Wednesday, January 15, 2020

பொங்கல் விழா @ சுத்தமல்லி 1.0


பொங்கல் வாழ்த்து அட்டைகள் பார்த்திருக்கிறீர்களா. ஒரு பக்கம் நடிகர் நடிகையின் அழகான வண்ணப் படங்கள் மற்றொரு பக்கம் தபால் அட்டை போன்ற வடிவமைப்பு. அப்போது நேரில் பார்த்துக் கொள்ளும் நண்பர்களுக்கு கூட தபாலில் அந்த வாழ்த்து அட்டை அனுப்பித் தான் வாழ்த்து சொல்லுவோம். சுத்தமல்லியில் அதிகம் விற்பனையான வாழ்த்து அட்டை ராமராஜன் படம் போட்டதாகத்தான் இருக்கும். பூக்கள் படமோ இயற்கை காட்சி ஓவியமோ அனுப்புவோர்கள் சற்றே வயது முதிர்ச்சி உள்ளவர்கள் என்று அர்த்தம். ஒருவருக்கு நாம் மொய் செய்த பிறகு அவர் நமக்கு பதில் மொய் செய்யவில்லை என்றால் சில ஊர்களில் பெரிய பிரச்சினையாகிப் போகும் அல்லவா? அது போலத்தான் நாம் வாழ்த்து அட்டை அனுப்பி பதிலுக்கு நண்பன் வாழ்த்து அட்டை அனுப்பவில்லை என்றால் நட்பு மட்டும் உடைவதில்லை அடிதடியில் மண்டையும் கூட உடைந்த வரலாறுகளை எல்லாம் பார்த்து வளர்ந்த “புள்ளிங்கோ“ நாங்க.
புதிய சொந்தக் காரர்களில் சாதுவாக யாரேனும் தெரிந்தால் ,"அண்ணே உங்க அட்ரஸ் குடுங்க பொங்கல் வாழ்த்து அனுப்புறேன் நீங்களும் எனக்கு அனுப்பனும்" என்று பீதியை கிளப்புவோம். எங்கே அட்ரஸ் சரியா தெரியாம பதிலுக்கு அனுப்பாமல் போய்விடுவார்களோ என்று ஐம்பது வரிகளில் அட்ரஸ் எழுதிய காலம் அது.
இப்போ வாட்சாப்ல் மெசேஜ் பிரத்தியேகமாக டைப் பண்ணகூட மலைச்சிக்கிட்டு ஃபார்வேர்ட் பண்ணிகிட்டு இருக்கும. நாம வாழ்த்து மெஸேஜ் அனுப்பி பதிலுக்கு அனுப்பாதவங்க மேல வருகிற கோபம் மட்டுமே இன்றுவரை மாறாத விஷயம்.
சூரியப் பொங்கல் எல்லாம் சில வீடுகளில் தான் கொண்டாடப்படும். அன்றையப் பொழுதில் நாங்கள் அடுத்த நாள் மாடுகளுக்கு மாலை அலங்காரம் செய்வதற்காக ஆவாரம் பூ பறிக்க முந்திரி காட்டுக்குச் செல்வோம்.
பிறகான பகல் பொழுதில் செங்கரும்பை நமது உயரத்தில் பாதி அளவுக்கு வெட்டி பற்களால் தோலினை சீவி அதனுள்ளே உள்ள தண்டினை கடித்து உறிஞ்சினால் ஆகா தேவாமிர்தம். அந்த தருணத்தில் கரும்பை பிடித்திருக்கும் உள்ளங்கையில் ஆரம்பித்து முழங்கை வழியாக தேனமுது வழிந்து ஓடும். இப்போது வரும் கரும்புகளில் அந்த அளவுக்கு சாறு இருப்பதில்லை. உள்ளங்கை கூட ஈரமாவதில்லை.
அப்புறம் வாழைப் பழம், பெரும்பாலான வீடுகளில் வாழைத் தார் ஒன்றை செங்காயாக வாங்கி போகி அன்றே போர்வை போர்த்தி தொங்க விட்டு விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று போர்வை விலக்கும் போது அழகாக முத்து முத்தாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். படைப்பது என்னவோ ஒரு சீப்போ இரண்டு சீப்போ என்றாலும் எல்லா வீடுகளிலும் ஒரு முழுத் தார் வாங்குவார்கள்.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு 'ருசி'கரமான அனுபவம். எங்க அப்பா வாழைத்தார் வாங்கி தொங்க விட்டு கோணி சாக்குப் போர்வை கொண்டு போர்த்தி விட்டு இரவானால் சாம்பிராணி புகை போட்டு பழுக்க வைத்துக் கொண்டு இருந்தார். நான் சூரியப் பொங்கல் அன்று ஒரு முக்காலி போட்டு ஏறி அடியில் சாக்கு ஓட்டை வழியாக கையை மேலே கொண்டு போய் அழுத்தி அழுத்தி பார்த்து பழத்திருந்த சீப்பை கண்டு பிடித்து விட்டேன். அப்படியே ஒரு மூன்று பழங்களை பிய்த்து டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு சென்று மறைவிடத்தில் நின்று தின்று விட்டு தோலினை நல்லடக்கம் செய்து விட்டேன். ஆசை அடங்காத காரணத்தால் இந்த வேலை எனது கட்டுப் பாட்டில் இன்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. மாட்டுப் பொங்கல் அன்று காலை அப்பா சாக்கினை பிரித்த போது (அங்கே நானும் நின்று கொண்டிருந்தேன்) அடியில் இரண்டு பலகீனமான சீப்புகள் மட்டும் தொங்கிக் கொண்டு இருந்தன.
