Saturday, March 24, 2018

ரிசர்வ்டு VS டிசர்வ்டு (RESERVED VS DESERVED)



ஒபாமா ஆட்சி காலத்தில் வழக்கம் போல அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்த மோடி ஒபாமாவிடம் உரையாடியதாக ஒரு உரையாடல் முகநூல் மற்றும் வாட்சாப் ல் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
மோடி,“எங்க இந்தியர்கள் தான் இங்கே வேலை பார்க்கிறார்கள். எங்க நாட்டிலும் வேலை பார்க்கிறார்கள். ஆனால் உங்க நாடு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது எங்க நாடு வளரவே இல்லையே” (”நீர் ஒரு மங்குணி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை நிருபித்துக் கொண்டு இருக்கிறீர்என்றெல்லாம் ஒரு பிரதமரை வையப்டாது ஆமாம் சொல்லிட்டேன்)
ஒபாமா, “நீங்கள் ரிசர்வ்டு க்கு வேலை கொடுக்கிறீர்கள், நாங்களோ டிசர்வ்டுக்கு வேலை கொடுக்கிறோம் வெரி சிம்பிள்என்று பதிலளிக்கிறார்.
ஆமாம் இந்த ரிசர்வ்டு என்றால் என்ன? டிசர்வ்டு என்றால் என்ன என்பதற்கு கோனார் நோட்சை புரட்டியபோது வந்ததை சொல்கிறேன்.
ரிசர்வ்டு என்பது ரிசர்வேஷனைத்தான் குறிக்கிறது. ரிசர்வ்டு என்பவர்கள், தகுதியற்ற, திறமையற்ற, அறிவில்லாத ஏன் இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத எஸ்ஸி என்கிற ஒற்றை சாதிச்சான்றைக் கொண்டு தங்குதடையின்றி அனைத்து வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கும் ஒரு மூடர் கூட்டம். இதில் கடுகளவேணும் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால் ஒரு வேலையில் இருக்கும் எஸ்ஸியை காண்பித்து வேலையில் இல்லாத படித்த மேல்வர்க்க நபரிடம்இவருக்கு எப்படி வேலை கிடைத்தது?“ என்று கேட்டுப் பாருங்கள். அவர் என்னை விட இன்னும் விளக்கிக் கூறுவார்.
அப்படின்னா டிசர்வ்டு என்போர் யாரு? கண்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தது போல பிறக்கும் போதே ஒரு கையில் ரூல்டு நோட்டும் மற்றொரு கையில் அப்சரா பென்சிலும் வைத்துக் கொண்டு பிறந்து நர்சை வியப்பில் ஆழ்த்திய மேல்வர்க்க மக்கள் (அட அட பிறந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!) டிசர்வ்டு கேட்டகரி ஆட்கள் படிக்கிறார்கள் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கே போனாலும் அவர்களின் ஜாதியை கேட்டு குப்புற புடித்து தள்ளி விடுகிறார்கள். இப்படி விரட்டி விரட்டி அடித்த காரணத்தினால் விரக்தி அடைந்து தனது திறமைகள் அனைத்தையும் ஒரு டிராலி சூட்கேசில் வைத்து பூட்டி எடுத்துக் கொண்டு மேல்நாடுகளில் சென்று கடைவிரிக்கிறார்கள். அந்த நாடு காம்ப்ளான் குடித்த சிறுவன் கணக்காக மூன்று மடங்கு வேகமாக வளர்ச்சி அடைந்து விட்டது என்று சைன்டிஃபிக்காக நிரூபிக்கப் பட்டுள்ளது.
