Wednesday, September 25, 2013

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவோமே!

நான் ஒரு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர்.படித்தது தமிழ் வழியில்தான். 5ம் வகுப்பு வரை எனக்கு தெரிந்தது என்னவோ கூட்டல் கழித்தல் பெருக்கல் மட்டுமே. ஆங்கிலத்தை பொருத்தவரை 3 எழுத்து வார்த்தைகள் வரை உச்சரிப்பு மட்டும் தான் அதுவும் 3 ம் வகுப்பில் இருந்து தான். எனது புத்தகம் வாசிக்கும் பழக்கம் மற்றும் தெரிந்துகொள்ளும் வேட்கை தான் எனது மொழி ஆளுமையை வளர்த்தது. ஆங்கில இலக்கணத்தை பொருத்தவரை எனது மாணவர்களுக்கு நடத்துவதற்காக கற்றுக்கொள்ளும் போதுதான் ஓரளவு தெளிவு அடைந்தேன். போட்டி உலகம் என்று சொல்லி சொல்லியே குழந்தைகளை பந்தய குதிரைகளை மூச்சிரைக்க ஓடவிட்டு மடத்தனமாக கைதட்டிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகள் தத்தம் பருவ சுட்டி தனம் மற்றும் குறும்புகளை செய்ய விடுவதில்லை. 24 மணிநேரமும் அவர்களை மருத்துவர்களாகவும் பொறியியல் வல்லுநர்களாகவும் உருவாக்கி கொண்டிருக்கிறோம். ஆங்கில வழிக்கல்வி தான் பெரிது என்னும் போலி தனத்திற்கு அப்பாவி பெற்றோர் மாதிரியே அரசாங்கமும் அடிமையாகிவிட்டது. நமது உள்ளார்ந்த சிந்தனை வளர்வது தாய் மொழியாம் தமிழ் வழியில் தானே. அப்படியெனில் அந்த வழி தானே புதிய புனைவுக்கு குழந்தைகளை இட்டுச் செல்லும் எளிமையான வழி! அதைவிடுத்து பிள்ளை களை நாளெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம் அல்லது ஒன்றும் புரியாமல் வெற்று வார்த்தைகளை மனப்பாடம் செய்ய வற்புறுத்திக்கொண்டிருக்கிறோம். குமரப்பருவத்தின் போது நல்ல அடிப்படை ஆங்கில அறிவோடு இருக்கும் குழந்தைகள் மிக எளிதாக ஆங்கில வழிக் கல்விக்கு மாறி விடுகின்றனர். ஆங்கில அறிவும் சரி சரளமான ஆங்கில பேச்சும் சரி அறிவுக்கான அடையாளம் அல்ல. அவர்களுக்கு பேசுவதற்கு இன்னும் ஒரு ஊடகம் உள்ளது அவ்வளவே. 10 லட்சம் பேரில் இருந்து சல்லடை போட்டு சலித்து எடுக்கப்பட்டு 18000 ஆசிரியர்களுக்கு பணி வழங்கி அரசு அரசு பள்ளியில் அமர வைத்திருக்கிறது. 18000 போக எஞ்சியுள்ளோர் தான் பெற்றோர் விரும்பும் தனியார் பள்ளியில் உள்ளனர். தகுதித்தேர்வில் வெற்றி பெற இயலாத ஆசிரியர்களை நம்பும் பெற்றோர் நல்ல திறமையோடு தகுதி தேர்வில் வென்று பணியில் இருப்போரை நம்பாதது விந்தையாக உள்ளது. இப்போது அரசு பள்ளிகளில் பணியில் உள்ள 90 சதவீத ஆசிரியர்கள் தேர்வு எழுதி வந்து நல்ல அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே(அடியேன் உட்பட) மேலும் இப்போது பள்ளிகளில் காலிப்பணியிடம் கூட பெரும்பாலும் இல்லை. நாங்கள் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு நெருக்கடி எதுவும் கொடுப்பதில்லை அவரவர்தம் திறமைக்கேற்ப எளிய வீட்டு வேலைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் அறிவுரை அளிக்கிறோம். தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு வானலாவிய அதிகாரம் என்ன தண்டனை வேண்டுமானலும் வழங்குங்கள் என்ற சுதந்திரம் இவை எல்லாம் சேர்ந்து ஒன்றும் புரியாமல் மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண் எடுக்கும் ஆட்டுக்குட்டிகளை உருவாக்குகின்றன. உண்மைதான் அங்கிருந்து வரும் மாணவர்களின் ஆளுமை அவ்வாறு தான் உள்ளது. எனவே அரசு பள்ளிகளில் பிள்ளை களை சேர்த்து செலவில்லாமல் பிள்ளைகளுக்கு நல்ல ஆளுமையும் அறிவையும் தாருங்கள் பெற்றோரே!

1 comment:

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...