”என்னடா இது மொத்தமும் காணோம்?”
“அப்பா நான் பிய்க்கல” – இது நான் (பூனைக்குட்டியை கவனக்குறைவாக வெளியே விட்ட தருணம்) ஒரு அடியோ மிரட்டலோ கூட இல்லை. மௌனமாக சென்று இரண்டு சீப் வாங்கி வந்து விட்டார். ஒரு வேளை பொங்கல் முடிந்து அடிப்பாரோ என்கிற பயத்திலேயே அந்த வருடப் பொங்கல் கழிந்தது.
சற்றேரக்குறைய எண்பது பழங்களை நான் மட்டுமே சாப்பிட்டுருக்க இயலாது. நான் கையை விட்ட அதே சாக்கு ஓட்டையில் அக்காக்கள் கையை விட்டுருக்க வேண்டும் என்பதே எனக்கு இப்போது தான் விளங்குகிறது. இந்த கட்டுரையை படித்த பிறகாவது அந்த 'குற்றத்தை' தாமாக முன்வந்து ஒப்புக் கொள்வார்களா பார்ப்போம்.
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை ஏரியில் சென்று குளிப்பாட்டுவார்கள். பின்பு அதன் கொம்புகளில் எண்ணை தடவுவார்கள். அப்புறம் கலர் மாவில் தேங்காய் சிரட்டையை முக்கி அதன் மேல் வட்ட வட்டமாக வண்ணமாக இடுவார்கள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
இருள் கவிழ்ந்த உடன் திறந்த வெளியில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து படைப்பார்கள். பொங்கலோ பொங்கல் கோஷத்தில் நிறைய சுலோகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் கோரசாக கத்துவது எங்களுக்கு அவ்வளவு ஜாலியான அனுபவம்.
அடுத்தநாள் காணும் பொங்கல். நாங்கள் அதனைக் கரிநாள் என்றுதான் சொல்லுவோம். அன்று தான் அதிக பட்ச கொண்டாட்டம்.
ஜல்லிக்கட்டு- பசு, மாடு,கன்று,எருமை ஏன் ஆட்டுக் குட்டிகளைக் கூட அவிழ்த்து ஓட விடுவார்கள்.
அப்புறம் விளையாட்டு போட்டிகள். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் யுவதிகளைக் கவர ஆடவர்கள் விழுந்து புண்பட்டெல்லாம் விளையாடுவார்கள்.
நான் "ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே..." என்ற பாடல் பாடி பரிசு பெற்ற வரலாறு  கூட உண்டு. அப்புறம் ரொட்டி கடித்தலில் பரிசு வாங்கி உள்ளேன். ஓட்ட பந்தயத்தில் வெகுபேரை துரத்தியிருக்கிறேன். கரிநாள் முழுக்க குட்டி பசங்களுக்கு குஷியான நாள்தான். மாலையில் பரிசு கைக்கு வந்து சேர்வதற்குள் பாதிபேர் தூங்கி இருப்பாங்க. அன்னைக்கு மைக்க கையில் வச்சி இருக்குறவன் தான் கத்துகிட்ட மொத்த வித்தையவும் எறக்க பண்ற அளப்பறையில் ஒரு வாரத்துக்கு காது கொய்ய்...ங்கும்.
மலிவு விலை எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் யாவும் பொங்கல் விளையாட்டு போட்டியில் பரிசு கொடுக்க கண்டுபிடிக்கப்பட்டவையே.
இவ்வளவு இருந்தும் பாட்டு போட்டியில் ஜெயிச்ச எனக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்ன தெரியுமா?!!
ஒரு நைலான் கயிறு. இதனால்  லால்குடி ஆஸ்டல்ல எவ்வளவு பெரிய அவமானமா போச்சு என்பதை எனது "லால்குடி டேஸ்" ல் தனிப் பதிவாவே போட்டு குமுறி குமுறி அழுதுருக்கேன்.

சிகரெட் பிடிக்குறவன் காசு இல்லாத நாளில் அரைகுறையாக பிடித்து போட்டவற்றை தேடி எடுத்து புகைப்பது போல தூக்கி வீசப்பட்ட நுனிக் கரும்பை எல்லாம் தேடி எடுத்து கடிக்கும் நிலையும் பொங்கல் முடிந்த மறுவாரம் ஏற்படும்.
என்னதான் புத்தாடை பட்டாசு என ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் பொங்களில் இருக்கும் ஒரு மகிழ்ச்சி மனநிறைவு தீபாவளியில் இல்லை. என்ன இது நம்ம தமிழர் திருநாள்.

1 comment:

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...