Tuesday, April 25, 2017

தன் குருத்தணுவே(stem cell) தனக்குதவி


“அவனுக்கு ப்ளட் கேன்சர், இன்னும் 2 மாதங்களில் இறந்து போய் விடுவான்”
“அவர காப்பற்றவே முடியாதா டாக்டர்“
“இல்லம்மா முடியாது, காட் ஈஸ் க்ரேட்னு சொல்லி ஏதாவது  மெடிக்கல் மிராக்கில் நடந்தா தான் உண்டுன்னுதான் வழக்கமா சொல்வோம், இந்த கேஸ்ல கடவுளால கூட காப்பாற்ற முடியாதும்மா, ஐயாம் சாரி”
”டாக்டர்ர்ர்…..” மூர்ச்சையானாள் கதாநாயகி.
”என்னம்மா எல்லாரும் டிவியவே பாத்துக்கிட்டு இருக்கீங்க? திருடன் வந்து திருடிக்கிட்டு போனால் கூட தெரியாது போல இருக்கே” என்றபடி ஆபீஸ்ல இருந்து வந்த அறிவழகன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாக சோகமே வடிவாக காட்சி தந்தார்கள்.
“எப்படா வந்தே? டைனிங் டேபிள்ள காபி இருக்கு சூடு பண்ணி குடிச்சிக்க” என்றாள் அம்மா முந்தானையால் மூக்கை சிந்தியபடி. மறுபடியும் டிவியில் மூழ்கிப் போனாள்.
அப்பாவோ தன் கண்ணீரை யாரும் பாத்துடக் கூடாதேன்னு சுவர் பக்கமாக ஒருக்களித்து படுத்துக் கொண்டு டிவி பாத்துக் கொண்டு இருந்தார்.
தங்கையவள் கண்ணில் இரு கங்கையை கண்டான். துடைக்க கூட தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கங்கா பொருத்தமான பெயர்தான்.
தம்பி கபிலன் ஒருத்தன் தான் எந்த வித சலனமும் இன்றி படத்தை படமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
நான் காபியை சூடு பண்ணி குடித்து முடிக்கவும் படம் முடியவும் சரியாக இருந்தது.
“எம்மா, இனிமே இந்த ப்ளட் கேன்சர் பேர சொல்லி ஹீரோவையோ ஹீரோயினையோ சாகடிச்சி சென்டிமென்ட் படம் எடுக்கற வேலை எல்லாம் ஆகாது”
“ஏண்ணா?“ என்றாள் கங்கா.
“இப்போ ப்ளட்கேன்சர் கம்ப்ளீட்லி க்யுரபில் டிசிஸ்“
“எப்படிண்ணா, எப்படி க்யுர் பண்ண முடியும்?“ என்றான் கபிலன் ஆர்வமாக.
“ஸ்டெம் செல் ட்ரீட்மெண்ட் மூலமா குணப்படுத்தலாம்”
“எப்படிண்ணா? கடவுளால கூட குணப்படுத்த முடியாதுன்னு டாக்டரே சொல்றாரே“
“அதெல்லாம் அந்தப் படம் எடுக்கும் போது இருந்த நிலைமை, இப்போ மெடிக்கல் சயின்ஸ் எவ்வளவோ முன்னேறியாச்சு”
“கேன்சர் செல் இரத்தம் பூராவும் பரவி போய்ட்டா சாவு உறுதி தானே, அத எப்படி குணப் படுத்த முடியும்?”
“கீமோ தெரப்பி அல்லது ரேடியேஷன் தெரப்பி மூலமா கேன்சர் பாதித்த செல்களை கொன்று புதிய செல்கள் பாதிக்காத வண்ணம் தொடர்ந்து கண்காணிச்சு ஆரம்ப நிலை கேன்சர் குணப் படுத்துறாங்க. இதுதான் இப்போதைய வழக்கம். முற்றிய கேஸ்கள்ல ஒன்றும் செய்ய இயலாது“
“ஆனா இப்போ முற்றிய கேஸ்கள்ல கீமோ கொடுத்துக் கிட்டே, இரத்த அணுக்களின் உற்பத்தி கேந்திரமான எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள செலுத்துவாங்க. அந்த ஸ்டெம் செல் எலும்பு மஜ்ஜையா மாறி விடும். ஏற்கனவே பாதிப்படைந்த மஜ்ஜைகளைக் கூட இந்த புதிய செல்கள் தாக்கி அழித்து விடும். முற்றிலும் புதிய ஆரோக்கியமான இரத்த செல்கள் உற்பத்தியாக ஆரம்பித்து விடும். நோய் முற்றிலும் குணமாகி விடும்”

