Wednesday, October 18, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்தரங்கம்

 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு  விழாவின் ஒரு பகுதியாக "கலைஞர் கருத்தரங்கம்"  தொகுதிக்கு ஒன்று என  பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதில் அரியலூர் தொகுதிக்கு எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டிருந்தது.






பள்ளியில் அரங்க மேடையோ ஆடிட்டோரியமோ இல்லை, ஆகையால் வெளியில் மேடை அமைத்து பந்தல் போட்டு விடலாம் என்று எண்ணியிருந்தோம்.


ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு உறுத்தல் ஏனென்றால் ஒரு சிறு மழை பெய்தாலே எங்கள் பள்ளியில் பல இடங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு சேர் சகதி ஆகிவிடும்.


 ஏனெனில் எங்கள் பள்ளி வளாகம் ஆனது இதற்கு முன்பு அனேகமாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஏரியாக இருந்துள்ளது அதைத்தான் பள்ளிக்கு கிராமத்தினர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்கள்.

 

எங்கள் பள்ளிக்கு NABARD மூலம் கிடைக்கும் சிறப்பான கட்டிட வசதி வராததுக்கு இதுதான் காரணம். தரைப்பகுதி கடினமானதாக இல்லாத காரணத்தினால் இரண்டு அடுக்கு அல்லது மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்புடையதாக இல்லை.


 நான் சென்ற பிறகு இரண்டு இரண்டாக அறைகள் உள்ள இரண்டு கட்டிடங்களை போராடி பெற்றேன். இது போலவே இன்னும் ஒரு ஆறு அறைகள் கொண்ட கட்டிடம் கிடைத்தால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல அறை வசதியை செய்து கொடுத்து விடலாம்.


விழாவுக்கு முன் ஏற்பாடுகாக வந்திருந்த அலுவலர்களும் பார்த்துவிட்டு பந்தல் மேடை வசதிகளுக்கு எல்லாம் அளவெடுத்த பிறகு இறுதியாக நான் மழை அச்சுறுத்தல் எனில் விழா நடத்த இடம் உகந்ததாக இருக்காது என்று கூறியதால் பக்கத்தில் உள்ள மண்டபத்திற்கு மாற்றி விடலாம் என்றார்கள்.


ஆக மண்டபம் நாகமங்கலம் ரேவதி திருமண மண்டபம் அதில் நடக்கும் விழா அரசு உயர்நிலைப்பள்ளி நாகமங்கலம் விழா!!


விழா பணிகள் அனைத்தையும் பகுதி பகுதியாக பிரித்து ஆசிரியர்களை கொண்ட குழுக்கள் அமைத்து ஒதுக்கீடு செய்து கொண்டோம்.


விழாவுக்கு முதல் நாள் அன்று அனைத்து பேரும் பரபரப்பாக இயங்கி அனைத்து பணிகளையும் முன்னதாகவே முடித்தோம் அன்றைக்கு மாலை மிகக் கடுமையான மழை!!


 பள்ளி வளாகத்தில் மேடை ஏற்பாடு செய்யவில்லை என்று ஆறுதல் கொண்டோம். 


மண்டபம் சற்று சிறியது ஆகையால் 8, 9 & 10 வகுப்பு மாணவர்களை மட்டும் மண்டபத்தில் அனுமதிப்பது என்று முடிவு எடுத்து இருந்தோம். பிறகு மாணவர்களுக்கு நாற்காலிகளை கொடுத்தால் 200 பேருக்கு இடம் சரியாக போய்விடும். 


 மாணவர்கள் அனைவரையும் பெஞ்சில் அமர வைத்து விடலாம் என்று பள்ளியில் இருந்து 40 பெஞ்சுகளை லாரியில் ஏற்றி மண்டபத்திற்கு காலையிலேயே அனுப்பிவிட்டோம். 


மாணவர்களை பாதுகாப்பாக சாலையை கடக்க செய்து மண்டபத்தில் சென்று பெஞ்சுகளில் அமர வைத்தால் இன்னொரு வகுப்பு தாராளமாக உட்காரும் அளவுக்கு இடம் இருந்தது அதனால் ஏழாம் வகுப்பையும் வரவழைத்தோம். 


அரசு விழா என்பதால் காலதாமதத்திற்கு வேலை இல்லை. ஆகையால் விழாவிற்கு அரை மணி நேரம் முன்பாகவே நாங்கள் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சரியாக முடித்து அனைவரையும் அமர வைத்து விட்டோம்.


அந்த அரை மணி நேரத்தில் கூட்டத்தினரை engage செய்வதற்காக கலை திருவிழா நாட்டியத்தில் ஒரு நாட்டியத்தை அரங்கேற்றினோம். 


