Monday, January 20, 2020

என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா


என் சிவப்பு பால் பாய்ண்ட் பேனா
.மாடசாமி
பாரதி புத்தகாலயம்
இது 80 பக்கங்கள் மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். ”கடலும் கிழவனும்” கூட சின்னஞ்சிறு புத்தகம் தானே?! ஆனால் நோபல் பரிசினை பெறவில்லையா?
பாலின சமத்துவம் குறித்த பார்வையை விசாலப் படுத்த வேண்டுமானால் நாம் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூல் தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” ஆகும். அது போல ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் மாணவர்கள்-வகுப்பறை-கற்றல் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் எனில் இந்த நூலை கட்டாயமாக படிக்க வேண்டும்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் தலைமைப் பண்பு பயிற்சிக்கு சென்றிருந்த போது இறையன்பு அவர்கள் இந்த நூல் குறித்தும் ஆசிரியர் குறித்தும் சிலாகித்து கூறினார். அப்போதே இந்த நூலை எனது பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.
நூலாசிரியர் ச.மாடசாமி அவர்கள் அறிவொளி இயக்க மாநில திட்ட அலுவலராக பணியாற்றிய கல்லூரி ஆசிரியர். அன்னாரது கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். புத்தகமாக இதுதான் முதலாவது.
புத்தகத்தை கையில் எடுத்த போது எப்படியும் ஒரு 40 நிமிடத்தில் முடித்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் படிக்கும் போது எனது மனதில் தோன்றிய வாதப் பிரதி வாதங்கள் சில இடங்களில் என்னை பொருத்திப் பார்த்தது என்று மிக மெதுவாகத்தான் புரட்ட முடிந்தது. அரியலூர் டு திருச்சி பேருந்து பயண நேரமான 2.00 மணி நேரம் முழுமையையும் எடுத்துக் கொண்டது. அந்த நூல் எனது மனதில் ஏற்படுத்திய தாக்கமோ இரண்டு நாட்களாக நின்று பேசியபடி உள்ளது.
ஆசிரியர்களை “பயந்த சர்வாதிகாரி“ என்று கூறுவார்கள் என்றே தனது முதலாவது கட்டுரையான சிவப்பு பால்பாய்ண்ட் பேனாவை திறக்கிறார். பயந்த சுபாவமுள்ள சாந்த சொரூபியாக இருக்கும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சர்வாதிகாரியாக வலம் வருகிறார்கள். எவ்வளவு நிஜம்.
சிவப்பு பேனாவின் சக்தி குறித்து அருமையாக பேசும் முதல் கட்டுரை. சிவப்பு பேனாவினால் நாம் போடும் Good என்பது எவ்வளவு வலிமையானது என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன். 35 மதிப்பெண் எடுக்கும் மெல்லக் கற்கும் மாணவனுக்கும் 90 க்கு மேல் எடுக்கும் மீத்திறன் மாணவர்களுக்கும் சேர்த்தே தான் Good போடுவேன். நிறைய Encouraging குறிப்புகள் எழுதியுள்ளேன். சற்று நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக அமர்ந்தேன்.
மாணவர்கள் வகுப்பறையில் அவமதிக்கப் படுவது. தேர்வுகளும் மதிப்பெண்களும் ஏற்படுத்தி வைத்திருக்கும் பாகுபாடு. அதனால் ஏற்படும் அவமதிப்பு நெருக்கடி என்று மாணவர் பக்கம் இருந்து அவர்தம் உளவியலை ஆழமாக அலசி உள்ளார்.
சுதந்திரமற்ற இறுகிய வகுப்பறைகள் மற்றும் stereo type தகவல் விநியோகம் என்று கற்றல் அனுபவங்கள் சுரத்தில்லாமல் ருசியற்று இருப்பது குறித்து கவலை கொள்கிறார்.
“கற்பித்தலில் நாம் உருவாக்கிக் கொள்ளும் கெட்டிபட்ட நம்பிக்கைகள் நெகிழ்ச்சியற்ற, இறுக்கமான ஆசிரியராக நம்மை மாற்றிவிடும்“ –கமலா வி.முகுந்தா வின் மேற்கோள் நூலில் காணக்கிடைத்தது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
“பொய், அத்துமீறல் மற்றும் அவமதிப்பு” இவையாவுமே எந்த ஒரு ஆசிரியரையும் சீறி எழச்செய்யும் விஷயங்கள். அலுவல் ரீதியாக நாமே நிறைய பொய் சொல்லப் பழகி இருக்கும் போது மாணவர்களின் பொய்களை ரசிக்கப் பழகுங்கள். சிறிதளவு அத்துமீறலுக்கும் அவமதிப்புக்கும் இடம் கொடுத்துப்பாருங்களேன் என்கிறார். இந்த வார்த்தைகள் ஆசிரியர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். கட்டுரையை முழுமையாக வாசித்தால் சரியாக புரிந்து கொள்ளலாம்.
கற்றல் கற்பித்தல் சூழல் சுதந்திரமானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு, படிப்பு மூலமாக கிடைக்கும் வாய்ப்புகள் போன்ற பெரிய விஷயங்களை சின்னஞசிறு மூளைக்குள் ஏற்றி மகிழ்ச்சியோடு நிகழ வேண்டிய கற்றலை தூக்க இயலா பெரும் சுமையென மாற்றி வைத்து விட்டிருக்கிறோம். நமது தலைமுறை அனுபவித்த மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்களை நமது பிள்ளைகளுக்கு கசப்பானதாக மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆசிரியர்களே விரைப்பாக இருக்கும் “ஷோல்டரை இறக்குங்கள்” இயல்பாக இருங்கள். வகுப்பறை இறுக்கத்தையும் குறையுங்கள். கற்றல் அனுபவங்களை மகிழ்ச்சியானதாக ஆக்குங்கள். என்பது தான் நூலின் செய்தி.

No comments:

Post a Comment

Black(2005) இந்திப் படம்

Black - Hindi movie 2005 release Ott - Netflix நான் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய காலகட்டத்தில் கணித பாடம் மற்றும் ஆங்கில பாடம் இரண்டையும...