“அட ரொம்ப ஆச்சரியமா இருக்கேண்ணா!”
“டேய் கபிலன் ஸ்டெம் செல் தெரப்பி மூலமா பாட்டியோட பொக்கை வாயில கூட முற்றிலும் புதிய வலிமையான பல்ல முளைக்க வச்சிடலாம்டா. அப்புறம் பாட்டி எலும்புக் கறி தான் கேக்க போறாங்க”
“டேய் அறிவு அப்படின்னா வாடா நாளைக்கே டாக்டர் கிட்ட போவோம்“ என்றாள் பாட்டி வெற்றிலை பாக்கை சிற்றுரலில் இடித்துக் கொண்டே.
“அப்பா உங்க தலையில கூட முடி முளைக்க வச்சிடலாம்பா. அப்புறம் நீங்க ரஜினி ஸ்டைல் கூட பண்ணலாம்”
“டேய் அயோக்கிய ராஸ்கல்“ என்று கையில் இருந்த விகடனால் விசிரியடித்தார் அப்பா.
“அம்மா உங்க அண்ணனுக்கு சுகர் கம்ப்ளைன்ட் கூட சரி பண்ணிடலாம். இனி மாத்திரையோ இன்சுலினோ தேவைப் படாது”
“ஏண்டா மாமான்னு சொல்ல வேண்டியது தானே“ என்று கோபித்துக் கொண்டே எந்த டாக்டர் கிட்ட போக வேணும் என்று கேட்டுக் கொண்டாள் பாசமலர் அண்ணனுக்காக.
“உனக்கு மூட்டு வலி கூட இனிமே வரவே வராதும்மா, பழச கழட்டி போட்டுட்டு புது மூட்டு வளத்து வச்சிக்கலாம்”
“என்னண்ணா சொல்ற? எப்படிண்ணா?“ என்றாள் கங்கா
“இன்னும் சொல்றேன் கேளு, பார்வை குறைபாடு உள்ளவங்களுக்கு புதிய விழித்திரை உருவாக்கி பார்வை வரச் செய்யலாம்.“
“மூளை பாதிப்பு அல்லது நரம்பு செல் பாதிப்பு சார்ந்த குணப்படுத்த இயலா வியாதிகளை அந்த செல் டேமேஜை சரி செய்து குணப்படுத்தலாம்“
“இரத்தம் தேவைப் படும் நோயாளிகளுக்காக இரத்தத்தையே லேபில் உற்பத்தி செய்து செலுத்திக் கொள்ளலாம்“
“உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மூளைச் சாவு அடைந்தோரின் உறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம். வேண்டிய உறுப்புகளை வளர்த்து பொருத்திக் கொள்ளலாம்“.
”ஏன் குழந்தையின்மை, தழும்பின்றி தீக்காயம் ஆற்றுதல் மற்றும் எயிட்ஸ் நோயை கூட குணப்படுத்தலாம்“
“அண்ணா, ஸ்டெம் செல் ன்னா என்னன்னு சொல்லுண்ணா“ என்றான் கபிலன் ஆர்வமாக.
“ம் அப்படிக் கேளு சொல்றேன், நம்ம உடலில் அடிப்படை அலகு செல் தான்னு பயாலஜில படிச்சிருப்பீங்க இல்லையா?“
“ஆமாண்ணே, அது ரொம்ப நுண்ணியது மைக்ரோஸ் கோப்ல வச்சிதான் பாக்கணும். பயாலஜி மேடம் காமிச்சிருக்காங்க“ என்றாள் கங்கா.
“நம்ம உடம்புல உள்ள செல்கள் தன்னைத் தானே புதுப்பிச்சிக்கும். பழையன கழிதலும் புதியன வருதலும் என. ஒவ்வொரு உறுப்புக்குறிய செல்லும் புதிதாக வந்தாலும் அந்த உறுப்புக்குறிய செல்லாகத்தான் வருமே ஒழிய வேறு ஒன்றாக வருவதில்லை இல்லையா”
“ஏன்டா வெத ஒண்ணு போட்டா சொர ஒண்ணா மொலைக்கும்“ இது அம்மா. அம்மாவும் சயின்ஸ்ல ஆர்வமாயிட்டாங்க.
“ஆனா குழந்தை உருவாகும் போது கரு முட்டை ஒன்றிலிருந்தே உடலின் அனைத்து உறுப்புகளுக்குரிய செல்களும் வளருதே“
“அட ஆமாண்டா, வெதைக்குள்ள ஒரு பெரிய விருட்சமே பொதிந்து கிடக்கறது போல“ என்றார் அப்பா.

