Friday, March 9, 2018

முதல் ஆசிரியர்- குறு நாவல் ஒரு பார்வை


முதல் ஆசிரியர்- குறு நாவல் ஒரு பார்வை

“அப்பாடா வசந்தபவன்ல ஒரு ஆனியன் ரவா தோசை பிரமாதமா சாப்டாச்சி, இனி அரியலூர் பஸ் ஏரி விட வேண்டியதுதான்”
“ம்ம்ம்… இது வேணாம் தகரம் அங்கங்கே பெயர்ந்து தொங்குது, ஹாங், அதோ ஒரு தனியார் பேருந்து அதில் போகலாம்”
தனியார் பேருந்துகளில் மூன்று பேர் அமரும் இருக்கைகளில் இரண்டு பேர் டிக்கியே முழுசா ஃபிட் ஆகாது. எனவே ஏதேனும் ஒரு பொடிப்பயலை அழைத்து நடுவில் அமர வைத்துக் கொள்ளலாம்.
“டேய் பையா இங்க வாப்பா, இங்கே உட்கார்” என்று ஒரு பொடியனை கூப்பிட்டேன்.
“இதோ வர்ரேண்ணே”, என்று பையை வைத்து இடத்தை உறுதி செய்து விட்டு போனான்.
நானும் நிம்மதியாக உணர்ந்தேன்.
“டேய், என்னடா ஒரு சுமோ மல்யுத்த வீரன அழைச்சிட்டு வர்ரே?!”
“மாமா அதோ அங்க நடுவில் உக்காருங்க, எனக்கு ஃப்ரண்ட்ல சீட்டு இருக்கு”
அந்த சுமோ வீரன் நடுவில் உட்கார்ந்ததும் நான் கம்பி கிடுக்கில் எலிபோல சிக்கிக் கொண்டேன் அக்கரையில் இருந்தவரோ ஜன்னல் கிடுக்கில் பல்லி போல ஒட்டிக் கொண்டு இருந்தார்.
“ம்ம்..சார் ம்ம்.. எங்கே போறீங்க” என்றேன் முக்கி முனகி
“தம்பி அரியலூர் போறேம்பா”
“ஆஆஆ…”
கம்பி கிடுக்கில் தலையை கொடுத்தபடி பையில் இருந்து புத்தகத்தை எடுத்தேன்.
“முதல் ஆசிரியர்” – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

