Friday, March 16, 2018

மண்டல் கமிஷன் அறிக்கையை படித்து மெண்டலான ஒரு எழுத்தாளரின் நாவல்


மண்டல் கமிஷன் அறிக்கையை படித்து மெண்டலான ஒரு எழுத்தாளரின் நாவல்.

நாவல்: புவியிலோரிடம்
ஆசிரியர்: பா.ராகவன். நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற உலக அரசியல் பற்றியெல்லாம் புத்தகங்கள் எழுதிய அதே ராகவன் தான்.
இடஒதுக்கீடு பற்றியோ சமூக நீதி குறித்தோ தெளிவான பார்வையோ புரிதலோ இல்லாமல் (இருந்தலும் அதை வெளிக்காட்டிக் கொள்வது தனது இனத்தின் மேலாதிக்கத்தை பாதிக்கும் என்று கள்ள மௌனம் காப்போர்) இந்தியா முன்னேறாமல் போனதற்கு காரணம் ரிசர்வேஷன் சிஸ்டம் தான் என்ற பிதற்றும் போலி அறிவு ஜீவி கூட்டத்தின் மூத்த உறுப்பினர் என்ற தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் திருவாளர் பா.ராகவன்.
கதை இதுதான். ஒன்பது பிள்ளைகள் கொண்ட மெகா ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த வாசுதேவன் தான் கதைநாயகன். அது மிகவும் வறுமையில் வாடும் ஏழை பிராமண குடும்பம். வாசுவைத் தவிர அனைவரும் கிடைத்த வேலையை பார்த்து பொருள் ஈட்டுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் வறுமைநிலை மாறவில்லை.
வாசு ஒருவன் தான் பனிரெண்டாம் வகுப்பு தேறுகிறான் அதுவும் பார்டரில். அவனை எப்படியாவது கல்லூரி படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்பது அந்த ஏழை பிராமண தந்தையின் பேரவா. அதை எப்படியாவது நிறைவேற்றத் துடிக்கும் மற்ற சகோதரர்கள். இறுதியில் நாடார் என்று போலி ஜாதி சான்றிதழ் பெற்று ஒரு நாடார் நடத்தும் கல்லூரியில் அடையாளம் அழித்து சேருகிறான். இரண்டு ஆண்டுகள் நன்றாகத்தான் போகிறது. மூன்றாம் ஆண்டு பையனுக்கு குற்ற உணர்ச்சி தலை தூக்குகிறது. (ஆமாம் பிராமணன் என்றாலே நேர்மை தவறாதவன் தானே வேணும்னா இயக்குனர் சங்கரை கேளுங்கள்) படிப்பை பாதியில் விட்டு விட்டு டெல்லிக்கு திருட்டு ரயில் ஏறுகிறான்.
அங்கே டெல்லியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த அரசியல் அரங்கில் முஸ்தீபுகள் நடக்கின்றன. அது பற்றி கதாப்பாத்திரங்கள் வாயிலாக தனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் மிஸ்டர் ராகவன்.
டெல்லியில் எல்லோருக்கும் கூழைக் கும்பிடு போட்டு கிடைத்த வேலைகளைப் பழகி செய்து வீட்டுக்கு பணம் அனுப்புகிறான். இயந்திரமாய் உழைக்கிறான். இறுதியில் ஒரு நல்ல வேலை கிடைத்து சிங்கப்பூர் சென்று தொழில் செய்து பணக்காரனாகிறான். சொந்த நாட்டில் குடும்பத்தினருக்கு ஒரு தொழில் ஏற்படுத்திக் கொள்ள எண்ணுகிறான். ஒரு என்.ஆர்.ஐ தொழில் தொடங்க எஃப்.சி (முன்னேறிய வகுப்பு) ஆக இருப்பது தடையல்லவே என்று கேள்வி வேறு எழுப்புகிறான்.
உலக வரலாறுகளை எல்லாம் கரைத்துக் குடித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல அற்புதமான புத்தகங்களை எழுதிய பா.ராகவன் அம்பேத்கர் எழுத்துக்களை படிப்பதால் தனது அறிவு தீட்டாகி விடும் என்று கருதி இருப்பார் போலும். மனிதருக்கு சமூக நீதி குறித்த புரிதல் கிஞ்சிற்றும் இல்லை. நாவல் முழுவதுமே இட ஒதுக்கீட்டை சலுகை அல்லது கை தூக்கி விடுவது என்கிற ரீதியில் தான் எழுதியுள்ளார். இட ஒதுக்கீடு என்பது உரிமை என்கிற எண்ணம் மனிதருக்கு சுத்தமாக இல்லை.
நாவலில் அவர் ஏழ்மை பிராமண குடும்பத்தை ரொம்ப பிரமாதமாக படைத்துள்ளார். அவர் சித்தரித்துள்ள ஏழைக் குடும்பத்தின் அன்றாட அலுவல்களை பார்க்கும் எந்த ஒரு உண்மையான ஏழையும் பொறாமை கொள்வார். உள்ளபடியே அனைத்து ஜாதியிலும் ஏழைகள் என்போர் உழைப்பை சுரண்டக் கொடுத்து குறைவான வருமானம் ஈட்டுவார்கள். கணவன் மனைவி இருவரும் பாடுபடுவார்கள். மூன்று வேளை உணவு என்பது கனவாகவே இருக்கும். கவிச்சு என்பதெல்லாம் பண்டிகை காலங்களில் தான் அதுவும் பண்டிகை கொண்டாட கடன் வாங்கி அதை அடுத்த பண்டிகை வரையில் அடைப்பார்கள்.
