Wednesday, September 25, 2013

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவோமே!

நான் ஒரு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர்.படித்தது தமிழ் வழியில்தான். 5ம் வகுப்பு வரை எனக்கு தெரிந்தது என்னவோ கூட்டல் கழித்தல் பெருக்கல் மட்டுமே. ஆங்கிலத்தை பொருத்தவரை 3 எழுத்து வார்த்தைகள் வரை உச்சரிப்பு மட்டும் தான் அதுவும் 3 ம் வகுப்பில் இருந்து தான். எனது புத்தகம் வாசிக்கும் பழக்கம் மற்றும் தெரிந்துகொள்ளும் வேட்கை தான் எனது மொழி ஆளுமையை வளர்த்தது. ஆங்கில இலக்கணத்தை பொருத்தவரை எனது மாணவர்களுக்கு நடத்துவதற்காக கற்றுக்கொள்ளும் போதுதான் ஓரளவு தெளிவு அடைந்தேன். போட்டி உலகம் என்று சொல்லி சொல்லியே குழந்தைகளை பந்தய குதிரைகளை மூச்சிரைக்க ஓடவிட்டு மடத்தனமாக கைதட்டிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகள் தத்தம் பருவ சுட்டி தனம் மற்றும் குறும்புகளை செய்ய விடுவதில்லை. 24 மணிநேரமும் அவர்களை மருத்துவர்களாகவும் பொறியியல் வல்லுநர்களாகவும் உருவாக்கி கொண்டிருக்கிறோம். ஆங்கில வழிக்கல்வி தான் பெரிது என்னும் போலி தனத்திற்கு அப்பாவி பெற்றோர் மாதிரியே அரசாங்கமும் அடிமையாகிவிட்டது. நமது உள்ளார்ந்த சிந்தனை வளர்வது தாய் மொழியாம் தமிழ் வழியில் தானே. அப்படியெனில் அந்த வழி தானே புதிய புனைவுக்கு குழந்தைகளை இட்டுச் செல்லும் எளிமையான வழி! அதைவிடுத்து பிள்ளை களை நாளெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம் அல்லது ஒன்றும் புரியாமல் வெற்று வார்த்தைகளை மனப்பாடம் செய்ய வற்புறுத்திக்கொண்டிருக்கிறோம். குமரப்பருவத்தின் போது நல்ல அடிப்படை ஆங்கில அறிவோடு இருக்கும் குழந்தைகள் மிக எளிதாக ஆங்கில வழிக் கல்விக்கு மாறி விடுகின்றனர். ஆங்கில அறிவும் சரி சரளமான ஆங்கில பேச்சும் சரி அறிவுக்கான அடையாளம் அல்ல. அவர்களுக்கு பேசுவதற்கு இன்னும் ஒரு ஊடகம் உள்ளது அவ்வளவே. 10 லட்சம் பேரில் இருந்து சல்லடை போட்டு சலித்து எடுக்கப்பட்டு 18000 ஆசிரியர்களுக்கு பணி வழங்கி அரசு அரசு பள்ளியில் அமர வைத்திருக்கிறது. 18000 போக எஞ்சியுள்ளோர் தான் பெற்றோர் விரும்பும் தனியார் பள்ளியில் உள்ளனர். தகுதித்தேர்வில் வெற்றி பெற இயலாத ஆசிரியர்களை நம்பும் பெற்றோர் நல்ல திறமையோடு தகுதி தேர்வில் வென்று பணியில் இருப்போரை நம்பாதது விந்தையாக உள்ளது. இப்போது அரசு பள்ளிகளில் பணியில் உள்ள 90 சதவீத ஆசிரியர்கள் தேர்வு எழுதி வந்து நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே(அடியேன் உட்பட) மேலும் இப்போது பள்ளிகளில் காலிப்பணியிடம் கூட பெரும்பாலும் இல்லை. நாங்கள் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு நெருக்கடி எதுவும் கொடுப்பதில்லை அவரவர்தம் திறமைக்கேற்ப எளிய வீட்டு வேலைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் அறிவுரை அளிக்கிறோம். தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு வானலாவிய அதிகாரம் என்ன தண்டனை வேண்டுமானலும் வழங்குங்கள் என்ற சுதந்திரம் இவை எல்லாம் சேர்ந்து ஒன்றும் புரியாமல் மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் எடுக்கும் ஆட்டுக்குட்டிகளை உருவாக்குகின்றன. உண்மைதான் அங்கிருந்து வரும் மாணவர்களின் ஆளுமை அவ்வாறு தான் உள்ளது. எனவே அரசு பள்ளிகளில் பிள்ளை களை சேர்த்து செலவில்லாமல் பிள்ளைகளுக்கு நல்ல ஆளுமையும் அறிவையும் தாருங்கள் பெற்றோரே!

Sunday, September 22, 2013

கருங்குழி


கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளை என்பன, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது. பெரிய மகலனிக் விண்மீன் கூட்டத்துக்கு முன்னேயுள்ள கருங்குழியின் தோற்றம். ஈர்ப்பு வில்லை விளைவு காரணமாக மகலனிக் கூட்டத்தின் வடிவம் உருப்பெருத்து இரண்டாகத் தெரிகின்றது. மேலே குறுக்காக இந்த விளைவு காரணமாக பால்வெளி மண்டலம் வளைந்து தோற்றமளிக்கின்றது. இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது. ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புச் சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சேல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும். பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...