பேர்ல கடைசி எழுத்து “வ்“ னு வருதா அப்ப அவரு இரஷ்ய எழுத்தாளர் தான்.
கதைக்களமும் ரஷ்யாதான். ஆனா இப்போ அந்த இடம் கஜகஸ்தான் என்கிற தனி நாடாக பிரிந்து விட்டது. ஆம் சோவியத் ரஷ்யா சிதருண்ட போது பிரிந்து போனது. அந்த நாட்டில் “குக்குரெவ்” என்கிற மலை கிராமத்தில் தான் கதை நடக்கிறது.
ஒரு பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழாவிற்கு அந்த பள்ளியில் இருந்து படித்து தற்போது பிரபல விஞ்ஞானியாக இருக்கும் அல்தினாய் அழைக்கப் படுகிறார்.
பழைய நினைவுகளில் மூழ்கி திளைக்கும் எண்ணத்தோடு  வருபவர் அவரது முதல் ஆசிரியரான துய்ஷேன் இராணுவ பணி முடித்து தற்போது தபால் கார வேலை பார்க்கிறார் என்று அறிகிறாள். இரவு விருந்தில் பல்வேறு எண்ணங்கள் அவள் மனதில் அலையடிக்க அமைதி தொலைந்து போகிறது அவள் கடைசி ரயிலை பிடித்து மாஸ்கோ கிளம்புகிறாள்.
“பள்ளியக்ரஹாரம் எறங்கு, யோவ் பெருசு நகர்ந்து உள்ளே போ! வர்ரவங்களுக்கு இடம் வேணாமா?”
பக்கத்தில் எங்களை நசுக்கி பிழிந்து கொண்டிருக்கும் பெருசை எங்கே போகச் சொல்ல?!
மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினேன்.
மாஸ்கோ சென்று சேர்ந்த பின்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறாள். அன்று உடனடியாக திரும்பியமைக்கு மன்னிப்பு கோரி ஆரம்பமாகும் கடிதம் “துய்ஷேன் பள்ளி” பற்றிய ஃபளாஷ்பேக்கை கூறுகிறது.
குன்றின் மீது இருந்த ஒரு பாழடைந்த குதிரை லாயத்தை சீர்படுத்தி அரைகுறை வசதிகளுடன் ஒரு பள்ளியாக்க முனைகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரன் “துய்ஷேன்”.
அறியாமையில் ஊறிக் கிடக்கும் மக்களுக்கு படிப்பின் மகத்துவம் புரியாத காரணத்தினால் அவர்கள் எதிர்க்கிறார்கள். அரசாங்கத்திடம் இருந்து பெற்று வந்த ஆணையை காட்டி பணிய வைக்கிறார்.
குழந்தைகள் ஆர்வத்தோடு அவருடன் செல்கிறார்கள். தாய் தந்தை இல்லாமல் சித்தியின் அரவணைப்பில் வளரும் சிறுமி அல்தினாய் முனைப்புடன் பள்ளி செல்ல முனைகிறாள். சித்தி தடுக்க, துய்ஷேன் பேசி சம்மதிக்க வைக்கிறார்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளை பள்ளிக்கு துய்ஷேனே அழைத்து செல்கிறார். அல்தினாய் அவருக்கு உறுதுணையாக செல்கிறாள். அல்தினாய்க்கு துய்ஷேன் மேல் அளவில்லா அன்போடு இருக்கிறாள்.
பாடபுத்தகங்கள் கிடையாது சிலபஸ் கிடையாது கற்பித்தல் துணைக்கருவிகள் கிடையாது. அவருக்கு என்ன தெரிகிறதோ அதையே அவர் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்.
அந்த காலக்கட்டம் ரஷ்ய புரட்சி நடந்த காலம். கம்னியூஸ்ட்கள் வசம் ஆட்சி அதிகாரம் வருகிறது. துய்ஷேன் கம்னியூஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆகிறார். லெனின் அவர்களின் மரணமும் கதையோட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து கண்டியூரைத் தாண்டியது. டிரைவர் ஆடியோ பிளேயரை மீண்டும் இயக்கினார்.
“ஆனந்த ராகம் கேட்கும் காலம்…”இளையராஜா வாணிஜெயராமைக் கொண்டு காதினில் தேன்பாய்ச்சினார்.
”ஆகா என்ன ஒரு இசை என்ன ஒரு பாடல்… இந்த பாடல் ஓடும் போது படிப்பது இந்த பாடலுக்கு செய்யும் அவமரியாதை என்பதால் படிப்பதை சற்று நேரம் ஒத்திப் போட்டேன்.
துய்ஷேன் பள்ளி வழக்கம் போல இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது தான் அந்த ஆபத்து வந்து சேர்ந்தது. சித்தி ஒருவனிடம் பணம் பெற்றுக் கொண்டு அல்தினாயை “ஓட்டிக் கொண்டு” செல்லும்படி கூறிவிட்டாள்.
ஒரு மூன்று பேர் குதிரையில் வந்தனர். பள்ளியில் வந்து சித்தி திமிராக அல்தினாயை வெளியே அனுப்பும் படி கேட்கிறாள். விஷயம் அறிந்த துய்ஷேன் மறுக்கிறார்.
“அவள் நன்கு படிக்கும் பெண் அவள் விஞ்ஞானியாக வாய்ப்பு உள்ளது. அவளை பெரிய ஊரில் உள்ள பெரிய பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கப் போகிறேன். அவளுக்கு திருமணம் வேண்டாம்” என்று மறுக்கிறார்.
கைகலப்பு நடக்கிறது. வந்தவர் துய்ஷேனை நைய்யப் புடைக்கிறார்கள். அவர் அடிப்பட்ட நிலையிலும் அவளை காப்பாற்ற போராடுகிறார். இயலவில்லை.