(இந்த அவல நகைச்சுவை ரிசர்வ்டு கேட்டகரியை சேர்ந்தவர்களின் ஃபேமிலி குருப்பில் சிலாகித்து விவாதிக்கப்பட்டது. என்னன்னு? ஒபாமாவின் கருத்து மிகச்சரி என்பதாகத்தான்)
அப்படின்னா பொதுப்பிரிவுக்கான 50 விழுக்காடு இடங்களை எப்படி நிரப்புகிறார்கள் என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி கேட்க கூடாது. வேலையின்றி இந்த மாதிரியெல்லாம் புலம்புவோர் அந்த 50 விழுக்காடு இடத்திற்கு போட்டியிட்டு தோற்று துவண்டு போன திறமையற்றவர்கள் என்று யாராவது சொன்னீங்கன்னா மூஞ்சிமேல பூரான் உட்ருவேன். ஏன்னா கடவுள் இருக்குன்னு சொன்னா கேள்வி கேட்காம நம்புற மாதிரி எஃப்சி(முன்னேறிய பிரிவினர்) என்றாலே அறிவாளி தான் என்பதை நம்பவேணும். அதே மாதிரி 50 இடத்திற்கு போட்டிபோட்டு கிடைக்காத விரக்தியில் எங்க இடங்களை பிடித்துக் கொண்டது அந்த திறமையற்ற 20 பேர் தான் என்றுஎன்று கூறினாலும் நம்ப வேண்டும். இல்லையின்னா தெய்வகுத்தமாயிடும் சொல்லிட்டேன்.
ரிசர்வேஷன், ரெக்கமண்டேஷன், கரப்ஷன் இந்த மூன்றினால் தான் இந்தியா வல்லரசாகலஎன்று கமல் பொண்ணு கேட்டப்ப அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி. அப்பு முருகதாசு, என்னா ஒரு அறிவுப்பா உனக்கு என்று வியந்து போனேன்.
ஏன்னா ரிசர்வேஷன்ல வந்த இஞ்சினியர்கள் கட்டிய பாலங்கள் உடைந்து போகின்றன. டாக்டருங்க ஆப்பரேஷன் பண்ணியதால் தான் நோயாளிங்க பரலோகம் அடைகிறார்கள். ஆமாம். இதுவும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்திதான்.
இஞ்சினியரிங் காலேஜில் எல்லோருக்கும் பரிட்சையில் பாஸ் மார்க்  ஒன்னுன்னா ரிசர்வ்டு கேட்டகரியில் வருவோருக்கு தனியா ஒரு 10 மார்க் வாங்கினாவே பாஸ் என்று தூக்கிப் போட்டு விடுகிறார்கள். மெடிக்கல் காலேஜிலும் அப்படித்தான் ரிசர்வ்டு ஆட்கள் உள்ளே வந்த உடனேயே டிகிரிய பிரிண்ட் பண்ணி ஒரு பேருக்கு ஐந்து ஆண்டுகள் உட்கார வைத்து கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். வேண்டுமானால் சம்பந்த பட்ட ரிசர்வ்டு இஞ்சினியரையோ அல்லது மருத்துவரையோ கேட்டு பாருங்கள்.(வெறித்தனமா அடிச்சி மூஞ்சிய பேத்தாங்கன்னா நான் பொறுப்பில்ல மக்கா)