மாணவர்களின் கருத்தரங்க பேச்சு என்பது மேலும் சில பள்ளிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் பள்ளி மாணவர்களை 5 இலிருந்து இரண்டாக குறைத்துக் கொண்டோம். மீதி 3 பேர் வேறு பள்ளியில் இருந்து வந்திருந்தனர்.


எனவே வாய்ப்பு கிடைக்காத மீதி மூன்று மாணவர்களை அந்த நேர இடைவெளியில் பேச அனுமதித்திருந்தோம். ஆகவே அந்த 30 நிமிடங்களும் சுவாரசியமாகவும் engaging ஆக இருந்தது.


 வரவேற்பிற்கு welcome clap கொடுப்பதற்காக 20 பேர் கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நிறுத்தி இருந்தோம்.


 சிறப்பு விருந்தினர் அரசு தலைமை கொறடா அவர்கள் வந்து இறங்கினார். அவரது வாகனம் சற்று முன்னே வந்து விட்டது, கட்சிக்காரர்கள் வேறு உடனே சூழ்ந்து கொண்டனர்.   welcome clap captain என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.


 அவனது திகைப்பை புரிந்து கொண்ட கொறடா அவர்கள் "நீங்கள் என்ன செய்யப் போறீங்க செய்ங்கப்பா" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

 உடனடியாக welcome clap go  என்றவுடன்  வெல்கம் கிளாக் கொடுக்கப்பட்டது.


 விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிமிட வாரியாக துல்லியமாக திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக தயாரித்திருந்தார்கள்.

முழுவதும் தலைமைச் செயலகத்திலிருந்து வந்திருந்த அலுவலர்கள் பார்த்துக் கொண்டனர்.


 மேடையில் தொகுத்து வழங்குவதையும் கூட மாவட்ட ஆட்சியரின் பிஆர்ஓ அவர்கள் எடுத்துக் கொண்டார். தொகுத்து வழங்க ஏற்பாடு செய்திருந்த ஆசிரியருக்கு ஓய்வு கொடுத்து விட்டோம்.  எனது வேலை வரவேற்புரையோடு முடிந்தது.


மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினருக்கு இடம் விட்டு தொகுதியில் எம்எல்ஏ மாண்புமிகு சின்னப்பா அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் இன்னா பிற அலுவலர்களும் தங்கள் உரையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.


 மாணவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேசினர். மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மிக அழகாக திட்டமிட்டு அனைவரையும் பாராட்டும் விதமாகவும் ஒருவரையும் விட்டு விடாமல் அனைவரையும் குறிப்பிட்டு சொல்லி பாராட்டி பேசத் தொடங்கினார்.


 ஒரு சிறு ஊராட்சியில் உள்ள ஒரு உயர் நிலை பள்ளியில் நடைபெறும் மிகப்பெரிய விழா இது, இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளீர்கள்.  இந்த கிராமத்தில் கிடைத்த ஒரு சிறிய மண்டபத்தை கூட ஒரு வெள்ளை மாளிகை போல அலங்கரித்து அழகாக விழாவை ஏற்பட்டு செய்துள்ளீர்கள் என்று அவர் கூறியதில் நாங்கள் விழாவை ஏற்பாடு செய்த பட்ட கஷ்டமெல்லாம் பறந்து ஓடியது.


 பிறகு மாணவர்களில்  பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  அதில் முதல் பரிசு எங்கள் பள்ளி மாணவி ப்ரீத்திக்கு கிடைத்தது .


முதல் பரிசு பெற மேடை ஏறியவர் என்ன ஆச்சுன்னே தெரியவில்லை அழுகையை அடக்கிக் கொண்டு பரிசு பெற்றார்.


 ceo தனியாக அழைத்து அவரை பேசி பாராட்டும் போது வெடித்து அழும் நிலைக்கு போய்விட்டார்.


 மேடையில் இருந்து இறங்கியவுடன் பொங்கிப் பொங்கி அழுதார்.   அந்த மாணவியை ஆசிரியர்கள் பூ போல அள்ளி  மடியில் வைத்துக் கொண்டு தேற்றினர். 

அது பார்ப்பதற்கு நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது.


ஆக இந்த நிகழ்ச்சி மிக அழகாக திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பள்ளி வளாக தூய்மை மற்றும் மண்டபத்தின் ஏற்பாடு போன்ற பல பணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவரும் செயலாளரும் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகளும் பல வேலைகளை செய்து மிகுந்த ஒத்துழைப்பை கொடுத்தனர்.


 நிச்சயமாக இது  ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. எனக்கும் இது மிகப்பெரிய ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது!!

1 comment:

  1. Hard work, good mind and good thought will never fail, Our School function is very good example.

    ReplyDelete

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...