“ஆமாம்பா விஞ்ஞானிகளுக்கு இந்த விஷயம் பெரிய விந்தையா இருந்துச்சு. அதுக்காக கருவை எல்லாம் எடுத்து ஆராய்ச்சி செய்ய முடியாதே. அதனால 1981ல ஒரு எலியொட கருவில் ஆராய்ச்சி செய்து பல்வகை உறுப்புகளா மாற வல்ல ஒரு புதுவகை செல்லை கண்டு பிடிச்சாங்க. அது தான் ஸ்டெம் செல் தமிழ்ல குருத்தணு என்று சொல்றாங்க”
“மனித கருவில் இருந்து குருத்தணுவ பிரிச்சி எடுத்துட்டாங்களா அண்ணா?“ என்றான் கபிலன்
“ஆனா அது அவ்வளவு சுலபமா கை கூடல. வழக்கம் போல மத நம்பிக்கைகள் அறிவியல் முன்னேற்றத்திற்கு குறுக்கே வந்துச்சு. இப்போ குருத்தணுக்கள பிரிச்சிட்டாங்க. அதுக்கு மனிதக் கரு முட்டை தேவை இல்லை”
“அப்படியா அப்புறம் எங்கேருந்து எடுப்பாங்கண்ணே” என்றாள் கங்கா.
“ஸ்டெம் செல்கள் கரு முட்டையில் மட்டும் இன்றி பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தம் மற்றும் கருவை சுற்றி இருக்கும் பனிக்குட நீரில் கூட இருக்கும்”
“ஆமாண்ணா, “கார்ட் ப்ளட் பேங்க்“ பற்றி விளம்பரங்கள் பாத்திருக்கேன் அண்ணா. ஆனா எதுக்காக அந்த பேங்க் என்று தெரியலயே” என்றாள் கங்கா.
“ஏம்மா புதுசா எந்த விஷயம் கேட்டாலும் சரியா தெரியலேன்னா கூகுல் பண்ணி தெளிவா தெரிஞ்சிக்கணும்“
“எங்க அதெல்லாம் பண்றா. எனக்கு வேலைல கூட ஒத்தாச பண்ணாம இந்த டிவி கட்டிக் கிட்டே அழுவுறா. இதோ அவன் இருக்கானே அவன் பொழுதுக்கும் செல்ல நோண்டிக் கிட்டே இருக்கான்“ என்று ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்தார் அம்மா.
“ அம்மா இதான் சமயம் ன்னு போட்டு குடுக்காதே. அண்ணா நீ மேல சொல்லுண்ணா. ஸ்டெம் செல் பத்தி இன்னும் தெளிவா சொல்லுண்ணே”
“மற்ற செல்களில் இருந்து ஸ்டெம் செல் எப்படி வேறுபடுதுன்னா, தன்னைத் தானே மீள் உருவாக்கம் செய்து கொள்வதோடு வெவ்வேறு வகை உறுப்பு செல்களாக உருமாறிக் கொள்ள வல்லது.”
“நீண்ட நாட்கள் செயல்படா நிலையில் இருந்தாலும் தேவைப்படும் போது தன்னைத் தானே மீள் உருவாக்கம் செய்து கொள்ளும். சில குறிப்பிட்ட உடலியல் சூழல்களில் அந்த செல்களை தேவைப் படும் உறுப்புகளுக்குரிய திசுக்களாக மாறிக் கொள்ள தூண்ட இயலும்“
“செம்புலப் பெயல் நீர் போல சேரும் உறுப்புக்குரிய இயல்புக்கு மாறிக் கொள்கிறது இல்லையா”
“வாவ்! அழகா சொன்னீங்கப்பா“