அவளை கவர்ந்து கொண்டு சென்றவர்கள் ஒரு இடத்தில் கூடாரம் அமைத்து தங்குகிறார்கள். அடுத்த நாள் நெடுந்தொலைவு பயணத்திற்கு திட்டமிடுகிறார்கள். அல்தினாய் அவர்களிடமிருந்து தப்பி செல்ல வழி கிடைக்குமா என்று ஆராய்கிறாள்.
துய்ஷேன் “மிலிஷியா“ உதவயோடு வந்து அல்தினாயை மீட்டு அவர்கள் மூவரையும் சிறைக்கு அனுப்புகிறார்.
“வாழைப்பழம் இருவது ரூவா, வாழைப்பழம் இருவது ரூவா” என்கிற குரல் கலைக்க புத்தகத்தில் இருந்து எழுந்தேன்.
’ஓ, திருவையாறு வந்துடுச்சா?!’ .
பக்கத்தில் இருந்த சுமோ வாழைப்பழம் வாங்க வேகமாக முன்புறம் சாய்ந்தது. அவரது வேகம் எனக்கு சோகம். வழக்கமாக திருவையாரில் ஒரு 30 பேர் இறங்கினால் 40 பேர் ஏறுவார்கள். ஆக உட்புற அழுத்தத்தோடு வெளிப்புற அழுத்தமும் சேர்ந்து கொண்டது.
மறுபடியும் புத்தகத்தை பிரித்தேன்.
துய்ஷேன் உதவிகள் பெற்று மாஸ்கோவில் அல்தினாய் படிக்க ஏற்பாடு செய்கிறார். அவள் படித்து நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக ஆகிறாள்.
பள்ளி திறப்பு விழா அன்று துய்ஷேன் ஆர்வத்தோடு முன்னாள் மாணவர்களின் வாழ்த்து தந்திகளை பெற்று வந்து விநியோகம் செய்துவந்தார். விருந்து நடந்த அரங்கிற்குள் வருவதற்கு நேரம் இல்லை. அல்தினாய் புதிய பள்ளிக்கு “துய்ஷேன் பள்ளி“ என்ற பெயர் வெகுப் பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரை செய்கிறாள். என்று கதை முடிகிறது.
புத்தகத்தை மூடி வைத்து விட்டு குறுநாவலில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிந்திக்கலானேன். வண்டி கீழப்பழூரைத் தாண்டியது. எனக்கும்
”சுமோ” விடமிருந்து விடுதலை கிடைத்து வேறு இருக்கைக்கு மாறினேன்.
ஜன்னல் வழியாக இரவு நேரக் காற்று “ஜில்“ என்று வீசியது.
முதலில் பள்ளியை மறுதலிக்கும் மக்கள் அரசாங்க ஆணை கடிதத்தை கண்டவுடன் உடனடியாக கீழ்படிகிறார்கள். அரசின் மீதுள்ள பயம் அந்த காலகட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடனே இருக்கிற வசதி குறைவான உள்கட்டமைப்பைக் கொண்டு மக்களுக்கு கல்வி வழங்க பரவலாக ஆட்களை அனுப்பியதில் இருந்து கல்விக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
லெனின் இறந்த சம்பவம் ஒரு தேசிய சோகமாக எல்லோராலும் உணரப்படுவது கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை இரயிலில் பயணம் செய்யும் விஞ்ஞானி அல்தினாய் துய்ஷேன் மாதிரி ஒருவர் வெளியில் நிற்பதைப் பார்த்து சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்துகிறாள்.
பின்பு அவர் இல்லை என்று தெரிகிறது. மக்கள் அனைவரும் ’போரின் போது காணாமல் போன உறவினரை காணும் தவிப்பு’ எனக் கருதி போரின் கொடுமை பற்றி அங்கலாய்ப்பதுடன் தண்டம் வசூல் செய்ய வந்த இரயில்வே அதிகாரிகளிடம் சண்டையிடவும் செய்கிறார்கள்.
“போர்கள் நாடுகளுக்கு கவுரவத்தை அளிக்கலாம், ஆனால் சாதாரண மக்களுக்கு சோகத்தை மட்டுமே கொடுக்கிறது” என்று பதிவு செய்கிறார்.
அந்த காலத்தில் இரஷ்யாவிலும் சிறுவயது திருமணங்கள் போன்ற பிற்போக்குத் தனம் நிலவி வந்திருப்பதும் பெண்களை போகப் பொருளாக நடத்தியதும் நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
துய்ஷேனும் அல்தினாயும் சேர்ந்து இரண்டு பாப்ளார் மரங்கள்(அப்படித் தாங்க கதையில் வருது சத்தியமா அந்த மரம் கருப்பா சிவப்பான்னு கூட எனக்கு தெரியாது. கதையில் கூறியுள்ளபடி பார்த்தால் அது உயரமாக வளரும் மரம் என்று தெரிகிறது. எனவே நான் “நெட்டிலிங்கம்” மரத்தை கற்பனை செய்து கொண்டேன்) நடுகிறார்கள். மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். அந்த இரட்டை பாப்ளார் மரங்கள் பின்னாளில் பள்ளியின் அடையாளமாகிப் போகிறது.
மொத்தத்தில் 79 பக்கங்களில் ஒரு அருமையான படைப்பு. பூ. சோமசுந்தரம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
பஸ் வேகமாக அரைவட்டமடித்தபடி வந்து அரியலூர் பேருந்து நிலையத்தில் நங்கூரமிட்டது. இறங்கி வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றேன். வண்டியின் பின்னால் அல்தினாயும் துய்ஷேனும் அமர்ந்திருப்பதாக தோன்றியது.




No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...