இந்த படத்தில் பாத்திங்கன்னா 80 விழுக்காடு தண்ணி அப்படியே 2 சொட்டாக நம்ம பொதுப்பிரிவு ஜீனியஸ் வாயில் இறங்குது. பயபுள்ள தாகத்தில மெலிஞ்சி போயிடுச்சி. ஆனா நம்ம ரிசர்வுடு கேட்டகரி ஆளு 20 விழுக்காடு தண்ணி பம்பு செட்லே இருந்து பீறிட்டு வருது அத அப்படியே அலேக்கா குடிச்சிட்டு மல்லாக்க படுத்துருக்கார். இந்த கார்ட்டுனிஸ்ட்டுக்கு நோபல் பரிசோ அல்லது ஆஸ்கார் விருதோ வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். “இந்த மாதிரியான கேடு கெட்ட அமைப்பை மாற்ற ஷேர் செய்யுங்கள்” என்று வேறு கூறுகிறார்கள் மடையர்கள். 20க்கும் 80க்குமே வித்தியாசம் தெரியாத இவர்கள் தான் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும். இல்லையின்னா சாமி கண்ண குத்திடும்.

அப்படியே அடுத்ததாக இந்த படம் தான், வாய்ப்புகளை ஒரு தொட்டியில் தளும்ப தளும்ப நிரப்பி நேரா எஸ்எஸி ஆளுங்களுக்கு வழங்குறாங்க, அவர்கள் பார்த்து எஸ்டி ஆளுங்களுக்கு வழங்குறாங்க அவர்கள் அதிலிருந்து சொற்பமான அளவு ஓபிசி ஆளுங்களுக்கு வழங்குறாங்க. அப்புறமா கட்ட கடைசில இங்க் ஃபில்லரால ரெண்டு சொட்டு பொதுப்பிரிவினருக்கு வழங்குறாங்க. சொன்னா நம்பணும் அந்த தொட்டியில் தளும்ப தளும்ப கிடந்த வாய்ப்புகளில் சரி பாதி அதாவது 50 விழுக்காடுதான் அந்த இரண்டு சொட்டு. எவ்வளவு சூழ்ச்சியான படம் பார்த்தீர்களா? இதைப்பார்த்த ரெண்டு இடஒதுக்கீட்டுப் பிரிவு இஞ்சினியரிங் மாணவர்கள் அதை முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். கீழே வேறு ”இந்தியனா இருந்தா இத ….” அதே தான்.
பொதுப்பிரிவில் 50 விழுக்காடு இருந்தாலுமே அவர்களுக்கு ஏன் அந்த ஒதுக்கீட்டுப் பிரிவின் மேல் அத்துணை கோபம் என்று தெரியவில்லை. இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு பெற்ற ஒரு எம்பிசியோ அல்லது பிசியோ எஸ்ஸி ஆட்கள் இருக்கும் இடத்தில் அவர்களை சிறுமை படுத்துவதாக எண்ணி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும். அதனாலதான் திறமை இல்லாதவன் எல்லாம் வேலைக்கு வந்துடுறான் என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதன் காரணம் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பார்ப்பனீயம் மேல் மாடியில் நிலையாக வீற்றிருக்க வேண்டுமெனில் ஏனைய கீழ் அடுக்கினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இருத்தல் ஆகாது. எனவே சூழ்ச்சி செய்து அவர்களிடையே தொடர்ச்சியாக ஒரு பகை நெருப்பை புகைய விட்ட வண்ணம் இருப்பார்கள். அது இப்போதும் தொடரத்தான் செய்கிறது.
இடஒதுக்கீடு என்பது அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அனைத்து இனத்தினரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் அவசியம். ஒருவேளை இந்தமாதிரி ஒரு ஏற்பாடு இல்லாமல் இருந்தால் 3 விழுக்காடு பார்ப்பனர்களும் இன்ன பிற மேலடுக்கு வர்ணத்தாரும் எல்லா அமைப்புகளிலும் அதிகாரத்தில் இருந்து கொண்டு இருப்பார்கள். ஏனைய வர்ணத்தார் அவர்களுக்கு என்று உள்ள வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருக்க வேண்டும். இருப்பதிலேயே கீழ் வர்ணத்தார் கொத்தடிமைகளாக காலம் முழுக்க இன்னல் பட வேண்டும்.
சம்புகன் என்ற இழிசாதிக் காரன் வேதம் பயின்று தவம் செய்த மாபாதக செயல் புரிந்தான். இந்த பாப செயலில் இருந்து லோகத்தை பாதுகாக்க கடவுளான ராமன் அவன் தலையை கொய்து மனுநீதியை நிலைநாட்டியதாக வால்மீகி இராமாயணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
இப்போது இருக்கிற உயர்சாதி ராம பக்தர்களும் கூட மனுநீதியை நிலைநாட்ட தலைபடுகிறார்கள். ஆனால் பாவம் சம்புகனின் எண்ணிக்கை கோடிகளை தாண்டிவிட்டதால் செய்வதறியாது திகைத்து இந்த மாதிரி கார்ட்டுன்களை பரப்பி தங்கள் அரிப்பை  போக்கிக் கொள்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களின் போது எந்த ஒரு தலித்தும் தாங்கள் சிறுமை அடைவதாக தாழ்வு மனப்பான்மை கொள்ளல் ஆகாது. மாறாக உரிமையை வென்றெடுத்த பெருமிதமும் வெற்றி புன்முறுவலும் முகத்தில் தவழ கம்பீரமாக எதிர் வாதம் செய்பவர்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் “இட ஒதுக்கீடு சலுகை அல்ல அது நம் உரிமை” என்று உரக்க முழங்குவோம்.