“ஓ அதனால தான் இத சர்வ ரோக நிவாரணின்னு சொன்னியா“
“ஆமாம்மா, 1998 ல தான் மனிதக் கரு குருத்தணுவை தனியே பிரிக்கும் முறையை கண்டு பிடிச்சாங்க“
“தொப்புள் கொடி இரத்தம் கிடைச்சா மாமாவோட சுகர குணப்படுத்திடலாமாடா?“
“பாத்தீங்களாப்பா பாசமலர் தங்கச்சிய“ என்று வம்புக்கிழுத்தாள் கங்கா
“அதுக்கு அவரோட தொப்புள் கொடி இரத்தம் வேணுமேம்மா”
“டேய் அதுக்கு எங்கடா போறது“
“அதுக்குத்தான் இப்போ “தொப்புள் கொடி இரத்த சேமிப்பு வங்கி“(cord blood bank)னு ஆரம்பிச்சு பிறந்த குழந்தைகளோட தொப்புள் கொடி இரத்தம் சேமிக்க சொல்றாங்க. எதிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியாதிகள குணப்படுத்த வசதியாக இருக்கும் இல்லையா?“
“அப்போ தொப்புள் கொடி இரத்தம் இல்லைன்னா இந்த ஸ்டெம் செல் தெரப்பி வேலை செய்யாதா?“ என்றான் கபிலன்.
“அதுக்கும் மாற்று ஏற்பாடு கண்டு பிடிச்சிட்டாங்க 2006ம் வருடம். சில குறிப்பிட்ட செல்களை மரபியல் ஆய்வுக்கு உட்படுத்தி ஸ்டெம் செல்லாக மாற்றியமைக்கலாம் என்று கண்டு பிடிச்சிருக்காங்கப்பா அதுக்கு பேர் தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள்”
“இப்போ ஸ்டெம் செல் ட்ரீட்மெண்ட் செய்ய முடியுமா முடியாதா?“ என்றாள் கங்கா.
“இப்போதைக்கு கேன்சரை குணப்படுத்துவதற்குத் தான் இந்த வகை ட்ரீட்மெண்ட் பயன் படுத்தப்பட்டு வருகிறது. மற்றவை எல்லாம் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது.“
”2004ல லண்டன் கிங்ஸ் காலேஜ்ல ஒரு எலியின் மொத்த பல் வரிசையையும் செயற்கையா அமைச்சு வெற்றி கண்டிருக்காங்க”
“நான் முதலில் சொன்ன அனைத்துமே சாத்தியங்கள் தான். அவை எல்லாம் இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளன. அதிக செலவு பிடிக்கும் ஆராய்ச்சிகள். இதையெல்லாம் தாண்டி அகில உலக மருத்துவ மாஃபியாக்களின் லாபிய தாண்டி இவை நடைமுறைக்கு வரணும்”
“அடப் போடா” என்று எழுந்து போனார் அப்பா ஏமாற்றத்தோடு வழுக்கையை தடவிக் கொண்டே.
“ஏண்டா எனக்கு பல் முளைக்க வைக்கிறேன்னு சொன்னியேடா” இது பாட்டி
“பாட்டி பல் முளைச்சா நீ ராஜ்கிரண் மாதிரி நல்லி எலும்பு கடிக்கலாம்னு பாக்குறியா அது இப்போ நடக்காது” என்றான் கபிலன்.
“இப்போதைக்கு இயக்குனர்கள் யாரும் கேன்சர் கதைய வச்சி ஜல்லியடிக்க முடியாது அவ்வளவு தான்.





