரடை எடுத்துக் கொண்டு அதில் அந்தக் காலகட்ட சாதிய அடக்குமுறை, பஞ்சமி நில அபகரிப்பு என்று பல விஷயங்களை நாவலுக்கு அப்பாற்பட்டு பேசியிருக்கிறார். நாவலில் உள்ள கதாபாத்திரங்களோடு நாவலில் இல்லாத தனுஷின் ஃபளாஷ்பேக் வாழ்க்கை, தனுஷின் போராளி அண்ணன் கேரக்டர், பிரகாஷ்ராஜ் கேரக்டர் மற்றும் சாதிவெறி பிடித்த வில்லன் கேரக்டர் என பலவற்றை புகுத்தி சாதிய அடக்குமுறையின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
1970 களில் எங்கள் ஊரில் கூட தலித் மக்கள் செறுப்பு அணிந்து செல்ல இயலாத சூழல் இருந்தது. இந்த சம்பவம் எங்கள் ஊரில் நடந்த ஒன்றுதான். ஒரு பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை செறுப்பணிந்து செல்லக் கூடாது என்று இடைமறிக்கிறார்கள். அவனோ திரும்பி வந்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு செல்கிறான்.
“எனது மகனை செறுப்பு போட்டுக் கொண்டு நடக்க கூடாது என்று கூறியது யார்?”
“நாங்கதான்“
“எது வரைக்கும் போடக்கூடாது?”
“நம்ம ஊர் எல்லை தாண்டும் வரைக்கும்”
“என் மகன் செறுப்பை கையில் எடுக்க மாட்டான், நீங்களோ செறுப்பு போடக்கூடாது என்கிறீர்கள் அதனால ஊர் எல்லை வரைக்கும் நீங்களே எம்புள்ள செறுப்ப கையில எடுத்துக் கிட்டு போய் குடுத்துட்டு வாங்க”
இதற்கு அப்புறம் என்ன  அடிதடி போலீஸ் கேஸ் தான். இதில் நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரி அடிதடிக்கு யாரை தூண்டி விடுவார்கள் என்றால் ஊரில் சாதி என்கிற ஒன்றைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத ஒரு அனாமத்தான ஆளைத் தான் தேர்வு செய்வார்கள்.
வியக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் மாரியம்மாளின் தலையில் செறுப்பை வைத்து அடிக்கும் காட்சியிலும் அந்த மாதிரியான ஆளைத் தான் பயன்படுத்தி இருப்பார் வெற்றிமாறன். அப்படியென்றால் திரைக்கதையை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
இப்போது சாதிய அடக்குமுறை இல்லாத சூழலில் வெற்றிமாறன் தேவையில்லாமல் இந்த மாதிரி படம் எடுக்கிறார் என்கிறார்கள். நில அபகரிப்பு, வெறும் சோற்றுக்கு உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, வீட்டினைக் கொளுத்துவது அதிகார அல்லது அரசாங்க அமைப்பின் பாரபட்சம் இந்தமாதிரி இன்னும் பல இன்னல்களை கடந்துவராத கிராமத்து தலித் எவரையாவது காட்டுங்கள் பார்ப்போம். இன்னும் பல தமிழக கிராமங்களில் இரட்டைக் குவலை முறை உள்ளது. எனது பள்ளி கல்லூரி பிராயத்தில் எங்கள் ஊரிலும் இரட்டைக் குவலை முறை அமலில் இருந்தது.
ஏன் எங்கள் ஊரில் சலூன் கடை இருந்தும் கூட நான் முடிவெட்டிக் கொள்ள தா.பழூருக்கு பேருந்து ஏறி சென்றிருக்கிறேன். அதனால் படத்தில் கூறப்பட்ட எந்த விஷயமும் உண்மைக்கு மாறானது கிடையாது.
அப்புறம் இந்த வன்முறைக் காட்சிகள்?!
பாரதிக் கண்ணம்மா படத்தில் பார்த்திபன் செத்துப் போகணும்.
காதல் படத்தில் பரத் பைத்தியக்காரனாக அலையணும்.
தலித் உரிமை பேசிய இரணியன்கள் அம்மக்களின் அறியாமையால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்.
இப்படி அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிராக விரலைக் கூட உயர்த்தாமல் கதாப்பாத்திரத்தை சாகடித்து தலித் உரிமை படம் எடுத்து சுய இன்பம் கண்ட தமிழ் சினிமாக் களத்தில் அசுரனாக மாறி அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் வெட்டிச் சாய்க்கும் தலித் பாத்திரத்தில் நாயகனைக் காணும் போது பல பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுவது தவிர்க்க இயலாது.

இந்தமாதிரி  படங்களை கையால்வது டெலிக்கேட்டான விஷயம் வசூல் ரீதியாக பெரிய இழப்பு ஏற்படும் என்கிற மாயைகளை உடைத்து “வாருங்கள் எல்லா விஷயங்களை குறித்தும் உரையாடுவோம்“ என்கிற அரைகூவலோடு முன்னத்தி ஏராக களத்தில் இறங்கிய இயக்குனரையும் இந்த தருணத்தில் நினைக்காமல் இருக்க முடியாது.


2 comments:

  1. வெற்றி மாறனை பராட்டும் அதே நேரம் சிவசாமியை கண் முன் நிறுத்திய தனுஷ் ம் பாராட்டப்பட வேண்டிய மகா நடிகர்தான்

    ReplyDelete
  2. என்னுடையது முழுமையான விமர்சனம் அல்ல. இன்னொன்று எழுத வேண்டும்.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...