Wednesday, October 23, 2019

இதயத்தை முள்கரண்டி கொண்டு கீறும் அராபிய மொழிப் படம்CAPERNAUM

நம்முடைய வாழ்க்கையும் அன்றாட உணவும் இருப்பிடமும் எந்த அளவுக்கு நிச்சயிக்கப் பட்டதாக உள்ளது, நாம் எவ்வளவு தூரம் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்று உணர நிச்சயமாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மத்திய கிழக்கு நாடுகள் மதத்தாலும் போராலும் எந்த அளவு நிலைகுலைந்து போய் உள்ளது என்பதை உண்மைக்கு மிக அருகில் நின்று பேசும் படம். இளகிய மனம் கொண்டோர் உங்கள் தூக்கத்தை தொலைக்க கூடும் எச்சரிக்கை.

படத்தின் துவக்கத்தில் Zain என்ற 12 வயதுசிறுவன் கை விலங்கிடப் பட்டு அழைத்து வரப்படுகிறான்.யாரையோ கத்தியால் குத்தியிருக்கிறான். நீதிபதி வழக்கை விசாரிக்கிறார். அவனது ஃப்ளாஷ்பேக்காக கதை விரிகிறது.

பிழைப்புக்கு வழியின்றி கால்வயிற்று கஞ்சிக்காக ஏதேதோ செய்யும் குடும்பம். குடும்பத் தலைவன் படுத்திருக்கிறான் பொழுதுக்கும் சிகரெட் பிடிக்கிறான். அவன் ஆஷ்டிரேயில் இருக்கும் சிகரெட் துண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அந்த புறாக் கூண்டு வீட்டில் குழந்தைகள் தவழ்கின்றன. கதை முடியவில்லை இன்னொரு குழந்தையும் வரப் போகிறது.
சஹார் என்கிற சகோதரி வயதுக்கு வந்தவுடன் கட்டாய மணம் செய்து அனுப்பி விடுகிறார்கள். Zain கடுமையாக எதிர்த்து இயலாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

எங்கெங்கோ அலைந்து ஒரு தீம் பார்க்கில் தஞ்சம் அடைகிறான். அங்கே ஒரு பெண் illegal immigrant கைக் குழந்தையோடு இருப்பவள் zain ஐ தனது வீட்டிற்கு (இது ஒரு குருவிக் கூண்டு) அழைத்து செல்கிறாள். அவளது மகனை zain பார்த்துக் கொள்கிறான். அவள் வேறு பெண்ணின் அடையாள அட்டையில் வேலைக்கு செல்கிறாள். அப்படி செல்லும் போது போலீசில் மாட்டி சிறை செல்கிறாள். அவளுக்காக பால் குடி மாறா குழந்தையை வைத்துக் கொண்டு காத்து இருக்கிறான். தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறான்.
 குழந்தை என்னவானது?!
Zain யாரைக் குத்தினான்?!
தண்டனை கிடைத்ததா வெளியே வந்தானா?!
குழந்தையை விட்டுச் சென்ற அம்மாவின் கதி என்ன?! குழந்தை அவள் கையில் கிடைத்ததா?!
இப்படி பல கேள்விகளை முன்னிருத்தி படம் சற்று விறுவிறுப்போடும் நமது நெஞ்சம் பதைபதைப்போடும் செல்கிறது.
Zain ஆக நடித்த குட்டிப் பயல் அருமையாக நடித்துள்ளான். குழந்தையை எந்த சூழலிலும் காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்கிறான். முகத்தில் பொறுப்பு, கோபம், இயலாமை அழுகை மற்றும் குழந்தைத் தனம் அத்தனையும் கொண்டு வருகிறான்.
ஒளிப்பதிவு போரில் சிதிலமான அழுக்கான லெபனானை கண்முன் நிறுத்துகிறது.
நெட்ஃப்ளிக்சில் உள்ளது. இணையத்தில் கிடைக்க கூடும் பாருங்கள்.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...