Thursday, October 5, 2023

மேக்நாட் சாகா – புரட்சிகர விஞ்ஞானி- நூல் விமர்சனம்

 இன்று மேக்நாத் சாகா அவர்களின் பிறந்த நாள்.


அவரது வாழ்க்கை வரலாற்று நூல் குறித்த மீள்பதிவு:


நூல்- மேக்நாட் சாகா – புரட்சிகர விஞ்ஞானி



ஆசிரியர்-தேவிகாபுரம் சிவா


பாரதி புத்தகாலயம்


பள்ளிக்கு அன்பளிப்பாக வாங்கப்பட்ட ஒரு நூலை சுடச்சுட வாசிக்கும் சுகமே அலாதி!!


அதுவும் எனக்கு பிடித்த வானியல் & அணுக்கரு இயற்பியல் என்றால் கேட்கவா வேண்டும்.


வான் இயற்பியல் விஞ்ஞானி மேக்நாட் சாகா அவர்கள் தற்போதைய வங்க தேசத்தில் ஒரு ஒடுக்கப் பட்ட பிரிவில் பிறந்தவர்.


 அவர் பிறந்த காலத்தில் அது இந்தியா அல்லவா! சுதந்திரத்திற்கு பிறகு அவரும் அகதியாக மேற்கு வங்காளம் வந்தவர் தான்.


 அவர் விஞ்ஞானி மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தில் தீரமுடன் பங்காற்றியவர், அறிவியல் புலத்தில் எதிரி நீச்சல் போட்டதோடு மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் ஆக்டிவாக இருந்துள்ளார். தீவிர பொதுவுடமை வாதி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் and of course பகுத்தறிவாளர்.


நேரு பிரதமராக இருந்த  முதல் நாடாளுமன்றத்தில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்று பல விஷயங்களுக்காக காத்திரமாக குரல் எழுப்பி உள்ளார்.


ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்து அபரிமிதமான அறிவாற்றல் உள்ளவர்கள் தங்களது திறமைக்கான அங்கீகாரத்தை பெற பெரும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.


 அம்பேத்கர் போலவே இவரும் பல உதாசீனங்கள் அவமானங்கள் இவற்றை கடந்து தான் தனது அயராத போராட்ட குணத்தால் அறிவியல் வானில் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.


பள்ளி காலத்திலேயே ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அதன் காரணமாகவே டிகிரி முடித்தவுடன் அரசு வேலைக்கு “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட“ என்று ஆகிவிட்டது.


அப்பறம் தான் பயன்பாட்டு கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற துறையில் ஆராய்ச்சி செய்ய முனைகிறார். இதைத் தான் தடைக்கல்லை படிக்கல்லாக ஆக்கி கொள்வது என்பதோ?!


வான் பொருட்களில் இருந்து வரும் நிறமாலை குறித்து மேலை நாடுகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வந்த காலகட்டம். ஆனால் அதில் தொடர்ந்து ஒரு தேக்க நிலை. அப்போது மேக்நாத் சாகாவின் “வெப்ப அயனியாக்க கோட்பாடு“ அவர்களது ஆய்வுகளை துரிதப் படுத்தியது. அவரது ஆய்வு வான் இயற்பியல் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான திருப்பு முனை என்ற அறிவியல் அறிஞர்களே ஒப்பக் கொள்கிறார்கள். 


விண்ணிலிருந்த கிடைக்கும் நிறமாலையைக் கொண்டே அந்த வான் பொருளின் வெப்பநிலை மற்றும் அங்கே பொதிந்து இருக்கும் தனிமங்களை அறியமுடியும் என்பது தான் அந்த திருப்பு முனை ஆய்வு.

சூரியனில் இருந்து பிறந்த புவியில் 90க்கு மேற்பட்ட தனிமங்கள் கண்டறியப் பட்ட நிலையில் 36 தனிமங்களின் நிறமாலைகள் தான் சூரிய ஒளியில் இருந்து பெற முடிகிறது. மற்றவை நிலை என்ன? என்கிற கேள்வி உருவான போது, ”அந்த தனிமங்களின் ஆற்றல் குறைவாக இருப்பதால் முழுமையாக அயனியாக்கம் அடைந்து இருக்கும். வெப்பம் குறைவான சூரிய புள்ளிகளை குறிவைத்து ஆய்வு செய்தால் அங்கே கிடைக்கலாம்” என்கிற அவருடைய அனுமானம் ஆய்வுகள் மூலமாக மெய்ப்பிக்கப் பட்டது.


சாகாவின் வெற்றி என்பது அவரது காலம்வரை தனித்தனியாக பிரிந்து கிடந்த வானியலையும் அணு இயற்பியலையும் எளிமையாக ஆனால் நிபுணத்துவத்தோடு இணைத்து வைத்ததில் அடங்கி இருக்கிறது.


இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான சர்.சி.வி.ராமன் அவர்களுக்கு கிடைத்த ஆதரவோ, அங்கீகாரமோ அனுகூலமோ சிறிதளவு கூட சாகாவுக்கு கிடைக்க வில்லை. 


சாகா அவர்களின் கோட்பாட்டையும் சமன்பாட்டையும் அடிப்படையாக வைத்து அமெரிக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆய்வகங்களில் துள்ளிக் குதித்து குதூகலத்துடன் பல வானியலின் பல புதிய  கதவுகளை திறந்து கொண்டு சென்றனர்.