Sunday, April 23, 2017

சர்வதேச புத்தக தின வாழ்த்துக்கள்.



சர்வதேச புத்தக தினமான இன்று நான் நூலகத்தில் எடுத்த இந்த வார புத்தகங்களை பற்றி கொஞ்சம் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்(இந்த முறை மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேனாக்கும்). இதனால் உங்களில் யாருக்கேனும் வாசிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டால் நல்லது தானே?
முதலாவது
     கல்கி அவர்கள் எழுதிய ”பொய்மான் கரடு” என்கிற சிறு நாவல். வழக்கமாவே ஒரு பாகத்திற்கு 500 பக்கங்கள் என்று 3 லிருந்து 5 பாகங்கள் வரை எழுதுபவருக்கு 150 பக்க நாவல் நிச்சயமாக சிறு நாவல் தானே?
     மலைகளை கரடென்றும் கயிற்றினை சரடென்றும் கூறுபவர்கள் நாமக்கல் ஏரியா காரர்கள். எனவே தலைப்பை பார்த்தவுடன் கதைக்களம் நாமக்கல் பகுதி என்பதை ஊகித்து விட்டேன். ஒரு எளிய கருமித்தனம் மிக்க விவசாயி அவனது காதலி. அவர்களுக்கு ஏற்படும் சிக்கல் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்து எப்படி ஒன்றிணைகிறார்கள் என்று அவருக்கே உரிய பாணியில் மர்மங்கள் பொதித்து எழுதியிருந்தார். இருந்தாலும் எனக்கு திருப்தியில்லை. பனானா லீஃப் உணவகத்தில் வெஜிடபில் சூப் சாப்பிட்ட மாதிரி கல்கி அவர்களால் எழுதப்பட்ட மிக மிக எளிய கதை.
இரண்டாவது.
     ஒரு காலத்தில் துப்பறியும் நாவல்கள் மீது அதீத ஈடுபாடு. அனேகமாக இளமைப் பருவத்தில் எல்லோரும் தங்களது வாசிப்பை இங்கிருந்து தான் தொடங்கி இருப்பார்களோ என்று அவதானிக்கிறேன். எனவே ஒரு துப்பறியும் நாவல்தான் படிப்போமே என்று ராஜேந்திரக்குமார் அவர்கள் எழுதிய தீ தீ..சினேகிதி என்கிற இராணுவ பிண்ணனியில் எழுதப்பட்ட நாவல் எடுத்து வந்தேன். சுத்த மோசம். எதிர் நாட்டு தீவிரவாத முகாமில் வேலை செய்கிறாள் நாயகி. தலைமைப் பதவி வரை முன்னேறிச் சென்று அங்கிருக்கும் தீவிர வாத தலைவனை போட்டுத் தள்ளுகிறாள் இந்திய ராணுவ உதவியுடன். தீவிர வாத குழுவில் வலுக்கட்டாயமாக சேர்க்கப் பட்டு பின்னர் இந்தியாவுக்கு தப்பி வந்தவர்களை திரும்பவும் எதிரி நாட்டுக்கே கடத்திச் சென்று பெரிய சாகசம் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறாள். (நீயா எப்படி தப்பிக்கலாம் நான் தான் தப்பிக்க வைப்பேன்). ஒரு வேலை எனது இளம் பிராயத்தில் படித்திருந்தால் கொண்டாடி இருப்பேனோ என்னவோ!
மூன்றாவது.
     எப்போது புத்தகங்கள் எடுத்தாலும் மூன்றில் ஒன்று மொழிபெயர்ப்பு நூலாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். Stefan Zweig என்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய Letter from an Unknown women என்கிற நூல். ராஜ்ஜா என்பவர் “யாரோ ஒருத்தியின் கடிதம்“ என மொழி பெயர்த்திருந்தார்.
மொத்த நாவலும் ஒரு கடிதம் தான். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவரை அருகில் இருந்து பார்த்து வியந்து வளர்ந்த ஒரு பதின் பருவ பெண் அவரை தன் காதலனாக வரித்துக் கொள்கிறாள். சதா அவன் நினைவாகவே வாழ்கிறாள். எழுத்தாளரோ தினம் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்பவர். ஒருமுறை இந்தப் பெண்ணுடன் மூன்று தினங்களை கழிக்கிறார். அந்த பெண் அதனை தான் பெற்ற பாக்கியமாக கருதுகிறாள். காற்றில் அலையும் இறகு போல காலத்தினால் அவள் எங்கெங்கோ அடித்துச் செல்லப் படுகிறாள். அவள் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெறுகிறாள். மகன் இறந்து போகிறான். அவளும் கூட மகனுக்கு தாக்கிய அதே நோய் தாக்கி மரணப் படுக்கையில் இருக்கிறாள். அந்த எழுத்தாளனையே உலகம் என்று எண்ணி அவனுடன் கலந்து ஒரு மகனை பெற்று அந்த மகனும் அவளும் மறைந்த வரலாறு அவனுக்கு தெரியாமல் போய்விடக் கூடாதே என்று அவள் அவனுக்கு எழுதுகிறாள். கடிதத்தில் எந்த இடத்திலும் குற்றம் சொல்லும் தொணி இல்லை. முழு நாவலையும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் (அந்த சிறுவன் கதை முழுவதுமே ஒரு பிணமாகத்தான் அறியப்படுகிறான்) வாயிலாக ஒரு கடிதத்திலேயே முடித்திருப்பார்.
கதையை எங்கோ கேட்டமாதிரி உள்ளதா?
தங்கர் பச்சான் எழுதிய ”தென்றல்” படத்தின் கதையின் ஒரு பாதி இங்கே தான் துவங்குகிறது. மீதி பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து “மானே தேனே பொன் மானே“ எல்லாம் போட்டு முடித்திருப்பார். அந்தப் படத்தில் எனக்கு பிடித்தமான பாடல் ஒன்று உள்ளது. “அடித்தோழி அடித்தோழி அடைகாக்கும் சிறு கோழி…”
புத்தகம் வாசிப்பது சேதாரமில்லாத பொழுதுபோக்கு.
நீங்களும் வாசியுஙகள் அவற்றில் பிடித்தவற்றை சமூக வலைதளங்களில் பகிருங்கள் மற்றவர்களும் வாசிப்பார்கள்.