Tuesday, March 20, 2018

வானம் வசப்படும்-3 லஞ்ச லாவண்யங்கள்



நாவலில் கனகராய முதலி என்கிற ஒரு கிருஸ்துவர் துய்ப்ளெக்ஸ்க்கு துபாஷாக இருக்கிறார். கிருஸ்துவர் என்பதால் மாதாம் துய்ப்ளெக்ஸ் (திருமதி துய்ப்ளெக்ஸ்) அவர் மீது பாசம் கொண்டவர். ஆனந்தரங்கம் பிள்ளை கனகராய முதலிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர். கவர்னருக்கு ஆனந்தரங்கம்பிள்ளையின் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகம்.
கனகராய முதலி சர்க்கரை வியாதியஸ்தர். ஒரு மனைவி மட்டுமே. குழந்தைகள் கிடையாது. ஒரு பையன் சிறுவயதில் மாண்டு போய்விட்டான். அவனது விதவை மனைவி உண்டு. தம்பி தானப்ப முதலி இருக்கிறான். அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கிறார். திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போகிறார்.
அவருடைய சொத்து மதிப்போ லட்சம் வராகனுக்கு மேல் தேறும். எனவே உடனடியாக தானப்ப முதலி மாதாம் துய்ப்ளெக்ஸை சந்தித்து பேசுகிறான். அண்ணனின் சொத்து எனக்கே வர வேண்டும். மனைவி மருமகள் இருவரும் விதவையர்கள் அவர்களது உணவு தேவைக்கு என்ன வேண்டுமோ நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். (பெண்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதுவும் விதவையர் என்றால் இன்னும் மோசம்.) கனராய முதலியின் மனைவி ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறாள். தானப்ப முதலியும் சந்திக்கிறான்.
வருகிற சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கவர்னருக்கு தந்து விடுவது என்ற ஏற்பாட்டில் பஞ்சாயத்து நடக்கிறது. சொத்து மதிப்பை குறைத்துக் காட்டி அரசருக்கு கிடைக்கும் கமிஷனை குறைக்க ஆனந்த ரங்கம் பிள்ளையை சந்திக்கிறான் தானப்ப முதலி.
இறுதியாக சொத்து தானப்ப முதலிக்கு என்று பஞ்சாயத்து தீர்ப்பு கூறுகிறது. கவர்னர் கமிஷன் அல்லாது மாதாம் துய்ப்ளெக்ஸ்க்கு தனியே பணம் தரப்படுகிறது. மேலும் அண்ணன் பார்த்த துபாஷ் பதவி தனக்கே வேண்டும் என்று மாதாமை வைத்து லாபி செய்ய முயற்சிக்கிறான் தானப்ப முதலி அதற்கு தனியாக லஞ்சம் தர முன்வருகிறான்.
மேலும் ஒரு ஐயர் ஒருவரும் துபாஷ் பதவி தனக்கு வேண்டும் என்கிறார். அவரும் லஞ்சம் தர முன்வருகிறார். தானப்ப முதலி கிருஸ்துவர் ஆகையால் மாதாமுக்கு அவர் பக்கம் பாசம் கொஞ்சம் அதிகமாக பொங்குகிறது. இதனை ஐயரிடம் வாய்விட்டே கூறிவிடுகிறார். இதை கேட்ட மாத்திரத்தில் துபாஷ் பதவிக்காக பூணூலை அறுத்தெறிந்து விட்டு கிருஸ்துவராக மதம் மாறி ஞானஸ்தானம் பெறுகிறார்.
அடடே இந்த பதவி சரியான பணம் காய்ச்சி மரம் போல தெறிகிறதேகவர்னரும் மாதாமும் யாருக்கும் உத்திரவாதம் வழங்க வில்லை. ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சூசகமாக இவர் இவர் இவ்வளவு பணம் தர முன்வருகிறார்கள். ’நீ துபாஷாக வரவேண்டுமானால் அதற்கு ஒரு விலை தந்தாக வேண்டும்என்று மறைமுகமாக உணர்த்துகிறார் கவர்னர். ஆனால் பிள்ளையோ இதன் பொருட்டு லஞ்சம் தர தயாராக இல்லை. பதவி இல்லாவிட்டாலும் ஒரு துபாஷ் என்ன செய்து அரசுக்கு உறுதுணையாக இருக்கிறாரோ அதையெல்லாம் செவ்வனே செய்துவருகிறார் பிள்ளை. எப்படியும் பதவி தனக்கே வரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு.
கவர்னரின் படைப்பிரிவுக்கு ஆள் எடுக்கிறார்கள். அதற்கும் தகுதி இருப்பவர்களை காட்டிலும் லஞ்சமாக பணம் தருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளதாக நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இஸ்லாமிய குறுநில மன்னர் ஒருவர் ஆங்கிலேயரிடம் சிறைபடுகிறார். அவர்களுடைய மனைவி மக்கள் புதுச்சேரியில் தஞ்சம் அடைகிறார்கள். அவர்கள் தங்கள் கணவரை சிறையில் இருந்து மீட்டுத்தர கோருகிறார்கள். 15 லட்சம் வராகன்கள் பணம் கட்டினால் விடுதலை கிட்டும் என்று கூறி பணம் பெற்றுக் கொண்டு 7 லட்சம் வராகன்கள் கட்டி அவரை சிறை மீட்டுத் தந்து விட்டு மீதியைலவட்டிக்கொள்கிறார்கள் கவர்னரும் மாதாமும்.
கிடைக்கும் வரைக்கும் லாபம் என்கிற ரீதியில் தான் கவர்னர் பதவியை துய்ப்ளெக்ஸ் பயன்படுத்தி தனக்கு சொத்துக்களை சேர்த்துக் கொண்டுள்ளார். என்பது நாவலின் வழி தெரிகிறது.

ரோமியோ - விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு FDFS (முதல்நாள் முதல்காட்சி) யில் இன்று ஒரு படம் பார்த்தேன். ஏற்கனவே காக்க காக்க பார்த்தேன். நான் FDFS பார்த்த காரணத...