 ஆனால் சாகாவுக்கு இங்கே ஒரு ஆய்வகத்தை நிர்மானிக்க கூட நிதியுதவி கிடைக்கவில்லை. ஒரு எண்ணை பம்பு வாங்க கூட காசு கிடையாது என்று விட்டனர்.


 அவருக்கு துணையாக ஆய்வுகளின் பங்கு பெற ஆய்வு உதவியாளர் பதவி கூட மறுக்கப் பட்டது.


1924 ல் அமெரிக்காவில் உள்ள ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு ஆய்வகம் அமைக்க நிதி உதவி கேட்டு கடிதம் எழுதுகிறார். அங்கே அறிவியல் நிதி உதவிப் பிரிவுக்கு தலைவராக இருந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மில்லிகன் அவர்களுக்கும் “புறஊதாக் கதிர் குவார்ட்ஸ் நிறமாலை மானி“ வாங்க 2000 டாலர் நிதி உதவி கேட்டு எழுதியிருந்தார். அந்த சமயத்தில் அங்கே சுற்றுப் பயணத்தில் இருந்த சர்.சி.வி.ராமன் அவர்களிடம் மில்லிகன் இது குறித்து கேட்ட போது, “சாகா நல்ல கோட்பாட்டு இயற்பியலாளரே ஒழிய ஆராய்ச்சியாளர் அல்ல, மேலும் தனது ஆய்வு குறித்த நம்பகத்தன்மையை இந்தியாவில் ஏற்படுத்தி இருந்தால் இந்தியாவிற்கு வெளியே நிதி கோர அவசியம் ஏற்பட்டு இருக்காதே“ என்று கூறி விட்டதால் அந்த வாய்ப்பம் கிட்டவில்லை.


சர் சி.வி.ராமன் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப் பட்ட அதே 1930 ம் ஆண்டில் சாகாவின் பெயரும் பரிந்துரை செய்யப் பட்டிருந்தது. அது மட்டுமின்றி வெப்ப அயனியாக்க கோட்பாட்டிற்காக அவரது பெயர் நான்கு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருந்தது.


 சாகா மற்றும் சத்யேந்திரநாத் போஸ் இருவருமே நோபல் பரிசுக்கு முற்றிலும் தகுதியான விஞ்ஞானிகள் என்பது சர்வதேச விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்துள்ளது.


 அறிவியலில் சாதனை புரிந்தால் மட்டும் போதாது, அதனை சரியாக 'மார்க்கெட்டிங்' செய்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் போல.


1927 ல் சாகாவின் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக இவரை தேர்வு செய்ய பெரும் எதிர்ப்பு வந்த போதிலும் இவர் ராயல் சொசைட்டி உறுப்பினராக விஞ்ஞானிகளால் தேர்வு செய்யப் பட்டார்.


சாகா அவர்கள் தனது பார்வையை வான் இயற்பியலில் இருந்து அணுக்கரு இயற்பியல் பக்கம் திருப்பினார். அவர் பணிபுரிந்த அலகாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் “சைக்ளோட்ரான்“ என்கிற துகள் முடுக்கியை நிறுவ பல இடங்களில் உதவி கோரி முயற்சித்தார். ஒரு முறை அவ்வாறு உதவியும் கிடைத்துவிட்ட போதிலும் அதன் முக்கிய பாகங்களில் ஒன்றான வேக்வம் பம்ப் கொண்டு வரப்பட்ட கப்பல் இரண்டாம் உலகப் போரில் தாக்கப் பட்டது.


 அவர் 1956 ல் இறக்கும் வரையில் சைக்ளோட்ரான் கனவு மெய்படவே இல்லை.


1945-46 களில் சாகா அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மான்ஹாட்டன் புராஜக்ட் என்னும் அணுகுண்டு தயாரிப்பு ஆராய்ச்சி ரகசியமாக பல ஆய்வகங்களில் நடைபெற்று வந்தது. சாகா அவர்களோ அதே துறை நிபுணர் என்பதால் அது சார்ந்த உரையாடல்களை செல்லும் இடங்களில் எல்லாம் நிகழ்த்தினார். அதனால் FBI ன் விசாரணைக்கு ஆளானார். அவருடன் விசாரித்த பிறகு அவருக்கு அணு ஆயுத திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே ஒரு மாத்திரை சைஸ் உள்ள யுரேனியத்தில் இருந்து பல டன் கணக்கிலான நிலக்கறிக்கு இணையான சக்தியை பெற முடியும் என்பதை அனுமானித்து கூறியிருந்தார்.


சுதந்திரத்திற்கு பிறகு அணு இயற்பியல் குறித்து ஆய்வு மையம் அமைக்கவும் அந்த துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் நேருவுக்கு கருத்துருக்கள் அனுப்பினார். ஆனால் நேரு பாபா தலைமையில் அணுசக்தி கழகத்தை மும்பையில் துவங்க ஆதரவளித்தார். 


இந்தியாவின் முதலாவது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றியும் பெற்று பாராளுமன்றத்தில் அறிவியல் சார்ந்த பல விவாதங்களை முன்னெடுத்தார். அவர் தொடர்ந்து முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச ஆதரவு நிலைப்பாட்டினை கொண்டிருந்தார்.


இந்த நூலில் இருந்து நான் சிறு பகுதியை தான் கூறியுள்ளேன். ஆனால் நூலில் இன்னும் சுவாரசியமான பல பகுதிகள் உள்ளன.

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...