Wednesday, April 12, 2017

இட ஒதுக்கீடு தவிர்த்த அம்பேத்கரின் மற்ற சாதனைகள் தீண்டத் தகாதவையோ?.

அம்பேத்கர் வானுயர்ந்து நிற்கிறார்.
இரண்டு பையன்களுக்கிடையே நடந்த உரையாடல்.
முதலாமவன்டேய் அது என்ன புத்தகம்டா?”
அம்பேத்கர் வரலாறுடாஎன்கிறான் மற்றவன்.
அதற்குஜாதி வெறி பிடித்த ஒருவரின் புத்தகத்தை ஏன் படிக்கிறாய்என்கிற பொருள்பட அநாகரிகமான வார்த்தையை பிரயோகிக்கிறான்.
இருவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நமது பாடத்திட்டத்திலும் சரி செயலாக்கத்திலும் சரி அம்பேத்கரின் சாதனைகள் எவ்வளவு மோசமாக இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்க இயலுமா என்ன.
தலித் மக்களின் மேன்மைக்கு மட்டுமே அன்றி வேறு எதற்கும் அவர் தன் பங்களிப்பை செய்யவில்லை என்பது போல தலித் மற்றும் தலித் அல்லாதோர் மத்தியில் அம்பேத்கர் பற்றி ஒரு பிம்பம் வலிந்து திணிக்கப் பட்டு வந்துள்ளது.
எங்கள் அறிவியல் ஆசிரியை அவர். இனப்பெருக்க மண்டலம் பற்றிய பாடம் வரும்போது மிகவும் அருவருப்போடு இதெல்லாம் நீங்களே படித்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கடந்து போய்விடுவார். நானறிந்தவரை பள்ளி அளவில் அம்பேத்கர் பற்றிய தகவல் தலித் அல்லாத பல ஆசிரிய பெருமக்களால் இப்படித்தான் அலட்சியப் படுத்தப் படுகிறது.
பள்ளிக் காலத்தில் கேள்விப் பட்ட மற்றும் ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
அப்போதெல்லாம் படிப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு நினைவு பரிசாக கடிகாரமோ அல்லது தலைவர்கள் படமோ வழங்குவது வழக்கம். வகுப்பறையில் மாட்டிவைக்க அம்பேத்கர் படத்தை பரிசளிக்க விரும்பினான் ஒரு மாணவன். கேட்ட மாத்திரத்தில் என்னவோ விஷ ஜந்துவை பார்த்தது போல பதறி விட்டார் அந்த தலித் ஆசிரியர். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அது தன்னை சாதி வெறி பிடித்தவன் என்று மற்றவர் நினைக்க ஏதுவாகும் என்கிற பயத்தில்தான் விருப்பமில்லாமல் அவர் மறுத்தார்.
இன்னுமொரு நிதர்சனமான உண்மை. “அம்பேத்கர்படம் பார்த்தோர் எத்தனை பேர் இருக்கிறோம் நம்மில். மம்மூட்டி அவர்கள் அந்த மாபெரும் தலைவர் வேடத்தில் அழகாக நடித்திருப்பார். சுதந்திர மற்றும் குடியரசு தினவிழாக்களில் சிடி தேய தேய காந்தி படம் போடப் படுகிறதே ஒழிய அம்பேத்கர் படத்தை ஒளிபரப்ப சேனல்களும் தயங்குவது ஏன். பள்ளிகளில் கூட சிறப்புக் காட்சியாக பல்வேறு விழிப்புணர்வு படங்கள் காட்டப் படுகின்றன ஆனால் அம்பேத்கர் படம் காட்டுவதில் என்ன தயக்கம்?
சரி அம்பேத்கர் புகைப்படத்தையாவது வீடுகளில் மாட்டலாம் என்றால் மாட்டினால் ஜாதி தெரிந்து போகும் பிறகு நூதனமாக பல்வேறு வகைகளில் மட்டந் தட்டப் படுவோம் என்கிற மாதிரியான பயம் நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தலித் மக்களிடம் உள்ளது என்பதை மறுக்க இயலுமா?
பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சாதித் தலைவர்கள் சிலைகள் எல்லாம் சாலை சந்திப்புகளில்  கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த நாட்டில் தான் சில இடங்களில் அம்பேத்கர் சிலையினை கூண்டுக்குள் கைதிபோல வைத்துள்ளோம்.