ஆனால் இங்கு ”ஆம்படையான்” மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள். வீட்டில் பெண்களோ மூன்று வேளையும் உணவு தயாரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு என்று ஈடுபடுகிறார்கள்.
ப்ளஸ் டூ வில் பார்டரில் பாஸாகி விட்டு டிகிரியும் இன்கம்ப்ளீட் ஆனாலும் வாசுவின் முன்னேற்றத்திற்கு தடையாக நிற்பது தனது முன்னேறிய ஜாதி என்கிற அடையாளம் மட்டுமே. அதனால் அவன் ஃபாரின் சென்று பெரிய பிஸினஸ் மேன் ஆகிறான் என்கிறார்.
ஒரு இடத்தில் அவனே சொல்கிறான், ”சம்பாதிக்க வேண்டும் சாப்! வரி கட்டி மாளாத அளவுக்கு சம்பாதிக்க வேண்டும். நான் பிராமணன், அரசு வேலை கொடுக்காது (ஆமா இவரு டிகிரியில் டிஸ்டிங்ஷன்ல பாஸாகிட்டாரு)” என்று பேசிக் கொண்டே போகிறார். படிப்பு அரைகுறை என்றும் சொல்கிறார். (அப்போ எந்த ஜாதியில் அரைகுறை படிப்பாளி வேலை வாங்கி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்)
பிராமணன் வேலை கேட்டு வரும்போது அரசு அவர்களை பிடித்து வெளியே போடா என்று குப்புற தள்ளுவது போல நாவலில் பிராமணன் என்றால் அரசாங்கம் வேலை தராது என்கிறார். அப்படின்னா 100 விழுக்காடு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதா என்ன? சொல்லவே இல்ல!!
ஒரு பிராமணனுக்கு வேலை கிடைக்க வில்லை என்றால் இடஒதுக்கீடு நீங்களாக மிச்சமுள்ள ஐம்பது விழுக்காட்டு இடத்தை பொதுப் போட்டியில் கைப்பற்றும் திராணியற்று இருந்திருக்கிறான் என்றல்லவா அர்த்தம்.
கதையில் ஒரு இடத்தில் கூறுகிறார், “திறமையற்றவர்கள் வேலை செய்வதால் தான் பாலம் இடிகிறது சாலை வீணாகிப் போகிறது” என்கிறார். நண்பர்களே உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், மேற்கூறிய இரண்டுக்கும் காரணங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியாதா?!
இன்னும் சில மர மண்டைகளுக்கு புரிவதே இல்லை, படிப்புக்கான இட ஒதுக்கீடு என்பது கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு மட்டுமே. அங்கே எல்லோருக்கும் பொதுவான தேர்வு வைக்கிறார்கள். அதில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று ஒரு இலக்கு உண்டு. அனைத்து ஜாதியினரும் அந்த குறைந்த பட்ச மதிப்பெண்ணை பெற்றால் தான் பாஸாக முடியும். பாஸான அனைத்து பொறியாளரும் பாலமோ ரோடோ போட தகுதியுள்ளவர்கள்தான், பாஸான அனைத்து மருத்துவர்களும் வைத்தியம் பார்க்க தகுதியுள்ளவர்கள் தான் என்று பல்கலைக் கழகம் அங்கீகாரம் வழங்கிய பிறகு இவர்கள் என்ன தகுதி பற்றி பேசுவது?!
ஒரு ஏழை ஐயங்கார் படிப்பறிவு இல்லாவிட்டால் ஒரு ஓட்டல் நடத்தி பிழைத்துக் கொள்வார். அங்கே அவர் முதலாளி. ஐயங்கார் ஓட்டல் என்பதே அந்த ஓட்டலுக்கு நல்ல விளம்பரம். எல்லோரும் நாக்கை தட்டிக்கொண்டு சாப்பிட வந்து விடுவார்கள்.
ஒரு ஏழை தலித் படிப்பறிவு இல்லாவிட்டால் அவர் ஏதாகிலும் பிஸினஸ் செய்ய இயலும் வகையில் இந்த சமூகம் உள்ளதா? அவர் தனது உழைப்பை யாரேனும் ஒரு முதலாளியிடம் சுரண்டக் கொடுக்கிறார். வாயைப் பொத்தி வேலை பார்த்துவிட்டு விசுவாசமாய் நடந்து கொண்டு கொடுத்த காசை வாங்கிக் கொள்வார்கள் என்று அங்கே தலித் ஏழைகளுக்கு கடும் கிராக்கி.
எல்லோரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது அதிகார பரவலாக்கத்திற்கும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கும் தேவையான ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எல்லோரும் பொதுப் போட்டிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் அளவிற்கு ஆடுகளம் இன்னும் பண்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை.


No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...