பெரும்பான்மை மக்களுக்கு அம்பேத்கர் என்பவர் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியவர் என்றும் அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் என்றும் தான் தெரிகிறது.
தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்கள்தான் பெண்ணுரிமைக் குரலின் முன்னோடி. சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மதம் சார்ந்த பழமையான மூட நம்பிக்கைகள் தான் பெண்ணடிமைத் தனத்திற்கு காரணம் என்று ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றியும் எழுதியும் வந்தார். இதே குரலை இந்திய அளவில் சட்டமியற்றும் மன்றங்களில் ஒலித்து பல சட்டங்கள் இயற்றப் படுவதற்கு காரணமாக இருந்தார் என்கிற செய்தி உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
பெண் ஊழியர்கள் அனுபவிக்கும் மகப்பேறு விடுப்புக்கு வித்திட்டார்மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண் 
அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு 9 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .
இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .
அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து பதவி விலகி விடவேண்டும் .
அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர் 
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம் .மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .
மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது.
பாலின பாகுபாடில்லாமல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற சட்டம் இயற்றவும் காரணமாக இருந்தார்.
இன்னும் ஒரு விஷயம் தெரியுமா? .  டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பு படிதான் இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி 01 ஏப்ரல் 1935 அன்று நிறுவப்பட்டது.
கல்வியில்லா பெண்கள் களர்நிலம்
அங்கே புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்று பெரியாரின் பெருந்தொண்டர் பாரதிதாசன் பாடுவதற்கெல்லாம் முன்னோடி அம்பேத்கர் அவர்கள்.
ஆணாதிக்க செறுக்கோடும் மதத்தின் பெயராலும் பல்வேறு கொடுமைகளை பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடும் சமூக அமைப்பில் பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் சொத்து உரிமைகள்தான் அவர்களை மீட்டு கரைசேர்க்கும் தோணி என்று அம்பேத்கர் அவர்கள் கருதியதால் தான் பெண்களுக்கு கல்வி உரிமையும் சொத்துரிமையும்  வழங்க வேண்டும் என்று தொடர்ந்து முழங்கினார்.
ஒரே வேலையை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஊதிய ஏற்றத் தாழ்வு நிலவியது கண்டு ’சம வேலைக்கு சம ஊதியம்’ என்கிற சட்டம் இயற்ற பாடுபட்டார்.
ஒரு சமூகம் என்பது எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நான் அச்சமூகத்தில் பெண்கள் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை வைத்து தான் தீர்மானிப்பேன் என்றார்.

தான் ஆற்றிய பணிக்கு உரிய அங்கீகாரத்தை அம்பேத்கருக்கு இந்த சமூகம் வழங்கியிருக்கிறதா?

ஜனநாயகத்தை கட்டிக் காத்தக் கதை

ஆசிரியப் பணி அறப்பணி!! இந்த ஆசிரியப் பணி அறப்பணி என்று சொன்னாலும் சொன்னார்கள் சாதிச் சான்று, வங்கி எழுத்தர், மருத்துவ உதவியாளர், சட்டை மற...